ஞாயிறு, மார்ச் 24, 2024

மகாத்மாவின் இறுதி நாள்கள்

 

மகாத்மாவின் இறுதி நாள்கள்

(மகாத்மாவின் கதை தொடரின் பதினைந்தாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்


 

             சுதந்தர இந்தியாவில் காந்தி 168 நாள்கள் மட்டுமே வாழ்ந்தார். அதுவும் துயரம் நிரம்பிய வாழ்வாக அது அமைந்தது. சுதந்திரப் போரைவிட அதிக சக்தியுடனும் நம்பிக்கையுடனும் இந்து முஸ்லீம் - சீக்கிய ஒற்றுமைக்காக களம் கண்டார். அவரது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. 1947 ஜூலை 15இல் தொடங்கி 1948 ஜனவரி 30 முடிய காந்தியின் இறுதி 200 நாட்களை இந்து நாளிதழில் வி.ராமமூர்த்தி தொடராக எழுதினார். அந்நூல் கி.இலக்குவன் மொழிபெயர்ப்பில் தமிழில் கிடைக்கிறது.

       நாட்டின் ஒருபக்கம் சுதந்திரக் கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்த வேளையில், மறுபக்கத்தில் மதக்கலவரங்கள் வெடித்துத் தீயெனப் பரவின. அவற்றை நிறுத்த காந்தி மேற்கண்ட முயற்சிகள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை. 1947 ஆகஸ்ட் 15 இரவில் புதுதில்லியின் ரெய்சினா ஹில் பகுதியில் அமைந்திருந்த அரசியல் சட்ட அவையில் பாபு ராஜேந்திர பிரசாத், ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். காந்தியோ கல்கத்தா பெலியகட்டா என்னுமிடத்தில் உள்ள ஹைதாரி மாளிகையில் வங்காள மாகாண முதல்வராக இருந்த ஹூசைன் ஷாகித் சுராவர்தி என்ற முஸ்லீம் தலைவருடன் தங்கி கலவரங்களை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார்.

        அவர் மிகவும் சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர். காந்தியுடன் எளிய வாழ்க்கை வாழ மிகவும் சிரமப்பட்டார். கலவரங்கள் சற்றுக் குறைந்ததும் காந்தியுடன் தங்குவதைத் தவிர்த்தார். இதனால் அவர் மீது காந்தியிடம் புகார் கூறப்பட்டது. கூட்டு முயற்சி தொடங்கும் முன்பே சுராவர்தி மீது புகார் கூறினார்கள். இது நாங்கள் எதிர்பார்த்த பலனைத் தந்துள்ளது. அவருடன் இணைந்து செயல்படாமலிருந்தால் கல்கத்தாவில் நான் மட்டும் அமைதி ஏற்படுத்தியிருக்க முடியாது, என்றார் காந்தி.

        காந்தி வாரந்தோறும் திங்கள்கிழமை மவுன விரதத்தில் ஈடுபட்டார். இது ஓய்வெடுக்கும் நாளாக அவருக்கு இருந்ததில்லை. அன்று அவர் அதிகம் கடிதங்கள் எழுதுவதில் செலவிட்டார். இவர் தங்கியிருந்த இடத்திற்கு வரும் கூட்டத்தினரின் சிரமத்தைக் கருதி அவர்கள் இடத்திற்கே சென்று மாலை நேரப் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தினார். பாரக்பூரில் வன்முறை மூழும் சூழல் இருந்தது. காந்தியும் சுராவர்தியும் அங்கு விரைந்தனர். இவர்கள் செல்வதற்கு முன்னதாகவே அவர்கள் சமாதானத்திற்கு வந்துவிட்டனர். இரண்டு சமூக மக்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அன்பையும் ஒற்றுமையையும் ஒருசேர உணர்த்திய விதம் காந்தியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தனது நோக்கங்களும் செயல்பாடுகளும் வீண்போகவில்லை என்பதை உணர்ந்து மகிழ்ந்தார்.

        நவகாளியில் நம்பிக்கைக்குரிய உள்ளூர் மக்களைக் கொண்டு அமைதிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. கலவரங்கள் நடக்கும் பஞ்சாப்பிலும் இதேபோன்று குழுக்கள் அமைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். பயத்தால் வீடுகளைக் காலி செய்துவிட்டு வெளியேறிய முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களை மீண்டும் அழைத்து குடியமர்த்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றார்.

        சமூக முன்னேற்றம், கிராமப்புற நலன் மேம்பாடு போன்ற நோக்கங்களுக்காக கஸ்தூரிபா அறக்கட்டளை  அவரது மறைவிற்குப்பின் (1944 பிப்ரவரி 22) நிறுவப்பட்டது. இதன் அறக்கட்டளைப் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் கூட்டம் ஒன்றை இங்கு நடத்தினார். இதில் பெண்கள் பலர் விருப்பத்துடன் இணைந்திருந்தனர்.

       1947 ஆகஸ்ட் 22 கல்கத்தா தேசபந்து பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கரக்பூரில் பணிபுரிந்த இந்து அரசு அலுவலர்கள் முஸ்லீம்களிடம் பாரபட்சம் காட்டுவது குறித்துப் பேசினார். அரசு அலுவலர்களும் காவல் பணியாளர்களும் தங்கள் பணிகளைப் பொருத்தவரை இந்துக்களோ, முஸ்லீம்களோ, சீக்கியர்களோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்படும் மக்கள் எந்த மதப் பிரிவினர் என்று பார்க்காமல் செயல்பட வேண்டுகோள் விடுத்தார். மதம் என்பது தனிப்பட்ட விவகாரம்; அதனை தனிப்பட்ட முறையில் வரையறை செய்வதுடன் நிறுத்திக் கொண்டால் நமது அரசியல் வாழ்க்கையில் அனைத்தும் நன்றாக இருக்கும், என்றார்.

          மறுநாள் மாலை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி, ‘அல்லாஹூ அக்பர்’, எனும் முழக்கத்தை இந்துக்கள் எதிர்ப்பது குறித்துப் பேசினார். கடவுள் ஒருவரே உயர்ந்தவர் என்ற இந்த  முஸ்லீம்களின் முழக்கத்தையும் சத் ஶ்ரீ அகால்’, என்ற சீக்கிய முழக்கத்தையும் அனைவரும் எழுப்ப வேண்டும். இதற்கு இந்து, முஸ்லீம், சீக்கிய சகோதரர்கள் தயங்கக்கூடாது.  இந்துக்களின் ராமநாமப் பாடலும் இவ்வாறே என்றார். பலவீனமானவர்களையும் தகுதி படைத்தவர்களையும் பாதுகாப்பவன் கடவுள் ஒருவனே, என்றும் வலியுறுத்தினார்.

       பஞ்சாப்பில் கொளுந்து விட்டெரிந்த வகுப்புவாதத் தீயை அணைக்க காந்தியால் மட்டும் இயலுமென அவர் வருகையை பலர் வலியுறுத்தினர். காந்தி எப்போதும் அரசியல் சட்ட எல்லைகளுக்குட்பட்டு செயல்பட விரும்புபவர். காந்தியை காஷ்மீருக்கு அழைத்தபோது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல், வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் ஆகியோரை கலந்தாலோசித்த பிறகே சென்றார். பஞ்சாப் செல்வது குறித்து  பிரதமர் ஜவகர்லால் நேருவின் கருத்தறிய, நான் பஞ்சாப்பிற்கு போகவேண்டிய அவசியம் உள்ளதா? எனக்கேட்டு,  தேவையெனில் நவகாளி மற்றும் பீகார் பயணத்தை ஒத்திவைத்துவிட்டு அங்கு செல்லலாம், என்று கடிதம் எழுதிவிட்டு அனுமதிக்காக காத்திருந்தார்.

         அரசு ஊழியர்களிடம் இந்தியா அல்லது பாகிஸ்தான் எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறீர்கள்? எனக் கேட்கப்பட்டதையும் பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவையும் முஸ்லீம்கள் பாகிஸ்தானையும் தெரிவு செய்ததை அறிந்த காந்தி, அரசுப்பணிகளில் வகுப்புவாத நச்சுக் கிருமி புகுந்தது எவ்வாறு? என்று வினா எழுப்பினார்.  இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நன்றாக இயங்க வேண்டுமெனில் வகுப்புவாத உணர்வும் அத்தகைய அணுகுமுறையும் களையப்பட வேண்டுமென்றார். இரு நாட்டுப் பிரதமர்கள் இந்த முக்கியப் பிரச்சினை குறித்து சந்தித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

      கல்கத்தா மற்றும் பீகாரிலிருந்து வந்த அமைதி குறித்த தகவல்கள் காந்திக்கு மகிழ்ச்சியளித்தன. பீகாரில் அமைதிக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் ஐ.என்.ஏ. அதிகாரி ஷா நவாஸ்கான் காந்தி சுராவர்தி கூட்டு முயற்சி நன்கு பலனளிப்பதையும் பீகார் மாகாணத்திலிருந்து வெளியேறிய முஸ்லீம்கள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருவதையும் எடுத்துக் காட்டினார்.

      குழந்தைகளிடம் கடமையுணர்வை மழலையர் பள்ளியிலிருந்து வளர்க்க வேண்டும் என்று காந்தி விரும்பினார். சிறுவர்- சிறுமிகள் சமூக உறுப்பினர்கள் என்கிற வகையில் தகுதியுடையவர்களாக வளர்ப்பது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் கடமையாகும். மாணவர்கள்  மீது முறையான கவனம் செலுத்தினால்தான் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். மாணவர்கள் உலகில் ஒழுங்கின்மை நிலவுகிறது. அவர்கள் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்களுக்குக் கூட மரியாதை அளிப்பதில்லை. வருங்காலத் தலைவர்களின் இத்தகைய அணுகுமுறை தனக்கு மனவேதனையளிப்பதாக கல்கத்தாவில் கூடியிருந்த கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

        காங்கிரஸ் கட்சியினர் முகமது அலி ஜின்னாவை எதற்கெடுத்தாலும் குறைகூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். காந்தி இதனை விரும்பவில்லை. பாகிஸ்தான் உருவான பிறகும் முஸ்லீம்  லீக் கட்சி நீடிப்பதை அவர் எதிர்க்கவில்லை. காங்கிரசோ, முஸ்லீம் லீக்கோ ஒருவர் பதவி, சொத்துகள் சேர்ப்பதற்கு இதை வாய்ப்பாக கருதக்கூடாது என்றார். ஆசாத் இந்த் பவுஜ்எனப்படும் இந்திய தேசிய ராணுவத்தையும் (ஐ.என்.ஏ.) நேதாஜியின் தியாகங்களையும் பிரார்த்தனைக் கூட்டங்களில் பாராட்டிப் பேச மறக்கவில்லை.

       நேதாஜியின் துணிச்சலுக்கு ஈடு, இணையில்லை. மிகவும் பலம் பொருந்திய பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சிறிய எண்ணிக்கையிலான படைவீரர்களைத் திரட்டியது சாதாரணமான ஒன்றல்ல, என்றார். ஐ.என்.ஏ. படைவீரர்கள் சுதந்தர இந்தியாவில் எவ்வாறு செயல்படவேண்டும் என்று தன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டதைக் குறிப்பிட்டு, அவர்களை இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்வது சாத்தியமானதல்ல என்றும் வாள்முனையை ஏர்முனையாக்கி வேளாண் பணிகளில் ஈடுபட்டு, அமைதி வழியில் அவர்கள் தங்களது  சொந்த முறையில் நாட்டுக்குப் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

      1947 ஆகஸ்ட் 31 நள்ளிரவில் கல்கத்தா நகரின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் மீண்டும் கலவரங்கள் ஏற்பட்டன. மக்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். மீண்டும் கலவரம் ஏற்பட்டதால் காந்தி மனம் உடைந்தார். காந்தி தங்கியிருந்த ஹைதாரி மாளிகையும் தாக்குதலுக்கு உள்ளானது. கற்கள், கம்புகள் வீசப்பட்டன. கல்வீச்சில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. எனவே செப்டம்பர் 1 தனது வழக்கமான ஆயுதமான உண்ணாவிரதத்தைக் கையிலெடுத்தார். அப்போது மேற்கு வங்காள (கல்கத்தா) ஆளுநராக இருந்த சி.ராஜாஜி காந்தியை சந்தித்துப் பேசினார்.

           அப்போது ராஜாஜி காந்தியிடம், குண்டர்களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருக்கலாமா? என்றார். குண்டர்களை உருவாக்குவது நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவுமின்றி அவர்களால் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னாலுள்ள இதயங்களை தொட விரும்புகிறேன், என்று காந்தி பதிலளித்தார்.

      அப்போது காந்தி வெளியிடத் தயாரித்த பத்தரிக்கைச் செய்தியில், 79 வயதை எட்டும் நிலையிலுள்ள மெலிந்த உடலுடைய கிழவனான நான், சில காலம் உயிர்வாழும் நோக்கத்துடன், உடனடியாக இறந்துவிடாமல் இருக்கவும் தண்ணீருடன் உப்பு, சோடியம் பை கார்பனேட், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை அருந்த முடிவு எடுத்ததாகக் கூறப்பட்டிருந்தது.

     இதைப் பார்த்த ராஜாஜி, கடவுளின் கரங்களில் உங்களை ஒப்படைத்துவிடும்போது ஏன் எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்துக் கொள்கிறீர்கள்? என்று சற்றுக் கிண்டல் தொனியுடன் கேள்வி எழுப்ப, உண்மைதான், என்று சொல்லி எலுமிச்சைச் சாற்றை நீக்கியதன் வாயிலாக வைட்டமின் சி கிடைக்கக்கூடிய வாய்ப்பையும் தவிர்த்தார். 75 மணி நேரத்தைக் கடந்த உண்ணாநிலையில் பலர் காந்தியைச் சந்தித்து உண்ணா நோன்பை முடித்துக் கொள்ள வேண்டினர். இந்து மகா சபைத் தலைவர் சியாமா பிரசாத் முகர்ஜியும் காந்தியைச் சந்தித்தார். அவர்கள் பார்வார்டு பிளாக் கட்சியின் மீது குற்றம் சுமத்தினர்.  நேதாஜியின் அண்ணனும் பிரிவினைக்கு முன்னதாக ஒன்றுப்பட்ட வங்காள அமைப்பு உருவாக்க முயன்ற சரத் சந்திர போஸ் காந்தியை முதன்முறையாகச் சந்தித்தார். இந்தக் கலவரங்களின் பின்னணியில் இந்து மகா சபை இருப்பதையும் பஞ்சாப் பற்றி எரியும்போது நீங்கள் வேடிக்கைப் பார்ப்பது ஆண்மையற்ற செயல் என சீக்கியர்களை அவர்கள் தூண்டிவிட்டதையும்  அதை ஆதாரங்களுடன் நிருபிக்க முடியும் என்றார்.

      அமைதியும்  நல்ல புத்தியும்  திரும்ப வந்துவிட்டன என்று உண்மையாக காந்தியிடம் எடுத்துக் கூறி உண்ணா நோன்பை முடிக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அனைவரும் பணிபுரிய வேண்டுமென பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் விரிவான வேண்டுகோள் ஒன்றை மேற்கு வங்காள ஆளுநர் சி.ராஜாஜி விடுத்தார்.

      செப்டம்பர் 5 அன்று மேற்கு வங்காள ஆளுநர் சி.ராஜாஜி, முதல்வர் பி.சி.கோஷ், சுராவர்தி ஆகியோர் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, காந்தியின்  நிபந்தனைகளை ஏற்று  கையொப்பமிட்டு, இறுதியாக உண்ணா நோன்பை முடிவுக்குக் கொண்டு வந்தனர். அன்றைய தினத்தில் மிகவும் தவறாக வழிநடத்தப்பட்ட இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்து, தங்களிடமிருந்த துப்பாக்கிகள், குண்டுகள், அரிவாள்கள், கத்திகள், பெரிய உருட்டுக் கட்டைகள், கடப்பறைகள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கொடிய ஆயுதங்களை காந்தியின் முன் போட்டனர். இந்த ஆயுதக் குவியல்களைக் கண்ட காந்தி, இவற்றில் சில ஆயுதங்களை எனது வாழ்நாளில் இப்போதுதான் பார்க்கிறேன், இதற்குமுன் இலகுரக எந்திரத் துப்பாக்கியைப் பார்த்ததே கிடையாது, என்றார்.

        உண்ணாவிரதத்தால் உடல்நிலை மோசமடைந்த நிலையில், ஓய்வெடுக்கச் சொன்ன மருத்துவர்களின் ஆலோசனைகளையும் மீறி செப்டம்பர் 6 இல் கல்கத்தாவை விட்டு கிளம்ப ஆயத்தமானார். காந்திக்கு ஏற்கனவே வர்வேற்பளித்த கல்கத்தா மாநகராட்சித் திடலில் வழியனுப்பும் விழாவும் நடைபெற்றது. அவ்விழாவில், கல்கத்தாவில் அமைதி நிலவினால் ஏற்படும் நல்ல விளைவுகளை எனது பேச்சைக் கேட்போரும் படிப்போரும் எண்ணிப் பார்க்க வேண்டும். கல்கத்தா அமைதியாக இருந்தால் கிழக்கு மற்றும் மேற்கு வங்காளம் முழுமையும் நல்லறிவுடன் இயங்கும். பின்னால் பீகாரிலும் பஞ்சாப்பிலும் அமைதி உறுதிப்படும். நான் பஞ்சாப் செல்லவேண்டும் என்று கடவுள் விரும்புகிறார் என்று நினைக்கிறேன். பஞ்சாப் மாநிலம் நற்புத்தியுடன் செயல்படத் தொடங்கினால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் முழுமையும் அதனைப் பின்தொடரும், என்று காந்தி உரையாற்றினார்.

       காங்கிரஸ் அமைச்சர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாகவும் உறவினர்களுக்குச் சிறப்புச் சலுகை காட்டுவதாகவும் விமர்சனக் கடிதங்கள் வந்த நிலையில், எளிமை, துணிவு, நேர்மை, உழைப்பு போன்ற பண்புகளை மற்றவர்களைவிட மக்கள் ஊழியர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். உழைப்பு, கட்டுப்பாடு ஆகிய இரண்டு பண்புகளைத் தவிர பிறவற்றுக்கு ஆங்கில ஆட்சியாளர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள முடியாது. விமர்சனங்கள் மூலம் அமைச்சர்கள் பலன் பெறவேண்டும். மறுபுறம் விமர்சகர்கள் உண்மையாகவும் நிதானமாகவும் விமர்சிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், என்றும் காந்தி எழுதிய கட்டுரை ஒன்றில் வலியுறுத்தினார்.

       தில்லி ரயில் நிலையத்திலிருந்து நகரத்தினுள் நுழைந்தபோது அங்கு நிலவிய அமைதி நல்ல அமைதியாக காந்திக்குத் தோன்றவில்லை. கல்கத்தா நடைபெற்ற கொடுமைகள் தில்லியிலும் நடைபெற்றதால் ஏற்பட்ட மயான அமைதி என்பதை காந்தி உணர்ந்தார். உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் அனைத்தையும் காந்தியிடம் விளக்கினார். தில்லி பிர்லா மாளிகையில் தங்கியிருந்த காந்தியை பிரதமர் நேரு வந்து சந்தித்தார். வருத்த மிகுதியால் விரக்தியின் விளிம்பில் இருந்த நேருவைக் கண்ட காந்தி உணர்ச்சிப் வசப்பட்டார். இப்படிப்பட்ட கொடூரச் சூழலைக் கண்டதில்லை என்று நா தழுதழுக்க சொன்னார் நேரு, இந்தக் காட்டுமிராண்டித்தனங்களை எப்படிச் சாமளிப்பது என்று தெரியாத கையறு நிலையில் இருப்பதை காந்தியிடம் விவரித்தார்.

      பிர்லா மாளிகையிலிருந்து முஸ்லீம் இல்லம் ஒன்றிற்கு தனது இருப்பிடத்தை மாற்றக் கோரிய ஆலோசனையை காந்தி உடன் ஏற்றார். காங்கிரஸ்காரரும் ஆசப் அலியின் வீட்டுக்கு மாறுவது  என்ற முடிவை பாதுகாப்புக் காரணம் கூறி பட்டேல் தடுத்தார். விடுதலைப் போராட்ட வீரர் அருணாவை மணந்துகொண்ட ஆசப் அலி அமெரிக்காவில் இந்தியத் தூதராகப் பணியாற்றி வந்தார்.   

        காந்தி தனது பிரார்த்தனைக் கூட்டங்களை அனைத்து சமயக் கூட்டங்களாகவே வடிவமைத்திருந்தார். பல்சமய, பன்மொழிப் பாடல்கள் பாடப்படும். அனைத்து சமயங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்துக்களின் பகவத் கீதை, சீக்கியர்களின் கிரந்த் சாகிப், பார்சிகளின் ஜெண்ட் அவெஸ்தா, கிருஸ்தவர்களின் பைபிள், இஸ்லாமியர்களின் குர்ரான் போன்றவற்றை உரிய மரியாதையுடன் மதித்துப் போற்றினார்.  செப்டம்பர் 16 அன்று நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் புனித குர்ரான் வரிகள் பாடப்பட்டபோது எழுந்த எதிர்ப்பால் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. காந்தியைப் போல ஒரு பிடிவாதக்காரரைப் பார்ப்பது அரிது. இனி ஓவ்வொரு வழிப்பாட்டுக் கூட்டம் குர்ரான் வரிகளுடன் தொடங்கும் என்று அறிவித்தார். யாரும் எதிர்ப்பு தெரிவித்தால் கூட்டம் ரத்து செய்யப்படும் என்றும் சொல்லி, கூட்டங்களை தொடர்ந்து நடத்தினார். எதிர்ப்பு ஏற்பட்டால் பிரார்த்தனைக் கூட்டத்தை உடனடியாக ரத்து செய்தார். இதன் காரணமாக எதிர்ப்பு குறைந்து போயிற்று.

        கல்கத்தாவைப் போன்று தில்லியிலும் காந்தியின் பணிச்சுமை கடுமையாக இருந்தது. இந்துக்களும் முஸ்லீம்களும் சீக்கியர்களும் அமைதியான முறையில் சேர்ந்து வாழமுடியவில்லை என்றால் நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை என்றார். இந்து, முஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை காந்தியின் சிறிய குழு சென்று மக்களின் மனக் காயங்களுக்கு மருந்திட்டது. அக்குழுவில்  பிரதமர் நேருவின் மகள் இந்திரா பிரியதர்சினியும் இடம் பெற்றார்.

      செயலூக்கமுள்ள அகிம்சை அல்லது சத்தியாகிரகம் என்பதன் பொருள் தீமை செய்பவனிடன் எதிர்ப்பின்றி சரணடைதல் என்பது பொருளல்ல. கொடுங்கோலனின் எண்ணத்திற்கும் வலிமைக்கும் எதிராக முழு ஆன்மாவை நிறுத்தி வலிமையை வலிமையின் மூலம் எதிர்கொள்வதுதான் காந்திய முறை என்றார். தொடர் வண்டி, அச்சு உள்ளிட்ட சில நவீன வசதிகளைப் பயன்படுத்திய காந்தி நுரையீரலில் இன்ஃபுளுயன்சா நோய்த்தொற்று ஏற்பட்டு காய்ச்சல், சளி மற்றும் இருமலால் அவதியுற்றபோது பென்சிலீன் மருந்தை செலுத்திக்கொள்ள மறுத்தார். அகிம்சை வழியைப் பின்பற்றுபவர்கள் மலரைவிட மென்மையானவராகவும் கருங்கல் பாறையைவிட  கடினமானவராகவும் இருக்க வேண்டும் என்ற போதனையின்படியே செயல்பட்டார். 

      தேவநாகரி வடிவிலான இந்தியை ஆட்சி மொழியாக ஐக்கிய மாகாண அரசு (உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட் பகுதிகள் அடங்கிய மாகாணம்) அறிவித்ததைக் கண்டு வருந்திய காந்தி, இது உருதுமொழி பேசும் மக்களுக்கும் பாதகமாக அமையும் என்பதை உணர்த்தினார். அந்த அரசைக் கட்டுப்படுத்தும் நிலையில் இல்லை என்றபோதிலும் நேச உணர்வுடன் உத்தரவை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். 

      காந்தி, கடைசி ஆயுதமான உண்ணா நோன்பை ஒரு ஆன்மீக நடவடிக்கை என்றார். இது பிரார்த்தனையை விரைவு படுத்துகிறது, இது கடவுளை நோக்கிச் செயல்படுகிறது, நோன்பு இருப்பவர் தெரிந்தவராக இருக்கும்போது அது அவர்களுடைய மனச்சாட்சியை விழித்தெழ வைக்கும் என்றும் நம்பினார். இறுதியாக, 1948 ஜனவரி 13இல் உண்ணா நோன்பைத் தொடங்கினார். காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின் தலையீடு காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்புத் தொகையிலிருந்து ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்குத் தரவேண்டிய ரூ.55 கோடியை சர்தார் பட்டேல் தர மறுத்தார். இதில் காந்தியின் அணுகுமுறை வேறாக இருந்தது.

      அனைவரும் பிர்லா மாளிகைக்கு ஓடிவரவேண்டாம் என்று காந்தி மன்றாடிக் கேட்டுக்கொண்டார். எனக்கு வேறு வழியில்லை. எனது இயலாமை ஒவ்வொரு நாளும் என்னை சித்ரவதை செய்கிறது. உண்ணா நோன்பில் அது அகன்றுவிடும். எனது முஸ்லீம் நண்பர்களுக்கு அளிக்க என்னிடம் எந்தப் பதிலும் இல்லை. ஒரு மனிதன் தூய்மையானவனாக இருந்தால் அவனால் கொடுப்பதற்கு அவனது உயிரைவிட மதிப்புமிக்கது எதுவும்  இல்லை என்றும் சொன்னார். பலரது முயற்சிகளுக்குப்பின் ஆறுநாள் உண்ணா நோன்பை முடித்துக் கொண்டார்.

       காந்தியின் உடல்நலத்தைப் பரிசோதித்த டாக்டர் பி.சி.ராய், ஜிவராஜ் மேத்தா, சுசிலா நாயர் ஆகியோரடங்கிய மருத்துவக்குழு, முகமலர்ச்சியுடன் காந்தி உடல்நலத்துடன் இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் உள் உறுப்புகளின் இயக்கம் சீராக இல்லை. அவை சீரடைய நீண்டகாலம் பிடிக்கும். எனவே அதுவரையில் கவலைகளும் மனஅழுத்தங்களும் அவரை அண்டாத வகையில் கவனமாக இருக்க வேண்டும், என்றது.

       1948 ஜனவரி 20இல் பிர்லா மாளிகையின் புல்வெளியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் உரையாற்றும்போது காந்தியை நோக்கி வீசப்பட்ட குண்டு 70 அடி தொலைவில் வெடித்தது. அதிர்ந்து நடுங்கிய மனுபென் காந்தியை அமைதிப்படுத்திவிட்டு காந்தி தனது உரையைத் தொடர்ந்தார். குண்டு வீசிய மதன்லால் என்ற 20 வயதான பஞ்சாப் இந்து அகதி மதன்லால் கைது செய்யப்பட்டான். ஆனால் காந்தியை முடிக்க பெருந்திட்டத்துடன் வந்திருந்த  நாதுராம் கோட்சே, பாட்கே, கர்க்கடே, ஆப்டே, சங்கர், கோபால் கோட்சே போன்றோர் திட்டம் தோல்வியடைந்ததும் மிக எளிதாக தில்லியைவிட்டு வெளியேறினர். அவர்களைச் சுற்றிவளைத்திருந்தால் காந்தி சிலகாலம் நம்முடன் இருந்திருப்பார்.

      பிரதமர் நேருவிற்கும் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் பட்டேலும் பிளவு அதிகரித்துள்ளதாக பேசப்பட்டது.  அதை மறுத்த காந்தி இருவரும் ஒரே மாதிரியாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் முஸ்லீம் எதிரிகளாக இருக்க முடியாது. முஸ்லீம்களின் எதிரியாக இருப்பவர்கள் இந்தியாவிற்கும் எதிரிகளே, என்றார் காந்தி. பிரதமர் நேருவின் தன்னலமற்றப் போக்கினையும் பணிகளையும் காந்தி வெகுவாகப் பாராட்டினார்.

       ஜனவரி 23 அன்று நேதாஜியின் பிறந்த நாளை ஒட்டி பிரார்த்தனைக் கூட்டத்தில்  காந்தி பேசும்போது, நான் அகிம்சையைப் போதிப்பவன்; நேதாஜி வன்முறையை ஆதரித்தவர். அதனால் என்ன? பிறரது நல்ல குணங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம். அவர் சிறந்த தேசபக்தர். நாட்டிற்காக தனது உயிரை அர்ப்பணித்தவர். இந்திய தேசிய ராணுவத்தில் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், பார்சிகள் என அனைவரும் இடம்பெற்றனர்.  வட்டார, சாதி, மத உணர்வுகள் அவருக்கு இல்லை, என்று புகழாரம் சூட்டினார். ஆச்சாரிய கிருபளானி பதவி விலகியதைத் தொடர்ந்து பாபு ராஜேந்திர பிரசாத் புதிதாக பதவியேற்றிருந்த செயற்குழுக் கூட்டத்திலும் காந்தி பங்கேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் காந்திக்கு நன்றிகளையும் மீண்டும் வகுப்பு நல்லிணக்கத்தை ஏற்படுத்த உறுதிமொழியும் அளித்தனர்.

         காந்தி கொலை செய்யப்படலாம் என்று அவர் உட்பட அனைவரும் அறிந்திருந்தனர் என்றே சொல்ல வேண்டும். யாராவது ஒருவன் என்னைக் கொலை செய்தால் அந்தக் கொலையாளி மீது எனக்கு எந்தக் கோபமும் ஏற்படக்கூடாது என்பதற்காக ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே மரணமடைய வேண்டும் என்கிற விருப்பத்தை பிரார்த்தனைக் கூட்டங்களிலும் அவர் எழுதிய கடிதங்களிலும் வெளிப்படுத்தி வந்தார்.

      ஜனவரி 26 விடுதலைக்கான போராட்டத்தில் சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டது. அன்று அது பொருத்தமாக இருந்தது. இன்று சுதந்திரத்தை அனுபவித்த பிறகு ஏமாற்றமடைந்துள்ளோம், என்று தனது வருத்தங்களைப் பதிவு செய்தார். பாபு ராஜேந்திர பிரசாத்தை அழைத்துக் கொண்டு பிப்ரவரி 2 வார்தா செல்கிறேன். அங்கு ஒரு மாதம் வரையில் தங்கியிருப்பேன். அங்கேயே தங்கிவிட மாட்டேன். நான் இங்கிருந்து கிளம்பியவுடன் சண்டை போடமாட்டோம் என உறுதியளித்து, எனக்கு ஆசி வழங்கினால்தான் நான் இங்கிருந்து கிளம்புவேன் என்று அன்புக் கட்டளையிட்டார்.

       ஆகவே காந்தி தில்லியைவிட்டு கிளம்பும் முன்பு காரியத்தை முடிக்க சதிகாரக் கும்பல் உடனடியாகச்  செயலில் இறங்கியது. முதல் முயற்சியில் தோல்வியுற்ற இக்கும்பல் பம்பாய் மற்றும் குவாலியர் சென்று 9 மி.மீ. பெரெட்டா கைத்துப்பாக்கி வாங்கி உடன் பயிற்சியெடுத்து செயலில் இறங்கியது.

      1948 ஜனவரி 30 சர்தார் பட்டேல் வந்து காந்தியை சந்திக்கிறார். இருவரும் உரையாடியதால் பிரார்த்தனைக் கூட்டம் தாமதமானதால் உடன் விடைபெற்றார். அக்கூட்டத்தில் ஒருவனாக நாதுராம் கோட்சேயும் கலந்திருந்தான்.

      இடுப்பில் தொங்கும் கடிகாரத்தை நீங்கள் கவனிக்காததால் அது கோபித்துக் கொள்ளப்போகிறது, என்று காந்தியிடம் விளையாட்டாகக் கூறினாள் அபா. நேரக்கண்காணிப்பாளராக நீங்கள் இருவரும் இருக்கும்போது நான் ஏன் அதைப் பார்க்க வேண்டும், என்று காந்தியும் கிண்டலடித்தார். உயிர்க் கைத்தடிகளான மனுபென் காந்தி, அபா இருவரின் தோள்களைப் பிடித்த வண்ணம் காந்தி மேடையை நோக்கி நடந்தார்.

     கூட்டத்திலிருந்த நாதுராம் கோட்சே கைகூப்பியவாறு காந்தியை நோக்கிக் குனிந்தான். அவன் காந்தியின் காலில் விழுவதாக நினைத்த மனு அவனைத் தடுக்க முயன்றார். மனுவைத் தள்ளிவிட்ட கோட்சே கால்சட்டைப் பையிலிருந்த 9 மி.மீ. பெரெட்டா கைத்துப்பாக்கியால் சுடத் தொடங்கினான். இரண்டு குண்டுகள் காந்தியின் வலது மார்பிலும் ஒரு குண்டு வயிற்றிலும் பாய்ந்தது. காந்தி நிலைதடுமாறி தரையில் சரிந்தார். மதவெறி வென்றது; இந்தியா தோற்றது.

(தொடரும்…)

நன்றி: பொம்மி – சிறுவர் மாத இதழ் மார்ச் 2024        

வியாழன், பிப்ரவரி 08, 2024

சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும் அறவியல் பார்வை

 

 சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும்  அறவியல் பார்வை

 

மு.சிவகுருநாதன்

 

(நக்கீரனின்இயற்கை 24*7 - சுற்றுச்சூழல் வழிகாட்டி நூல்குறித்த அறிமுகப்பதிவு.)


 

         சூழலியல் கற்பிதங்களையும் அதன் பின்னாலிருக்கும் அரசியலையும் சூழலியல் அறத்தையும் 18 தலைப்புகளில் நுட்பமாகவும் சுருக்கமாகவும் அதே சமயம் மிகத் தெளிவாகவும் இந்நூலில் எழுதியிருக்கிறார் நக்கீரன்.  அறிவியல் என்ற பிரிவில்  ஆறாம் அழிவு, புடவி (பிரபஞ்சம்), உயிர்க்கோளம், பெருங்கடல், கடற்கரை, மணல், தண்ணீர், காற்று, ஒளியும் ஒலியும், காடு  ஆகிய 10 தலைப்புகளும்  அரசியல் பிரிவில்  மனிதர், நுகர்வு, மக்கள்தொகைப் பெருக்கம், நிதி அரசியல், சூழல் நீதி, ஃபேஷன் சுற்றுச்சூழல், குப்பை, சுற்றுச்சூழல் அரசியல்  ஆகிய 8 தலைப்புகளும்  இந்நூலில் இடம்பெறுகின்றன. இவையும் இவற்றினுள் இடம்பெறும் உட்தலைப்புகளும் நூலின் தன்மையை நமக்கு வெளிக்காட்டிவிடுகின்றன.  ஆறாம் அறிவு அழிவாக மாறுவதை எச்சரிக்கை செய்கிறது.

        இந்து தமிழ் திசைநாளிதழின் உயிர் மூச்சுபகுதியில் சனிதோறும்  இயற்கை 24x7’ என்ற தலைப்பில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். நக்கீரனின் நீர் எழுத்து, சூழலும் சாதியும், தமிழ் ஒரு சூழலியல் மொழி  போன்ற நூல் வரிசையில் இயற்கை 24x7க்கும் இடமுண்டு. ‘Save Nature’ என்ற போலிச் சூழலியல் முழக்கத்தை ஒரு சிறுமி தகர்ப்பதைச் சுட்டி நூல் தொடங்குகிறது. சூழல் அறத்தைப் பேசுவதால் அதனுள் இருக்கும் மோசடிகளையும் கற்பிதங்களையும் பேசாமல் இருக்க முடியாது. இதன்மூலம் சூழலியர் என்கிற போர்வையில் உலவும் பலரும் உள்பட கார்ப்பரேட்டுகளும் அரச முகவர்களும் அம்பலப்படுத்தப்படுகின்றன. இது சிலருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடும்; வேறு வழியில்லை.

              அரசு மற்றும் பெருவணிக நிறுவனங்களின் சேஃப்டி வால்வ்ஆகப் பணியாற்றிய ‘சூழலியலின் அன்னா ஹசாரே’ என்று அப்துல்கலாமை மிகச்சரியாக கணிக்கிறார். கடுகு, கத்தரிக்காய் போன்று மனிதர்களை மரபணு மாற்றம் செய்து குறுமனிதர்களை உருவாக்கப் பரிந்துரைக்கும் அறிவியல் பரிந்துரை ஒன்றைக் குறிப்பிட்டு இயற்கையின் குரலை செவிமெடுக்கவும் வலியுறுத்துகிறார். இயற்கை, காடு எல்லாம் வளர்ச்சிக்குத் தடை என்று பொதுப்புத்தியில் பதியவைக்க பெருமுயற்சிகள் நடைபெறுகின்றன. இவ்வாறான எழுத்துகள் அவற்றுடன் போராடுகின்றன.

        ஜேம்ஸ் லவ்லாக்கின் கையா: உலகே ஓர் உயிர்’, ரெய்ச்சல் கார்சனின்மௌன வசந்தம்’, ஜான் பெல்லமி ஃபாஸ்டரின்சூழலியல் புரட்சி’, பரிதியின் மாந்தர் கையில் பூவுலகு மேலும் பில் பிரையன், ஜாரெட் டயமண்ட் போன்றோரின் நூல்கள் என சூழலியல் நூல்களின் கருத்துகள் ஆங்காங்கே எடுத்துக்காட்டப்படுவதன் வாயிலாக புதிய வாசகர்களுக்கு இவற்றை மேலதிகமாக வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

        நக்கீரன் வழக்கம்போல் இந்நூலிலும் பல்வேறு புதிய கலைச் சொல்லாக்கங்களை உருவாக்கியிருக்கிறார். புடவி (பிரபஞ்சம்), மிதவி (பிளாங்டன்), பொழி (கழிமுகம்), நளிரி (.சி.எந்திரம்), நளிர் அரங்கம் (.சி.ஹால்)  ஆகியவை அவற்றுள் சில. தமிழ் இலக்கியங்களில்ருந்து சிலவற்றை மீட்டெடுக்கிறார். (.கா) எக்கி (பரிபாடல்), எக்கர் - ஆழிக்கிணறு (நற்றிணை), நீரகம் (கொன்றை வேந்தன்). ‘மறைநீர்போன்று இவையும் தமிழ் வழக்கில் நிலைக்கட்டும்.

       சுமார் 28% உயிர்வளியைத் தரும் அமேசான் அல்லது மழைக்காடுகளைஉலகின் நுரையீரல்என்கிறோம். சுமார் 70% உயிர்வளி கொடுக்கும்  புவியின் கருப்பைகடலை மறந்து குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டோம்.  நீலம் இல்லையேல், பச்சை இல்லை”, என்ற சில்வியா எர்ல் கருத்தை வெகு  இயல்பாக அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.

      கடற்கரை மணல் திட்டுகள், மணற்குன்றுகள், மணல் மேடுகள் நிலத்தடி நன்னீர் தடுப்புச் சுவராக மாறி கடற்கரைக்கு நன்னீரை வழங்குகின்றன. இந்த இயற்கைச் செயல்பாட்டை இறைவனின் கருணை என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை அழித்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் வணிகத்திற்கு (RO) அடிமையாகி விட்டோம்.

      நுண்மிகளில் தீ நுண்மி, நல் நுண்மி என்பதெல்லாம் மனித மையப்பட்ட பார்வை. இயற்கையை இவ்வாறெல்லாம் அணுக இயலாது. இதைப்போலவே சூழல் மாசுகளுக்கு மனிதனை மட்டும் பொறுப்பாக்கி கார்ப்பரேட் மற்றும் அரசுகளை விடுவிக்கும் முயற்சிகளில் ஃபேஷன் சூழலியர்கள் ஈடுபடுகின்றனர். ஃபோர்டு நிறுவனம் போன்ற பெருநிறுவனங்கள் நிதி வழங்குகின்றன என்பதைஃபண்டு இலையேல், தொண்டு இல்லை”, என்று எளிமையாக விளங்க வைக்கிறது நூல்.

        மரபு சார்ந்த சூழலியர் பயிரினம், விலங்கினம் மட்டிற்காக போராடுபவர்கள்; மரபுசாரா சூழலியர் அழிவிலிருக்கும் விளிம்புநிலை மக்களுக்காகவும் போராடுபவர்கள் என்பதையும் தற்போது மூன்றாவது வகையினராக ஃபேஷன் சுற்றுச்சூழல் சேவையாளர்கள் அதிகமாக உள்ளனர். ‘தூய்மை இந்தியாவினர் இவ்வகையைச் சேர்ந்தவர்கள். காமன் மனிதரை பொறுப்பாக்கும் இவர்கள் கார்ப்பரேட் மனிதர்களைக் கண்டு கொள்ள மாட்டார். எனவே இவர்கள் யாருக்காக இயங்குபவர்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மரம் நடவும், விதைப்பந்து வீசவும், மிதிவண்டியில் செல்லவும், மின்சாரத்தை அணைக்கவும், மழைநீரை சேமிக்கவும் சொல்லும் இவர்கள் கார்ப்பரேட் குப்பைக்காடாக இந்தியா போன்ற நாடுகள் மாற்றப்படுவது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். இந்த ஃபேஷன் வருமானம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளதை நக்கீரன் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

        சுற்றுச்சூழல் கானகவியல் (Ecological Forestry), பசுமைப் பொருளியல் (Green Economics), சூழல் சாதியம் (Eco Castism), சார்பற்ற சுற்றுச்சூழலியம் (Secular Environmentalism)  போன்ற யாரும் கண்டுகொள்ளாத புலங்களைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது.  உலக வங்கி, பன்னாட்டு நிதியம் எனும் அமெரிக்க வட்டிக்கடைகள் பற்றிய கூர்மையான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. உலகவங்கி புகுந்த நாடும் ஐஎம்எஃப் புகுந்த நாடும் உருப்பட்ட வரலாறு இல்லை என்பதை அழுத்தத்திருத்தமாகப் பதிவு செய்கிறது.

       காற்று மாசு அமில மழைக்குக் காரணமாகிறது. ஸ்ட்ரான்சியம் 90 என்ற கதிரியக்கத் தனிமம் மண்ணில் நுழைந்து, நெல், கோதுமை போன்ற உணவுப் பயிரிகள் வழியே நம் உடலில்  ஊடுருவித் தங்குகிறது. இது நமக்கு புற்றுநோய் எனும் வாடகையைத் தருகிறது. இந்த வாடகை யாருக்கு வேண்டும்? என்கிற உயிர்ப்பான கேள்வியை நம்முன் வைக்கிறது இந்த நூல்.

           இயற்கை எனும் கணினி ஐந்து முறை டெலிட் பொத்தானை அமுக்கி இவ்வுலகை முழுமையாக அழித்ததை நினைவூட்டி நம்மை நூல் எச்சரிக்கிறது. வளிமண்டல வள்ளல், காடு ஒரு கார்பன் வங்கி என்ற தலைப்புகள் இயற்கையின் முதன்மையை விளக்குகின்றன. இவற்றுடன் கற்பிதங்களையும் பொய்மைகளை அகற்றப்பட வேண்டிய தேவையும் வலியுறுத்தப்படுகிறது. சூழலியல் குறித்த உலகின் மீது திணிக்கப்பட்ட கற்பிதங்களையும் மாயைகளையும் பல களங்களிலிருந்து தகர்க்கும் வேலையை நக்கீரன் சிறப்பாக தொடங்கியிருக்கிறார். இத்தகைய அறவியல்-அரசியல் பார்வை சூழலியல் போலிகளை அம்பலப்படுத்தவும் மக்களை விழிப்புணர்வூட்டவும் பெரிதும் உதவும்.

 

நூல் குறிப்புகள்:

 

இயற்கை 24X7 – நக்கீரன்

பக். 140, விலை: ரூ.170

முதல் பதிப்பு:  அக்டோபர் 2023

வெளியீடு:

காடோடி பதிப்பகம்,

6, வி.கே.என். நகர், நன்னிலம் – 610105,

திருவாரூர்மாவட்டம்.

அலைபேசி:  8072730977