வெள்ளி, ஆகஸ்ட் 07, 2026

கழிவுகளோடு சேர்த்துச் சூழலையும் புதைக்கும் முயற்சி!

 

கழிவுகளோடு சேர்த்துச் சூழலையும் புதைக்கும் முயற்சி!

மு.சிவகுருநாதன்


 

              திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கிலுள்ள குப்பைகளை துவாக்குடிக் கல்குவாரிப் பள்ளங்களில் இட்டு மூடினால் யாருக்கும் பாதிப்பு வராது”, என்று தவெக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் திமுக பிரமுகருமான ஒருவர் கூறியது பரவலான விமர்சனத்தை எதிர்கொண்டது. இதில் வியப்படைய ஒன்றுமில்லை. பாமர மக்களைப் போல மெத்தப் படித்தவர்களும் இவ்வாறான உடனடித் தீர்வைத்தான் நாடுகின்றனர். தம்மளவில் குப்பைகளை எரிப்பது அல்லது குழிகளிலிட்டு மூடிமறைப்பது போன்ற வழிகளையே அவர்கள் கையாள்கின்றனர். மக்களின் பொதுப்புத்தியில் இவ்வாறான சிந்தனைகளே  நிறைந்துள்ளன. இவற்றைக் குற்றம் காண்பதிலும் விமர்சிப்பதிலும் பொருளில்லை. ஆனால் அரசுகளும் சூழலியல் சாராத அறிவியல் அறிஞர்களும் இவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே இங்கு முதன்மையானதாகிறது.

         திடக்கழிவுகளைக் கையாள்வது அரசுக்கு பெரும் இடராக உள்ளது. ஒவ்வொரு சிறு, பெரு நகரங்களிலும் குப்பைமேடுகள் உள்ளன. அப்பகுதி மக்கள் இதனால் கடும் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். இவற்றை அகற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவை நிறைவேற்றாமல் கோடிக்கணக்கில் பண விரயமான செய்திகளும் உண்டு. எனவே அரசு நிர்வாகத்திற்கும் இம்மாதிரியான திட்டங்கள் தேவைப்படுகின்றன. அரசுகள் முடிந்தால் வெளிப்படையாகவும் முடியாவிட்டால் மறைமுகமாகவும் இவற்றை அமலாக்க முனைகின்றன.

       பொதுவாக கழிவுகளை புதைப்பதும் எரிப்பதும் தீங்கானது. எவற்றை எரிப்பது அல்லது புதைப்பது என்பதில் தெளிவான சிந்தனை தேவை. எரிப்பது எப்போதும் சூழலுக்குக் கேடு தரக்கூடியது. நோய்த்தோற்றக்கூடிய கழிவுகளை காற்றில் வெளிப்படையாக எரிக்காமல் பாதுகாப்பான முறையில் எரிக்கலாம். மட்கும், மட்காத கழிவுகளைச் சேர்த்துப் புதைப்பது அபாயகரமானது. இவற்றைப் பிரித்து மட்காத கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதே உகந்த தீர்வாகும். இவற்றைத் தொடக்க நிலையிலிலேயே தரம் பிரிக்காமல் ஒன்றாகக் கொட்டி பலகாலம் கழித்து பிரிக்க முயற்சிப்பது சரியான முறையல்ல. இவற்றில் நெகிழி போன்ற மட்காதப் பொருட்களின் துகள்கள் நிறைந்திருக்கும். இவை நிலத்தை மாசுபடுத்துமே தவிர உரமாக வாய்ப்பில்லை.

     மேலும் மட்கும் குப்பைகளைப் புதைக்குமிடத்தில் அவை மட்குவதற்கு ஏற்ற நுண்ணுயிரிகள் இருக்க வேண்டும். பல மீட்டர்  ஆழமுள்ள கல்குவாரிப் பள்ளங்களில் இது சாத்தியமில்லாத ஒன்று என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.  இத்தகைய செயல்பாடுகள் உடனடி, குறுக்கு வழியாக இருக்குமே தவிர தொலைநோக்கில் சூழலையும் மனிதர்களையும் பாதிக்கும் பேரிடராக மாறக்கூடிய அபாயம் உள்ளது.

               கைவிடப்பட்ட சுரங்கங்களில் நீருடன் அமிலத்தன்மை, காரத்தன்மை, உலோகப் பொருள்கள் ஆகியவற்றின் கழிவுகள் உண்டாகும் வாய்ப்புகள் மிகுதி. இத்தகைய மாசுபாட்டால் நீரும் நிலமும் அதிகமாக பாதிப்படைகிறது. கந்தகம் போன்ற கனிமங்களைக் கொண்ட பாறைகளுடன் மழைநீர், நிலத்தடி நீர் ஆகியன சேர்வதால் அமில நீர் உருவாகி கந்தக அமிலம் கிடைக்கும். இந்த அமிலம் பாறைகளிலுள்ள உலோகங்களை அரிக்கும். இந்த அரித்தலால் நச்சுத்தன்மைமிக்க  நீர்மங்கள் உருவாகும் நிலையும் ஏற்படும். இவை நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர், மண் போன்றவற்றுடன் கலக்கும்போது, மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும்  பெருந்தீங்கு விளையும். அமில சுரங்க நீர் (Acid Mine Drainage - AMD) என்பது நிலக்கரி அல்லது உலோகச் சுரங்கங்களில் இருந்து வெளியேறும் அதிக அமிலத்தன்மையும் கன உலோகங்களும் நிறைந்த நச்சுத் தன்மை கொண்ட நீர் ஆகும். இது சுரங்கத்தொழில் மூலம் ஏற்படும் மிகக் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினையாகும்


 

       சுரங்கம் தோண்டும்போது பூமிக்கடியில் இருக்கும் பைரைட் (Pyrite)  தாதுக்கள் கொண்ட பாறைகள் வெளியில் வருகின்றன. (.கா.: இரும்பு சல்பைடு) இந்தப் பாறைகள் காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் மழைநீர் அல்லது நிலத்தடி நீருடன் வேதிவினை புரிந்து கந்தக அமிலத்தைத் (Sulfuric acid) தருகின்றன. இந்த அமிலம் தன்னைச் சுற்றியுள்ள பாறைகளிலிருந்து  தாமிரம், காரீயம், ஆர்சனிக் மற்றும் துத்தநாகம் போன்ற அபாயகரமான கன உலோகங்களைக் கரைத்துக் கொள்கிறது. மழைநீரும் குப்பைகளும் இணைவதால் வெளியாகும் கழிவுநீர் நிலத்தடி நீரை மாசாக்கி இயற்கையான குடிநீர் ஆதாரங்களைப் பாழாக்கும்.

        இந்த நச்சுத் தனமையுடைய நீர் ஆறுகள் மற்றும் ஏரிகளில் கலப்பதால் நீரின் pH அளவு மிகக் கடுமையாகக் குறைந்து அதன் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவில் மடிகின்றன. அருகிலுள்ள விளைநிலங்கள் அமிலத் தன்மை மிகுந்து வேளாண்மை செய்ய முடியாதபடி மண் வளம் குறைகிறது. இந்த அமில நீர் தூய நீருடன் கலக்கும்போது, அதில் கரைந்துள்ள இரும்புச்சத்து பிரிந்து, நீர்நிலைகளின் அடிப்பகுதியில் ஆரஞ்சு அல்லது மஞ்சள் வண்ணப் படிவாக மாறுகிறது. இப்படலம் நீர்வாழ் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையைத் தடுக்கிறது. மேலும் நிலத்தடி நீரில் இந்த நச்சுக்கசிவு ஊடுருவுவதால் குடிநீர் ஆதாரங்கள் சீர்கெட்டு மனிதர்களுக்குப் பலவகையான நோய்களை உண்டாக்குகிறது.

         பொதுவாக அமில சுரங்க நீரை மேலாண்மை செய்ய இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்று: செயல்பாட்டு சுத்திகரிப்பு (Active Treatment). இம்முறையில் சுண்ணாம்பு (Lime) அல்லது சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) போன்ற காரப் பொருட்களை அமில நீரில் தொடர்ந்து கலந்து அதன் அமிலத்தன்மை நடுநிலையாக்கப்படுகிறது. இது அதிகம் செலவாகும் நடைமுறையாகும். மற்றொன்று செயலற்ற சுத்திகரிப்பு (Passive Treatment) எனப்படுகிறது. செயற்கையான சதுப்பு நிலங்களை (Wetlands) உருவாக்கி அங்குள்ள இயற்கையான பாக்டீரியா மற்றும் தாவரங்கள் மூலம் உலோகங்களை உறிஞ்ச வைத்து நீரைத் தூய்மைப்படுத்தும் முறையாகும். இது நீண்டகாலத் திட்டமாகும். ஆனால் கைவிடப்பட்ட எந்தச் சுரங்கத்திலும் அல்லது கல் குவாரிகளிலும் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை நிலவரமாகும்.

      கைவிடப்பட்ட சுரங்கங்களுக்குள் காற்று புகாதவாறு களிமண் அல்லது நெகிழி உறைகளைக் கொண்டு மூடுதல் மற்றும் அப்பகுதியில் நீரைத் தேங்கவிடாமல் தொடர்ந்து வெளியேற்றுதல். சுரங்கத் தொழிலில் முறையான சுழிய வெளியேற்ற அமைப்பு (Zero Liquid Discharge) மற்றும் நீர் சுத்திகரிப்பு முறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த சுற்றுச்சூழல் பேரழிவை ஓரளவேனும் தடுக்க முடியும்.

       முறையான பொறியியல் வடிவமைப்புடன் (Engineered Landfill) சுரங்கங்களை குப்பைக் கிடங்குகளாக மாற்றி, குப்பையிலிருந்து வெளிவரும் திரவக் கழிவுகள் (Leachate) மண்ணின் வழியாக நிலத்தடி நீரில் கலக்கும் அபாயம் குறையும் என்று சொல்லப்படுகிறது. இதுவும் ஆபத்தான ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.

       குப்பைகளில் தரம் பிரிக்கப்படாத மருத்துவக் கழிவுகள், நெகிழி மற்றும் நச்சு பொருள்கள் இருப்பின் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை அவதானிக்கலாம்.  துர்நாற்றம், கொசு உற்பத்தி, மீத்தேன் வாயு உற்பத்தி போன்றவையும் தீ மற்றும் வெடி விபத்து அபாயங்களையும் உடனடியாக எதிர்கொள்ள நேரிடலாம். இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய், சுவாச நோய்கள், தோல் நோய்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அருகிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் சீர்குலையும்.

         கைவிடப்பட்ட கல்குவாரிகளை அரசு முறையாக மூடிவைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின்படி பராமரிக்க வேண்டும். சுரங்கங்களும் கல்குவாரிகளும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளின் அடிப்படையில் நிரப்பி பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். சில இடங்களில் கைவிடப்பட்ட குவாரிகளில் தண்ணீர் தேக்கப்படுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதை சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள மேலாண்மை நோக்கில் பயன்படுத்தலாம். இருப்பினும் அவ்விடத்தின் தன்மையை  உரிய ஆய்வு செய்த பிறகே இதைச் செயல்படுத்த வேண்டும்.

            குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்வதும் எஞ்சிய கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதுமே ஒரே தீர்வாகும். குப்பையிலிருந்து ஆற்றல் (Waste ® Energy) தயாரிக்கும் திட்டங்களும் சிறந்த மாற்று வழியாக அமையும். குப்பைகளை அறிவியல் முறைகளின் கீழ் மின் மற்றும் வெப்ப ஆற்றலாக மாற்றுவது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மற்றும் நிலைத்த தீர்வாகவும்  அமையக்கூடும்.

        கைவிடப்பட்ட கல்குவாரிகளில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் இடங்களாக பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அறிவியல் அடிப்படையிலான நீண்டகால தீர்வுகளை நோக்கி அரசுகள் நகர்வது காலத்தின் கட்டாயமாகும். ஆனால் இவை நடக்கும் என நம்பக்கூடிய முன்மாதிரிகள் நம்மிடம் இல்லை.

        சாதாரண திடக்கழ்வுகளால் இவ்வளவு பாதிப்பு என்கிறபோது அணுக்கழிவுகள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் (Kolar Gold Fields - KGF) உள்ள கைவிடப்பட்ட சுரங்கங்களில்  கூடங்குளம் அணுக்கழிவுகளை (Nuclear Waste) ஆழத்தில் நிரந்தரமாகப் புதைக்க இந்திய ஒன்றிய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தது.  இத்திட்டம், உள்ளூர் மக்களின் மற்றும் கர்நாடக அரசியல் கட்சிகளின் தீவிர எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது. ஆனால் அணுக்கழிவுகளுக்கான நீண்டகால புவியியல் சேமிப்பு இடமாக கோலார் சுரங்க, அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் ரோஹிண்டன் நரிமன் நவம்பர் 21, 2012 அன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த பிறகு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் விளைவாக இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) இது உண்மையில்லையென்று மறுத்தது.

        தற்போது இந்தியாவில் அணுக்கழிவு மேலாண்மை மற்றும் சேமிப்பு மையங்கள் பெரும்பாலும் கூடங்குளம் உள்ளிட்ட அந்தந்த அணுமின் நிலைய வளாகங்களுக்குள்ளேயே அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அணுக்கதிர் வீச்சு பல்லாயிரம் ஆண்டுகள் நீடிக்கும் நிலையில் பூமிக்கடியில் அல்லது கடலுக்கடியில் காங்க்ரீட் அல்லது உலோகப் பெட்டகங்களில் சேமிப்பதும் பேராபத்தை விளைவிக்கும்.

     மத்தியப்பிரதேசம் போபாலில் டிசம்பர் 3, 1984 அன்று யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து மெத்தில் ஐசோ சயனேட் (MIC) வாயு கசிந்து பல்லாயிரம் பேர் மாண்டனர். அக்கழிவுகளை சுமார் 40 ஆண்டுகள் கழித்து 2025இல் முழுமையாக அகற்றிவிட்டதாக கூறுவதும் அபத்தமே. பேரழிவுக் கழிவுகள் இன்னும் அங்கேயே உள்ளன.  இதைப்போல கொடைக்கானலில் செயல்பட்டு வந்த தெர்மாமீட்டர் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் தொழிற்சாலை 2001இல் மூடப்பட்டது. சுமார் 20 டன் பாதரசக் கழிவுகளை முறையாக அகற்ற முடியவில்லை என தொழிற்சாலை நிர்வாகமே ஒப்புக்கொண்டது. இந்த 20 டன்னில் சுமார் 1.3 டன் கழிவுகள் கொடைக்கானல் மலைக் காடுகளில் கொட்டப்பட்டன. மீதமிருக்கும் கழிவுகள் இன்றுவரை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அபாயகரமான கழிவுகள் தொடர்பாக மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை அரசுகள் எடுத்தால் மட்டுமே நமது எதிர்கால சந்ததிகள் நோயின்றி வாழமுடியும்.

நன்றி: பொம்மி - சிறுவர் மாத இதழ் ஆகஸ்ட் 2026

வியாழன், ஆகஸ்ட் 06, 2026

தேர்வு வன்முறைகள்

 

தேர்வு வன்முறைகள்

மு.சிவகுருநாதன்


 

       விடுதலைக்குப்பின் இந்தியாவில்  கல்வியில் பல்வேறு கொள்கைகள், உத்திகள் வகுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் கல்வி மற்றும் கலைத்திட்டம், கற்றல் முறைகள், தேர்வுச் சீர்திருத்தம் போன்றவற்றை வலியுறுத்துவதாக அமைந்தன. மனப்பாடத் தேர்வுகளை ஒழிப்பதே தேர்வுச் சீர்திருத்தங்களின் முதன்மை அம்சமாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த வங்கி முறைக் கல்வி மனப்பாடத் திறனை மட்டும் சோதிக்கும் தேர்வுமுறைகளை மட்டுமே கைக்கொள்கிறது. தகுதி, திறமை என்பதெல்லாம் வெறும் மனப்பாடத்திறனில் மட்டும் இருப்பதாக நம்பும் மடமை இங்கு குருகுலப் பாணியில் வளர்க்கப்பட்டுள்ளது.

          இந்த வடிகட்டும் தேர்வும் முறைக்குப் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆதரவாளர்களே. இதில் அவர்களை மட்டும் குற்றஞ்சொல்வதில் பலனில்லை. நமது கல்வியமைப்பே இவ்வாறாகத்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. நீட் (NEET), டெட் (TET) உள்ளிட்ட எந்தத் தேர்வுகளும் அறிவைச் சோதிக்கின்றன என்பதற்கு அறிவியற்பூர்வமானஆதாரங்கள் இல்லை. அப்படியான பாவனை இங்கு பரப்பப்படுகிறது. இது முழுதும் கற்பிதமே. தகுதி, திறமை என்ற சொல்லாடல்களின் பின்புலம் ஆராயப்பட வேண்டியது. சுழிய மதிப்பெண் பெற்றாலும் நீட் எழுதுவதே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதி எனும்போது உண்மை ஒருவாறு வெளிப்படவே செய்கிறது.

        1-8 வகுப்பு ஆசிரியர்களுக்குத் தகுதித்தேர்வு நடத்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 வலியுறுத்துகிறது. ஏப்ரல் 01, 2010 இலிருந்து அமலான இச்சட்டத்தில் இயற்கை நீதிக்கு முரணாக முன்தேதியிட்டு நடைமுறைப் படுத்துகிறது.  தேர்வுகளில் மாணவர்களுக்குக் கருணை காட்டாத ஆசிரியர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கருணை காட்ட விரும்பவில்லை என்பது அவர்களது தீர்ப்பில் எதிரொளித்தது. பணியில் நீட்டிக்க மேலும் ஓராண்டு மட்டும் அவகாசம் அளிக்கப்பட்டது. 2028க்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்து உரிய தகுதியைப் பெற்றுவிட காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் குழந்தைகள் மீது ஏவப்படும் ஒருவித வன்முறையாகும். அந்த வன்முறை இன்று ஆசிரியர்களுக்குமென பரவலாக்கப்பட்டுள்ளது.

       எனவே 55 வயது நிரம்பிய அனைவரும் பணியில் நீடிக்க டெட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். 55-60 வயதினர் பதவி உயர்வு பெற விரும்பினால் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். 1990களின் தொடக்கத்தில் வேலை வாய்ப்பக பதிவு முன்னுரிமை அடிப்படையில் நேரடியாகவோ ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளின் மூலமோ நியமிக்கப்பட்ட 30 ஆண்டுகாலப் பணிக்காலத்தைக் கடந்தவர்களும் இன்று தகுதித்தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேறு துறைகளில் இவ்வாறான நிலை என்றால் பெரும் கிளர்ச்சி வெடித்திருக்கும். இதை ஒருவகையான ஆட்குறைப்பு நடவடிக்கை என்றே எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு சட்டமும் நீதிமன்றமும் உதவி புரிந்திருக்கின்றன


 

     என்னதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்றாலும் தகுதித் தேர்வு நடைமுறைகள், தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றை மாநில அரசே முடிவு செய்யலாம்.   மாநில அரசின் கருணை தேர்ச்சி மதிப்பெண்களை 60% லிருந்து 50% ஆக குறைத்ததோடு நின்றுவிட்டது. முற்பட்ட வகுப்பினருக்கு 60% எனவும் இதர பிற்பட்ட வகுப்பாருக்கு 50% ஆகவும் அட்டவணை மற்றும் பழங்குடிப் பிரிவினருக்கு 45% எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல்தாள்  என்பது இடைநிலை ஆசிரியர்களான 1முதல் 5 முடிய உள்ள ஆசிரியர்களுக்கானது. இவர்கள் பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற வேண்டுமெனில்  தாள் இரண்டையும் சேர்த்து எழுத வேண்டும். 

          முற்பட்ட வகுப்பினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என 3 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகுதித்தேர்வு முடிவுகளை ஜூலை 24 வரை வெளியிடத் தடையாணை பெற்றுள்ளனர். தமிழக அரசும் இதுகுறித்து பரிசீலிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அனைவருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டிய நிலையில் வழக்கிற்காக ஒரு தரப்பாக முடிவு எடுக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு முறை ஒபிசி (OBC) என்பதாக இல்லாமல் (BC, MBC) என்றிருப்பதால் இப்பிரிவினருக்கு ஒரே தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்வது சமூக நீதிக்கு எதிரானது.

     நடுநிலை/உயர்நிலை/மேனிலைப் பள்ளிகளில் 6-8 வகுப்பு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தாள் இரண்டை எழுதுவார்கள். 9-10 ஆசிரியர்களுக்குத் தகுதித்தேர்வு தேவையில்லை என்றாலும் தமிழ்நாட்டில் உயர்நிலை/மேனிலைப் பள்ளிகளில் 6-10 வகுப்புகளை ஒரே பட்டதாரி ஆசிரியர்களே கற்பிப்பதால் யாரும் தகுதித்தேர்விலிருந்து தப்பிக்க இயலாது.

      தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளை ஒப்பீடும்போது தேர்ச்சி விழுக்காடு மிகவும் குறைவாக இருப்பது விளங்கும். லட்சக் கணக்கில் தேர்வர்கள் இருப்பதால் அவர்களில் சில ஆயிரம் பேரை மட்டும் தேர்வு செய்ய இந்த வடிகட்டும் முறை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வசதியாக உள்ளது.      ஆசிரியர்களுக்குச் சிறப்பு தகுதித் தேர்வு என்பதால் வினாத்தாள் சற்று எளிமையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் இரு தேர்வு வினாத்தாள்களையும் பார்த்த பிறகு கெட்டித்தட்டிப் போன கல்வித்துறையின் குரூர முகத்தை ஆசிரியர்களால் காண முடிந்திருக்கும். அரசிற்கு கருணை இருந்தாலும் அதை அலுவலர்கள் செயல்படுத்த விடுவதில்லை என்பதை உணர முடிகிறது. அதிகாரிகள் பேச்சைத் தாண்டி சுயமாக முடிவெடுக்கக்கூடிய தலைவர்கள் இல்லாத சூழல் ஜனநாயகத்தைப் பாதிப்பதாக அமையும்.  


 

       ஆசிரியர்கள் தேர்ச்சியடைந்து பணியில் தொடரக்கூடாது என்ற ஒற்றை நோக்கில் வினாத்தாள்கள் வடிமைக்கப்பட்டுள்ளன. இதை சிறப்புத்தேர்வு என்று அழைக்க வேண்டிய கட்டாயமில்லை. ஆசிரியர் பணிக்குத் தயாராக இருக்கும் அனைவரும் எழுதும் பொதுவான தேர்வாக நடத்தியிருக்கலாம்.  முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு பணிச்சான்று (Service Certificate) வழங்க 20க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கேட்கப்பட்டன. தேர்வர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குற்றயுணர்ச்சியை விதைப்பது கல்வித்துறைக்கு மட்டுமல்ல கல்வியமைப்பிற்கும் அழகல்ல.

      தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கான தேர்வில் பாடத்திட்டம் எதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பதே பெரும் விவாதத்திற்குரியது. 1-5 வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள் அனைத்துப் பாடங்களையும் கற்பிப்பதால் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் (Child Development and Pedagogy), தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கும் தலா 30 மதிபெண்கள் என 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.

       குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு தலா 30 மதிப்பெண்களும் கணித, அறிவியல் பாடங்களில் 60 மதிப்பெண்களையும் கணித, அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்த 90 உடன் சமூக அறிவியலில் 60 மதிப்பெண்களை சமூக அறிவியல் அதாவது வரலாறு, புவியியல் பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்கொள்கின்றனர்.

      தமிழ், ஆங்கில பாட ஆசிரியர்கள் கணிதம்அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடத்தின் 60 வினாக்களுக்குத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. பெரும்பாலான ஆசிரியர்கள் சமூக அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்துள்ளனர். இம்முறையால் அவர்களது முதன்மைப் பாடங்களைவிட அதிக எண்ணிக்கையிலான பிற பாடக் கேள்விகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. மொழியாசிரியர்கள் மீது கூடுதல் சுமை திணிக்கப்பட்டுள்ளது. தங்கள் கற்பிக்கும் பாடத்தைவிட பிற பாடங்களில் அதிக மதிப்பெண் பெற வேண்டியுள்ளது. இதுவும் இவர்கள் சொல்லும் தகுதித்தேர்வின்  தகுதி இலக்கணத்தை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

        2004க்கு முன்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட ஆசிரியர்கள் தங்களது பாடத்துடன் ஆங்கிலப் பாடத்தையும் கற்பித்தனர். 2004 இல் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட உடன் இந்நிலை முடிவுக்கு வந்தது. இப்போது ஒரு ஆசிரியர் இரு பாடங்களைக் கற்பிக்கும் நிலை இல்லை. கற்பிக்காத இரு பாடத்தில் அந்த ஆசிரியரின் தகுதியை அளவிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி முக்கியமானது.  இதைக்கூட கவனிக்காமல் ஒரு துறை பொறுப்பின்றி செயல்பட முடியுமா என்பது கேள்விக்குரியது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் ஆசிரியர்களைப் பழிவாங்க வேண்டும் என்கிற  குரூர எண்ணமும் இதில் வெளிப்படக் காணலாம். 

      முதல் தாளுக்கு 1-5 வகுப்புகளின் பாடங்களும் இரண்டாம் தாளுக்கு 6-8 வகுப்புகளின் பாடங்களும் பாடத்திட்டமாக இருந்தாலும் +2 முடிய உள்ள பாடங்களிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன. தாள் ஒன்றுக்கு, “The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper I will be based on the topics of the prescribed syllabus of the State for Classes I - V, but the standard, as well as linkages will be up to the Secondary Stage. என்றும், தாள் இரண்டுக்கு, “The questions in the Tamil Nadu Teacher Eligibility Test Paper-II will be based on the topics of the prescribed syllabus of the State for Classes VI-VIII, but the standard, as well as linkages will be up to Higher Secondary (Senior Secondary) Stage”,என்று பாடத்திட்டம் தாண்டிய வினாக்களுக்கு காரணம் சொல்வதும் ஒருவகையான துல்லியத் தாக்குதல்தான்! 1-12 வகுப்புப் பாடங்களிலிருந்து எந்த வினாவை வேண்டுமானலும் கேட்போம். அவ்வளவு பாடநூல்களையும் படித்துத்தான் உனது தகுதியை நிருபிக்க வேண்டும் என்பது வன்முறையன்றி வேறில்லை.

      தமிழ்நாட்டில் இதுவரை (2012-2022) நடைபெற்ற டெட்  தேர்வுகளில் முதல் தாள் தேர்ச்சி விழுக்காடு அதிகபட்சமாக  14.03% (2022) என்ற அளவிலும்  இரண்டாம் தாள் தேர்ச்சி அதிகபட்சமாக 10.52% (2013) என்றிருப்பதை புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்பட்ட சிறப்பு இரண்டால் தாளில் மட்டுமே 20.14% விழுக்காடு தேர்ச்சி பெறும் சூழல் இருந்தது. 2025 இல் தேர்வு முடிந்த பிறகு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்கியதன் காரணமாக தேர்ச்சி விழுக்காடு 49.20% (தாள்: I) 31.50%  (தாள்: II) அதிகரித்துக் காணப்பட்டது. தற்போது நடந்து முடிந்த தேர்விலும் 35-50% என தளர்வும் இதர வெயிட்டேஜ்ம் வழங்கப்பட்டாலன்றி தேர்ச்சி விழுக்காடு மிககுறைவாகவே இருக்கும். ஆசிரியர்கள் தொடர்ந்து தேர்வுக்கு தயாராகும் நிலை கல்விப்பணிகளில் சுணக்கத்தை உண்டாக்கும் என்பதையும் கணக்கில் கொள்வது நல்லது. ஆசிரியர்கள் தேர்ச்சிப் பெறவில்லை என்ற பரவலான பேச்சும் அவர்களுக்கு குற்றயுணர்ச்சியை உண்டாக்கும். உண்மையில் இது தகுதியில்லை என்று அனைவரும் உணரும் வரை நெருக்கடிகள் தீரப்போவதில்லை.

       நீட் தேர்வுக் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அதைவிட கொடிய கொடுமைகளை அரங்கேற்றுவது மிக மோசமானதாகும். கைக்குட்டை, குடிநீர் எடுத்துச் செல்லக்கூடாது.  பெல்ட், செருப்பு, ஷூ அணியக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் வகுப்பது நியாயமற்றது. இனி வருங்காலங்களில் உள்ளாடைகள் அணியக் கூடாது என்றோ, ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நோயாளியை அனுப்புவது போல் வேறு உடை அணிவித்து தேர்வர்களை தேர்வறைக்குள் அனுமதிப்பார்கள் போலும்! சிசிடிவி கேமராக்கள் பொருத்தி வைத்துக் கொண்டு இவ்வளவு கெடுபிடிகள் செய்வது ஏன்? தேர்வில் முறைகேடுகளைத் தடுக்கிறோம் என்று பெயரில் தேர்வர்களை அவர்கள் குழந்தைகளாயினும்  பெரியவர்களாயினும்  அவமானப்படுத்தும் கொடுமை ஒழிய வேண்டும்.  மனித உரிமைகளும் மனித மாண்பும் காக்கப்பட வேண்டும்.

        இறுதியாக, ஒப்பீட்டிற்காக மற்றுமொரு தகுதித்தேர்வு பற்றியும் பார்த்துவிடுவோம். இந்திய வழக்கறிஞர்களுக்கான அகில இந்திய தகுதித் தேர்வுகள் (AIBE) இந்திய  பார் கவுன்சில் (BCI) தீர்மானத்தின்படி ஏப்ரல் 12, 2013 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்திய நீதிமன்றங்களில் வழக்காடுவதற்குத் தகுதிச் சான்றிதழ் (Certificate of Practice) பெறுவது இதன்மூலம் கட்டாயமக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டு அல்லது 5 ஆண்டு சட்டப்படிப்பு முடித்தவர்கள் மாநில வழக்கறிஞர் சங்கத்தில் தற்காலிகமாகப் பதிவு செய்து, இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே இந்திய நீதிமன்றங்களில் வாதாடும் உரிமையைப் பெறுகின்றனர்.

         இது ஒரு திறந்த புத்தகத் தேர்வு (Open Book Exam) முறையாகும். சட்டப் புத்தகங்கள் அல்லது குறிப்புகளைப் பயன்படுத்தி தேர்வில் விடைகளை எழுதலாம். ஜூன் 7, 2026இல் நடந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இத்தேர்வினை இந்திய அளவில் மொத்தம் 1,75,701 பேர் எழுதினர். இதில் 1,15,805 பேர் தேர்ச்சியடைந்தனர்; தேர்ச்சி விழுக்காடு 65.92%. தமிழ்நாட்டில் இத்தேர்வை 2469 பேர் எழுதினார்கள். இவர்களில் 1888 பேர் தேர்ச்சி;  தமிழகத்தின் தேர்ச்சி விழுக்காடு 76.46% ஆகும். ஆசிரியர்களின் தேர்ச்சி விழுக்காடு மிகவும் குறைவதால் உண்மை நிலையை உணராமல் அவர்களைக் கேலி செய்யும் போக்கு நல்லதல்ல. தகுதித் தேர்வில் பணிக்கு வந்த ஆசிரியர்கள் தாங்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் என்ற ஆவணப்போக்குடன் செயல்படுவது  கல்வியின் வளர்ச்சித் தடுக்கும். 

       2013க்கு முன்னதாக வழக்கறிஞராக இருப்போரும் இத்தேர்வை எழுத வேண்டும் என்று சொல்லியிருந்தால் நீதிமன்றங்களை மாதக்கணக்கில் வழக்கறிஞர் போராட்டத்தால் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். ஆசிரியர்களுக்கு மட்டும் ஒரு சட்டத்தை முன்தேதியிட்டு அமல்படுத்துகிறோமே என்று சட்டத்தை உருவாக்கியவர்களும் நீதிபதிகளும் கணக்கில் கொள்ளவில்லை.

       இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்திற்கு நீதித்துறை சேவைகள் தேர்வு (Judicial Services Exam) நடத்தப்படுகிறது. முதனிலைத் தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் இத்தேர்வுகள் நடைபெறும். வழக்கறிஞராக பணி அனுபவம் இல்லாத புதிய சட்டம் படித்தவர்களை நீதித்துறைப் பணியில் நியமிக்கும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே வழக்கறிஞராக குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற விதியுடன் சட்டப் பட்டப்படிப்பும் (LLB) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய், “வழக்கறிஞராக பணியாற்றுவதன் மூலம் கிடைக்ககூடிய அனுபவத்தை வெறும் சட்டப் புத்தகம் மூலம் கிடைக்கும் அறிவும், பயிற்சியும் கொடுத்து விட முடியாது”,  என்று உறுதிபட தெரிவித்துள்ளார். இத்தகைய அனுபவமும் பயிற்சியும் ஆசிரியர்களுக்கும் பொருந்தும்தானே

 

நன்றி: பேசும் புதியசக்தி - மாத இதழ் ஆகஸ்ட் 2026