வெள்ளி, ஜனவரி 27, 2023

கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?

கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா? 


 

 

             மேலே கண்ட தலைப்பிலான எனது கல்வி குறித்த 15 கட்டுரைகள் அடங்கிய நூல் 46வது சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டுச் சற்றுத் தாமதமாக கண்காட்சி முடிந்ததும் வெளியாகியுள்ளது. 


 

      இந்நூலை ‘நன்னூல் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. நண்பர் நன்னூல் மணலி அப்துல்காதர் நூலை அழகாக வெளியிட்டுள்ளார். அட்டை மற்றும் நூல் வடிவமைப்பு நண்பர் சு.கதிரவன்.

      இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் 2019 - 2022 காலகட்டங்களில் காக்கைச் சிறகினிலே, பேசும் புதியசக்தி, புதிய விடியல், குங்குமச்சிமிழ் கல்வி – வேலை வழிகாட்டி போன்ற இதழ்களிலும் www.panmai.in இணையத்திலும் எழுதப்பட்டவை. ஒன்றிய அரசின் தேசியக் கல்விக்கொள்கையும் அதனையொட்டி தமிழ்நாட்டின் கல்வியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் இந்நூல் விமர்சிக்கிறது.

  

கல்விக் கொள்கையா? காவிக்கொள்கையா?   (கட்டுரைகள்)

மு.சிவகுருநாதன்

முதல்பதிப்பு: ஜனவரி 2023

பக்கங்கள்: 136   விலை: ரூ. 150

ISBN: 978-93-94414-25-9

நூல் வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்:

நன்னூல் பதிப்பகம்,

மணலி – 610203,

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம்.

அலைபேசி: 9943624956  

மின்னஞ்சல்: nannoolpathippagam@gmail.com

G Pay: 8610492679                                                              

 

ஞாயிறு, ஜனவரி 22, 2023

ஒரு நாள் போதுமா?

 ஒரு நாள் போதுமா?

மு.சிவகுருநாதன்


 

       இவ்வாண்டு சென்னைப் புத்தகக் காட்சிக்கு பொங்கல் விடுமுறையில் செல்லலாம் என்று நினைத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ஞாயிறன்று (08/01/2023) புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பினேன்.

      கண்காட்சி தொடங்கி மூன்றாவது நாள். எனவே புதிய நூல்களின் வரவு குறைவு. புத்தகக் கண்காட்சியின் கடைகள் பட்டியல் (site map) கூட இல்லை. உள்ளே நுழைய முடியாத குறுகலான கழிப்பறை; கழிவுகள் ஆறாக ஓட மெரினா மாற்றுத்திறனாளி மரப்பாலம் போல பிளைவுட் பலகையில் நடந்து வெளியேற வேண்டிய அவலம்.

     புத்தகம் வாங்க வருவோருக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராமல் 'பாபாசி' பணத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. 46 ஆண்டுகள் ஆனாலும் இவர்கள் எந்தப் பாடமும் கற்கப்போவதில்லை.

      படிப்பது வேறு; பேசுவது வேறு. வாயாளிகள் முன்னரங்க மேடைகளில் எதோ கத்திக் கொண்டுள்ளனர். இந்த வாய் வீச்சாளிகளுக்கு அளிக்கும் வசதிகளில் 5% ஐ கழிப்பறை, குடிநீர் வசதிகளைச் செய்து தரலாம். யார் செய்வது?


 

     பெரும் பதிப்பக நூல்களை வீட்டிலிருந்தே வாங்கிவிடலாம். சிறிய பதிப்பகங்கள் வெளியிடும் அல்லது காணக்கிடைக்காத நூல்களைத் தேடி வாங்குவதுதான் கண்காட்சியின் சிறப்பாக இருக்க முடியும்? ஆனால் அதற்கான வாய்ப்புகள் துளியும் இல்லை.

     ஒவ்வொரு வரிசையாக செல்லும்போதுதான் அனைத்துக் கடைகளையும் பார்வையிட முடியும். முகப்பில் ஒருவரிசையிலிருந்து அடுத்த வரிசைக்குச் செல்லத் தடை செய்துள்ளனர். இது என்ன குரூரத் திட்டமிடல்?

     குறுக்கு வழிகளில் நெரிசல் அதிகம். இந்தப் பிரபலங்களின் தொந்தரவு வேறு அதிகம். சினிமாக்காரர்கள் இலக்கியவாதி என்கிற போர்வையில் அரங்குகளை ஆக்ரமிக்கிறார்கள்.


 

     சில நூல்களை வாங்கிக் கொண்டு திரும்பினேன். பேரா. அ.மார்க்ஸ், சிராஜுதீன், அப்பணசாமி, மணலி அப்துல்காதர், தம்பி, புதுச்சேரி விசாகன் போன்று ஒருசிலரை மட்டுமே சந்திக்க முடிந்தது. கொரோனா பீதி மறுபடி கிளம்பியிருக்கும் நிலையில் இவ்வளவு நெரிசலை ஏற்படுத்தும் அரங்க அமைப்பும் இடைவெளிக்குறைவும் வசதியின்மையும் கடும் கண்டனத்திற்குரியது.

சனி, ஜனவரி 21, 2023

அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள்

                               அனைவருக்குமான பொதுவுடைமைப் பாடங்கள்

மு.சிவகுருநாதன்


 

        மார்க்சிய செவ்வியல் நூல்கள் வரிசையில்பொதுவுடைமை  குழந்தைகளுக்காக…’ என்ற நூல் எம்.பாண்டியராஜனின் அழகான மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது. உண்மையில் இந்நூல் குழந்தைகளுக்கானது மட்டுமா என்றால் பொதுவுடைமையைப் புரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்குமானது. புரிந்துகொள்ள முடியவில்லை என்போரும் இதன் மூலம் பொதுவுடைமையைக் கற்கலாம்; விவாதிக்கலாம்.  

        இந்நூல் மூன்று பகுதிகளானது. முதல் பகுதியில் பொதுவுடைமை, முதலாளித்துவம், உழைப்பு, சந்தை, நெருக்கடி, முதலாளித்துவம் தோன்றிய முறையும் எடுத்துக்காட்டப்படுகிறது. முதலாளித்துவ சமுதாயத்தில் மக்கள் படும் அனைத்துக் கேடுகளிலிருந்து விடுபட்ட சமுதாயத்தை பொதுவுடைமை என்பது சுட்டுகிறது. இது ஒரு நோயைக் குணப்படுத்துவது போல. முதலாளித்துவம் நோயென்றால் (அது அப்படியல்ல) அதற்கு மருந்தாக பெருமளவு மக்களை நலம் பெறச்செய்வது பொதுவுடைமை என்று சுட்டிக் காட்டப்படுகிறது. பொதுவுடைமை நல்ல நிவாரணம் என்றபோதிலும் அது அனைத்தையும் குணமாக்கக்கூடியதல்ல. இது முதலாளித்துவத்தால் ஏற்பட்ட கேடுகளுக்கான ஒரு நிவாரணம் மட்டுமே என்பது நூலில் வலியுறுத்தப்படுகிறது.

       பொதுவுடைமையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாம் முதலில் முதலாளித்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம். முதல் ஆட்சி செய்வதால் முதலாளித்துவம் என்றழைக்கப்படுகிறது. நம்மை ஆள்வது யார்? உண்மையில் பொருள்கள்தான் ஆள்கின்றன. எல்லாப் பொருள்களும் ஆளமுடியாது. அத்தகைய சிறப்புப் பொருள்கள்   வானத்திலிருந்தோ, வேற்றுக் கிரகத்திலிருந்தோ வந்ததல்ல. மனிதனால் உருவாக்கப்பட்டவைதான். இவற்றை தாங்கள்தான் உருவாக்கினோம் என்பதை மறந்து அந்தப் பொருள்களுக்குச் சேவையாற்றத் தொடங்கி விட்டார்கள், என்பது எளிமையாக விளக்கப்படுகிறது. கடவுள், மதம், சடங்குகள் எல்லாம் இவ்வாறு மனிதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள்தான்.

        முதலாளித்துவ சமூகத்தில் மக்களிடையே உறவுகள் பற்றி அறிய முதலாளித்துவம் தோன்றிய விதத்தை அறியவேண்டும்? நிலப்பிரபுத்துவம், வணிக முதலாளித்துவம், தொழிற்சாலைகள் என முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில் உடைமை இல்லாதவர்கள் தங்களையே விற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆளானார்கள். உற்பத்தி உறவுகள் ஆதிக்கத்தைக் கட்டமைத்தன. முதலாளிய வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டி வளர்ந்தது. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உழைப்பு, சந்தை, நெருக்கடி ஆகியவற்றை அறிவது அவசியம். அடுத்தடுத்த தலைப்புகளில் இவை விளக்கப்படுகின்றன.

          எவ்வாறு நாம் உற்பத்தி செய்யவேண்டும். எதை நாம் உற்பத்தி செய்யவேண்டும். எந்த அளவு உற்பத்தி செய்யவேண்டும் என்பதையே தொழிற்சாலைகள் அதாவது முதலாளித்துவம் பேசுகின்றன என்பதும் இவை மக்களைப் பற்றி கவலைகொள்வதில்லை. மாறாக சந்தையில் மட்டும் இதன் கவனம் இருப்பதும் சுட்டப்படுகிறது. தேய்ப்புப் பெட்டியை எடுத்துக்காட்டாகக்  கொண்டு நெருக்கடி உணர்த்தப்படுகிறது.

          முதலாளித்துவத்திற்கு மாற்றாக பொதுவுடைமை சோதனை முயற்சியாக பல்வேறு வடிவங்களில் அறிமுகமாகிறது. சமூக ஜனநாயம், லுட்டியம், தொழில்நுட்ப நுகர்வுவாதம், அராஜகம், அரசு சோசலிசம் போன்ற பல முயற்சிகள் இது பொதுவுடைமை அல்ல என்ற முடிவை நோக்கித் தள்ளியிருப்பதை முயற்சிகள் மூலம் முன்வைக்கப்படுகிறது. இறுதி முயற்சியில் அல்ல என்று சொல்வதற்குப் பதிலாக, இது எங்களுடைய கதை. இப்போது நாங்கள் நாங்களாகவே வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், என்று முடிக்கிறார்.


 

        நிறைவுரையாக பொதுவுடைமை வேட்கை எனும் தலைப்பில் 1991க்கு பிந்தைய உலகம் அலசப்படுகிறது. பொதுவுடைமையின் தோல்வி எனக்கருதப்பட்ட இக்காலகட்டத்தில் உலகமெங்கும் பெருந்திரள் மக்கள் எழுச்சிகள் பல்வேறு வடிவங்களில் நடந்தன. இவையெல்லாம் பொதுவுடைமை பற்றிய நம்பிக்கையை மக்களுக்கு அளித்துள்ளன.      1991 வரலாற்றின் முடிவு அல்ல; அது புதிய வரலாற்றின் தொடக்கம். எனவே பொதுவுடைமையின் வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது என்ற முதலாளித்துவ குரல்  அதிர்ச்சியடையும் வண்ணம் புதிய நம்பிக்கைகள் துளிர்க்கத் தொடங்கியுள்ளன. நமக்கான பொதுவுடைமை, பொதுவுடைமைக்கான திசைவழி போன்ற விவாதங்கள் மேலெழுந்துள்ளன.

            இது குழந்தைகளுக்கானதா? என்ற கேள்விக்கு எல்லா வயதினரையும் குழந்தைகளாகப் பாவித்து எழுதியுள்ளதாக நூலாசிரியர் சொன்னதை பதிப்புரையில் ந.முத்துமோகன் குறிப்பிடுகிறார். குழந்தைகள் உணர்ந்துகொள்ளவும் உணர்ந்தவர்கள் மீண்டும் விவாதங்களின் வழியே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் இந்நூல் உதவும். இன்றைய சூழலை எதிர்கொள்ள, காலத்தின் போக்கில் வரலாறு மீண்டும் ஒருமுறை திறந்திருப்பதை எடுத்துக்காட்டி நூல் நிறைவடைகிறது.    

 

நூல் விவரங்கள்:

பொதுவுடைமை  குழந்தைகளுக்காக

பீனி அடம்ஸாக்

தமிழில்: எம்.பாண்டியராஜன்

பதிப்பாசிரியர்: . முத்துமோகன்

பக்கங்கள்: 123

விலை: ரூ.150

முதல் பதிப்பு: பிப்ரவரி 2021

மார்க்சிய செவ்வியல் நூல்கள்வரிசையில்

வெளியீடு: 

 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்,

41, பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர்,  சென்னை – 600014.

பேசி: 044-26251968, 26258410, 48601884

மின்னஞ்சல்: info@ncbh.in

இணையம்: www.ncbhpublisher.in

 

நன்றி: உங்கள் நூலகம் – மாத இதழ், ஜனவரி 2023

வியாழன், ஜனவரி 19, 2023

மொழி அரசியல்: அன்றும் இன்றும்

 

    மொழி அரசியல்: அன்றும் இன்றும்

மு.சிவகுருநாதன்


 

            வரி வடிவம் இல்லாத தொல் பழங்காலங்களில் பாறை ஓவிய மொழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியாக இருந்தது. இந்த ஓவியங்கள் ஒரு கட்டத்தில் சித்திர எழுத்துகளாக உருமாற்றம் அடைகின்றன. இதுவே சிந்துவெளி சித்திர எழுத்துக் குறியீடுகளாக நமக்குக் கிடைத்துள்ளது. அவை ஓவியத்தைப் போலவே மறைபொருளைக் கொண்டதாக இருந்தது; இன்றும் இருக்கிறது. ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்றோர் இந்தப் புதிர்களை ஓரளவு விடுவித்துள்ளனர். எழுத்தும் வரி வடிவங்களும் உருவான பிறகு அனைவரும் அவற்றைப் பயன்படுத்தும் அளவிற்கு அவை பிறருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் பிறகு பூடகத்தன்மை ஓரளவு மறைந்து எளிமையானது. இந்த வரி வடிவம் காலத்திற்கேற்பவும் பயன்பாட்டுப் பொருள்களுக்கேற்பவும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. 

              தகவல் தொடர்பு ஊடகமான மொழியை அனைவரும் கற்க எந்தத் தடையும் இல்லாத காலத்தில் அவைகளின் வளர்ச்சியும் விரைவாக இருந்தது. தாய்வழிச் சமூகத்தில் அவள்தான் ஆசிரியராகவும் இருந்திருக்க முடியும். ஓவ்வொரு தலைமுறையும் அடுத்தத் தலைமுறைக்குத் தங்களது அறிவைக் கடத்த விரும்பியது. அதற்கு சரியான, சக்தி வாய்ந்த ஊடகமாக மொழி வாய்த்தது. மேலும் தாய்வழிச் சமூகம் ஓருவகையில் பொதுமைச் சமூகமாக மலர்ந்திருந்தது. இயற்கையுடன் இணைந்த வாழ்வும் இயல்பான மொழிகள் உருக்கொள்ள சாதகமான வெளியும் அமைந்தது.

      இனக்குழுச் சமூகத்திலும் போர்கள் நடந்தன. இருப்பினும் அவர்களின் தகவல் தொடர்பு ஊடகமாக மொழி பெருமளவில் பாதிப்படையவில்லை. எல்லாப் பரிமாற்றங்களுக்கான ஊடகமாகவும் மொழி அமைந்தது. தொடக்கத்தில் தகவல் பரிமாற்றக்கருவி என்பதைத்தவிர வேறு மொழிக்கு வேறு முக்கியத்துவம்  இருந்திருக்க வாய்ப்பில்லை. நவீன மொழியியல் சிந்தனைகள் மொழிகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகின்றன.

            மொழி ஒரு உடலின் ஆறாவது புலனாகவும் சமூகத்தையும் ஓர் உயிருள்ள உடலையும் இணைக்கும் பொதுப்புலனாக உள்ளது என்பார் ஜமாலன். மேலும் மொழி ஒரு கூட்டுச் செயலாக இருப்பதால் சமூகத்தையும் மனிதர்களையும் கட்டமைக்கிறது என்கிறார். (மொழியும் நிலமும்) கூடவே அதிகாரங்களைக் கட்டமைக்கும் ஒன்றாகவும் மொழி ஆகிப்போனது. மொழியியல்  அறிஞர் ஃபெர்டினண்ட் டி சசூர் எல்லாம் குறிகளால் ஆனது; எனவே மொழியும் ஒலிக்குறிகளால் ஆனது என்கிறார். இவர் குறியை (sign) குறிப்பான் (signifier) குறிப்பீடு (signified) என இரண்டாகப் பகுப்பார். பிரஞ்சு பேராசிரியர் ரோலான் பர்த் ரோஜாப் பூக்கள் செடியில் இருக்கும்போது வெறும் பூக்கள் தான். அந்தப் பூக்கள் காதலுக்கு அடையாளமாக ஒருவருக்குக் கொடுக்கும்போது அப்பூங்கொத்து குறிப்பான்ஆகிறது. காதல் என்பது குறிப்பானால் அர்த்தப்படுத்தப்படும் குறிப்பீடுஆகிவிடுகிறது. இங்கு ரோஜாப் பூ வெறும் குறிமட்டுமே. (பார்க்க: தமிழும் குறியியலும் தமிழவன்)

      அந்நியர் வருகையும் அவர்கள் மொழியும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிறகு சூழல் மாற்றமடைந்தது. முற்றிலும் புரியாத வேற்றுமொழி ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்தும் கருவியாக மாறிப்போனது. மொழி வழியே இங்கே சமூக அதிகாரம் கட்டப்பட்டது. இது சமூக ஒழுங்கு, அதிகாரத்துவம், ஆதிக்கம் என்பதான வலைப்பின்னலில் உருவானது. 

       குறியீடுகளின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பிராமி போன்ற வரிவடிவங்கள் தோன்றுகின்றன. மௌரியர் கால பிராமி எழுத்துகள் இந்தியாவெங்கும் பரவுகின்றன. இந்த அசோகர் கால பிராமி எழுத்துகளிலிருந்து தமிழ் பிராமி உருவாக்கப்படுகிறது. இதுவே தமிழி என்றழைக்கப்பட்டது. இந்த எழுத்துமுறை சங்ககாலத்தின் இறுதியில் வட்டெழுத்தாக மாற்றம் கண்டது. அக்காலத்தில் எழுது கருவிகளாக இருந்த பனையோலை, எழுத்தாணி ஆகியவற்றால் இம்மாற்றம் நிகழ்ந்தது. களப்பிரர் காலத் தமிழகத்தில் வட்டெழுத்து முறையே நடைமுறையில் இருந்தது என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.

        அவைதீக சமயத்தார் பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் போன்ற வடமொழிகளை எழுத புதுவகைக் கிரந்த எழுத்துகளை உற்பத்தி செய்தனர். இந்த வடமொழிச் சொற்கள் தமிழிலும் ஊடுருவின. இருப்பினும் தமிழின் தனித்தன்மை பாதுகாக்கப்பட்டது.

        சமஸ்கிருதம் மட்டும் இங்கு வடமொழி என்று சொல்லப்படுகிறது. அது தவறானதாகும். பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் போன்றவை வடமொழிகளாகும். இவற்றில் எது முதலில் தோன்றியது என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

     சமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருளே செயற்கையானது, உருவாக்கப்பட்டது என்பதுதான். இதற்கு மாறாக இயற்கையானது, தொடக்கத்திலிருந்து இருப்பது என்ற பொருள்படும் பிராகிருதமே மக்கள் மொழியாக நீண்டகாலம் புழங்கியிருந்திருக்கிறது. பெருந்திரள் மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி முன்தோன்றிருப்பது சாத்தியமல்ல. சமஸ்கிருதத்தை தேவபாஷை எனவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் வழிபாட்டு மொழியாகவும் கட்டமைத்தவர்கள் அம்மொழி பற்றிய புனைவுகளையும் உற்பத்தி செய்து கட்டாயத் திணிப்பை உண்டாக்கினர்.

        மொழியாதிக்கத்திற்கு புனிதக் கதையாடல்கள் தேவைப்பட்டன. எனவே சமஸ்கிருதம் தேவபாஷையானது; இதன் மறுபுறத்தில் தமிழ் எதிரிடையாக நீச பாஷையாக தூற்றப்பட்டது. எல்லாப் பரிமாற்றங்களுக்கும் ஒரே மொழி என்ற நிலை மாறி ஒரு புனித வழிபாட்டு மொழி இவ்வாறாகத் திணிக்கப்பட்டது.

       இந்தத் திணிப்புகளுக்கு நம்பிக்கைகள், புராணங்கள், வேள்விகள், புனைவுகள், அரசதிகாரம் போன்ற பல காரணிகள் படையணிகளாகச் செயல்பட்டன. மக்களின் நம்பிக்கை சார்ந்த உள்ளூர் புனைவுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருண மேலாண்மை நிறுவப்பட்டது. .கா. மநுநீதிச் சோழன். அரசதிகாரத்துடன் இணைந்த மொழி சமயங்களுடனும் பிணைக்கப்பட்டது. சமயங்களின் கருத்தியல்கள் ஒன்றாக இல்லை. அவை பெரும்பாலும் இரு கூறாகப் பிரிந்திருந்தன.

       வேதப் பிராமண மதங்கள் மனிதர்களை பிறப்பினடிப்படையில் பாகுபடுத்தின. பிராமணர்களையும் அவர்களது மொழியான சமஸ்கிருதத்தை மட்டும் உயர்த்தி பிற அனைத்தையும் இழிவு செய்தன. பிறப்பினடிப்படையில் இவை உயர்வு-தாழ்வைக் கட்டமைத்தன. தங்களது கதையாடல்கள் மூலம் மக்களையும் அரசதிகாரத்தையும் வென்று மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கின. புஷ்யமித்திர சுங்கனில் தொடங்கி பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள் என நீண்ட வைதீக ஆட்சியதிகாரம் நெடிது வளர்ந்தது. இவர்கள் இந்து வேத மதங்களையும் சமஸ்கிருதத்தையும் பேணிக்காத்தனர்.

       அவைதீக அல்லது சிரமண சமயங்கள் (heterodox religions) இந்த இடங்களில் முதன்மைப் பங்காற்றின. கடவுள் (இறைவன்), வேதம் (மறை), வருணம் (சாதி), சடங்குகள் (வேள்விகள்) போன்றவற்றை மறுத்தவை அவைதீக மதங்களாகும். எனவே இவை சமூகத்தில் எவ்விதப் பாகுபாடுகளையும் காட்டாமல் அனைவரையும் ஏற்றுக்கொண்டன; அடித்தட்டு மக்களால் இக்கருத்தியல்கள் உள்வாங்கப்பட்டன. பிறப்பின் அடிப்படையில் அல்லாமல் அனைவரும் கல்வி கற்க இதன்மூலம் வாய்ப்பு உண்டானது. இவை பிராகிருதம், பாலி போன்ற மக்கள் மொழிகளில் தங்களது சமய, இலக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டன. தமிழ் போன்ற அன்றைய மொழிகளும் ஊக்கம் பெற்றன. பண்டையத் தமிழகத்தில் இந்த அவைதீக சமயங்களின் பரவல் தமிழ்ப் பௌத்தம், தமிழ்ச் சமணம், தமிழ் ஆசீவகம் என்று தனித்தக் கூறுகளாக செழித்தோங்கியது. அன்றைய சூழலில் செழித்திருந்த தமிழ்ச் சமூகமும் தமிழ் மொழியும் இந்த ஊடாட்டத்திற்கு பேரூதவியாக  அமைந்தன.

        இதனால்தான் நமக்குத் திருக்குறளும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் காப்பியங்களும் கிடைத்தன.  இடைக்காலத்தில் இதே உத்திகளைக் கையாண்ட சைவம், வைணவ மதப்பிரிவுகளினால் வெறும் பக்தி இலக்கியங்கள் மட்டுமே கிடைத்தன. இந்த பாரிய வேறுபாடுகள் இவற்றையும் அதன் அரசியலையும் ஒருங்கே வெளிப்படுத்துபவை.

       அவைதீக சமயங்களுக்கும் ஆட்சியதிகாரம் வாய்த்தது. வைதீகத்தை ஒப்பிடுகையில் அது குறைவான காலமே. அசோகர் உள்ளிட்ட மௌரிய அரசர்கள், கனிஷ்கர், சாதவாகனர்கள், களப்பிரர்கள், ஹர்ஷர், பாலர்கள், தொடக்க கால பல்லவ அரசர்கள் போன்றவர்களின் காலங்களில் அவைதீகம் சற்று உயர்நிலைக்கு வந்தது. வைதீகம் தனது சூழ்ச்சிகளால் இந்த வளர்ச்சியை அழித்துப் பின்னுக்குத் தள்ளுவதில் பெரிய வெற்றி பெற்றது. 

      வைதீக சமயங்களைத் தாக்கி அழிப்பது ஒருபுறமும் அதனுள் நுழைந்து அழிப்பது மறுபுறமும் என பல்முனைத் தாக்குதல்கள் தொடங்கின. மகாயான பௌத்தம் உருவானதையும் சமஸ்கிருத மொழியில் பௌத்த இலக்கியங்கள் படைக்கப்பட்டதையும் வரலாற்றில் இவ்வாறாகப் புரிந்துகொள்ள முடியும்.

          முகலாயர் ஆட்சியில் சமஸ்கிருத இலக்கியங்கள் பாரசீக மொழியில் பெயர்க்கப்பட்டன. ஆங்கிலேயர் வருகையினால் பாலி, பிராகிருத, சமஸ்கிருத இலக்கியங்கள் அனைத்தும் ஆங்கிலத்திற்கு சென்றன. அதன் வழியே சமஸ்கிருத நூல்களின் பூடகத்தன்மை விடுவிக்கப்பட்டது. இதன்மூலம் அவர்களது கருத்தியல் தாக்குதல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

          ஆட்சியதிகாரங்கள் மூலம் மக்களின் இயல்பு, விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்பட்ட மொழிகளாக நாம் இரண்டைக் குறிப்பாக சுட்டலாம். அன்று சமஸ்கிருதம்; இன்று இந்தி. இந்த வகைமையில் நாம் பாரசீகம், ஆங்கிலம் ஆகியவற்றை இணைக்க இயலாது. அவை தேவையினடிப்படையில் ஏற்பட்டவை.  நீண்ட முடியாட்சிக் காலத்தில் தமிழகத்திலும் பிற்காலச் சோழர்கள் காலம் உள்பட சமஸ்கிருதம் அதிகார, ஆதிக்க மொழியாக கோலோச்சியது. பின்னர் பாரசீக மொழிக்கு ஆட்சியதிகாரம் கிடைத்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம் முதன்மை பெற்றது. பிந்தைய காலகட்டத்தின்  விளைச்சலாக சமஸ்கிருதமயமான இந்தியை தக்கவைப்பதில் இவர்கள் வெற்றி பெற்றனர். ராஜஸ்தானி, சட்டீஸ்கரி, போஜ்புரி, மகதி, மைதிலி, பிராஜ் பாஷா, ஆவதி போன்ற பல்வேறு வட்டார மொழிகள் அழித்தொழிக்கப்பட்டு இந்தி ஆதிக்கம் கட்டமைக்கப்பட்டது. தென்னிந்திய திராவிட மொழிகளின் எதிர்ப்பைப்போல் வடக்கில் பெரிய எதிர்ப்புகளின்றி இந்த சமஸ்கிருதமயமாக்கல் அரங்கேறியது.

      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (26 டிசம்பர்,1925), பெரியாரின் சுயமரியாதை இயக்கம் (நவம்பர்,1925), அம்பேத்கரின் பஹிஷ்கரித் ஹிதகரிணி (20 ஜூலை,1924) சபா (கற்பி, ஒன்று சேர், போராடு என்ற முழக்கத்தை முன்னெடுத்த இயக்கம்), ஆர்.எஸ்.எஸ். (27 செப்டம்பர்,1925) ஆகிய இயக்கங்கள் சமகாலத்தில் உருவானவை. இவற்றில் ஆர்.எஸ்.எஸ். மட்டும் இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளும் பிற அமைப்புகள் வெளியேயும் இயங்கின. காங்கிரசில் இணைந்திருந்த இந்த மத அடிப்படைவாதிகள் அன்றும் இன்றும் பல்வேறு சீர்குலைவிற்கு காரணமாக அமைந்தனர். காங்கிரசுக்குள் தீவிரவாத மற்றும் மிதவாதப் போக்குகள் இருந்ததாக மட்டும் வரலாறு எழுதப்படுகிறது. காங்கிரசுக்குள் இருந்த இந்து மத ஆதரவாளர்கள் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்றரது கருத்தியலுக்கும் செயல்பாடுகளுக்கு பெரிய இடையூறுகள் செய்தனர். இது விடுதலைக்கு முன்னும் பின்னும் தொடர்ந்தது.

        இன்னும் சரியாகச் சொன்னால் 1915 இல் தொடங்கப்பட்ட இந்து மகா சபையும் 1925 இல் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்திய தேசிய காங்கிரசுக்குள் இயங்கின. டிசம்பர் 1938 இல் கூடிய காங்கிரஸ் செயற்குழு வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருப்பவர்கள் காங்கிரசில் இருக்கத் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கும் வரை இந்நிலை நீடித்தது. இதன் பின்னும்  இந்த அமைப்புகளில் பங்கேற்காத இந்துத்துவச் சார்பாளர்கள் குழு தொடர்ந்து கட்சிக்குள் இருந்தது வெறுப்பரசியலுக்கு உறுதுணையாக அமைந்தது.

         விடுதலை இயக்கத்தை மக்கள் மயப்படுத்த ஒரு பொதுவான மொழி தேவையென்று மகாத்மா காந்தி கருதினார். இந்தி, உருது மற்றும் பாரசீகம் கலந்த பேச்சுமொழியான இந்துஸ்தானியே அவரது முதன்மைத் தேர்வாக இருந்தது. இம்மொழி இந்தி, உருது ஆகிய இருமொழிகள் பேசும் மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தது. இதை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் குறியீடாகவும் அவர் கருதியிருக்கக் கூடும்.  இதனடிப்படையில் 1925 இல் காங்கிரஸ் கட்சி இப்பகுதிகளில்  கட்சி செயல்பாடுகள் இந்துஸ்தானி மொழியிலும் பிற இடங்களில் ஆங்கிலமோ அல்லது உள்ளூர் மொழிகளோ பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தது. ஆனால் விடுதலைக்குப் பின்னால் (1949) மேட்டுக்குடி ஆதிக்கவாதிகளின் நிலைப்பாட்டிற்கேற்ப இந்திக்கு ஆதரவான நிலை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் ஆளானது.

         நாட்டின் விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்தியை முதன்மைப்படுத்தும் போக்கு தொடங்கியது. மறுபுறம் இந்த மேட்டுக்குடி இந்துக்கள் உருது மொழிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். தங்களது கருத்தியல் பரப்புரைக்கான வாகனமாக முற்றிலும் சமஸ்கிருதமயமான இந்தியை அவர்கள் தேர்தெடுத்தனர். இதன் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகளின் பேராதரவு இருந்தது. எனவே அன்று பெருந்திரள் மக்களின் பேச்சு வழக்கிலிருந்த மக்கள் மொழியான இந்துஸ்தானி ஒதுக்கப்பட்டு, செயற்கையான சமஸ்கிருத அடிப்படைகள் கொண்ட இந்தி வளர்த்தெடுக்கப்பட்டது.

       நாட்டு விடுதலைப் பின்னும் இந்த நிலையே இன்றும் தொடர்கிறது. இந்தித் திணிப்பு என்பது ஒருவகையில் சமஸ்கிருதத் திணிப்பே. இரண்டு மொழிகளும் ஒரே வரிவடிவமான தேவநாகரியில் எழுதப்படுகின்றன. ஆதிக்க மனப்போக்காளர்கள் இந்தி, சமஸ்கிருதம் இரண்டையும் ஒன்றுபோல் கருதுவதாகவே தெரிகிறது.

     மும்மொழிக் கொள்கை, அவற்றில் இரண்டு இந்திய மொழிகள், இந்திய மொழிகளில் சமஸ்கிருதத் தாக்கம், சமஸ்கிருத ஞான மரபு, முக்கிய நவீன மொழியான சமஸ்கிருதம்,  மும்மொழிகளில் ஒன்றாக  பள்ளி, கல்லூரிகளில் வளமூட்டக்கூடிய விருப்பப் பாடமாக சமஸ்கிருதம் என்றெல்லாம் தேசிய கல்விக்கொள்கை 2020 இல் உளறுவதிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம். 

        இந்த மொழியரசியல் முற்றிலும் அறிவியல்பூர்வமற்றது; வெறுமனே ஆதிக்க நோக்கங்களுக்கானது. இங்கு சமூகங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் போன்றவற்றில் சமத்துவம் நிலவ விரும்பாதவர்களின் ஆதிக்கப்போக்கின் விளைவாக இதனைக் காணலாம். குறைந்தபட்சம்   நமது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிடையே சமத்துவம் பேணப்பட வேண்டும். இன்றுள்ள நவீன மொழிபெயர்ப்பு வசதிகள் ஒன்றிய அரசு இவற்றில் தொடர்புகொள்வது மிக எளிய செயலாகும். இல்லாத கற்பனைகள் மூலம் மொழியாதிக்கத்தைக் கட்ட முனைவது பாசிசமே. இத்தகைய போலியான கட்டுமானங்கள் தகர்க்கப்பட வேண்டும். இந்த மொழிவழிப் பாசிசம் நாட்டின் ஒற்றுமைக்கு மட்டுமல்ல; நாட்டின் வளர்ச்சிக்கும் எதிரானதாகும்.  

   

 நன்றி: நன்னூல் 02 – இருமாத இதழ் – ஜனவரி – பிப்ரவரி 2023