செவ்வாய், நவம்பர் 20, 2018

‘கஜா’ மற்றுமொரு ‘தானே’

                                                       ‘கஜாமற்றுமொருதானே

                                மு.சிவகுருநாதன்



     சுனாமி (2004), ஃபானுஸ் (2005), நிஷா (2008), ஜல் (2010), தானே (2011), சென்னை வெள்ளம் (2015), வர்தா (2016), ஓகி (2017), கஜா (2018) என எத்தனைப் பேரிடர்கள் வந்தாலும் நாம் பாடங்கற்றுக் கொள்ளப் போவதில்லை. கிராம நிர்வாக உதவியாளர்கள் தொடங்கி நாட்டின் உச்சபட்ச நிர்வாகப் பதவிகளில் இருப்போர் ஒருபுறமும் வார்டு உறுப்பினர் தொடங்கி பிரதமர், குடியரசுத்தலைவர் என்று அனைத்து நிலைகளில் இருக்கும் அதிகாரத் திமிர், மேட்டுக்குடி மனோபாவம் ஆகியன சூழ்ந்திருக்கும் வரையில் இந்நாட்டில் எத்தகைய மாற்றமும் சாத்தியமில்லை. இதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. வர்ணப் பிறப்பைப்போல அதிகார வர்க்கம் பொதுமக்களிடமிருந்து தங்களை உன்னதப்படுத்திக் கொள்கிறது

   நவம்பர் 15, 2018 இல் கரையைக் கடந்தகஜாபுயல் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களையும் தாண்டி பெருமளவில் பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது. ஒப்பீட்டளவில் சுனாமியில் அதிக உயிர்ச்சேதம் என்றால் இதனால் அதிக பொருள்சேதம். அதிக உயிரழப்புகள் இல்லை என்பதே இங்கு பெருமைப்படும் ஒன்றாக உள்ளது. இதுவரையில் அரசு சுமார் 50 உயிரிழப்புகளை விவசாயிகள் தற்கொலைகளைப் போலில்லாமல் ஒத்துக்கொண்டுள்ளது

    மத்திய, மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் கூட புகழ்ந்து தள்ளுகின்றன. இதிலுள்ள குளறுபடிகளை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. மேலும் பேரிடர் மேலாண்மையில் முன்னெச்சரிக்கை மட்டுமே போதுமானதல்ல. பேரிடருக்குப் பிந்திய மீட்பு, நிவாரண நடவடிக்கைகளும் பேரிடர் மேலாண்மையில் அடங்கும் என்பதையும் இவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும். மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எவ்வளவு மந்தமாக நடைபெறுகிறது என்பதை களத்திற்குச் செல்லும் போதும் மக்கள் படும் அவதிகள் மூலமும் உணரலாம். இதன் வெளிப்பாடே மக்கள் போராட்டங்கள்
  • புயலின் வேகம் மற்றும் திசையைச் சரியாக கணிக்கத் தவறுதல்.
  • குடிசை, கூரை மற்றும் ஓட்டுவீடுகளில் இருந்த மக்களை வெளியேற்ற எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லை
  • அத்தியாவசிய தேவைகளான உணவு, பால், குடிநீர், உடைகள், மண்ணெண்ணைய் போன்றவை விநியோகிக்கப் படவில்லை.
  • பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மக்களை விரக்தியில் தள்ளுகிறது
  • சாலைகளின் குறுக்கே கிடந்த பெருமரங்கள் வெட்டி அகற்றப்பட்டு மக்களின் இயக்கத்திற்கு வழிவகை இல்லை.
  • உள்ளூர் மக்களே இவ்வேலைகளில் ஈடுபட்டபோதிலும் பெரிய மரங்களை வெட்டி அகற்ற இயந்திர வசதிகள் இல்லாத நிலையில் அவர்களால் முழுமையாக இப்பணிகளில் ஈடுபட முடியவில்லை.
  • உயிர் மற்றும் பொருட்சேதக் கணக்கெடுப்பு முறையாக இல்லை.
  • உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத நிலையில் ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கைகள் இல்லை
  தகட்டூர் . செல்வகுமார் (மன்னார்குடி) போன்ற சுயேட்சையான வானிலை ஆய்வாளர்கள் இந்தப் புயலின் வேகம், திசை, பாதிப்புகள் போன்றவற்றை மிகச்சரியாக கணிக்க இந்திய வானிலை ஆய்வு மையங்களால் ஏன் முடியவில்லை? .செல்வகுமார்கஜாஅதி தீவிரப் புயலாக மணிக்கு 125 கி.மீ. வேகத்தில் நாகை மாவட்டப் பகுதிகளைத் தாக்கும் என்று சொன்னபோது, மண்டல வானிலை ஆய்வு மையம் (சென்னை) 80 -100 கி.மீ. என்றே சொல்லிக் கொண்டிருந்தது. புயலின் திசை, அதன் வேகம், தாக்கக்கூடிய பகுதிகளை சரிவர இனங்காணாமல் கடலூர்பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்கிற பழைய பல்லவியைப் பாடி பேரிடரை அதிகப்படுத்தியது ஏன்? இறுதியாக 120 கீ.மீ. என்று ஒத்துகொண்டது. வேதாரண்யம் ஒட்டிய பகுதிகள் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதையும் காற்றின் வேகத்தையும் சரியாக கணிக்கத் தவறிவிட்டது வானிலை ஆய்வு மையம். சேதங்களைப் பார்க்கும்போது தானே, வர்தா, ஓகி ஆகிய அதிதீவிரப் புயல்களைப் போன்று 150 கி.மீ. தாண்டிய வேகம் இருக்கும் என்றே சொல்ல வேண்டியுள்ளது. பாதிப்புகள் இவற்றை நன்கு உணர்த்துகின்றன.

    புயலுக்கு முதல்நாள் இரவுபுதிய தலைமுறைதொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட மண்டல வானிலை மைய (சென்னை) முன்னாள் இயக்குநர் ரமணன் அமெரிக்கா இலவசமாக அளித்த தொழில்நுட்பங்களையே வானிலை ஆய்வுக்குப் பயன்படுத்துகிறோம் என்றார். ‘பூவுலகின் நண்பர்கள்சுந்தர்ராஜன் எழுப்பிய கேள்விகளுக்கு யாரிடமும் பதிலில்லை

    புயலுக்கு முந்தைய நாளும் இஸ்ரோ தலைவர் சிவன் சந்த்ராயன் அது, இது என்று அறிக்கைகளை விடுத்துகொண்டே யிருந்தார். மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இஸ்ரோ முழுதும் வணிகமயமான நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை தருகிறது. வானிலை, காலநிலை ஆய்வுகளுக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை. ராணுவம், சி.பி.அய். போன்று கேள்வி கேட்க இயலாத அமைப்பாக இஸ்ரோ வளர்த்தெடுக்கப்படுவது நாட்டுக்கு நல்லதல்ல. இஸ்ரோவின் S பாண்ட் அலைக்கற்றை மெகா ஊழல் ஊற்றி மூடப்பட்டதையும் இங்கு நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது

    மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் குளறுபடிகள் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் விரும்பும் பகுதிகள் மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன. அதிக பாதிப்பிற்கு உள்ளான பகுதிகள் இவர்களின் பாராமுகத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட தூண்டப்படுகின்றனர்

    உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததன் தாக்கம் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் நன்றாக வெளிப்படுகிறது. உள்ளூர் மக்கள் ஒத்துழைப்பின்றி அமைச்சர்கள், அலுவலர்கள் இணைந்த அதிகார வர்க்கம் ஒன்றும் செய்யமுடியாது. எல்லாவற்றையும் அதிகாரத்தின் துணைகொண்டு சாதிக்கலாம் என்று கனவு காணுவது அறிவீனம். இரண்டாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் நிர்வாகம் முடங்கியுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் வெறும் கேள்விதான் எழுப்ப முடிகிறது

    தென்னங்கீற்றுக் குடிசைகள் / கூரைகள் ஏழ்மையின் அடையாளம். ஆனால் இங்கு தகரக் கூரைகள் நடுத்தர, மேட்டுக்குடி அடையாளமாக மாறிப்போனது. பல நாடுகளில் தடை செய்யப்பட்டஆஸ்பெட்டாஸ்கூரைகள் மறுபுறம். இவைகளைப் பயன்படுத்துவதை இனியாவது தடுப்பது நலம். இன்றுபெட்ரோல் பங்க்களில் இத்தகைய கூரைகள் இருக்குமிடம் தெரியவில்லை. இவற்றை வெறும் அலங்கார, மேட்டிமைப் பொருளாக நினைக்கும் பார்வைகள் மாறவேண்டும்குடியிருப்புகளில், மாடிகளில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படுவது இனியாவது நிற்குமா?

     தென்னை, முந்திரி, மா, பலா, வாழை, கரும்பு போன்ற பல்வேறு வேளாண்பயிர்களின் சேதம் முழுமையாக மதிப்பிடப் படவேண்டும். அதேபோல் கால்நடைகள் கணக்கெடுப்பும் முறையாக நடைபெற வேண்டும். இப்போது வெளியாகும் கணக்கீடுகள் முழுமையானதல்ல
 

     ‘கஜா’ புயலின் வேகம், சேதம் ஆகியன ‘தானே’ புயலுடன் ஒப்பிடக்கூடியது. இதில் இன்னொன்றையும் கவனிக்கலாம். சென்னைக்கு புயல் (வர்தா), வெள்ளம் என்றால் உடனே ஓடிவரும் அதிகாரவர்க்கம் பிறபகுதிகள் என்றே சற்றே மெதுவாக அல்லது வருவதேயில்லை என்ற நிலைப்பாட்டுடன் அலட்சியமாக இருப்பது கவனிக்கத்தக்கது. அனைத்து களன்களிலும் நகரங்கள் வாழ கிராமங்கள் தொடர்ந்து பலியிடப்படுகின்றன. பாலியல் வன்கொடுமைகளில் கூட ‘நிர்பயா’ அளவிற்கு எந்தக் கொடுமையும் அணுகப்படவில்லை என்பதே வேதனை தரும் உண்மை. இவை சமூகத்தில் மிக மோசமான தாக்கத்தை விளைவிக்கும் என்பதை யாரும் உணர்வதில்லை.

    எத்தனைப் பேரிடர் வந்தாலும் அரசுகள் எதையும் கற்றுக்கொள்வதில்லை என்பது நிர்வாக முறையின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவது. அதிகார மமதை, முடங்கியிருக்கும் உள்ளாட்சி, அலட்சியப் போக்கு, மக்களைப் பற்றிய இழிவான பார்வைகள், பெருமித உணர்வுகள், அலட்சியமான பேரிடர் மேலாண்மை, வானிலை ஆய்வுக் கணிப்பு குளறுபடிகள், எதையும் வணிகமாக்கும் அரசின் செயல்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் நமக்கு விடிவு இல்லை. இதன் மூலம் பேரிடர் மேலாண்மையைக் கட்டமைக்கவோ முன்னெச்சரிக்கை, மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை செயல்படுத்தவோ இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக