வீணாகக் கடலில் கலக்கும் நீர் எனும் கற்பிதம்
மு.சிவகுருநாதன்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். (குறள்-17)
நமது நாட்டில் ‘அறிஞர்’களுக்குப் பஞ்சமில்லை. அவர்கள் எத்துறையிலும் பெரிய மேதைகளைப் போன்று கருத்துரைப்பர். அவற்றில் ஒன்று “வீணாகக் கடலில் கலக்கும் ஆற்று நீர்”. உண்மையில் இக்கருத்து அறிவியல் பூர்வமானதா, சூழலியல் புரிதலுக்கு உட்பட்டதா என்று கேட்டால் அறிவீனம் என்றுதான் பதில் சொல்ல இயலும். இக்கருத்து கற்பிதமாக உற்பத்தி செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இயற்கையின் நீர்சுழற்சி பற்றிய அறியாமையால் உருவான மிகவும் தவறான கற்பிதம் இது. கடலில் கலக்கும் ஆற்றுநீர் பூமியின் தட்பவெப்பநிலை, கடல்வாழ் உயிரிகளின் உணவு, நிலத்தடி நீர் மட்டம் ஆகியவற்றைச் சமநிலையில் பாதுகாக்கப் பெரிதும் பயன்படுகிறது. இதனால் கடல் வளப்பாதுகாப்பு முழுமையடைகிறது.
இதற்கு மாறாக அணைகளைக் கட்டி ஆற்றுநீரை திசை திருப்பி பாசனம் மற்றும் தொழிலகங்களுக்குப் பயன்படுத்தத் தொடங்கினால் என்னவாகும் என்பதற்கு ஏரல் கடலும் சாக்கடலும் சான்றாக அமையும்.
மத்திய ஆசியாவில் கஸகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ஏரல் கடல் (Aral Sea) என்று சொல்லப்படும் உலகின் நான்காவது பெரிய உவர் நீர் ஏரி (Saline Lake) இன்று அரல்கம் பாலைவனமாக (Aralkum Desert) உருமாறியுள்ளது. ஏரல் கடலுக்கு முதன்மை நீராதாரமாக இருந்தவை அமு தர்யா (Amu Darya), சிர் தர்யா (Syr Darya) ஆகிய இரு ஆறுகளாகும். 1960களில் அன்றைய சோவியத் ஒன்றியத்தின் பேராசை காரணமாக பருத்தி மற்றும் நெல் விவசாயத்திற்காகவும் அருகிலுள்ள பாலைவனத்தை விளைநிலங்களாக மாற்றவும் ஏரல் கடலுக்குச் செல்ல வேண்டிய நன்னீர் முழுவதையும் நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலம் திருப்பியது. இதனால் ஏரலுக்கு வரும் நீரின் அளவு முற்றிலும் நின்றுபோனது.
எனவே ஏரல் கடல் ஒரு உள்நாட்டு மூடிய நீர்நிலையாக (Endorheic Basin) மாறியது. புதிய நீர் உள்ளே வரவும் நீர் வெளியேறும் வழிகளும் இல்லாமற்போனது. கடும் வெப்பம் காரணமாக நீர் தொடர்ந்து ஆவியானதால் ஏரல் கடல் 90% அளவிற்கு ஏரியாகச் சுருங்கியது. இந்த ஏரியின், நீர் வற்றியதால் 1980களில் வடக்கு ஏரல் கடல் (North Aral Sea), தெற்கு ஏரல் கடல் (South Aral Sea) என இரு தனித்தனி சிறிய ஏரிகளாகப் பிரியுமளவிற்கு நீர் குறைந்தது. மேலும் நீர் வற்றியதால் உவர்ப்பியத்தின் அளவு ஒரு லிட்டருக்கு 10 கிராமிவிலிருந்து 370 கிராம் வரை அதிகரித்த காரணத்தால் மீன்கள் உள்ளிட்ட உயிரிகள் செத்து மடிந்தன. தற்போது. கிசில்கம் (Kyzlkum Desert) பாலைவனத்தை சோலைவனமாக மாற்ற நினைத்த காரணத்தால் புதிதாக அரல்கம் பாலைவனம் இன்று உருவாகியுள்ளது.
இன்று காய்ந்துபோன ஏரிப்படுக்கையில் எஞ்சிய உப்பும், விவசாயத்திற்குப் பயன்படுத்திய பூச்சிக்கொல்லிகளும் காற்றில் கலந்து இப்பாலைவனப் பகுதியில் நச்சுப் புயல்களாக உருவெடுத்து மனிதர்களுக்கு கேடாக மாறியுள்ளது. கஜகஸ்தான் அரசு கோக்-அரல் (Kok-Aral Dam) அணையைக் கட்டி வடக்கு ஏரல் பகுதியை ஓரளவிற்கு மீட்டுள்ளது, ஆனால் தென்பகுதி முற்றிலும் பாலைவனமாக நீடிக்கிறது.
இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள சாக்கடலில் கலக்கும் ஒரே ஆறு ஜோர்டான் ஆறு மட்டுமே. இஸ்ரேல், ஜோர்டான் நாடுகள் வேளாண்மை, குடிநீர் மற்றும் தொழில் பயன்பாட்டிற்காக ஜோர்டான் ஆற்றைத் திருப்பிவிட்டதால் இக்கடலில் கலக்கும் நீரின் அளவு பெருமளவு குறைந்துள்ளது. ஜோர்டான் நதி நீர்வரத்து தடுப்பு, மழையளவு குறைதல், கடும் வெப்பம் போன்றவை காரணமாக நீர் ஆவியாகி, தாதுக்களும் உப்பும் அதிகளவில் தேங்கிய உவர் ஏரியாக மாறிப்போனது. இன்று கடல் மட்டத்திலிருந்து சுமார் 440 மீட்டர் ஆழத்தில் உலகின் மிகத்தாழ்வான நிலப்பகுதியாகச் சுருங்கியுள்ளது. மிக அதிகமான உப்புத்தன்மையினால் இதில் சில நுண்ணுயிரிகளைத் தவிர மீன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ முடிவதில்லை. மேலும் மனிதர்கள் மிதக்கும் அளவிற்கு இதன் உவர்ப்பியம் மிகுந்துள்ளது. எனவே இது சாக்கடல் (Dead Sea) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
சீனாவின் துயரம் என்று சொல்லப்பட்ட மஞ்சாளாற்றின் (ஹோவாங்கே) குறுக்கே பெரிய அணைகளைக் கட்டி நீரை கடலுக்குச் செல்லாமல் தடுத்துவிட்டது. இதனால் அதன் கழிமுகப் பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்து பாலைவனமாகியுள்ளது. அவற்றைச் சரிசெய்ய சீனா அணையில் தேக்கும் நீரைக் குறைத்துக் கொண்டு கடலுக்குத் திறந்துவிடுகிறது. இதிலிருந்து சீனா பாடம் கற்றாலும் தற்போது அண்டை நாடுகளை பாதிக்கும் திட்டங்களை கையெடுத்துள்ளது. இந்திய எல்லைக்கு அருகில் திபெத்தில் பிரம்மபுத்திரா (யார்லுங் சாங்போ) நதியில் பெரிய அணையைக் கட்டி மெடோக் நீர்மின் திட்டம் (Medog Hydropower Project) மூலம் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யவிருக்கிறது. இப்பகுதியில் 2017இல் 6.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மபுத்திரா நதியின் போக்கை மாற்றினால் பங்களாதேசம், இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகும். நிலநடுக்கம் ஏற்பட்டால் உண்டாகும் பேரழிவுகளைக் கற்பனை செய்துகூட பார்ப்பது கடினம். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீர்ப்பகிர்வு ஒப்பந்தங்கள் ஏதுமில்லாததால் அருணாசலப் பிரதேச எல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் கட்டப்படும் அணையை ஒன்றிய அரசு வழக்கம்போல வேடிக்கை பார்க்கிறது. சீனா அருணாசலப் பிரதேசத்தை தங்களுடைய பகுதியாகவே கருதுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு எல்லா ஆறுகளையும் பாசனம், குடிநீர், நீர்மின்சக்தி, தொழிற்சாலை போன்றவற்றிற்காகத் திருப்பிவிட்டால் உலகில் பல சாக்கடல்களும் அரல்கம் பாலைவனங்களும் உருவாகும். இதனால் உலகில் கடல்வளம் சீர்கெட்டு சூழல் பெரும் பாதிப்பிற்குள்ளாகும். இதனால் உலகின் சுற்றுச்சூழல் கேள்விக்குறியாகும்.
ஆற்றுநீர் கடலுக்குள் செல்வதைத் தடுத்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்? கடல் நீரின் வேதி இயல்புகள் மாற்றமடையும். கடல் நீரின் உப்புத் தன்மை அதிகமாகும். கடலின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறும். இது கடல் வாழ் உயிரிகளை மிகவும் பாதிக்கும். உலகின் பெரும் கடற்பரப்பில் ஆண்டுதோறும் மழை பொழிகிறதே, அது போதாதா? என்று கேட்கலாம். ஆற்றுநீர் வழியாகவே கடல் வாழ் உயிரினங்களுக்கான உணவுப் பொருள்கள் வந்து சேர்கிறது. எனவே கடலில் வாழும் லட்சக்கணக்கான உயிரிகளின் உணவூட்டம் பாதிப்படையும்.
மண்ணில் பெய்யும் மழைநீர் ஆற்றின் வழியே கடலுக்கு சென்றுசேரும்போது கழிமுகங்கள் உருவாகிறது. இவற்றிலுள்ள நுண் சத்துக்கள் படிப்படியாக கடலில் சேர்ந்து கடல்வாழ் உயிரிகளுக்கு உணவாகும். இந்நீரில் ஆக்சிஜன் கரைந்திருக்கும். மேலும் கடல் வாழ் உயினங்களுக்குத் தேவையான பெருமளவு நைட்ரஜனையும் ஆற்றுநீர் கொண்டு சேர்க்கிறது. ஆற்று முகத்துவாரங்களில் மீன் வளம் அதிகமாக உள்ளது. கடல் வளப்பாதுகாப்பிற்கு ஆற்றுநீர் கடலுக்கு செல்வது அவசியம். 1,076 கி.மீ. நீளமுள்ள தமிழ்நாட்டின் கடற்கரையில் பல லட்சம் மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடல்வளமும் மீன்வளமும் பாதிப்படைந்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு இயற்கைச் சூழலும் கெடும். கடல்வளம் என்பது மீனினங்களை மட்டுமல்ல, கடல் பாசிகள் உள்ளிட்ட தாவர வகைகளையும் குறிக்கும். இவை உயிர்க்கோளத்திற்கு ஆக்சிஜனை அளிப்பவை. மேலும் ஆறுகள் கொண்டு வரும் வண்டல் மண் கடலோரப் பகுதிகளையும், தீவுக்கூட்டங்களையும் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
கடலில் உள்ள நீர் ஆவியாகி மேகமாக மாறி, நிலம் (மலை, காடு, பீடபூமி, சமவெளி) மற்றும் நீர்ப்பரப்புகளில் (கடல்) மழையாகப் பொழிகிறது. நிலப்பரப்பில் பெய்த மழை ஆற்றின் வழியே சமவெளிகளில் பாய்ந்து கடலை அடைகிறது. இந்த நீர்சுழற்சி (Water Cycle) இயற்கையின் தொடர் நிகழ்வாகும். இந்த நீர்ச்சுழற்சியை முடக்குவது ஆபத்தானது. இந்த ஆறுகள் கொண்டுவரும் வண்டல் மண் மற்றும் ஊட்டச்சத்துக்களால் மீன்கள் மற்றும் கடல்வாழ் தாவர விலங்கினங்கள் பல்கிப் பெருகுகின்றன. மேலும் கடல்நீர் தொடர்ந்து ஆவியாவதால் அதிகமான உப்பு கடலில் படிகிறது. அதன்அளவைக் கட்டுப்படுத்தவும் ஆற்று நீரும் மழைநீரும் உதவுகிறது. உப்பின் அளவு அதிகரிக்கும்போது உயிரிகள் பாதிப்படையும். நதி நீரோட்டம் நிலத்தடி நீருக்கான ஓர் ஆதாரமாகும். இது தடுக்கப்பட்டல் கடலில் உவர்நீர் உட்புகுந்து நிலத்தடி நீரை மாசுபடுத்திவிடும். பொதுவாக இயற்கை எதையும் வீணாக்குவதில்லை; மனிதர்கள்தான் அதைச் செய்கிறோம். நதிநீர் ஓடும் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வேளாண்மைக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு கல்லணை மற்றும் கீழ்பவானி கால்வாய்களில் தமிழக அரசு காங்கிரீட் தளம் அமைத்து சூழலைக் கெடுக்கிறது. மேகாதாது அணைக்குப் போட்டியாக ராசிமணல் அணையைக் கட்டுவதெல்லாம் தொலைநோக்கிலான தீர்வாக அமையாது.
மேட்டூர் அணைக்கு கீழே பெரிய அணைகள் கட்ட நிலவியல் அமைப்பு சாதகமாக அமையாது. கல்லணைக்கு முன்னதாக மேலணையும் (முக்கொம்பு) பின்பு கீழணையும் (அணைக்கரை) உள்ளன. இவைகள் நீரைப் பகிர்ந்து அனுப்ப உதவுகின்றன. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்கள் சமவெளிப் பகுதிகளாகும். இப்பகுதியில் அணைகள் கட்டமுடியாது. இங்கு தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது.
மனிதர்கள் மிகவும் பேராசை மிக்கவர்கள். பொதுவாக கல்லணையில் திறக்கும் நீர் கடைமடைப் பாசனப் பகுதிகளை எட்ட ஒரு வார காலம் பிடிக்கும். தடுப்பணைகளில் நீரைத் தேக்கினால் கடைமடைகள் பெரிதும் பாதிக்கப்படும். வட்டார அளவிலான நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகள் உண்டாகும்.
ஏரி, குளம் போன்ற நீராதாரங்களை மீட்பதும் புதியவற்றை உருவாக்குவதும் தீர்வாக அமையும். ஏரி மாவட்டமான ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டுமல்ல; காவிரி டெல்டாவில் பல நூறு ஏரிகள் காணாமற்போய்விட்டன. கொள்ளிடத்தில் திறக்கப்படும் வெள்ள நீரைத் தேக்கவே கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி வெட்டப்பட்டது.
ஒரு ஆறு உருவாகும் இடம் தொடங்கி கடலில் கலக்கும் வரை அந்த ஆற்று நீர் ஓடும் பரப்பை ஒட்டி பல்வேறு சூழியல் மண்டலங்கள் (Eco systems) உருவாகின்றன. ஆற்றின் இளநிலை, முதிர்நிலை, மூப்பு நிலை ஆகிய மூன்று நிலைகளிலும் இது நடக்கிறது. பள்ளத்தாக்குகள், அருவிகள், வண்டல் விசிறிகள், வெள்ளச் சமவெளிகள், குதிரைக் குளம்பு ஏரிகள், டெல்டாக்கள், கழிமுகங்கள் என பல இடங்களில் இத்தகைய மண்டலங்கள் அமைகின்றன. ஆற்றைத் தடுப்பது அல்லது அதன் நீர்வரத்தைக் குறைப்பது போன்ற செயல்பாடுகள் இயற்கையின் லயத்தையும் அதன் சங்கிலி அமைப்பையும் குலைப்பதாக அமையும். அரசோ மக்களோ இம்மாதிரியான முயற்சிகளுக்கு துணைபோகக் கூடாது.
நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் செப்டம்பர் 2026





