சனி, மே 31, 2014

வடக்கு மாங்குடியில் தேர்தலை ஒட்டிய சாதி வன்முறை – உண்மை அறியும் குழு அறிக்கை

வடக்கு மாங்குடியில் தேர்தலை ஒட்டிய சாதி வன்முறை – 

                     உண்மை அறியும் குழு அறிக்கை


கடலூர்
மே 30, 2014

    கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், குமராட்சி ஒன்றியத்தில் உள்ள வடக்கு மாங்குடி கிராமத்தில் சுமார் 400 வன்னியர் குடும்பங்களும் நூறு தலித் (பறையர்) குடும்பங்களும் வாழ்கின்றன.  நாடாளுமன்றத் தேர்தல் நடந்த அன்று (24–04–2014) இரவு ஏழு மணி வாக்கில் அங்கு  நடைபெற்ற சாதி வன்முறையில் 30-க்கும் மேற்பட்ட தலித் வீடுகள் தாக்கப்பட்டன. தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் தற்போது இருவர் இறந்துள்ளனர். இன்னும் அக்கிராமத்தில் அமைதி திரும்பவில்லை. இது குறித்த உண்மைகளை அறியவும் அக்கிராமத்தில் அமைதி திரும்புவதற்கான வழி முறைகளைக் கண்டறியவும் இப்பகுதியில் இயங்குகிற ‘சாதி மறுப்பு இயக்கங்களின் கூட்டணி’யின் பொறுப்பாளர் திரு.எஸ்.சுந்தர் அவர்கள் ஒரு உண்மை அறியும் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று கீழ்க்கண்டவாறு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

குழு உறுப்பினர்கள்

பேரா. அ. மார்க்ஸ், மனிதஉரிமைகளுக்கானமக்கள்கழகம் (PUHR), சென்னை,
கோ. சுகுமாரன், மக்கள்உரிமைக்கூட்டமைப்பு (FPR). புதுச்சேரி
வழக்குரைஞர்க. கவுதமன், சிதம்பரம்,
வழக்குரைஞர்க. கேசவன், குடியுரிமைப்பாதுகாப்புமையம் (CPCL) சென்னை,
இரா. பாபு, இளைஞர்களுக்கானசமூகவிழிப்புணர்வுமையம் (SASY), கடலூர்,
ஆர். தனவந்திரன், ஏகாதிபத்தியஎதிர்ப்புஇயக்கம், சீர்காழி,
தே. மகேஷ், திராவிடர்விடுதலைக் கழகம், மயிலாடுதுறை,
எம். அன்பு,  திராவிடர்விடுதலைக் கழகம், மயிலாடுதுறை.

   இக்குழு உறுப்பினர்கள் நேற்று வடக்கு மாங்குடி சென்று இரு தரப்பு மக்களையும் சந்தித்து விரிவாகப் பேசினர். பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் மற்றும் சேதமாக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டனர். வன்னியர் மக்கள் தந்த மனுக்களையும் பெற்றுக் கொண்டனர். முதல் தகவல் அறிக்கை, இறந்தவர்கள் இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கை, பாதிக்கப்பட்டோருக்கு அரசு அளித்துள்ள உதவி தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றையும் சேகரித்துக் கொண்டனர். காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர். ராஜாராம் அவர்களைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது அவர் மிகவும் விளக்கமாக எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார். முன்னதாக இக்குழுவைச் சேர்ந்த பாபு மருத்துவமனைக்குச் சென்று அங்கு அனுமதிக்கப் பட்டவர்களையும் சிதம்பரம் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி அமுதா சிவானந்தம் அவர்களையும் சந்தித்து வந்தார்.

பின்னணி

      வடக்கு மாங்குடி கிராமத்தில் வன்னியர் பகுதியை ஒட்டி சுமார் 100 மீட்டர் தொலைவில் தலித் குடியிருப்பு அமைந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு தீவைப் போல இது வன்னியர் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. தலித் மக்களின் வீடுகளை ஒட்டி வன்னியர்களின் சுடுகாடு உள்ளது. பிணங்கள் எரிக்கப்படும்போது அங்குள்ள தலித் வீடுகள் அனைத்திலும் துர் நாற்றம் மட்டுமல்லாமல் புகையும் சூழும் நிலையில் இச் சுடுகாடு அமைந்துள்ளதை பஞ்சாயத்து மற்றும் அரசு நிர்வாகங்கள் எவ்வாறு இதுகாறும் அனுமதித்து வந்துள்ளன என்பது எங்களுக்கு விளங்கவில்லை. தற்போது பிரச்சினைக்குப் பின் காவல்துறை அளித்த அழுத்தத்தின் காரணமாக அதற்குப் பின் இறந்த இரு வன்னியர்களின் உடல்கள் அங்கு எரிக்காமல் புதைக்கப்பட்டுள்ளதை நாங்கள் படம் எடுத்துக் கொண்டோம்.

   தலித் மக்களில் ஒருவரைத் தவிர பிறர் யாருக்கும் வீட்டு மனைகளைத் தவிர வேறு சொத்துக்கள் இல்லை. அவர்கள் தம் வாழ்வாதாரத்திற்கு வன்னியர்களையே சார்ந்துள்ளனர். அவர்கள் வெளியூர் செல்வதாயினும், பில்ளைகள் பள்ளிக்குச் செல்வதாயினும் வன்னியர் குடியிருப்புகளைக் கடந்தே செல்ல வேண்டும். அப்போது பேன்ட் அணிந்து செல்லும் மாணவர்களை அமட்டுவது, மாணவிகளைக் கிண்டலடிப்பது முதலான நிலை எப்போதும் உள்ளதாக தலித் மக்கள் அனைவரும் ஒத்த குரலில் புலம்பினர். தவிரவும் தலித் குடியிருப்பிற்கு அருகிலுள்ள சுடுகாட்டிற்குப் பிணத்தை எடுத்துச் செல்லும் போது பாடைகளில் சுற்றியுள்ள பூமாலைகளை தலித் வீடுகள் மீது வீசுவது, வாண வெடிகளை அந்தப் பக்கமாக எறிவது, தாரை தப்பட்டைகளை உரக்க முழக்கி அச்சுறுத்துவது முதலியன தொடர்ந்து நடந்து வந்துள்ளன. கண்ணுசாமி என்பவரின் மனைவி செல்வி (60) என்பவர் மீது இவ்வாறு எறியப்பட்ட வாணம் ஒன்று அவரது காலில் தொடை வரை எரித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததை எங்கள் குழு படம் எடுத்துக் கொண்டது.

   தலித் மக்கள் மலம் கழிக்கச் செல்வதானாலும் ஆடு மாடுகளை மேய்ப்பதானாலும் வன்னிய மக்களுக்குச் சொந்தமான வெளிகளுக்குத்தான் செல்ல வேண்டும். அபோதெல்லாம் சில நேரங்களில் அவர்கள் அவமானப்படுத்தப்படுவதும் உண்டு. இன்றைய பிரச்சினைக்குப் பின் கிராம சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கட்டப்பட்டு தண்னீர் வசதிகள் இல்லாது மூடப்பட்டிருந்த ஒரு கழிவறை தற்போது பயன்படுத்தப்படும் வகையில் சீர்திருத்தப் பட்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். தற்போது பெண்கள் மட்டும் இவற்றைப் பயன்படுத்துவதாகவும், அப்படியும் அங்கு குளிப்பதற்கு வசதி இல்லை எனவும் கூறப்பட்டது.

   தலித் மக்களுக்கான சுடுகாடு சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. அதற்குப் பாதை கிடையாது. மழைக் காலத்தில் பிணங்களைத் தூக்கிச் செல்வது மிகவும் பிரச்சினை. எனினும் எந்த மாற்றையும் வசதிகளையும் அரசு இது தொடர்பாகச் செய்து தரவில்லை. இது தொடர்பாக வன்னிய மக்களிடம் பேசும்போது அவர்கள் அந்தப் பாதை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கும் வடிகால் பகுதி எனவும் அவ்வழியே சாலை அமைக்கப்பட்டால் நீர் வழியமுடியாமல் தேங்கும் நிலை ஏற்படும் எனவும் கூறினர். தலித் மக்களுக்கான இச்சுடுகாட்டை ஒட்டியுள்ள நிலங்களில் செங்கல் அறுப்பது முதலான வடிவங்களில் வன்னியர்கள் ஆக்ரமிப்புச் செய்துள்ளதாகவும் தலித் மக்கள் குற்றம் சாட்டினர்.

   நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இத் தொகுதியில் மோதிரச் சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களும். பா.ம.க சார்பில் மாம்பழம் சின்னத்தில் சுதா மணிரத்தினம் அவர்களும் போட்டியிட்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.க சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட சந்திரகாசி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

   நெடுநாளாகக் கனிந்து கொண்டிருந்த இந்த தீண்டாமைப் பகை இன்று தேர்தலில் வக்களிப்பது தொடர்பான ஒரு பிரச்சினையை ஒட்டி ஒரு சாதி வன்முறையாக வடிவெடுத்துள்ளது.

சம்பவம்

     ஏப்ரல் 24 அன்று வாக்குப் பதிவு முடிந்து வாக்குப் பெட்டிகள் முதலியன கொண்டு செல்லப்பட்ட கையோடு இரவு ஏழு மணி வாக்கில் தலித் குடியிருப்பிற்கு அருகாமையிலிருந்த ட்ரான்ஸ்ஃபார்மர் அணைக்கப்பட்டுப் பெருங் கூச்சலுடன் சுமார் அறுபது எழுபது பேர் அடங்கிய கும்பலொன்று தலித் மக்கள் வசித்த பகுதியில் இரும்பு பைப் மற்றும் தடிகள், அருவாள்கள் ஆகியவற்றுடன் கொச்சையான சொற்களில் சாதி சொல்லித் திட்டிக் கொண்டு பெருங் கூச்சலுடன் நுழைந்துள்ளது.

   வெறித்தனமாக நுழைந்த இக்கும்பலைக் கண்டவுடன் தலித் இளைஞர்களும் வயது வந்த ஆண்களும் தப்பித்து ஓடியுள்னர். எஞ்சிய வயதானோரும் பெண்களும் மட்டும் அஞ்சி நடுங்கிய வண்ணம் அங்கிருந்துள்ளனர். அவர்கள் கம்புகளாலும் இரும்புத் தடிகளாலும் தாக்கப்பட்டுள்ளனர். வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்த கிரைன்டர்கள் முதலியன அடித்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள ஒரே சற்றுப் பெரிய கான்க்ரீட் வீடு விடுதலைச் சிறுத்தைகளின் முகாம் தலைவர் தம்பிதுரை (த/பெ நாகூரான்) யுடையது. அதற்குள் நுழைந்து இரும்பு பீரோவை உடைத்துள்ளனர். கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன.

   வன்முறை தொடங்கிய கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் இருந்து போலீஸ் வந்து குவிந்து நிலைமையைக் கட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

   ஆனால் காவல்துறை வருவதற்குள்ளான இந்த இடைப்பட்ட சுமார் 45 நிமிடங்களில் குறைந்தபட்சம் பத்து பேர்கள் கடுமையாகத் தக்கப்பட்டனர். அதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். சிதம்பரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட எட்டு பேர்களில் இந்த நால்வரும் கடலூர் மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் ஜிப்மெருக்கு அனுப்பப் பட்டனர். இவர்களில் அய்யாக்கண்ணு மகன் பழனி (80) தாக்கப்பட்ட 13ம் நாள் வீடிற்குக் கொண்டுவரப்பட்டு மரணம் அடைந்தார். சிவக்கொழுந்து மனைவி பாப்பா (65) சரியாக ஒரு மாதம் கழித்து ஜிப்மெர் மருத்துவமனையில் இறந்தார். இவர்களுக்கு வெளிக்காயங்கள் இருந்தது பிரேத பரிசோதன அறிக்கையில் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இருவர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  .

    வாசல்களில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் இரு டாடா ஏஸ் வாகனங்கள் அடித்துச் சேதப்படுத்தப்பட்டன. பல வீடுகளில் கிரைன்டர், மிக்சி முதலியன நொறுக்கப்பட்டுள்ளன. ஒரு குடிசை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

  தம்பிதுரையின் வீடு சேதப்படுத்தப்பட்டது தவிர உடைக்கப்பட்ட பீரோவிலிருந்த 3 பவுன் சங்கிலி ஒன்றும் வாசலில் பம்புடன் இணைக்கப்பட்டிருந்த மோட்டார் ஒன்றும் வன்முறையாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

   தாக்குதல் நடந்த அடுத்த நாள் (ஏப்ரல் 26) இரவு வன்னியர்களுக்குச் சொந்தமான இரு மோட்டார் கொட்டகைகள் எரிந்துள்ளன. அவற்றில் இருந்த விதை நெல் முதலியனவும் எரிந்துள்ளதாக வன்னியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தலித் மக்களே அதைச் செய்தனர் எனவும் குறிப்பான சில பெயர்களைச் சுட்டியும் வன்னியர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதை மறுத்த தலித் மக்கள் இதை வன்னியர்களே செய்து விட்டுத் தம் மீது பழி போடுகின்றனர் எனக் கூறுகின்றனர்.

மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள்

  அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் சென்ற ஏப்ரல் 25 அன்று பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (குற்ற எண் 114/14) மற்றும் மே 17 அன்று தாக்கல் செய்யப்பட்ட  சட்டப் பிரிவுத் திருத்த அறிக்கை ஆகியவற்றில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இ.த.ச 1147,148,294 (பி), 324,323,307,379,436, 302 3 of PPD act, SC St Act திருத்தப்பட்ட அவசரச் சட்டம் 2014  3(1)(r), 3(1)(s), 3(1)(0), 3(2)(va) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

   ஏப்ரல் 25 அன்று 25 பேரும், 26ல் ஒருவரும், மே 19ல் ஒருவரும், 23ல் மூவரும் ஆக 30 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 78 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 48 பேர் தேடப்பட்டு வருவதாகவும் வழக்கை விசாரித்து வரும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாராம் அவர்கள் குறிப்பிட்டார். மற்றவர்களைக் கைது செய்வதில் ஏன் இந்தத் தாமதம் எனக் கேட்டபோது மூன்று படைப் பிரிவுகள் அமைத்துத் தேடி வருவாதாகவும் விரைவில் அவர்களைப் பிடித்துவிடுவதாகவும் அவர் கூறினார்.

   முதல்நாள் கைது செய்யப்பட்ட அத்தனை பேரும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருந்தும் இன்று பிணையில் வெளி வந்துள்ளனர். மற்றவர்களும் இன்று இச் சட்டத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் தற்போது இருவர் இறந்துள்ளதால் இ.த.ச 302, 307 வது பிரிவுகளின் கீழ் பிணை பெற வேண்டியுள்ளதால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. எனினும் அவர்களும் இந்தப் பிரிவுகளிலும் பிணை பெற்று விரைவில் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

   தமது மோட்டார் கொட்டகைகள் எரிக்கப்பட்டதாக வன்னியர்கள் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

     மே 23 அன்று நடந்த அமைதிக் கூட்டத்தில் தலித் மக்கள் மட்டுமே கலந்து 
கொண்டுள்ளனர்.. நாங்கள் விசாரித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் வந்து தலித் மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

   இறந்து போன இருவர் குடும்பங்களுக்கும் தலா 1,85,000 ரூபாயும், பிற காயம்பட்ட ஒவ்வொருவருக்கும் 2500 முதல் 5,000 ரூபாய் வரையும், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டவர்களுக்கு 3,000 முதல் 8,000 வரையிலும், எரிந்த மற்றும் தாக்கப்பட்ட வீடுகளுக்கு 2,500 முதல் 5000 ரூபாய் வரையும் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் கூற்று

   இரு தரப்பிலும் நாங்கள் பலரையும் சந்தித்தோம். ஆண்கள், பெண்கள் இளைஞர்கள் என ஒவ்வொரு தரப்பிலும் சுமார் 50 பேர்கள் எங்கள் முன் வாக்குமூலங்கள் அளித்தனர். அவர்களின் பெயர்கள் இங்கே தவிர்க்கப்படுகின்றன. வன்னியர் தரப்பில் எழுத்து மூலமாகவும் வாக்கு மூலங்கள் அளிக்கப்பட்டன.

   தலித் மக்கள் கூறியது: “மாம்பழத்துக்கு ஓட்டுப் போடமாட்டீங்களான்னு சொல்லி அசிங்க அசிங்கமா திட்டிகிட்டே வந்து அடிச்சாங்க. எங்க பசங்க பேன்ட் சர்ட் போட்டுட்டு ரோடு வழியாப் போக முடியாது. பள்ளிக் கூடத்துக்குப் போற பொம்புளப் புள்ளங்களை வன்னியர் தெரு தாண்டுற வரைக்கும் யாராவது கூடவே பெரியவுங்க கொண்டு போய் விட வேண்டி இருக்கு. டீக்கடைகள்ல எங்களுக்கு டவரா செட்டிலதான் டீ குடுப்பாங்க. பஸ்சில அவங்க ஏறி உட்காந்தப்புறந்தான் நாங்க ஏறணும். இப்ப அவங்க எங்களுக்கு வேல கொடுக்கிறதுல்ல, எங்க ஆடு மாடுங்களை மேய்க்க விடமாட்டேங்குறாங்க. நாங்க எல்லாத்தையும் பக்கத்து கிராமங்கள்ல இருக்கிற எங்க சொந்தக்காரங்க வீடுகளுக்கு ஓட்டி விட்டுட்டோம் நாங்க இந்த ஊருல தொடர்ந்து இருக்க முடியாது. எங்க புள்ளைங்களாவது பயமில்லாம வாழ ஏதாவது வழி செய்யணும். சிதம்பரம் பை பாஸ் ரோட்ல இருக்கிற கூத்தங் கோயில்ல எங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கணும். நாங்க எல்லாரும் அங்கே போயிடுறோம்.”

    இவற்றைச் சொல்லும்போது சிலர் அழுதனர். எல்லோர் கண்களிலும் பயம் வெளிப்படையாகத் தெரிந்தது. ஓட்டுக் கேட்க வந்த பா.ம.கவினரிடம் சம்பந்தம் வச்சுக்கலாமா என தலித் யாரோ ஒருவர் கேட்டதால்தான் இவ்வளவும் நடந்துள்ளது என அவர்கள் சொல்கின்றனரே என நாங்கள் கேட்டபோது அப்படியெல்லாம் எதுவும் நடக்கவே இல்லை என உறுதியாக மறுத்தனர். அதே போல வன்னியர்களின் இரு மோட்டார் கொட்டகைகள் எரிக்கப்பட்டதற்குத் தாங்கள் காரணம் இல்லை, அவர்களே எரித்துக் கொண்டு விட்டுத் தம் மீது புகார் கொடுத்துள்ளதாகவும் கூறினர். போலீஸ் காவல் உள்ள போது நாங்கள் எப்படி அதைச் செய்திருக்க முடியும் என்றனர். வன்னியர்களைப் போலீஸ் தேடிக் கொண்டுள்ளபோது அவர்கள் மட்டும் இதை எப்படிச் செய்திருக்க முடியும் என நாங்கள் கேட்டபோது, அவங்க எல்லாம் பக்கத்துக் கிராமங்கள்லதானே ஒளிஞ்சிருக்காங்க, ராத்திரியில வந்து எரிச்சிருப்பாங்க என்று பதில் வந்தது.

  வன்னியர் தரப்பில் இத்தகைய தீண்டாமை ஒதுக்கல்களில் முன்நிற்பவர்களாக முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர்கள் தமிழ்மாறன், தன ராஜேந்திரன், இன்றைய தலைவர் செந்தில், மற்றும் லோகநாதன், ஆசைமணி, முத்துக்குமரன், ராஜசேகரன், கபிலன் முதலானவர்களின் பெயர்களைக் கூறினர்.

   வன்னியர் தரப்பில் கூறியது: “இதுவரைக்கும் எங்க கிராமத்துல எந்தப் பிரச்சினையும் வந்தது இல்லை. இப்ப ஓட்டுக் கேக்கப் போனபோது அவங்க பசங்க யாரோ ஏதோ பொண்ணு தருவீங்களான்னு சொன்னதா சொல்றாங்க. அன்னைக்கு ராத்திரி எங்க ஆளுங்க இதைக் கேக்கப் போனபோதுதான் பிரச்சினை. ரொம்பப் பேரு போகல. ஒரு இருவது முப்பது பேரு போயிருப்பாங்க. ஆனா எழுபது பேருக்கும் மேல கேஸ் போட்டுத் தேடுறாங்க. இந்தப் பிரச்சினைக்குச் சம்பந்தமே இல்லாத இஞ்சினீரிங் படிக்கிற கதிரவன், விஜயபாலன், கலைச்செல்வன் அப்புறம் விஜயேந்திரன் மாதிரி மாணவர்களை எல்லாம் புடிச்சுக் கைது பண்ணி இருக்காங்க. வெளியூர்கள்கள்ல வேல செஞ்சுட்டுருக்கவங்களை எல்லாம் கேஸ்ல சேத்திருக்காங்க. அப்பாவிங்கள கேஸ்ல இருந்து விடுவிக்கணும்.”

   நிறையப் பெண்கள் முன்வந்து எங்களிடம் பேசினர், தங்களின் மோட்டார் கொட்டகைகள் எரிக்கப்பட்டது தொடர்பாகக் கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் குறை கூறினர். ஏப்ரல் 24 அன்று தங்கள் தரப்பில் கொஞ்சப் பேர்கள் சென்று தாக்குதல் நடத்தியதை ஏற்றுக் கொண்ட அவர்கள், எனினும் இறந்து போனவர்களுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பில்லை எனவும், அவர்கள் கீழே விழுந்து இறந்திருக்கலாம் எனவும் கூறினர். ஏன் நீங்கள் இப்போது தலித் மக்கள் யாருக்கும் வேலை கொடுக்கவில்லை எனக் கேட்டபோது இப்பத்தான் எல்லாம் நடந்திருக்கு. எங்கள் ஆம்பிளைகளே இன்னும் வீடு திரும்பல. .அவங்க வந்து விவசாய வேலைகளைத் தொடங்கினாதான நாங்க அவங்களுக்கு வேலை கொடுக்க முடியும் என்றனர்.

   அன்றைய தாக்குதலில் நேரடியாகப் பங்கு பெறாத சிலரும் கைது செய்யப்பட்டிருப்பதை தலிப் தரப்பிலும் ஏறுக்கொண்டனர். இது குறித்துத் துணைக் கண்காணிப்பாளரைக் கேட்டபோது இந்த வன்முறையை நியாயப்படுத்தி இதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த வகையில் அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அவ்வளவு பேரும் குற்றவாளிகளே எனவும் தாங்கள் அப்பாவிகள் யாரையும் கைது செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.

எமது பார்வைகளும் பரிந்துரைகளும்

1. வடக்கு மாங்குடியில் இதுவரை பெரிய சாதி மோதல்கள் நடைபெறாவிட்டாலும் பல்வேறு வடிவங்களிலும் தீண்டாமை ஒடுக்குமுறைகள் அங்கு தொடர்ந்து இருந்து வந்துள்ளன. நாலாபுறமும் ஆதிக்க சாதியினரால் சூழப்படுள்ள இம்மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  தேர்தலை ஒட்டிய இன்றைய தாக்குதல் இந்த அச்சத்தை மிகுதிப்படுத்தியுள்ளது. இனிமேலும் இந்தக் கிராமத்தில் வாழ இயலாது என்று முடிவெடுக்கும் நிலைக்கு இன்று அவர்கள் வந்துள்ளனர். தலித் மக்களுக்குத் தனிக் குடியிருப்பு வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு கட்டத்தில் வைத்த கோரிக்கையை இன்று அவர்கள் ஒரு கையறு நிலையில் தன்னிச்சையாக வைக்க நேரிட்டுள்ளனர். அமைதிக் கூட்டத்திலும் அவர்கள் இக் கோரிக்கையை வைத்துள்ளனர் சுற்றிலும் ஆதிக்கச் சாதியினரால் சூழப்பட்டுள்ள நிலையும், சாதி வெறி அரசியல் ஒன்று இங்கு கட்டமைக்கப்ப்டுகிற சூழலும் இன்று தங்களின் பாரம்பரிய வாழிடத்தை விட்டுவிட்டு வெளியேறும் நிலைக்கு த்லித் மக்களைத் தள்ளியுள்ளது கவலை அளிக்கிறது. இந்த அச்சத்தைப் போக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2. தாக்குதல் நடத்தியது தொடர்பான குற்றச்சாட்டில் 78 பேர்கள் இருந்தும் மாதம் ஒன்றாகியும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 48 பேர்கள் இன்னும் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. தருமபுரியில் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட பலர் பின்னர் அரசியல் தலையீட்டின் அடிப்படையில் கைது செய்யப்படாமல் போனது போல இங்கும் நிகழக் கூடாது. தேடப்படுகிற பலரும் அருகிலுள்ள கிராமங்களிலேயே ஒளிந்துள்ளதாகத் தெரிகிறது. மூன்று தேடுதல் படைகள் அமைத்தும் அவர்களைக் கைது செய்ய இயலவில்லை எனச் சொல்வது நம்பும்படியாக இல்லை. காவல்துறை உடனடியாகப் பிறரையும் கைது செய்ய வேண்டும்.

3. இந்தத் தாக்குதலுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்ததில் முழுச் சமூகத்திற்கும் பொறுப்புள்ளது எனக் காவல்துறை சொல்வது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. எனினும் முற்றிலும் தொடர்பில்லாத சில மாணவர்களும், வெளியூரில் இருந்த சிலரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் என வன்னியர் தரப்பில் சொல்லப்படுவதால் காவல்துறையினர் இதைத் தீர விசாரித்து அதில் உண்மை இருந்தால் அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்கலாம். அதேபோல இப்போது வழக்கில் சேர்க்கபடாதவர்களில் யாரும் வன்முறையின் பின்னணியில் இருந்துள்ளனரா எனத் தீர விசாரித்து அப்படி இருந்தால் அவர்களும் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும்.

4. ஆதிக்க சாதியினரின் சுடுகாடு உடனடியாக தலித் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப் பட வேண்டும் தலித் மக்களின் சுடுகாட்டிற்குச் செல்லும் பாதை நீர் வடிகாலைப் பாதிக்காத வகையில் உடனடியாகச் சீர்திருத்தப்பட வேண்டும். தலித் மக்கள் பயன்படுத்துவதற்கு இன்னும் அதிக அளவில் கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் உடனடியாகக் கட்டித் தரப்பட வேண்டும். தலித் மக்களுக்குக் கட்டித் தரப்பட வேண்டிய சுமார் எட்டு தொகுப்பு வீடுகளின் பணி கட்டுமானப் பொருட்கள் வழங்கப் படாமையினால் நின்று போயுள்ளது. உடனடியாக அவற்றை வழங்கிப் பணிகளை நிறைவு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.

5. சுற்றிலும் ஆதிக்கச் சாதியினரால் சூழப்பட்டுள்ள தலித் மக்கள் தற்சார்பு பெற அவர்களுக்கு நிலம் அளிக்கப்படுதல் அவசியம். குடும்பம் ஒன்றிற்கு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் அளிக்கும் திட்டம் இங்கு உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதுவரை நூறு நாள் வேலைத் திட்டம் முதலியவரற்றை தலித் மக்களுக்கு உடனடிப் பயன் அளிக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். தற்போது இவ்வேலைத் திட்டத்தில் பங்குபெற்றவர்களுக்கு இரு மாத ஊதிய பாக்கி இருப்பதாகத் தலித் தரப்பில் கூறப்பட்டது. அது உடனடியாக வினியோகிக்கப்பட வேண்டும்.

6. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு முன் ஜாமீன் அளிக்கப்படக் கூடாது என விதி இருந்தும் அவர்களுக்கு முன் ஜாமீன் அளிப்பதும், கைது செய்யப்பட்டவர்கள் எளிதில் பிணையில் விடுதலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவது வருந்தத்தக்கது. நீதிமன்றங்களும் இதற்கு ஒத்துழைப்பது வேதனை அளிக்கிறது. தற்போது திருத்தப்பட்ட வன்கொடுமைத் தடுப்பு அவசரச் சட்டத்தில் (2014) வன்முறையாளர்களைப் பிணையில் விடுதலை செய்யும் போது பாதிக்கப்பட்டவர்களிடம் இவ்வாறு விடுதலை செய்வதால் தங்களுக்கு ஏதும் அச்சுறுத்தல் உள்ளதா என அவர்களின் கருத்தைக் கேட்க வேண்டும். எனினும் இவ்வாறு கேட்கப்படாமலேயே இப்போது கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நாங்கள் கேட்டபோது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எளிதில் இனிப் பிணையில் விடுதலை ஆகாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகத் துணைக் கண்காணிப்பாளர் பதிலுரைத்தார். திருத்தப்பட்ட அவசரச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநிலக் காவல்துறைத் தலைமை இச் சட்டப் பிரிவுகளை விளக்கி உரிய சுற்றறிக்கைகளை உடனடியாகக் காவல் நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும்.

7. தலித் மக்களுக்கு வேலை கொடுக்க மறுப்பது, வன்னியர் பகுதி வழியே தலித் மாணவ மாணவிகள் செல்வதற்கு அச்சம் நிலவுவது, தலித் மக்கள் ஆடு மாடுகள் மேய்ப்பதற்குத் தடை என பல பிரச்சினைகள் உள்ளன. இத்தகைய அச்சங்களைப் போக்கும் வண்ணம் இரு தரப்பினரையும் கூட்டி அமைதிப் பேச்சு வார்த்தை ஒன்றை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.

 தொடர்பு: 

அ.மார்க்ஸ், 
3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரி நகர், 
அடையாறு, 
சென்னை- 600020.   
செல்: 94441 20582, 9894054640

நன்றி: அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக