திங்கள், ஏப்ரல் 15, 2024

எஸ்.வி.ராஜதுரை 85: தமிழ் அறிவுலகின் பேராளுமை

 

எஸ்.வி.ராஜதுரை 85:  தமிழ் அறிவுலகின் பேராளுமை

மு.சிவகுருநாதன்


 

 

            சமகாலத் தமிழ் அறிவுச்சூழலை உயிர்ப்புடன் வைத்துக்கொண்டிருக்கும் அறிஞர் எஸ்.வி.ராஜதுரை. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் போன்ற கோட்பாடுகளுடனும் அவற்றைத் தாண்டியும் அரசியல், கலை, இலக்கியம், சமூகம், பொருளாதாரம், மனித உரிமை சார்ந்த படைப்புவெளியில் மட்டுமல்லாது, களப் போராளியாகவும் இயங்கிவருகிறார்.

        நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன் என்கிற வரிசையில் தமிழ் அறிவுச்சூழலுக்குப் பாரிய பங்களிப்பை நல்கியவர் எஸ்.வி.ராஜதுரை. தமிழ் அறிவுலகுக்கு மக்கள் சார்ந்த கருத்தியல், அரசியல் தெளிவை தமது எழுத்துகளில் அவர் வழங்கியுள்ளனர். மேற்கண்டவர்களது எழுத்துகள், பார்வைக் கோணங்களில் வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படைகள் ஒன்றாக அமைந்தன. இந்த அறிஞர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

        சிறுகதை எழுதும் ஆர்வத்தில் இலக்கிய உலகில் நுழைந்த அவரை அரசியல் ஆட்கொண்டது. அவர் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கத்தின் இலக்கியப் படைப்பு குறித்த மிகக் கறாரான அணுகுமுறை அவரை கட்டுரை, மொழிபெயர்ப்புகளை நோக்கித் திருப்பிவிட்டது என்கிறார். ஒருவகையில் இது தமிழ் அறிவுலகத்திற்கு கிடைத்த கொடை எனலாம். 

       அரசியல், கருத்தியல் முரண்பாடுகளையும் தாண்டி க்ரியாராமகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் போன்றோருடன் நட்பைப் பேணியவர் எஸ்.வி.ஆர். அவரே சொல்கிறபடி மிக மென்மையான நொறுங்கிவிடும் இதயம் கொண்டவர். பிறர் மீதான விமர்சனங்களுக்கு மென்மொழியை நாடுபவர்.

             நோபல் பரிசை மறுத்த ழான் பால் சார்த்தர், புரட்சியின் இலக்கணமாகத் திகழ்ந்த அந்தோனியா கிராம்ஷி, போர்ச்சுகீசிய நாவலாசிரியர் ஹொஸே ஸரமாகோ போன்ற ஆளுமைகளைத் தமிழ்ச்சூழலில் விரிவாக அறிமுகம் செய்தவர் எஸ்.வி.ஆர்.

           மார்க்சியத் தத்துவம் சார்ந்து எழுதினாலும் அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாகவும் விரிவாகவும் உரிய சான்றாதாரங்களையும் கொண்டு எழுதும் பாணியைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்அவரது உடல்நிலை, இணையரின் உடல்நிலை பாதிப்புகளைத் தாண்டி கருத்தியலும் எழுத்துகளும் தொடர்ந்து இயங்க வைத்திருக்கின்றன. 

         இந்தத் துன்பகரமான காலத்தில்தான் யானிஸ் வருஃபாகிஸின் பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம், இரத்தம் கொதிக்கும் போது ஆகிய மொழியாக்கங்களும்  ஸரமாகோ - நாவல்களின் பயணம்,  ரஷியப் புரட்சி - இலக்கிய சாட்சியம் - மறுபதிப்பு      போன்றவையும்  விரைவில் வெளியாகும் உச்சிவெயில்  தொகுப்பும் உருவாகியுள்ளன. இது ஒருபுறம் மனநிறைவளித்தாலும் இதன் பின்னணியில் அவர் பட்ட துயரங்கள் அளவில்லாதவை. இடதுகண் பார்வையிழப்பு, முகநரம்பு வலியோடும் மார்க்ஸ், கிராம்ஷி, காந்தி, அம்பேத்கர், பெரியார் அனுபவிக்காத உடல் உபாதைகளையும் கொடுமைகளையுமா நான் அனுபவித்துவிட்டேன் என்ற கேள்வியுடன் புதிய உத்வேகத்திலும் கடின உழைப்பிலும் இவை பிறந்திருக்கின்றன. அவரது வாழ்வில் நெடுங்காலமாக வலிகளுக்கு மருந்தாகப் படைப்பிலக்கியம் பயன்படுவதையும் குறிப்பிடுகிறார்.

        1848இல் 23 பக்கங்களில் வெளியான மார்க்ஸ் எங்கல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மொழிபெயர்த்து அனைவருக்கும் புரியும் வண்ணம் அறிமுகம், விளக்கக் குறிப்புகள் என விளக்கமான நூலை எழுதினார். அந்நியமாதல், இருத்தலியமும் மார்க்ஸியமும்  என்ற இருநூல்களும்  அந்நியமாதல் குறித்து எழுதியவை. அன்புள்ள டாக்டர் மார்க்ஸ் - சோசலிசப் பெண்ணியலாளர் ஷீலா ரௌபாத்தம் எழுதிய கடித மொழிபெயர்ப்பு நூல்,  ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் போன்றவை வ.கீதா இணைந்து உருவாக்கியவை.    

       .கீதாவுடன் இணைந்து  பெரியார்: சுயமரியாதை சமதர்மம் என்ற விரிவான ஆய்வுநூல் இவரது கொடைகளுள் ஒன்று. அதன் தொடர்ச்சியாக பெரியார்: ஆகஸ்ட் 15 என்ற நூல் எஸ்.வி.ஆரால் எழுதப்பட்டு வெளிவந்தது. இவற்றின் துணைநூலாக பெரியார் மரபும் திரிபும், பெரியார், அண்ணா, கேசரி ஆகியோர் கட்டுரைகளைஆகஸ்ட் 15 துக்கநாள் இன்பநாள்பதிப்பும் வெளிவந்தன. 2007-08இல் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியாரியல் உயராய்வு மையத் தலைவராகப் பணியாற்றினார். உடல்நலனைப் பொருட்படுத்தாது தனது ஆய்விற்கும் எழுத்துப் பணிகளுக்கும் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்.  பெரியார், சுயமரியாதை இயக்க ஆய்வுக்கான கடின உழைப்பில் இடதுகண் பார்வையை இழந்தார்.

     ஆனந்த் டெல்தும்டேவின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், அம்பேத்கரியர்கள் - நெருக்கடியும் சவால்களும்  ஆகிய நூல்களை மொழிபெயர்த்தார். இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரையின் மொழியாக்கம் குறுநூலாக வெளியானது. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தொடர்பான திரிபுகளுக்கு மறுப்பாக எழுதியவை ஆயிரம் பக்கங்களைத் தாண்டும்.    

     இந்து இந்தி இந்தியா, இந்து இந்தியாஅக்ரனியிலிருந்து அத்வானி வரை,  பதி பசு பாகிஸ்தான்  போன்ற நூல்கள் இந்திய அரசியல், சமூக, பொருளாதாரச் செயல்பாடுகளைக் கூர்மையாக விமர்சிப்பவை; மதவாத வெறுப்பரசியலை எதிர்த்து எழுதியவை.

         சாட்சி சொல்ல ஒரு மரம், சொல்லில் நனையும் காலம், தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம், பார்வையிழத்தலும் பார்த்தலும்,  கூண்டுப் பறவைகள் பறந்தன பாடின  என கவித்துவமான தலைப்புகளில் கலை, இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கவிதை, நாவல், இசை ஆகியவற்றை விரும்பி ரசிக்கிறார். அவற்றை அவரது அரசியல் வழி பிறருக்கு அறிமுகப்படுத்துகிறார். உலகக் கவிதைகளை மொழிபெயர்த்து அறிமுகப்படுத்துவதில்  தணியாத ஆர்வமும் அவற்றை தனது கட்டுரைகளில் தகுந்த இடங்களில் குறிப்பிடும் லாவகமும் அவரது எழுத்தெங்கும் நிறைந்துள்ளது. சமகால அரசியலை குறியீட்டுத் தன்மையுடன் அணுகும் ஸரமாகோவின் நாவல்கள் குறித்து ஸரமாகோ - நாவல்களின் பயணம்   நூல் விவரிக்கிறது.  

 


       மரணதண்டனை எதிர்ப்பு, தடா, பொடா சட்ட எதிர்ப்பு, தலித்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக களப்போராளியாக களம் கண்டார். பலரது மரண தண்டனையிலிருந்து விடுபடவும் பல்லாண்டுகளாக சிறையில் வாடியோர் விடுதலை பெறவும் காரணமாக இருந்தார்.  

       பரிமாணம், இனி ஆகிய இதழ்களின் வழி தமிழ் இதழியலுக்குப் புதிய பாதை சமைத்தார். ஷோபியன்: காஷ்மீரின் கண்ணீர்க்கதை, அயர்லாந்தின் போராட்டம்  தேசியமும் சோசலிசமும், மனிதாபிமான ஏகாதிபத்தியம் -  தேசிய விடுதலை  போன்ற நூல்கள் தேசிய இனப்பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கொண்டவை. மார்க்ஸ் 200 கட்டுரைகளைத் தொகுத்துள்ளார்.

         ஏப்ரல் 10 அன்று தனது 85வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்த எஸ்.வி.ராஜதுரை எழுத்துப் பணிகளிலிருந்து விடை பெறும் முடிவை அறிவித்துள்ளார். கடந்த நான்காண்டுகளாக முகநரம்பு வலியால் அவதியுற்று வரும் நிலையில் சில மாதங்களில் வாதை பலமடங்கு அதிகரித்துள்ளதால் எழுத்துப் பணியிலிருந்து விடை பெறுதல்தலைப்பிலான அவரது கட்டுரை வெளியாகியுள்ளது.

         ஒரு மனிதன் தனது தொழிற்பாட்டில் நிகழ்த்தும் கடைசிச் செயல்  (Swan song). இதனால் சமுதாயத்திற்கோ எழுத்துலகிற்கோ எந்த இழப்பும் இல்லை”, என இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்தார் எஸ்.வி.ஆர். இது அவருக்கான சுமை இறக்கமாக இருந்தாலும்  தமிழ் அறிவுலகத்திற்கும் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகவே அமையும். இனி இலக்கிய வெளியைப் பொறுத்தவரையில் வாசிப்பு மட்டுமே ஒரே உறவு, எப்போதேனும்  பிடித்த கவிதைகளை உடல்நிலை அனுமதிக்கும் அளவிற்கு மொழிபெயர்க்கலாம் என்று சொல்லியிருப்பது  சற்று ஆறுதலைத் தருகிறது.

(கட்டுரையின் முழு வடிவம்)

நன்றி: இந்து தமிழ் திசை – கருத்துப்பேழை - ஏப்ரல் 13, 2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக