செவ்வாய், ஏப்ரல் 21, 2026

எல் நினோ மற்றும் லா நினா

 எல் நினோ மற்றும் லா நினா

மு.சிவகுருநாதன்


 

         பசிபிக் பெருங்கடல் பூமிப்பந்தின் மிகப்பெரிய கடலாகும். எனவே இங்கு நிகழும் காற்று மற்றும் நீரோட்டங்கள் உலகில் நேரடியான தாக்கத்தை உண்டாக்குகின்றன. தென் அரைக்கோளத்தில் நிலப்பரப்பு குறைவாக இருப்பதாலும், பசிபிக் பெருங்கடலின் தென்பகுதி வெப்பநிலை முதன்மையான ஒன்றாக உள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களால் உலகளவில் காலநிலையை பாதிக்கும் இரு எதிர் நிகழ்வுகளாக அறியப்படுபவை எல் நினோ மற்றும் லா நினா  ஆகியவை ஆகும்.      

       பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதியில் கடல் நீர் சராசரியை விட அதிகமாக வெப்பமடையும் நிகழ்வு எல் நினோ (El Nino)  என்றழைக்கப்படுகிறது. எல் நினோ என்றால் ஸ்பானிய மொழியில் சிறுவன் என்று பொருள். எல்நினோவிற்கு மாறாக பசிபிக் கடற்பகுதியின் வெப்பநிலையை  வழக்கத்தை விடக் குறையும் நிகழ்வு லா நினா (La Nina)  என்றும் சொல்லப்படுகிறது. லா நினா என்றால் சிறுமி என்று பொருள். இவையிரண்டும் இணைந்த தென் சுழற்சி ENSO (El Nino-Southern Oscillation) என்று வழங்கப்படுகிறது. இச்சுழற்சியானது உலகளவில் வளிமண்டல சுழற்சியை மாற்றியமைக்கிறது.

      நிலநடுக்கோட்டுப்பகுதியில் வெப்பமண்டலப் பகுதியில் வியாபாரக் காற்றுகள் (Trade winds) எனப்படும் கோள் காற்றுகள் (Planetary winds) வட அரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்தும், தென் அரைக்கோளத்தில் தென்கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றுகள் பசிபிக் பெருங்கடலில் உள்ள கடல் நீரோட்டங்களை பாதிப்படையச் செய்கின்றன.

       இக்காற்றின் மூலம் சாதாரண சூழ்நிலைகளில் பசிபிக் பெருங்கடலின் மேல் அடுக்கில் உள்ள நீர் அதிக வெப்பமடையும் போது, அது ஆசியக் கண்டப்பகுதியை  நோக்கி பாயத் தொடங்குகிறது. எனவே கீழ் அடுக்கில் உள்ள குளிர்ந்த நீர் அந்த இடத்தைப் பிடிக்கிறது. இதனால் பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ள நீரின் வெப்பநிலை கிழக்குப் பகுதியில் உள்ள நீரைவிட குறைவாகவும், ஆசியாவிற்கு அருகிலுள்ள மேற்குப் பகுதியில் அதிகமாகவும் இருக்கிறது.

     கிழக்குக் காற்று மெதுவாக அல்லது எதிர் திசையில் வீசத் தொடங்கினால், மேற்பரப்பு நீரின் வெப்பநிலையும் அதிகரித்து, சூடான நீர் கிழக்கு நோக்கி தென் அமெரிக்காவை நோக்கி நகரும். இந்த நிலை எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இந்த கிழக்குக் காற்று வேகமாக வீசத் தொடங்கும் போது, சூடான நீரும் காற்றின் நீராவியும் முதலில் ஆசியாவை நோக்கி நகர்ந்து, பின்னர் இந்த குளிர்ந்த நீரும் மேற்கு நோக்கிப் பாயத் தொடங்குகிறது. இது லா நினா என்று அழைக்கப்படுகிறது.

      எடுத்துக்காட்டாக, எல் நினோ காரணமாக பெருவின் கடற்கரைக்கு அப்பால் உள்ள குளிர்ந்த மேற்பரப்பு நீர் வெப்பமடைகிறது. நீர் வெப்பமடையும்போது, இயல்பான வியாபாரக் காற்றுகள் திசைமாறுகின்றன. எனவே, ஈரப்பதம் நிறைந்த காற்றின் ஓட்டம் மேற்கு பசிபிக் பகுதியிலிருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கு அருகிலுள்ள பகுதியான  பெருவின் கடற்கரையை நோக்கித் திரும்புகிறது. இதனால் எல் நினோ ஆண்டுகளில் பெரு கனமழையைப் பெறுகிறது. மாறாக இந்தியாவில் இயல்பான பருவமழை கிடைக்காமல் பொய்த்துப் போகிறது. வெப்பநிலை மற்றும் அழுத்தக் காரணிகளில்  எந்த அளவிற்கு வேறுபாடுகள் உள்ளதோ, அந்த அளவிற்கு இந்தியாவில் மழைப்பொழிவில் பாதிப்பும் உண்டாகும்.  

       இதற்கு மாற்றாக கிழக்கு பசிபிக் பெருங்கடலில் நீரின் வெப்பநிலை இயல்பை விடக் குளிராகும்போது நிலநடுக்கோட்டின் கிழக்குப் பசிபிக் பகுதியில் ஒரு வலுவான உயர் அழுத்தம் உருவாகிறது. அப்போது மேற்கு பசிபிக் மற்றும் ஆசியாவிற்கு அப்பால் குறைந்த அழுத்தம் நிலவும். இந்த  லா நினாவானது  பெரு மற்றும் ஈக்வடாரில் கடும் வறட்சியையும், ஆஸ்திரேலியாவில் பெரும் வெள்ளத்தையும், மேற்கு பசிபிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் அதிக வெப்பநிலையையும், இந்தியாவில் நல்ல பருவமழையையும் கொடுக்கிறது. எனவே லா நினாவால் இந்தியாவிற்கு பலன் கிடைக்கிறது.  

       வழக்கமாக எல் நினோ மற்றும் லா நினா நிகழ்வுகள் 2 முதல் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்றன. லா நினாவை விட எல் நினோ அடிக்கடி நிகழ்கிறது. இந்த நிகழ்வுகள் 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும் வகையில் இருக்கும். எல்நினோ கடலின் மேற்பரப்பு வெப்பமடைவதால் வறட்சி மற்றும் அதிக வெப்பத்தையும், லாநினா குளிர்வடைவதால் அதிக மழை மற்றும் குளிர்ச்சியையும் உண்டாக்குகின்றன. இவை இந்திய பருவமழை மற்றும் விவசாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

      1950 ஆம் ஆண்டு முதல் இந்தியா சந்தித்த 13 வறட்சிகளில், 10 எல் நினோ ஆண்டுகளிலும், ஒன்று லா நினோ ஆண்டிலும் ஏற்பட்டுள்ளன. பொதுவாக எல் நினோவின்போது இந்தியாவில் சராசரியை விடக் குறைவான மழையே கிடைக்கிறது. பருவமழையை மட்டும் நம்பியுள்ள  இந்திய விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே குறைவான மழைப்பொழிவால்  சராசரிக்கு  குறைவான அளவு பயிர் உற்பத்தியாகிறது.  

        எல் நினோவினால் ஏற்படும் கடுமையான வறட்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பற்றாக்குறை, வெள்ளப்பெருக்கு, மழைக்குறைவு மற்றும் வெப்பநிலை உயர்வு ஆகியவை தொற்று நோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, வெப்ப அழுத்தம் மற்றும் சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. எல் நினோ மீன்பிடித்தலையும் மோசமாக பாதிக்கும். எல் நினோவின் போது பெருங்கடல்களில் உண்டாகும் வெப்பநிலை உயர்வு மீன் மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களைப் பாதிப்பிற்குள்ளாக்கி மீன்பிடித் தொழிலையும் முடக்கும். இதனால் உலகப் பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடையும்.

     2020-2022 காலகட்டத்தில் லா நினா நிலை தொடர்ச்சியாக மூன்று முறை ஏற்பட்டது. எல் நினோவின் போது, உலக வெப்பநிலை சராசரியை விட உயர்வதும், லா நினாவின் போது குறைவதும் நடக்கிறது. மனிதனால் உருவான காலநிலை மாற்றம்  ஏற்கனவே உலக வெப்பநிலையை அதிகரித்துள்ள சூழலில் எல் நினோவின் தாக்கம் இதை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.  2023, 2024 ஆகிய ஆண்டுகளில் அதிக வெப்பநிலை உணரப்பட்டது. அதற்கு முன்னதாக 2020-2022 காலத்தில் மூன்று ஆண்டுகளும் எதிர்பாராத லா நினா ஆண்டுகளாக அமைந்தன.  இது உலக வெப்பநிலையை ஓரளவு கட்டுக்குள் வைக்க உதவியது எனலாம்.

     எல் நினோவின் போது, பசிபிக் பெருங்கடலின் மேல் உள்ள ஜெட் காற்றுகள்தெற்கு மற்றும் கிழக்கு நோக்கி நகர்வதால் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகிறது. அதேகாலத்தில் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய ஆப்பிரிக்கா ஆகியவை ஒப்பீட்டளவில் வறண்ட காற்றை எதிர்கொள்கின்றன. லா நினாவின் போது இதற்கு நேர்மாறாக நடக்கும்.

      எல் நினோ வளிமண்டலத்தில் காற்றின் நீரோட்டங்களை பாதிக்கிறது.  இதே காலகட்டத்தில் நிலநடுக்கோட்டுப் பசிபிக் பெருங்கடலில் அதிகளவில் புயல்களை உண்டாக்குகிறது. ஆனால் அட்லாண்டிக் பெருங்கடலில் குறைவான புயல்கள் ஏற்படுகின்றன. லா நினாவின் போது இதுவும்  தலைகீழாக மாறும்.

       எல் நினோவின் போது காற்றில் கார்பன் டை ஆக்சைடு (CO2)  வாயுவின் அளவு அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் வறண்ட காற்று தாவரங்களின் வளர்ச்சியைக் குறைப்பதால், குறைந்த கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சப்படுகிறது. வெப்பம் தீயை எரித்து, அதிகளவில் கார்பன் டை ஆக்சைடு காற்றில் வெளியிடப்படுகிறது.

      வலுவான எல் நினோ நிகழ்வுகள், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பருவமழை பலவீனமடைந்து குறைவதற்கும் இதனால் வறட்சி ஏற்படுவதற்கும்  வழிவகுக்கின்றன. எல் நினோவின் குளிர் காற்றை விட, லா நினாவின் குளிர் காற்று இந்தியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கிறது.

      லா நினா ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக வடமேற்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தில், கோடை கால மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும். இது பொதுவாக இந்தியப் பொருளாதாரத்திற்கு நன்மை அளிக்கிறது, ஏனெனில் அது விவசாயத்திற்கும் தொழில்துறைக்கும் பருவமழையைச் சார்ந்துள்ளது.

    லா நினா சைபீரியா மற்றும் தென் சீனாவிலிருந்து குளிர்ந்த காற்றை உள்ளிழுப்பதன் மூலம் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் காற்று வெப்பமண்டல வெப்பத்துடன் வினைபுரிந்து, ஒரு வடக்கு -தெற்கு குறைந்த காற்றழுத்த அமைப்பை உருவாக்குகின்றன. இது பொதுவாக இந்தியாவில் இயல்பை விடக் கடுமையான குளிர்காலத்தைக் கொண்டுவருகிறது. பருவநிலை மாற்றப் பாதிப்புடன் கூடவே இந்த இயற்கை நிகழ்வையும் இணைத்துச் சிந்தித்து செயல்பட வேண்டிய  காலகட்டத்தில் இருக்கிறோம்.

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ், ஏப்ரல் 2026

வெள்ளி, மார்ச் 13, 2026

வானிலை அறிவோம்!

 

வானிலை அறிவோம்!

மு.சிவகுருநாதன்


 

          பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு முடிய குழந்தைகளுக்கு சமூக அறிவியல் பாடத்துடன் புவியியல் பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. வானிலை, காலநிலை போன்றவை புவியியலின் உட்பிரிவாகும். +1, +2 வகுப்புகளில் புவியியல் பாடம் இருப்பினும் அவற்றைத் தேர்வு செய்வோர் மிகவும் குறைவு; எல்லாப் பள்ளிகளிலும் அப்பாடப்பிரிவு இருக்காது. அதற்கடுத்து புவியியல் பட்ட மற்றும் பட்ட மேற்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளன; அதைப் படிப்போரும் குறைவு. புவியியலும் அதன் உட்பிரிவுகளும் குழந்தைகளுக்கு அவசியமான வாழ்வியல் கல்வியாகும். இவற்றை தேவையான அளவில் குழந்தைகளுக்கு ஏற்ப சொல்லித்தர பாடத்திட்டங்களும் பாடங்களும் அமைக்கப்பட்டிருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். வானிலை, காலநிலை, பேரிடர் ஆகிய தலைப்புகளில் எளிய, எது தேவையோ அதைச் சொல்லித்தராமல் தேவையற்ற குப்பைகளை அள்ளிக்கொட்டும் இடமாக பாடநூல்கள் உள்ளதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது. பேரிடர் பற்றிய பாடங்களும் பேரிடர் மேலாண்மையும் இங்கு சுனாமிக்குப் (2004) பிறகே இங்கு அறிமுகமானதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. வாழ்வியலுக்கு இன்றியமையாத ஒரு பாடத்தில் குழந்தைகளும் பொதுச் சமூகமும் மந்தமாக இருக்கக் கூடாது.

        வானிலை குறித்த நமது புரிதலுக்கு ஒரு எடுத்துக்காட்டை கவனிக்கலாம். வானிலையை ஆங்கிலத்தில் ‘weather’ என்றும்  காலநிலை ‘climate’ என்றும் சொல்லவேண்டும். ஆனால் பலரும் எப்போதும் “Climate சரியில்லைஎன்று சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்தில் (24 மணி நேரம் அல்லது ஒரு நாள் முதல் சில மாதங்கள் வரை) ஏற்படும் வெப்பம், அழுத்தம், ஈரப்பதம், மழை, காற்று, பனி, மேகம், சூறாவளி, பனிப்புயல், புழுதிப்புயல் போன்ற நிகழ்வுகளையும் எப்போதாவது நிகழும் இயற்கைப்பேரிடர்கள் போன்றவற்றையும் வானிலை (weather) என்றே சொல்லவேண்டும். இத்தகைய வானிலைத் தொகுப்பின் நீண்டகால சராசரி காலநிலை (climate) என்றழைக்கப்படுகிறது. இதை தட்ப வெப்பநிலை என்றும் தமிழில் சொல்வதுண்டு. 30 ஆண்டுகளுக்கு மேலான ஓரிடத்தின் வானிலைச் சராசரியே இவ்வாறு கூறப்படுகிறது.

        சென்னையில் தென் மாநிலங்களுக்கான மண்டல வானிலை ஆய்வு மையம் (RMD - Regional Meteorological Centre) அமைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான்-நிகோபர் தீவுகள் ஆகிய யுனியன் பிரதேசங்களுக்கும் வானிலை முன்னச்சரிக்கை தரும் அமைப்பாகும். இந்தியாவில் பிற வானிலை ஆய்வு மையங்கள் புதுதில்லி, மும்பை, நாக்பூர் (மகாராஷ்டிரா), கொல்கத்தா (மேற்கு வங்காளம்), குவஹாத்தி (அசாம்), போன்ற இடங்களில் அமைந்துள்ளது.  

      பிரிட்டிஷ் இந்தியாவில் 1875இல் வானியல் ஆய்வுத்துறை தொடங்குவதற்கு முன்பே 1792இல் வானிலை மையம் தொடங்கப்பட்ட பெருமையுடையது சென்னை. விண்மீன்களை ஆராய்தல் மற்றும் வானிலையைப் பரப்புவதை தொடக்ககால  நோக்கமாகக் கொண்டு தொடங்கிய இந்த மையம் பின்னாளில் வானிலைத் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியது. 1945 ஏப்ரல் 1 தேதி தென் மண்டல வானிலை ஆய்வு மையமாக மாற்றப்பட்டது. இந்தியாவின் பிற மையங்களைவிட சிறப்பான வசதிகள் கொண்ட மையமாக இது கருதப்படுகிறது.

        சென்னையிலுள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் வழங்கும் வானிலைத் தகவல்கள் போதுமானதாக இல்லை என்பது பலமுறை நிருபிக்கப்பட்டுள்ளது. ஒகி (2017), கஜா (2018), டித்வா (2025) போன்ற புயல்களையும் சென்னைப் பெருமழை உள்ளிட்ட பல்வேறு அதி கனமழைகளையும் சரிவரக் கணிக்கத் தவறியுள்ளது. சரியாக செயல்படாத ரேடார் உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு வானிலையைக் கணிக்க சிரமப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதைச் சரிசெய்து மக்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் தெற்காசிய நாடுகளில் கூட்டமைப்பின் (SAARC) உறுப்பு நாடுகளுக்கு வானிலை விவரங்களை எவ்வாறு பகிர்ந்துகொள்ளும்? என்பது வியப்பிற்குரிய ஒன்றாக உள்ளது.

     அமெரிக்க, ஐரோப்பிய மாதிரிகள் ஒப்பிட்டளவில் நவீனமாக உள்ளன. ஆனால் அவை இந்தியப் பெருங்கடல் புயல்களை மிகச்சரியாக கணிப்பதில் பெரியளவில் அக்கறை காட்டுவதில்லை. எனவே அவற்றை அப்படியே பயன்படுத்துவது இங்கு பலனளிப்பதில்லை. நமக்கான இந்திய வானிலை மாதிரியை  உருவாக்குவது பற்றி ஒன்றிய அரசும் தொடர்புடைய துறைகளும் சிந்திக்கத் தவறியுள்ளன. நாம் அதைப்போல ஒரு முன்னோடியான மாதிரியை ஏன் உருவாக்கவில்லை என்பது குறித்து இஸ்ரோவும் (ISRO) ஒன்றிய அரசும் சிந்திக்க வேண்டும்.   இந்திய வானிலை ஆய்வுகளுக்கு இஸ்ரோ மிகப்பெரிய பங்களிப்பை நல்க முடியும்.  இன்றுள்ள அதிநவீன யுகத்தில் நாட்டிற்கான வானிலை முன்னறிப்பிற்கு உரிய கவனம் செலுத்தாத நிலை குறித்து நாம் வெட்கப்பட வேண்டும். ஒன்றிய அரசுத் தரப்பின் இந்த போதாமைகளை தனியார் சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் போக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஒருவகையில் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் வானிலைகாலநிலை மற்றும் புவியியல் கல்வியை அளித்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.        

 

       உள்ளூர் அளவில் வரலாறுகள் எழுதப்படவேண்டும் என்று வலியுறுத்துவதைப்போல உள்ளூர் அளவிலும் வானிலை ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அவசியமாக உள்ளது. தகட்டூர் ந.செல்வகுமார் (வானிலை அறிவியல்), ஹேமச்சந்திரன் (Delta Weatherman), ப்ரதீப் ஜான் (Tamilnadu Weatherman) போன்ற சுயாதீன வானிலை ஆய்வாளர்களின் கணிப்புகள் ஒப்பீட்டளவில் சிறப்பாக உள்ளன.  சென்னைக்குப் பாதிப்பு என்றால் திரளும் ஆளும் அதிகார வர்க்கம் பிறபகுதிகளுக்கு அவ்வாறான முன்னெடுப்புகளை எடுப்பதில்லை என்கிற வேதனையும் இங்குண்டு.  வானிலை மையத்தைவிட செல்வகுமார், ஹேமச்சந்திரன் ஆகியோர் டெல்டா மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

        நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தகட்டூர் ந.செல்வகுமார் தனியார் வானிலை ஆய்வாளர்களில் முக்கியமானவர். ஆசிரியர் பயிற்சிக்குப்பின் ஆந்திர மாநில கடலோரங்களில் இறால் பண்ணைகளில் பணியாற்றிய காலத்தில் வானிலை ஆய்வுகளுக்கு சுயகல்வி மூலம் வந்தடைந்தவர். தொடர்ந்த தன்னார்வ உழைப்பின் மூலம் வானிலை அறிவியலை மிக எளியமுறையில் மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருப்பவர். மன்னார்குடி பகுதியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய இவர்  புயல், மழை மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்துத் துல்லியமான கணிப்புகளை அளித்து வருகிறார். டெல்டா மாவட்டங்களுக்கும் தமிழ்நாட்டின் உழவர்களுக்கும் இவரது வானிலை அறிக்கைகள் பெரிதும் பயன்பட்டு வருகின்றன. வானிலையை விரிவாக விளக்க இவர் முயற்சி செய்யும் விதம், தொனி போன்றவற்றில் சிக்கல்கள் இருப்பினும் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இவரது அறிக்கைகள் உதவுகின்றன.  இவரின் தாக்கம் பலரை வானிலை ஆய்வை நோக்கித் திருப்பியுள்ளது.

        தமிழ்நாடு வெதர்மேன் (Tamilnadu Weatherman) என்ற பெயரில் அறியப்படும் பிரதீப் ஜான், தன்னை வானிலையை விளக்குபவர் என்று சொல்லிக் கொள்கிறார். சிறு வயதிலிருந்து தொற்றிய வானிலை ஆர்வம் அவரை இத்தகைய ஆய்வுகளுக்கு உந்தித் தள்ளியுள்ளது. இத்துறையில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் இளைஞர்டெல்டா வெதர்மேன்ஹேமச்சந்திரன். இவரும் சிறப்பான வானிலை அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இவரது அறிக்கைகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருப்பது சிறப்பு. புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்படும் டெல்டா மாவட்டங்களுக்கு முதன்மையளிக்கும் வகையில் இவரது அறிக்கைகள் அமைகின்றன. இவர்கள் தங்களது வானிலை அறிக்கைகளை சமூக ஊடகங்கள் வழியே பகிர்ந்து மக்கள் தொண்டாற்றி வருகின்றனர். 

     எவ்வளவுதான் தொழில்நுட்பங்கள் இருப்பினும் வானிலையை கணிப்பதுச் சற்று சிக்கலானதுதான். இக்கணிப்புகள் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவை. வானிலை ஆய்வு மையம் மேம்போக்கான கணிப்புகளை வெளியிட்டு ஒதுக்கிக் கொள்ளும்போது இவர்கள் கூடுதலான முடிவுகளை வெளியிடுகின்றனர். இன்று கிடைக்கும் பல்வேறு வானிலை தொடர்பான நூற்றுக்கணக்கான இணையதளங்களிலிருந்து தரவுகளைப் பெற்று அவற்றை தீவிரமாகவும் பொறுப்பாகவும் ஆய்வு செய்து உள்ளூர் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து கணிப்புகளை உருவாக்குகின்றனர். அவை சில சமயங்கள் பொய்த்துப் போகின்றனர். இதனால் இவர்கள் கடும் தூற்றலுக்கு உள்ளாகின்றனர். இருப்பினும் தங்கள் பணியில் மனம் தளராது ஈடுபடுவதை நாம் பாராட்டியாக வேண்டும்.

     சூழலியல் நூல்களை ஒப்பிடும்போது வானிலையியல் நூல்கள் மிகவும் குறைவு. புவியியல், வானிலை, காலநிலை, பேரிடர்கள் போன்றவற்றை எளிமையாகப் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கான மொழியில் அடிப்படை நூல்கள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றைப் பாடங்களுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் இயற்கை மற்றும் சூழலை நேசிக்கவும், பாதுகாக்கவும் முடியும். 

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ் மார்ச் 2026

செவ்வாய், பிப்ரவரி 17, 2026

எல்லோருக்குமான காந்தி – அணிந்துரை

 எல்லோருக்குமான காந்தி அணிந்துரை

 

ஆர். பட்டாபிராமன்


 

            காந்திகருவிலேயே திருவுடையவர்அல்லர். வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் கற்றுத் தேற முயற்சித்தவர். நன்னெறிகளின் வழியாக அரசியல், சமூக, பொருளாதாரக் கட்டமைப்பு என்ற பெருங் கனவு காந்தியிடம் இருந்தது. அகிம்சை அன்பு வழியில் உலகு மாறவேண்டும் என்ற பேரவா அவரிடம் இருந்தது. தனது கனவு இந்தியா அப்படியே உலகில் எழ வேண்டும் என நினத்தார். அரசியல் புரட்சி, சமூகப் புரட்சி, பொருளாதாரப் புரட்சி என்கிற உரத்த குரல்களின் நடுவில், மென்மையாக அவர்நன்னெறிகளின் புரட்சிஎன வாழ்ந்து காட்ட முயற்சித்தார். நடந்துகாட்டலில் நல்வாழ்க்கை என்பது அவரது செய்தி.

       உரிமை போராட்டங்களின் உயர்வு என்கிற பொதுபுத்தியிடம், கடமைசார் கடப்பாடு என அவர் பேசிப்பார்த்தார். நடைமுறைவாழ்வில் Vanguardism என்பதில்லாமல், Exemplariness என தன் முன்மாதிரியை வாழ்க்கைச் செய்தியாக்கினார். ‘பிறர் இருந்தால் நான் இல்லைஎன ஒதுக்கி உயர நினைக்கும் சமூகத்தில்பிறரின்றி நான் இல்லைஎன்பதைக் கொண்டுபோனார்.

        அறிவு சமூகத்திற்கே ஏற்றம்என்கிற இந்திய வாழ்க்கை முறையில்உழைக்காமல் உண்ணல் திருட்டுஎன்று உடலுழைப்பின் மேன்மையை கண்ணியத்தை காந்தி உயர்த்தினார். முடி திருத்துபவன் உழைப்பும் வழக்கறிஞர் உழைப்பும் சம மதிப்புடையதே என்று நூற்றாண்டுக்கு முன்பேஇந்திய சுயராஜ்யத்தில்பேசியவர். மனிதனுக்கு இடையே உயர்வு தாழ்வு வேற்றுமை பாவம் என்றவர். இந்த பூமியால் அனைவரின் தேவையையும் கொடுக்க முடியும், ஆனால் எவரின் பேராசைக்கும் அதனால் ஈடுகொடுக்கமுடியாது என்றவர்.

       காந்தி பேசிய வர்ணாஸ்ரமத்தில் உயர்வு தாழ்வு பார்வையோ, அப்படியான நடைமுறை அனுசரிப்புகளோ இல்லை. அவர் இந்து மதத்தின் பலவீனக் கண்ணியான தீண்டாமையை தன் வழியில் அசைத்துப் பார்க்கலானார். ‘Caste Must Go‘ என 1935லேயே அவர் பேசினார். மனுஸ்மிருதியை அபத்தங்களின் கட்டுக்கதை என்று கூட சொன்னவர் காந்தி. அவரின் முயற்சியை குறித்து திபோர் மெண்டேவிடம் உரையாடிய நேரு, காந்தியின் மேதமை - தீண்டாமை ஒழிப்பில் வெளிப்பட்டதாக பதிவு செய்தார். ‘சாதிக்கு எதிராக காந்திஎன்கிற அற்புத ஆய்வு நூலை நிஷிகாந்த் கோல்கே படைத்துள்ளார்.

      பிராமணர்கள் மீது காந்திக்கு விமர்சனமில்லாமல் இல்லை. விவேகானந்தரைப் போலவோ, ஆரிய சமாஜிகள் போலவோ அவர் மேல்நிலையாக்க முன்மொழிவுகளை வைக்கவில்லை. ஒரே ஒரு வர்ணம் என்றால், உடல் உழைப்பு சூத்திர வர்ணமாக மாறுவோம் என்றே அவர் பேசினார்.

      காந்திக்கு எவ்வளவு புகழ் மாலைகள் சூட்டப்பட்டனவோ, அவ்வளவு கண்டன விமர்சனங்கள், பழிப்புகள், வசவுகளும் வந்தன. தேசப்பிதா என்கிற அழைப்புகளும் இருந்தது. பத்தாம்பசலி, ரீஆக்ஷனரி, பூர்ஷ்வாவாதி, என்ன கிழித்தார் காந்தி என ஏராள சொல்லடிசூடல்களும் வரவே செய்தன.

      பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் காந்தி மீது வைத்த விமர்சனம் - அவர் காங்கிரஸ், சாதி இந்துசுப்ரீமசிக்குநிற்கிறார் என்பதே. சுதந்திரமே அவரது இலக்கு, தீண்டாமையோ, இந்து - முஸ்லீம் ஒற்றுமையோ அல்ல என்றனர். இதை எதிரொலித்த இந்தியர்களும் உண்டு. காந்தி எந்த போராட்டத்தையும் தனித்த ஒன்றாக நடத்தவில்லை. அவருக்கு விடுதலை, இந்து முஸ்லீம் ஒற்றுமை, தீண்டாமை, நிர்மாண திட்டம் என்பவை ஒருங்கிணைந்த போராட்டமாகவே இருந்தது.

     காந்தி மீது பலருக்கும் அச்சமும் சந்தேகப் பார்வையும் இருந்திருக்கக்கூடும். தங்கள் வழியில் தங்கள் கனவை அவர்களின் சொந்த பலத்தில் நிறைவேற்ற முடியாமல் போவதற்கு, காந்தியை அவர்கள் தடையாகப் பார்த்தனர். தங்களின் எதிர்பார்ப்புகளை அவர் மீது ஏற்றி, ஏமாறும் போது விமர்சித்தனர். காந்திக்கு எவர் மீதும், எக்கருத்து மீதும் ஒவ்வாமையில்லை. அவர் எதிரி தரப்பு என எவரையும் பார்க்கவில்லை. எதிர்தரப்புடன் உரையாடலை நடத்திக்கொண்டேயிருந்தார். உண்மை எவரின் ஏகபோகமல்ல என்கிற தெளிவு காந்தியிடமிருந்தது.

     அம்பேத்கர், இந்து முஸ்லீம் பிரச்சனையில், நிலவிய இந்திய யதார்த்தத்தை கணக்கில்கொண்டு, ‘Divided Divinity’ என விமர்சித்தார். காந்தி இந்தியாவிற்கு என்ன தேவையோ அதை மனதில் வைத்து ‘United Divinity’ எனப் பேசினார். வரலாற்றில் இதுவரை ஒன்று நடக்கவில்லையென்பதால், இனியும் நடவாது என கருத வேண்டியதில்லை என்கிற மானுடத்தின் மீதான அபார நம்பிக்கை காந்தியிடம் இருந்தது. ஜின்னாவால் அவர் முன்வைத்த பாகிஸ்தான் கோரிக்கையை நடைமுறையாக்க முடிந்தது. காந்தியால் ஜின்னா முன்வைத்தஇருதேசகொள்கையை உறுதியாக நிராகரிக்க முடிந்தது


 

       இந்துக்களால் பிறர் உதவியின்றி விடுதலை பெறமுடியும் என்பது பெரும் கற்பனை, இந்தியா இந்துக்களுக்கு மட்டும் சொந்தம் என்று பேசுவது பைத்தியக்காரத்தனம் என்றார் காந்தி. இந்தியாவோ பாகிஸ்தானோ அங்குள்ள சிறுபான்மையினரை எப்படி நடத்தப்போகிறார்கள் என்பதில்தான் அவர்களின் கண்ணியம் இருக்கிறது என்றார்.

        என்னை  எவர் ஆள நினைக்கிறார்என்பதைவிட, என்னை நானே ஆளமுடியுமா என்பதையே முக்கிய சோதனையாக்கினார். சுதந்திரம் என்பதை சுயக்கட்டுப்பாட்டுடன் கூடிய ‘self rule’ என காந்தி விரிவுபடுத்தினார். இப்படி காந்தியை குறித்து எவ்வளவு பேசினாலும் பேசப் பேச அவர் விரிவடைவார்.

        இந்நூலாசிரியர் சிவகுருநாதன், மற்றும் ஒருகாந்தி சரிதையைமிக மிக எளிய வகையில் எழுதியுள்ளார். ‘எல்லோருக்குமான காந்திஎன்கிற தலைப்பே அதன் விசாலத் தன்மையை பறை சாற்றுகிறது. சிவகுருநாதன் கல்வியாளர். மாணவர்களின் உளவியல் உணர்ந்தவர். பல ஆண்டுகளாக நான் அறிந்த அறிஞர். தேர்ந்த பன்முக சிந்தனைகளின் வாசிப்பாளர். இந்திய, குறிப்பாக தமிழ்ச் சமூகச் சூழலை உள்வாங்கி நூல்களை எழுதி வருபவர். அவரின் காந்தி குறித்த இந்நூல் தமிழ் வெளியில் நன்கு பேசப்படக்கூடிய நூலாக அமையும்.

       காந்தியின் வாழ்க்கையின் அனைத்து முக்கிய புள்ளிகளையும் சிவகுருநாதன் இணைக்க பெருமுயற்சி எடுத்துள்ளார். அவரின் விரிவான வாசிப்பனுவமும், உள்வாங்கும் திறனும் எல்லோருக்குமான காந்தியில்வெளிப்படும். பிறப்பு, குடும்பச்சூழல், கல்வி, லண்டன் பாரிஸ்டர், தென்னாப்பிரிக்கா போராட்டம், இந்தியா திரும்பி 1915லிருந்து, கோட்சேவின் குண்டு சாய்த்த காலம்வரை ஓயாத பணிகள் என இந்நூலில் காலவரிசையில், ஆசிரியர் கூற்றுவழி 18 இயல்களில் பதிவாகியுள்ளன. காந்திக்கு பின்னரான இந்தியாவும் தொட்டுக்காட்டப்பட்டுள்ளது.

        வேதாரண்யத்தில் உப்புசத்தியாகிரக காலத்தில் முடிதிருத்தும் தொழிலாளி வைரப்பன் குறித்து கூட சிவகுருநாதன் சொல்லும்போது, நுணுக்கமாக செய்திகளை சேகரித்து வெளிப்படுத்தும் உழைப்பைக் காணலாம். காந்தி காலத்தில் ஊடாடிய வடபுலத்து தலைவர்களை மட்டுமின்றி, தமிழக தலைவர்களின் ஊடாட்டத்தில் உடன்படும்- எதிர்வினையாற்றும் செய்திகளையும் சிவகுருநாதன் தரமுயற்சித்துள்ளது பாராட்டிற்குரியது.

        இந்துமதம், சனாதன வர்ண தர்மம் குறித்து காந்தி அளித்திடும் விளக்கங்கள் ஆழமான புரிதலின்றி சற்று மேம்போக்காக அமைந்திருந்தனஎன்கிற மதிப்பீடு ஒன்றிற்கும் சிவகுருநாதன் இந்நூலில் வந்துள்ளார். காந்தி குறித்து தீவிர வாசிப்பாளர்கள் இதில் உடன்படமாட்டார்கள். காந்தியிடம் அளப்பரிய சமய உரையாடல்கள் இருந்தன. சமயம் குறித்த விரிவான வாசிப்பை காந்தி மேற்கொண்டவர். அவரின் மதம் சார்ந்த scholarship, intellectual capital அசாதரணமானது. மத நல்லிணக்கம் சார்ந்த மதச்சார்பின்மையை அவர் தொடர்ந்து பேசிவந்தவர். அவரின் ஆசிரம வாழ்க்கை, காலை - மாலை வழிபாட்டு முறைகள் தனித்த நடைமுறை அனுசரிப்புகளானவை.

         காந்தி சமய ஆய்வாளர் அல்லவே தவிர, நிலவும் சமூகத்தில் செயல்பாட்டாளர் ஒருவரின் ‘text- context’ என்பதில் ஆக உயர் தேர்ச்சி கொண்டவராக இருந்தார். காந்திக்கு எதிலும் இணக்கப்புள்ளிகளே தேவைப்பட்டன. ‘அழித்தொழிப்புஎன்பது அவர் நிகழ்ச்சி நிரலில் அறவேயில்லை. அவரின் செயல்பாடு உடனடி பலன்களுக்கானதா - நீண்டகாலத்திற்கானதாக இருக்கிறதே என்கிற கேள்வி வந்தபோதெல்லாம், அதைவிட குறுக்கு வழி என ஏதுமில்லை என்றே அவர் சொல்லிக்கொடுத்தார். என்ன நிலவுகிறதோ அதன் தீங்குகள் உணரப்படும்போது, அதை களைந்துசமூக நல்லிணக்கம்கொணர உழைத்தார். நம்மில் எவரும் உயர்ந்தவரும் இல்லை - தாழ்ந்தவருமில்லை என்கிற சிந்தனையை அவரவர் தன்னிடத்திலிருந்தே தொடங்கித் தொடர்வது என்பதை அவர் பயிற்சித்தார். ஓர் அடியானாலும், முடிந்தால் அனைவருடனும், இல்லையேல் தான் மட்டுமாவது என்பது அவரின் அன்றாட தொழிற்பாடாக இருந்தது.

        காந்தி குறித்த எந்த நூலும் படிக்காத ஒருவருக்கு, சிவகுருநாதன் நூல் கிட்டுமெனில், ‘எல்லோருக்குமான காந்திநல்ல நுழைவாயிலாக இருக்கும் என்றே சொல்லத்தோன்றுகிறது. சிவகுருநாதன் இந்நூலை இவ்வாறு முடித்திருப்பார்உண்மை, அன்பு, எளிமை, அகிம்சை, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம், அறம்சார் வாழ்வு, மது உள்ளிட்ட போதை விலக்கு, தனிமனித ஒழுக்கம் போன்றவை காந்தியத்தின் கூறுகளாகும்.”

       சமூகத்திற்கு பயன்படத்தகுந்த ஏராள நூல்களை வெளியிட்டு வரும் நன்னூல் பதிப்பகம் தோழர் காதர், இந்நூலையும் கொணர்ந்து பெருங்கடமையை செய்துள்ளார். பாராட்டுகள். சிவகுருநாதனின் அரிய உழைப்பால் வந்துள்ளஎல்லோருக்குமான காந்திகாந்தி இலக்கியக் கிடங்கில் முக்கிய சேர்மானம். வாசிப்போர் காந்தியை கண்டறியமுடியும். சிவகுருநாதனுக்கு நல்வாழ்த்துகள்!

நன்றி: தோழர் ஆர். பட்டாபிராமன்

நூல் விவரங்கள்:

 எல்லோருக்குமான காந்தி  (மகாத்மாவின் கதை) 

மு.சிவகுருநாதன்

முதல்பதிப்பு: டிசம்பர்  2025

பக்கங்கள்: 198   விலை: ரூ. 220

ISBN: 978-93-48900-21-0

நூல் வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்:

நன்னூல் பதிப்பகம்,

மணலி – 610203,

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம்.

அலைபேசி: 9943624956 

மின்னஞ்சல்:

 nannoolpathippagam@gmail.com

அலைபேசி:  9943624956    (G Pay)