செவ்வாய், ஏப்ரல் 13, 2010

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*


என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல்இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன்சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்‘ கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு ‘இந்துமக்கள் கட்சி‘ சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசாரஅடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:
  • இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
  • (எழும்பூர் மியூசியம் எதிரில்)
  • நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி

பங்கேற்பாளர்கள் :

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின்மலர், நிர்மலா கொற்றவை.

எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
——————————————————————————————————————————————————
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின்கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.


திங்கள், ஏப்ரல் 05, 2010

சென்னை கவின் கலைக் கல்லூரியில் சாதி வெறி


சென்னை கவின் கலைக் கல்லூரியில் சாதி வெறி: உண்மை அறியும் குழு அறிக்கை!

சென்னை நகரின் பழம் பெருமை மிக்க கவின் கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராடுவது, அதைத் தொடர்ந்து காலவரையறையின்றி அக்கல்லூரி மூடப்பட்டுள்ளது ஆகியவற்றைக் கண்டு கவலையுற்ற சமூக அக்கறை மிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கீழக்கண்ட உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்தனர்.

உறுப்பினர்கள் :

1) பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்.
2) முனைவர் பா. சிவக்குமார், முன்னாள் முதல்வர், அரசு கல்லூரி.
3) பேரா.மு. திருமாவளவன், முன்னைப் பொறுப்பு முதல்வர், அரசு கல்லூரி.
4) கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.
5) அயன்புரம் இராசேந்திரன், பொறியாளர், தென்னிந்திய ரயில்வே.
6) குட்டி ரேவதி, கவிஞர்.
7) உதயம் மனோகரன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
8) முருகன், வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
9) சுகுமாரன், தொழிலாளர் ஒற்றுமை முன்னணி, சென்னை.
10) வெங்கட், ஆய்வு மாணவர், எம்.ஐ.டி.எஸ், சென்னை.

இக்குழுவினர் நடந்த நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிதல், கல்லூரி சுமுகமாக இயங்குவதற்குரிய பரிந்துரைகளை பொறுப்பானவர்களுக்குச் செய்தல் ஆகிய நோக்கங்களுடன் சென்ற ஏப்ரல் 30, 31 தினங்களில் போராடும் மாணவர்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், தற்போது பொறுப்பு முதல்வராக உள்ள திரு வ. ஜெயபால் ஆகியோரைச் சந்தித்தனர். கலை பண்பாட்டுத் துறைச் செயலர் திரு. வே. இறையன்பு இ.ஆ.ப. மற்றும் கலை பண்பாட்டுத் துறை ஆணையர் திரு. மணி, காவல்துறை உதவி ஆணையர் திரு. அசோக்குமார், முன்னாள் பொறுப்பு முதல்வர் திரு மனோகர் நடராஜ் ஆகியோருடன் விரிவாக உரையாடி தேவையான விளக்கங்களைப் பெற்றுக் கொண்டனர்.

பழமை வாய்ந்த இக்கவின் கலைக் கல்லூரி தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் இவ் அரசு கல்லூரிகளில் ஒன்று. மற்றது கும்பகோணத்தில் செயல்படுகிறது. நான்காண்டு பட்டப்படிப்பு (பி.எஃப்.ஏ.) மற்றும் இரண்டாண்டு பட்டமேற்படிப்பு (எம்.எஃப்.ஏ) ஆகிய பட்டப் படிப்புகள் இங்கு சொல்லித் தரப்படுகின்றன. சுமார் 620 மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். பெரும்பாலும் ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களே இதில் பயில்கின்றனர். சுமார் 80 சதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். பிற அரசு கலைக் கல்லூரிகள், மருத்துவ / பொறியியல் கல்லூரிகளுக்குத் தரப்படுகிற எந்தவித முக்கியத்துவம் மற்றும் அக்கறை எதுவும் காட்டப்படாமல் இரண்டாம் பட்சமாகவே இக்கல்லூரிகளை தமிழக அரசு நீண்ட நாட்களாக அணுகிச் செயல்பட்டு வருகிறது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர், எமது குழு உறுப்பினர் முனைவர் சிவக்குமார் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக இருந்தபோதுதான், மாணவர் போராட்டம் ஒன்றின் பின்னணியில், இக் கல்லூரியில் வழங்கப்பட்டு வந்த சான்றிதழ் ‘பட்டயம்’ என்கிற நிலையிலிருந்து ‘பட்டம்’ என்கிற நிலைக்கு மாற்றப்பட்டது. இன்று வரை AICTE அல்லது UGC ஏற்பு எதுவும் இக்கல்லூரிகளுக்கு உள்ளதாகத் தெரியவில்லை. இக்கல்லூரியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி, பணியமர்த்தல் முதலானவற்றில் அகமதாபாத்திலுள்ள NID நிறுவனத்தின் தரங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை.

மாணவர்களிடம் பேசியவற்றிலிருந்தும், நாங்கள் விசாரித்து அறிந்தவற்றிலிருந்தும் வெளிப்படையாகத் தெரிகிற வேறு சில குறைபாடுகள்:

1. பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாயினும் மாணவ, மாணவியர்க்கு விடுதிகள் ஏதுமில்லை. தரமணியில் இருந்த விடுதி இன்று மூடப்பட்டு புத்தகக் கிடங்காக மாற்றப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு மூன்று அறைகள் மட்டும் திறந்து விடப்பட்ட போதும் இப்போது அவையும் செயல்படுவதில்லை. மாணவர்கள் விடுதியில் இல்லாததால் அவர்கள் வெளியூர்களைச் சேர்நத்வர்களாயினும் உள்ளூர் மாணவர்களாகவே (day scholars) கருதப்படுவதால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான முழு உதவித் தொகையையும் பெற இயலுவதில்லை. மாணவிகளில் சிலருக்கு இசைக் கல்லூரி விடுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வசதியற்ற ஒரு மாணவர்க் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி கல்லூரிக்கு வந்து செல்வதைக் கேள்விப்பட்டு எமது குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

2. மிகப் பெரிய அளவில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. சுமார் 25 பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்தப் பணியமர்த்தலில் சீரான அளவுகோல்கள் ஏதும் கடைபிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை. முதல்வர் மற்றும் நிர்வாகத்தின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே தேர்வுகள் மற்றும் பணி நீக்கங்கள் செய்யப்படுவதாகத் தெரிகிறது. துகிலியல், சுடுமண்துறை, காட்சித் தொடர்பு வடிவமைப்பு, சிற்பத்துறை, வண்ணக்கலை, பதிப்போவியத்துறை எனப் பல துறைகள் உள்ளபோதும் குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெறாத ஆசிரியர்களை அத்துறைக்கு நியமிக்கும் போக்கு உள்ளது.

3. கவின் கலைப் பயிற்சி என்பதால் வெறுமனே பாடப் புத்தகங்கள், வகுப்பறை என்பதாகவன்றி சூளை, க்ளெய்ன், ஜக்கார்ட் மெஷின் வெல்டிங் மற்றும் டிரில்லிங் மெஷின் ஆகியவை தவிர களிமண், பாக்ஸ் போர்ட், ஷீட்மெடல், சிங்க் ப்ளேட் ஆகிய பொருட்களும் தேவைப்படுகின்றன. இந்த எந்திரங்கள் பல இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் பயன்படாமல் உள்ளன. தவிரவும் போதிய அளவு கச்சாப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த ‘ஆர்டர்’களை எடுத்துப் பயன்பெறும் சில ஆசிரியர்கள் மாணவர்களுக்கான இவற்றைச் சொந்த லாபத்திற்குப் பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. வேண்டிய மாணவர்களுக்குப் கொடுப்பது வேண்டாதவர்களைப் புறக்கணிப்பது முதலான குற்றச்சாட்டுகளும் உண்டு.

4. ஆசிரியர் பற்றாக்குறை, எந்திரங்கள் செயல்பாடின்மை, கச்சாப் பொருடகள் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக வகுப்புகள் ஒழுங்காக நடைபெறுவதில்லை. ஆசிரியர்கள் சொந்த ஒப்பந்த வேலைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாலும் வகுப்புகள் சரியாக நடைபெறுவதில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

5. கல்லூரிக்குப் போதிய ‘டாய்லட்’ முதலிய வசதிகள் கிடையாது. இரவு நேரத்தில் கல்லூரி வளாகத்தில் தங்கி வேலை செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிகிறோம். ஆனால், அவர்களை மேற்பார்வையிட ஆசிரியர்கள் யாருக்கும் பணி ஒதுக்கப்படுவதில்லை.

6. இரு கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியர்களின் முறைப்படுத்தப்பட்ட பணி மூப்புப் பட்டியல் ஏதும் தயாரிககப்பட்டுள்ளதாகவும் தெரியவில்லை. இன்று நேர்ந்துள்ள சிக்கலுக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

7. மாணவர்கள் சிறப்பாக ஏதும் திட்டங்கள் (projects) மேற்கொண்டு செயல்படும்போது அவர்களுக்கான கச்சாப்பொருள் மற்றும் பிற உதவிகள் செய்வதற்கு முறையான நெறிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதாகவும் தெரியவில்லை. இதுவும் இன்று எழுந்துள்ள சிக்கலுக்குக் காரணமாக உள்ளது.

மாணவர்கள் முன் வைக்கக் கூடிய மேலும் சில குற்றச்சாட்டுகளாவன:

1. இக்கல்லூரியில் நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்கிற பயிற்சி வகுப்புளை சில ஆசிரியர்கள் நடத்துகின்றனர். இவ்வாறு நடப்பதை எமது குழுவினரும் உறுதி செய்து கொண்டனர். தற்போது பிரச்சினைக்குக் காரணமாகியுள்ள ஆசிரியர் திரு. மனோகர் நடராஜ் இத்தகைய வகுப்பை நடத்துவதாகவும், இக்கல்லூரியில் சேர வேண்டுமானால் அவ் வகுப்பில் படிப்பது மறைமுகமாகக் கட்டாயமாக்கப்படுகிறது எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

2. முறையான வருகைப் பதிவு செய்வதில்லை. வருகைப் பதிவேடு ஒழுங்காகப் பராமரிக்கப்படுவதில்லை. மாணவர்களைப் பழிவாங்க இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

3. வகுப்புகளை ஒழுங்காக நடத்தாமலும், பயிற்சிகளே அளிக்கப்படாமலும் மாணவர்கள் தேர்வுக்கு அனுப்பப்படுகின்றனர். பிற படிப்புகளைப்போல ஏதோ புத்தகங்களைப் படித்துத் தேர்வு எழுதுவதுபோல இங்கு சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முறையிட்டால், ‘‘நீங்கள் தேர்வுகளுக்கு வாருங்கள். நாங்கள் உங்களுக்கு அதிக மதிப்பெண்களுடன் ‘பாஸ் போடுகிறோம்’ எனச் சொல்வதாகவும் மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிப்ரவரி 26 தேதிய நிகழ்வு

இந்தப் பின்னணியில் நடைபெற்ற ஒரு நிகழவே இன்றைய பிரச்சினைகளுக்கும், கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டுள்ளமைக்கும் காரணமாகியுள்ளது.

சசிகுமார் என்பவர் முதலாமாண்டு பட்ட மேற்படிப்பு மாணவர். தமிழக அரசு நடத்தவுள்ள செம்மொழி மாநாட்டில் 1330 குறள்களையும் சசிகுமார் சிற்பங்களாக ஆக்கிக் காட்சிப்படுத்தும் திட்டமொன்றை மேற்கொண்டுள்ளார். இனவெறியர்களால் யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டதை நினைவிற் கொண்டு, தீயாற் சுட இயலாதவாறு தமிழ் இலக்கியங்களைச் சுடுமண் சிற்பங்களாக ஆக்குதல் என்பதான ஒரு கருத்தமைவுடன் இந்தப் பணியைத் துவங்கியதாக அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

இப்படியான ஒரு திட்டத்திற்கு எவ்வித முன் அனுமதியும் அவர் கல்லூரி நிர்வாகத்திடமோ இல்லை செம்மொழி மாநாட்டுக் குழுவிடமோ அனுமதி பெறவில்லை என்கிறார் கலை பண்பாட்டுத் துணை ஆணையர் மணி. ஆனாலும், பொறுப்பு முதல்வர் மனோகர் நடராஜிடம் தான் வாய்மொழி அனுமதி பெற்றதாக சசிகுமார் கூறுகிறார்.

ஏற்கனவே இருந்த முதல்வர் ஓய்வு பெற்றதை ஒட்டி இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் மனோகர் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டள்ளார். இவரைக் காட்டிலும் பணி மூப்புடையவர்கள் இருந்த போதிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இவர் முதல்வராக்கப்பட்டுள்ளதாக போராடுகிற மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பிற்படுத்தப்பட்ட சாதி ஒன்றைச் சேர்ந்த இவர், தலித் மாணவர்களை இழிவாக நடத்துகிற வழக்கம் கொண்டவர் எனவும் குற்றச்சாட்டுகள் உண்டு. 2004-ம் ஆண்டில் இவர் இவ்வாறு ஒரு தலித் மாணவரை சாதி, குறிப்பிட்டுப் பேசியதை ஒட்டி எஸ்.எப்.ஐ. மாணவர்கள் போராடியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ்.கே.மகேந்திரன் இது குறித்து சட்டமன்றத்தில் பேசி உள்ளதையும் நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். இதை ஒட்டி மனோகரன் குடந்தைக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, பின் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இங்கு மீண்டும் இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.

இவர் பணி ஏற்றவுடன் குமார், நடராசன், சுரேந்திரன், சிங்காரம் ஆகிய நான்கு பகுதி நேர ஆசிரியர்களும் நிதி பற்றாக்குறையைக் காட்டி பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர். இந்த நான்கு ஆசிரியர்களும் தலித்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆசிரியரல்லாத பணியாளர்களில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இருவர் குடந்தைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பின் அந்த ஆணை ரத்து செய்யப்பட்டது எனவும் பாதிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர். எனினும் தற்காலிக பொறுப்பு முதல்வர் ஜெயபாலிடம் இது பற்றிக் கேட்டபோது அத்தகைய உள்நோக்கம் ஏதுமில்லை. நிதிப் பற்றாக்குறைதான் பணி நீக்கத்திற்குக் காரணம். சுரேந்திரன் எம்.எஃப்.ஏ. சேர்ந்ததால் தொடர்ந்து அவர் பகுதி நேர ஆசிரியராக இருக்க இயலாது. ஊழியர்களை இடமாற்றம் செய்ய நேர்ந்தது நிர்வாகக் காரணங்களுக்காகத் தான், பின் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதை ரத்து செய்தோம் என்றார்.

இப்படியான ஒரு சூழலில்தான் சசிகுமார் தனது குறள் சுடுமண் சிற்பப் பணியைத் தொடங்குகிறார். தேவையான களிமண்ணை மனோகரனின் ஒப்புதலுடன் கொண்டுவந்து கல்லூரி வளாகத்தில் இறக்குகிறார். தான் இதற்கு ஒப்புதல் அளிக்க இயலாது எனவும் உரிய தொகையை உடனடியாக வழங்க இயலாது எனவும் மனோகரன் கூறியுள்ளார். வண்டிக் கூலியை உடனடியாகக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்த சசிகுமார் மாணவர்களிடம் ரூ. 5, 10 எனச் சேகரித்து வண்டிக்காரரை அனுப்பியுள்ளார்.

இதற்கிடையில் சசிகுமாரின் நடவடிக்கைகள் சரியில்லை என ‘டிசம்பர் 12, 2010’ என்கிற தேதியிட்டு எச்சரிக்கைக் கடிதம் ஒன்று அவர் வீட்டிற்கு கல்லூரியிலிருந்து அனுப்பப்படுகிறது. தொலைபேசியிலும் பெற்றோர்கள் எச்சரிக்கப்படுகின்றனர். கலக்கமடைந்த பெற்றோர்கள் சசிகுமாரைத் திட்டியுள்ளனர்.

மனரீதியாகப் பாதிக்கப்பட்ட சசிகுமார் சென்ற பிப்ரவரி 26 அன்று வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வரது கார் கண்ணாடியை (wind screen) உடைத்துவிட்டு ஓடியுள்ளார். இந்தத் தவறை அவர் ஏற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்கது.

எனினும் இது குறித்து தற்போதைய பொறுப்பு முதல்வர் கூறுவது : ‘‘பிப்ரவரி 16-ந் தேதி அன்றே அம் மாணவன் கல்லுரிக் கட்டிடத்தில் ஒரு கண்ணாடியை உடைத்தார். நாங்கள் புகார் ஏதும் செய்யவில்லை. 19-ம் தேதி அன்று களிமண்ணுக்காக ரூ.1600 அவருக்கு அளிக்கப்பட்டுவிட்டது. அடுத்த நாள் தேர்வுக் கட்டணம் கட்ட கடைசி நாள் என அம்மாணவர் கூறியதை ஒட்டி அன்று அப்பணத்தைத் தந்தோம். எனினும் 26-ந் தேதி அம்மாணவன் கார் கண்ணாடியை உடைத்தான்.

பணம் கொடுக்கப்பட்ட பின்னும் ஏன் அப்படி நடந்து கொண்டாய் என நாங்கள் வினவியபோது, ‘செய்த குறள் பலகைகளைச் சுடுவதற்கு சூளை இல்லை என்பதால் சொந்தமாக ரூ.4200 செலவு செய்து சூளை ஒன்று கட்டினேன். அந்தப் பணம் தரப்படவில்லை. தவிரவும் வீட்டுக்கு போனில் மிரட்டியதால் ஏற்பட்ட மனப் பாதிப்பினால் அப்படி நேர்ந்துவிட்டது’ என்று பதிலளித்தார்.

ஆசிரியர் மனோகரன் பெரியமேடு காவல் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் ஒன்றை அளித்தார். கூடவே அவரைத் தூண்டிவிட்டதாக 2-ம் ஆண்டு பட்ட மேற்படிப்பு பயிலும் எஸ்வந்திரன் நான்காம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் கமலஹாசன் என்கிற இரு தலித் மாணவர்கள் மீதும் புகாரளித்தார்.

காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் இக்குற்றச்சாட்டை விசாரித்துள்ளனர். தற்போது வேறொரு வழக்கில் கொலையாளிக்கு உதவியதாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் முருசேன் மனோகரனது சாதியைச் சேர்நதவர் எனச் சொல்லப்படுகிறது. எஸ்வந்திரனின் தம்பி ஆனந்தகுமார் அதே கல்லூரியில் நான்காமாண்டு பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டுள்ளார். அவரைப் பிடித்து சாதி சொல்லித் திட்டி அடித்த முருசேன் அவரைக் கொண்டே அவரது அண்ணன் எஸ்வந்திரனை இரவு 1.30 மணி அளவில் கைது செய்து இருவரையும் கடுமையாக அடித்து சாதி குறிப்பிட்டு இழிவாகப் பேசி இரவு முழுவதும் சங்கிலியால் பிணைத்து காவல் நிலையத்தில் வைத்துள்ளார். ‘‘தேவர் காரோட கண்ணாடியை உடைத்தவன்’’ என முருகேசன் இவர்களைப் பற்றி மற்றவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாங்கள் காவல்துறை உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியபொழுது, முதல்வரின் காரை கொடூரமாக தாக்கியது குறித்து அளித்த புகாரில் எஸ்வந்த், கமலஹாசன் ஆகியோர் தூண்டிவிட்டதாகக் கூறப்பட்டிருந்ததாலேயே அவர்களைத் தேட நேர்ந்தது எனவும் யாரையும் சங்கிலியால் பிணைத்து வைப்பது தமக்கு வழக்கமில்லை எனவும் மாணவர்களின் குற்றச்சாட்டை மறுத்தார்.

அடுத்த நாள் காலை 11.00 மணிக்கு ‘‘கார் கண்ணணடியை உடைத்தவரைக் காட்டிக் கொடுத்தேன்’’ என எழுதி வாங்கிக் கொண்டு ஆனந்தகுமாரை விடுதலை செய்துள்ளனர். எஸ்வந்திரன் ‘ரிமான்ட்’ செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளிவந்துள்ளார். சசிகுமார், கமலஹாசன் ஆகிய இருவரும் முன் ஜாமினில் வெளி வந்துள்ளனர்.

எஸ்வந்தரனும், ஆனந்தகுமாரும் பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதை நாங்கள் நேரில் கண்டோம். எஸ்வந்திரன் தமிழக அளவில் ஒரு முக்கியமான சிற்பக் கலைஞர். அவரும் கமலஹாசனும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் குணம் உள்ளவர்கள் என்பதாலும், சில போராட்டங்களை ஏற்கனவே முன்னெடுத்திருந்ததால் மனோகரின் கோபத்திற்கு ஆளாகியிருந்துள்ளனர். மனோகரன் கல்லூரி வளாகத்திலிருந்த ஒரு சிலையை மையமாக வைத்து ஒரு இந்து கோயிலை கட்டியதற்காகத் தான் எதிர்ப்பு தெரிவித்ததற்காகவே தன் பெயரை குற்றச்சாட்டில் சேர்த்தார் என்கிறார் கமலஹாசன். வளாகத்திற்குள் பழைய கிணறு ஒன்றை தூர்க்கும் முயற்சியையும் இவர் எதிர்த்துள்ளார் இதுவும் மனோகரின் கோபத்திற்கு காரணமாகியுள்ளது. தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்டவுடன் ‘‘பறப் பசங்களா’’ எனச் சொல்லி மனோகர் கடுமையாகப் பேசினார் என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ்வந்திரன் இக்கல்லூரி மாணவராயினும் சில சிற்பப் பணிகளை மேற்கொண்டுள்ளதால் தற்போதைய பிரச்சினைகளில் தொடர்பில்லாது உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நாங்கள் மனோகரிடம் கேட்டபோது ஒரு சதம் கூட இதில் உண்மையில்லை என மறுத்தார். தனிப் பயிற்சி நடத்துவது பற்றிக் கேட்டபோது பதவி உயர்வு பெற்றபின் கடந்த 2 ஆண்டுகளாக நடத்துவதில்லை எனவும், எனினும் தனது மாணவர்கள் சிலர் அவ்வாறு நடத்துகின்றனர் எனவும் கூறினார்.

வழக்குரைஞர்கள் மற்றும் சமூக நீதியில் அக்கறையுள்ள சிலரின் ஆலோசனைகளின்படி இவ்வாறு சாதி சொல்லித் தாக்கியதற்காகவும் பொய் வழக்கு போட்டதற்காகவும் புகார் ஒன்றை பாதிக்கப்பட்ட மாணவர்கள் காவல்துறைக்குத் தந்துள்ளனர். எனினும் அவை ஏற்றுக் கொள்ளப்படாததோடு எந்த நடவடிக்கையும் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்த உதவி ஆணையர் அசோக்குமார் அவர்களிடம் கேட்டபோது ஆனந்தகுமார் முதலில் கொடுத்த மனுவில் அதுகுறித்துப் பேசியது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை எனவும் பிறகு அளித்த மனுவிலேயே அதைக் கூறியுள்ளதாகவும், இந்த அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முகாந்தர(prama fecie)சான்றுகள் இல்லை எனவும் கூறினார். மாணவர்கள் கதவை தாழிட்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது காவல்துறை மிகவும் மனிதாபிமானத்தோடு நடந்து கொணடதாகவும் குறிப்பிட்டார்.

கல்விப் பயணம் மேற்கொண்டிருந்தவர்கள் திரும்பும்வரை காத்திருந்த மாணவர்கள் சென்ற மார்ச் 22 அன்று முதல் வழக்குகளைத் திரும்பப் பெறுதல், மனோகர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் முதலான கோரிக்கைகளைமுன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடங்கினர். இதற்கிடையில் மனோகர் பொறுப்பு முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கலைப் பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் ஜெயபால் பொறுப்பு முதல்வராக்கப்பட்டுள்ளார். இவர் நுண்கலைத் துறையைச் சார்ந்தவரல்ல. நிர்வாகத் துறையைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கியவுடன் பெரிய அளவில் காவல்துறையினர் கொண்டு வந்து குவிக்கப்பட்டனர். இரவில் மாணவிகள் அனுப்பப்பட்டு கதவு பூட்டப்பட்டது. பேச்சு வார்த்தையில் முடிவேதும் ஏற்படவில்லை 23-ந் தேதி மாலை 6 மணி வாக்கில் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

போராட்டம் செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டு நேரு ஸ்டேடியம் அருகிலுள்ள திடல் ஒன்றுக்கு அழைத்தச் செல்லப்பட்டு இரவு 9 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது கல்லூரி மூடிக் கிடக்கிறது.

எமது பார்வைகள்

1. கலை பண்பாட்டுத்துறைச் செயலரும் புகழ்பெற்ற எழுத்தாளரும்தான் வே. இறையன்பு அவர்களைத் தொடர்புக் கொண்டு பேசியபொழுத தான் பதவி ஏற்றபின் 1.86 கோடி ரூபாய் இக்கல்லூரிக்கென ஒதுக்கி ஏற்கனவே குறிப்பிடப்பட்ட பல்வேறு குறைபாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருவதாகக் கூறினார். க்ளெய்ன், மெடல் கேஸ்டிங், கம்ப்யூட்டர்கள், சூளை முதலியன தொடர்பாக வேலைகள் நடந்துள்ளதைப் பொறுப்பு முதல்வரும் குறிப்பிட்டார். மாணவர்கள் தன் கருத்துகளை ஏற்கவில்லை எனவும், இது முதல்வர் கருணாநிதி அவர்களின் துறையைச் சார்ந்ததால் விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் கமிஷன் ஒன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறினார். கல்லூரியைத் திறப்பது தாமதமாகக் கூடாது என நாங்கள் கேட்டுக் கொண்டபோது சற்று நிலைமை சீரானவுடன் கல்லூரியைத் திறப்பதில் தடையில்லை என்றார். மிகவும் விரிவாக எல்லாவற்றையும் விளக்கிக் கூறினார்.

2. பொறுப்பு முதல்வரும், ஆணையர் திரு மணியும்கூட எங்களிடம் மிகப் பொறுமையாக நாங்கள் முன் வைத்த ஐயங்களுக்கெல்லாம் விளக்கமளித்தனர். எனினும் சில ஐயங்களுக்கு உரிய விளக்கங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.

அவை:

(i) பொதுவாக அரசுத் துறைகளில் பணி மூப்பு அடிப்படையிலேயே பொறுப்புகள் அளிக்கப்படும். பணி மூப்புடைய வேறு சிலர் இருக்கையில் ஏன் மனோகருக்குப் பொறுப்பு முதல்வர் பதவி அளிக்கப்பட்டது? மற்றவர்கள் மீது புகார்கள் இருந்தன என்றார் ஜெயபால். மனோகர் மீதும் புகார்கள் இருந்து சட்டமன்றம் வரை அது பேசப்பட்டது குறித்து பதிலில்லை.

(ii) எந்த அடிப்படையில் ஒரு சில பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் பணியில் தொடர அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெளிவாகவில்லை. சுரேந்திரன் என்பவர் எம்.எஃப்.ஐ. சேர்ந்துவிட்டதால் பணியில் தொடர இயலாது என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எம்.எஃப்.ஐயில் சேரவே இல்லை.

(iii) மனோகர் சாதி சொல்லித் திட்டியது, தனிப் பயிற்சி நடத்துவது குறித்து எதுவும் தமக்குத் தெரியாது என்று நிர்வாகத் தரப்பில் கூறுப்பட்டது.

(iv) விடுதி மூடப்பட்டதற்குக் காரணமாக மாணவர்களின் நடத்தை சரியில்லை எனக் கூறப்பட்டது. தவறுகள் இல்லாமல் கண்காணிக்கப்படுதல், முறையான வார்டன் ஒருவரை நியமித்தல் - முதல்வர் என்கிற வகையில்தான் பிரச்சினைகள் சமாளிக்கபட வேண்டுமே ஒழிய அதற்காக விடுதியையே மூடுவது எப்படி?

3. மாணவர் சசிகுமார், தான் முதல்வரின் கார் கண்£டியை உடைத்ததை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், ஆசிரியர்களும் நிர்வாகமும்தான் எந்தத் தவறையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எமது குழுவில் மூவர் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரிகளில் முதல்வர் மற்றும் பேராசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். கல்லுரிக் கதவுகளை உடைத்தால், ஆசிரியர்களைத் தாக்குதல், ஆசிரியர்களில் வாகனங்களை உடைத்தல், மாணவர்களுக்கிடையே மோதல் முதலான பல சம்பவங்களை நாங்கள் சந்தித்துள்ளோம். மாணவர்களின் தவறுகளையும், குற்றங்களையும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் சண்டை போல அணுகுதல் அவசியம். பொருளியல் ரீதியாகப் பார்த்தால் ஆசிரியருக்கு ஏற்பட்டது கார் கண்ணாடி சேதமானது மட்டுமே. வழக்கு தொடர்ந்து தண்டிக்கப்பட்டால் அந்த மாணவனின் வாழ்வே பாழாகிவிடும் என்கிற உணர்வு ஆசிரியர்களுக்கு வேண்டும். இது போன்ற சந்தர்ப்பங்களில் உடனடியாக கல்லூரி நிர்வாகக்குழு, ஆசிரியர்கள் கூட்டம் முதலியவற்றைக் கூட்டி விவாதித்து, அம் மாணவனை தற்காலிக நீக்கம் செய்து, விசாரணைக்குழு அமைத்து, குற்றத்திற்குப் பொருத்தமான அபராதம் முதலான தண்டனை அளித்து, எச்சரிக்கை செய்து பிரச்சினையை முடிப்பதே வழக்கம். இங்கோ உடனடியாக போலீஸ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட குரோதத்துடன் ஆசிரியர் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டியுள்ளார். தொடர்பில்லாத இரு தலித் மாணவர்களையும் புகாரில் இணைத்துள்ளார். அடுத்து நான்கு நாட்கள் கழித்தே (மார்ச் 1) இது தொடர்பாககக் கல்லூரியில் கூடி விவாதிக்கப்பட்டுள்ளது. முதல்வரும் நிர்வாகமும் பொறுப்புடன் நடந்து கொண்டிருந்தால் இந்த அளவிற்குப் பிரச்சினை முற்றியிருக்காது.

4. மாணவர்கள் போராடுவதை ஒழுக்கக் குறைவாகக் கருத வேண்டியதில்லை. போராட்ட காலங்களில் பேசப்படும் சொற்களையும் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால், அத்தகைய போக்கு நிர்வாகத்திடம் உள்ளது.

5. சசிகுமார் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்குக் காரணம் இது போன்ற மாணவ முயற்சிகள் குறித்த ஒரே சீரான அணுகுமுறை இல்லாததே காரணம்.

எமது பரிந்துரைகள்

1. அகமதாபாத்திலுள்ள NID (தேசிய வரைகலை நிறுவனம்) போல பெருமைமிகு நிறுவனமாக வளர்ந்திருக்க வேண்டிய கல்லூரி இது. மாற்றாந்தாய் அணுகல் முறையுடன் அரசு நடந்து கொண்டு வந்துள்ளதே இன்றைய பிரச்சினைகளுக்குக் காரணம். கலை மற்றும் பண்பாட்டுத் துறைகளில் அக்ககறையுள்ள முதல்வர் கலைஞர் மற்றும் நாடறிந்த எழுத்தாளரும் நிர்வாகியுமான இறையன்பு ஆகியோரின் துறையைச் சார்ந்த இந் நிறுவனம் போதிய நிதி ஒதுக்கீடுச் செய்யப்பட்டு, ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகள் நீக்கப்பட்டு இந்திய அளவில் தரமான ஒரு நுண்கலைப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட வேண்டும்.

2. NID முதலான நிறுவனங்களின் தரநிர்ணயம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, இருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி வரன்முறைப் படுத்தப்பட்டு, எல்லோருக்கும் ழிமிஞி ஆசிரியர்களுக்குச் சமமான ஊதியம் முதலியன வழங்கப்பட வேண்டும்.

3. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் விடுதி திறக்கப்பட வேண்டும். கல்லூரிக்குள் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

4. மூடிக்கிடக்கும் கல்லூரி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும்.

5. பிப்ரவரி 26ந்தேதி நிகழ்ச்சி தொடர்பாக மாணவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படவேண்டும்.

6. கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத தலித் மாணவர்களைச் சாதி சொல்லித் திட்டி, சங்கிலியால் பிணைத்து அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீதான மாணவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட வேண்டும். கல்லூரி நிர்வாகம் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.

7. சமீபத்திய பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் ஒன்று நியமிக்கப்பட உள்ளதை வரவேற்கிறோம். அந்த ஆணையத்தின் விசாரணை எல்லை கீழக்கண்டவற்றை உள்ளடக்க வேண்டும்.

(i)26-ந் தேதி நிகழ்வை நோக்கிப் படிப்படியாக இட்டுச் சென்ற சூழல் அடையாளம் காணப்படுதல்.

(ii) பணி மூப்பு புறக்கணிக்கப்பட்ட மனோகர் பொறுப்பு முதல்வராக்கப்படுதலின் பின்னணி.

(iii) கண்ணாடி உடைப்பில் தொடர்பில்லாத மாணவர்கள் மீது புகார் சொல்லப்பட்டது மற்றும் அவர்கள் இத்தனை மூர்க்கமாக நடத்தப்பட்டது ஆகியவற்றிற்குப் பின்புலம் ஏதும் இருந்ததா எனக் காணுதல்.

(iv) மனோகர் மீது 2004-ல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், தொடர்ந்து அவர் அத்தகைய உணர்வுடன் செயல்பட்டார் என மாணவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை ஆராய்தல்.
குறிப்பாக கார் கண்ணாடி உடைக்கப்பட்ட அன்று அவர் சாதி சொல்லித் திட்டியது குறித்த புகாரில் கையொப்பமிட்டுள்ள மாணவர்கள் விசாரிக்கப்படுதல்.

(v) பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தல் மற்றும் சமீபத்தில் செய்யப்பட்ட பணி நீக்கங்களில் பின்னணி ஏதும் உள்ளதா என ஆராய்தல்.

(vi) ஆசிரியர்கள் தனிப்பயிற்சி நடத்துதல், ஒப்பந்தப் பணிகளை எடுத்தச் செயல்படுத்துதல் ஆகியன எந்த அளவிற்கும் கல்விப் பணிகளைப் பாதிக்கின்றன என்பது குறித்து ஆராய்தல்.

(vii) ஆசிரியர்களுக்கிடையே உள்ள குழு மனப்பான்மை மாணவர்களின் கல்வியைப் பாதித்தல் குறித்து ஆராய்தல்.

8. தனிநபர் ஆணையம் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் குற்றமிழைத்தவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும்.

9. தனிநபர் ஆணையம் அமைக்கும் போது அந்த நபர் சமூக நீதியில் அக்கறை உள்ளவராகவும் நடுநிலையோடு இருப்பவராகவும் இருப்பது அவசியம்.

சனி, பிப்ரவரி 20, 2010

குடிமக்களை ‘வேட்டை’ யாடும் மத்திய அரசும், தேசபக்தி தி.மு.க. அரசும்


குடிமக்களை ‘வேட்டை’ யாடும் மத்திய அரசும்,

தேசபக்தி தி.மு.க. அரசும்



- மு. சிவகுருநாதன்


தந்தை பெரியார் 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் அதாவது இந்தியா விடுதலைபெற்ற நாளை துக்க நாளாக அறிவித்து, சுதந்திரத் திருநாள் எனும் ஏமாற்றுத் திருவிழாக்களில் கலந்து கொள்வதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார். (விடுதலை : 06.08.1948) அவருடைய உழைப்பை அறுவடை செய்து கொண்டிருக்கும் மு. கருணாநிதியின் தி.மு.க. அரசு, ஜனவரி 26, 2010 குடியரசு நாள் விழா முடிந்ததும் துண்டறிக்கை விநியோகிக்கச் சென்ற பியூஷ் சேத்தியா (நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்) மீது தேசத்துரோகச் சட்டம் மற்றும் பல்வேறு கடுமையான சட்டப்பிரிவுகளின்படி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. சேலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் மத்திய, மாநில அரசு பயங்கரவாதத்தின் கோர முகம் வெளிப்படுகிறது.


“வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துகிறோம்” என்ற பெயரில் மன்மோகன்களும், சிதம்பரங்களும், கனிம வளமும், காட்டு வளமும், நீர்வளமும் நிரம்பிய சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா ஆகிய மாநிலங்களிலுள்ள பகுதிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க பழங்குடி மக்களை அப்புறப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர். இதனை எதிர்க்கும் பழங்குடி மக்களையும், விவசாயிகளையும் அரசு நக்சலைட்கள், மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தி ‘ பச்சை வேட்டை’ (Operation Green Hunt) என்ற பெயரில் ராணுவம், போலீஸ் மற்றும் அரசு ஆதரவு கூலிப்படைகள் மூலம் குடிமக்கள் மீதே போர் தொடுத்து வருகின்றது. ‘பச்சை வேட்டை’ நடவடிக்கைகளின் விளைவாக இன்று 644 கிராமங்களைச் சேர்ந்த மூன்று லட்சம் பழங்குடி மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.


சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா ஆகிய மாநிலங்களிலும், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரம் ஆகிய மாநில எல்லையோரங்களிலும் உள்ள தண்டகாரண்யக் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் புதையுண்டு போயுள்ள இரும்பு, நிலக்கரி, கிரானைட், பாக்சைட், சிலிகா, சுண்ணாம்புக்கல் போன்ற பல்வேறு வகையான தாதுப்பொருட்களை ஜிண்டால், வேதாந்தா, டாடா, மிட்டல், ஸ்டெர்லைட் போன்ற உள்நாட்டு, அயல்நாட்டு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் இயற்கை வளங்களை அள்ளிக் கொடுக்க பழங்குடி மக்கள் இடையூறாக இருக்கிறார்கள். எனவேதான் அரசு தன் பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தால் அவர்களை அகதிகளாக்குகிறது.


அந்நிய நாடுகளில் செயல்படும் இயக்கங்களுக்கு நிதி, ஆயுதங்கள் அளித்து வளர்த்து விடுவதைப் போன்று இன்று அரசாங்கம் உள்நாட்டிலேயே பல்வேறு கூலிப்படைகளை அமைத்து குடிமக்களுக்கெதிரான போரைத் தீவிரமாக்கியிருக்கிறார்கள். அந்த வகையில் சத்தீஸ்கரில் ‘சல்வா ஜுடும்’, ஒரிசாவில் சாந்திசமீதி போன்றவை பீகாரின் ‘ரன்வீர் சேனா’ போல் கட்டியமைக்கப்பட்டுள்ளன. போராடும் மக்களில் ஒரு பிரிவினரை இவ்வாறு கூலிப்படைகளாக்கி மக்களை பிளவுபடுத்துவதோடல்லாது, இந்த சட்ட விரோத கூலிப்படைக்களுக்குண்டான ஆயுதம், பொருள் போன்றவற்றை அரசே சப்ளை செய்கிறது. இவர்கள் கொள்ளையடித்தல், கொலை, ஆள் கடத்தல், பாலியல் வன் கொடுமை போன்றவற்றை அரசு உதவியோடு செய்து வருகின்றனர்.


போராடும் மக்களை நக்சலைட்டாகவும், மாவோயிஸ்ட்டாகவும் சித்தரிக்கப்பட்டு அவர்களை ராணுவமும், போலீசும், கூலிப்படைகளும் சொல்லெண்ணா துயரங்களுக்குள்ளாக்குகின்றன. ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எண்ணற்ற பழங்குடிப் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகள் கூட கொல்லப்பட்டும், தாக்குதல்களுக்கு ஆட்பட்டும், சித்ரவதை செய்யப்பட்டும் வருகின்றனர். ஆண்கள் ராணுவம், போலீஸ், கூலிப்படை ஆகியவற்றிற்கு பயந்து காடுகளில் ஒளிந்துள்ளனர். அச்சத்தால் உறைந்து போயுள்ள இவர்களை பசி வாட்டுகிறது.


“மாவோயிஸ்ட்டுகளும் இந்தியாவின் குடிமக்கள்தான். அவர்கள் மீது அரசாங்கம் போர் தொடுக்கக் கூடாது”, என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அரசு மற்றும் கூலிப்படைகளின் மனித உரிமை மீறல்களை உச்சநீதிமன்றமும், தேசிய மனித உரிமை ஆணையங்களும் பலமுறை கண்டனம் செய்துள்ளன. அருந்ததிராய் போன்ற மனித உரிமைப் போராளிகள் அரசின் ஒட்டு மொத்த நடவடிக்கைகளினால் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை விளக்கி அரசை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் அரசு பன்னாட்டு கம்பெனிகளின் ஏஜென்ட்டாக மாறி சொந்த நாட்டு மக்களின் மீதே ஒரு லட்சம் துணை ராணுவப்படைகளைக் கொண்டு பெரும்போர் தொடுத்துள்ளது.


“மாவோயிஸ்ட்களின் இந்த வன்முறை நடவடிக்கைகளை சில அமைப்புகள் நியாயப்படுத்தப் பார்க்கின்றன. ஆனால் இந்த வன்முறையை நாட்டில் உள்ள பெரும்பாலானோர் கடுமையாக கண்டிக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மாவோயிஸ்ட் - நக்சல்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் மொத்த படித்தவர்களும் இந்த வன்முறையை கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நக்சல் கொள்கைகளை நாடு முழுவதும் உள்ள மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்ட நிலையில் அவர்களை அடக்கி அந்தப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற வழி காண வேண்டும்” என்கிறார் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் (தினமணி - திருச்சி: 17.02.2010). மேலும், “ஜனநாயக - குடியரசு அமைப்பில் எந்தவொரு அமைப்பும் வன்முறை மூலம் சட்டப்பூர்வமான அதிகார அமைப்பை கைப்பற்ற உரிமை இல்லை” என்றும் சொல்கிறார். மனித உரிமை செயல்பாட்டாளர்கள், நடுநிலையாளர்கள் மாவோயிஸ்ட் வன்முறை, அரச வன்முறை ஆகிய எந்த வன்முறைக்கும் எதிராகவே உள்ளனர். ஆனால் மெத்தப் படித்தவர்கள் மாவோயிஸ்ட் வன்முறையை ஆதரிப்பதாக இட்டுக்கட்டி பிரச்சாரம் செய்கிறார் சிதம்பரம்.


அரச வன்முறை மூலம் பல லட்சம் மக்களை அப்புறப்படுத்தி விட்டு, என்ன மாதிரியான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை சட்டப்பூர்வ அதிகார அமைப்பு (அரசு) ஏன் வெளிப்படையாக பேசுவதில்லை? அப்பாவி பழங்குடி மக்களை வேட்டையாட 1 லட்சம் ராணுவம் எதற்கு? நீதிமன்ற நெறிமுறைகளைக் கூட கடைபிடிக்க விரும்பாத அரச பயங்கரவாதிகள் (ஆளும் வர்க்கம், ராணுவம், போலீஸ், அரசு ஆதரவு கூலிப்படையினர்) சாதிக்க நினைப்பது என்ன என்பதை ப. சிதம்பரமும் மன்மோகன்சிங்கும் விளக்க வேண்டியது அவசியம்.


மேற்கு வங்காளம் மித்னாபூர் மாவட்டத்தில் துணை ராணுவப்படை முகாம் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியதில் 24 வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து நக்சல்கள் மீதான கூட்டு நடவடிக்கை தொடரும் என மத்திய - மாநில அரசுகள் அறிவிக்கின்றன. முன்பே மாவோயிஸ்ட்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்ததை ஏற்க மறுத்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் மேற்கு வங்க இடதுசாரி அரசு உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பை மறுப்பதோடு, ‘வேட்டை’ தொடரும், தாக்குதல் தொடரும் என்று போர்ப் பரணி பாடி வருவதை பெரும்பாலான ஊடகங்கள் ஒருவித வன்மத்தோடு செய்தி வெளியிடுகின்றன. தீவிரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் இந்த ஊடகங்கள் மக்களுக்கு எதிரான செய்திகளை மட்டும் வெளியிட்டு அரச பயங்கரவாதத்தை பொதுமக்களின் பொதுப்புத்தியில் இயல்பானதொன்றாக பதிய வைக்க பெரும் முயற்சி செய்கின்றன. முதலீட்டிய ஆதரவு ஊடகங்கள் பழங்குடி மக்கள் மீதான தாக்குதல்களை மறைத்தும் நக்சல் தாக்குதல்களை மிகைப்படுத்தியும் செய்திகளை வெளியிடுகின்றன.
‘பச்சை வேட்டை’ குறித்து அரசு நிர்வாகம் அளிக்கும் விவரங்களைத் தவிர உண்மை நிலவரங்களை வெளியிடக் கூடாது என பத்திரிக்கைகள் மிரட்டப்பட்டு, எழுத்துரிமை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.


தண்டேவாடாவுக்குச் சென்ற அறிவு ஜீவிகள், ஊடகவியலாளர்கள், உண்மை அறியும் குழுக்களைச் சேர்ந்தவர்களை உள்ளூர் போலீஸ், அரசு ஆதரவு கூலிப்படையினர் (சல்வா ஜுடும், சாந்தி சமீதி) போன்றோர்களால் கடுமையான தாக்குதல்களுக்கும் இழிவுபடுத்தல்களுக்கும் உள்ளாயினர். சட்டப்பூர்வமான அதிகார அமைப்பு பற்றி பேசும்
ப. சிதம்பரம் போன்றோர் அரசின் வன்முறையை சட்டப்பூர்வமானதொன்றாக கட்டமைக்கின்றனர். சட்டப்பூர்வமாக்கப்பட்ட இந்த அரச வன்முறையின் கோரப்படியில் சிக்கி பல லட்சம் ஆதிவாசிகள் இன்று அனாதைகளாக்கப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதரவாகப் பேசுவது, போராட்டங்கள் நடத்துவது இன்று நக்சலைட் ஆதரவுச் செயல்பாடு என்று அரசும், ஊடகமும் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. ராணுவமும், போலீசும், கூலிப்படைகளும் சாகும் தருவாயில் உள்ள வயதான பெண்கள், சிறு குழந்தைகள் ஆகியோரைக் கூட நக்சலைட் என்ற முத்திரை குத்தி கொலை செய்கிறார்கள் அல்லது உறுப்புக்களை வெட்டி முடமாக்குகிறார்கள். காந்தீவாதிகள் கூட இவர்களது பார்வையில் நக்சலைட்டாகத்தான் தெரிகிறார்கள். “மாவோயிஸ்ட்டுகளும் இந்திய குடிமக்களே” என்று சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதியை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?


சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியினர் வசிக்கும் தண்டேவாடா மாவட்டத்தில் சுமார் 20 ஆண்டு காலமாக ‘வனவாசி சேத்னா ஆசிரமம்’ (VCA) என்ற அமைப்பின் மூலம் சேவையாற்றி வரும் காந்தீயவாதியும், மனித உரிமைப் போராளியுமான ஹிமான்சு குமார் அரச பயங்கரவாதத்தின் கூட்டுக் கொடுமைகளை எதிர்த்தார் என்ற காரணத்திற்காக, அவரது ஆசிரமம் இடித்துத் தள்ளப்பட்டது. ஹிமான்சு குமாரையும் அவரது அமைப்பினரையும் அங்கு செயல்படாமல் தடுக்க மிரட்டல், ஊழியர்கள் மீது தாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் இன்று அவர் அப்பகுதியை விட்டு வெளியேறி விட்டார். பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக யாரும் செயல்பட, எழுத, பேச முடியாத நிலையை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ளன. பிநாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகளை தனக்குத் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொண்டு, பிறகு பெரிய அடக்குமுறை சட்டங்களையும், அத்துமீறல்களை கட்டவிழ்த்து விடுவது வாடிக்கையாகிவிட்டது.


கனிம, காட்டு, நீர் வளங்களை நிறைந்த பழங்குடியினரின் வாழ்வாதாரமாக உள்ள தண்டகாரண்யப் பகுதியை விட்டு அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் முதற்கட்டமாக பழங்குடியினரை அரசாங்கம் தனிமைப்படுத்தியிருக்கிறது. கூலிப்படையை அமைத்து அவர்களை பிளவுபடுத்தியிருக்கிறது. வெளி ஆட்கள் யாரும் ஆதரவு நிலைப்பாடு எடுப்பதையும் திட்டமிட்டு வெளியேற்றி வைத்திருக்கிறது. இதனால் அப்பாவி பழங்குடி மக்களை மாவோயிஸ்ட்களிடம் நெருங்கிச் செல்ல வழி வகுத்திருக்கிறது.


காந்தீயவாதி ஹிமான்சு குமார் நிலைமையை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் “அரசு கூலிப்படையான ‘சல்வா ஜுடும்’ க்கு சாராயம், கோழிகள், ஆடுகள், பெண்கள் தேவை. இவை அனைத்தையும் அவர்கள் பழங்குடி மக்களிடமிருந்தே எடுத்துக் கொள்கிறார்கள். அரசு மாவோயிஸ்ட்களின் வன்முறை பற்றி ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கிறது. பழங்குடி மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து கொண்டேயிருக்கிறது. அரச வன்முறையைக் கைவிடாமல் மாவோயிஸ்ட்களின் வன்முறையை மட்டும் எப்படி கைவிட முடியும்? வெளிப்படையாக சொல்வது போல் அரசு விரும்புவது அமைதியை அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசுக்குத் தேவை அங்குள்ள நிலங்களும் அவற்றிலுள்ள வளங்களுமே. அதனை அபகரிக்க அரசு வெறித்தனத்தை நாடுகிறது. இது ஏழைப் பழங்குடி மக்களின் போராட்டம். நக்சலைட்கள் ஒரு அடையாளம் மட்டுமே. மார்க்ஸ், காந்தி ஆகியோர் இல்லாமல் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போராடத்தான் செய்வார்கள்”. இத்தகைய கருத்துக்களை ஹிமான்சு குமார் போன்ற காந்தீயவாதிகளும் மனித உரிமைப் போராளிகளும் தொடர்ந்து எடுத்து வைக்கிறார்கள். அமைதியையோ உண்மையான வளர்ச்சியையோ விரும்பாத அரசு பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்திற்காகவும், தங்களுடைய கமிஷன்களுக்காகவும் சொந்த குடிமக்களை கொல்லத் துணிந்திருக்கிறது.


மேற்கு வங்காளத்தில் இடது சாரிகளே நந்திகிராம், சிங்கூர் போன்ற பிரச்சினைகளில் முதலீட்டியத்தின் ஆதரவாளர்களாக மாறிப்போன வரலாற்றை நாம் கண்ணெதிரே கண்டுவருகிறோம். இந்த நிலையில் தமிழ்நாட்டு தி.மு.க அரசிடம் பெரிதாக என்ன எதிர்பார்த்து விடமுடியும்?


சிறப்புப்பொருளாதார மண்டலங்கள், நேரடி அந்நிய முதலீடு என தினமும் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதற்காக பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் கைப்பற்றப்பட்டும் இனி கையகப்படுத்த வேண்டியது எனவும் நிறைய இருக்கினறன. சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம், சென்னையை அழகுபடுத்துதல், கூவத்தை தூய்மையாக்கல், விமான நிலைய விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம், புதிய துறைமுகம் நிர்மாணித்தல் என பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் அரசாக கலைஞர் மு. கருணாநிதியின் அரசும், இது பற்றிய எவ்வித மாற்றுக் கருத்தையும் விமர்சனத்தையும் ஏற்க மறுக்கும் கருத்துரிமைக்கு எதிரான பாசிச அரசாகவும் செயல்படுகிறது. புதுச்சேரி துறைமுகத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டாலும் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் கையாளப்படும் நிலக்கரியால் அப்பகுதிக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் பெருத்த சுற்றுச் சூழல் பாதிப்பு காத்திருக்கிறது.


தமிழகத்தில் ‘சிப்காட்’ ஆல் கையகப்படுத்தப்படப் போகும் விளை நிலங்கள் தவிர இரும்புத்தாது வெட்டியெடுக்க ‘ஜிண்டால்’ நிறுவனத்திற்காக சேலம் கவுத்தி வேடியப்பன் மலையை தாரைவார்த்து முதலீட்டிய சேவை புரிந்திருக்கிறது தமிழக அரசு. தற்போது மதுரை ஒத்தக்கடை யானை மலையை குடைந்து ‘கலை சிற்ப நகரம்’ அமைக்கப் போவதாக அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் பெரிய எதிர்ப்பு இல்லாதது போல் தமது ஊடக பலத்தால் பொய்யான மாயை ஒன்றை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள்.


சேது சமுத்திர திட்டம் போன்ற சுற்றுச் சூழலுக்கு எதிரான திட்டங்களுக்கு இங்கு அமோக ஆதரவு உள்ளது. இந்துத்துவாதிகளின் மிரட்டலால் மாற்றுப் பாதை குறித்த ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த மாற்றுப்பாதை தமிழகத்தை பெரும் கேடிற்கு உள்ளாக்கும். வட தமிழ்நாட்டிற்கு கல்பாக்கம், தென்தமிழ் நாட்டிற்கு கூடங்குளம் ஆகியவை முழுத் தமிழ் நாட்டையும் காலி செய்ய போதுமானது. முதுமலை சிங்காரா காட்டுப் பகுதியில் அமைய இருந்த ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்’ அதற்குப் பதிலாக தேனி கம்பம் சுருளியாறு அருவிக்கு அருகில் மாற்றப்படப் போவதாகத் தெரிகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அரசு எதுவும் சொல்லாது. மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு இந்த மாதிரியான மக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கடலோர பாதுகாப்பு மேலாண்மைச் சட்டத்தின் மூலம் மீனவர்களின் வாழ்வுரிமை எந்நேரமும் பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம்.


சென்னையில் சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை அதிவேக நெடுஞ்சாலை அமைக்க ஆயிரக்கணக்கான குடிசைகள் முன்னறிவிப்பின்றி அப்புறப்படுத்தப்படுகின்றன. சென்னையின் புறநகரில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு துறைமுகத்திலிருந்து சரக்குகளை (60 முதல் 80 டன்) போக்குவரத்து நெருக்கடியின்றி விரைவாகக் கொண்டு செல்வதற்குத் தான் இந்த அதிவேக உயரச்சாலை அமைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான ஒரு வரைவு திட்டத்தை சென்னை துறைமுகம் தயாரித்தது. 9 கி.மீ நீளமுள்ள இத்திட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டிச் செல்லக் கூடியது. இதில் முக்கிய அரசியல்வாதிகள், மேல்தட்டு வர்க்கத்தினர், வி.ஐ.பி.கள் போன்றோர்களின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால், புதிய வரைவு திட்டம் 19 கி.மீ. நீளத்திற்கு கூவம் ஆற்றின் மீது கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.


புதிய திட்டத்தினால் செலவு ரூ.1000 கோடியிலிருந்து ரூ.2000 கோடியாக உயர்ந்ததோடு மட்டுமல்லாது ‘குடிசையில்லாத சென்னை’ என்ற அரசின் மறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாகவும் அமைந்து விட்டது. இதற்குச் சுற்றுச்சூழல் அமைச்சகம், கடலோர மேலாண்மை பாதுகாப்பு அமைப்புகள் போன்றவற்றிடமிருந்து உரிய அனுமதி எதனையும் பெறவில்லை. கூவத்தில் உள்ள மண்ணின் தன்மை, அதிக எடையைத் தாங்குமா என்பது குறித்து எந்தவித உத்திரவாதமும், ஆய்வும் இல்லை. மேலும், அதிக வளைவுகள் கொண்ட இப்பாதையில் அதிக எடை கொண்ட சரக்கு வாகனங்கள் செல்வது சாத்தியமா என்பது கூட ஆய்வு செய்யப்படவில்லை.


படிப்படியாக குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றித்தர தொடங்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் இன்று குடிசைகளை அப்புறப்படுத்தும் வேலையை பொதுப்பணித் துறையுடன் சேர்ந்து செய்கிறது. பல காலம் தொட்டே அடிக்கடி நடக்கும் அல்லது நடக்க வைக்கப்படும் தீ விபத்துகள் மூலம் குடிசைகள் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு வந்தன. தற்போது எவ்வித முன்னறிவிப்பின்றி பல்லாயிரக்கணக்கான குடிசைகள் இடிக்கப்பட்டுள்ளன. இடிக்கப்பட்ட குடிசைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இழப்பீடு மற்றும் மாற்று வாழ்விடங்கள் அளிக்கப்படவில்லை. பல இடங்களில் முறையாக நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடையாணையையும் மீறி குடிசைகள் இடிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களிடம் முன் கூட்டியே தகவல் தெரிவித்து கலந்துரையாடல் நடத்தி மாற்றிடங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றில் எதுவும் நடக்கவில்லை.


குடிசைப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் முற்றாக பறி போய் உள்ளது. வாழ்விழந்த குடிசைப்பகுதி மக்கள் செம்மஞ்சேரி, கண்ணகி நகர், கார்கில் நகர், எர்னாவூர் போன்ற மாநகரத்தை விட்டு தொலைவில் இடம் பெயர்க்கப்பட்ட இடங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் உள்ளனர். அவர்களது குழந்தைகளின் கல்வி முற்றிலும் அழிந்து போயுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்த அ. மார்க்ஸ், கோ. சுகுமாரன் அடங்கிய உண்மையறியும் குழுவின் அறிக்கை இது குறித்த விரிவான விவரங்களைத் தருகிறது.


மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரிக்காய் (பாசில்லஸ் துரிஞ்ஜியன்சிஸ்) விவகாரத்தில் 10க்கு மேற்பட்ட மாநில முதல்வர்கள் காட்டிய எதிர்ப்பில் நமது தமிழ்நாட்டுக்குப் பங்கில்லை. அது மத்திய அரசின் பணியென்று ஒதுங்கியிருந்ததாக கருத முடியாது. இவை பற்றியெல்லாம் தெளிவாக அரசியல் நிலைப்பாடு தி.மு.க. விற்கு இல்லை என்பதே உண்மை. நம்மாழ்வார் என்ன பெரிய விஞ்ஞானியா? என்று கேட்ட வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் நிலைதான் தி.மு.க.வின் நிலையாகும்.


பன்னாட்டு கம்பெனிகளுக்கும், நிறுவனங்களுக்கும் நமது இயற்கை வளங்களை தாரைவார்ப்பதில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பெரும் போட்டியே நிலவுகிறது. அந்த நிறுவனங்களுக்கு தரகர்களாகவும் பங்குதாரர்களாகவும் கூலிக்காரர்களாகவும் இந்திய அரசியல் வாதிகள் செயல்படத் தொடங்கியுள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் போன்றோரை மிரட்டவும் அவர்களது செயல்பாடுகளைத் தடுக்கவும் பியூஷ் சேத்தியா போன்றவர்களின் கைதின் வாயிலாகவும், வேறு பல வழிகளிலும் மத்திய - மாநில அரசுகள் அடக்குமுறைகளை ஏவி வருகின்றன.


நைஜீரியாவில் ‘ஷெல்’ நிறுவனத்திற்கு எதிராகப் போராடி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கென் சரோ விவாவின் அரசியல் அறிக்கையிலிருந்து சில வரிகளைச் சொல்லி முடிக்கலாம் என்று தோன்றுகிறது.


“அரசியல் ரீதியான ஒதுக்கப்படுதல்களுக்கும்,
பொருளாதார நசுக்குதல்களுக்கும் உள்ளான
எங்களுடைய நிலை எனக்கு வேதனையளிக்கிறது.
பாழ்நிலமாகும் பூமி எனக்கு கவலையளிக்கிறது.
எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டுமென்றும்
எங்களுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றும் நான் ஆசைப்படுகிறேன்.



புரட்சி மாற்றத்தைக் குறிக்கிறது.
அது ஒரு போதும் வன்முறையில் ஈடுபாடு உடையதல்ல.
யுத்தங்கள் ஒரு பிரச்சினையையும் தீர்ப்பதில்லை.
கலாச்சாரத்தையும் மக்களின் ஆத்ம ஞானத்தையும்
பின் தள்ளுவதைத் தான் செய்கின்றன.


நன்றி

1) EPW Nov.21, 2009.
2) ஓகோனிக்கு எதிரான யுத்தம் - ‘பயணி’ வெளியீடு.
3) சென்னை குடிசைப்பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம் பெயர்த்துக் குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்நிலை - உண்மையறியும் குழு அறிக்கை.
4) தலித் முரசு இதழ்கள்

குறிப்புகள் :

01 ஜனவரி 30, 2010 சென்னையில் நடைபெற்ற ‘சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும்’ என்ற பன் மாநில முழுநாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட மனிதஉரிமை ஆர்வலர்கள் பேரா. பாபையா, வி.எஸ். கிருஷ்ணா, டாக்டர் அபூர்வானந்த், சத்தியா சிவராமன், கவிதா ஸ்ரீவத்சலா, எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், பேரா.பிரபா. கல்விமணி சே.கோச்சடை, பேரா.சிவக்குமார், கோ. சுகுமாரன், ரஜினி, கே. கேசவன், ஏ.எஸ். அப்துல்காதர், பா.புழேந்தி போன்றோர் உள்ளிட்ட சுமார் 80 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று பியூஷ் சேத்தியா கைதை கண்டித்தும், உடன் விடுதலை செய்து வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டது.

02 பிப்ரவரி 05. 2010 அன்று சேலத்தில் ‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ சார்பில் பேரா. அ. மார்க்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் மேலும் பலர் பங்கேற்ற தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

03 பிப்ரவரி 09, 2010 சென்னையில் இது தொடர்பான கூட்டம் ஒன்று ‘நீதிக்கும் அமைதிக்குமான இயக்கம்’ சார்பில் நடத்தப்பட்டது.

04 தற்போது பியூஷ் சேத்தியாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தோழர் ஜோதிபாசு


தோழர் ஜோதிபாசு

(08.07.1914 - 17.01.2010)


- மு. சிவகுருநாதன்



மரணம் இயற்கையானது; ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அதுவும் 96 வயதில் மரணமடைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுக்கு வணக்கத்துடன் விடையளிக்கத்தான் வேண்டும். போராட்டமே வாழ்க்கையாய் அமைந்த ஒரு கம்யூனிஸ்ட்க்கு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்த நிலையில் ஆயுட்கால நீட்டிப்பு அநியாயமானது.


முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மரணம் மும்பை தாக்குதல்களை சாக்காக வைத்து ஊடகங்கள் வேண்டுமென்றே புறக்கணிப்பு செய்தன. அவரது இருப்பை அழித்தொழிக்கும் வேலையை ஊடகங்கள் திட்டமிட்டு செய்துகாட்டின. ‘இந்தியா டுடேஇதழ் அஞ்சலிக்குறிப்பு என்ற பெயரில் வி.பி.சிங்கின் மீது அவதூறை வாரி இறைத்தது. ‘இந்தியா டுடே இலக்கிய மலர் 1993 - 1994’ ‘நிறப்பிரிகையால் நடத்தப்பட்ட புதுச்சேரி கூட்டத்தில் (மே 30, 1993) மலம் துடைக்க முடிவு செய்யப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. மலம் துடைக்கப்பட வேண்டியதற்கான காரணங்கள், நியாயங்கள் அப்படியேதான் இருக்கின்றன. அதைப்போலவே வி.பி.சிங்கிற்கு எதிரான அவதூறு அஞ்சலியை எதிர்த்து கீற்று.காம் சார்பில் . மார்க்ஸ் , தியாகு, ஞாநி, ஆதவன் தீட்சண்யா ஆகியோர் பங்கேற்ற கண்டனக் கூட்டம் டிசம்பர் 14, 2008 அன்று சென்னையில் நடத்தப்பட்டது.


நிறப்பிரிகையின் அதிரடி முடிவால் விற்பனை குறைந்துவிடுமோ என்று அஞ்சியஇந்தியா டுடேநிர்வாகம் வாஸந்தி மூலம்நிறப்பிரிகைகுழுவினரை இந்தியா டுடே இதழில் எழுதவைக்க மேற்கொண்ட முயற்சியும் அதற்கு ரவிக்குமார் இணங்கிப் போனதும் அனைவரும் அறிந்த செய்திகள். அதனால்இந்தியா டுடேஇதழ் (பிப்.03.2010) இந்த முறை ஜோதிபாசுவைப் பற்றிஜோதி பாபுர் சோங்கேஎன்ற ஆவணப்படம் எடுத்த சினிமா இயக்குநர் கௌதம்கோஷ் அஞ்சலியை மட்டும் வெளியிட்டு தனது வாலை சுருட்டிக் கொண்டது. அந்த வேலையை தனதாக்கிக்கொண்ட சன்டே இந்தியன்’ (25ஜன. 7 பிப். 2010) இதழ் சுதானுகுருவின் 5 பக்ககவர் ஸ்டோரிமூலம் ஜோதிபாசை காய்ந்திருக்கிறது. EPWதுணையாசிரியர் ஸ்ரீசீனிவாசன் ரமணி, மூத்த பத்தரிக்கையாளர் பருண் தாஸ் குப்தா ஆகியோருக்கு தலா ஒரு பக்கம் ஒதுக்கி சமன்செய்வதாக வேடம் பூண்டுள்ளது.


மறைந்த ஜோதிபாசு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நாம் சொல்ல வரவில்லை. இதனை அவரே விரும்பியிருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். அடல் பிகாரி வாஜ்பாய், நரேந்திர மோடி போன்றவர்களை அளவுக்கு அதிகமாக பாராட்டியும் புகழ்ந்தும் எழுதும் இந்துத்துவப் பத்தரிக்கைகள் இடதுசாரிகள், சமூக நீதி பேசுவோர், தலித்கள் என்று வரும்போது அவதூறுகளை அள்ளி வீசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. தனது இறுதிக்காலத்திலிருக்கும் வாஜ்பாய்க்கு இவர்கள் எப்படி அஞ்சலி எழுதுவார்கள் என்று இப்போதே சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு இவர்கள் மேட்டிமைத்தனமான உயர்சாதி மனோபாவத்துடன், வர்க்க - சாதிக் காழ்ப்புணர்வுடன் மதவெறி நிரம்ப உடையவர்களாக இருக்கிறார்கள். நரேந்திர மோடிக்கு இந்தியாவின் மாநில முதல்வர்களில் முதலிடத்தை ... (08 பிப். 21 பிப்., 2010) வழங்கி தங்களது மதவெறி அரசியலை இப்போதும் வெளிப்படுத்திக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.


1914இல் ஒரு மேல்தட்டு குடும்பத்தில் பிறந்த ஜோதிபாசு கல்லூரிப்படிப்பு முடிந்ததும் பார்-அட்-லா படிக்க லண்டன் சென்றார். ரயில்வே தொழிற்சங்கவாதியாக செயல்பட்டு சட்டமன்ற உறுப்பினராகிறார். 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதும் மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய முன்னணித் தலைவராக செயல்பட்டு முதல் பொலிட்
பீரோவின் 9 உறுப்பினர்களில் ஒருவராகிறார். 8 முன்னணி தலைவர்கள் அனைவரும் மறைந்து விட மீதமிருந்தவர் இவர் ஒருவர் மட்டுமே. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பி.சி.கோஷ் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி அமைச்சரவையில் முதன்முதலில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். 1969 தேர்தலில் வங்காள காங்கிரசுடன் இணைந்துஐக்கிய முன்னணிஎன்ற பெயரில் இடது சாரிகள் போட்டியிட்டு அஜய் குமார் முகர்ஜியிடம் பாசு மீண்டும் துணை முதல்வரானார். 1975 நெருக்கடி நிலையால் காங்கிரஸ் மீது ஏற்பட்ட வெறுப்பு 1977-ல் காங்கிரஸ் தோல்வியடைய முதன்மைக்காரணமாக இருந்தது.


1977 தேர்தலில் CPI(M) தலைமையிலான இடது முன்னணி வெற்றி பெற்று ஜோதிபாசு முதல்வராக வழிகோலியது. அதன் பின்னால் நடைபெற்ற 1982, 1987, 1991, 1996 ஆகிய தேர்தல் களிலும் இடது முன்னணியே வெற்றி பெற்று 2000 வரை 23 ஆண்டுகள் மேற்கு வங்காளத்தில் முதல்வராக இருந்து இந்திய அளவில் சாதனை ஏற்படுத்தினார். 2000ல் உடல் நிலை காரணமாக முதல்வர் பதவியிருந்து தாமே முன்வந்து விலகினார்.


உலகமயமாக்கல், தனியார்மயம், தாராளமயம் என்றமுதலீட்டிய சட்டகத்துக்குள் இந்திய முழுமையும் இயங்கிக் கொண்டிருக்க ஒரு மாநிலம் அல்லது சில மாநிலங்கள் மட்டும் அவற்றிலிருந்து எப்படி வேறுபட்டு நிற்கமுடியும் என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி. பிற தேசிய கட்சிகள், மாநிலக்கட்சிகள் ஆட்சிசெய்யும் மாநிலங்களிலிருந்து மேற்கு வங்காளம் ஒப்பீட்டளவில் எவ்வாறு வித்தியாசப்படுகிறது என்பதே முக்கியம். 33 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் அங்கு உருவாகி இருக்கக்கூடிய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார வர்க்கம், நந்திகிராம், சிங்கூர் பிரச்சினைகளில் அரசின் நிலைப்பாடு, மார்க்சிஸ்ட் - மாவோயிஸ்ட் மோதல்கள், உள்கட்சி முரண்பாடு போன்ற விஷயங்களில் இடது சாரி அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியும்.


இதே ஊடகப்புலிகள் ஆந்திர முதல்வர் ஓஸ்.எஸ். ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் (2009) மரணமடைந்தபோது என்ன எழுதினார்கள்? தானைத்தலைவன், மக்கள் தலைவர் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி (இந்தியா டுடே செப் 06, 2009). அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் குடும்பத்தினர் சுரங்கத் தொழிலில் கொடிகட்டி பறப்பதையும் அதிகாரவர்க்கம் ஊழலில் திளைத்து அதிகாரங்களை எப்படி தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது என்பது பற்றியும் யாரும் மூச்சுக்கூட விடவில்லை.


இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் கருத்துக் கணிப்பில் (...08-21,பிப். 2010) முதலிடம் பெறும் நரேந்திர மோடிக்கு 19.5% -ம் இரண்டாமிடம் பெறும் ஷீலா தீட்சித்க்கு 9.8%ம் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா 0.8% 18வது இடத்திலும் அச்சுதானந்தன் 1.0% பெற்று 17வது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் இருக்கவேண்டிய பி.எஸ். எடியூரப்பா 3.5% பெற்று 6-வது இடத்தில் உள்ளார் போலியான நேர்மைக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் இருக்கமுடியும்? கருத்துக் கணிப்பின் நம்பகத்தன்மை கேலிக்கைக்குரியதாக உள்ளது.


சுதானுகுருவில் குற்றச்சாட்டுப் பட்டியலில் தொழில்மயத்தில் 1960க்கு பிறகு மேற்கு வங்காளம் பின்தங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. தொழில் வளம் என்பது பன்னாட்டு கம்பெனிகளின் எண்ணிக்கையை பொறுத்ததல்ல என்பதை இவர்களுக்கு விளங்கவைக்க வேண்டியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு அரசு வேலையில் பிரதிநிதித்துவம் குறைவு என்றும் அவர்களின் சமூக வளர்ச்சிக்குறியீடோ மோசமான நிலையில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதிலும் இதே நிலை இருப்பதைத்தானே சச்சார் கமிட்டி அறிக்கையும் ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் சுட்டிக்காட்டுகின்றன. இதன்பேரில் நடவடிக்கை எடுப்பதை தடுப்பது இந்த இந்துத்துவ சக்திதான் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும். குஜராத், ஒரிசா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இசுலாம், கிருஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மதக் கலவரங்கள் மேற்கு வங்காளத்தில் நடைபெறவில்லை என்பதை இவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லை. மேலும் 1984 இல் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட போது சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் நாடெங்கும் நிகழ்ந்தபோதும் மேற்கு வங்காளம் அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தில் 22% மேற்குவங்காளத்தில் தான் நிகழ்ந்தது இதில் 55% மேற்குவங்க விவசாயிகள் பலனடைந்திருக்கிறார்கள் என்பது அனைவரும் ஏற்கும் உண்மை. பயனடைந்தவர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் என்று கூட விமர்சனம் சொல்வார்கள். இருந்துவிட்டு போகட்டுமே. மிட்டல், டாடா, பிர்லா, அம்பானிகளுக்கு கொடுக்கவில்லை தானே!


நந்திகிராம், சிங்கூர் பிரச்சினைகளில் இடதுசாரி அரசின் நிலைப்பாட்டை யாரும் சரியென்று சொல்லவில்லை. தொழில் வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை களைவதற்காக டாடாக்களிடம் சிக்கிக் கெண்டார்கள் என்றே எண்ண வேண்டியுள்ளது. இடது சாரி குண்டர்கள் பற்றி பேசுபவர்கள் காங்கிரஸ், பா..., ஆர்.எஸ்.எஸ், சிவசேனை, தி.மு.., .தி.மு.. குண்டர்களைப் பற்றியும் பேசவேண்டும். ஏன் பேசுவதில்லை என்பதுதான் தெரியவில்லை. நாடெங்கிலும் ஆட்சி அதிகாரத்தில் நடைபெறும் இச்சீரழிவிற்கு இடதுசாரிகளும் ஆளாகிவிட்டார்கள். லால்கர் பிரச்சினையில் பழங்குடி மக்களுக்கு எதிராக மத்திய அரசு, இடதுசாரி மார்க்சிஸ்ட்களும் இன்னொரு பக்கம் மாவோயிஸ்ட்கள் கூட எதிராகவே இருப்பதை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம். இந்தியாவெங்கும் நூற்றுக் கணக்கான நந்திகிராம்களும், சிங்கூர்களும் இருக்க எந்த எதிர்ப்பும் இன்றி விளைநிலங்கள் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கைக்கு செல்லும்போது, இங்கு மட்டும் பெரும் எதிர்ப்பு தோன்றுவதற்கு காரணம் கம்யூனிச அடித்தளம் மற்றும் போராட்டகுணம் என்பதை மறுக்க முடியாது. நேற்று மார்க்சிஸ்ட்கள் செய்ததை இன்று பழங்குடி மக்கள் செய்கிறார்கள். நாளை வேறு யாராவது அந்தப்பணியைத் தொடர்வார்கள்.


மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட்க்கு மாற்றாக காங்கிரஸ் மற்றும் திருணாமுல் காங்கிரஸ் இருக்கவே முடியாது. இடதுசாரிகளின் தவறுகளால் மம்தா பானர்ஜி போராளியாக மாறியிருப்பதான தோற்றம் வரலாற்றின் அவலங்களில் ஒன்று. தமிழ் நாட்டில் ஜெயலலிதா தவறு செய்யும் போது கருணாநிதியுடமும் கருணாநிதி தவறு செய்யும் போது ஜெயலலிதாவிடம் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பை அளிப்தை ஒத்த அவலம் இது. ஏழைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஒரு அரசு மத்தியதர மற்றும் உயர் வகுப்பினரை திருப்திப்படுத்துவது என்பது நடவாத விஷயம். இருப்பினும் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டுத்தான் சரியாக மதிப்பிடமுடியும்.


சுமார் 20 ஆண்டுகாலம் முதல்வர் இருந்த அனுபவத்தில் இந்தியா முதலாளித்துவ ஜனநாயக சட்டகத்துக்குள் தான் செயல்பட முடிந்த எல்லையை அவர் நன்கு உணர்ந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு மாறாக1996 இல் பிரதமர் வாய்ப்பு ஜோதிபாசுவுக்குத் தரப்பட்டபோது அவரது பிரதமராகும் ஆவல் வெளிப்பட்டது. ஆனால், கட்சியின் முடிவு அதற்கு எதிராக இருந்தது. பின்நாளில் இதைவரலாற்றுத் தவறுஎன பாசு வருணித்தார். தனக்கு ஒன்றும் இழப்பில்லை, ஆனால், வங்காளத்திற்கும் கட்சிக்கும் பெரிய இழப்பு என்றார். பாசு பிரதமராகியிருந்தால் கூடுதலாக சில குற்றச்சாட்டுகளைத்தான் சுமக்க வேண்டியிருந்திருக்கும்; வேறொன்றும் நடைபெறப் போவதில்லை என்பதை ஏனோ அவர் அறியவில்லை.


அவருடைய மற்றொரு சாதனை மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையாகும். ஆனாலும், அதிலுள்ள ஊழல், சீர்கேடு போன்றவற்றை அவர் உணர்ந்தேயிருந்தார். தொடர்ந்து பதவியில் நீடிக்க வாய்ப்புகள் இருந்தும் 2000 இல் தாமாக முன்வந்து பதவி விலகியது இந்திய அரசியலில் பெரும்பானோர் செய்யாத ஒன்று என்பதை குறிப்பிடத்தேவையில்லை. அவர்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தனது மரணத்திற்கு பின்பும் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர் என்றே நாம் சொல்லவேண்டியுள்ளது.


இறப்பிற்குப் பின்பு அவரது விருப்பப்படி கண்தானம் செய்யப்பட்டது. உடல் கொல்கத்தாவில் உள்ள எஸ். எஸ்.கே.எம்.மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. இன்றைய உலகமய - இந்தியச் சூழலில் இதைவிட ஒரு கம்யூனிஸ்ட் பெரிதாக என்ன செய்துவிட முடியும்?