வியாழன், பிப்ரவரி 08, 2024

சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும் அறவியல் பார்வை

 

 சூழலியல் கற்பிதங்களை தகர்க்கும்  அறவியல் பார்வை

 

மு.சிவகுருநாதன்

 

(நக்கீரனின்இயற்கை 24*7 - சுற்றுச்சூழல் வழிகாட்டி நூல்குறித்த அறிமுகப்பதிவு.)


 

         சூழலியல் கற்பிதங்களையும் அதன் பின்னாலிருக்கும் அரசியலையும் சூழலியல் அறத்தையும் 18 தலைப்புகளில் நுட்பமாகவும் சுருக்கமாகவும் அதே சமயம் மிகத் தெளிவாகவும் இந்நூலில் எழுதியிருக்கிறார் நக்கீரன்.  அறிவியல் என்ற பிரிவில்  ஆறாம் அழிவு, புடவி (பிரபஞ்சம்), உயிர்க்கோளம், பெருங்கடல், கடற்கரை, மணல், தண்ணீர், காற்று, ஒளியும் ஒலியும், காடு  ஆகிய 10 தலைப்புகளும்  அரசியல் பிரிவில்  மனிதர், நுகர்வு, மக்கள்தொகைப் பெருக்கம், நிதி அரசியல், சூழல் நீதி, ஃபேஷன் சுற்றுச்சூழல், குப்பை, சுற்றுச்சூழல் அரசியல்  ஆகிய 8 தலைப்புகளும்  இந்நூலில் இடம்பெறுகின்றன. இவையும் இவற்றினுள் இடம்பெறும் உட்தலைப்புகளும் நூலின் தன்மையை நமக்கு வெளிக்காட்டிவிடுகின்றன.  ஆறாம் அறிவு அழிவாக மாறுவதை எச்சரிக்கை செய்கிறது.

        இந்து தமிழ் திசைநாளிதழின் உயிர் மூச்சுபகுதியில் சனிதோறும்  இயற்கை 24x7’ என்ற தலைப்பில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். நக்கீரனின் நீர் எழுத்து, சூழலும் சாதியும், தமிழ் ஒரு சூழலியல் மொழி  போன்ற நூல் வரிசையில் இயற்கை 24x7க்கும் இடமுண்டு. ‘Save Nature’ என்ற போலிச் சூழலியல் முழக்கத்தை ஒரு சிறுமி தகர்ப்பதைச் சுட்டி நூல் தொடங்குகிறது. சூழல் அறத்தைப் பேசுவதால் அதனுள் இருக்கும் மோசடிகளையும் கற்பிதங்களையும் பேசாமல் இருக்க முடியாது. இதன்மூலம் சூழலியர் என்கிற போர்வையில் உலவும் பலரும் உள்பட கார்ப்பரேட்டுகளும் அரச முகவர்களும் அம்பலப்படுத்தப்படுகின்றன. இது சிலருக்கு அதிர்ச்சியளிக்கக் கூடும்; வேறு வழியில்லை.

              அரசு மற்றும் பெருவணிக நிறுவனங்களின் சேஃப்டி வால்வ்ஆகப் பணியாற்றிய ‘சூழலியலின் அன்னா ஹசாரே’ என்று அப்துல்கலாமை மிகச்சரியாக கணிக்கிறார். கடுகு, கத்தரிக்காய் போன்று மனிதர்களை மரபணு மாற்றம் செய்து குறுமனிதர்களை உருவாக்கப் பரிந்துரைக்கும் அறிவியல் பரிந்துரை ஒன்றைக் குறிப்பிட்டு இயற்கையின் குரலை செவிமெடுக்கவும் வலியுறுத்துகிறார். இயற்கை, காடு எல்லாம் வளர்ச்சிக்குத் தடை என்று பொதுப்புத்தியில் பதியவைக்க பெருமுயற்சிகள் நடைபெறுகின்றன. இவ்வாறான எழுத்துகள் அவற்றுடன் போராடுகின்றன.

        ஜேம்ஸ் லவ்லாக்கின் கையா: உலகே ஓர் உயிர்’, ரெய்ச்சல் கார்சனின்மௌன வசந்தம்’, ஜான் பெல்லமி ஃபாஸ்டரின்சூழலியல் புரட்சி’, பரிதியின் மாந்தர் கையில் பூவுலகு மேலும் பில் பிரையன், ஜாரெட் டயமண்ட் போன்றோரின் நூல்கள் என சூழலியல் நூல்களின் கருத்துகள் ஆங்காங்கே எடுத்துக்காட்டப்படுவதன் வாயிலாக புதிய வாசகர்களுக்கு இவற்றை மேலதிகமாக வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

        நக்கீரன் வழக்கம்போல் இந்நூலிலும் பல்வேறு புதிய கலைச் சொல்லாக்கங்களை உருவாக்கியிருக்கிறார். புடவி (பிரபஞ்சம்), மிதவி (பிளாங்டன்), பொழி (கழிமுகம்), நளிரி (.சி.எந்திரம்), நளிர் அரங்கம் (.சி.ஹால்)  ஆகியவை அவற்றுள் சில. தமிழ் இலக்கியங்களில்ருந்து சிலவற்றை மீட்டெடுக்கிறார். (.கா) எக்கி (பரிபாடல்), எக்கர் - ஆழிக்கிணறு (நற்றிணை), நீரகம் (கொன்றை வேந்தன்). ‘மறைநீர்போன்று இவையும் தமிழ் வழக்கில் நிலைக்கட்டும்.

       சுமார் 28% உயிர்வளியைத் தரும் அமேசான் அல்லது மழைக்காடுகளைஉலகின் நுரையீரல்என்கிறோம். சுமார் 70% உயிர்வளி கொடுக்கும்  புவியின் கருப்பைகடலை மறந்து குப்பைத் தொட்டியாக மாற்றிவிட்டோம்.  நீலம் இல்லையேல், பச்சை இல்லை”, என்ற சில்வியா எர்ல் கருத்தை வெகு  இயல்பாக அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.

      கடற்கரை மணல் திட்டுகள், மணற்குன்றுகள், மணல் மேடுகள் நிலத்தடி நன்னீர் தடுப்புச் சுவராக மாறி கடற்கரைக்கு நன்னீரை வழங்குகின்றன. இந்த இயற்கைச் செயல்பாட்டை இறைவனின் கருணை என்று நினைத்ததோடு மட்டுமல்லாமல் அவற்றை அழித்துவிட்டு கடல்நீரை குடிநீராக்கும் வணிகத்திற்கு (RO) அடிமையாகி விட்டோம்.

      நுண்மிகளில் தீ நுண்மி, நல் நுண்மி என்பதெல்லாம் மனித மையப்பட்ட பார்வை. இயற்கையை இவ்வாறெல்லாம் அணுக இயலாது. இதைப்போலவே சூழல் மாசுகளுக்கு மனிதனை மட்டும் பொறுப்பாக்கி கார்ப்பரேட் மற்றும் அரசுகளை விடுவிக்கும் முயற்சிகளில் ஃபேஷன் சூழலியர்கள் ஈடுபடுகின்றனர். ஃபோர்டு நிறுவனம் போன்ற பெருநிறுவனங்கள் நிதி வழங்குகின்றன என்பதைஃபண்டு இலையேல், தொண்டு இல்லை”, என்று எளிமையாக விளங்க வைக்கிறது நூல்.

        மரபு சார்ந்த சூழலியர் பயிரினம், விலங்கினம் மட்டிற்காக போராடுபவர்கள்; மரபுசாரா சூழலியர் அழிவிலிருக்கும் விளிம்புநிலை மக்களுக்காகவும் போராடுபவர்கள் என்பதையும் தற்போது மூன்றாவது வகையினராக ஃபேஷன் சுற்றுச்சூழல் சேவையாளர்கள் அதிகமாக உள்ளனர். ‘தூய்மை இந்தியாவினர் இவ்வகையைச் சேர்ந்தவர்கள். காமன் மனிதரை பொறுப்பாக்கும் இவர்கள் கார்ப்பரேட் மனிதர்களைக் கண்டு கொள்ள மாட்டார். எனவே இவர்கள் யாருக்காக இயங்குபவர்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மரம் நடவும், விதைப்பந்து வீசவும், மிதிவண்டியில் செல்லவும், மின்சாரத்தை அணைக்கவும், மழைநீரை சேமிக்கவும் சொல்லும் இவர்கள் கார்ப்பரேட் குப்பைக்காடாக இந்தியா போன்ற நாடுகள் மாற்றப்படுவது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். இந்த ஃபேஷன் வருமானம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளதை நக்கீரன் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

        சுற்றுச்சூழல் கானகவியல் (Ecological Forestry), பசுமைப் பொருளியல் (Green Economics), சூழல் சாதியம் (Eco Castism), சார்பற்ற சுற்றுச்சூழலியம் (Secular Environmentalism)  போன்ற யாரும் கண்டுகொள்ளாத புலங்களைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது.  உலக வங்கி, பன்னாட்டு நிதியம் எனும் அமெரிக்க வட்டிக்கடைகள் பற்றிய கூர்மையான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. உலகவங்கி புகுந்த நாடும் ஐஎம்எஃப் புகுந்த நாடும் உருப்பட்ட வரலாறு இல்லை என்பதை அழுத்தத்திருத்தமாகப் பதிவு செய்கிறது.

       காற்று மாசு அமில மழைக்குக் காரணமாகிறது. ஸ்ட்ரான்சியம் 90 என்ற கதிரியக்கத் தனிமம் மண்ணில் நுழைந்து, நெல், கோதுமை போன்ற உணவுப் பயிரிகள் வழியே நம் உடலில்  ஊடுருவித் தங்குகிறது. இது நமக்கு புற்றுநோய் எனும் வாடகையைத் தருகிறது. இந்த வாடகை யாருக்கு வேண்டும்? என்கிற உயிர்ப்பான கேள்வியை நம்முன் வைக்கிறது இந்த நூல்.

           இயற்கை எனும் கணினி ஐந்து முறை டெலிட் பொத்தானை அமுக்கி இவ்வுலகை முழுமையாக அழித்ததை நினைவூட்டி நம்மை நூல் எச்சரிக்கிறது. வளிமண்டல வள்ளல், காடு ஒரு கார்பன் வங்கி என்ற தலைப்புகள் இயற்கையின் முதன்மையை விளக்குகின்றன. இவற்றுடன் கற்பிதங்களையும் பொய்மைகளை அகற்றப்பட வேண்டிய தேவையும் வலியுறுத்தப்படுகிறது. சூழலியல் குறித்த உலகின் மீது திணிக்கப்பட்ட கற்பிதங்களையும் மாயைகளையும் பல களங்களிலிருந்து தகர்க்கும் வேலையை நக்கீரன் சிறப்பாக தொடங்கியிருக்கிறார். இத்தகைய அறவியல்-அரசியல் பார்வை சூழலியல் போலிகளை அம்பலப்படுத்தவும் மக்களை விழிப்புணர்வூட்டவும் பெரிதும் உதவும்.

 

நூல் குறிப்புகள்:

 

இயற்கை 24X7 – நக்கீரன்

பக். 140, விலை: ரூ.170

முதல் பதிப்பு:  அக்டோபர் 2023

வெளியீடு:

காடோடி பதிப்பகம்,

6, வி.கே.என். நகர், நன்னிலம் – 610105,

திருவாரூர்மாவட்டம்.

அலைபேசி:  8072730977

ஞாயிறு, பிப்ரவரி 04, 2024

இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந்த இந்திய விடுதலைப் போரும்

 

இரண்டாம் உலகப்போரும் தீவிரமடைந் இந்திய விடுதலைப் போரும்

 

(மகாத்மாவின் கதை தொடரின் பதினான்காவது அத்தியாயம்.)

 

மு.சிவகுருநாதன்


 

              இந்திய தேசிய காங்கிரஸ் 1885இல் ஆலன் ஆக்டோவியன் ஹியூம் (Allan Octavian Hume) முயற்சியால் உருவாக்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். 1885 டிசம்பர் 28 பம்பாயில் நடந்த முதல் அமர்வில் உமேஷ் சந்திர பானர்ஜி முதல் தலைவராகத் தேர்வானார்.  அன்று காங்கிரஸ் தலைவர்கள் ராஷ்டிரபதி (President) என்றழைக்கப்பட்டார். ஆண்டுகொருமுறை புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. இந்த அமைப்பில் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய மாகாணங்களில் ஆங்கில அறிவு பெற்ற இந்தியர்கள் பங்கேற்றனர். முதல் அமர்வில் பங்கேற்ற 72 பேரில் 22 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1887இல் காங்கிரசின் மூன்றாவது மாநாடு பக்ருதீன் தியாப்ஜி தலைமையில்  மக்கீஸ் தோட்டம் என்றழைக்கப்பட்ட இன்றைய ஆயிரம் விளக்கில் நடைபெற்றது. அதில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். 

        காந்தி 1924இல் பெல்காம் (கர்நாடகா) அமர்வில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டு மட்டுமே தலைவராக இருந்தாலும் காங்கிரசை தன் முழுக் கட்டுப்பாட்டில் காந்தி வைத்திருந்தார். இந்திய விடுதலைப்போரின் இறுதிக் காலத்தில் அவரது பிடி தளர்ந்தது என்று சொல்லலாம். 1947 இந்திய விடுதலை வரை 61 தலைவர்கள் அப்பதவியில் இருந்துள்ளனர். விடுதலைக்கு முன்பு அதிகமுறை தலைவராக இருந்தவர் ஜவகர்லால் நேரு.

         நேதாஜி 1921இல் ஐ.சி.எஸ். பதவியை விட்டு விலகி இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நாட்டு விடுதலைப் போரில் பங்கு பெற்றார். 1937இல் குஜராத் மாநிலம் ஹரிபுராவில் கூடும் காங்கிரசின் 51வது மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸ் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என்கிற செய்தி முன்கூட்டியே கசிந்தது. இதற்கு முன்னதாக நேதாஜி ஐரோப்பிய பயணம் ஒன்றை மேற்கொண்டார். காங்கிரஸ் தலைவராகத் தேர்வான பிறகு 1938 ஜனவரி இறுதியில் இந்தியா திரும்பினார். கல்கத்தாவில் பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நேதாஜி தலைவரானதால் வங்காளத்திலும் சமதர்ம தேசியவாதிகள் மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

         இந்திய விடுதலைப் போராட்டத் திட்டங்களான அகிம்சை, சத்தியாகிரகம், ஒத்துழையாமை, கீழ்படியாமை ஆகியன தீவிர சக்தியற்றவை, அமைதியான எதிர்ப்புகள் என்ற குற்றச்சாட்டுகளை மறுத்து அவை அர்த்தமும் தீவிரமும் கொண்ட போராட்ட வழிமுறைகள் என்றார் நேதாஜி. மேலும் வறுமை, கல்லாமை, அறிவியல் ரீதியான உற்பத்தி மற்றும் பங்கீடு போன்ற பிரச்சினைகள் சமதர்ம வழிமுறைகளின்படி தீர்க்கப்படும் என்றார். தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு ஜவகர்லால் தலைமையேற்கவும் அழைப்பு விடுத்தார். அதன்படி 1938இல் பம்பாயில் திட்டக்குழுவும் தொடங்கப்பட்டது.

        ரவீந்திரநாத் தாகூர் நவீன இந்தியாவை வடிவமைக்கும் சிற்பிகளாக ஜவகர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரை மட்டுமே மிகச் சரியாக இனம் கண்டார். நேதாஜி விரும்பியபடி நேரு திட்டக்குழுத் தலைவராகப் பொறுப்பேற்ற நிலையில் நேதாஜி மீண்டும் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என்று விரும்பி காந்திக்கு கடிதம் கூட எழுதினார். ஆனால் காந்தியின் சாய்வு நேருவிடம் மட்டுமே இருந்தது.

           1938இல் பிரிட்டன் ஹிடலருடன் முறையற்ற வகையில் மியூனிச் ஒப்பந்தம் செய்துகொண்டதும் ஐரோப்பியப் போர் தவிர்க்க இயலாத ஒன்று என்பதை நேதாஜி தெளிவாக அறிந்திருந்தார். அந்தளவிற்கு உலக அரசியல் பார்வைகளை அவர் பெற்றிருந்தார். அதே காலத்தில் இந்தியாவில் தேசியப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி பூரண சுயராஜ்யக் கோரிக்கையை வன்மையாக முன்னெடுத்துச் செல்ல விரும்பினார். இதனை நாம் நீண்ட காலம் நடத்த வேண்டியிருக்காது; 18 மாதங்களில் நாம் விடுதலை பெற்றுவிட முடியும் என்று அவர் காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். கங்கிரசில் இருந்த இந்துத்துவ, வலதுசாரி சக்திகள் இதை விரும்பவில்லை. அவர்கள் நேதாஜிக்கு எதிராக அணிதிரட்டி அதில் வெற்றியும் பெற்றனர்.

      சிறிதும் சமரசமற்ற நரேந்திர தேவா போன்ற தலைவர்கள் காங்கிரஸ் தலைவராகத் தேர்வாகும் நிலை இருப்பின் தான் போட்டியிலிருந்து விலகிவிடுவதாக சுபாஷ் அறிவித்தார். ஆனால் அது நடக்கவில்லை. காந்தியும் நேதாஜி எதிர்ப்பாளர்களும் பட்டாபி சீத்தாராமய்யாவை வேட்பாளராக அறிவித்தனர். எனவே போட்டி உறுதியானது. காந்தி பட்டாபிக்கு அளிக்கும் வாக்கு தனக்களிக்கும் வாக்கு என்றுகூறி வாக்கு சேகரித்தார். ஆனால் இறுதியில் 200க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் நேதாஜி வெற்றி பெற்றார். இதை காந்தியால் ஏற்க இயலவில்லை. பட்டாபியின் தோல்வி, தனது தோல்வி என்று வெளிப்படையாக அறிவித்தார். காந்தி  நேதாஜியுடன் உடன்பட மறுத்து முரண்பட்டு நின்றார். அம்பத்கருக்கு அடுத்து காந்தியுடன் எதிர் நிலைப்பாடு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் நேதாஜி. இப்பிரச்சினைகளில் நேரு நடுநிலை வகித்தார். இருப்பினும் காந்தியின் விருப்பத்தேர்வு நேருவாக இருந்ததால் இருவரும் உள்ளுக்குள் முரண்பட வேண்டி வந்தது. லாகூர் காங்கிரஸ் (1929) மகாத்மாவிற்கு மகத்தான வெற்றி என்றும் மிகவும் பிரபலமான தீவிரவாதிகளில் ஒருவரான ஜவகர்லால் நேருவை காந்தி வசப்படுத்திக் கொண்டதாக என்று நேதாஜிஇந்தியப் போர்எனும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

         இதற்கிடையில் சுபாஷ் சந்திர போஸின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.       1939 ஜனவரியில் காங்கிரஸ் மகாசபை மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் அருகே திரிபுரியில் (தவார்) கூடியது. உடல் நலமின்றி இருந்த நேதாஜி மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி படுக்கையில் இருந்துகொண்டே கூட்டத்தில் பங்கேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் சமரசத்திற்குத் தயாராக இல்லை. ஆலோசனைகள் கூறவும் காந்தி அங்கில்லை. அவர் ராஜ்கோட்டில் உண்ணாவிரதம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இக்கூட்டத்தில் கோவிந்த் வல்லப் பந்த் கொண்டு வந்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. முந்தைய காங்கிரஸ் செயற்குழு மீது முழு நம்பிக்கை இருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் காந்தியைக் கலந்தாலோசித்து அவரது விருப்பப்படியே புதிய செயற்குழுவை அமைக்க வேண்டும் என்பதே இத்தீர்மானத்தின் சாரமாகும்.

       1939 பிப்ரவரியில் நேதாஜி காந்தியை வார்தா ஆசிரமத்தில் நேரில் சந்தித்து உரையாடினார். அப்போதும் அவர்களிடம் ஒத்த கருத்து ஏற்படவில்லை. நேதாஜிக்கு எதிராக பெரும்பாலான காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மொத்தமாகப் பதவி விலகினர். இந்நிலையில், “நீங்கள் போராட்டத்தை எடுத்துக் கொண்டால் என்னுடைய முழுத் திறமையுடனும் மகிழ்ச்சியுடனும் உங்களுக்கு உதவி செய்வேன். வேறொரு தலைவரின் கீழ் காங்கிரஸ் மேலும் நன்றாகப் போராட முடியும் என்று நீங்கள் நினைத்தால் நான் மகிழ்ச்சியுடன் விலகிக் கொள்வேன். நீங்கள் விரும்புகிறபடி ஒரு காரியக் கமிட்டியை அமைத்தால், காங்கிரஸ் நன்றாகப் போராட முடியும் என்பது உங்கள் கருத்தானால் நான் மகிழ்ச்சியுடன் உங்கள் விருப்பத்தை ஏற்றுக் கொள்வேன். நான் விரும்புவதெல்லாம் நீங்களும் காங்கிரசும் இந்த நெருக்கடியான நேரத்தில் உறுதியாக நின்று சுயராஜ்யப் போராட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே. என்னுடைய தனித்தன்மையை நான் அழித்துக் கொள்வது தேசியக் குறிக்கோளுக்கு உதவுமென்றால் அதற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன்“, என்று நேதாஜி காந்திக்கு கடிதம் எழுதினார்.

       நாட்டில் இப்போது இருப்பது போல் முன்னெப்போதும் அகிம்சை இருந்ததில்லை என்ற உங்கள் கருத்திலிருந்து நான் முற்றிலும் வேறுபடுகிறேன். நான் சுவாசிக்கும் காற்றில் வன்முறையின் வாசத்தை நுகர்கிறேன். ஆனால் வன்முறை ஒரு நுட்பமான வடிவமெடுத்துள்ளது. நம்மிடையே பரஸ்பரமாக உள்ள அவநம்பிக்கை வன்முறையின் ஒரு மோசமான ஒரு வடிவமாகும். இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே இடைவெளி விரிவடைந்து வருவதும்  இதைத்தான் குறிக்கிறது”, என்று காந்தி எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டார்.

     மேலும் காந்தி அக்கடிதத்தில், “இந்தச் சூழலில் அகிம்சை முறையில் மக்கள் திரள் நடவடிக்கை எடுக்கக்கூடிய  நிலையைக் காண முடியவில்லை. செயல்படுத்த முடியாத இறுதி எச்சரிக்கை கொடுப்பதும் பயனற்றதாகும். நான் உங்களிடம் கூறியதுபோல் எனக்கு வயதாகிவிட்டது. அதனால் பயந்த சுபாவமும் அளவுக்கு அதிகமான எச்சரிக்கை உணர்வும் வளர்ந்துள்ளன. உங்களிடம் இளமை காரணமாக அச்சமற்ற நம்பிக்கை உணர்வும் உள்ளன. உங்கள் கருத்து சரியானது, எனது கருத்து தவறானது என்றே நம்ப விரும்புகிறேன். ஆயினும், காங்கிரஸ் இப்போதுள்ள நிலையில் பலனுள்ள முறையில் செயல்பட முடியாது என்றும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் சட்டமறுப்பு நடத்த முடியாது என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். எனவே உங்கள் கணிப்பு சரியாக இருந்தால் நான் காலம் கடந்தவனாகிவிட்டேன். சத்தியாகிரகத்தின் உயர் தலைவர் பங்கைச் செய்து முடித்தவாகி விட்டேன் என்றே கொள்ள வேண்டும்”, என்றும் எழுதுகிறார்.

      1939 ஏப்ரல் இறுதியில் காங்கிரஸ் மாநாடு கல்கத்தாவில் கூடவிருந்தது. அதற்கு முன்னதாக காந்தியும் நேதாஜியும் ஒருமுறை சந்தித்து இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஜவகர்லால் நேருவும் ராஜேந்திர பிரசாத்தும் உடனிருந்தனர். இதிலும் எவ்வித முடிவும் ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. காந்தி நேதாஜியுடன் ஒத்துழைக்க மறுத்தும் பந்த் தீர்மானத்தின்படி காரியக் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பதில் காலம் தாழ்த்தியும் வந்தார்.  இதனால் மாநாட்டில் தொடக்க நிலையிலேயே நேதாஜி தனது பதவி விலகலை அறிவித்தார். அவரது அனுபவங்கள் வாயிலாக நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, கட்டுப்பாடான இடதுசாரிகள் ஒற்றுமையே தற்போது தேவையென உணர்ந்தார். 1939 ஜூன் 22இல் பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கி அதன்மூலம் இடதுசாரிகளை ஒருங்கிணைக்கவும் முடிவெடுத்தார்.

        வலதுசாரிகளுக்கும் நேதாஜிக்கும் மிக்க்கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்ற சூழலில் 1939 ஜனவரியில் சாந்தி நிகேதனில் தாகூர் நேதாஜிக்கு வரவேற்பளித்தார். தாகூரின் உரையில் நேதாஜியைதேச நாயக்’ (தேசத்தின் தலைவர்) பட்டம் சூட்டினார். கருத்து முரண்பாடு ஏற்பட்டபோதிலும் காந்தி நேதாஜி இருவரும் தாய்நாட்டைப் போலவே   ஒருவருக்கொருவர் பரஸ்பர அன்புடன் இருந்தனர். 1940 ஜூனில் பார்வார்டு பிளாக் கட்சியின் இரண்டாவது மாநாடு நாக்பூரில் நடந்தது. நாக்பூரிலிருந்து கல்கத்தா திரும்பும் வழியில் சேவா கிராமத்தில் நேதாஜி காந்தியைச் சந்தித்தார். அப்போதும் தேசியப் போராட்டத்திற்கு காந்தியைத் தலைமை தாங்க வேண்டினார். காந்தி அதற்கு உடன்படவில்லை. நேதாஜி தனது மனச்சாட்சிக்கும் கருத்துகளுக்கும் ஏற்ற வகையில் செயல்பட உரிமையுண்டு என்ற காந்தி, அவரது வழிமுறைகள் மூலம் நாடு விடுதலை பெற்றால் வாழ்த்தும் முதல் நபராக நானிருப்பேன், என்றார் காந்தி.

      1939இல் உலகப்போர் தொடங்கியது. மதராஸ், பம்பாய், மத்திய மாகாணங்கள், ஒடிசா, பீகார், ஐக்கிய மாகாணங்கள், வடமேற்கு எல்லைப்புற மாகாணம், அசாம் பள்ளத்தாக்கு (சர் முகம்மது சாதுல்லாவுடன் கூட்டணி) ஆகிய மாகாணங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியையும் அமைச்சரவையையும் கலந்தாலோசிக்காமல் பிரிட்டன் இந்தியாவை போரில் ஈடுபடுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் முடிவுப்படி அமைச்சரவைகள் பதவி விலகின.

        அப்போது அரசப் பிரதிநிதியாக இருந்த லின்லித்கோ இந்தியர்களை சமாதானப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் தன்னாட்சி (டொமினியன்) தகுதி வழங்கப்படும் என்றார். காலக்கெடு இல்லாத இந்த வரையறையை காந்தி ஏற்க மறுத்தார். எனவே ஒருசிலர் மட்டும் பங்கேற்கும் வரையறைக்குட்பட்ட தனிநபர் சத்தியாகிரகத்தை அறிவித்தார். 1940 அக்டோபர் 17இல் வினோபா பாவே தனிநபர் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். தொடர்ந்து போராட்டம் தீவிரமடைந்தது. 25000க்கு அதிகமானோர் கைதாகி சிறை சென்றனர்.

       அன்றைய போர்ச் சூழலிலும் அதிகாரத்தை விட்டுத்தர பிரிட்டன் விரும்பவில்லை. 1942 மார்ச் 22இல் கேபினட் அமைச்சர் சர் ஸ்ட்ராஃபோர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியது. இதுவே கிரிப்ஸ் குழு என அழைக்கப்பட்டது. காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போருக்குப் பின்னர் தன்னாட்சி அளிப்பது, போரின்போது பாதுகாப்பு பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருப்பது, பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்கும் விதமாக இந்திய இளவரசர்கள் பிரிட்டனுடன் தனி ஒப்பந்தம் செய்வது போன்ற அறிவிப்புகள் வெளியாயின. இரு கட்சிகளும் இதனை ஏற்க மறுத்தன. திவாலாகும் வங்கி அளிக்கும் பின் தேதியிட்ட காசோலை என காந்தி இத்திட்டத்தை விமர்சனம் செய்தார்.  

       கிரிப்ஸ் தூதுக்குழுவினால் ஏமாற்றமடைந்த மக்கள் போரின் தாக்கத்தால் ஏற்பட்ட விலைவாசி உயர்வினாலும் அவதிப்பட்டனர். 1942 ஆகஸ்ட் 7 மற்றும் 8 தேதிகளில் பம்பாயில் கூடிய காங்கிரஸ் கமிட்டி பிரிட்டன் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறவேண்டும் (Quit India) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இது ஆகஸ்ட் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. பொறுமை இழந்த காந்திசெய் அல்லது செத்துமடி” (Do or Die) என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் பொருள் காந்தி அகிம்சையைக் கைவிட்டார் என்பதல்ல. தன்னை அழித்துக் கொள்ளும் சத்தியாகிரகத்தின் ஒரு பகுதியாகவே இதைக் கண்டார். “இயக்கம் தொடங்கிய பிறகு ஒவ்வொருவரும் அகிம்சைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு முழு வீச்சுடன் இறுதிவரைப் போராடத் தயாராகுமாறு”, காந்தி அறைகூவல் விடுத்தார்.

        வைஸ்ராய் லின்லித்கோ பிரபுவை நேரில் சந்தித்து காங்கிரஸ் கோரிக்கைகளை ஏற்குமாறு மன்றாடுவேன். அதற்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். அதுவரை பொறுத்திருங்கள், என்று மக்களுக்கு காந்தி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசு உடனடியாக செயலில் இறங்கியது. மறுநாள் ஆகஸ்ட் 9 அன்று விடியற்காலையிலேயே காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். காந்தி பூனாவில் ஆகாகான் மாளிகையில் காவலில் வைக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி தடை செய்யப்பட்டது.

         இயக்கம் தொடங்குவதற்கு முன்னதாக பம்பாய் சிவாஜி பூங்காவில் காந்தி பேசுவதாக இருந்தது. ஆனால் காந்தி தடுப்புக் காவலில் இருந்தார். அந்தக் கூட்டத்திலும் போராட்டங்களிலும் கஸ்தூரிபா பங்கேற்றார். அவரும் கைதாகி பம்பாய் ஆர்தர் சாலை சிறைக்கு அனுப்பப்பட்டார். நுரையிரல் மற்றும் மூச்சுக்குழல் அழற்சியால் அவதிப்பட்ட கஸ்தூரிபா உடல்நலம் குன்றியதும் காந்தி சிறை வைக்கப்பட்டிருந்த ஆகா கான் மாளிகைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனின்றி 1944 பிப்ரவரி 22 இல் தடுப்புக் காவலில் காலமானார். மறுநாள் அங்கேயே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. கஸ்தூரிபா இறப்பதற்கு முன்னர் காந்தி 1943 பிப்ரவரி 10 தொடங்கிய உண்ணாநோன்பு  மார்ச் 3 முடிய  21 நாள்கள் நீடித்தது.

         தலைவர்கள் அனைவரும் சிறைபட்ட நிலையில் பொதுமக்கள் சீற்றத்துடன்  பொங்கியெழுந்தனர். இதுவரை காங்கிரஸ் போராட்டங்களில் கண்டிராத வகையில் வன்முறைகள் தலை விரித்தாடின. பிரிட்டிஷ் அரசு கடும் அடக்குமுறைகளை கையாண்டது. இக்கலவரங்களுக்கான முழுப்பொறுப்பையும் சிறையில் இருந்த தலைவர்கள் மீது சுமத்தியது.

      காங்கிரஸ் தலைவர்கள் பலர் கைதானதைத் தொடர்ந்து சோசலிஸ்ட்கள் இயக்கத்திற்கு தலைமையேற்றனர். ஜெயப்பிரகாஷ் நாராயண், அருணா ஆசப் அலி, ராமாநந்த் மிஷ்ரா, உஷா மேத்தா போன்ற பலர் இயக்கத்தை வளர்த்தெடுத்தனர். நாடெங்கும் வன்முறைகள் வெடித்தன. வேலைநிறுத்தம், மறியல், ஆர்ப்பாட்டம் என வெகுமக்கள் போராட்டம் எங்கும் நடந்தது.

       இந்திய தேசியத் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட பலர் இந்துத் தலைவர்களாக இருந்தனர். காந்தி, நேரு எதிர்பார்த்த மதச்சார்பின்மை, மத சகிப்புத்தன்மை இல்லாது போயிற்று. எனவே பிரிவினையைத் தடுக்க முடியவில்லை. நேருவுடன் சேர்ந்து நவீன இந்தியாவின் முகமாக அறியப்பட்ட முகமது அலி ஜின்னா பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை கையில் எடுக்க வேண்டிய சூழல் உருவானது.

       நேதாஜியால் வழிநடத்தப்பட்ட இந்திய தேசிய ராணுவம் ஜப்பான் உதவியுடன் தில்லி சலோமுழக்கத்துடன் இந்தியாவை நோக்கி முன்னேறியது. 1945 ஆகஸ்ட் 15இல் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததும் நேதாஜி விமான விபத்தில் மரணமடைந்ததும் ஐ.என்..வின் பணிகள் முடிவுக்கு வந்தன.

        1946 பிப்ரவரியில் ராயல் இந்திய கடற்படை கிளர்ச்சி பம்பாயில் தொடங்கி அனைத்து இடங்களுக்கும் பரவியது. விமானப்படையிலும் வேலை நிறுத்தங்கள் தொடங்கின. ஆயுதப்படைகளையும் பிரிட்டனால் கட்டுப்படுத்த இயலவில்லை. இத்தகைய பின்னணியில் இந்தியாவிற்கு விடுதலை அளிப்பதைத் தவிர பிரிட்டனுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை.

       1945 ஜூன் 14 வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது. சிம்லா மாநாட்டில் காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் உடன்பாடு எட்டவில்லை. பிரிட்டனில் தொழிற்கட்சியின் கிளமண்ட் அட்லி பிரதமரானார். அமைச்சரவைத் தூதுக்குழு அனுப்பப்பட்டு அனைத்து சமூகப் பங்கேற்புடன் இடைக்கால அரசு அமைக்க முடிவானது. 1946 ஆகஸ்ட் 16ஐ நேரடி நடவடிக்கை நாளாக  முஸ்லீம் லீக்கின் தலைவர் ஜின்னா அறிவித்தார். இதன் மூலம் இந்து-முஸ்லீம் மத மோதல்கள் பெருமளவில் நடந்தன. வங்காளத்தின் பல மாவட்டங்களில் கலவரங்கள் பரவின. தற்போதைய பங்களாதேஷில் உள்ள நவகாளி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. பீகாருக்கும் கலவரம் பரவியது. காந்தி நவகாளி யாத்திரை தொடங்கினார். 1946 அக்டோபர் 10 இல் தொடங்கி சில மாதங்கள் நடந்த இந்த யாத்திரை மூலம் இந்து-முஸ்லீம் கலவரங்களைத் தடுத்து நிறுத்தி அப்பகுதியை அமைதிப்படுத்தினார். எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கபார்கான் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்றார். காந்தியுடன் சிலர் மட்டுமே யாத்திரையில் கலந்துகொள்ள, வங்க மொழிபெயர்ப்புக்காக பேரா.நிர்மல்குமார் போஸ் காந்தியுடன் சென்றார். அம்மாவட்டத்திலுள்ள சுமார் 60 கிராமங்களுக்கும் செருப்பின்றி நடந்து சென்று மக்களை அமைதிப்படுத்தினார்; அவர்களிடம் நம்பிக்கை கீற்றை உண்டாக்கினார். பல்லாயிரம் வீரர்களால் கட்டுப்படுத்த முடியாத கலவரத்தை அடக்கிய ஒற்றை வீரர் என காந்தியை மவுண்ட்பேட்டன் புகழ்ந்தார்.

        ஜவகர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. பின்னர் முஸ்லீம் லீக்கும் இடைக்கால அரசில் இணைந்தது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணய சபையும் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் அரசியல் சட்ட வரைவுக் குழுவும் அமைக்கப்பட்டன. இந்திய விடுதலைக்கான பாதை அதன் இறுதிக் கட்டத்தை எட்டியது.

           அதிகார மாற்றத்தை கிளமண்ட் அட்லி உறுதி செய்தவுடன் அதற்கு இறுதிவடிவம் கொடுக்க மவுண்ட்பேட்டன் பிரவு இந்திய அரசப் பிரதிநிதியாக  அறிவிக்கப்பட்டார். அவரது திட்டத்தின் கீழ் இந்தியா யூனியன் மற்றும் பாகிஸ்தான் உருவாக வழிவகை செய்யப்பட்டது. 1947 ஆகஸ்ட் 14இல் பாகிஸ்தானும்  மறுநாள் ஆகஸ்ட் 15 இந்திய யூனியனும் உதயமாயின. மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களுக்குப் பதிலாக நாட்டின் பெரும்பகுதி ரத்தக் களரியானது. காந்தி, நேரு போன்ற அகிம்சையாளர்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவில்லை.

        125 ஆண்டுகள் வாழும் விருப்பத்தை இந்த வன்முறைச் சூழலில் கைவிடுவதாக காந்தி அறிவிக்கும் அளவிற்கு சூழல் துயரமாக இருந்தது. இந்தியா விடுதலை அடைந்த நிகழ்வில் பங்கேற்க காந்தி தில்லியில் இல்லை. நவகாளி யாத்திரைகளுக்குப் பின் கல்கத்தாவில் தங்கிருந்து மக்களின் காயங்களுக்கு மருந்தாக இருந்தார். 1947 செப்டம்பர் 9 அன்று தொடர்வண்டி மூலம் தில்லி வந்த காந்தியை வல்லபாய் பட்டேல், ஜவகர்லால் நேரு ஆகியோர் சந்தித்து பிரிவினைக் கலவரச் சூழலை எடுத்துக்காட்டினர்.

        அரசுடன் இணைந்து சமாதான முயற்சிகளை மேற்கொண்டார். பல்வேறு பிரார்த்தனைக் கூட்டங்களை நட்த்தினார். வானொலி முலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவிலிருந்து முஸ்லீம்களும் பாகிஸ்தானிலிருந்து இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தொடர்ந்து அகதிகளாக வெளியேறினர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போய்க் கொண்டிருந்தது.

       ஜின்னா மக்களைப் பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என காந்தி வலியுறுத்தினார். அதே சமயம் இந்தியாவும் நியாயமாக நடக்க வேண்டும் என்றார். பிரிவினையின்போது பிரிக்கப்பட்ட சொத்துகள் 75 கோடியில் முதன் தவணையாக 20 கோடி வழங்கப்பட்ட நிலையில் மீதி 55 கோடியை வழங்க வலியுறுத்தினார். பாகிஸ்தானுடன் இணக்கமாக இருக்கவும் இங்குள்ள மக்கள் அவரவர் மத உரிமையுடன் சமாதானச் சகவாழ்வு வாழ்வதை காந்தி விரும்பினார். இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ  அமைப்புகளும் ஆதிக்கச் சக்திகளும் இதனை விரும்பவில்லை. அவர்கள் வன்முறையை நேசித்தனர். அகிம்சையை நேசித்த காந்தியை அகற்றி தொடர்ந்து வன்முறைகளை வளர்க்க அவர்கள் முடிவு செய்தனர்.

(தொடரும்…)

நன்றி: பொம்மி சிறுவர் மாத இதழ் - பிப்ரவரி 2024