புதன், மே 11, 2011

புதுக்கணக்குக் குழு : சட்டத்தை மதிப்பவர்கள் நடத்திய கூத்து

புதுக்கணக்குக் குழு :  சட்டத்தை மதிப்பவர்கள் நடத்திய கூத்து
 

- மு. சிவகுருநாதன்




    2ஜி அலைக்கற்றை ஊழல் வெளிப்பட்டதிலிருந்தே தி.மு.கவும், அதன் தலைமையும் சட்டத்திற்கு புறம்பான வகையிலும் காங்கிரசை மிரட்டியும் இவ்வூழலை குழிதோண்டி புதைக்க பல்வேறு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.  தலைமைக் கணக்குத்தணிக்கை அதிகாரி (CAG) அறிக்கை மீது அவதூறு செய்தது, ஆரிய - திராவிட முலாம் பூசியது, கி. வீரமணி, சுப. வீரபாண்டியன் போன்ற அடிவருடி கும்பல்கள் மூலம் ஆதரவுப் பிரச்சாரத்தை முடுக்கியது, ஆ. ராசா என்ற ஒரு தனி மனிதர் இவ்வளவு பெரிய ஊழல் செய்திருக்க முடியுமா என்று கேட்டது, ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றது என்று பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    முடிந்த வரையில் காங்கிரஸ் கட்சியை மிரட்டியும் அதற்காக அமைச்சர்கள் பதவி விலகல் வெளியிலிருந்து ஆதரவு போன்ற அபத்தக் கூத்துக்களை அரங்கேற்றியும் இறுதியில் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பயந்து 63 இடங்களை விட்டுக் கொடுத்து உயர்நிலை செயல் திட்டக்குழு முடிவையெல்லாம் குப்பையில் எறிந்தது பழங்கதை.

    சி.பி.அய் தாக்கல் செய்த இரண்டாவது குற்றப் பத்திரிக்கையில் கனிமொழியில் பெயர் இடம் பெற்றதையடுத்து தி.மு.க.வின் உயர்நிலை செயல் திட்டக்குழு மறுமுறை கூட்டப்பட்டது.  ஆ. ராசா கைது செய்யப்பட்டபோது கூட உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டப்பட்டதில்லை.  காவிரிப் பிரச்சினை, ஈழத்தமிழர் படுகொலை போன்ற பொதுப்பிரச்சினைக்கெல்லாம் கூட இக்குழு கூடியதில்லை என்பது கவனத்திற்குரியது.

    கனிமொழியை காப்பாற்றுவது கட்சியை காப்பாற்றுவதாகும் என்றும், அவரது குடும்பத்தார் படும் வேதனைகள் சொல்லி மாளாது.  இரு நாட்களாக அவர்கள் வீட்டிற்கே செல்லவில்லை என்று அழுது புலம்பிய மு. கருணாநிதி, எனக்குள்ள சங்கடங்களைப் பெரிதுப்படுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் (கனிமொழியை?) காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் உறுதியளித்து வழக்கை சட்டப்படி எதிர்கொள்வதாக வீரவசனம் பேசித்தான் ஓய்ந்தார்.  வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி சுமார் 3 ஆண்டுகள் பொய்வழக்கால் மைசூரு சிறையில் வாடிய பிறகு மிகுந்த இன்னல்களுக்கிடையே விடுதலையாகி தமிழகம் நுழைந்தால் மு. கருணாநிதி தலைமையான காவல்துறை சட்டப்படி கைது செய்யும்.

    கனிமொழி மீதான சட்டப்பூர்வமான சி.பி.அய்-ன் நடவடிக்கைக்கு ரத்தம் சொட்டத் துடிக்கும் மு. கருணாநிதி இரு பெண் குழந்தைகளைப் பிரிந்து வாடிய முத்துலெட்சுமியின் சோகம் நெஞ்சில் உறைக்காதது ஏன்?  (இதுபற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்).  அந்தப் பெண் நிருபர் இதயத்தை கழற்றி வைத்துவிட்டு கேட்கவில்லை.  மு. கருணாநிதிக்கு இதயம் என்று ஒன்று உண்டா?  போலி மோதலில் கொல்லப்பட்ட வெங்கடேசப் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியை நாடாளுமன்ற உறுப்பினர் - மத்திய இணையமைச்சர் என்று அழகு பார்க்கும் மு. கருணாநிதி வீரப்பன் மனைவி முத்துலெட்சுமிக்கு கொடுப்பது சிறைத்தண்டனை.  கனிமொழி, ராசாத்தியுடன் பட்டியலா நீதிமன்றத்திற்கு ஆஜராக தமிழக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா உடன் செல்கிறார்.  அவர் மீதான புகார் என்னவாயிற்று?  இதெல்லாம் அப்பட்டமான சாதீயச் செயல்பாடின்றி வேறில்லை.

    வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு மற்றும் பரிசுப் பொருட்கள் வழக்கு போன்றவற்றில் தமிழ் மொழிபெயர்ப்பு கேட்டும் வாய்தா வாங்கியும் நேரில் ஆஜராகாமல் ஜெ. ஜெயலலிதா இழுத்தடிக்கிறார் என்று புலம்பித் தீர்த்து அந்த மாதிரியெல்லாம் செய்யாமல் கனிமொழி நேரில் ஆஜராகி சட்டப்படி வழக்கை எதிர்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார் மு. கருணாநிதி.  பட்டியலா சி.பி.அய். நீதிமன்றத்தில் மே 06, 2011 அன்று கனிமொழி ஆஜராகாமல் இருந்தால் உடன் கைது செய்யப்பட்டிருப்பார் என்பது வேறு கதை.

    பிணை மனுவுடன்தானே ஆஜரானீர்கள் என்பதும் உலகிற்கு தெரியுமே!  அடுத்தவர்களுக்கு மட்டும் சட்டம் பேசும் மு. கருணாநிதியும், அவரது கட்சியும் 2 ஜி அலைக்கற்றை ஊழலில் என்ன சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியது தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

    நாடாளுமன்ற கூட்டுக்குழு (JPC) விசாரணையை எதிர்க்கட்சிகள் கோரியபோது காங்கிரசும், ஐக்கிய முன்னணி கூட்டணிக் கட்சிகளும் பொதுக்கணக்கு குழு (PAC) விசாரணை போதுமானது என்று சொல்லி வந்தது.  நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு காங்கிரஸ் தான் தலைமையேற்கும்.  பொதுக்கணக்குக் குழு பா.ஜ.க.வைச் சேர்ந்த டாக்டர். முரளி மனோகர் ஜோஷியின் தலைமையில் இருப்பதால் அதுவே போதுமானது என்ற பல்லவியை தொடர்ந்து பாடிய பிறகு நீண்ட நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிறகு காங்கிரசின் பி.சி. சாக்கோ தலைமையில் JPC- ம் அமைக்கப்பட்டுள்ளது.

    JPC அமைக்க ஐக்கிய முன்னணி அரசு தயங்கியதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டது.  பிரதமர் மன்மோகன்சிங் நேரில் அழைத்து விசாரிக்கப்படுவார் என்பதே அது.  2 ஜி அலைக்கற்றை, S-பாண்ட் ஆகிய பிரதமர் சம்மந்தப்பட்ட நேரடி ஊழல்கள் மற்றும் காமன்வெல்த் ஊழல், கருப்புப்பண விவகாரம் போன்றவற்றின் மூலம் பிரதமர் மன்மோகன்சிங் ஒன்றும் கறைபடியாத புனிதர் இல்லை என்பதைத் தெளிவாக்குகின்றன.  இந்நிலையில் அவரை விசாரிக்கக் கூடாது என்பது எவ்வகை ஜனநாயகம் என்று தெரியவில்லை.

    எந்த விசாரணைக்குழுக்கள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தாலும் அது குறித்து எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை.  ஆனால் அறிக்கை மட்டுமாவது அளிக்கப்படும்.  2 ஜி விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க. ஆகியவை முலயாம்சிங், மாயாவதி ஆகியோருடன் புதுக்கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு அறிக்கையை அளிக்க முடியாமல் ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கிவிட்டன.

    அரசியல் சட்டப்படி சரியென்றாலும் தார்மீக அடிப்படையில் காங்கிரஸ், தி.மு.க. போன்ற குற்றச்சாட்டுக்குள்ளான கட்சிகள் PAC, JPC ஆகியவற்றில் இடம் பெறவேக் கூடாது. இவர்கள் சொல்லிக் கொண்டிருப்பதுபோல் ஊழலே நடைபெறவில்லையென்றால் இவர்கள் தாமாக ஒதுங்கிக் கொண்டு நேர்மையான விசாரணைக்கு வழிவிட்டிருக்க வேண்டும்.  ஆனால் அது நடக்கவில்லை.

    பொதுக்கணக்குக்குழுவின் விசாரணைக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு தடை ஏற்படுத்திய இக்கட்சிகள் வரைவு அறிக்கையை ஊடகங்களுக்கு கசியவிட்டதோடு நில்லாமல் தலைவரை வெளியேற்றிவிட்டு தனிக்கூட்டம் நடத்தி புதிய தலைவரைத் தேர்வு செய்து அறிக்கையை நிராகரிப்பது என்ற நாடகத்தை அரங்கேற்றினர்.

    இதற்குத் துணையாக மாயாவதி, முலயாம்சிங் போன்றவர்களுடன் கொள்ளைக் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டனர்.  இவற்றைப்பார்க்கும்போது இந்த ஊழலில் ஆ. ராசா, தி.மு.க மட்டும் காரணமல்ல; காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், இந்தியப் பெருமுதலாளிகள் பலரின் பங்கும் இருப்பது தெளிவாகத்தெரிகிறது.  சட்டத்தை மதித்து நடப்பவர்களின் செயல்பாட்டிற்கு இது ஒரு உதாரணம்   மட்டுமே போதும்.

    பி.சி. சாக்கோ என்ற காங்கிரஸ்காரரின் தலைமையில் உள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு மட்டும் என்ன சாதித்துவிடப் போகிறது?  இதே கூட்டணி அங்கேயும் உருவாகுமல்லவா?  திருடனே போலிசாக மட்டுமல்ல, நீதிபதியாகவும் மாறினால் பின்னர் திருட்டை எப்படி கண்டுபிடிக்க முடியும்?

    இன்னும் எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை உச்சநீதிமன்றம் மட்டுமே.  இதன் நேரடிக் கண்காணிப்பின் கீழ்தான் சி.பி.அய். இந்த அளவிற்கு செயல்பட்டிருக்கிறது என்பதே உண்மை.  இது தொடர வேண்டும்.  அப்போதாவது ஏதேனும் உண்மை வெளியாகிறதா என்று பார்க்கலாம்.  மேலும் ஆ. ராசா அப்ரூவர் ஆகி உண்மைகளை வெளிப்படுத்துவதுதான் அவருக்கும், இந்த ஊழல் வழக்கு விசாரணைக்கும் உறுதுணையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக