செவ்வாய், மார்ச் 27, 2012

மக்கள் போராட்டங்கள் தோற்பதில்லை

மக்கள் போராட்டங்கள் தோற்பதில்லை                     -மு.சிவகுருநாதன்

   
     கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சுப.உதயகுமார் உள்ளிட்ட 15 பேர் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளனர். அணு உலை எதிர்ப்புப் போராளிகளின் இம்முடிவு வரவேற்கத்தக்கது. 


     சிறையில் அடைக்கப்பட்டுள்ள 200 க்கும் மேற்பட்டவர்கள் விடுவிக்கப்படும்வரை இடிந்தகரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் விலக்கிகொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

    இத்தகைய நிகழ்வுகள் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் தோல்வியல்ல. இந்தியளவில் இப்போராட்டம் அணு உலைகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இந்தப் போராட்டம் முன்னுதாரணமாக அமையும். 

      அரச பயங்கரவாதம் உள்ளிட்ட எந்த பயங்கரவாதமும் பெறுகின்ற வெற்றி தற்காலிகமானது. இறுதி வெற்றி மக்களுக்கே. மத்திய - மாநில அரசுகளின் இந்த அடக்குமுறைகள் காரணமாகவும் பெரும்பாலான தமிழக மக்கள் அரசுகளின் பொய்களை நம்பிக்கொண்டிருப்பதாலும் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஒரு இக்கட்டான சூழலில் தள்ளப்பட்டனர். எனவே அவர்கள் வேறுவகையான போராட்ட வடிவங்களை கைகொள்ளவேண்டிய தேவை உண்டாகியிருக்கிறது. 

     அணு சக்தி தொடர்பான சர்வதேச அமைப்புகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இன்றுள்ள சூழலில் இவைகள் மக்களுக்கு சாதகமாக செயல்படும் என்று சொல்வதற்கில்லை.    

      200 நாட்களுக்கு மேலாக பல்வேறு அவதூறுகளுக்குமிடையில் இவ்வளவு நீண்ட நெடிய போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய கூடங்குளம் பகுதி தலித், மீனவ, விவசாய மக்களை பாராட்ட வார்த்தைகளில்லை. அரசுகள் சாதி,மத,மொழி ஆகியற்றைப் பயன்படுத்தி, இவர்களை பிளவுபடுத்த முனைந்தபோது தங்களது ஒற்றுமையை பறைசாற்றிய இவர்களுக்கு என்றும் வரலாற்றில் இடமுண்டு. 


    மத்திய அரசு இராணுவமாகவும் மாநில அரசு காவல்துறையாகவும் மாறிப்போன இன்றைய சூழலில் அகிம்சை எந்தளவிற்கு ஆளும் வர்க்கத்தை அசைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆயுத பலமற்ற மக்களுக்குள்ள ஒரே ஆயுதம் அகிம்சை என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.    

திங்கள், மார்ச் 26, 2012

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை- 2012-2013

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை- 2012-2013  

                                                                                                 -மு.சிவகுருநாதன் 


      தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இன்று (26.03.2012)  நிதியமைச்சர் 
ஓ. பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசைப் போன்று சில பொருள்களுக்கு வரிகளை ஏற்றி சில பொருள்களுக்கு வரிகளை இறக்கி எதோ மக்களுக்கு சேவை செய்வதாக பம்மாத்து செய்வதே இவர்களின் வேலையாகிவிட்டது. இன்றும் அதேதான் நடந்துள்ளது.

        ரூ.1500 கோடிகள்  அரசிற்கு வருவாய்க்கு வழி காணப்பட்ட நிலையில் வறுமையில் வாடும் மக்களை அரவணைத்து மேலே உயர்த்த எந்தத் திட்டமும் வழக்கம்போல் இல்லை. சாதரண மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் விலை உயர வழிவகுத்துவிட்டு ஓட்ஸ், கோதுமை, இன்சுலின் போன்றவற்றிற்கு வரிகள் குறைக்கிறேன் என்று சொல்வது  வெறும் அபத்த நாடகம்.

      அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டத்திற்கு சுமார் ரூ.1800 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடித்தட்டு மக்களுக்கு கல்வி கிடைக்க இந்தப் பணம் பயன்படுமா என்பது தெரியவில்லை. வாக்ரிகள் போன்ற சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட விளிம்புநிலைச் சமூகங்களுக்குக் கல்வி அளிக்க இந்த அரசு என்ன செய்யப்போகிறது என்பது கேள்விக்குறியே? 

       இரண்டாண்டுகளுக்கு முன்பு அமல்படுத்திருக்கவேண்டிய கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 வரும் கல்வியாண்டிலாவது நடைமுறைக்கு வருமா என்பது தெரியவில்லை. 25 % இடங்களை ஏழை மக்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் வழங்குவதை எப்படி உறுதிபடுத்தபோகிறார்கள் என்பதும் யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. 

    மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடநூற்கள், குறிப்பேடுகள் தவிர்த்த இதர இலவசங்கள் அவர்கள் பயபடுத்துவதற்கு உகந்ததாக இல்லை. தலித் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் குறிப்பேடுகள் போதுமானதாக இல்லை. அந்த வகையில் தற்போது வழங்கப்படும் குறிப்பேடுகளும் போதுமான அளவிலும் தரமானதாகவும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் இதனால் ஒருபயனும் விளையப்போவதில்லை. 

     புவியியல் படப் பயிற்சி ஏடுகள், கணிதவியல் பெட்டி போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்படுவதை வரவேற்கலாம். ஆனால் இவற்றின் தரம் உறுதி செய்யப்படவேண்டும். நான்கு செட் சீருடைகள் வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு இதுவரையில் வழங்கிய சீருடைகளின் தரம் பற்றிச் சொல்லவே வேண்டாம். மேலும் பெரும்பாலான அரசுப்பள்ளிகள் கூட சீருடைகளை பல்வேறு வண்ணங்களில் மாற்றிவிட்டதால் சீருடைக்கான தொகையை மாணவர்களின் பெற்றோரிடம் ரொக்கமாக வழங்கவேண்டும். இல்லாவிட்டால் இத்திட்டத்தின்  உரிய பலன் கிடைக்காமற்போகும். 

      இன்று தமிழக அரசு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு எதிராக மாறிப் போனாலும் அவர்களது போராட்ட வடிவத்தில் ஒன்றை செயல்படுத்த முனைந்திருப்பதை நாம் பாராட்டியாகவேண்டும். குடிசை வீடுகளுக்கு CFL  விளக்குகள் வழங்குவதே அது. சூரிய மின்சக்தி பயன்பாடுகள் பற்றி பேசுவதற்கும் நன்றி சொல்லலாம். 

     மொத்தத்தில் தொலைநோக்குப் பார்வையின்றி   ஒவ்வோராண்டும் மாநில அரசுகள் செய்யும் ஒரு சடங்காக இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது அமைந்துள்ளது.  மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் பாழடிக்கப்பட்ட நிலையில் இதைத்தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பது விசித்திரமாகத்தான் இருக்கமுடியும்.

ஞாயிறு, மார்ச் 25, 2012

மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அரச பயங்கரவாதம்

மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அரச பயங்கரவாதம் 

                                                                                                 -மு.சிவகுருநாதன் 

        கூடங்குளம் அணு உலை எதிர்ப்பிற்கான பெருந்திரள் மக்கள் போராட்டத்தை மத்திய - மாநில அரசுகள் மிகவும் மோசமான கோயபல்ஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என்றார்கள். இந்த அவதூறை மத்திய அரசு இன்னும் நிருபித்தபாடில்லை. இதற்கிடையில் மாநில அரசு அணு உலைக்கு ஆதரவாகக் களமிறங்கி போராட்டக்காரர்களை ஒடுக்க எந்த நிலைப்பாட்டை எடுக்கவும் தயாராக உள்ளது. தமிழக அரசு மத்திய அரசிற்குப் போட்டியாக நக்சலைட் -மாவோஸ்ட் தொடர்பு என்ற புதுக்கதையை கிளப்பிவிட்டுள்ளது. மக்கள் தொலைக்காட்சி தவிர இதர ஊடகங்கள் அனைத்தும் கூடங்குளம் அணு உலைப் போராட்டத்திற்கு எதிராகவே உள்ளன. 

       தமிழக அரசு போராட்டக்காரர்கள் வன்முறையை ஏவுவதற்காகவே இம்மாதிரியான புனைவுகளை உற்பத்தி செய்கிறது. கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டால் நாட்டில் விலைவாசி குறையும் என்றுகூட விஷமப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. கூடங்குளம் அணு உலை திறந்தால் குழந்தைப் பாக்கியம் உண்டாகும் என்று சொல்லவேண்டியதுதான் பாக்கி! எஞ்சிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள். 

       ம.தி.மு.க., பா.ம.க., வி.சி. தவிர்த்த பிற கட்சிகளும் இதழியல், காட்சியியல் ஊடங்களும் ஓரணியில் திரண்டு அணு உலைக்கு ஆதரவான நிலையில் இருக்கும்போது குறைந்தபட்ச ஆதரவு மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் போராட்டவியூகங்களை மறு ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகிறது. 


   போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டவர்கள் ஒரு வார காலமாக நடத்திவரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை உடன் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும். இப்போராட்டம் இத்துடன் முடிந்துவிட போவதில்லை. நீண்ட நெடிய போராட்டத்திற்கு நாம் தயாராகவேண்டியுள்ளது. போராட்டக்காரர்கள் தலைவர்கள் நலம் மிக முக்கியம். 

      மகாத்மா காந்தி மீண்டும் இங்கு வந்து போராடினாலும் அவருக்கு  நக்சலைட் -மாவோஸ்ட் முத்திரை குத்தப்படும். காந்தியவாதி ஹிமான்சு குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் காந்தியவாதி  சுப.உதயகுமாருக்கும். நாம் அடிக்கடி சொல்வதைப்போல மன்மோகன் சிங், ப.சிதம்பரம், நரேந்திர மோடி போன்றோர் தேசப் பக்தர்களாக உள்ள நாட்டில் ஹிமான்சு குமார் ,  சுப.உதயகுமார் போன்றோர் தேசத் துரோகிகளாகவும் நக்சலைட் -மாவோஸ்ட் -களாகவும் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. 

திங்கள், மார்ச் 19, 2012

இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!

இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!    -மு.சிவகுருநாதன் 

  
      கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் ஜெ.ஜெயலலிதாவை நம்பி ஏமாந்து போயுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்காக ஜெ.ஜெயலலிதா நான் உங்களில் ஒருத்தி என்றார். இப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த கையோடு கூடங்குளம் அணு உலையைத் திறக்க அமைச்சரவையை கூட்டி முடிவு செய்துள்ளார். இதை நாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.

      ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருக்கும் அணு உலை ஆதரவில் பெரும் போட்டியே நிலவுகிறது.  கருணாநிதி அன்றாடம் விடும் அறிக்கைகளும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளும் இதைத்தான் நிருபிக்கின்றன.

       மத்திய அரசின் குழு பிறகு மாநில அரசு ஏற்பாடு செய்த குழு அனைத்தும் வெறும் கண்துடைப்பு நாடகங்களே. இவை எல்லாம் போராடும் மக்களை ஏமாற்ற நடத்திய ஒத்திகைகள்தான். எல்லாக் குழுக்களும் எந்தவித ஆய்வும் செய்யாமல் கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதைத்தான் சொல்லின.

    பல மாதங்களாகத் தொடரும் இப்போராட்டம் இன்று பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழக காவல்துறை  படையணிகள் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் மத்திய ராணுவப் படைகளும் மத்திய தொழில் பாதுகாப்புப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன்.

   போராடும் இம்மக்கள் காந்தியின் அகிம்சைப் பாதை மீது இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால் நமது அரசுகள் மக்கள் மீது வன்முறையை பிரயோகிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதை எப்படி தமிழக மக்களும் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களும் எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதே பெருங்கவலையாக உள்ளது. 

     கூடங்குளத்தில் படைகளைக் குவித்து மக்களை பீதியூட்டும் வேலையை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. வழக்குரைஞர் சிவசுப்ரமணியம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதுகூட தெரியாமல் உள்ளது. அவர்களை இந்த அரசுகள் சட்டவிரோதக் காவலில் வைத்திருப்பது நிருபணமாகிறது.

     போராட்டக்காரர்கள் கைதைத் தொடர்ந்து இடிந்தகரையில் இருந்த சுப.உதயகுமார் , புஷ்பராயன்  ஆகியோர் பெரும் மக்கள் திரளுடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கியுள்ளனர். சுப.உதயகுமாரை எப்படியும் கைதுசெய்துவிடுவது என்ற முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது. மத்திய - மாநில அரசுகளின் இந்த அடக்குமுறை நடவடிக்கையை, மனித உரிமை மீறலை அனைவரும் கண்டிக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் களத்தில் என்றும் இணைந்திருப்போம். 

பணக்காரர்களின் பட்ஜெட் -2012

பணக்காரர்களின் பட்ஜெட் -2012             -மு.சிவகுருநாதன் 

      இந்திய அரசு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கவும் ஏழைகளை மென்மேலும் எழைகளாக்கவும் வழக்கம்போல தனது பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி மூலம் சமர்ப்பித்துள்ளது. 40 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள தனக்கு என்ன செய்யவேண்டுமெனத் தெரியும் என இருமாந்துள்ளார். இவ்வளவு ஆண்டுகள் ஆனபிற்பாடும் பிரதமர் நாற்காலி தனக்குக் கிடைக்கவில்லை என்ற அவருடைய ஆதங்கம் ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது.

    ப.சிதம்பரம் எவ்வளவோ தேவலாம் என்கிற குரல்களெல்லாம் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. முதலாளிகளுக்கு கைகட்டி சேவகம் செய்யும் கொள்கைகள் இருக்கும் வரையில்  பிரணாப் முகர்ஜி, தினேஷ் திரிவேதி போன்றோர் முதலாளித்துவத்தின் எடுபிடிகளே.  மன்மோகன் சிங் வகுத்தளித்த இந்தப் பாதையில் செல்லும் இவர்கள் ஒருநாளும் மக்களைப் பற்றி யோசித்தது இல்லை.

    இவைகளின் முதலாளிய சேவகத்திற்கு சில உதாரணங்கள்:

  • விஜய் மல்லையாவின் king  fishers  விமான  நிறுவனத்தை பாதுகாக்க வெளிநாடுகளிருந்து 5000 கோடி கடன் பெற அனுமதி.
  • விமான இறக்குமதிக்கு முழு வரி ரத்து. 
  • விமான பெட்ரோல் இறக்குமதிக்கு வரி குறைப்பு.
  • multi-speciality hospitals வளம்கொழிக்க ரூ.5000 வரையிலான மருத்துவப் பரிசோதனைகளுக்கு வருமானவரிவிலக்கு.  
  • கடைநிலை (D)  ஊழியர்களுக்கு 10 %வருமானவரி விதித்துவிட்டு 10 லட்சசத்துக்கு மேல் எத்தனை கோடி சம்பாதித்தாலும் 30 % வரி என்ற அநியாயம். 
  • வேளாண் மானியங்கள் குறிப்பு; ஆனால் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எவ்வித மானிய வெட்டும் இல்லை.
  • சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மானியங்கள் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை.
  • சிமென்ட் விலை உயர்வு.
  • சைக்கள் விலை அதிகரிப்பு. 
  • சேவை வரி 10% லிருந்து   12%  ஆக உயர்வதால் உணவகப் பண்டங்கள் விலை கூடும். 
  • தங்கம், பிளாட்டினம் விலை உயரும். தங்கத்தில் முதலீடு செய்வது காரணமாகக் கூறப்பட்டாலும் ஏழைகளின் திருமணம் தடைபடும். 
  • ஏ.சி. பிரீட்ஜ், வாஷிங் மெசின்  விலை அதிகரிக்கப் போவதாக முன்கூட்டியே சொல்லை இந்த கம்பெனிகள் இவற்றை அண்மையில் விற்றுத் தீர்த்தன. இந்த முதலாளிகள் கோரிக்கைகள் அப்படியே ஏற்கப்பட்டது உண்மையாயிற்று. 
  • ராணுவ ஒதுக்கீடு ரூ.193407 கோடி ; சென்ற ஆண்டு ஒதுக்கீடு ரூ. 164415 கோடி. ஒரு ரூபாயில் ராணுவ செலவு 11 காசுகள். 
  • அனல்மின் நிலையக் கருவிகள் இறக்குமதிக்கு முழு வருவிலக்கு.
  • நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயு இறக்குமதிக்கு வரி இல்லை. 

    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மக்கள் பிரதிநிதிகள் யாருக்கு சேவகம் செல்கிறார்கள்?

வாழ்க இந்தியா! வளர்க முதலாளிகள்!!

வியாழன், மார்ச் 15, 2012

அறிவியலையும் மக்களையும் ஒரு சேர சாகடிக்கும் போலி விஞ்ஞானிகள்

அறிவியலையும் மக்களையும் ஒரு சேர சாகடிக்கும் போலி விஞ்ஞானிகள் 
 
                                                                                      - மு. சிவகுருநாதன்.

 
 
 
 
(சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு, பூவுலகின் நண்பர்கள், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், எதிர் வெளியீடு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள 'கூடங்குளம் அணுமின் திட்டம் - இந்திய அணுமின் குழுமம் மேற்கொண்டிருக்கும் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறையும் தமிழக - கேரள மக்களின் வாழ்வு மீதான அச்சுறுத்தலும்' - நூலாசிரியர்கள் : மரு. ரா. ரமேஷ், வி.டி. பத்பநாபன், மரு. வீ. புகழேந்தி என்ற நூல் குறித்த பார்வை)
 
 
 
 ஜப்பானில் சுனாமியின் காரணமாக விபத்துக்குள்ளான புகுஷிமா அணு உலைக்குப் பிறகு தீவிரமாயிருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலு  சேர்க்க வந்துள்ள 9 கட்டுரைகள் அடங்கிய இந்நூல் மிக முக்கியமானதென்று கருதுகிறேன்.
 
 முதல் கட்டுரை மத்திய அரசு வல்லுநர் குழுவின்அறிவுப் பின்புலத்தை கேள்விக்குட்படுத்துகிறது.  வல்லுநர் குழுவின் தலைவர் ஏ.ஈ. முத்துநாயகம் கடலியல் வல்லுநர் அல்ல; ஏவுகணைத் தொழில் நுட்ப வல்லுநர் என்றும் நிபுணர் குழுவின் 15 பேரில் அறுவர் இந்திய அணுசக்தித் துறை (DAE - Department of Atomic Energy) மற்றும் இந்திய அணுமின் குழுமத்தில் (Nuclear Power Corporation of India) பணிபுரிபவர்கள் அல்லது ஓய்வு பெற்றோர்.  சாந்தா, முத்துநாயகம் உள்ளிட்ட ஐவர் அணுசக்தித் துறையுடன் தொழிற் தொடர்பு கொண்டவர்கள். மீதி நால்வர் மட்டுமே அணுசக்தித் துறையுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்கள் என்றும் இவர்களில் ஹர்ஷ் கே. குப்தா மட்டுமே அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டவர் என்ற விவரத்தை அம்பலப்படுத்துகிறது. 
 
 இதைப் போலவே தமிழக அரச நியமித்த பேரா. இனியன் தலைமையிலான நால்வர் குழுவின் நிலையும் இதேதான் என்பதைத் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.   இத்தகைய நடவடிக்கைகள் திருடர்கள் கையில் சாவி கொடுப்பது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிபதியாக்குவது போன்றவற்றிற்கு இணையானது. 
 
 இந்திய அணுசக்தித் துறை, அணுமின் குழுமம் ஆகியவை அளிக்கும் தரவுகள், ஆதாரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு எவ்வித கேள்விகளும் எழுப்பாமல் அறிவியல் சிந்தனைக்கு எதிராக வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு வல்லுநர் குழுவின் ஆய்வு முறையும் அப்துல்கலாம் அறிக்கை உருவாக்கிய முறையும் அமைந்திருப்பதை இரண்டாவது கட்டுரை வெளிப்படுத்துகிறது. 

கூடங்குளம் அணு உலையின் அமைவிடம் குறித்த நிலவியல் ஆய்வுகளை நிபுணர் குழு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அணு உலைகளின் நில அதிர்வுகளைத் தாங்கும் திறன் குறித்து ஆராயும் தொழில் நுட்ப வல்லுநர் டாக்டர் ஆதிமூலம் பூமிநாதன் பரிந்துரைப்படி இப்பகுதியில் அடித்தளப் பாறையில் ஊடுருவியிருக்கும் கால்கேரியஸ் பொருள் (கால்சியம் அதிகம் உள்ள பொருள்)  உள்ள இடங்களை சிமெண்ட் கலவை கொண்டு நிரப்புவது என்ற யோசனை செயல்படுத்தப்பட்டது.  இங்கு சுண்ணாம்புப் பாறை மற்றும் கால்சைட் எனும் பிதுங்கு எரிமலைப் பாறை இருந்து விடும் வாய்ப்பை ஆய்வுக்குட்படுத்தவில்லை.  ஆனால் தமிழ்நாடு நிலவியல் சுற்றாய்வுத் துறை ஆய்வாளர் ஆர். ராமசாமி 1987 ஆம் ஆண்டிலேயே இங்கு பல்வேறு வகை எரிமலைப் பாறைகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். 
 
 கூடங்குளம் அமைவிடத்தில் விரிவான நிலவியல் சுற்றாய்வை மேற்கொண்ட டாக்டர் பிஜூ லாங்கினோஸ், பேரா. ராம சர்மா ஆகியோர், கடினப் பாறைகளைச் சுண்ணாம்புப் பாறைகளை மூடி மறைத்துள்ளதையும், அவற்றின் ஊடாக மாக்மா எரிமலைப் பாறைகள் ஊடுருவியிருப்பதையும், ஊடுருவல் நடக்குமிடத்தில் ஆழமான உடைவு (fracture) இருப்பதையும், இந்த உடைவுகளின் வழியே மாக்மா வெளியேற வாய்ப்புண்டு எனவும் சொன்னார்கள். மேலும் கடினப்பாறையின் கீழ் பிதுங்கி நிற்கும் உறுதி குன்றிய பிதுங்கு எரிமலைப் பாறைகள் (sub - volcanic rocks) இருப்பதை உறுதிப்படுத்திய நிலக் காந்தவியல் ஆய்வு செய்யப்பட்டுள்ளதையும் மூன்றாவது கட்டுரை விளக்குகிறது.
 
 நிலக்காந்தவியல் ஆய்வின் போது (Ground Magnetic survey) அப்பகுதியிலுள்ள உருமாறிய பாறைகளின் (Meta morphic rocks) ஊடாக பிதுங்கு எரிமலைப் பொருள்  ஊடுருவியிருப்பது உறுதி செய்யப்பட்டது.  இந்த உருமாறிய பாறையின் மேடுகளில் பிதுங்கு எரிமலைப் பாறையின் பெரிய உடுவைகளும் (dykes) பள்ளங்களில் (graben)அதன் சிறு உடுவைகளும் 110 மீட்டர் ஆழத்திற்கு ஊடுருவியிருக்கின்றன.  கண்டமேலோட்டின் கெட்டித் தன்மை 110 - 150 மீட்டர் எனும் போது அங்கு அமைக்கப்படும் கூடங்குளம் அணு உலைகள் எப்படி பாதுகாப்பாக இருக்கும் என மக்கள் கேள்வி எழுப்புவது நியாயமானதுதானே?
 
 கூடங்குளம் அணு உலையின் அமைவிடத்திற்கு 900 மீட்டர் தொலைவில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் வெட்டியெடுக்கப்படுகிறது.  40000 மீட்டர்கெட்டியாக இருக்க வேண்டிய நில மேடு 110 - 150 மீட்டர் அளவில் மெலிந்திருக்கும் நிலையில் சுண்ணாம்புக்கல் தோண்டியெடுக்கும் பணியும், அமைவிடத்தில் தேக்கி வைக்கப்பட்ட அணை நீரின் அழுத்தத்தாலும் அணு உலை பாதுகாப்பு மேலும் குறையும்.  இந்த தனியார் சுரங்கம் பற்றிய கேள்விக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் எந்த சுரங்கப் பணியிலும் ஈடுபடவில்லை என்ற கோமாளித்தனமான பதிலளித்துள்ள நிபுணர் குழுவை என்ன செய்வது?
 
 கூடங்குளம் கடற்கரைப் பகுதியில் கிடைக்கும் சில தனிமங்களுக்கான தனியார் ஈடுபடும் மணற் கொள்ளைகள் ஒரு புறமும் அணு உலைகளைக் குளிர்விக்க கடல் நீரை எடுப்பதற்காகப் போடப்பட்டுள்ள குழாய்கள், கட்டுமான அமைப்புகள் மறுபுறமும் கடலரிப்பு கடற்கரையில்  மணல் சேராமைக்கான  காரணங்களாக இருக்கின்றன.  மேலும் கடுமையான கடலரிப்பும் மணற் கொள்ளையும் நடைபெறும் இடிந்தகரையையொட்டி அணு உலைக்குத் தேவையான நன்னீர் வழங்கும் கடல்நீர் உப்புகற்றி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.  இதெல்லாம் நிபுணர் குழுவின் கண்ணில் படாததுதான் வேதனை.
 
 இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல் குவாரியில் ஆய்வு நடத்திய ஜெர்மன் புவியியல் ஆய்வாளர் டாக்டர் ஹெல்முட் ப்ருக்னர் (1987) சுமார் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை கடல் ஆக்ரமித்திருந்தது என்றும் அதன் பிறகு வந்த ஒன்றரை கோடி ஆண்டில்இப்பகுதி கடலிலிருந்து மெதுவாக மேலெழும்பியது என்றும் சொன்னார்.  1988 - 89இல் வெளியான இவரது ஆய்வுக் கட்டுரைகளின்படி இதே காலகட்டத்தில்தான் யாழ்ப்பாண சுண்ணாம்புப் பாறைகளும் காரைக்கால் மணற்பாறைப் படுக்கைகளும் உருவாகியிருக்க வேண்டும் எனவும் கருதினார்.  பின்னால் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் இப்பாறைகளில் நிக்கல் அதிகளவு காணப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு, நிக்கல் எரிமலைப் பாறைகள்அல்லது வேறு பாறைகளிலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டது. 
கடலுள் உடைந்து விழுந்து மூழ்கி அழிந்து போன தென் தனுஷ்கோடி, கூடங்குளம் அமைவிடத்தை மாபெரும் சுனாமி தாக்கவல்ல அபாயம், உடைந்து சாய்ந்து சரியும் மன்னார் வளைகுடா, கிழக்குக் குமரி - கொழும்பு வண்டல் குவியல்கள், இவற்றை இயக்கும் இந்திராணி நிலப் பிளவு போன்ற எந்தவொரு அறிவியல் பூர்வமான உண்மைகளை அணுசக்தி ஆதரவாளர்களும், நிபுணர் குழுக்களும், அப்துல்கலாமும் கண்டு கொள்ளாத அவலத்தை இக்கட்டுரைகள் உரைக்கின்றன.
 
 மன்னார் வளைகுடாவில் பெட்ரோலிய ஆய்வுகளுக்காக தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் எரிமலைக் கற்கள் கிடைத்துள்ளன. குமரி முகட்டின் வடபகுதியில் உள்ள நிலமேலோடு கண்ட மேலோட்டாலும் (continental crust) தென் பகுதியில் உள்ள நில மேலோடானது கடல் மேலோட்டாலும் (oceanic crust) ஆனவை.  குமரி முகட்டில் ஏற்படும் ஒவ்வொரு நிலவியல் நிகழ்வும் நேரடியாகவும், இந்திராணி நிலப்பிளவின் வழி மன்னார் வளைகுடாவில் உள்ள சரிந்து சாயும் வண்டல் குவியல்களைப் பாதித்து மன்னார் வளைகுடா மெகா சுனாமியை ஏற்படுத்த முடியுமென ஆய்வுகள் சொல்லுகின்றன. 
 
 ஆஸ்திரேலியாவிலிருந்து அரபிக்கடல் வரை தென்கிழக்கு வடமேற்குத் திசையில் மிக அதிக நிலத்தடி வெப்ப ஓட்டத்தைக் கொண்டுள்ள பிராந்தியம் ஒன்றுண்டு.  இதுதான் இந்திய - ஆஸ்திரேலிய பூகம்பப் பிராந்தியம் 
(Indo - Australian Seismic Belt) என்றழைக்கப்படுகிறது.  இப்பிராந்தியத்தில்தான் கடல் தரையில் மேலதிக அளவில் கடல் மலைகளும், எரிமலைகளும் காணப்படுகின்றன என்பது ஆய்வாளர் பீட்டர் ஹெடெர்வாரியின் கருத்து. 
(பக். 46)
அபிஷேகப்பட்டி, சுரண்டையில் முறையே 1998,  2001  ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த சிறு அளவு எரிமலை வெடிப்புக்களில் இருந்து வெளியேறிய எரிமலைப் பாறைகள் குறித்தும் அந்த நிகழ்வுகளுக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்தும் பேரா. விக்டர் ராஜமாணிக்கத்தின் அறிக்கை சுட்டிக் காட்டியது.  (பக். 48).  இவற்றை அரசின் அதிகார அமைப்புகளும், நிபுணர் குழுக்களும், விஞ்ஞானிகளும் கண்டு கொள்ளவில்லை.  மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாதென உச்சநீதிமன்றமும் கைவிரித்துள்ள நிலையில் தமிழக - கேரள மக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை இக்கட்டுரை படம் பிடித்துக் காட்டுகிறது.
 
 அணு உலை இயங்கும் போது வெளிப்படும் கழிவுகளை பிளாஸ்டிக் மாதிரி மறு சுழற்சி செய்து விடுவோம், மேசைப் பந்தாக உருட்டி வைத்து விடுவோம் என்று புனை கதைகளை பரப்புபவர்கள் அமெரிக்க அணுசக்திக் கல்லறைக்காக தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுகளுக்குப் பின்னர் கைவிடப்பட்ட யுக்கா குறித்து வாய்திறப்பதில்லை என்ற உண்மையை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும். 
 
 யுக்காவில் சம காலத்தில் எரிமலை வெடிப்புகள் எதுவும் நிகழாத நிலையில் அமெரிக்க அரசு எரிமலைப் பேரிடருக்கான ஆய்வை மேற்கொண்டது.  இதற்காக 25 ஆண்டுகளில் அவர்கள் செலவிட்ட தொகை ரூ. 10000 கோடி.  இருப்பினும் இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் யுக்கா அணு உலைக் கல்லறைத் திட்டத்திற்கு உகந்த இடமல்ல என்ற முடிவை 2009  இல் வெளியிட்டது.  (பக். 51).  எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் நமது உத்தமர்கள் யுக்காவில் செய்த எரிமலைப் பேரிடர் ஆய்வை ஏன் கூடங்குளத்தில் செய்யச் சொல்லக் கூடாது?
 
 கூடங்குளம் அணு மின் நிலைய அமைவிடத்திலிருந் வடமேற்கு திசையில் 10 கி.மீ. தொலைவில் ராதாபுரம் நகருக்குத் தெற்கில் அமைந்த பண்ணையார்குளம் கிராமத்தில் 2011 நவம்பர் 26ஆம் தேதி கார்ஸ்ட் குழி உண்டானது. 
 
 மழையின் போது நிலத்திற்குள் மழை நீர் இறங்குகிறது.  காற்றிலுள்ள கரியமில வாயுவுடனும் நிலத்துடனும் மழை நீர் உறவு கொள்ளும் போது கரியமிலம் (கார்பானிக் அமிலம்) உருவாகிறது. இந்த அமில நீர் கரையும் பண்பு கொண்ட அடித்தளப் பாறையின் ஊடாக இறங்கும் போது அதைக் கரையச் செய்து நிலத்தடி குகைகளை உருவாக்கி விடுகிறது.  இதுவே கார்ஸ்ட் எனப்படும் நிலவியல் அமைப்பாகும். (பக். 52) இப்படியான நிலவியல் அமைப்பு கொண்ட கூடங்குளத்தில் அணு உலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட அடிப்படையே தவறானதாகும்.  மன்னார் வளைகுடா கடல் உள்வாங்குதல் தொடர் நிகழ்வாக உள்ள நிலையில் இது குறித்தான முறையான ஆய்வு செய்யாமல் அணு உலையைத் திறக்க மட்டும் அவசரப்படுவது ஏன் என்ற கேள்வி இந்நூலைப் படிப்பவர்கள் அனைவருக்கம் கண்டிப்பாக எழக்கூடும். 
 
 இறுதிக் கட்டுரையில் கூடங்குளத்தின் உண்மைப் பிரச்சினை, அதற்கான தீர்வுகள் என 38 கருத்துக்கள் தொகுப்பாக பட்டியலிடப்படுகின்றன.  அவற்றில் சில...
 
01. யுக்காவைவிட கூடங்குளம் அமைவிடத்தில் எரிமலை அபாயம் இருப்பதை உணர்த்தும் சுயேட்சையான அறிவியல் ஆய்வு முடிவுகளை இந்திய அணுசக்தித் துறை ஏற்றுக் கொள்ளவேயில்லை.  2002 மே 20 அன்று அறிவியல் ஆதாரங்களுடன் அணுகிய போது தலைமை நீதிபதி பி.என். கிர்பால், இதை ஏற்க மறுத்து, வழக்கு தொடர்ந்த காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மார்கண்டனுக்கும் நாகர்கோயில் விஞ்ஞானி டாக்டர் லால் மோகனுக்கும் ரூ. 1000 அபராதம் விதித்த நிகழ்வு யாரும் மறக்க முடியாதது.
 
02. தென்னகத்திலேயே மேலதிக நிலத்தடி வெப்பங் கொண்ட (sub crustal heat flow) இடம், கூடங்குளத்திலிருந்து 29 கி.மீ. தொலைவிலுள்ள நாகர்கோயில் என்று சுகந்தா ராய் குழுவினர் 2007-ல் உறுதி செய்தனர்.  நில மேலோட்டில் மாக்மா மேலெழும்பி வருவதையும் எரிமலைப் பேரிடர் ஆய்வு (volcanic Hazard Analysis) மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இது சுட்டுகிறது. 
 
03. முன்பு அணு உலையைக் குளிர்விக்க பேச்சிப்பாறை, கோதையாறு அணைகளிலிருந்தும் அல்லது நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் திட்டமிருந்தது.  ஆனால் திடீரென்று டாடா நிறுவனத்தின் வழியாக இஸ்ரேல் நாட்டிலிருந்து வாங்கிய கடல்நீர் உப்பகற்றி ஆலையைத்தான் (sea water desalination plant) கூடங்குளம் அணுமின் நிலையம் நம்பியுள்ளது.  மன்னார் வளைகுடாவை மட்டும் நம்பியிராமல் மாற்று நீராதரங்கள் மூலம் பாதுகாப்பாக அதிக நீரை சேமித்து வைத்துக் கொள்ள அணுசக்திக் கட்டுப்பாடு அமைப்பு வலியுறுத்தியும் கூட அணுமின்நிலைய நிர்வாகம் அவற்றைக் காதில் வாங்குவதில்லை. 
 
04. 1989ஆம் ஆண்டு இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு அமைப்பு இத்திட்டத்திற்கு வழங்கிய அனுமதியில் கடலரிப்பு மற்றும் கடற்கரைப் பெருக்கம் (sea erosion and accretion) குறித்த ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தியது.  இன்று வரை அத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
 
05. கடல் நீர் உள்வாங்கும் தருணங்களில் அணு உலையின் தேவைகளுக்காக கடல் நீரை உள்ளிழுக்கும் குழாய் பெறும் காற்றை மட்டும் உறிஞ்ச நேரிடலாம்.  கடல்நீர் உப்பகற்றி ஆலைகளுக்கும் இதே நிலைதான். 
 
06. அருகிலிருக்கும் தாக்கும் சுனாமிகள் (near field tsunami) இந்தியாவின் கடலோரப் பகுதிகளைத் தாக்காது என்ற நம்பிக்கை அறிவியலாகாது.  
 
சுனாமி உருவாக வாய்ப்பாக வல்லுநர்கள் முன் வைக்கும் மூன்று காரணங்கள்
 
 அ. சக்தி வாய்ந்த பூகம்பங்களை ஏற்படுத்தக் கூடிய நிலப்பிளவுகள்
ஆ. கடலடி எரிமலைகள் (under sea volcanoes)
இ. கடல் தரையில் ஏற்படும் நிலச்சரிவுகள் (submarine land slides)
 
07. 2011 நவம்பர் 19 அன்று குமரி முனைக்கு தெற்கே குமரி முகட்டின் அருகே கடலடியில் 5.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை கேரளத்தில் உள்ள நிலவியல் ஆய்வு மையம்(Centre of Earth Sciences), இந்திய வானியல் துறை (Department of Meteorological of India) , ஹைதராபாத்தில் உள்ள பெருங்கடல் தகவல் சேவைக்கான தேசிய மையம் (India National centre for Ocean Information Services) ஆகியன அறிக்கைகள் வெளியிட்டன.  இந்திராணிப் பிளவில் நடந்த இந்த நிலநடுக்கம் பற்றி அணு உலை நிர்வாகமோ, நிபுணர் குழுவோ இதுவரை எதுவும் சொல்லவில்லை.
 
08. அணுசக்தித் துறையின் அறிவியலுக்குப் புறம்பான நடவடிக்கைகளை வல்லுநர் குழுவும் செய்திருப்பதால் மத்திய - மாநில அரசுகள் இந்த நிபுணர் குழு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.
 
09. கூடங்குளம் அணு மின் நிலைய அமைவிடத்தில் நிலவியல், கடலியல் மற்றும் நீரியல் தன்மைகள் குறித்து சரிவர ஆராயவும் ஏற்கனவே நடந்த ஆய்வுகளைப் படிக்கத் தவறிய அணுசக்தித் துறை, அணுசக்திக் கட்டுப்பாட்டு அமைப்பு, கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் மற்றும் பிற அரசுத் துறை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாணையம் வெளிப்படையாக விசாரணை நடத்தி தவறிழைத்தவர்களைத் தண்டிக்க வேண்டும்.
 
10. கூடங்குளம் அணு மின் நிலைய அமைவிடத்தில் சுனாமிப் பேரிடர் ஆய்வு, எரிமலைப் பேரிடர் ஆய்வு, மாற்று நீராதர ஆய்வு, கடற்கரை உறுதித்தன்மை குறித்த ஆய்வு மேற்கொண்டு, அந்த ஆய்வு முடிவுகளை மக்கள் மன்றத்தில் வெளிப்படையாக முன் வைக்க வேண்டும்.
 
 இத்தகைய பல்வேறு பிரச்சினைகள் நிறைந்த கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மட்டும் குறியாக இருக்கும் அதிகார வர்க்கத்தையும் அறிவியல் மக்களையும் ஒரு சேர சாகடிக்கும் போலி விஞ்ஞானிகளையும் இந்நூல் சிறப்பாக அம்பலப்படுத்துகிறது.
 
 கூடங்குளம் அணுமின் நிலைய அமைவிடத்தைவிட மேற்கு வங்கத்தின் ஹரிப்பூர் அமைவிடம் நிலவியல் ரீதியில் மோசமானது.  இந்தியாவில் எங்க வேண்டுமானாலும் அணு உலைகளைக் கட்டிக் கொள்ளலாம்.  நாங்கள் அளிக்கத் தயாராக இருக்கிறோம்.  என்று இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் கடாக் 2011 டிசம்பர் 07  - ல் கருத்து தெரிவித்துள்ளார்.  கூடங்குளத்தின் நிலவியல் பிரச்சினைகளை அறிந்துதான் ரஷ்யா அணு உலைகளை இந்தியாவிற்கு வழங்கியதா என்று பொது மக்கள் கேள்வி எழுப்புவது நியாயமானதுதான்.
 
 அனைவரும் படித்து எளிமையாகப் புரிந்து கொள்ளும்வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூலை மக்கள் பதிப்பாக மலிவு விலையில் அச்சிட்டு தமிழகம் முழுவதும் விநியோகிக்க வேண்டும்.  அப்போது அணு உலைக்கான போராட்டத்தின் தீவிரத்தை அனைவரும் உணர்வர்.  அப்போதுதான் இனி தமிழகத்தில் அணு உலை நிறுவ வாய்ப்பில்லை என்ற சூழல் உருவாகும். 
 
 (சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவர் குழு, 
பூவுலகின் நண்பர்கள், 
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், 
எதிர் வெளியீடு 
      ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள
 'கூடங்குளம் அணுமின் திட்டம் - இந்திய அணுமின் குழுமம் மேற்கொண்டிருக்கும் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறையும் 
தமிழக - கேரள மக்களின் வாழ்வு மீதான அச்சுறுத்தலும்' 
 
- நூலாசிரியர்கள் : மரு. ரா. ரமேஷ், வி.டி. பத்பநாபன், மரு. வீ. புகழேந்தி )
 
பக். 64 விலை. ரூ. 70 
 
தொடர்பு முகவரி: 
 
781 - விநாயகர் கோயில்தெரு, 
கணுவாய், 
கோயம்புத்தூர் - 108.  

சிற்றிதழ் அறிமுகம் - எங்கோ ஓர் மூலையில் உயிர்பெறும் சிறு பத்திரிக்கை

எங்கோ ஓர் மூலையில் உயிர்பெறும் சிறு பத்திரிக்கை   
 
                                                                                 - மு. சிவகுருநாதன்
 
(சிற்றிதழ் அறிமுகம் - மந்திரச் சிமிழ் காலாண்டிதழ் 07-10 
(ஏப்ரல் 2011 - மார்ச் 2012)  
எல்லையற்று விரியும் தாள் பறவை)             
 
 
 
 
 
 2010-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பெருவைச் சேர்ந்த (லத்தீன் அமெரிக்கா) மரியா வர்கஸ் லோஸாவின் பழைய நேர்காணல் (1990) ஒன்று தமிழாக்கப்பட்டுள்ளது.  எதற்காக எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு "எனது சோகம் என்னை எழுத வைக்கிறது.  அந்த சோகத்தை எதிர்கொள்ளவே நான் எழுதுகிறேன்"  என்று பதிலளிக்கிறார்.  இரு பெரும்பாலோர்க்குப் பொருந்தும் ஒன்றாகவே உள்ளது.  
 
 'இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் - பிராய்டின் மூடுண்ட கனவுகள்' கட்டுரையில் ஜமாலன் பின்வரும் கருத்துக்களை முன் வைக்கிறார். 
 
 "மனம் என்பதில் நினைவிலியை தனி மனிதனின் எல்லைக்குட்படுத்துவது. அதன் வழியாக முதலாளித்துவத்திற்கான எல்லைகளை மறு வரையறை செய்தது.  முதலாளித்துவத்திற்கு தேவையான உற்பத்திச் சக்திகளான மனிதர்களின் உடலை அவர்களது விருப்பத்தை முதலாளித்துவ எல்லைக்குள் வரையறை செய்தது.   விருப்பத்தை உட்செறித்த வேட்கையாகவும், இது இன்மையால் திருப்தியற்றதாக உள்ளதாகவும், அதனைப் பதிலீடு செய்வதற்காக சமூகத்தின் உற்பத்தியில் பங்கு பெறச் செய்வதாகவும் எதிர்மறையான கருத்தாக்கத்தை கட்டமைத்து, விருப்பு சமூக உற்பத்திக்கான ஆற்றல் அதனை இன்மையாக்கியதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி எந்திரங்களில் விருப்பின் பதிலீடுகளைத் தேடும் மனதாக உருவானது.  முதலாளித்துவத்தின் பித்து நிலை என்பது இப்படி இருப்பு-இன்மை என்கிற இருமைக்குள் சிக்கியதால், மனமும் முதலாளித்துவத்தின் இருப்பு-  இன்மை என்பதற்குள் சிக்கிக் கொண்டு விட்டது". (பக். 114) 

ஆண்டி - இடிபஸ் (Anti - Oedipus) : டெல்யூஸ் - கட்டாரி எழுதிய நூலிலிருந்து 'விருப்ப எந்திரங்கள்  உறுப்புகளற்ற உடல்'  நிஜந்தனால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.  "ஒரு உறுப்பு - எந்திரம் ஆற்றல் கொண்ட எந்திரத்துடன் இணைக்கப்படுகிறது; ஒன்று போக்கை உற்பத்தி செய்கிறது.  இன்னொன்று தடை செய்கிறது.  மார்பு, பால் சரக்கும் எந்திரம்; வாய், அதனோடு இணைக்கப்படும் எந்திரம். நோயாளியின் வாய் பல செயல்களைச் செய்கிறது. அதன் உடையாளருக்கு அரு ஒரு சாப்பிடும் எந்திரமா அல்லது சுவாசிக்கும் எந்திரமா, ஒரு ஆசன வாய் எந்திரமா, ஒரு பேசும் எந்திரமா அல்லது சுவாசிக்கும் எந்திரமா (ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கும் போதும்) என்பதில் தெளிவு இருப்பதில்லை" (பக். 91) என்று விருப்ப உற்பத்தி, உறுப்புகள் இல்லாத உடல் பற்றி இக்கட்டுரை பேசுகிறது. 

டெல்யூஸ் - கத்தாரியின் 'வேர்த்தண்டு ரைசோம்' என்ற கட்டுரையை எஸ். சண்முகம் மொழி பெயர்த்துள்ளார்.  அதில் "நாங்கள் இருவரும் இணைந்துதான் எதிர் இடிபஸ்  (Anti - Oedipus) எழுதினோம்.  நாங்கள் இருவரும் தனித்தனி பன்முகத்தோடு இருப்பதால், ஏற்கனவே எங்களை பலவும் சூழ்ந்திருந்தன"  (பக். 32) என்றும்
 
 "ஒரு புத்தகத்திற்கு பருண்மைப் பண்போ அல்லது அகப் பண்போ கிடையாது, அது பல்வேறு விடியல்களால் பொருண்மைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது.  மேலும் பல வித்தியாசமான தேதிகளும் வேகங்களால் உந்தப்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு புத்தகத்தை கற்பித்துக் கூறுவதற்கு இந்த பண்புகளின் இயக்கத்தை, அதன் உறவுகளின் புற வெளியையும் கவனிக்காது செல்வதுதான் மரபு" (பக். 32) 
 
    "ஒரு வேகத் தண்டிற்கு முதலோ முடிவோ கிடையாது; அது எப்போதும் நடுவில் இருக்கிறது". (பக். 53) 
 
    "பலகையை சுத்தப்படுத்தி, துலங்குவது அல்லது பூஜ்ஜிய அடித்தளத்திலிருந்து மறுபடியும் ஆரம்பித்து, ஒரு துவக்கத்தைத் தேடுவது, அடித்தளத்தைத் தேடுவது - இவையனைத்துமே ஒரு பொய்யான கருத்துருவத்தை பயணம் மற்றும் நகர்தல் குறித்து உருவாக்குகிறது". (பக். 53)
 
   "அமெரிக்க இலக்கியமும், ஆங்கில இலக்கியமும் பெரிய அளவிற்கு இந்த வேர்த்தண்டுத் தன்மையைக் கொண்டிருக்கின்றன.  அவர்களுக்கு ஒவ்வொன்றின் இடையே எப்படிப் பயணிப்பது என்று தெரிந்திருக்கிறது". 
(பக். 53) என்றும் விளக்குகிறார்கள்
 
 ஆசிரியர் க. செண்பகநாதனின் 'கூடங்குளம் : மரணக்கூடாரம்' என்ற கட்டுரை மன்மோகன் சிங்கைப் போல ராக்கெட் வடிவமைப்புப் பொறியாளர் (அப்துல்கலாமை விஞ்ஞானி என்றழைப்பதில் மாற்றுக் கருத்துண்டு.  
க.செண்பகநாதன் கலாமை முன்னாள் ஜனாதிபதி என்று சொல்லக் கூட முடியவில்லை என்கிறார்) அப்துல்கலாமும் கார்ப்பரேட் ஏஜெண்ட் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. சோவியத் ரஷ்யா, செர்னோஃபில் அணு உலை விபத்தை எடுத்துக்காட்டி கூடங்குளம் அணு உலை எந்த வகையிலும் நல்லதல்ல என்றும் தமிழர்களை ஒடுக்க, அழிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளைச் சாடுகிறது. 
 
 மணல் மகுடி குழுவினரின் 'சூர்ப்பணங்கு' நாடகம் குறித்த ஜெ. சாந்தாராமின் பதிவு மிக விரிவானது. 
 
 "பஞ்சத்தில் நிராதரவான நல்லத்தங்காள் தன் ஏழு குழந்தைகளை  மாய்த்துக் கொள்ள பாழுங்கிணறு செல்வதும், ஆட்சியாளருக்கு எதிராக ஆவேசமுறுவதும், நல்லத்தங்காள் கதையை நடிக்க பெண் வேடமிட்டு அணங்குகளாய் மாறியவர்கள் இன்றை பெண்ணிலையின் துன்ப - துயரங்களைப் பேசி விமோசனமடைய ஆணாதிக்கத்திற்கு எதிராக ஆர்ந்தெழுவதும், இறுதியில் பல்லுயிர் ஓம்பும் தாய்மையின் குறியீடாக பால்மடு கனத்த ஏழு முலைகள் கொண்ட மீவிலங்குப் பெண் வந்து எல்லா உயிர்களுக்கும் பாலூட்டுவதுமாக" (பக். 71) சூர்ப்பணங்கு நாடகம் நிகழ்வதை காட்சிகளினூடாக சாந்தாராம் விவரிக்கும் போது நாடகத்தை நேரில் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

Pantomime என்பதை ஊமைக் கூத்து என்று சொல்லாமல் பேசாக் கூத்து அல்லது மவுனக் கூத்து என்றே விளிப்பது நல்லதெனப்படுகிறது.
 
 "பெண் தன்னிலை தன்னைத் தானாக முன் நிறுத்துவது மற்றமையின் விருப்பத்திலிருந்துதான்.  தாய், மகள், சகோதரி, மனைவி என்று உறவின் பாற்பட்ட தன்னிலையாக இவற்றிலிருந்து பிரிந்து செல்லும் பிளவுறும் தன்னிலையைக் காண வேண்டியதாக அலைவுறும் புள்ளிகளில் நிலை பெறுவதாகக் கொண்டு விட, படைப்பில் கண்டுவிடத்தான் பொருளாம்சத்தை தேட வேண்டியிருக்கிறது". (பக். 105) என்று முபீன் சாதிகா 'பெண்: புராணம் - பிளவு - தன்னிலை' என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
 
 சீனாவின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஹாங்காங் 1839-ல் இங்கிலாந்தின் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டது.  பிறகு ஜப்பான் ஆளுகையின் கீழ் இருந்து இரண்டாம் உலகப் போர் முடிவில் மீண்டும் இங்கிலாந்தின் அதிகாரத்தின் கீழ் வந்தது.  1997 ஜூலை 01 அன்று ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்த இங்கிலாந்து, இங்குள்ள மக்கள் 50 ஆண்டுகளுக்கு சுதந்திரமாகவும் தனித்தன்மையுடனும் வாழ வழி வகுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் நடந்தேறியது.
 
 அதிக சுதந்திரமான ஹாங்காங் சமூகம் 50 ஆண்டுகள் வாக்குறுதியை, சீனா மீது சந்தேகக்கண் கொண்டே அணுகுகிறது.  இதை நினைவுப்படுத்தும் படம் 2046.  இப்படத்தை எடுத்த வாங் கர் வேய்-யின் In the Mood Of Love, Days of being wild  ஆகிய படங்கள் குறித்த பதிவு இரு கட்டுரைகளாக க. செண்பகநாதனால் எழுதப்பட்டுள்ளது. 
 
  ம. தவசி, உபாலி, இராகவன் ஆகியோர் எழுதிய சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.  ம.தவசியின் நாவலை த.கிருஷ்ணமூர்த்தியும் தேவேந்திர பூபதியின் கவிதைகளை யவனிகா ஸ்ரீராமும் விமர்சிக்கின்றனர். ஆளுமை அறிமுகம்  பகுதியில் ஹெமிங்வே அறிமுகப்படுத்தப்படுகிறார்.
 
 போர்ஹேஸ் -ன் உரைநடைப் புதிர், கவிதைகள், மொழி பெயர்ப்புக் கவிதைகள் உள்ளிட்ட 24 கவிதைகள் உள்ளன.  யவனிகாவின் 'ஒரு மனித ஞாபகம்' கவிதை கார்ல் மார்க்ஸ் -ஐ அருமையான வழிப்போக்கன் என்கிறது.  எல்லா கவிதைகளும் மனத்திற்கு நெருக்கமாக இருக்கின்றன.  
 
     தமிழில் ஒரு சிறு பத்திரிக்கை மரணிக்கும் பொழுது எங்கோ ஓர் மூலையில் ஒரு பத்திரிக்கை உயிர்த்துக் கொண்டுள்ளது நல்ல செய்திதான். 
 
 மந்திரச் சிமிழ் காலாண்டிதழ் 07-10 
(ஏப்ரல் 2011 - மார்ச் 2012)  
எல்லையற்று விரியும் தாள் பறவை
 
பக். 144 விலை ரூ. 90 ஆண்டு சந்தா ரூ. 100
 
தொடர்பு முகவரி: 
 
க. செண்பகநாதன்,
 24 / 17 சி.பி. டபிள்யூ. டி. குடியிருப்பு,
கே.கே. நகர், சென்னை - 600078. 
தொலைபேசி: 044 - 23663847 
செல்பேசி: 98949 31312 
www.manthirachimizh.com,
nsenbaga@gmail.com,
nesenbaga@yahoo.com

செவ்வாய், மார்ச் 13, 2012

பரண்-0005 : கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்படை மற்றும் வேதாரண்யம்

பரண்-0005 : 

கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்படை மற்றும் வேதாரண்யம் 

                                                                                          - மு.சிவகுருநாதன் 

       (நாளை (14.03.2012) இந்திய நாடாளுமன்றத்தில்  ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் திருவாரூர்-காரைக்குடி, திருத்துறைப்பூண்டி-கோடியக்கரை ஆகிய அகலப் பாதைப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது. தொண்ணூறுகளின் மத்தியில் கிழக்குக் கடற்கரைச் சாலை வேண்டும் என்று போராடியவர்கள் இன்று அகல ரயில்ப்பாதைக்காக போராடிக்கொண்டுள்ளனர். டி.ஆர்.பாலு போன்ற காரியவாதிகளால் இது நடப்பது சத்தியமில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படை அச்சுறுத்தல்கள் தொடர்கின்ற நிலையில் பல நாட்டு கடற்படை மற்றும் கப்பல்கள் மூலம் இந்திய மீனவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வது வேதனையளிக்கக்கூடியது. இந்த காலச் சூழலில் பொருத்தப்பாடுடைய,  தொண்ணூறுகளின் மத்தியில் தினமணி பிரசுரிக்க மறுத்த இச்சிறு கட்டுரை இங்கு வெளியாகிறது.)


      இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களைப் பிடித்துச் சென்றனர் அல்லது காணவில்லை, மீனவர்களுக்கும் கடற்ப்படையினருக்கும் தகராறு, துப்பாக்கிச் சூடு போன்றவை அன்றாடச் செய்திகளாகிவிட்ட நிலையில், கடலூரிலிருந்து  தற்போது அமைக்கப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலை  (ECR- East Coast Road) வேதாரண்யத்தைத் தவிர்த்து  திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை வழியாக செல்லும் எனத் தெரிகிறது.

     இதற்குச் சொல்லப்படும் காரணம் இச்சாலையால் கோடியக்கரை பறவைகள் சரணாலயம் பாதிக்கப்படும் என்ற சுற்றுச்சூழல் வல்லுநர்களின் கோரிக்கை என்பதாக இருக்கிறது. இதை மந்திரியே சொல்லியிருக்கிறார். கூடங்குளம் அணு மின் நிலையம், இறால் பண்ணைகள், சாயப்பட்டறை, தேஹிரி அணைக்கட்டு  போன்ற பல தமிழக- இந்திய அளவில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகள் எவ்விதம் அரசால் புறந்தள்ளப்பட்டிருக்கின்றபோதும் இதற்குச் சொல்லப்படும் காரணம் சொத்தையானதாகவே இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாவலனாகக் காட்டிக் கொள்கின்ற அரசின் பொய்முகம் கீழ்க்கண்ட காரணத்தால் கழன்று போய்விடுகிறது.

      கோடியக்கரை வனவிலங்கு உய்விடம் மற்றும் பறவைகள் புகலிடம்  வேதாரண்யத்திலிருந்து  10 கி.மீ.தொலைவில் உள்ளது. ஆனால் திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை சாலையில் அதாவது தற்போது  கிழக்குக் கடற்கரைச் சாலை வருகின்ற வழியில் அச்சாலைக்கு வெகு அருகாமையில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் புகலிடம் உள்ளது. இங்கும் கோடியக்கரைக்கு வருகின்ற அனைத்துவகையான பறவையினங்களும் வந்து போகின்றன. இந்தப் புகலிடம் மட்டும் பாதிப்படையாதா?  10 கி.மீ. தொலைவில் உள்ளபகுதி பாதிப்படையும்போது அருகிலுள்ள பகுதி மட்டும் என்னாகும்?  இங்குள்ள பறவைகள் புகலிடத்தை கோடியக்கரைக்கு மாற்றப் போகிறார்களா? .........தெரியவில்லை.

            சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் வேண்டியதில்லை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் பொதுமக்களைவிட அரசின் செய்கைகள் காரணமாகவே பெருமளவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது. அணு குண்டு சோதனை என்ற பெயரில் நாம் பாலைவனங்களை கூட ஒழுங்காக வைக்கவில்லை. இந்நிலையில் தில்லியில் மட்டும் புகையைத் தடுத்தால் போதும் என்றாகிவிட்டது.

      பாரதி கனவில் வீதி சமைத்த சேதுசாலை இன்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அத்துடன் கிழக்குக் கடற்கரைச் சாலையும் இங்கு வராமற்போனால் வேதாரண்யம் மற்ற பகுதிகளிருந்து துண்டிக்கப்பட்டுத் தீவு போலாகிவிடும். இன்றுள்ள நிலையில் இங்கு விளைகிற உப்பை எடுத்துச் செல்வதற்குக்கூட போதுமான சாலைவசதிகள் இல்லை. மேலும் கடற்படை ரோந்து மற்றும் பாதுகாப்புப்பபணிகளுக்கு  சாலையின்றி எவ்விதம் இப்பகுதி மக்களுக்கும்   மீனவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கமுடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

       தற்போதையச் சூழலில் கடற்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பென்பது கானல் நீராகத்தான் இருக்கிறது. கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றவர்கள்   இலங்கைப் படையிடம் மாட்டாமலும் குண்டடிபட்டு சாகாமலும் திரும்புவார்களா? என்ற ஏக்கம் ஒருபுறமிருக்க இங்கு ரோந்து வருகின்ற இந்தியப் படையினர் சினம்கொள்ளத்தக்கதான பணிகளை எவ்வாறு தவிர்ப்பது அல்லது எதிர்கொள்வது என்ற பயம் மறுபுறம் என பொதுமக்களும் மீனவர்களும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

      படையினர் கோபப்படும் செய்கைகளாக குடிநீர் பிடித்தல், கடற்கரையைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துதல் போன்றவைகள் இருக்கின்றன. ஜெகதாப்பட்டினம், ராமேஸ்வரம் எனப் பல இடங்களில் படையினருக்கும் பொதுமக்கள் / மீனவர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் வருகின்றன.   

        இந்தியாவின் எந்த நகரம் / கிராமங்களில் முறையான கழிப்பிட வசதி இருக்கிறது? அடிப்படை வசதிகள் ஏதுமற்று இருக்கின்ற பொதுமக்களை மிரட்டும் போக்கை ராணுவத்தினர் கைவிடவேண்டும்.

       இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பது மொழியாகும். தமிழ் மொழி தெரியாதவர்களாக படைவீரர்கள் - அதிகாரிகள் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையே உரையாடல் சாத்தியமில்லாமற் போய்விடுகிறது. மனிதர்கள் யாருமற்ற சியாச்சின் போன்ற பனிப் பிரதேசங்களில் பணிபுரிவோருக்கு வேண்டுமானால் மொழி ஒரு இடைஞ்சலாக இல்லாமல் இருக்கலாம். மக்கள் அதிகம் வாழும் பகுதியில் பயன்படுத்தப்படும் ராணுவத்திற்கு அம்மக்கள் மொழியில் பரிச்சயம் இருக்கவேண்டும். தமிழ் பேசும் அதிகாரிகளை நியமித்து இரு தரப்பார் தொடர்பை  உறுதிப்படுத்தி மக்களின் பாதுகாப்பை நிலைநிறுத்தி பயத்தை விலக்கவேண்டும்.

        நம்மை, நம் நாட்டை பாதுகாக்க வேண்டிய ராணுவம் மக்களின் மாமூல் வாழ்விற்கு பாதிப்பேற்படுத்தும் நிலையில் இருப்பது வருந்தத்தக்கது.

     கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரால் சொல்லெண்ணாத் துயரங்களுக்கு ஆட்படுகின்றனர். அவர்களுடைய பாதுகாப்பிற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லாத நிலையில் நமது படையினரே அவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைவது துரதிஷ்டவசமானது.

      பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்சினை பேச்சுவார்த்தை மூலமோ அல்லது கடும் எச்சரிக்கை / கடும் நடவடிக்கைகள் மூலமோ எப்போதோ தடுக்கபட்டிருக்கவேண்டியது, இன்றும் தொடர்வது வேதனையளிக்கிறது. கட்சத்தீவை தாரை வார்த்தல் மற்றும் நமக்குள்ள கடலுரிமையை விட்டுக்கொடுத்தல்  என்பதுபோல வருங்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இது வழிவகுக்கும்.

      இலங்கைப் படையினரின் அட்டூழியங்கள் தடுக்கப்பட்டு நமது உரிமைகளை மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுக்க்கப்படவேண்டும். பாதுகாப்பு அமைச்சர் திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் இப்பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். தற்போதைய நிலையின் தீவிரத்தை உணர்ந்தாவது உடனடி முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இது ஒருங்கிணைந்த பல்வேறு பணிகள் வாயிலாகவே  சாத்தியமாகும்.

     பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எல்லையோரங்கள் மீதிருக்கின்ற நமது கவனிப்பு கடற்கரையோரங்கள் மீது இருக்கிறதா என்பது கேள்விக்குறியே.

      ஆகவே, கிழக்குக் கடற்கரைச் சாலையை உள்நாட்டுச் சாலையாக மாற்றாமல் வேதாரண்யம் வழியாகவே சாலையை அமைத்தல், படையினருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை  தடுக்க நடவடிக்கையாக தமிழ் மொழி பேசும் அதிகாரிகளை பணிக்கு அமர்த்துதல், மக்களிடம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் அச்சத்தைப் போக்குதல், கடற்படைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துதல், மீனவர்களை இலங்கைப் படையினரிடமிருந்து காத்தல், நமக்கான கடல் உரிமைகளை விட்டுக் கொடுக்காதிருத்தல் - மீட்டல் போன்ற தொடர்பணிகள் மூலமே இச்சிக்கல்களுக்குத் தீர்வு காணமுடியும்.

தமிழில் உளவியல் ஆய்விற்கான வெளி

தமிழில் உளவியல் ஆய்விற்கான வெளி         -மு. சிவகுருநாதன்

(ஜனவரி 2012 தமிழில் வெளியான 'மற்றமை' (Other) பயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் - 1 பற்றிய அறிமுக பதிவு)
 
 
 
 
         தமிழில் உளவியல் சார் ஆய்வுகள் மிகவும் குறைவு.  தமிழ்ப் படைப்பிலக்கியம், அரசியல், பண்பாடு, கலைகள், திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவை உளவியல் ஆய்வுக்குட்படுத்தப்படும் போது சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுவது உறுதி.  ஆனால் அது அதிகளவில் நடைபெறவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை.  இந்நிலையை மாற்ற தமிழில் வெளியாகியிருக்கும் பயன்பாட்டு மன அலசல் (Applied Psycho analysis) ஆய்விதழான மற்றமை பயன்படும் என்று நம்ப இடமுண்டு.
 
 மன அலசல் கட்டுரைகள் வாசிக்க கடினமாக இருப்பதற்கு அதன் கட்டமைப்பு மற்றும் கலைச்சொற்கள் காரணம் என்று சொல்லி முதல், கடைசி மற்றும் கட்டுரைகளில் கலைச்சொற்கள் பற்றிய சுருக்கமான அறிமுகம் இச்சிற்றிதழில் உள்ள கட்டுரைகளை ஆழ்ந்து படிக்க உதவுகிறது. 
 
 ஈழத்தமிழர்களின் மனக்காயம் (Trauma) பட்டோருக்கான மன மருத்துவம், சிகிச்சை, மன அலசல் செய்ய வேண்டிய அவசியத்தையும் இரண்டாம் உலகப் போரில் வதை முகாம்களில் சிக்கிச் சீரழிந்த யூதர்களின் மனக்காயத்தின் பாதிப்பு தொடர்வதையும் இணைக்கிறது.
 
 "கேரளருக்கு நிபுணர் அறிக்கை, (இந்தியா) சுப்ரீம் கோர்ட், 999 வருட ஒப்பந்தம் (foreclose) ஆகிவிட்டது".  
 
 "வைகைக் கரையர்களுக்கு தொழில், அரசியலரின் அடையாளம், பதிலடி கொடுப்பது, 13 பாதைகளை அடைப்பது, தென் பாண்டியர்களின் முற்றுமைப் போராட்டமே ஆக உள்ளது".
 
 முல்லைப் பெரியாறு சிக்கலில் இரண்டு பகுதிகளுக்கு இடையிலான முரண்பாட்டைத் தீர்க்க இந்தியாவில் எந்த அறவியல் (Ethics) நிலைப்பாடும் இல்லை என்பதை வெளித்தள்ளல் (Projection) என்ற சொல் கொண்டு அலசப்படுகிறது. 
 
 சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை பேரகன் (super ego), அகன் (ego) என்ற சொற்கள் கொண்டு விளக்கி, பேரகனும் அகனும் வலிமையற்று இருந்தால் ஆதார இச்சை (id) தன்னிச்சையாக இருக்குமென ஒரு கட்டுரை விளக்குகிறது.
 
 பள்ளிகள், பணியிடம், மத நிறுவனங்கள் எங்கும் எதிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுடன் காவல்துறை, இராணுவ, இந்திய அமைதி காக்கும் படை (IPKF) செய்கின்ற பாலியல் வல்லுறவுக் கொடுமைகள் எண்ணிலடங்கா.  இந்தியப் படை இலங்கையில் செய்ததைத்தான் ஆப்பிரிக்காவில், காங்கோவில் செய்திருக்கிறது.
 
 நர்சு அருணாவின் கருணைக் கொலையை உச்ச நீதிமன்றம் சட்டப்படி மறுக்கிறது. ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு குடியுரிமை (civil rights)  மறுக்கப்படுவதையும் பெண்ணுடல் மீது மேற்கொள்ளப்படும் உளவியல் தாக்குதல்களை ஆய்வுக்குட்படுத்துகிறது.
 
 Eddy Murphy, 'Nutty Professor - Part - I-ல் ஏற்ற கதாபாத்திரமான Buddy Love-ஐயும் சேர்த்து வேறுபட்ட 6 கதாபாத்திரங்களையும் கொண்டு மன அலசல் முறையில் செய்யப்படுகிறது. ஃபிராய்டின் கருத்துப்படி, வக்கிரமானது (Pervesion) சமூக கலாச்சாரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நகைச்சுவை போன்ற வடிவங்களிலும் வெளிப்படும் என்று படிக்கும்போது நம் கண்முன் கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேல், சந்தானம் ஆகியோரின் காமெடிக் கூத்துகள் வந்து தொலைக்கின்றன. 
 
 சித்த விரிவாக்கமும் குறியீடாக்கமும், ஈடிபஸ் (Oedipal) பருவத்திற்கு முந்தைய தாயிடமிருந்து (Pre-Oedipal mother) விடுதலை பெறுவதற்கு முன் நிபந்தையாக உள்ளதை ரீன் கோலா வலியுறுத்துவதை பெண் ஆவல் (Female Psyche) குறித்த கட்டுரை பேசுகிறது.
 
 ஈடிபஸ் - ஒரு வரலாற்றுத் தருணம் என்ற Anika Lamire கட்டுரையின்  சுருக்க மொழியாக்கம் ஈடிபஸ் பற்றி பேசுகிறது.  பேரா. ஏ.கே. ராமானுஜத்தின் கட்டுரை பற்றியும் தந்தையைக் கொன்று தாயை மணப்பவனாக ஈடிபஸ் குறுக்கிப் பார்க்கப்பட்டதனால் கிழக்கத்திய மனம் அதிர்வடைந்து விட்டது என்றும் குறிப்பிடுகிறார்.

"குழந்தை சமூக விதி, ஒழுங்கை (Law) ஏற்காத போது, தாய், தந்தை (கணவன்) அந்தஸ்தை ஏற்காதபோது, தன்னிலையானது அதிகாரத்துடன் அடையாளப்படுத்திக்கொண்டும், தாயின் ஆவலுக்கு (desire) கட்டுப்பட்டதாகவும் நீடிக்கும்".

"இதற்கு மாறாக குழந்தை சமூக விதி ஒழுங்கை ஏற்கும்போது அது அதிகாரத்தைக் கொண்டுள்ள தந்தையுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறது.  தந்தை தாயின் ஆசைப் பொருளாக அதிகாரத்தை மீண்டும் இருத்துகிறார்" என்றும் சொல்லி ஈடிபஸ் கூறுகள், சமூக, கலாச்சாரக் கட்டமைப்புகள் மொழியின் மூலம் அறிமுகப்படுத்தப்படுதலை விவரிக்கிறது.
 
 மொழியும் உளவியலும் என்ற கட்டுரை பழமொழிகளுக்கும் மன அலசலுக்குமுள்ள தொடர்பு பற்றிப் பேசுகிறது.  பேரா. தே. லூர்து அவர்களின் "சூழலியம்: - பழமொழிகளை முன் வைத்து........"  என்ற நூலில் சொல்லப்பட்ட 'மூத்தோர் வாக்கும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்' என்ற வரிகளிலுள்ள சமூக ஒழுங்கு, குறியீட்டுத் தன்மை போன்றவற்றை ஆய்வுக்குட்படுத்துகிறது.  'அகதி சொல் அம்பலம் ஏறாது' என்ற பழமொழி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
 
 சார்விலகா (தந்தை), புண்டரீகா (மகன்), அதில் சொல்லப்படும் கீதை பற்றிய விளக்கவுரை போன்றவற்றின் மூலம் ஒரு இந்திய உளப்பகுப்பாய்வாளரின் குரலை உறுதி செய்வதோடு, கிரிந்தர சேகர் போஸிடம் விசித்ரமான மெளனங்களை வலிந்துருவாக்குகிறது என்பதையும் சார்விலகா கட்டுரை மன அலசலுக்குட்படுத்துகிறது.
 
 இந்த இதழில் பெரும்பாலான கட்டுரைகள் மொழி பெயர்ப்பாக இருப்பது மிகுந்த ஆயாசத்தை உண்டு பண்ணுகிறது.  இனிவரும் இதழ்களில் தமிழின் பல்வேறு பிரதிகளில் மன அலசல் ஆய்வுகள் வெளிவரும் என்று நம்புவோம்.
 
மற்றமை (Other)                             பக். 84,                   விலை ரூ. 80/-
 
ஆசிரியர்: க. செல்லபாண்டியன்
 
தொடர்பு முகவரி:
 
 5/445, தியாகி ரெங்கசாமி தெரு,
ஏஞ்சல் நகர்,
ஆத்திக்குளம் - அஞ்சல்,
மதுரை - 2
செல்: 94892 44928
மின்னஞ்சல்: mattramai@yahoo.com

வெள்ளி, மார்ச் 09, 2012

பரண்-0004 : பெண்களின் கூந்தலில் கட்டப்படும் தமிழ்ப் பண்பாடு

பரண்-0004 :  பெண்களின் கூந்தலில் கட்டப்படும் தமிழ்ப் பண்பாடு  


                                                                                            -மு.சிவகுருநாதன் 

ஓர் முன் குறிப்பு:- 


     தொழிற்சங்கவாதியும் இலக்கிய விமர்சகருமான தோழர் ஆர்.பட்டாபிராமன் அவர்களின் முயற்சியால் தோழர் என். வீரபாண்டியனின் ஆசிரியப் பொறுப்பில் 'மேடை' என்ற சிற்றிதழ் 1998 இல் மூன்று இதழ்கள் வெளியானது. முதலிரண்டு இதழ்களில் என்னுடைய கட்டுரைகள் வெளிடப்பட்டது. 'மேடை'- மே- 1998 இல் பிரசுரமான இக்கட்டுரை மார்ச் -08 உலகப் பெண்கள் தினத்தையொட்டி பரண் பகுதியில் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.


            ''நீ என்னை நேசிக்கிறாய் எனில்
             காலம் என்னுடம்பில் இரக்கமின்றிப் பதித்திருக்கும் வடுக்களை
             நினைவின் நெருடலில் ரணமாகும் புண்களை
             உன் கருணையினால் மெல்ல ஒற்றியெடு போதும்.'' 01

        காலங்காலமாக விளிம்பில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்ணினத்தின் மீது கருத்தியல்கள் வன்முறையாய்  திணிக்கப்பட்டிருக்கின்றன. மதம், மொழி, இலக்கியம் போன்றவை இத்தகைய வன்முறைக்கு களன்களாக இருந்திருக்கின்றன.

       இன்றைய நிலையில் கூட பண்பாடு என்ற பெயரில் நம்மீது திணிக்கப்படும் அத்துக்களை மீறுவதும் அடுத்த கட்ட நகர்வை துரிதப்படுத்துவதும்  அவசியமாகிறது. சங்க இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாட்டைக் கட்டமைப்பது மிகவும் பிற்போக்குத்தனமான அதிகார பாசிசத்திற்கே இட்டுச்செல்லும். 02

       பெண்களின் கூந்தல்தான் சங்ககாலப் புலவர்களிருந்து இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் வரை பாடுபொருள். பாடுபோருளைப் போல கருத்துகளிலும் எவ்வித மாற்றமும் இல்லை என்பதே உண்மை.

       பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மனம் உண்டா? என்று ஆராய்ந்த இறையனாரின் குறுந்தொகைப் பாடல்  


''...... அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே '' என்று கேட்கிறது. 03

     தலைவியின் கூந்தல் தலைவனுக்கே உரியதாம். இதனால் கபிலர் பாரி இறந்தபின் அவனுடைய பெண்களுக்கு கணவன் தேடும்போது 'கூந்தற்கிழவன்' என்ற சொல்லாக்கத்தைப் பயன்படுத்துகிறார்.

         ''......... பெரும் பெயர் பறம்பே
         கோளிரன் முன்கைக்  குறுந்தொடி மகளிர்
         நாறிருங்  கூந்தற் கிழவரைப் படர்ந்தே'' 04

    பெண் என்ற தன்னிலையின் இருப்பு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. அவள் ஆணுக்கு உரிமையானவள். பெண்ணுடல் ஆணால் இயக்கப்படவேண்டிய ஒரு பொருள் என்பது போன்ற எண்ணங்கள் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்றன.

    பெண்ணுடலை சில உறுப்புகளிலேயே முடங்க வைத்திருக்கிறது சமூகம். அதில் கூந்தலும் ஒன்று.

      கூந்தலுக்கு உரிமையாளனாகிய  கூந்தற் கிழவன்  பரத்தையரை நாடிச் சென்றபோதும் உழைப்பிற்காக பிரிந்து சென்றபோதும் எண்ணெய் பூசப்படாமல், அழகை இழந்து பூச்சூடாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது. வையாவிக் கோப்பெரும் பேகன்  தன் மனைவியாகிய கண்ணகியைப் பிரிந்து நல்லூர்ப் பரத்தையிடம் வாழ்கிறான். அப்போது கண்ணகியின் கூந்தல் நிலையை பெருங்குன்றுக்கிழார் ,


     ''அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
      நெய்யொடு துறந்த  மையிருங்  கூந்தல்
      மண்ணுரு மணியின் மாசற மண்ணிப்
      புதுமலர் கலை வின்று பெயரின்
      அதுமனேம் பரிசிலாவியர் கோவே.''

என்று விவரிக்கிறார். 05

     இதே பேகனைப் பாடிய அரிசிற்கிழார் என்ற மற்றோரு புலவர்

          ''அருந்துய ருழக்கு நின்றிருந்திழை  யரிவை
            களிமயிற் கலாவங் கால் குவித் தன்ன
            ஒலிமென் கூந்தற் கமழ் புகை கொளீஇத் ''     என்கிறார். 06

                  கூந்தலுக்கு எண்ணெய் தடவுதல், பூச்சூடுதல், அலங்கரித்தல் போன்றவை சாதாரண செயல்கள் அல்ல. அவை கணவனது நிலை அறிந்து நடக்கும் நிகழ்வுகளாய் இருந்திருக்கின்றன. மகாபாரதத்தில் பாஞ்சாலி பகைவரை அழிக்கும் வரையில் கூந்தலை முடியாமல் இருப்பதை இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.

      இளங்கோவடிகளும் தம் பங்கிற்கு கண்ணகியினுடைய கூந்தலின் அலங்கோலத்தை வருணிக்கத் தவறுவதில்லை.

     இன்னும் கூட சங்க காலத்தில் பெண்களின் நிலை மிகவும் உயர்வாக இருந்தது. பிற்காலத்தில்தான் அவர்கள் அடிமையாக்கப்பட்டார்கள்  என்றெல்லாம் பலரும் பலவாறு ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளார்கள். இதே போல் வேத காலத்தில் பெண்களுக்கு அதிக உரிமைகள் இருந்தன. குழந்தைகள் இல்லாத விதவைகளுக்கு மறுமணம் செய்துவைக்கப்பட்டது என்றெல்லாம் வரலாறு எழுதி வருகிறோம்.

       உரிமையாளனைத் தவிர வேறு எவருக்கும் கூந்தலைத் தொடுகிற உரிமை இல்லையாம்! வால்மீகி ராமாயணத்தில் சீதையை ராவணன் கூந்தலைப் பற்றித் தூக்கியதாகக் கூற அதைத் தமிழில் கம்பர் பர்ணசாலையோடு பெயர்த்தெடுத்து தமிழ் மரபைக் காப்பாற்றி அரிய சாதனை செய்திருக்கிறார். கம்பனுக்கு என்றென்றும் தமிழ்ச் சமூகம் கடன்பட்டிருக்கிறது (!?).

       கூந்தலின் சொந்தக்காரன் இறந்து விட்டால் கைம்பெண்களின் நிலை என்ன? ஆனந்தப் பையுள் , தாபத நிலை, முதுபாலை போன்ற துறைகளின் வாயிலாக விதவைகளின் நிலை சொல்லப்படுகிறது.

     உரிமையாளன் போய்விட்டபிறகு கூந்தலுக்கு என்ன வேலை? கூந்தல் களையப்படுகிறது / மொட்டையடிக்கப்படுகிறது.

     கூந்தல் களைந்து , கை வளையல்கள் இன்றி அல்லியரிசி உண்ணும் நிலையை தாயங்கண்ணியார் ,

           ''கூந்தல் கொய்து , குறுந்தொடி நீக்கி
           அல்லி  உணவின் மனைவியொடு , இனியே
            புல் என் றனையால் .....''  என்று குறிப்பிடுகின்றார். 07

      பாண்டியன் தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனது பகைவர் இறந்தபோது அவர்தம் மனைவியர் கூந்தல் களைந்து கைம்பெண் கொலமேற்பதை கல்லாடனார் என்னும் புலவர்,

                  ''ஒன்னு தன் மகளிர் கைம்மை கூர
                    அவிரறல் கடுக்கு மம்மென்
                    குவையிருங்  கூந்தல் கொய்தல் கண்டே .'' 08     - வாகைத்திணையில் அரசனைச்  சிறப்பித்துப் பாடுகிறார்.  பகைவனைக் கொன்று அவனது மனைவியை கைம்பெண் நிலையை அடைய வைப்பது மிகுந்த வீரமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது.

      இதேபோல் பல்வேறு சங்கப் பாடல்களின் பக்கங்களில் கூந்தற் செய்திகள் நிறைந்து கிடக்கிறது.

       இனியும் பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பதில் பொருளில்லை. தொல்காப்பியம், நன்னூல், போன்ற இலக்கண நூற்களையும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற இலக்கிய நூற்களையும் ஆதாரமாகக் கொண்டு தமிழ்ப்பண்பாட்டைக் கட்ட நினைப்பது அபத்தமாகவே போய்முடியும்.

    காலங்கள் மாறினாலும் பெண்கள் பற்றிய சமூகக் கண்ணோட்டம் பெரிதாக மாறிவிடவில்லை. இப்போதும் விதவைக்கோலம் பெண்களுக்குச் செய்யப்படும் அதாவது வளமான பூமிக்கு செய்யப்படும் பண்படுத்தல்கள் என்றெல்லாம் கூறுகின்ற மதத் தலைவர்களின் கண்ணோட்டம் எவ்வளவு கொடூரமானது? 09

      இறுதியாக, உரிமைகளை யாரும் யாருக்கும் வழங்கமுடியாது. நமக்கான உரிமைகளை நாமே எடுத்துக் கொள்வோம். பெண்ணிய இயக்கங்கள் / வாதிகள் இவற்றையெல்லாம் மறு வாசிப்பு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்.

குறிப்புகள்:-

01 . தினமணி மகளிர் மலர்-மார்ச்-1997  - சம்யுக்தாவின் கவிதை வரிகள்.
02 . செந்தமிழ் - பிப்ரவரி-1998
03 . குறுந்தொகைப் பாடல் - 02
04 . புறநானூறு-113
05 . புறநானூறு-146
06 . புறநானூறு-025
07 . புறநானூறு-147
08 . புறநானூறு-250      
09 . தினமணி தீபாவளி மலர் - அக்டோபர்-1997 :- சங்கராச்சாரி பேட்டி.

                                நன்றி:-                                        'மேடை'- மே- 1998

  எதிர்வினை:- 

               'மேடை'  இதழ் மூன்றில் (ஆகஸ்ட்-1999) வெளியான விமர்சனம் ஓன்று.

    இலக்கியம் பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. எனவே அக்கட்டுரை பற்றி புதிய கருத்து எதுவும் தோன்றவில்லை.
                                                                                                 - கி. வெங்கட்ராமன்    

ஞாயிறு, மார்ச் 04, 2012

பரண் - 0003 ஒரு சிறு பத்திரிக்கைக் குறிப்பு

பரண் - 0003     

ஒரு சிறு பத்திரிக்கைக் குறிப்பு 

       சிறு பத்தரிக்கைகளின் நோக்கம் பலவாறு மாறித்தான் போயிருக்கிறது. அடிக்கடி நீர்க்குமிழ் போல் சிற்றிதழ்கள் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. இதைக் குறையாகக் கொள்ளமுடியாது. இதன் நோக்கம் பற்றித்தான் சந்தேகப் படவேண்டிருக்கிறது. 'நிராகரிக்கப்பட்ட படைப்புகளின் களம்'  என்று தஞ்சை ப்ரகாஷின்  'குயுக்தம்' வந்திருக்கிறது. வரவேற்போம். ஆனால் தன்னுடைய படைப்புகளுக்காக மட்டும் இதழ் தொடங்குவது நடந்து கொண்டுதானிருக்கிறது. இவ்வாண்டு (1995) ஜனவரியில் மணல் வீடு மாரப்பனின்  'சதுக்கப்பூதம்'  வந்தது. அதிலுள்ள 7  கட்டுரையில் 5  ஆசிரியருடையது. (ஒரு ஆங்கிலக் கட்டுரை உள்பட) தன்னிடமுள்ள சரக்கை உடனே கொட்டித் தீர்த்துவிடவேண்டுமென்ற ஆசையாக இருக்கலாம். இருந்தாலும் நோக்கம் ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது! சிறுபத்தரிக்கைச் சுழலில் இவற்றையும் எதிர்கொண்டு தீர வேண்டிய கட்டாயம் நமக்கு.

ஜூலை - ஆகஸ்ட் : 1995                                         -மு.சிவகுருநாதன்

வெள்ளி, மார்ச் 02, 2012

பரண்- 0002 : 'கேப்பியார்' இதழில் வெளியான குறிப்புகள்

பரண்- 0002   :  'கேப்பியார்' இதழில் வெளியான குறிப்புகள் 


       கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள பரணியரத்தலவிளை குக்கிராமத்திலிருந்து  'கேப்பியார்' என்றொரு சமூக, கலை,இலக்கிய இதழ் தொன்னூறுகளில் தொடர்ந்து வெளிவந்தது. கே.புஷ்பராஜ் (KPR) என்ற இலக்கிய, அரசியல் செயல்பாட்டளாரால் நடத்தப்பட்ட இப்பத்தரிக்கை அவருடைய பெயரில் வந்தாலும் மிகவும் சீரியசான இதழாக இது இருந்தது.

      வானவில் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நடத்திய கேப்பியார் எல்லைத்தமிழன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருபவர். குமாரசெல்வா, ஜெ.ஆர்.வி.எட்வர்ட் போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டவர். காலச்சுவடு மாதிரியான மேட்டிமை குணம்கொண்ட இதழ்களின் நடுவில் தலித்,ஒடுக்கப்பட்டோர் சார்பாக கேப்பியார் இயங்கியது.

      இன்று  'கேப்பியார்' இதழ் நின்றுபோனாலும் இந்த இதழ்  இலக்கிய-அரசியல்-  சமூக உலகில் ஏற்படுத்திய தாக்கம் பாரதூரமானது. சுந்தர ராமசாமி போன்ற இலக்கிய ஆளுமைகளை கலைத்துபோட்டதில்  கேப்பியாருக்கும் பங்குண்டு.

     இந்த 'கேப்பியார்' இதழில் மோகன், சுரேஷ்,கேப்பியார் போன்ற பலர் எழுதிய இலக்கிய-அரசியல்-சமூக விமர்சனங்களை உள்ளடக்கிய சிறு குறிப்புகள் மிகவும் பிரசித்தம். அவற்றில் சிலவற்றை நானும் எழுதியிருக்கிறேன். அவைகளை இப்பகுதியில் மீள் பிரசுரம் செய்கிறேன். கே.புஷ்பராஜ் (KPR) அவர்களுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்.


ஒரு முன்னுரைக் குறிப்பு 

    சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சரியான கவனிப்பைப் பெறாது இப்போது அதிகமான விமர்சனத்திற்குள்ளாகியிருக்கும் கவிதைத்தொகுதி யூமா. வாஸுகியின்  'உனக்கும்  உங்களுக்கும் '. அதிலுள்ள திறந்த முன்னுரைக்காகப் போற்றப்பட்டும் தூற்றப்பட்டும் வருகிறது. அதன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் வெறும் செக்ஸ் குறிப்பு போன்று - சுஜாதாவின் கைங்கர்யத்தால் கவிதை - ஓவியம் பற்றி சொன்னதை எல்லாம் தவிர்த்துவிட்டு  யூமா. வாஸுகியின் படத்தோடு  குமுதம், ஒரு இதழில் வித்தியாசமான முன்னுரை என்ற தலைப்பில் வெளியிட்டு தந்து வக்கிரத்தை தீர்த்துக் கொள்கிறது. முன்னுரையில் மட்டும் குமுதத்திற்கான சரக்கு இருப்பதை அறிந்து பயன்படுத்துகிறபோது சரக்கு அம்பலப்பட்டுத்தான் போகிறது.

ஜூலை-ஆகஸ்ட் : 1995                                                 -மு.சிவகுருநாதன்

வியாழன், மார்ச் 01, 2012

புதிய பகுதி - பரண் : பரண் - 0001

                                                    புதிய பகுதி - பரண் 

                                                            பரண் - 0001 

       கவிஞர்  இலக்குமி குமாரன் ஞான திரவியம்  சொந்த முயற்சி மற்றும் நண்பர்கள் உதவியுடன் தொன்னூறுகளில்  (1992 -1997)  'மவ்னம்' என்ற கவிதைச் சிற்றேட்டை நடத்தி வந்தார். கணையாழி பிபிரவரி -2012  இதழில் க.அம்சப்பிரியா 'கவிதைத்தடம் 'மவ்னம்'- ஒரு பதிவு ' என்கிற தலைப்பில் ஆறு பக்கக்கட்டுரை எழுதியுள்ளார்.

      'மவ்னம்'- இதழ்  எட்டில் (மார்ச்-1995) என்னுடைய கவிதை முயற்சி ஒன்று வெளியானது. கவிதைக்கான இதழ் ஒன்றில் எனது கவிதை  இருந்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. கணையாழி கட்டுரையைப் படித்ததும்  'மவ்னம்' இதழைத் தேடித் பிடித்து எடுத்தேன். இப்போது படிக்கும்போது சிரிப்பாகயிருக்கிறது.  இதை வெளியிட்ட  கவிஞர்  இலக்குமி குமாரன் ஞான திரவியம் மற்றும்   'மவ்னம்'- இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.
     
     இந்த 'பரண்' பகுதியில் என்னுடைய எழுத்துக்களை  (பழைய அச்சேறியது / அச்சேராதது)  தொடர்ந்து வெளியிட எண்ணியுள்ளேன். வேறு வழியில்லை. முடிந்தால் படித்துப் பாருங்கள்.

தலைப்பில்லாத அந்த கவிதை 

இரைச்சல்களற்ற 
இரவின் பேரமைதியில் 
தவளைகள் கத்தாமலிருக்க 
நிலவொளியில் நடக்க 
சல்லாபச் சிறகுகள்
சுய நினைவற்று ஆர்ப்பரிக்க 
ஏதேனும் கிடைத்துவிட்ட 
ஏக்கத்தில் இங்குமங்கும் 
ஊர்கின்ற போதில் 
விளக்குகள் அணையாத 
விடி இரவில் 
சோர்ந்து போய்.

சேர்ந்திருக்க 
யார் வருவா?
 
                                                        -மு.சிவகுருநாதன் 

மு.கருணாநிதியின் ஆதரவு அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தேவையில்லை!

 மு.கருணாநிதியின் ஆதரவு அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தேவையில்லை!
                                                                                                        -மு.சிவகுருநாதன் 

        சென்னையில் தனது வாரிசு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை (29.02.2012) கொண்டாடிய முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை விமர்சிப்பதாக நினைத்துக்கொண்டு  கூடங்குளம் போராட்டத்திற்கெதிராக கடுமையான அவதூறு  பேசியிருக்கிறார். இது மன்மோகன் சிங். ப.சிதம்பரம், நாராயசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் அவதூறுகளை விட மிகவும் மலிவானது.

      மேலே சொன்னவர்களெல்லாம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி இருப்பதாகத்தான் சொன்னார்கள். ஆனால் தமிழினத்தலைவராக   (?!)  தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்ட இவர் இப்போராட்டத்தின் பின்னணியில் ஜெ.ஜெயலலிதா இருப்பதாக விஷம் கக்கியுள்ளார்.

         முதலில் இவர் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அணு உலை எதிர்ப்பாளர்கள் இவரிடம் கையேந்தி நிற்கவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இவருடைய அணு உலை அதரவு உலகம் அறிந்ததுதான். நாடாளுமன்றத்தில்மு.கனிமொழியின் கன்னிப் பேச்சு எளிதில் மறந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

          நிறைய கேள்விக்கணைகளை அள்ளி வீசியுள்ளார். அதில் ஒன்று நாயகன் சிறுவன் பாணியில் அ.இ.அ.தி.மு.க அரசு  கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? நாமும் ஓர் கேள்வி கேட்கலாம். இவ்வளவு மாதங்கள் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

            கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போரட்டத்துக்கு ஜெயலலிதா அரசு மறைமுக ஆதரவு வழங்குகிறது என்றும் இந்த விவகாரத்தில் மாநில அரசு ஏன் மௌனம் காக்கிறது என்றும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.  இந்தப் போராட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா?    என்று தமிழக அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.

         கூடங்குளம் போராட்டத்தை தொடக்க  நிலையைலேயே தடுப்பதற்கு தமிழக அரசு தவறிவிட்டது என்றும் இதனால் இன்று தமிழகம் இருண்டுவிட்டது என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார். சென்னைக்கு அருகில் கல்பாக்கம் அணு உலை பாதுகாப்பாக இருக்கும்போது கூடங்குளம் அணு உலை மட்டும் எப்படி பாதுகாப்பு இல்லாமற்போகும் என்று மிகவும் அறிவுப்பூர்வமாக  கேட்பதாக நினைத்துக் கொண்டு பேசியிருக்கிறார்.

      நீங்கள் இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளும் முன்பு கூடங்குளம் பகுதியின் தொடக்கப் பள்ளி மாணவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு நீங்கள் முதலில் பதிலளியுங்கள். ஆறு மாத காலமாக நம் தமிழ் மக்கள் போராடுகிறார்கள். அதற்கு நீங்கள் ஆதரவு ஒன்றும் தரவேண்டாம். பேசாமல் வாயை மட்டும் மூடிக்கொண்டிருங்கள். அது போதும்.உங்களிடம் போராடும் அவர்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.

         முதல்வர் ஜெ.ஜெயலலிதா மட்டும் அணு உலைக்கு எதிரானவர் என்று நாம் நினைக்கவில்லை.அப்படிச் சொல்லவும் வழியில்லை. ஆனால் இந்த பிரச்சினையில் அவர் இதுவரை எடுத்த முடிவுகள் பல்வேறு குறைபாடுகளுடையதாக இருப்பினும் உங்கள் அளவிற்கு மோசம் என்று சொல்ல இடமில்லை.

     நீங்கள் , மாநில அடிவருடி காவல்துறை அல்லது ராணுவத்தை வைத்து பலப்பிரயோகம் செய்து இப்போராட்டத்தை ஒடுக்க நினைப்பது புரிகிறது. கூடங்குளம்   போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் மட்டுமல்லாது தமிழக மக்களிடம் அந்நியப்பட்டுள்ள உங்களுக்கு குடும்ப -வாரிசு சண்டைகள், அதிகாரப்போட்டி,கனிமொழி வழக்கு என பல வேலைகள் இருக்கும்போது ஏனிந்த வீண்வேலை?

     ஜெ.ஜெயலலிதா எதோ நல்ல பெயர் எடுத்துவிடப் போகிறார் என்று வயதான காலத்தில் வீணாக கவலைப் படவேண்டாம். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. ஏனென்றால் ஜெ.ஜெயலலிதாவிற்கும் உங்களுக்கும் ஆறு வித்தியாசம் கூட இல்லையென்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.