தாண்டவபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாண்டவபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 17, 2012

பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்

பக்தி இயக்கம் – பக்தி இலக்கியம் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்

                                                                                –மு.சிவகுருநாதன்


(14.05.2012 அன்று திருவாருரில் நடைபெற்ற சோலைசுந்தரபெருமாளின் ‘தாண்டவபுரம்’ நாவல் கருத்தரங்கம் குறித்த பதிவு.)

 









 
 
     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் (தமுஎகச) சார்பில் 14.05.2012 அன்று திருவாருர் காமராசர் திருமண அரங்கில் சோலை சுந்தரபெருமாளின் ‘தாண்டவபுரம்’ நாவல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. தமுஎகச மாவட்டத்தலைவர் கு.வேதரத்தினம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமுஎகச கிளைச்செயலாளர் கவிஞர் மனிதநேயன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    தமுஎகச மாவட்டச்செயலாளர் இரா.தாமோதரன் மூன்று கருத்தரங்கச் சொற்பொழிவாளர்கள் (ச.தமிழ்ச்செல்வன், இரா.காமராசு, சி.அறிவுறுவோன்) பற்றியும் சோலையின் தாண்டவபுரம் நாவல் குறித்தும் அறிமுகம் செய்தார். செந்நெல், தப்பாட்டம், பெருந்திணை, மரக்கால் நாவல்கள் வரிசையில் தாண்டவபுரம் நாவல்சிறப்பாக வெளிவந்துள்ளதை குறிப்பிட்டுப் பேசிய அவர் இந்நாவல் எவரையும் எம்மதத்தையும் இழிவு செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
    தமுஎகச மாநிலக்குழுவைச் சேர்ந்த சு.தியாகராஜன் சில கேள்விகளை முன்வைத்தார். பன்னாட்டு கம்பெனிகளில் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள், சங்கம்  வைத்துக்கொள்ளும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. அதைப்பற்றியெல்லாம் எழுதாமல் சைவமதத்தைப் பற்றியும் திருஞானசம்மந்தர் பற்றியும் நாவல் எழுதவேண்டிய அவசியமென்ன?  இவற்றை எப்படி முற்போக்கு என்று சொல்வது? திருஞானசம்மந்தர் மனோன்மணி உறவுச்சித்தரிப்புகள் எனக்கு ஆபாசமாகத் தொன்றுகிறது. நமது எதிரிகள் நாளை பகத்சிங் பற்றிகூடஇவ்வாறு ஒரு அவதூறான புனைவை உற்பத்தி செய்தால் நாம் என்ன செய்வது? என்று வினாக்கள் எழுப்பி இதற்கு கருத்தரங்க உரையாளர்கள் பதில் சொல்ல வேண்டுமென்ற கோரிக்கை வைத்து அரங்கில் அதிர்ச்சி அலைகளை எற்படுத்தினார்.

    பின்னர் பேசிய தமுஎகச  மாநிலச் செயற்குழுவைச் சேர்ந்த கவிஞர் களப்பிரன் கடந்த இரண்டு நாட்களாக டி.செல்வராஜின் தோல், சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் ஆகிய நாவல்கள் பற்றிய கூட்டங்கள் நடைபெற்றன. இன்று சோலை சுந்தரபெருமாளின் தாண்டவபுரம் நாவல் குறித்த இக்கருத்தங்கம் நடைபெறுகிறது. வேறு எந்த அமைப்பிலும் இவ்வளவு எழுத்தாளர்கள் இருக்கவாய்ப்பில்லை என்றார்.

அவர்மேலும்பேசியதாவது: 
 
   இந்துத்துவஅமைப்புகள், சைவமடங்கள் ஆகியவற்றின் எதிர்ப்பிற்குப் பின்னால் நாவல் விற்பனை அதிகரித்துள்ளதோடு போதிய கவனிப்பையும் பெற்றுள்ளது. தமிழையும் சைவத்தையும் காப்பாற்றும் இந்நாவல் இந்துத்துவத்தின் பக்கம் சாயும் அபாயம் இருப்பதையும் நாம் உணரவேண்டும்.



   பின்னர் கருத்தரங்க உரையாற்றவந்த ஆய்வாளர் சி.அறிவுறுவோன், பரதக்கலைக்கும் சைவமதத்திற்கும் உள்ள தொடர்பை இந்நாவல் பேசுகிறது. எனது ஆசிரியரான ந.கோபாலய்யர் எழுதிய  தமிழ்நாட்டு பிராமணர்கள் என்ற நூலில் சில விஷயங்கள் காணக் கிடைக்கின்றன. தமிழ் அரசர்கள் தில்லை வாழ் அந்தணர்களிடம் முடிசூட்ட வேண்டுகின்றனர். அதற்கு அவர்கள் மறுத்து விடுகின்றனர். மதுரையில் தமிழ்ச்சங்கம் உருவான பின்னணியை இதன் மூலம் நாம் தெளிவாக உணரமுடியும்.

    சிவலிங்கவழிபாடு, தேவதாசிமுறை ஆகியவற்றிற்குள்ள உறவை ஆய்வாளர் பெங்களூர் குணா தனது நூலில் குறிப்பிடுகிறார். இவரது ஆய்வை பலர் எற்பதில்லை. சிவலிங்க வழிபாடு சிந்து சமவெளியில் இருந்ததை ஆய்வாளர் பூர்ணசந்திரஜீவா ‘சிந்துவெளியில்முந்துதமிழ்’ என்ற தனது நூலில் தெளிவுபடுத்துகிறார்.

     ராஜீய உறவுகளுக்கு பொதுமொழி அன்றும் இன்றும் அவசியமாக இருக்கிறது. பிராகிருதம், பாலி, தமிழ் ஆகியவற்றிற்கு எதிராக இங்கு பிராமணமொழியான சமஸ்கிருதம் பொதுமொழியாக கட்டமைக்கப்பட்ட்து. வடமொழி vs தமிழ், வருணம் vs தமிழ், சாதி vs தமிழ் ஆகிய முரண் எதிர்வுகளுக்குள் அன்றைய தமிழ்ச்சமூகம் போராடியிருக்கிறது.  இங்குதான்  நான்மறை ஓதி (ரிக், யஜூர், சாமம், அதர்வணம்ஆகியவைஅல்ல.) சிவலிங்க வழிபாட்டை திருஞானசம்பந்தர் மீட்டுருவாக்கம் செய்கிறார்.

     பழங்காலத்தில் மீமாம்சம் என்றொரு பிரிவு இருந்தது. இப்பிரிவு பெருங்கடவுட்கொள்கையை எதிர்த்து உருவானதாகும். இவர்கள் சிறு தெய்வவழிபாட்டை ஆதரித்தவர்கள். அக்காலத்தில் இவர்களே கடவுள் மறுப்பாளர்கள்.

அக்காலத்தில் திணைச்சமூகமே தொல்குடி பொதுவுடமைச் சமூகமாக இருந்தது. இது ஆய்வாளர்கள் பலர் ஒப்புக்கொண்ட கருத்தாகும். அந்த வகையில் இந்நாவல் ஒரு சிறப்பான வரவு என்றார்.

     இரா.தாமோதரன் தனது அறிமுக உரையில் விவசாயி தோற்றம் உடைய சி.அறிவுறுவோன் என்று சொல்லி அவரது தொடக்ககால இயக்கப்பின்னணி குறித்து விரிவாக விளக்கினார். தோற்றம் எப்படியிருப்பினும் புறப்பொருள்வெண்பாமாலை, காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டு என நீண்ட இவரது பேச்சு ஒரு தேர்ந்த தமிழ்ப் பேராசிரியரை ஒத்திருந்தது.

    அடுத்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில பொதுச்செயலாளர் முனைவர் இரா.காமராசு பேசினார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

     மணிக்கொடி எழுத்தாளர்கள் மற்றும் தி.ஜா. போன்றோர் மேட்டுக்குடி மொழியை தஞ்சை மொழியாக கட்டமைத்திருந்த நிலையில் அடித்தளமக்களின் வாழ்க்கையைமொழியை தங்களது எழுத்துகளில் வடித்தவர்களில் சி.எம்.முத்து (இடதுசாரி இயக்கத்தில் இல்லாவிட்டாலும் கூட) ,  சோலைசுந்தரபெருமாள் ஆகியோர் முக்கியமானவர்கள்.

     இந்நாவலில் தான் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் பார்வைகளாக கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்தார்.

01.நீண்டமுன்னுரை, பின்னட்டைக்குறிப்பு, பாரதி புத்தகாலய விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்ட வாசகங்கள் போன்றவை இந்நூல்  படைப்பு என்பதைவிட ஆய்வு என்பதான தோற்றத்தை அளித்ததை உணரமுடிந்தது. படைப்பில் உருவாக்கப்படும் புனைவுகள் ஆய்வுகள் வழி உருவாவதில்லை. இங்கு உருவான சர்ச்சைகளுக்கும் இதுவும் ஒரு காரணமாகத் தோன்றுகிறது.

02.சோலையின் முந்தைய நாவல்களினின்று வேறுபட்ட மொழிநடை, பக்கங்கள் அதிகம். இருப்பினும்  இந்நாவல் திணைச் சமூகப்பண்பாட்டு அடையாளங்களைச் செம்மையாகப் பதிவு செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

03.சமணத்தை எதிர்த்து சைவத்தை தூக்கிப்பிடிக்கும் போக்கு.சங்கரமடம், சைவமடம் ஆகியவற்றிற்கு இடையில் எவ்வித வேறுபாடுகளும் இல்லை. பெருஞ்சமயத்தை பின்பற்றி நிற்பது வெகுமக்கள் மரபு இல்லை.  கடவுள், அரசன் ஆதிக்கம் சார்ந்த பேரடையாளங்களின் திசைவழியே மரபு-பழமை பற்றிய புரிதல்களையும் கவனிக்காமல் இருக்கக்கூடாது.

04.இந்துத்துவ ஆட்களின் மிரட்டல்களுக்கு சோலை பயப்படத் தேவையில்லை. அவருக்கு இடதுசாரி இயக்கங்கள், அமைப்புகள் என்றும் பாதுகாப்பு அரணாக துணை நிற்கும்.

   இறுதியாக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கருத்தரங்க நிறைவுரையாற்றினார்.  அந்த உரையின் சில பகுதிகள் கீழே தரப்படுகிறது.

    மறுவாசிப்பு  இடதுசாரிகள்காலங்காலமாக செய்து வருவதுதான். அண்ணா கம்பரசம் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஜீவா கம்பராமாயணப் பெருமைகளை தமிழகமெங்கும் பரப்பினார். சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழிலக்கியங்களை நா.வானமாமலை, கே.முத்தையா போன்றோர் மறுவாசிப்பு செய்ததன் தொடர்ச்சியாக சோலை சுந்தரபெருமாள் இந்த  நாவலில் செய்துள்ளார்.

     இந்நாவலை எதிர்ப்பவர்கள் இந்துமதத்தை, திருஞானசம்பந்தரை இழிவுபடுத்துவதாகச் சொன்னாலும் உண்மை அதுவல்ல. சோலை தன் நாவலில் திருஞானசம்பந்தரை பார்ப்பனரல்லாதவர் என்று சொன்னதே இவர்கள் எதிர்ப்பிற்கு உண்மையான காரணம். மதுரை  ஆதீனமாக  நித்தியானந்தா  நியமன  எதிர்ப்பிற்கும்  சாதிதான் காரணம்.

      ஆய்விற்கு முழு உண்மை வேண்டும். புனைவுகளுக்கு நம்பத்தகுந்த உண்மைகளே போதுமானவை. சங்ககாலத்தில் இறுக்கமான மதநிறுவனங்கள் இருந்ததென்று சொல்லும்போது அதிகப்படியான தரவுகள் வேண்டும். இப்போதிருக்கிற தரவுகள் போதாது.  பக்தி இயக்கம், பக்தி இலக்கியம் குறித்து முறையான  – விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

     சைவம் முற்போக்கு என்று சொல்லும் போது இவற்றிற்கு முன்னால் பின்னால்உள்ள விஷயங்களையும் நாம் பேசியாக வேண்டும். முற்போக்கு என்பதற்கு இறுதியான வரையறை அளிக்கமுடியாது. இது காலந்தோறும் மாறுபடக் கூடியது.

சோலையின் வழக்கமான மொழிநடை இதில் மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் இடையிடையே ‘காண்டு’ என்பது போன்ற தற்கால வழக்குகளும் உள்ளன. இவையும் வேறு சிலவும் அடுத்த பதிப்பில் திருத்தம் பெற வேண்டும்.

     தென்மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட நாடார் இன மக்களுக்காகப் போராடி இயக்கம் கண்டவர் வைகுண்டசாமி. அவரைப் பற்றிய பாடத்தைப் பாடநூற்களில் சேர்க்கக் கோரியபோது அவரை மனிதனென்று சொல்லக்கூடாதென ஆதிக்க சக்திகள் எதிர்த்தன. அதைப்போல திருஞானசம்பந்தர் மனிதன் என்கிறபோதும் எதிர்ப்பு வருகிறது.

     காந்தி, அம்பேத்கர், பகத்சிங் போன்ற அனைவரையும் இன்று இந்துத்துவசக்திகள் கபளிகரம் செய்து வருகின்றன. இவர்களைப் பற்றி நிறைய அவதூறுகள் ஏற்கனவே பரப்ப்ப்பட்டுள்ளன. மேலும் அவதூறுப் படைப்புகள் வந்தால் கருத்து சுதந்திரம் என்ற நிலையில் தான் நாம் அவற்றை அணுகவேண்டும்.

      இந்தியாவில் சாதீயம் குறித்து அம்பேத்கர்,  இ.எம்.எஸ்.,  சுவிராஜெய்ஸ்வால்,  கெய்ல்ஓம்வெத் போன்றோர் பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ளனர். இவற்றின் பின்புலத்தில் பெரியார் செய்த கடவுள் குறித்தான ஆய்வுகளையும் நாம் தொடர வேண்டும்.

      தமுஎகசவில் அருணன் தனது நாவலில் ஒரு கருத்தைச் சொல்கிறார். அதற்கு மாறான கருத்தை சோலை தாண்டபுரத்தில் சொல்கிறார். இருவரையும் ஒரே மேடையில் வைத்து விவாதிக்க வேண்டும்.

      இந்நாவலில்சைவத்தைஉயர்த்திப்பிடிக்கும்போக்குஉள்ளது. இதுகுறித்துவிரிவானஆய்வுகள்செய்துஅடுத்தபதிப்பில் உரிய திருத்தம் பெறவேண்டும்.  இது எனது சொந்தக்கருத்து.  சங்கத்தின் கருத்தல்ல. சங்கம் எப்போதும் கருத்து சொல்லாது.

     சோலை மிரட்டல்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட பயப்படத் தேவையில்லை. தமுஎகச அவற்றை எதிர்கொள்ளும். அவை நீதிமன்ற வழக்காயினும் நேரடித்தாக்குதலானாலும் தமுஎகச எப்போதும் சோலையுடனிருக்கும்.

    நிறைவாக ஒரு சில வார்த்தைகள் கூறுமாறு சோலை மேடைக்கு அழைக்கப்பட்டார். அவர் தான் தொலைபேசியில் மிரட்டப்பட்ட நிகழ்வை எடுத்துரைத்தார். இன்னும் ஆய்வுகள் செய்ய தன்னுடைய உடல்நலம் ஒத்துழைக்கவில்லை என்றார்.

     தான் இந்நாவலில் சைவமதத்தை ஒருபோதும் உயர்வாக சித்தரிக்கவில்லை என்றும் சொன்னார். எத்தகைய எதிர்ப்புகள் வந்தபோதும் ராஜராஜன் காலத்திய சைவ வரலாற்றைப் பேசும் எனது நாவல் வந்தே தீரும்என்றார் உறுதியாக.  வருகின்ற எனது அடுத்தநாவலான  ‘பால்கட்டு’ – விலும் என் முன்னோர்களின் கதையைத்தான் சொல்லியிருக்கிறேன். எனது பாட்டி சொன்ன பல கதைகள் இன்னும் எழுதப்படவில்லை என்றும் சொல்லி நிறைவு செய்தார்.

     நிறைவாக தமுஎகச மாவட்டப்பொருளாளர் இரா.உமாநாத் நன்றி கூறினார். இக்கருத்தங்கில் பேரா.சிவராமன், பேரா.தி.நடராசன், பேரா.கோ.காண்டீபன், கருக்கல் இதழாசிரியர் அம்ராபாண்டியன், எழுத்தாளர்உத்தமசோழன், அறிவியல் இயக்கம் சந்திரசேகரன், மு.சவுந்தர்ராஜன் மற்றும் தமுஎகச தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திங்கள், பிப்ரவரி 06, 2012

கருத்துரிமைக்கெதிராக சைவ-இந்துத்துவ வெறியர்கள்.


 கருத்துரிமைக்கெதிராக சைவ-இந்துத்துவ வெறியர்கள்.
                                                     
                                                        -மு.சிவகுருநாதன்
           

                                                       

      இப்போதெல்லாம் தலையணை கனத்தில் நாவல் எழுவது பேஷனாகிவிட்டது. நாவலாசிரியர் சோலை சுந்தரபெருமாள் எழுதிய சமீபத்திய நாவலான தாண்டவபுரம் 700 பக்கங்கள் கொண்ட பெரிய நாவல். இவரது நாவல்களில் இதுதான் பெரியது என்று எண்ணுகிறேன். இந்நாவலை சென்ற ஆண்டு அக்டோபர் 10 , 2011 அவரிடமிருந்து வாங்கினேன். இந்த மாதிரி பெரிய நாவல்கள் புரட்டிப் படிக்கவே பெருமலைப்பை உண்டுபண்ணுகின்றன.எனவே படிப்பதை ஒத்திவைத்துவிட்டேன். 


    இந்த நாவல் திருஞானசம்பந்தரையும் சைவமதத்தையும் இழிவுப் படுத்துகிறது என்று சொல்லி இந்நாவலை தடை செய்யவேண்டும், சோலை சுந்தரபெருமாளை கைது செய்யவேண்டும்,பாரதி புத்தகாலயம் மீதும் சோலை மீதும் வழக்கு தொடரவேண்டும் என்றெல்லாம் பல கோரிக்கைகளை இந்து மக்கள் கட்சியும் சைவ மடங்களும் எழுப்பி நூல் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் இறங்கியுள்ளன. தமிழக அரசியல்,தினமலர் உள்பட சில இதழ்கள் இவற்றிற்கு தேவைக்கதிகமான முக்கியத்துவம் அளிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

    நாவலைப் படித்துவிட்டு விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு தடை செய்யவேண்டும் என்று கூக்குரலிடுவது மிகவும் ஆபத்தானது. இந்த மதவெறிப் போக்கை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். 

    
     இந்த நாவலில் சைவ ஆதரவுக்கூறுகள் நிரம்ப  இருக்கின்றன. அவைதீக மதங்களான பவுத்த,சமண மதங்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறைந்து சைவமதத்தை உயர்த்திப்பிடிக்கும் போக்கு மிகுந்த இந்நாவலை சைவ -இந்துத்துவ வெறியர்கள் இப்படி அணுகுவது வியப்பாக உள்ளது. திருஞானசம்பந்தர் தேவதாசி  மனோன்மணியுடன் இல்வாழ்வு மேற்கொண்டார் என்பதுதான் அவர்களுக்கு இடைஞ்சலாக உள்ளதென்று கருதவேண்டியிருக்கிறது. இதை அவர்களும் உறுதிப்படித்தியுள்ளனர்.

    சோலையின் முந்தைய நாவலான மரக்காலில் இருந்த சைவத்தை பெரிதும் உயர்த்திப்பிடிக்கும் தன்மையை சஞ்சாரம்- 1   (மார்ச்-2008) இதழில் கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தேன். இந்த நாவல் குறித்தும் வேறொரு சமயத்தில் விரிவாக எழுத உத்தேசம். 

    சோலையின் மரக்கால், தாண்டவபுரம் ஆகிய எந்த நாவலாகட்டும் நம்முடைய விமர்சனம் இந்த நாவல்களின் தேவை மற்றும் அவற்றின் சித்தரிப்புகளில் ஊடாடும் சில சார்புத்தன்மைகள் குறித்ததாகும். கருத்துரிமைக்கெதிரான இந்து  மத வெறியர்களின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கெதிரானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. சோலையின் சைவத்தமிழ்ப்பற்று இந்த வெறியர்களின் தரப்பை நியாயப்படுத்துவதில் முடிந்துவிடக்கூடதென்பதுதான் நமது நியாயமான கவலை. இதனால்தான் இந்த சைவச் சார்புத்தன்மையை நாம் கடுமையாக விமர்சிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

    சோலையும் இந்த சைவ-இந்துத்துவ வெறியர்களும் வேறுபடும் புள்ளிகள் இருப்பதனால் நாம் சோலையின் ஆதரவுத்தரப்பில்  நின்று பேசவேண்டியிருக்கிறது. இந்த நூலிழை வேறுபாடு அறுந்துவிடும் அபாயம் எப்போதும் உண்டு. இந்த சைவத்தமிழ்ப்பற்று நாளடைவில் வேறு ஏதேனும் உருமாற்றம் அடைந்து முற்றிலும் அடித்தட்டு மக்களுக்கு எதிராகப் போய்விடக்கூடிய அபாயத்தையும் நாம் கவனத்தில் கொண்டாகவேண்டும். 
      

    ஜனநாயகத்தின்பால் அக்கறையுள்ள எவரும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இத்தகைய செயல்களை கண்டிக்காமல் இருக்கக்கூடாது. இந்திய அளவில் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் போன்றோரின் எழுத்துக்களுக்கு இன்றுவரை நீடிக்கும் தடை நமது நாட்டை உலக அரங்கில் இழிவுபடுத்துவதாக உள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பெரியார் பிறந்து வாழ்ந்த மண்ணில் மதவெறி தலையெடுக்க நாம் அனுமதிக்கக்கூடாது.

  
      இத்துடன் சோலைசுந்தரபெருமாள் 01..02.2012   அன்று பத்தரிக்கைகளுக்கு  அளித்த அறிக்கையை இணைத்துள்ளேன்.  
 அந்த அறிக்கை கீழே.



           சோலைசுந்தரபெருமாள் வெளியிட்ட அறிக்கை:

                  திருவாரூர்.                            நாள்: 01..02.2012

    
      ஜனவரி 23 ஆம் தேதி கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள பாரதி புத்தகாலயம் முன் கூடிய இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திடீரென பதிப்பகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள் என்றும் என்னுடைய 'தாண்டவபுரம்நாவலை அங்கேயே தீயிட்டுக் கொளுத்தினார்கள் என்று  'தமிழக அரசியல்' என்ற இதழின் செய்தியாளர் தெரிவித்தார். அப்போது, அது பற்றிய என்னுடைய  கருத்துக்களைக் கேட்டார். நான் சொன்னவற்றில் ஒரு கருத்தை மட்டும் வெளியிட்டு அவ்வமைப்பின் பொறுப்பாளர்கள் தெரிவித்தக் கருத்துக்களை விரிவாக வெளியிட்டுள்ளது அவ்விதழ்.

   அவ்வமைப்புகளின் கருத்தாவது,

1. சைவசமயக் குரவர்களின் ஒருவரான திருஞானசம்பந்தர் தேவதாசி பெண்ணான மனோன்மணியும் இகவாழ்வு கொண்டார்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.  இகவாழ்வினை நெருங்காமல் சிவனை போற்றிப் பாடியே தன்னுயிர் நீத்த திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலற்றை தவறாக திரித்து எழுதியுள்ளார், நாவலாசிரியர்இது சிவபக்தர்களை புண்படுத்தும் விதமாகவும் இந்து மதத்தை இழிவுபடுத்து விதமாகவும் உள்ளது.  

 2. சிவஅடியாராகஅவதாரக் கடவுளாராக மதிக்கப் பெறுபவரான திருஞானசம்பந்தரை 16 வயது வரையே வாழ்ந்தவரை தேவதாசிப் பெண்ணுடன்  இகவாழ்வைத் தொடக்கினார் என்று சொல்லப்பட்டு இருப்பது இந்துமதத்தையே இழிவுபடுத்திடும் செயல்என்று  கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

      நாவல் படைப்பின்  நோக்கம் யாரையும் இழிவு படுத்திடும் போக்கில் அமையவில்லை என்பதை வாசிப்பவர்களுக்கு எளிதில் புரிந்து விடும். மேலே குறிப்பிடப்பட்டவை அனைத்தும் மேலெழுந்த வாரியானஅல்லது திட்டமிட்டு என் படைப்பின் மீது அவதூறு செய்யும் நோக்கம் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. என்னுடைய படைப்புக்கு உந்து சக்தியாக இருந்தவை அருளாளர் திருஞானசம்பந்தரின் பாடல்கள் காட்டும் அகச்சான்றுகளும் அவர் வாழ்ந்தகால சமூக வரலாறு, பண்பாட்டுச் சான்றாதாரங்களும் ஆகும்.

    சிவபெருமானின்  தோற்றம் தொல்சமூகத்தில் இறுதிகட்டத்தில்வேளாண்சமூகம் வளர்ச்சிப் போக்கில் வளர்த்து எடுக்கப்பட்டது. அவருக்கு உரிய மொழி தமிழ் என்றே வரலாறு காட்டுகிறது. புராணங்கள், சிவபெருமான் தான் தமிழைப்படைத்தார் என்று சுட்டுகின்றன. சிவத்தையும் தமிழையும் உயர்த்திப்பிடித்து எதிராளிகளிடம் இருந்து தற்காத்துக் கொண்டதே பக்திஇயக்கம் - இலக்கியம் என்பது. இக்கருத்தே நாவல் முழுதும் விரவிக்கிடக்கிறது. இப்படியான  படைப்பில், இயற்கைக்கோ, அறிவியலுக்கோ முரணானாதாக ஒரு இடத்தில் கூடப் படைக்கப்படவில்லை.

     வர்ணத்துக்கு எதிராகப் போராடிய சமணத்தை வீழ்த்த வேதமதத்தால் முடியவில்லை. காரணம், அவர்கள் தங்கள் வர்ணாசிரம தர்மத்தை கைவிட முன்வரவில்லைகூடவே தமிழை நீசமொழி என்று புறந்தள்ளி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடித்தார்கள். அவ்வேளையில் தான், சமத்துவக்குரலோடு சிவமதம் (இன்றைக்கு சைவமதம்) சமணத்தின் துறவற நெறிக்கு எதிராக போர்க்குணம் பெற்றது. அதாவது தமிழ் மரபுக்குப் பொருந்துவதாகவும் இயற்கை வாழ்வுக்கு உகந்ததாகவும் இகவாழ்க்கைக் கொள்கையினை உயர்த்திப் பிடித்தது.

    இதனைத்தான் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், சுந்தரரும் பக்திஇயக்கத் தத்துவமாக உட்படுத்திக் கொண்டார்கள். அன்றைக்கு சமஸ்கிருதமும், பாலியும், பிராகிருதமும் தமிழின் தொன்மையை அழித்திடும் செயலில் இறங்கிடும் போது இம்மண்ணின் மக்கள் மொழியான தமிழை முன்னிருத்தியிருக்கிறார்கள்திருஞானசம்பந்தர் தன்னையே `தமிழாகஉருவகப்படுத்திக் கொண்டு பக்திஇயக்கத்தினை தொடர்ந்திருக்கிறார்தேவார ஆசிரியர்களும்  பக்திஇயக்கத்திற்கு உகந்த இலக்கியமாக தேவாரத்தினைப் படைத்தளித்திருக்கிறார்கள்.

    திருஞானசம்பந்தர், தன் பதிகங்களில் சிவபெருமான் - பார்வதிதேவியாரின் பெருமையினை வெளிப்படுத்திடும் நூற்றுக்கணக்கான பாடல்களில் இகவாழ்வு குறித்து பதிவு செய்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் மற்ற தேவார ஆசிரியர்களும் நெகிழ்வோடு பெண்களின் உறுப்புகளையும் அவ்வுறுப்புகளின் அசைவு நிலையையும் தங்கள் படைப்புகளில் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் நோக்கமெல்லாம் இகவாழ்வை பெருமிதமாகவே பார்த்திருக்கிறார்கள்;  இழிவாக கருதவேயில்லை. அதுவே, அன்றைய வரலாற்றுத் தேவையாகயும் இருந்திருக்கிறது.

     இல்லாவிட்டால், தேவாரம் பாடிய மூவரில் சுந்தரர், பரவை நாச்சியார் என்னும் தேவதாசிப் பெண்ணோடு இகவாழ்வைக் கொண்டு இருப்பாரா? இதனையும் சிவபெருமானே ஏற்றுக் கொண்டாரே! சிவபெருமானே, பரவைநாச்சியாரிடம்  தூது போயிருக்கிறாரே! இதற்காக எந்த சிவத்தொண்டரும் மனம் நொந்ததாகத் தெரியவில்லையே. மாறாக பரவசப்பட வில்லையா?

        திருஞானசம்பந்தர், மனோன்மணியோடு இகவாழ்வை கொண்டார் என்று `தாண்டவபுரம் படைப்பில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை சேக்கிழார் அவ்வாறு கூறவில்லை என்று கூறலாமே தவிர அது சிவத்தொண்டர்களின் மனத்தைப் புண்படுத்துகிறது  என்பதோ, சிவமத்தின் கட்டமைப்பைச் சிதைப்பதற்காகச் செய்யப்பட்டது என்பதோ சரியான புரிதலில் சொல்லப்படவில்லை.

     சிவமதத்தின் கட்டமைப்பைச் சிதைப்பதற்காக தாண்டவபுரம் நாவல் படைக்கப்பட்டது என்று சொல்ல்வது சரியென்றால் சுந்தருக்காக, சிவபெருமான், பரவைநாச்சியாரிடத்துத்  தூது போனதும், சுந்தரர் தேவதாசிப்பெண்ணோடு இகவாழ்வில் ஈடுபட்டதும் கூட சைவமதக் கட்டமைப்பைச் சிதைக்கப் போதுமானவையே! இவ்விடத்தில் சுந்தரருக்கு ஒரு நீதி, திருஞானசம்பந்தருக்கு ஒரு நீதி என்பது சரியா?

      இன்னும் சொல்லப்போனால் இந்த பக்தி இயக்கம் கி.பி.7 ஆம் நூற்ற்றாண்டின் தொடக்கக் காலத்தில்தான் எழுச்சி பெற்றிருக்கிறது. நாவலை களங்கப்படுத்தும் இவர்கள் சான்றாகக் காட்டும் பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழார் 12 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவர்.

        திருஞானசம்பந்தரும் மற்றைய தேவார ஆசிரியர்களின் வரலாறும் கட்டமைக்கப்படும் காலம் 12 ஆம் நூற்றாண்டு. அக்காலத்தில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு புனைவுகளை உட்படுத்தி  சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்திருக்கமுடியும். அவர் இயற்கையின் படைப்பாற்றலையும் சமூக அறிவியல் கண்ணோட்டத்தையும் கணக்கில் கொள்ளவில்லை. பெரியபுராணத்தை கூர்ந்து படிப்பவர்கள் இதனை நன்கு உணரமுடியும்.
  
   திருஞானசம்பந்தர், திருமணத்திற்குத் தயார் நிலையில் அவர் மனமும் உடலும் இருந்திருக்கிறது. என்று தானே அவர் பெற்றோர்கள் மணம் முடிக்க முன்வந்திருக்கிறார்கள். அவரோடு சேத்திராடனம் கொண்டு இருந்த பக்தர்களோடு அவரும் மணக்கோலத்தில் இருந்த போது மணமகளோடு தானே ஜோதியில் கலந்தார் என்று சேக்கிழார் கூறுகிறார். திருஞானசம்பந்தர் பதினாறு வயதிலேயே திருமணத்திற்குத் தயாரானார் என்பதில் இருந்தே அவருக்கு இகவாழ்வில் நாட்டமிருந்தது என்று புரிதலுக்கு ஏன் வர மறுக்க வேண்டும்?

    அன்றைக்கு தேவார ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்திருக்கும் திருஞானசம்பந்தர் இகவாழ்வை முன்னிறுத்தி, சிவத்தையும் தமிழையும் முன்னெடுத்து மேற்கொண்ட சேத்திராடனப்பயணத்தால் வேளாண்மக்களைத் திரட்டி சமணமதத்தில் பெரும்பான்மையாக இருந்த வணிகர்களை சிவமத்தின் பக்கம் ஈர்த்துள்ளாரல்லவா? இவை தானே பக்திஇயக்கத்திற்கு மாபெரும் வெற்றி என்று வரலாற்று ஏடுகள் பேசுகின்றன.

     எனவே, சிவமதத்திற்கும் அதன் மரபுக்கும் எதிராக ஒரு போதும் இந்நாவலான, `தாண்டவபுரம்படைக்கப்படவில்லை என்று உறுதியாக சொல்லுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. பக்தியியக்கத்தவர்கள் உணர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவில்லைசமூக அறிவியலுக்கும் பண்பாட்டுக்கும் முன்னுரிமை   அளித்துள்ளார்கள். அதுதானே பின்னாட்களில் உருக்கொண்ட சைவசித்தாந்த மரபு நமக்கு கைவிளக்காக இருக்கிறது.

     
   தாண்டவபுரம் நாவல் குறித்து இப்படியான பிரச்சாரம் செய்பவர்கள்    போராட்டங்களைச் செய்து மக்களை திசைத்திருப்பிட பார்க்கிறார்கள். தொடர் போராட்டங்களை நடத்திட திட்டமிட்டுள்ளார்கள். இத்தனைக்கு இப்படியான பொய்மையை பரப்பிடுபவர்கள், நாவலை படிக்கவே இல்லை என்று தெரிகிறது. இப்படியான செயல் ஜனநாயக உரிமைகளுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு எதிரான செயலாகவே படுகிறது.