வெள்ளி, பிப்ரவரி 15, 2013

மயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆய்வு நூற்கள்


மயிலை சீனி.வேங்கடசாமியின் அரிய ஆய்வு நூற்கள்
                                         – மு.சிவகுருநாதன்


   பல்கலைக் கழகங்களோ, பெருநிறுவனங்களோ, தமிழ்ப் பேராசிரியர்களோ செய்யாத ஆய்வுப்பணிகளை சாதாரண இடைநிலை ஆசிரியர் பணியாற்றிக் கொண்டே செய்து அளப்பரிய சாதனையை நிகழ்த்தியவர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள். எனவேதான் ஆராய்ச்சிப் பேரறிஞர் எனப் போற்றப்பட்டவர்.
தமிழையே வணிக மாக்கி
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்ப தற்கும்
தலைமுறை தலைமுறைக்கு
தமிழ்முத லாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச்சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்!     

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் இதனை மெய்ப்பிக்கும்.

   இவருடைய நூற்கள் 2001 இல் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. ஆதிக்க, இந்துத்துவ வரலாற்றாய்வாளர்களால் இருண்டகாலம் என இருட்டடிப்பு செய்யப்பட்ட களப்பிரர் காலம், சமணபவுத்தம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் முதலியவற்றை தனியாளாய் வெளி உலகிற்குக் கொண்டுவந்த மயிலையாரின் பல்வேறு நூற்கள் இன்று உரிய பதிப்புகள் பெறாமல் முடங்கிப்போய் உள்ளன.
  வழக்கமாக அதிகம் விற்பனையாகும் சில நூற்கள் மட்டும் மறுபதிப்பு பெறுகின்றன. எடுத்துக்காட்டாக களப்பிரர் ஆட்சியில் தமிழகம், புத்தர் வரலாறு, சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும் போன்ற ஒருசில நூற்களை மட்டுமே சொல்லமுடியும். மயிலையாரின் பல நூற்கள் உரியமுறையில் பதிப்பிக்கப்படாமலேயே இருக்கிறது. புதுமைப்பித்தன் போன்ற பல படைப்பாளிகளுக்கு செம்பதிப்புகள் வந்துவிட்டன. அரிய ஆய்வுக் களஞ்சியமான மயிலை சீனி.வேங்கடசாமியின் நூற்கள் செம்பதிப்பாக வெளிவருதல் அவசியம்.
   இன்றைய வியாபாரப் பதிப்புலகில் இதை யார் செய்வார்கள் என்பதுதான் சிக்கல். பெரியாருக்கு ஓர் ஆனைமுத்து கிடைத்ததுபோல் மயிலையாருக்கு குறிப்பிடத்தகுந்த யாரும் இல்லாதது பெருத்த ஏமாற்றமளிக்கும் விடயம்.
   இவ்வாண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வசந்தா பதிப்பகத்தின் கடையில் மயிலையாரின் பல நூற்களை வாங்கினேன். ஏற்கனவே என்னிடம் சில புத்தகங்கள் இருந்தன. கிடைக்காத நூற்களின் பட்டியலையும் கீழே தருகிறேன். இதைத் தவிர அச்சாக்கம் பெறாத பல கட்டுரைகள் இருக்கக்கூடும். அவையனைத்தும் எப்போது வாசிக்கக் கிடைக்கும் என்று தெரியவில்லை.  
   இந்த நூல்கள் முதலில் எப்போது வெளியிடப்பட்டன என்ற விவரங்கள் நமக்கு கிடைப்பதில்லை. எப்போதும் முதல் பதிப்பு என்றே அச்சிடுகிறார்கள். முந்தைய பதிப்பு விவரங்களை யாரும் தெரிவிப்பதில்லை. இது எவ்வகையான பதிப்பு அறம் என்பது நமக்கு விளங்வில்லை.
  இதுவரை விற்பனையில் கிடைக்கும் மயிலையாரின் நூற்கள் மற்றும் அதை வெளியிட்ட பதிப்பகங்களின் விவரங்களைக் கீழே தருகிறேன். ஆய்வாளர்கள் யாருக்காவது பயன்படட்டும்.இது முழுமையான பட்டியல் அல்ல. விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூலில் மயிலை சீனி.வேங்கடசாமியின் எழுத்தடங்கல் 1936 முதல் 1980 முடிய தொகுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட ஆக்கங்கள் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. என்னிடம் உள்ளவற்றை முதலிலும் இல்லாததை இறுதியிலும் பட்டியலிடுகிறேன்.
01.களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (.மார்க்ஸ்ன் விரிவான ஆய்வுரையுடன்) விடியல் பதிப்பகம் இரண்டாம் பதிப்பு 2008 ரூ. 75
02.புத்தர் வரலாறு எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2012 ரூ. 80
03.சமணமும் தமிழும் பூம்புகார் பதிப்பகம் முதல் பதிப்பு 2009 ரூ. 51
04.மறைந்துபோன தமிழ் நூல்கள் பூம்புகார் பதிப்பகம் முதல் பதிப்பு 2006 ரூ. 75
05.19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் தேன் புத்தக நிலையம் முதல் பதிப்பு 2004 ரூ. 110
06.மயிலை சீனி.வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை தொகுதி-1 எம்.வெற்றியரசி முதல் பதிப்பு 2001 ரூ. 75
07.மயிலை சீனி.வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை தொகுதி-3 எம்.வெற்றியரசி முதல் பதிப்பு 2001 ரூ. 60
08.சங்ககாலத் தமிழக வரலாறு தொகுதி-2 மீனா கோபால் பதிப்பகம் முதல் பதிப்பு 2007 ரூ.100
09.சங்கால வரலாற்று ஆய்வுகள் தொகுதி-1 சாரதா மாணிக்கம் பதிப்பகம் முதல் பதிப்பு 2010 ரூ.85
10.சங்கால வரலாற்று ஆய்வுகள் தொகுதி-2 எம்.வெற்றியரசி முதல் பதிப்பு 2001 ரூ.85
11.சமயங்கள் வளர்த்த தமிழ் எம்.வெற்றியரசி முதல் பதிப்பு 2002 ரூ.60
12.மகேந்திரவர்மன் மீனா கோபால் பதிப்பகம் முதல் பதிப்பு 2001 ரூ. 55
13.நரசிம்மவர்மன் மீனா கோபால் பதிப்பகம் முதல் பதிப்பு 2001 ரூ. 60
14.மூன்றாம் நந்திவர்மன் மீனா கோபால் பதிப்பகம் முதல் பதிப்பு 2001
ரூ. 60
15.நுண்கலைகள்   சாரதா மாணிக்கம் பதிப்பகம் முதல் பதிப்பு 2010 ரூ. 60
16.அஞ்சிறைத்தும்பி வசந்தா பதிப்பகம் முதல் பதிப்பு 2002 ரூ. 48
17.இசைவாணர் கதைகள் சாரதா மாணிக்கம் பதிப்பகம் முதல் பதிப்பு 2002 ரூ. 55
18.உணவுநூல் சாரதா மாணிக்கம் பதிப்பகம் முதல் பதிப்பு 2002 ரூ. 35
19.பழங்காலத் தமிழர் வாணிகம் முதல் பதிப்பு 2003 ரூ. 50
20.இறைவன் ஆடிய எழுவகைத்தாண்டவம் வசந்தா பதிப்பகம் முதல் பதிப்பு 2003 ரூ. 50
21.கெளதம புத்தர் வசந்தா பதிப்பகம் முதல் பதிப்பு 2002 ரூ. 65
22.புத்தர் ஜாதக்க் கதைகள் எம்.ஏழுமலை முதல் பதிப்பு 2002 ரூ. 65
23.பெளத்தக் கதைகள் சாரதா மாணிக்கம் பதிப்பகம் முதல் பதிப்பு 2002
ரூ. 40
24.பெளத்தமும் தமிழும் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்
என் கைக்குக் கிடைக்காத சில நூற்கள்
·         சங்காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
·         சேரன் செங்குட்டுவன்
·         கொங்கு நாட்டு வரலாறு
·         துளுநாட்டு வரலாறு
·         தொல்காப்பியத்தில் சில ஆய்வுரைகள்
·         இறையனார் களவியல் ஆராய்ச்சி
·         மனோன்மணியம் பதிப்பும் குறிப்புரையும்
·         கிறித்துவமும் தமிழும்
·         தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
·         மாமல்லபுரத்து ஜைன சிற்பங்கள்
·         சங்ககாலத்துப் பிராமி கல்வெட்டுகள்
·         சாசன செய்யுள் மஞ்சரி
·         மயிலை சீனி.வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை தொகுதி-2
·         சங்ககாலத் தமிழக வரலாறு தொகுதி-1