புதன், ஏப்ரல் 29, 2020

கல்வியை அறிதல்


கல்வியை அறிதல்

(நூலறிமுகம்… தொடர்: 016)

மு.சிவகுருநாதன்

(இரா. எட்வின் எழுதி,  நற்றிணைப் பதிப்பக வெளியிட்ட, எது கல்வி?’ என்ற கட்டுரைத் தொகுப்பு குறித்த  பதிவு.)


     கல்விச் சிந்தனைகளை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்குமான எளிய மொழி நடையில் எழுதுபவர்கள் என என்னால் இப்போதைக்கு இருவரைச் சுட்டமுடியும். ஒருவர்: பேரா. ச.மாடசாமி, இன்னொருவர்: கவிஞர் இரா.எட்வின். இவர்கள் தங்களுடைய அனுபவங்கள் வாயிலாக சிக்கல் மிகுந்த கல்விப் பிரச்சினைகளை மிக  எளிமையாகவும் நேர்மையாகவும் அணுகி கல்விச் சிந்தனைகளை அகலிக்கச் செய்கின்றனர்.  பேரா. ச.மாடசாமி அவர்களின் நூல்கள் பலவற்றை இங்கு அறிமுகம் செய்துள்ளோம். இப்போது எட்வின். 

    ‘எது கல்வி’ எனும் இந்நூலில் தினமணி டாட் காமில் வெளியான ‘முடியும் வரையும் கல்’ என்ற தொடரில் இடம்பெற்ற 29 கட்டுரைகளின் தொகுப்பாக உள்ளது. எழுதத் தூண்டிய உமா ஷக்திக்கும் நூலாக்கத்திற்கு கவிஞர் தம்பிக்கும் புகைப்படக் கலைஞர் சமயபுரம் ரவிக்கும் நன்றி மட்டும் சொல்லி, நூல் குறித்து முன்னுரைக்க விரும்பாமல், வாசகர்கள் மவுனமாக கடக்காமல் கருத்துகள் சொல்ல வேண்டுகிறார். ஒவ்வொரு கட்டுரையிலும் அனுபவ வீச்சுக்களின் விவரணையும் இறுதியில் முத்தாய்ப்பாய் கவிதை போன்று ‘நச்’சென்று தாக்குகிறார் எட்வின். கல்வி மற்றும் சமூக அனுபவங்கள், ஆதங்கங்கள் என நீண்டு இறுதியில் ஒரு தீர்வை நோக்கி நகர்கின்றன. 

    நமது மூளையில் தேவையில்லாமல் திணிக்கப்பட்டவற்றை வெளியெற்றுவதே கல்வி என்பார் பெரியார். கல்வி குறித்த இன்றைய சமூகத்தின் புரிதல் மிகவும் பின்னோக்கியதாக உள்ளது. மதிப்பெண்கள், வேலை, பணம்,  ஆங்கிலம் போன்றவற்றின் மீதான அதீத வெறியாக கல்வியின் தடம் மாறியிருக்கிறது. 

   ஊருக்கு ஒரு தொடக்கப்பள்ளி இருந்த நிலை மாறி இங்கு 10 குழந்தைகளுக்குக் குறைவான பள்ளிகளை மூடுதல், 25 குழந்தைகளுக்கு குறைந்த பள்ளிகளைக் கணக்கெடுத்தல் என்று போய்க்கொண்டிருக்கும் சூழலில் வாக்காளர் ஒருவருக்கு ஒரு வாக்குச்சாவடி சாத்தியமெனில் ஒரு மாணவனுக்காக ஒரு பள்ளியும் சாத்தியமே என்று சொல்கிறார், நியாயம்தானே! (பக்.20) அன்றைய நாளந்தாவில் மூன்று மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியல்லாத ஊழியரும் இருந்த வரலாற்றாதாரங்களை எடுத்துக்காட்டி, அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் வகுப்பு ஒரு ஆசிரியர், பள்ளிக்கு  ஒரு ஆசிரியல்லாத ஊழியர் அவசியம் என்பதை உணரவைக்கிறார். (பக்.142)

  வீட்டுப்பாடச் சுமையை என்ன செய்வது? இதை ஒழித்து, பொதுப்பள்ளி அமைப்பை வளர்த்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் கல்வித்துறை அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள், கல்வித்தந்தைகள் ஆகியோர் இரண்டாண்டுகள் பள்ளிக்கு போய் படிப்பது. (பக்.26) பட்டும் புத்தி வருமா இவர்களுக்கு?


  பள்ளிகளில் கழிவறை வசதிகளில்லை; இருந்தாலும் வெளியே அனுமதியில்லை, என்ற நிலையில் கொஞ்சம் மாற்றம் தற்போது 10 நிமி. இடைவேளை கிடைக்கிறது. ஆனால் தேர்வறையில் 200 நிமி. மாணவனை முடக்குவது கொடிய வன்முறையன்றி வேறென்ன? (பக்.32) சிறுநீருக்கு மணியடித்த நிலைமை சற்றுமாறி இப்போது தண்ணீர் குடிக்க மணியடித்துக் கொண்டுள்ளனர். இவர்களைத் திருத்த முடியுமா?

    கல்வியின், பள்ளியின் பணிதான் என்ன? “நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களை உருவாக்குவது மட்டுமல்ல ஒரு பள்ளியின் கடமை. விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல நடிகனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை உருவாக்கித் தரவேண்டியதும் பள்ளியின் கடமைதான்”, (பக்.43)

   “முன்வரிசை பிள்ளைகளில் இருந்து நம்மால் சான்றோனை, மருத்துவனை, வழக்கறிஞனை, பொறியியல் வல்லுனனை, பெரிய அதிகாரிகளை உருவாக்க முடியும். அதைச் செய்வோம். அதே வேளை சமூக அக்கறையுள்ள கங்குகளை, தலைவர்களை பின்னிருக்கைகளிலிருந்து (மாப்பிள்ளை பெஞ்ச்) உருவாக்க முடியும். அதையும் தவிர்க்காமல் செய்வோம்.”, (பக்.49)

    எல்லாக் கட்டுரைகளும் எட்வினின் ஈரம் காயாத நெகிழ்வானுபவங்கள்தான். திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி பற்றிய கட்டுரை அனைவரையும் நெகிழவைக்கும். ஆனால் திருப்பூர் தாய்த் தமிழ்ப் பள்ளி, திண்டிவனம் ரோசனையில் பேரா. பா.கல்யாணி நடத்தும் பள்ளி என விதிவிலக்குகளை எவ்வளவு காலம் பேசுவது? கல்வி பற்றிச் சிந்திப்பவர்கள் தனிப்பள்ளி தொடங்கியாக வேண்டுமா? பொருளில்லையேல் ஒரு கட்டத்தில் அது என்னவாகும்? பொதுக்கல்வி இந்நிலையை எட்டும் வாய்ப்புகள் அருகிவருவதை என்ன செய்வது? இதை எவ்வாறு மாற்றப் போகிறோம்? என்பதே இன்றைய கேள்வி. 

“மலம் அள்ளுபவனின்
எந்தக் கை
பீச்சாங்கை” எனும் சதீஷ்பிரபுவின் கவிதையில் தொடங்கும் ‘வந்தே மாதரம் சொல்லு’ கட்டுரை பாடநூல்களில் மறைக்கப்பட்ட வரலாறுகளை இணைக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. 

   “இப்படியாக மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பதிவு செய்வது பொதுத்தளத்திற்கு அறியத் தருவது மிகவும் அவசியமானதாகும். அவற்றைப் பாடத்திட்டத்தில் வைத்து மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டியது வேறெதையும்விட அவசியமானது”, (பக்.89)

  “நல்ல கல்வி ஆரோக்கியமான விவாதங்களுக்கு மாணவர்களை உந்தித் தள்ளும். இங்கோ பாடப்புத்தகம் சொல்வதை அப்படியே மாணவனை நம்பச் சொல்கிறது. பாடப்புத்தங்களை அவற்றை எழுதுபவர்கள் சித்தாந்தம் முடிவு செய்கிறது. பாடநூல்களை எழுதுபவர்களை ஆளும் வர்க்கம் முடிவு செய்கிறது”, (பக்.105) 

    ரோஹித் வெமுலா பற்றிய கட்டுரை அவர் தலித்தா இல்லையா என்று வாதிட்டதைக் குறிப்பிடுகிறது. உ.பி. கொல்லப்பட்ட இஸ்லாமியர் வீட்டில் இருந்தது மாட்டுக்கறியா இல்லையா என தடயவியல் சோதனை எல்லாம் நடத்தினர். தலித் என்றால் அல்லது இல்லையென்றால், மாட்டுக்கறி என்றால் கொல்லலாம் என்று எந்தச் சட்டத்தில் இருக்கிறது? மநுவின் சட்டத்தில் மட்டுமே. மநுவின் ஆட்சி (தாக்கம்) என்று ஒழிக்கப்படும்போதுதான் சமத்துவக் கல்வி மலரும்.
  
    சாக்ரடீஸ் தொடங்கி ரோஹித் வெமுலா என நீளும் கொலை (நஞ்சு கொடுத்து கொல்வதும் தற்கொலைக்குத் தூண்டுவதும் கொலைதான்.) எது குறித்தும் விவாதிக்கிற, விவாதித்துக் கண்டுணரும் விஷயத்தை ஒப்புக்கொள்கிற ஒரு கல்வித்திட்டத்தைச் சத்தமாக கேட்போம்”, (பக்.105) என்று முடிக்கிறார்.  

   இருளர் வீட்டு குழந்தைகள் படிப்பதில் ஏற்படும் இன்னல்களையும் பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் சாதிப்பாகுபாடுகளையும் “பாம்பு பிடிப்பவன் பிள்ளை படிக்கக் கூடாதா?”, என்ற கட்டுரை பேசுகிறது. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. வாக்ரிகள், புதிரை வண்ணார் போன்ற பல சமூகங்கள் நிலை எழுத்தில் வடிக்க இயலாது. பள்ளிக்குள் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் சாதி, மதவாதிகளாகவேச் செயல்படுவது கல்வியின் பேரவலம்.

   ‘கலகல வகுப்பறை’ கட்டுரை அந்த அமைப்பின் செயல்பாடுகளையும் பொன்னீலன் பார்வையிட்ட வகுப்பறை நிகழ்வையும் இணைத்து ஒரு வகுப்பறை எப்படி இருக்கலாம் என்பதையும் விவரிக்கிறது. இந்தியா முழுமைக்கும் எப்படிப் பொதுவானப் பாடத்திட்டம் சாத்தியமாகும்? நிலவியல் வேற்றுமைகளைக் கணக்கில் கொள்ளாத பாடத்திட்டத்தால் பலனில்லை என்பதும் விளக்கப்படுகிறது.

    “சென்னைப் பெருவெள்ளம் (டிசம்பர் 2015) கொண்டு சேர்ந்த மூன்று நல்ல விஷயங்கள் என, 


  • இஸ்லாமிய சமூகத்தின் மீதான பொய்யான பிம்பங்களை அழித்தொழித்த இஸ்லாமியப் பிள்ளைகளின் தியாகம் செறிந்த மக்கள் சேவையும், அது கொடையளித்த மதம் கடந்த மனிதநேயமும்.
  • கூவத்தை சில காலம் சுத்தமாக வைத்திருந்தது.
  • ‘நாப்கின்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே தீட்டுப் பட்டு விட்டது போல் இருந்து வந்த அசூசையை பெருமளவு துடைத்துப் போட்டது”, (பக்.149) 


     என்பதைப் பதிவு செய்து பள்ளிகளில் ‘நாப்கின்’ எரியூட்டிகள் (incinerator) 50,000 செலவில் அமைக்க வேண்டும் என்பதைக் கோருகிறார்.

    இஸ்லாமியர்களின் தொண்டுகள் விடுதலைக்கு முன்னும் பின்னும் வரலாற்றில் பதிவானவை. இதற்கு முன் சுனாமில் (2004) அவர்களது அளப்பரிய பணி வெளிப்பட்டது. ஆனால் நமது சமூக மறதி நோயால் இதை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவலம் மிகக்கொடுமையானது. ‘கொரோனா’ சூழலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். 

   நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர் சமணராயினும் அவர் ஆசிரியர், மாணவர்களுக்கு வகுக்கும் இலக்கணங்கள் மோசமாக இருப்பதும் மகளுக்கு அதாவது பெண்ணுக்கு கல்வியளிக்கக் கூடாது என்பதை மறைமுகமாக வலியுறுத்துவது போல் இருப்பதும் சுட்டப்படுகிறது. 18 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை அரசுகள் தட்டிக் கழிக்கின்றன. 6-14 கட்டாய இலவசக் கல்வி ஒப்புக்காக நடத்தப்படுகிறது. 

   ‘வங்கிமுறைக் கல்வி’ கட்டுரையில் பாவ்லோ பிரைய்ரே சிந்தனைகளுடன் கல்வி, படிப்பு இவற்றின் வேறுபாடுகள் விளக்கப்படுகின்றன. இந்தியக் கல்வி முறையின் சீரழிவிற்கு மெக்காலே முன்நிறுத்தப்படுகிறார். அவர் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதம் உண்மைத்தன்மையற்றது என்று சொல்லும் ஆய்வுகள் உள்ளன. விடுதலைக்குப் பிந்தைய எந்தக் கல்வித்திட்டமும் வேத, குருகுலக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்டதே காரணமாகும். இன்று கூட ஆசிரியர் பயிற்சிகளில் ‘Mentors’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். நமது கல்வியில் காலனியக் கறைகளைவிட வேதக் கறைகள் அதிகம்.  
   
    பெண்கல்வி, திருநங்கைகள், காட் ஒப்பந்ததால் அழிக்கப்படும் பொதுக்கல்வி, பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் மனிதர்கள், +2 இல் 1110 மதிப்பெண்கள் எடுத்த மாணவனைத் திட்டித் தீர்க்கும் தாயார், எல்லாருக்கும் முதல் பரிசு வழங்கும் பள்ளி,  சூரியனைக் காட்டப் பயன்படும் திறன் வகுப்பறைத் (smart class) தொழில்நுட்பங்கள், தேர்ச்சியை விட குழந்தையின் உயிரே முதன்மையானது, கழிப்பிட, குடிநீர் வசதிகளின் தேவை போன்று கல்வியின் பன்முகங்கள் இங்கு ஆய்வுக்குள்ளாகின்றன. 

      பிசா (PISA) தேர்வில் 74 இல் 73 வது இடம் பெற்றிருக்கும் நாம், அனைவரும் தேர்ச்சி என்ற இலக்கு நோக்கிய ஓட்டத்தில் வெறு எதையும் கண்டுகொள்ள விரும்பாத கல்வித்துறை என்ற நிலையில்  பாடத்திட்டத்தையும் வினாத்தாளையும் கேரளாவைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார். (பக்.116) ‘கொரோனா’ உள்பட நமக்கு எது என்றாலும் கேரள மாடல் அதாவது சிவப்பென்றால் ‘அலர்ஜி’! குஜராத் மாடல் இருந்தால் சொல்லுங்க, எட்வின்! 

   கல்விப்புலத்திற்கு வெளியிலிருந்து கல்வி பற்றிப் பேசுவது கல்விப்புலத்திலிருந்து பேசுவதும் ஒன்றாக இருக்க இயலாது. எனவே இவை முதன்மை வாய்ந்தாகின்றது. தமது நீண்ட கல்வி மற்றும் சமூக அனுபவங்களின் வாயிலாக கல்வி குறித்த ஆக்கச் சிந்தனைகளையும் தீர்வுகளையும் எட்வின் முன்வைத்துள்ளார். இவற்றை அரசுகள் செயல்படுத்தும் என்றெல்லாம் நம்ப முடியாது. இதனை வாசிப்பவர்களுக்கு கல்வி பற்றிய புரிதலையும் குறிப்பாக பெரும்பாலான ஆசிரியர்களுக்கு இருக்கின்ற கல்வி பற்றிய கற்பிதத்தையும் மாற்ற முடிந்தால் அதற்கே மகிழ்ச்சியடையலாம்

நூல் விவரங்கள்:
எது கல்வி?   
இரா. எட்வின்
முதல் பதிப்பு: டிசம்பர் 2016
பக்கங்கள்: 176
விலை: 150

 வெளியீடு:
நற்றிணை பதிப்பகம் (பி) லிட்.,
6/84, மல்லன் பொன்னப்பன் தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை – 600005.
பேச: 044 28482818
கைபேசி: 9486177208
இணையம்:   www.natrinaipathippagam.com
இணையம் மூலம் பெற: www.natrinaibooks.com
மின்னஞ்சல்:  natrinaipathippagam@gmail.com
மதுரைக் கிளை:
நற்றிணை புக் சென்டர்,
46/A1, மேல வடம்போக்கித் தெரு,
(கூடலழகர் பெருமாள் கோயில் அருகில்)
மதுரை – 625001.
கைபேசி: 9750972043

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக