வியாழன், ஜனவரி 28, 2016

சுயநிதிப்பள்ளிகளாக மாறும் அரசு உதவிபெறும் பள்ளிகள்



சுயநிதிப்பள்ளிகளாக மாறும்  அரசு உதவிபெறும் பள்ளிகள்


மு.சிவகுருநாதன்





       தமிழக முன்னாள் முதல்வரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.கருணாநிதி இரு நாட்கள் திருவாரூரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சின்னசேலம் (பங்காரம்) எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்காவின் குடும்பத்தினரை அழைத்து ஆறுதல் சொல்லி ஒரு லட்சம் இழப்பீட்டை கட்சியின் சார்பில் வழங்கியிருக்கிறார். தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 7.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல அரசுப்பள்ளிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வோம். இன்னும் மீதமிருக்கிற தொகையையும் செலவு செய்ய வேண்டிய தேவை மிகவும் பின்தங்கிய திருவாரூர் பகுதிக்கு உண்டு என்றபோதிலும் இனி அதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் இத்திட்டங்களைச் செயல்படுத்தத் தடையாக உள்ள அரசியல் காரணங்களை இங்குச் சொல்லவேண்டியதில்லை. 

     திருவாரூரில் தான் படித்த பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 20 லட்சம் செலவில் 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதனை மு.கருணாநிதி திறந்து வைத்திருக்கிறார். தனது பால்ய நினைவுகளை அந்நிகழ்வில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் அவர் படித்தபோது அரசுப்பள்ளியாக இருந்து, பக்தவச்சலம் முதல்வராக இருந்த காலத்தில் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது. இப்போது இது அரசு உதவி பெறும் தனியார் பள்ளி. பேரா.க.அன்பழகன் கல்வி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இப்பள்ளிக்கு ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் சுமார் ரூ 60 லட்சம் ஒதுக்கப்பட்டது. 



    இங்குதான் நான் தொடர்ந்து வலியுறுத்தும் சிக்கல் இருக்கிறது. தனியார் பள்ளிகள் என்று பொதுவாகச் சொல்வது சரியாக இருக்காது. அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப்பள்ளிகள் (அரசின் உதவி பெறாத) என்றே சொல்லவேண்டும். நமது அரசுகளின் தவறான கொள்கைகள் காரணமாக பள்ளிக்கல்வி முற்றிலும் வணிகமயமாகியுள்ளது. கல்வி உரிமைச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களை சாமான்ய மக்களுக்கு உறுதிப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. இன்று WTO வின் GATS ஒப்பந்தத்தின் மூலம் உயர்கல்வியும் வியாபாரமாக மாறப்போகிறது. இனி கல்வி ஏழைகளுக்கு எட்டாத சோழர்கள் காலகட்டத்திற்கு செல்லப் போகிறோம். சோழர் கால பெருமிதங்களில் உழலும் நமக்கு இது மகிழ்வளிக்கக் கூடியதாக இருக்கலாம். மக்கள் நல அரசு (welfare state) என்பதெல்லாம் வெறும் ஏட்டில் மட்டுமே!

     சுயநிதிப்பள்ளிகளின் கல்விக்கொள்ளை பற்றி சொல்லவேண்டியதில்லை. நாம் இங்கு சொல்ல வருவது அரசு உதவி பெறும் பள்ளிகள் என்ற போர்வையில் உள்ளுக்குள் ஓர் சுயநிதிப்பள்ளியை நடத்தும் மோசடியைத்தான் எதிர்க்கவேண்டும், தடுக்கவேண்டும் என்கிறேன். இதற்கும் அரசின் தவறான கொள்கைகளே காரணம். இவர்களுடைய பள்ளி வளாகத்திலேயே சுயநிதிப்பிரிவுகள் தொடங்க அனுமதித்தது மாபெரும் தவறு. பல அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுயநிதிப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உதவி பெறும் மாணவர்களைவிட மிக அதிகமாக உள்ளது. இங்கும் கல்வித் தீண்டாமை நடைமுறையில் இருக்கிறது. ஒரே வளாகத்தில் சீருடையில் கூட வேறுபட்ட இரண்டு வர்க்க பேதத்தை உருவாக்குவது எவ்வளவு விபரீதம்?

    மாணவர் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு பள்ளிகளின் பரப்பளவு அதிகரிக்கவேண்டுமல்லவா? அரசு உதவிபெறும் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தங்களது வசதிகளை இழந்து, சென்னையை விட்டு துரத்தப்பட்ட பூர்வகுடி மக்களைப் போன்று விளிம்பில் இருக்கவேண்டிய அவலம் யாராலும் கண்டுகொள்ளப்படாதது. தனியார் பள்ளிகளை வளர்த்துவிடும் அரசுகள் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் வணிகமயமாக்க உதவுவது அரசியல் சட்ட மீறல். 



     அரசின் உதவியால் செய்யப்படும் வசதிகள் முழுமையாக  அரசு உதவிபெறும் மாணவர்களுக்குக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. புதிய வகுப்பறைகள், வசதிகள் எது வந்தாலும் சுயநிதிப் பிரிவுகளுக்கே சென்று சேரும். அவர்களிடம் பணம் வாங்குகிறார்கள். எனவே அவர்களுக்கு வசதி என எளிய சமன்பாடு போடப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓர் தீண்டாமைச் சேரியை அரசும் அதிகார வர்க்கமும் திட்டமிட்டு உருவாக்குகிறது. 

   சுயநிதிப் பிரிவே இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகள் கிராமங்களில் இன்றும் உண்டு. அவர்களது பணி மகத்தானது. ஆனால் அவர்களுக்கு இம்மாதிரியான உதவிகள் கிடைப்பதில்லை என்பது வேதனை தரும் உண்மை. பன்னாட்டு, இந்நாட்டு பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடிக்கணக்கில் மானியம் வழங்கிவிட்டு, அமார்தியா சென் போன்ற பொருளாதார அறிஞர்கள் பாராட்டும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைப்பதுதான் நமது அரசுகளில் வேலை. கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படையானவற்றில் வியாபாரத்தைத் தடுத்து அரசே இவற்றை மக்களுக்கு அளிக்கவேண்டும். 

    இந்த உதவி அளிப்பதில் சட்டப்படி குற்றமில்லை என்று வாதிடுவது எளிது. பல்லாண்டாக மது விற்பனையும் சட்டப்படியே நடக்கிறது. அதை முறைப்படுத்துதல், குறைத்தல், படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்துதல் என்றெல்லாம் ஏன் பேசுகிறோம். மதுவின் வருமானம் பற்றி மட்டும் பேசும் பலர் அதனால் அரசுக்கு ஏற்படும் மருத்துவம் உள்ளிட்ட இதர செலவினங்களைப் பற்றி யாரும் வாய்திறப்பதில்லை. கல்வி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பை ஏன் அரசுகள் மேற்கொள்வதில்லை? அரசியல்வாதிகளே கல்வி வியாபாரிகளாக இருப்பதுதான் காரணமா? 

    தமிழகத்தில்தான் கல்லூரிகள் அதிகம் உள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர் சாதனையாகக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் கல்வி நிறுவனங்களில் அதிக கொலைகள், தற்கொலைகள் நடைபெறும் சாதனையையும் இணைத்துக் கொள்ளலாம். இவற்றில் பாதி அரசுக்கல்லூரி என்றாலுகூட  உண்மையாக பெருமைப்படலாம். தமிழகத்தில்தான் கல்விக் கொள்ளியர்கள் அதிகம் என்பதுதானே இதன் பொருள். வெறெந்த தொழிலைக் காட்டிலும் கல்வி சிறந்ததாக இருக்க யார் காரணம்? ‘அரசுப்பள்ளிகளைக் காப்போம்’ என அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கம் நடத்தும் நிலையில் அரசும் அதிகார வர்க்கமும் தனியாருக்குச் சேவை செய்வது வருத்தமளிக்கக்கூடியது. 

     உதவிபெறும் பள்ளிகளை நடத்துபவர்கள் தங்களால் முடியவில்லை என்றால் முகவாண்மையை அரசிடம் ஒப்படைக்கலாம். அதற்கான அரசின் உதவிகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு சுயநிதிப்பள்ளிகளாக மாற்றிவரும் கொடுமையை என்னவென்பது? இதன் மறுபுறம் அரசுப்பள்ளிகளுக்கு எந்த உதவிகளும் தேவையில்லை, அவைகள் தன்னிறைவடைந்துவிட்டன என்று பொருளல்ல. 

     40% ‘கமிஷன்’ திட்டத்தின் கீழ் கட்டப்படும் அரசுப்பள்ளிக் கட்டடங்களின் ஆயுள் கேள்விக்குரியது. மவுலிவாக்கம் அடுக்குமாடியை போன்ற நிலை அரசுப்பள்ளிக் கட்டடங்களுக்கு என்றும் உண்டு. ஒரு சில மெழுகுவர்த்திகளை வாங்கி அஞ்சலி செலுத்திவிட்டு போய்விடலாம். சாமான்ய மனித உயிர்கள் அவ்வளவு கேவலமானதா?

    அரசுப்பள்ளிகளில் கழிவறை கட்ட உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்தும் அத்தகைய வசதிகள் இன்னும் செய்து கொடுத்தபாடில்லை. உலர்கழிவறைகளைக் கட்டுவது சட்டத்தால் தடை செய்யப்பட்டபோதிலும் இன்னும் தண்ணீர் வசதி இல்லாத வெறும் கழிவறைகளைத்தானே பள்ளிகளில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். 

    “தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்”, என்று சொல்லும் வழக்கமுண்டு. அரசுப்பள்ளிகள் கட்டமைப்பு வசதிகள் முழுமையாக பெறாத நிலையில் அரசும் சட்டமன்ற உறுப்பினர்களும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிதியை இதுக்கீடு செய்வது நியாயமல்ல. மேலும் கல்வி வணிமயமாவதைத் தடுத்து, அரசு உதவிபெறும் பள்ளிகளின் முறைகேடுகளைக் களையும் பொறுப்பும் அரசு, அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம்  ஆகியோருக்கு உண்டு.


இங்கும் தொடரலாம்:

மு.சிவகுருநாதன்
திருவாரூர் 


பன்மை


மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com 

வாட்ஸ் அப்:   9842802010
செல்:          9842402010



திங்கள், ஜனவரி 25, 2016

33. மலம் சுமக்கும் மனிதர்களை வெளிப்படுத்தும் ஆவணம்



33.  மலம் சுமக்கும் மனிதர்களை வெளிப்படுத்தும் ஆவணம்


(இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)


மு.சிவகுருநாதன்


(விடியல் பதிப்பகம் டிசம்பர்  2014 -ல்  வெளியிட்ட பாஷா சிங் எழுதி விஜயசாய் மொழிபெயர்த்த  ‘தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்’ என்ற மலமள்ளும் மானுட அவலம் குறித்த ஆவணம்  பற்றிய  பதிவு இது.)

நூலட்டை


      சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்படும் மலமள்ளும் தொழிலாளர்கள், அவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் குறித்த பொதுநல மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது சென்னை, திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களில் 452 மலமள்ளும் தொழிலாளர்கள் மட்டும் இருப்பதாகவும் பிற இடங்களில் ஒருவரும் இல்லை என நகராட்சி நிர்வாகத்துறைச் செயலர் அளித்த பதிலறிக்கையில் கூறப்பட்டுள்ளதை நிராகரித்த நீதிபதிகள் மறு கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டனர். (ஜனவரி 21, 2016 ‘தி இந்து’ நாளிதழ் செய்தி) 

   நமது அரசுகளின் பொய், பித்தலாட்டத்திற்கு மேலே குறிப்பிட்டது ஓர் சிறிய உதாரணம் மட்டுமே. இதழாளர் பாஷாசிங் எழுதி மற்றொரு இதழாளர் விஜயசாய் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ‘தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்’ என்ற ஆவணத்தைப் படிக்கும்போது உங்களது மனச்சாட்சி கண்டிப்பாக குற்ற உணர்வில் தவிக்கக்கூடும். 

   பென்குயின் புக்ஸ் 2012 இல் வெளியிட்ட ‘Unseen: The Truth about India’s Manual Scavengers’ – Bhasha Singh ‘என்ற நூலின் மொழியாக்கம் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மலக்குழிக்குள் இறங்கி உயிர்துறக்கும் மனிதர்களது இருண்ட உலகத்தைக் காட்சிப்படுத்த இந்நூலில் அட்டைப்படம் முழுக்க கருமை வண்ணத்தால் நிரம்பி வழிகிறது. நூல் முழுக்கக் காணப்படும் படங்கள் இந்திய சமூகத்தின் சுரணையற்றத் தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளன. 



  இரண்டு பாகங்களாக வடிவமைக்கப்பட்ட இந்நூல் பல்வேறு புள்ளிவிவரங்கள், படங்கள் அடங்கிய ஆவணமாக உள்ளது. ‘கண்களுக்குப் புலப்படாத ஓர் இந்தியா’ என்ற முதல் பாகத்தில் காஷ்மீர், டெல்லி, பிகார், மேற்கு வங்காளம், அரியானா, உத்திரப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 12 மாநிலங்களில் மலமள்ளும் தொழிலாளர்களின் நிலை துல்லியமாக விவரிக்கப்படுகிறது. ‘தட்டப்பட்ட அதிகார வர்க்கத்தின் கதவுகள்’ என்ற இரண்டாம் பாகத்தில் அரசு, நீதிமன்றங்கள் நடத்தப்பட்ட போரை விவரிக்கிறது. பின்னிணைப்பாக சில கட்டுரைகளும் புள்ளிவிவரங்களும் உள்ளன. 

  அரசுகள், நீதிமன்றங்கள், சமூகம் என அனைத்துத் தரப்பாலும் புறக்கணிக்கப்பட்ட ஓர் சமூகமாக இவர்கள் இருக்கின்றனர். மனிதக்கழிவை மனிதர்கள் அகற்றுவதைத் தடை செய்தல் மற்றும் உலர்கழிப்பிடங்களைக் கட்டுதல் தடை செய்யும் சட்டம் 1993 இல் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 1997 இல் குடியரசுத்தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கே நான்காண்டுகள் ஆனபோது இச்சட்டத்தை முழுதும் அமல்படுத்த எவ்வளவு ஆண்டாகும் என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்லுங்கள்!  மலம் அள்ளுக் தொழிலாளிகளின் பிரதிநிதியாக இருக்கும் ‘சஃபாய் கரம்சாரி அந்தோலன்’ (எஸ்.கே.ஏ) என்ற அமைப்பு  இச்சட்டத்தை அமல்படுத்தவும் அவர்களின் மறுவாழ்விற்காக நீண்ட போராட்டத்தை நடத்துகிறது. 



    மத்திய, மாநில அரசுகள் மலமள்ளும் தொழிலாளர்கள், மலக்குழியில் இறங்குவோர் குறித்துத் தவறான புள்ளிவிவரங்களை அளித்துவருகின்றன. மாநில அரசுகள் உலர்கழிப்பறைகளைக் கட்டுவதில்லை என்று சொல்லிச் சமாளிக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் சிறுநீர்க் கழிப்பிடங்கள் மலக்கழிப்பிடங்களாக மாறும்போது  அவற்றைச் சுத்தம் செய்து தொழிலாளர்கள் குறித்து வாய் திறப்பதில்லை. Man hole களை machine hole களாக மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை. அரசுப்பணத்தை வாரி இறைத்து ராக்கெட், செயற்கைக் கோள்கள், ராணுவ வலிமை பற்றி பெருமிதம் கொள்ளும் இவர்கள் மலமள்ளும், மலக்குழி சுத்தம் செய்யும், அடைப்பு நீக்கும் வேலைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துதல் பற்றி யோசிப்பதில்லை. 

   ரயில் நிலையங்களில் கழிக்கப்படும் மலத்தை கைகளால் அள்ளும் ரயில்வே துறைக்கே சட்ட மீறலுக்கு முதலிடம் என்பதை நாம் எப்படி புரிந்து கொள்வது? இந்த வேலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேறு நிறுவனங்களுக்கு ஒதுக்கிவிட்டு (out sourcing), இம்மாதிரி பணிகளுக்கு யாரும் இல்லை என்று சொல்லித் தப்பித்துவிடும் போக்கு அரசுகளிடம் உள்ளது. 

   மனிதக் கழிவை அகற்றும் பணிக்கு ஆட்களை நியமிக்க தடை மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கான சட்டம் – 2013 –ல் நிறைவேற்றப்பட்டது. உலோகத்தகடுகள் அல்லதும் அள்ளும் அகப்பைகள், துடைப்பம், கையுறைகள், பூட்ஸ்கள், முகக் கவசங்கள் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துவதால் அவர்கள் மனிதக்கழிவுகளை கைகளால் அகற்றும் துப்புரவாளர்கள் (manual scavengers) ஆக கருதமாட்டார்கள் என்று இச்சட்டத்தின் உட்பிரிவு சொல்கிறது. 



    இந்தியச் சூழலில் மலமள்ளுதலைப் பற்றி அதிகம் பேசியவர் மகாத்மா காந்தியாக இருக்கக்கூடும். அடுத்தப் பிறப்பில் பாங்கியாக (துப்புரவுத் தொழிலாளி) பிறக்க விரும்பிய காந்தி தூய்மைப்பணி  புனிதமானது என்றும் ஒரு பிராமணன் அல்லது ஒரு பாங்கியால்தான் செய்யமுடியும் என்றும் நம்பியவர். நரேந்திர மோடி கூட தனது ‘கர்மயோக்’ நூலில் இந்தப் புனிதப்படுத்தும் வேலையைச் செய்தார். ஆனால் இவையிரண்டும் ஒன்றல்ல. காந்தி தானும் அந்தப்பணியை விருப்பத்துடன் செய்தார். ஆனால் மோடியோ “கோயில்களுக்குப் பதிலாகக் கழிவறை கட்டுங்கள்”, என்று மட்டும் சொன்னவர், இம்மக்களின் துயரங்களைக் கண்டுகொள்ளாமல் செயற்கையாக விசிறியடிக்கப்பட்ட சில குப்பைகளை அகற்றும் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் விளம்பரப் பிரியராக மாறியவர். காந்தியிடம் முரண்பட்ட அம்பேத்கர் மலமள்ளும் தொழிலுக்கு முடிவு கட்ட விரும்பியது அறிமுகவுரையில் குறிப்பிடப்படுகிறது. 

    நூல் காஷ்மீரிலிருந்து தொடங்குகிறது. ‘மொஹல்லா’ என்றழைக்கப்படும் குடியிருப்பில் வசிக்கும் மக்களின் தொழில் மலமள்ளுவதே. இவர்கள் வாட்டல், ஷேய்க், மோச்சி என்றழைக்கப்படும் இவர்கள் மலமள்ளுதல், செருப்பு தைத்தல் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இந்தியாவில் உலர் கழிப்பிடங்கள் அதிகம் உள்ள பகுதியாக காஷ்மீர் உள்ளது. பொதுச் சாக்கடை வசதி அளிக்கப்படாததே இதற்குக் காரணம். அனைத்து நிலைகளிலும் இந்தியாவால்   வஞ்சிக்கப்படும் காஷ்மீரின் நிலை எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் தலைநகரான டெல்லி மற்றும்  முன்னேறிய மாநிலங்கள் பலவற்றின் நிலையும் இதுதான் என்கிறபோது ‘வல்லரசு’ என்று கூச்சல் போடும் வெறியர்களை நினைத்து சிரிக்க வேண்டியுள்ளது. 




     கொடூரமான இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சொல்லும் விவரணைகள் மிகவும் அதிர்ச்சியளிப்பவை. இவர்களது மலமள்ளும் அனுபவங்கள் இந்தியாவின் விகார முகத்தை நமக்குக் காட்சிப்படுத்துபவை. “நாங்கள் மலமள்ளும் காட்சியை நீங்கள் பார்த்துவிடாதீர்கள்! பார்த்துவிட்டால் மஞ்சள் நிறப்பருப்பை உங்களாலும் சாப்பிட முடியாமல் போகும்”, என்று சொல்லும் இவர்கள் உணவில் அடிப்படையான பருப்பிற்கு இடமில்லை. 

    ‘அவுட் லுக்’ பத்தரிக்கையில் தன்னைப்பற்றி படத்துடன் வெளியான கட்டுரையை லேமினேஷன் செய்து பாதுகாத்து வரும் பீகாரின் குசுமி, இதற்காக போலிஸார் மிரட்டி பணம் பறித்ததையும் சொல்கிறார். இது சட்டவிரோதத் தொழில் என்றும் தண்டனை உண்டு என்றும் எச்சரிக்கும் காவல்துறையும் அரசுகளும் இப்பணியில் ஈடுபடுத்துவோரை ஏன் கண்டுகொள்வதில்லை? இரவோடிரவாக உலர்கழிப்பிடங்கள் சிலவற்றை இடித்துத் தள்ளும் அதிகார வர்க்கம் மறுவாழவு பணிகளில் முகம் காட்ட மறுக்கிறது. 

  “வேறு வழியில்லை. மலத்தை தலையில் சுமந்து செல்ல வேண்டுமானால் அப்போது நமக்கு சுய உணர்வே இருக்கக் கூடாது. போதையேற்றிக் கொண்டு அந்த மயக்கத்தில்தான் இந்த அருவெறுப்பான வேலைச் செய்யவே முடியும். புகையிலையுடன் சேர்த்து வெற்றிலை தரும் கிறக்கத்தில் எப்போதும் நான் இருப்பேன். என் கணவனோ எப்போதும் சாராய போதையில் கிடப்பான்”, என்று சொல்லும் குசுமிக்கு அதிகார வர்க்கமும் இந்த சமூகமும் என்ன பதில் வைத்திருக்கிறது?




      மிக நீண்ட காலம் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்த மேற்கு வங்காளத்திலும் இந்நிலைமை நீடிப்பது அதிர்ச்சி தருவது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் திரிணமுல் காங்கிரசும் இதற்கு ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதில் குறைவில்லை. கம்யூனிஸ்ட் அரசுக்குக்கூட உலர்கழிப்பிடங்களை ஒழிக்க 29 ஆண்டுகாலம் ஆவது வேதனையல்லவா! 2006 இல் இக்கட்டுரை வெளியான பிறகு மேற்கு வங்காளத்தின் பட்புரா மாவட்டம் மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலமும் உலர்கழிப்பிடங்களும் இல்லாத மாவட்டமாக மாறியிருப்பது ஓரளவு நிம்மதி தரும் செய்தி. ஆனால் மாநிலம் முழுது  இந்நிலை வராதது கேள்விக்குரியது. 

   மலமள்ளுவதற்கு ‘கர்மயோக்’ மூலம் ஆன்மீகத் தன்மையை உருவாக்க முயன்ற மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, இக்கொடிய நடைமுறையை ஒழிக்க சிறு துரும்பையும் அசைக்கவில்லை என்பது வியப்பளிக்கக் கூடியதல்ல. மத்தியப் பிரதேச முதல்மைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்துகொண்ட கூட்டத்தில் மேடையேறி மைக்கைப் பிடித்து அரசின் புளுகுமூட்டைகளை தோலுறித்த முன்னி போன்றோரின் போராட்டக்குணம் போற்றக்கூடியதாக உள்ளது. பீகாரிலோ, மத்தியப் பிரதேசத்திலோ நடக்கும் முதல்வரை மக்கள்  எதிர்கொள்ளும் நிகழ்வுகள் தமிழகத்தில் நடப்பதற்கான சாத்தியகூறே இல்லை. அந்தளவிற்கு பாசிசம் இறுகிப்போன அதிகார வர்க்கமாக மாறிப்போயுள்ளது. 

    தனது வீட்டிற்கு புதிதாக வரும் மருமகள்களுக்கு மாமியார்கள் அளிக்கும் சீதனமாக இந்த கழிவகற்றும் பணி எவ்வளவு வேதனையைத் தருவது என்பதை சொல்லில் வடிக்கமுடியாது. ஆனால் அதுதான் நடக்கிறது. பெண்கள்தான் இவ்வேலையில் அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆண்களும் அவர்களுக்கு உதவுகிறார்கள். மருமகள்கள் மட்டுமல்ல, மகன்கள், மகள்கள் என வாரிசுகளும் வேறு வழியின்றி இப்பணிகளில் தள்ளிவிடப்பட, இந்த சாதிச்சமூகமே மலக்கூடையில் சிக்கிக்கொள்கிறது. 

  “நானும் நிறைய குழந்தைகளைப் பெற்றுப் போட்டவள்தான். அக்குழந்தைகளில் பீ, மூத்திரத்தை கழுவிச் சுத்தம் செய்தவள் தான். ஆனால் அதையும், எங்கள் தலையில் சுமக்கும் மலத்தையும் ஒப்பிட முடியாது. இப்படியான ஓர் ஒப்பீட்டை மலக்கூடைகளைத் தொட்டுப்பார்த்திராத ஒருவரால் மட்டுமே செய்யமுடியும். ஒருவன் சொந்தக் கழிப்பிடத்தைச் சுத்தம் செய்வதும், அடுத்தவன் கழிந்துபோட்ட பீயை அள்ளிச் சுத்தம் செய்து தலையில் சுமப்பதும் ஒன்றல்ல”, என்ற நாராயணம்மாவின் சொற்கள் காந்தியையும் கேள்விக்குள்ளாக்குபவை. இதற்கு அதிகார வர்க்கம் பதில் சொல்ல மறுப்பது பேரவலம். 

    தமிழகத்தில் பாதாளச் சாக்கடைகளிலும் செப்டிக் டேங்குகளிலும் நச்சு வாயு தாக்கி பலியாகும் மனிதர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது இன்றும் தொடரும் அவலம். முதலில் குறிப்பிட்டதுபோல அரசின் பொய்க்கணக்கிற்கு எல்லையில்லை. மீத்தேன் போன்ற நச்சு வாயுவால் பலியாகும் இம்மக்களைக் கண்டுகொள்ள மறுக்கும் இதே அரசுகள் விளைநிலங்களையும் மக்கள் வாழ்வாதாரங்களையும் அழித்து  பூமிக்கடியிலிருந்து மீத்தேன் எடுக்க பல்வேறு குறுக்குவழிகளைக் கையாள்கின்றன. இந்த பாதாளச் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளிலிருந்து மீத்தேன் எடுக்க உங்களது வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம் ஆகிய ஏன் உதவவில்லை?

    தங்களது கணவன் அல்லது மகனை நச்சு வாயுவிற்கு பலிகொடுத்துவிட்டு, இதே மலச்சேற்றில் உழழும் பெண்களில் பாடுகள் இந்நூலில் காட்சிப்படுத்தபடுகின்றன. ஒவ்வொரு குடும்பங்களிலும் ஏதேனும் ஒருவர் மரணித்திருக்க, அவர்கள் மரணச் சான்றிதழாக பத்தரிக்கைச் செய்திகளைக் கத்தரித்துப் பத்திரப்படுத்துவது எவ்வளவு கொடுமையானது. படத்துடன் செய்தி வெளியிடாத பத்தரிக்கைகள் மீது அவர்களுக்குள்ள வருத்தம், அழுகக்கூட கண்ணீர் நீரின்றி வறண்ட அவர்களது சோகத்தை மேலும் அதிகரிக்கிறது. 

   இவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொல்ல வருவது எங்களது குழந்தைகளை இப்பணிகளில் ஈடுபடுத்த மாட்டோம் என்பதுதான். கல்வி, வேலை வாய்ப்புகளில் இவர்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட்டால்தான் இது சாத்தியமாகும். தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள்ளொதுக்கீடு போன்ற சிறு துரும்பு சற்று ஆறுதளிக்கூடியது. ஆனால் இது மட்டும் போதாது என்பதை இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. 

     தமிழில் வெளியான மாற்கு எழுதி தமிழினி வெளியிட்ட ‘அருந்ததியர் வாழும் வரலாறு’ (ஏப்ரல் 2001) என்ற இன வரைவியல் நூலைத்தவிர துப்புரவுத் தொழிலாளிகளைப் பற்றிய ஆவணங்கள் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவெங்கும் பயணம் செய்து, கள ஆய்வின் மூலம் மலமள்ளும் அவலத்தை வெளிக்கொண்டுவந்து, ‘தோட்டிப் பத்தரிக்கையாளர்’ என்று பெயர்பெற்ற, பெண் பத்தரிக்கையாளர் பாஷாசிங், இம்மொழிபெயர்ப்பை செய்த விஜய்சாய், இந்நூலை வெளியிட்ட  விடியல் பதிப்பகம் ஆகியவற்றுக்கு நன்றி சொல்வதோடு இதன் தாக்கம் ஒவ்வொருவரின் மனத்தில் சலனம் ஏற்படவேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. 


தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள்
பாஷாசிங்

(பென்குயின் புக்ஸ் 2012 இல் வெளியிட்ட ‘Unseen: The Truth about India’s Manual Scavengers’ – Bhasha Singh ‘என்ற நூலின் மொழியாக்கம்.)
தமிழில்: விஜயசாய்

முதல் பதிப்பு: டிசம்பர்  2014
பக்கம்: 400
விலை: ரூ. 300

வெளியீடு:

 விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி. நகர், 3 –வது தெரு,
உப்பிலிபாளையம் - அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641015.
தொலைபேசி: 0422 - 2576772
செல்:   943468758

இணையம்: vidialpathippagam.org
மின்னஞ்சல்:  vidiyal@vidialpathippagam.org

இங்கும் தொடரலாம்:
மு.சிவகுருநாதன்
திருவாரூர்
பன்மை
மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com
வாட்ஸ் அப்:   9842802010
செல்:          9842402010