கழிவுகளோடு சேர்த்துச் சூழலையும் புதைக்கும் முயற்சி!
மு.சிவகுருநாதன்
”திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கிலுள்ள குப்பைகளை துவாக்குடிக் கல்குவாரிப் பள்ளங்களில் இட்டு மூடினால் யாருக்கும் பாதிப்பு வராது”, என்று தவெக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் திமுக பிரமுகருமான ஒருவர் கூறியது பரவலான விமர்சனத்தை எதிர்கொண்டது. இதில் வியப்படைய ஒன்றுமில்லை. பாமர மக்களைப் போல மெத்தப் படித்தவர்களும் இவ்வாறான உடனடித் தீர்வைத்தான் நாடுகின்றனர். தம்மளவில் குப்பைகளை எரிப்பது அல்லது குழிகளிலிட்டு மூடிமறைப்பது போன்ற வழிகளையே அவர்கள் கையாள்கின்றனர். மக்களின் பொதுப்புத்தியில் இவ்வாறான சிந்தனைகளே நிறைந்துள்ளன. இவற்றைக் குற்றம் காண்பதிலும் விமர்சிப்பதிலும் பொருளில்லை. ஆனால் அரசுகளும் சூழலியல் சாராத அறிவியல் அறிஞர்களும் இவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே இங்கு முதன்மையானதாகிறது.
திடக்கழிவுகளைக் கையாள்வது அரசுக்கு பெரும் இடராக உள்ளது. ஒவ்வொரு சிறு, பெரு நகரங்களிலும் குப்பைமேடுகள் உள்ளன. அப்பகுதி மக்கள் இதனால் கடும் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். இவற்றை அகற்ற தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு அவை நிறைவேற்றாமல் கோடிக்கணக்கில் பண விரயமான செய்திகளும் உண்டு. எனவே அரசு நிர்வாகத்திற்கும் இம்மாதிரியான திட்டங்கள் தேவைப்படுகின்றன. அரசுகள் முடிந்தால் வெளிப்படையாகவும் முடியாவிட்டால் மறைமுகமாகவும் இவற்றை அமலாக்க முனைகின்றன.
பொதுவாக கழிவுகளை புதைப்பதும் எரிப்பதும் தீங்கானது. எவற்றை எரிப்பது அல்லது புதைப்பது என்பதில் தெளிவான சிந்தனை தேவை. எரிப்பது எப்போதும் சூழலுக்குக் கேடு தரக்கூடியது. நோய்த்தோற்றக்கூடிய கழிவுகளை காற்றில் வெளிப்படையாக எரிக்காமல் பாதுகாப்பான முறையில் எரிக்கலாம். மட்கும், மட்காத கழிவுகளைச் சேர்த்துப் புதைப்பது அபாயகரமானது. இவற்றைப் பிரித்து மட்காத கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்துவதே உகந்த தீர்வாகும். இவற்றைத் தொடக்க நிலையிலிலேயே தரம் பிரிக்காமல் ஒன்றாகக் கொட்டி பலகாலம் கழித்து பிரிக்க முயற்சிப்பது சரியான முறையல்ல. இவற்றில் நெகிழி போன்ற மட்காதப் பொருட்களின் துகள்கள் நிறைந்திருக்கும். இவை நிலத்தை மாசுபடுத்துமே தவிர உரமாக வாய்ப்பில்லை.
மேலும் மட்கும் குப்பைகளைப் புதைக்குமிடத்தில் அவை மட்குவதற்கு ஏற்ற நுண்ணுயிரிகள் இருக்க வேண்டும். பல மீட்டர் ஆழமுள்ள கல்குவாரிப் பள்ளங்களில் இது சாத்தியமில்லாத ஒன்று என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் உடனடி, குறுக்கு வழியாக இருக்குமே தவிர தொலைநோக்கில் சூழலையும் மனிதர்களையும் பாதிக்கும் பேரிடராக மாறக்கூடிய அபாயம் உள்ளது.
கைவிடப்பட்ட சுரங்கங்களில் நீருடன் அமிலத்தன்மை, காரத்தன்மை, உலோகப் பொருள்கள் ஆகியவற்றின் கழிவுகள் உண்டாகும் வாய்ப்புகள் மிகுதி. இத்தகைய மாசுபாட்டால் நீரும் நிலமும் அதிகமாக பாதிப்படைகிறது. கந்தகம் போன்ற கனிமங்களைக் கொண்ட பாறைகளுடன் மழைநீர், நிலத்தடி நீர் ஆகியன சேர்வதால் அமில நீர் உருவாகி கந்தக அமிலம் கிடைக்கும். இந்த அமிலம் பாறைகளிலுள்ள உலோகங்களை அரிக்கும். இந்த அரித்தலால் நச்சுத்தன்மைமிக்க நீர்மங்கள் உருவாகும் நிலையும் ஏற்படும். இவை நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர், மண் போன்றவற்றுடன் கலக்கும்போது, மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் பெருந்தீங்கு விளையும். அமில சுரங்க நீர் (Acid Mine Drainage - AMD) என்பது நிலக்கரி அல்லது உலோகச் சுரங்கங்களில் இருந்து வெளியேறும் அதிக அமிலத்தன்மையும் கன உலோகங்களும் நிறைந்த நச்சுத் தன்மை கொண்ட நீர் ஆகும். இது சுரங்கத்தொழில் மூலம் ஏற்படும் மிகக் கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினையாகும்.
சுரங்கம் தோண்டும்போது பூமிக்கடியில் இருக்கும் பைரைட் (Pyrite) தாதுக்கள் கொண்ட பாறைகள் வெளியில் வருகின்றன. (எ.கா.: இரும்பு சல்பைடு) இந்தப் பாறைகள் காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் மழைநீர் அல்லது நிலத்தடி நீருடன் வேதிவினை புரிந்து கந்தக அமிலத்தைத் (Sulfuric acid) தருகின்றன. இந்த அமிலம் தன்னைச் சுற்றியுள்ள பாறைகளிலிருந்து தாமிரம், காரீயம், ஆர்சனிக் மற்றும் துத்தநாகம் போன்ற அபாயகரமான கன உலோகங்களைக் கரைத்துக் கொள்கிறது. மழைநீரும் குப்பைகளும் இணைவதால் வெளியாகும் கழிவுநீர் நிலத்தடி நீரை மாசாக்கி இயற்கையான குடிநீர் ஆதாரங்களைப் பாழாக்கும்.
இந்த நச்சுத் தனமையுடைய நீர் ஆறுகள் மற்றும் ஏரிகளில் கலப்பதால் நீரின் pH அளவு மிகக் கடுமையாகக் குறைந்து அதன் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. இதனால் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவில் மடிகின்றன. அருகிலுள்ள விளைநிலங்கள் அமிலத் தன்மை மிகுந்து வேளாண்மை செய்ய முடியாதபடி மண் வளம் குறைகிறது. இந்த அமில நீர் தூய நீருடன் கலக்கும்போது, அதில் கரைந்துள்ள இரும்புச்சத்து பிரிந்து, நீர்நிலைகளின் அடிப்பகுதியில் ஆரஞ்சு அல்லது மஞ்சள் வண்ணப் படிவாக மாறுகிறது. இப்படலம் நீர்வாழ் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையைத் தடுக்கிறது. மேலும் நிலத்தடி நீரில் இந்த நச்சுக்கசிவு ஊடுருவுவதால் குடிநீர் ஆதாரங்கள் சீர்கெட்டு மனிதர்களுக்குப் பலவகையான நோய்களை உண்டாக்குகிறது.
பொதுவாக அமில சுரங்க நீரை மேலாண்மை செய்ய இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் ஒன்று: செயல்பாட்டு சுத்திகரிப்பு (Active Treatment). இம்முறையில் சுண்ணாம்பு (Lime) அல்லது சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH) போன்ற காரப் பொருட்களை அமில நீரில் தொடர்ந்து கலந்து அதன் அமிலத்தன்மை நடுநிலையாக்கப்படுகிறது. இது அதிகம் செலவாகும் நடைமுறையாகும். மற்றொன்று செயலற்ற சுத்திகரிப்பு (Passive Treatment) எனப்படுகிறது. செயற்கையான சதுப்பு நிலங்களை (Wetlands) உருவாக்கி அங்குள்ள இயற்கையான பாக்டீரியா மற்றும் தாவரங்கள் மூலம் உலோகங்களை உறிஞ்ச வைத்து நீரைத் தூய்மைப்படுத்தும் முறையாகும். இது நீண்டகாலத் திட்டமாகும். ஆனால் கைவிடப்பட்ட எந்தச் சுரங்கத்திலும் அல்லது கல் குவாரிகளிலும் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை நிலவரமாகும்.
கைவிடப்பட்ட சுரங்கங்களுக்குள் காற்று புகாதவாறு களிமண் அல்லது நெகிழி உறைகளைக் கொண்டு மூடுதல் மற்றும் அப்பகுதியில் நீரைத் தேங்கவிடாமல் தொடர்ந்து வெளியேற்றுதல். சுரங்கத் தொழிலில் முறையான சுழிய வெளியேற்ற அமைப்பு (Zero Liquid Discharge) மற்றும் நீர் சுத்திகரிப்பு முறைகளைக் கையாள்வதன் மூலம் இந்த சுற்றுச்சூழல் பேரழிவை ஓரளவேனும் தடுக்க முடியும்.
முறையான பொறியியல் வடிவமைப்புடன் (Engineered Landfill) சுரங்கங்களை குப்பைக் கிடங்குகளாக மாற்றி, குப்பையிலிருந்து வெளிவரும் திரவக் கழிவுகள் (Leachate) மண்ணின் வழியாக நிலத்தடி நீரில் கலக்கும் அபாயம் குறையும் என்று சொல்லப்படுகிறது. இதுவும் ஆபத்தான ஒன்றாகவே பார்க்க வேண்டியுள்ளது.
குப்பைகளில் தரம் பிரிக்கப்படாத மருத்துவக் கழிவுகள், நெகிழி மற்றும் நச்சு பொருள்கள் இருப்பின் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை அவதானிக்கலாம். துர்நாற்றம், கொசு உற்பத்தி, மீத்தேன் வாயு உற்பத்தி போன்றவையும் தீ மற்றும் வெடி விபத்து அபாயங்களையும் உடனடியாக எதிர்கொள்ள நேரிடலாம். இதனால் மனிதர்களுக்கு புற்றுநோய், சுவாச நோய்கள், தோல் நோய்கள் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. அருகிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் சீர்குலையும்.
கைவிடப்பட்ட கல்குவாரிகளை அரசு முறையாக மூடிவைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின்படி பராமரிக்க வேண்டும். சுரங்கங்களும் கல்குவாரிகளும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளின் அடிப்படையில் நிரப்பி பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். சில இடங்களில் கைவிடப்பட்ட குவாரிகளில் தண்ணீர் தேக்கப்படுவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. இதை சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள மேலாண்மை நோக்கில் பயன்படுத்தலாம். இருப்பினும் அவ்விடத்தின் தன்மையை உரிய ஆய்வு செய்த பிறகே இதைச் செயல்படுத்த வேண்டும்.
குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சி செய்வதும் எஞ்சிய கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதுமே ஒரே தீர்வாகும். குப்பையிலிருந்து ஆற்றல் (Waste ® Energy) தயாரிக்கும் திட்டங்களும் சிறந்த மாற்று வழியாக அமையும். குப்பைகளை அறிவியல் முறைகளின் கீழ் மின் மற்றும் வெப்ப ஆற்றலாக மாற்றுவது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மற்றும் நிலைத்த தீர்வாகவும் அமையக்கூடும்.
கைவிடப்பட்ட கல்குவாரிகளில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் இடங்களாக பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அறிவியல் அடிப்படையிலான நீண்டகால தீர்வுகளை நோக்கி அரசுகள் நகர்வது காலத்தின் கட்டாயமாகும். ஆனால் இவை நடக்கும் என நம்பக்கூடிய முன்மாதிரிகள் நம்மிடம் இல்லை.
சாதாரண திடக்கழ்வுகளால் இவ்வளவு பாதிப்பு என்கிறபோது அணுக்கழிவுகள் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் (Kolar Gold Fields - KGF) உள்ள கைவிடப்பட்ட சுரங்கங்களில் கூடங்குளம் அணுக்கழிவுகளை (Nuclear Waste) ஆழத்தில் நிரந்தரமாகப் புதைக்க இந்திய ஒன்றிய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்தது. இத்திட்டம், உள்ளூர் மக்களின் மற்றும் கர்நாடக அரசியல் கட்சிகளின் தீவிர எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது. ஆனால் அணுக்கழிவுகளுக்கான நீண்டகால புவியியல் சேமிப்பு இடமாக கோலார் சுரங்க, அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் ரோஹிண்டன் நரிமன் நவம்பர் 21, 2012 அன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த பிறகு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் விளைவாக இந்திய அணுசக்தி கழகம் (NPCIL) இது உண்மையில்லையென்று மறுத்தது.
தற்போது இந்தியாவில் அணுக்கழிவு மேலாண்மை மற்றும் சேமிப்பு மையங்கள் பெரும்பாலும் கூடங்குளம் உள்ளிட்ட அந்தந்த அணுமின் நிலைய வளாகங்களுக்குள்ளேயே அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அணுக்கதிர் வீச்சு பல்லாயிரம் ஆண்டுகள் நீடிக்கும் நிலையில் பூமிக்கடியில் அல்லது கடலுக்கடியில் காங்க்ரீட் அல்லது உலோகப் பெட்டகங்களில் சேமிப்பதும் பேராபத்தை விளைவிக்கும்.
மத்தியப்பிரதேசம் போபாலில் டிசம்பர் 3, 1984 அன்று யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து மெத்தில் ஐசோ சயனேட் (MIC) வாயு கசிந்து பல்லாயிரம் பேர் மாண்டனர். அக்கழிவுகளை சுமார் 40 ஆண்டுகள் கழித்து 2025இல் முழுமையாக அகற்றிவிட்டதாக கூறுவதும் அபத்தமே. பேரழிவுக் கழிவுகள் இன்னும் அங்கேயே உள்ளன. இதைப்போல கொடைக்கானலில் செயல்பட்டு வந்த தெர்மாமீட்டர் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் தொழிற்சாலை 2001இல் மூடப்பட்டது. சுமார் 20 டன் பாதரசக் கழிவுகளை முறையாக அகற்ற முடியவில்லை என தொழிற்சாலை நிர்வாகமே ஒப்புக்கொண்டது. இந்த 20 டன்னில் சுமார் 1.3 டன் கழிவுகள் கொடைக்கானல் மலைக் காடுகளில் கொட்டப்பட்டன. மீதமிருக்கும் கழிவுகள் இன்றுவரை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அபாயகரமான கழிவுகள் தொடர்பாக மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை அரசுகள் எடுத்தால் மட்டுமே நமது எதிர்கால சந்ததிகள் நோயின்றி வாழமுடியும்.
நன்றி: பொம்மி - சிறுவர் மாத இதழ் ஆகஸ்ட் 2026






