திங்கள், செப்டம்பர் 24, 2012

தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது

தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது 
 
 உண்மை அறியும் குழு அறிக்கை


                                                                    செப்டம்பர் 24, 2012
                                                                     திருச்சி

       சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.

     “மத விரோதம் காரணமாகவும் சொந்த லாபத்திற்காகவும்” தமிம் அன்சாரி இதைச் செய்துள்ளார் எனவும், (1) இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் நோக்கத்துடனும், (2) வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கத்துடனும் இச்சதி வேலை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கியூ பிரிவு போலீசார் கொடுத்துள்ள செய்தி காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பெரிய அளவு முக்கியத்துவத்துடன் தொடர்ந்து வெளிவருகிறது.

    குற்றச்சாட்டுகள் கடுமையானவை; கவலைக்குரியவை. தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாகிற சதி என்கிற வகையில் உடனடி நடவடிக்கையைக் கோருபவை என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமீம் அன்சாரி குறித்து வேறு வகையான தகவல்களும் கிடைத்தன. அவர் மார்க்சிஸ்ட் கட்சியிலும் அது சார்ந்த வெகுமக்கள் அமைப்புகளிலும் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவர் எனவும், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஏற்றுமதி செய்வது என்கிற அளவிலேயே அவருக்கு இலங்கையுடன் தொடர்பிருந்தது எனவும், அவரும் அவரது குடும்பத்தாரும் கியூ பிரிவு போலீசின் குற்றச்சாட்டை மறுக்கின்றனர் எனவும் அறிந்தோம்.

     எனவே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
3. எஸ்.வி. ராஜதுரை, மூத்த மனித உரிமைப் போராளி, நீலகிரி,
4. பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்,
5. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி,
6. வழக்குரைஞர் அ.கமருதீன், திருச்சி.

    இக்குழு உறுப்பினர்கள் சென்ற 21, 22, 23 தேதிகளில் திருச்சி, தஞ்சை முதலான இடங்களுக்கு நேரில் சென்று சிறையிலிருந்த தமிம் அன்சாரியைச் சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டனர்.. அவரது வழக்குரைஞர் ஜே. கென்னடி என்கிற ஸ்டீபன் செல்வராஜ் மற்றும் அன்சாரியின் மனைவி நபீலா (23), தாயார் முத்து நாச்சியார் (50), மாமா லியாகத் அலி மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அதன் வெகு மக்கள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆகியோரைச் சந்தித்தனர். திருச்சி விமான நிலைய மேலாளரிடம் நேரிலும், இம்மிக்ரேஷன் அதிகாரி சிரீதரனிடம் தொலைபேசியிலும் பேசினர்.. அவர்கள் தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறி முடித்துக் கொண்டனர். கியூ பிரிவு போலீசாருடன் மும்முறை தொடர்பு கொண்டோம். இறுதியாகப் பேசிய ஆய்வாளர் ஒருவர் எதுவானாலும் சென்னை அலுவலகத்தில் விசாரித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்..

நாங்கள் அறிந்த உண்மைகள்

    அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (35) தமிழில் முதுகலைப்பட்டம் பயின்றவர். அவரது தந்தை அப்துல் ரஹ்மான் மற்றும் மூன்று சகோதரர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அன்சாரிக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உண்டு. மாணவப் பருவம் தொட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் வெகு மக்கள் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்திய மாணவர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளராகவும் மாநிலத் துணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். முற்போக்கு ஏழுத்தாளர் சங்கத்திலும் செயல்பட்டுள்ளார். அறிவியல் மன்றத்திலும் (Science Forum) மாவட்டச் செயலாளராக இருமுறை இருந்துள்ளார். இவ் அமைப்பின் செயலாளர் பொறுப்பு கட்சி உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படும் என்பதால் இவர் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தார் எனவும் யூகிக்கலாம். அன்சாரி எந்த நாளிலும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்ததில்லை. அவரது தொடர்புகள் யாவும் இடதுசாரி அமைப்புகளுடனேயே இருந்துள்ளன. இதற்கு முன் அவர் எந்த வழக்கிலுமோ, குற்றச்சாட்டுகளிலுமோ தொடர்புபடுத்தப்பட்டதுமில்லை. தங்கள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பதை மார்க்சிஸ்ட் கட்சியினர் இன்று சொல்லத் தயங்கியபோதும், அவர் கட்சியில் இருந்த காலத்தில் அவர்மீது இப்படியான தொடர்புகளுக்காகக் கட்சி நடவடிக்கை ஏதும் எடுக்ககப்பட்டதுமில்லை.

தஞ்சையிலிருந்து கொண்டு மருந்து ஏற்றுமதி முதலான பல தொழில்களை முயற்சி செய்து பெரிய வெற்றி அடையாத அவர், இறுதியில் இலங்கைத் தலைநகரம் கொழும்பில் உள்ள ஹாஜி என்கிற சித்திக் அலிக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவற்றை ஏற்றுமதி செய்துள்ளார். நீலகிரி முதலான இடங்களுக்குச் சென்று இவற்றைக் கொள்முதல் செய்து கப்பலில் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அன்சாரி இதுவரை நான்கு முறை இலங்கை சென்று வந்துள்ளார். கிழக்குக் கடற்கரையோர முஸ்லிம்கள் இலங்கையுடன் பாரம்பரியமாகக் கடல் வணிகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     இந்த வணிக உறவில் ஹாஜிக்கும் அன்சாரிக்கும் இடையே ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அன்சாரி அனுப்பிய ஒரு லோட் வெங்காயம் அழுகி விட்டதெனக் கூறி அதன் விலையான 10 லட்சம் ரூபாயை ஹாஜி தர மறுத்துள்ளார். இதைப் பெறுவதற்காக ஐந்தாம் முறையாக அன்சாரி கடந்த 16ம் தேதி காலை 7.30 மணி அளவில் திருச்சியிலிருந்து இலங்கைப் புறப்படும் விமானத்தில் டிக்கட் பதிவு செய்துள்ளார்.

    16 காலை 5 மணிக்கு தஞ்சையிலுள்ள தன் வீட்டிலிருந்து புறப்பட்ட அவர் 5.30 வரை மனைவியிடம் செல் போனில் பேசியுள்ளார். அதற்குப் பின் 11 மணிவரை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள இயலவில்லை. திட்டமிட்டபடி அவர் பயணம் செய்திருந்தால் 10 மணி வாக்கில் அவர் கொழும்பு சென்றிருப்பார். கொழும்பு சிம் எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது அதுவும் இயங்கவில்லை. 11 மணி வாக்கில் இங்குள்ள சிம் எண்ணில் தணிந்த குரலில் அன்சாரி மனைவியுடன் பேசியுள்ளார். தான் சில காரணங்களால் இலங்கை செல்லவில்லை எனவும், ரவி என ஒருவர் வருவார் அவரிடம் தனது லேப்டாப், மெமரி கார்ட் ரீடர்கள் முதலியவற்றைக் கொடுத்தனுப்புமாறும் கூறி போனைத் துண்டித்துள்ளார். சற்று நேரத்தில் ரவி எனச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்து லேப்டாப்பைக் கேட்டுள்ளார். சந்தேகம் கொண்ட மனைவி அன்சாரியைத் தொடர்புக் கொண்டபோது வந்துள்ள நபரிடம் லேப்டாப்
முதலியவற்றைக் கொடுக்கச் சொல்லி போனைத் துண்டித்துள்ளார்.
அடுத்த நாள் காலை வரை அன்சாரியுடன் தொடர்பு கொள்ள இயலவில்லை. காலை 10 மணி அளவில் அன்சாரியிடமிருந்து போன் வந்துள்ளது. தான் கோவை செல்வதாகவும். தனது போனில் சார்ஜ் குறைந்து வருவதால் இனி பேச இயலாது எனவும் கூறித் தொடர்பைத் துண்டித்துள்ளார். அன்று (17) மாலை  தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட செய்திகளிலிருந்தே குடும்பத்தினர் அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

     நடந்தது இதுதான்.  காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலைய இம்மிக்ரேஷன் போலீசின் ஒத்துழைப்புடன் கியூ பிரிவு போலீசார் அன்சாரியைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். போர்டிங் பாஸ் எல்லாம் வங்கியபின் இந்தக் கைது நடந்துள்ளது. அவரை என்கவுன்டர் செய்வது என்கிற அளவில் மிரட்டி செல்போனில் பேச வைத்து லேப்டாப் முதலியவற்றைப் பெற்றுள்ளனர். 17 மாலை திருச்சி நீதிமன்றத்தில் அன்சாரியை ஆஜர்படுத்தியுள்ளனர்.

கியூ பிரிவின் முதல் தகவல் அறிக்கையில் காணப்படும் முரண்கள்

1. பதினாறு காலை 7.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை, அன்று இரவு 8 மணி அளவில் திருச்சி டோல்கேட் டி.வி.எஸ் அருகில் தஞ்சை செல்லும்  பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்திலுள்ள டாஸ்மாக் கடை அருகில் கைது செய்ததாகச் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. ஓடிப் பிடித்து அவரைக் கைது செய்தனராம். அந்தப் பக்கத்திலுள்ள கடைகள் அனைத்தையும் எங்கள் குழு விசாரித்தது, அப்படியான ஒரு சம்பவம் அன்று நடக்கவே இல்லை என்பதை எல்லோரும் உறுதிப்படுத்தினர், ஆக ஒரு பகற் பொழுது முழுவதும் சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தது என்பது தவிர, முதல் தகவல் அறிக்கையில் ஏன் இந்தப் பொய்?

2. அன்சாரி மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறை பெற விரும்பியதாகச் சொல்லப்படும் தகவல்கள் யாவும் மிக எளிதில் கூகுள் முதலான இணையத் தளங்களில் கிடைப்பவை. எடுத்துக்காட்டாக வெலிங்டன் பாரக்சை பாகிஸ்தான் தூதர் சுபைர் கொடுத்த ப்ளாக்பெர்ரி செல்போனின் மூலம் காருக்குள் அமர்ந்தவாறு அன்சாரி படம் எடுத்து அனுப்பினாராம். வெலிங்டன் பாரக்ஸ் படம் கூகுளில் மிகத் தெளிவாகக் கிடைக்கிறது. செல்போனில் எடுக்கப்படும் படத்தைக் காட்டிலும் அது கூடுதல் விவரங்களைக் கொண்டது. தவிரவும் வெலிங்டன் பாரக்ஸ் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனுடைய வடிவமைப்பு உலகறிந்த இரகசியம்.  செல்போனில் வெளியிலிருந்து படமெடுத்து இலங்கை வழியாகக் கடத்தப்பட வேண்டிய அளவுக்கு அது யாருமறியா ஒன்றல்ல. இன்னொன்றும் சிந்தனைக்குரியது. இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு வெலிங்டன் பாரக்சிலும் மற்ற இராணுவத் தளங்களிலும் பயிற்சி அளிக்கிறது. அவர்களுக்குக் கிடைக்காத என்ன இரகசியத்தை இந்தச் செல்போன் படங்கள் தந்துவிட இயலும்? இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான இராணுவ உறவுகளை அறிவோம். Most Favoured Nation என்கிற நிலையில் அவை செயல்படுகின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

3. தவிரவும் தான் பதிவு செய்த ‘இரகசியங்களை சி.டி யில் பதிவு செய்து நேரடியாகக் கொண்டு கொடுக்க அன்சாரி இலங்கை சென்றார் என்பதும் நம்பும்படியாக இல்லை. முன்னதாகப் பலமுறை விமானப் பயணம் செய்துள்ள அன்சாரி, 16ந்தேதி அன்று விமான நிலையத்தில் கைப்பை பரிசோதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ர்ச்சியடைந்து பயணத்தை ரத்து செய்து திரும்பினார் என்பதும் ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

4. தஞ்சைக்கருகில் உள்ள வல்லத்தைச் சேர்ந்த ராதா என்கிற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் அன்சாரி நெருங்கிப் பழகி இராணுவ இரகசியங்கள் பலவற்றைப் பெற்றார் எனச் சொல்லப்படுகிறது. ஏன் அந்த ராதாவை இதுவரை விசாரிக்கவில்லை? ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிடமெல்லாம் இராணுவ இரகசியங்கள் இருக்கும் என்பதும் நம்பத் தகுந்ததாக இல்லை.

5. தூதரக அதிகாரிகளுக்கே  உரித்தான சிறப்பு உரிமைகளை உடையவர்களை எல்லாம் (Diplomatic immunity) வழக்கில் சேர்த்திருப்பதென்பது வழக்கை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்கும் நோக்குடன்,, செயப்பட்டதாகவே உள்ளது.

6. 21 மாலை அன்சாரியைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தபோது அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார் என்பது அவரது வழக்குரைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும், தேவையானால் அவர் தன் வழக்குரைஞர்களைக் கலந்தாலோசிக்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்சாரி போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டது தொடங்கி மீண்டும் நீதிமன்றக் காவலுக்குக் கொண்டு வரப்படும் வரை  கியூ பிரிவு போலீசார் வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. 16ந்தேதி அன்று அன்சாரியின் மனைவியிடமிருந்து சட்ட விரோதமாகக் கைப்பற்றப்பட்ட லேப்டாப் முதலியவற்றை இந்த விசாரணையின்போது கைப்பற்றியதாகாக் காட்டுவதற்காகவே இப்படிச் செய்திருக்க வேண்டும்.

‘கியூ’ பிரிவு போலீஸ்

    கியூ பிரிவு போலீஸ் என்பது 1970ல் வால்டர் தேவாரம் அதிகாரியாக இருந்தபோது நக்சலைட் கட்சியினர் குறித்த உளவுகளை அறிய உருவாக்கப்பட்ட ஒரு உளவு அமைப்பு. வெறும் உளவு அமைப்பாக இருந்த கியூ பிரிவிற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. எனினும் அதில் பணியாற்றுபவர்களுக்குச் சீருடை கிடையாது. காவல் நிலையத்தில் பெயர்ப் பலைகைகள் கூட இருப்பதில்லை.

    உளவுத் துறையும் காவல்துறையும் அவற்றின் நோக்கம், செயல்படும் விதம் உள்ளிட்ட எல்லா அம்சங்களிலும் வேறுபட்டவை. உளவுத் துறை என்பது ஒரு இரகசிய அமைப்பு.  ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பும்கூட (clandestine organization). இது சேகரிக்கிற உளவுத் தகவல்களுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. அதாவது சேகரிக்கப்பட்ட உளவுகளை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. அமெரிக்க கூட்டரசுப் புலனாய்வு மையத்தின் (FBI) தலைவராக 48 ஆண்டுகள் பணி செய்த ஜே. எட்கார் ஹூவர் ஒருமுறை ஒரு இரகசியக் குறிப்பில் எழுதியது போல உளவுத் துறை  என்பது அரசுக்கு எதிரான செயற்பாடுகளையும் அமைப்புகளையும் சிதைத்து அழிக்கும் ஒரு நிறுவனம். இந்த அழிவுச் செயலை நியாயப்படுத்துவதற்காக  அது முன்வைக்கும் “குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால்  ஆதாரபூர்வமான உண்மைகள் உள்ளனவா இல்லையா என்பது முக்கியமில்லை”. சட்டபூர்வமற்ற படைகளை உருவாக்குவது, போட்டி ஆயுத இயக்கங்களை உருவாக்கி அவைகட்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அளிப்பது முதலான செயல்களை இந்திய உளவு நிறுவனங்கள் செய்து வருவதை நாமறிவோம்.

   காவல்துறை என்பது உளவு உள்ளிட்ட தகவகல்களின் அடிப்படையில், கைது செய்யப்படக் கூடிய குற்றத்தைச் (cognizable offence) செய்தவர் என ஒருவரைக் கருதினால்,   முறையாக முதல் தகவல் அறிக்கை ஒன்றைப் (FIR) பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைதுசெய்தல், தேடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல் முதலானவற்றைச் செய்யும் ஒரு  நிறுவனம். அத்துடன் அதன் பணி முடிந்து விடுவதில்லை. நீதிமன்றத்தில் அது சேகரித்த சாட்சியங்களின் உண்மைத் தன்மையையும் அது நிறுவியாக வேண்டும்.
இந்த இரு நிறுவனங்களையும் ஒன்றாய் இணைப்பது  வழக்கமல்ல என்பது மட்டுமின்றி அது நீதியுமல்ல. இன்னும் அதிகமான அரசியல் பழிவாங்கல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் அது வழிவகுக்கும்.

    கியூ பிரிவு போலீசும் இன்று இதே வடிவில் அமைக்கப்பட்டுள்ள தேசியப் புலானாய்வு மையமும் (NIA) இத்தகைய ஆபத்தை உள்ளடக்கியுள்ளன. உளவுத்துறையும் காவல்துறையும் ஒன்றாக இணைந்துள்ள வகையில் அரசியல் நோக்குடன் அவை செயல்படுகின்றன. இன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அமெரிக்கத் திரைப்படத்திற்கெதிரான முஸ்லிம் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தத் தருணத்தில் முஸ்லிம்களை தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர்களாகச் சித்திரிக்கும் நோக்குடன் கியூ பிரிவு அன்சாரி விஷயத்தில் செயல்பட்டிருக்கலாம் என எண்ணவும் இடமுண்டு, தவிரவும் கூடங்குளம் போராட்டம் வலுப்பெற்றுள்ள  சூழலில் தமிழகத்தின்மீது பயங்கரவாதத் தாக்குதல் என்கிற அச்சத்தைக் கிளப்பி விடுவது  தமிழகத்தின் மீதான காவல் கண்காணிப்பை மிகுதிப்படுத்துவதற்கான ஒரு உளவுத்துறை உத்தியாகவும் இருக்கலாம்.
கியூ பிரிவு போலீசார் அரசியல் நோக்கில் செயல்படுவதற்கு வேறு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது விழுப்புரம் அருகிலுள்ள சித்தணி என்னுமிடத்தில், திருச்சி செல்லும் ரயில் பாதை குண்டு வைத்துச் சேதப்படுத்தப்பட்டது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்த் தேசிய அமைப்புகளில் உள்ள இளைஞர்கள் சிலரைக் கைது செய்து சட்ட விரோதக் காவலில் வைத்துத் துன்புறுத்தினர். எங்களுடைய ஆய்வில் அந்த இளைஞர்களுக்கும் குண்டு வெடிப்பிற்கும் எந்தத் தொடர்புமிலை என்பது தெரிய வந்தது. இன்றுவரை அது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. செம்மொழி மாநாட்டுச் சூழலில் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் குண்டு வெடிப்பை உளவுத் துறைகளேகூடச் செய்திருக்கலாம் என அப்போது பரவலாகப் பேசப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது மீண்டும் டெசோ மாநாடு நடந்துள்ள சூழலில், அவ் வழக்கை முடிக்கும் நோக்கில் கியூ பிரிவு போலீசார் அந்த இளைஞர்களை மீண்டும் விசாரித்து மிரட்டத் தொடங்கியுள்ளனர். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்ல முடியும்.

எமது கோரிக்கைகள்
  1. முதல் தகவல் அறிக்கையில் கண்டுள்ள பொய்கள் மற்றும் சட்ட விரோதக் காவல், கைது விவரங்கள் வீட்டாருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது உட்பட்ட டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்ற நெறிமுறைகள் மீறப்ப்பட்டது ஆகியன குறித்து விசாரித்து பொறுப்பான அதிகாரி தண்டிக்கப்பட வேண்டும். 
  2. ‘கியூ’பிரிவு போலீசின் விசாரணை நம்பத்தகுந்ததாக இல்லை, எனவே தேசப் பாதுகாப்பு தொடர்பான இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐக்கு மாற்றப்பட வேண்டும். 
  3. ‘கியூ’ பிரிவு போலீசிடமிருந்து காவல்துறை அதிகாரம் பறிக்கப்பட வேண்டும். 
  4. அன்சாரியின் வழக்குரைஞர் கென்னடியின் வீட்டிற்கு அவர் இல்லாத நேரத்தில் சென்று உளவுத்துறையினர் மிரட்டும் நோக்கில் விசாரித்துள்ளனர். எத்தனை பெரிய குற்றமானாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்ட பூர்வமான உதவிகளைச் செய்ய வழக்குரைஞர்களுக்கு உரிமை உண்டு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு அவர்களின் மகன் சென்ற ஆண்டு குரூரமாகக் கொலை செய்யப்பட்டதும், அவரது குடும்பத்தினரும் சக வழக்குரைஞர்களும் காவல்துறையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் குற்றம் சாட்டுவதும் இங்கே நினைவுக்குரியது. வழக்குரைஞரின் வீட்டாரை உளவுத்துறை மிரட்டும் நோக்கில் விசாரித்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

நன்றி:- அ.மார்க்ஸ்

ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

இலங்கை மட்டும் நட்பு நாடானதேன்?


இலங்கை மட்டும் நட்பு நாடானதேன்?

                      -மு.சிவகுருநாதன்

   இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு இந்தியாவின் உதவி இருந்ததை உலகமே பார்த்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வார்த்தைகளில் வெளிப்படையாகவே அறிவிக்கக் கூட செய்யக்கூடிய அளவிற்கு போயிருக்கிறது.

  இலங்கை ராணுவ வீரர்களுக்கு இன்றும்கூட தொடர்ந்து இந்திய அரசு பயிற்சி அளித்துவருகிறது. அதுவும் தமிழகத்தில் பல எதிர்ப்புகள் வந்தபோதும் தமிழக மண்ணில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிப்பதை நிறுத்தியதேயில்லை.

  இலங்கை சார்க் கூட்டமைப்பிலுள்ள நட்பு நாடு என்றும் பயிற்சி ஒப்பந்தங்கள் முன்பே போடப்பட்டது என்றும் இந்திய அரசு விளக்கமளிக்கிறது. பாகிஸ்தானும் சார்க் கூட்டமைப்பிலுள்ள நாடுதான். ஏன் அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிப்பதில்லை? என்ற பலரது கேள்விகளுக்கு இதுவரை இந்திய அரசு பதிலளிக்கவில்லை.

   இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப்போருக்கு கியூபா, லிபியா ஆகிய நாடுகள் உதவியது ஒருபக்கம் இருக்கட்டும். தொடர்ந்து எதிரிகளாக பாவித்துக்கொண்டு குடிமக்கள் வயற்றிலடித்து ராணுவ வலிமையை மட்டும் பெருக்கிகொண்டுவரும் இந்தியா, பாகிஸ்தான் போன்றவற்றோடு சீனாவும் இணைந்துகொண்டதுதான் வேடிக்கை. தெற்காசியாவின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் அனைத்து செயல்களையும் செய்யும் இந்தியா, பாகிஸ்தான் கூட்டு மிக மோசமானதாகும்.

  இன்று இலங்கை உலகப் பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. இந்தப் பெருமுதலாளிகள் நலன்களே இந்த நாடுகளின் வெளியுறவு மற்றும் நிதி சம்மந்தமான கொள்கைகளைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. மன்மோகன்சிங், சிவசங்கர் மேனன், மான்டேக் சிங் அனுவாலியா, ப.சிதம்பரம், சோனியா காந்தி, நிருபாமா ராவ் போன்ற பலருக்குப் படியளக்கும் எஜமானர்கள் இவர்கள். எனவே குடிமக்கள் நலன்களெல்லாம் இங்கு பூச்சியம்தான். 

 இந்த உண்மை நிலையைத் தெரிந்தோ, தெரியாமலோ இந்திய அரசு ஈழப்பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வு காணவேண்டும் கோரிக்கைகள் வைக்கப்படும்போது ஆயாசமாக இருக்கிறது. மத்திய அரசில் அங்கம் வகித்த ஜெ.ஜெயலலிதாவாகட்டும் மு.கருணாநிதியாகட்டும் தங்களுக்குப் பசையான துறைகளை ஒதுக்கவதில் மட்டுமே பேரம் பேசுவார்கள். வெளியுறவுக் கொள்கைகள் குறித்தோ நிதிக்கொள்கைகள் குறித்தோ வாய்திறப்பது கிடையாது. ஏன் காவிரி நதிநீர்ப்பிரச்சினை பற்றிகூட எதேனும் நிபந்தனைகள் அல்லது கோரிக்கைகள் வைக்க முடியாதவர்கள் இவர்கள்.

  இந்தக் கொள்கைகளில் பா.ஜ.க. தலைமையிலான NDA  காங்கிரஸ் தலைமையிலான UPA ஆகிய எந்த ஆட்சி மாறி மாறி வந்தாலும் கொள்கைகள் மாறப்போவதில்லை. இத்தகைய பிரச்சினைகளில் மாநிலக் கட்சிகளைக் மத்திய அரசு கலந்தாலோசிப்பதில்லை. எனவே பா.ஜ.க.,  காங்கிரஸ் ஆகிய இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

   பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தின் பழம்பெருமை மிக்க சாஞ்சி நகரில் அமைக்கப்படவுள்ள பவுத்த மற்றும் இந்திய ஆய்வுப் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்ட தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டு சகிப்புத்தன்மை குறித்து பாடமெடுத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது. 

   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச மாநில எல்லை வரை சென்று ம.தி.மு.க. தொண்டர்களுடன் போராடித் திரும்பியுள்ளார் வைகோ. மஹிந்த ராஜபக்ச- வை அழைத்த பா.ஜ.க. வினரோடு கரம்கோத்தவர் இந்த வைகோ என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன. மு.கருணாநிதி அறிக்கை மட்டும் விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டார். இலங்கை விளையாட்டு வீரர்களைத் திருப்பியனுப்பி ஈழ ஆதரவாளர் பட்டம் சூடிக்கொண்ட ஜெ.ஜெயலலிதா வாய் திறக்கவேயில்லை. இவ்வளவுதான் இவர்களது பாசமும் அக்கறையும்.

  இது கிடக்கட்டும். பவுத்தம் தொடர்பான ஓர் மாநில அரசு விழாவிற்கு அதிபர் மஹிந்த ராஜபக்ச –வை அழைக்கவேண்டிய அவசியமென்ன? இவ்விழாவிற்கு பூட்டான் பிரதமர் ஜிக்மே யோசர் தின்லே –வும் அழைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் அடைக்கலம் பெற்றிருக்கும் திபெத் புத்தமதத்தலைவர் தலாய்லாமாவை ஏன் அழைக்கவில்லை? இஸ்லாம் பற்றிய ஓர் விழா நடந்தால் அதற்கு சிறப்பு விருந்தினராக பாகிஸ்தான்  அதிபரையோ, பிரதமரையோ இவர்கள் அழைப்பார்களா?
   இவைகள் ஒன்றும் விடை தெரியாத கேள்விகள் அல்ல. பா.ஜ.க.வின் இந்துத்துவம் பவுத்தத்தை விழுங்கியது; இன்னும் மிச்சமிருப்பதையும் விழுங்கத்துடிப்பது. குஜராத்தில் இனப்படுகொலை செய்தவர்கள் ஈழத்தில் இனப்படுகொலை செய்த அதிபர் மஹிந்த ராஜபக்ச -வுடன் நெருக்கமாக இருப்பதும் அழைத்து விருந்து வைப்பதும் வியப்பொன்றுமில்லை.


   நம்முடைய ஆதங்கம், இவர்களை நாம் எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்  என்பதுதான். ஜெ.ஜெயலலிதா ஈழ ஆதரவாளராகவும் மன்மோகன் சிங் திருவாளர் பரிசுத்தமாகவும் நரேந்திர மோடி குஜராத் வளர்ச்சியின் பிதாமகனாகவும் எடுக்கும் அவதாரங்களை நம்பி ஏமாறும் மந்தையாக இருப்பதிலிருந்து விடுபடுவதுதான் நாம் முதலில் செய்யவேண்டிய காரியமாக இருக்கமுடியும். ஊடகங்கள் கட்டமைக்கும் பிம்பங்களிருந்து விடுபடுவதும் நமது சுயத்தையும் சுயமரியாதையையும் பாதுகாப்பதாக அமையும்.

தமிழக கல்வித்துறையின் அவலங்கள்


தமிழக கல்வித்துறையின் அவலங்கள் 
                   
                        -மு.சிவகுருநாதன்

     சென்ற கல்வியாண்டின் (2011-2012) தொடக்கத்தில் சமச்சீர்கல்வி பாடநூற்களுக்கு எதிராக ஜெ.ஜெயலலிதாவின் கீழுள்ள தமிழக கல்வித்துறை எடுத்த நடவடிக்கைகள் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றால் குட்டுபட்டும் இந்த நிமிடம் வரை திருந்துவதற்கான அறிகுறியே தென்படவில்லை. தமிழக அரசின் உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றில் நடைபெரும் குளறுபடிகளுக்கு அளவில்லை. 

     இந்தக் கல்வியாண்டில் (2012-2013) மாநிலம் முழுமையும் காலாண்டுத்தேர்வு உள்பட அனைத்துத் தேர்வுகளுக்கும் ஓரே வினாத்தாள், ஓரே நாளில் தேர்வு என்ற திட்டத்தின் மூலம் பெரும் அவலத்திற்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உள்ளாகியிருக்கிறது. மையப்படுத்தப்பட்ட எந்தத் திட்டமும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை இது மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கிறது. 

    மையப்படுத்தப்பட்ட இத்தகைய முறையால் தரம் உயரும் என்று சொன்னவர்கள் இப்போது விழி பிதுங்கி நிற்கிறார்கள். தமிழகம் முழுவதிலும் வினாத்தாள்கள் உரிய முறையில் தகுந்த நேரத்திற்கு சென்றடையாத நிலையில் இம்முறையினால் விளைந்த பயனை அறுவடை செய்தவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

     பழைய முறைப்படி மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரிக்கும்போது அதற்கென வசூலிக்கப்படும் பெருந்தொகை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு கிடைக்கும். இப்போது மையப்படுத்தப்பட்ட இம்முறையால் மாநில அளவிலுள்ள அலுவலர்கள் பலன் அடைந்ததைத் தவிர்த்து மாணவர்களுக்கோ கல்வித்தரத்திற்கோ இதனால் கிஞ்சித்தும் பயனில்லை. 

    வினாத்தாள் தாமதமாக வந்ததால் பல பள்ளிகளில் மதிய உணவைக்கூட சாப்பிடமுடியாமல் பசியுடன் மாணவர்கள் தேர்வு எழுதியது, காலையில் நடைபெறவேண்டிய தேர்வை மாலையில் எழுதவேண்டிய கட்டாயம், ஆங்கில வழி வினாத்தாளை தமிழில் மொழிபெயர்த்து அளிக்கவேண்டிய நிலை, போதுமான வினாத்தாள் இல்லாததாலும் அதைப் பிரதியெடுக்ககூட மின்வெட்டால் முடியாத சூழல் (அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு சென்று ஓர் பள்ளியில் நகலெடுத்து வழங்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது.) பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாளுடன் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான நிலவரைபடங்கள் இணைத்து வழங்கப்படாமை, தமிழ் இரண்டாம் தாளுக்குரிய வங்கி பற்றுச்சீட்டு இணைக்கப்படாதது என எண்ணற்ற அவலங்களைப் பட்டியலிட இங்கு பக்கங்கள் போதாது.

  காலாண்டுத்தேர்வை தமிழ்நாடு முழுவதும் பொதுத்தேர்வாக நடத்தவேண்டியதன் தேவை என்ன என்பது குறித்து முதலில் சிந்திக்கவேண்டும். இந்த வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவது கிடையாது. அப்படி முன்கூட்டியே வெளியானாலும் ஒன்றும் குடி முழ்கிவிடப் போவதில்லை. 

  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தொகுதிகளுக்கான தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகிவருவது அண்மையில் அம்பலமாகியுள்ளது. இது பல்லாண்டாக நடைபெரும் தொடர்கதைதான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். அரசு இதுகுறித்து நேர்மையான, வெளிப்படையான விசாரணை செய்யாமல் ஒருசிலரை மட்டும் பலிகடாவாக்கி மேலதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

  அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிரியர் 
தகுதித்தேர்விலும் இம்மாதிரியான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருக்கக்கூடிய வாய்ப்பை மறுப்பதற்கில்லை. மிகக் குறைவானவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்று ஆசிரியர்கள் கிண்டலுக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் வெறும் 90 நிமிடங்களில் 150 வினாக்களுக்கு எக்பிரஸ் வேகத்தில் விடையளித்து நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம் சித்ரா என்றொரு தேர்வர் 142 மதிப்பெண்கள் பெற்றிருப்பது நமது அய்யத்தை அதிகமாக்குகிறது.

  அரசுத்தேர்வுகளின் லட்சணம் இவ்வாறிருக்க 1 முதல் 12 வகுப்புகளுக்கான காலாண்டு, அரையாண்டுத்தேர்வுகளை மட்டும் அரசுத்தேர்வுகளைப்போல தரமாக நடத்துகிறோம் என்று இவர்கள் கூவுவதன் உள்நோக்கத்தை நம்மால் விளங்கிக் கொள்ளமுடிகிறது. வேலை வாய்ப்புக்கான உயர் தேர்வுகளை முறையாக நடத்த அருகதையற்ற தமிழ்நாடு அரசு பள்ளித் தேர்வுகளின் தரம் பற்றிப் பேசுவது வேடிக்கையாகயுள்ளது. 

  10, 12 ஆம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு வினா வடிவமைப்பு முறையில் அமைப்பதாக சொல்லப்பட்டது. பத்தாம் வகுப்பில் மார்ச்-ஏப்ரல் 2012 இல் தவறியவர்களுக்கு நடத்தப்பட்ட மறுதேர்வில்கூட வடிவமைப்பு பின்பற்றாத நிலையில் காலாண்டுத்தேர்வில் கிழிக்கிறோம் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?

   இந்த வினாத்தாள்களில் உள்ள குறைபாடுகள் ஒருபுறமிருக்க எழுத்துப் பிழைகளை நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துபவை. தமிழ் மற்றும் ஆங்கில வழி வினாத்தாள்கள் அனைத்தும் பல்வேறு பிழைகள் மலிந்தவை. ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கிலவழி வினாத்தாள் tree ஐ free என்கிறது; rain ஐ pain என்று குறிப்பிடுகிறது.

  அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கியாயிற்று. இதுகுறித்து தமிழகத்தில் எந்தவொரு சலசலப்பும் இல்லை. எனவே ஆங்கில வழிக்கு மட்டும் வினாத்தாள்களை அச்சிட்டுவிட்டு தமிழில் மொழிபெயர்த்துக் கொடுங்கள் என்று உத்தரவிடும் கொடுமையை என்னவென்பது? இதற்கென மாலையில் நடைபெறவேண்டிய ஆங்கிலவழி வினாத்தாள்களை காலையிலேயே பிரித்து வழங்கிய அசிங்கத்துடன் ஆங்கில வழி வினாத்தாள் போதாத நிலையும் அரங்கேறியது. 

   ஏற்கனவே தனியார் மற்றும்  மெட்ரிக் பள்ளிகள்தான் போலியான தரம் என்று சொல்லிக்கொண்டு பாளையங்கோட்டை வினாத்தாள்களுக்கு ஆளாய்ப் பறந்தன. இதன் மூலம் தரமொன்றும் மேம்படவில்லை. பள்ளி மாணவர்கள் தேவையற்ற கொடுமைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளானதுதாம் மிச்சம்.

  20.09.2012 அன்று சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, மானிய விலை எரிவாயு உருளைகளுக்குக் கட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.மமதா பானர்ஜி போன்று இரட்டைவேடம் போடவேண்டிய அவசியம் ஜெ.ஜெயலலிதாவிற்கும் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. இதில் மாணவர்கள் ஏன் பலிகடாவாக்கப்படவேண்டும் என்பதே நம்முன் எழும் கேள்வி.

  மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டே (கேபினெட் எடுக்கும் முடிவுகளுக்குத் தலையாட்டிக்கொண்டே) மு.கருணாநிதி தி.மு.க. வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என்று அறிவித்தவுடன் தமிழக அரசின் பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டது. செப்டம்பர் 20 அன்று தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படவேண்டும் என்றும் ஆணையிடப்பட்டது. அன்று காலைதான் வேலைநிறுத்தம் காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்காகவே விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு செய்தது குறிப்பிடத்தகுந்தது. மாணவர்கள் நலன் குறித்த இந்த  போலியான அக்கறை கேலிக்குரிய ஒன்று.

  இங்கு தரம் பற்றிய போலியான அளவுகோல்கள் மக்களின் பொதுப்புத்தியில் பதியவைக்கப்பட்டுள்ளன. இந்த நடுத்தர வர்க்க மனோபாவத்திற்கு பெற்றொர்கள் ஆட்படுகின்றனர். இதைப் பெரிதாக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவது அழகல்ல. கல்வியாளர்கள் சொன்னாலும் கேட்பதில்லை, நீதிமன்றங்கள் உத்தரவிட்டாலும் மதிப்பதில்லை என்ற மமதையில் ஓர் அரசும் அதன் துறைகளும் செயல்படுவது ஜனநாயகத்தின் மாண்புகளை வேரறுக்கும் செயல்.

  கல்வித்துறையில் எவ்வளவோ சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டியுள்ளது. அதைப் பற்றி சிறு துரும்பைக்கூட அசைக்காமல் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோரை பெரும் மன உளைச்சலுக்குள் தள்ளும் இம்மாதிரியான முடிவுகள் உடனே கைவிடப்படவேண்டும்.