ஞாயிறு, ஜூலை 11, 2010

கொடும் நிகழ்வின் இன்னொரு பாரம் மு.சிவகுருநாதன், அப்துல் காதர், ச.பாண்டியன் ‘பன்மை’, திருத்துறைபூண்டி.



கொடும் நிகழ்வின் இன்னொரு பாரம்





‘பன்மை’,

திருத்துறைபூண்டி.

கருத்தியல் ரீதியில் இந்துத்துவக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் காலச்சுவடு ‘மதச்சார்பின்மை... ஒரு மறு ஆய்வு ‘ என்று சிறப்பிதழ் வெளியிடுகிறது. காலச்சுவடின் தொடர்ச்சியான அரசியல் நிலைப்பாட்டை கவனித்து வருபவர்களுக்கு இதொன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயமல்ல. மறு ஆய்வு, புதிய பார்வை என்ற போர்வையில் இந்துத்துவப் பயங்கரவாதக் கும்பலுக்கு ஊது குழலாய் செயல்படும் காலச்சுவடு கும்பலைத்தான் தமிழ்ச் சூழலில் மறு ஆய்வுக்கு உட்படுத்த வெண்டிய அவசியமிருக்கிறது.

சங்பரிவாரங்களின் அகண்ட பாரதக் கனவை தேசம் தாண்டி தெற்காசியா, பூகோள வரையறைக்கு உட்படுத்தி இந்துக்களும் சிறுபான்மையினர்தான் என்று முதலைக் கண்ணீர் வடித்து இந்துத்துவ பாசிசத்தால் அழித்தொழிக்கப்படும் இந்தியச் சிறுபான்மையினரில் முதன்மையாக இருக்கும், யூத, கிறித்துவர்களுக்கெதிரான பொது எதிரியாகப் புனையும் ஒரு எல்லை தாண்டிய பயங்கரவாத்தை காலச்சுவடு கட்டைமைக்கிறது.

மீனாட்சிபுரத்தில் தலித்துகள் மதமாற்றத்தின் மூலம் பெற்ற அடிப்படை வாழ்வியல் உரிமைகளைக் கூட சகித்துக் கொள்ள முடியாத காசு கண்ணன் தன் பெண்ணியத் தோழர்களோடு நுண் மான் மயிர்க்கூச்செரியும் கள ஆய்வை மேற்கொள்ள முயல்வது வேடிக்கையானது. இந்தியச் சுழலின் கோடுர முகம் கொண்ட சாதீய ஒடுக்கமுறையை உலகளவில் நிலவுகின்ற பாலின ஒடுக்குமுறையோடு இணைத்துப் பார்க்க முடியாது.

மேலும் இந்திய அதிகார மய்யங்களில் இசுலாமியருக்கு ஆதரவு இல்லையென்றும், அவர்கள் ஏதேனுமொரு இயக்கத்தைச் சார்ந்து வாழும் ஒட்டுண்ணியாக உருமாற வேண்டுமென்றும் கூறி அவர்கள் தனிப்பெரும் இயக்கமாக அணி திரள்வதை மறைமுகமாகத் தடுக்கும் இந்துத்துவப் பாசாங்கை அவதனிக்க முடிகிறது. நிறைய விஷயங்களில் காலச்சுவடுக்கென்று சுய விமர்சனப் பார்வை கிடையாது. தம் மீதான விமர்சனத்தைத் தாங்கிக் கொள்ளத் திராணியற்று ஆள்வைத்து அடித்துத்துவைக்கும் போக்கை அது அது கடைப்பிடிக்கிறது. இந்நிலையில் இசுலாமியருக்கு சுய விமர்சனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுரை சொல்லும் யோக்கியதை காலச்சுவடுக்கு கிடையாது.

மதச்சார்பின்மைய ஆய்வு செய்யும் இரட்டை வேடங்களில் ஒன்று பிதாமகனுடையது. மற்றொன்று தத்தெடுத்த ‘சூரியபுத்திரனு’டையது. கொடுங்கனவின் பாரத்தைச் சுமக்கும் குறிப்புகளைத் தருபவர் ஏன் அந்த பாரத்தை கடைசி வரைக்கும் இறக்கி வைக்கவில்லை? பௌத்த, சமண அழித்தொழிப்பில் நடந்த வெறியாட்டங்கள் இந்துத்துவச் சார்பானதுதான் என்ற பாரத்தை ஏன் சுமந்து கொண்டிருக்க வேண்டும்?

கொடும் நிகழ்வான குஜராத்தின் பலியாட்டங்களை குறைத்து மதிப்பிட்டு ஏன் நீர்த்துப் போகச் செய்ய வேண்டும்? தொடர்ச்சியான இந்துத்துவ வெறியாட்டக் களத்தில் சிறுபான்மையினருக்கெதிராகத் தலித்துகள் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றனர் என்பதையும் கொடுங்கனவின் இன்னொரு பாரமாக நினைத்துப் பார்ப்பது நல்லது. இந்திய வரலாற்றை காவியமாக்கி திரித்துக் கூறும் பார்ப்பனக் கும்பலின் கால(டி)ச் சுவடுகளை ஏன் இடது சாரிகள் பின்பற்ற வேண்டும்? இங்குள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகள் என்ன மயிருக்கு தர்மாகுமார் போன்ற பார்ப்பனக் கருத்தியலோடு ஒத்திசைய வேண்டும்?

காலச்சுவடு 48ல் வெளியான ‘சாபம்’ என்ற சல்மாவின் சிறுகதை(!?) (அது சிறுகதைதான் என்று அவுஸ்திரேலியாவிலிருந்தும், நேர்வேயிலிருந்தும், கனடாவிலிருந்தும் சில ஈழப் பூநூலாசிரியர்கள் இந்நேரம் ஈமெயிலில் கலாய்த்திருப்பார்கள்.) ‘துலக்கப் பசங்க வம்சமே... கொலைகார வம்சம்டா... இந்த கொலைகார நாய்களை குத்தினால் என்ன... குதறினால் என்ன...’ என்று குஜராத் மோடிகளுக்குக் கருத்தியல் ஆதரவு தரும் ஸ்ரீசல்மா தேவியின் சாபமும் தொகடியாவின் சூலாயுதமும் ஒன்றாகத்தான் படுகிறது. ‘நச்சார் மட விவகாரம்’ என்ற படைப்பைத் தன்மீது எறிந்த பெட்ரோல் குண்டாக நினைத்த இக்கும்பல் தன் மகளிரணி எழுத்தாளர் மூலம் கதை எழுத வைத்து இசுலாமியருக்கெதிரான இன்னொரு அவதூறை நிலைநிறுத்தியிருக்கிறது. இன்று வரையிலும் நாச்சியார் மட விவகாரதுக்கான அவசியம் இருக்கத்தான் செய்கிறது.

அதை எதிர்த்து தன் பூணூலை சாட்டையாக்கி அடி முதல் நுனி வரை 108 பேர்களை பிடிக்க வைத்துச் சுழற்ற முயன்ற கேவலம் காசு கும்பலைத் தவிர வேற யாருக்கும் வராது.காசு கும்பல் செய்த எத்தனையோ எத்துவாளித் தனங்களை எல்லாம் கண்டுகொள்ளாத இந்த எழுத்தாளக் கும்பல் காசு கண்ணனின் பூநூல் சுழற்று வேலையில் வரிசையாக நின்று பூநூல் பிடித்த அசிங்கத்தையும் நாம் மறந்துவிட முடியாது,

தலித்தியத்திற்குப் பண்பாட்டுத் தளத்திலும், அரசியல் தளத்திலும் அணி சேர்க்க முயல்வோரை ஒரு தலித்குமாரனை தத்தெடுத்து திருப்பித் தாக்க வைப்பது, குஜராத் முதல் குமரி வரை குண்டி கிழித்து குதறப்படும் சிறுபான்மையினருக்காக யாரும் ஆதரவாகப் பேசினாலோ, எழுதினாலோ சில சுன்னத் செய்த பார்ப்பனர்களைக் கொண்டு எதிர்பிரச்சாரம் செய்வதுமே காலச்சுவடின் வாடிக்கையாக உள்ளது. காலச்சுவடின் ஒட்டு மொதத அரசியல் நிலைப்பாடு இந்துத்துவ சார்புடையதாகவும் சிறூபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கெதிராகவுமே இருந்து வந்திருக்கிறது. தனது சநாதன எழுத்துக்களாலும் தனது வரும் டாலர்களினாலும் தனது உலகத்தை பிரமாண்டமாக்குவது கொடும் நிகழ்வின் இன்னொரு பாரமே.

செவ்வாய், ஜூலை 06, 2010

Rights activists visit Uthapuram

Tamil Nadu - Madurai Printer  Friendly Page Send this  Article to a Friend

Rights activists visit Uthapuram

Staff Reporter

MADURAI: A fact-finding team of various human rights organisations visited Uthapuram village in Madurai district and Dombucheri village in Theni district on Sunday for assessing the situation in the wake of allegations of caste atrocities and police excesses against Dalits.

The team, comprising writer A. Marx, M. Sivagurunathan, K. Palanisamy and Rajni of the People's Union for Human Rights; G. Sugumaran, secretary, Federation for People's Rights Puducherry; S. Kochadai, People's Education Organisation; M. Barakathulla, National Confederation of Human Rights Organisation, Dindigul; and Viduthalai Veeran, Adi Tamizhar Peravai, conducted interviews with Ravichandran, Inspector of Police, Elumalai, and the Dalits.

The team said that in Uthapuram the pathway created after a portion of the ‘untouchability' wall was demolished was not fully accessible to the Dalits for moving freely, as there were frequent objections from caste Hindus. This, they alleged, was taking place with the State's connivance. After the intervention of MLAs of Communist Party of India led by K. Balabharathi on June 21, the Dalits were once taken for a ride in autorickshaw, which was nothing but tokenism.

Even after funds were allotted under the Member of Parliament Local Area Development Scheme of CPI (M) Rajya Sabha MP T.K. Rangarajan, the demand for the construction of the bus shelter had been shelved citing law and order problems and this move was condemnable, the team said.

In Dombucheri village, a clash erupted on June 23 following a dispute over carrying the body of a caste Hindu who had married a Dalit, through the caste Hindu area. Following this, both the attackers and the Dalits who were targeted were arrested.

The team visited the village and held discussions with the Panchayat president, caste Hindus and Dalits and found that there was a polemical divide with various sub-castes of caste Hindus on one side and sub-castes of Dalits on the other. The Dalits demanded a separate pathway to their burial grounds.

Casteism

The team said that casteism was highly prevalent in Theni, Bodi Thevaram Elumalai and Usilampatti areas and the State machinery in the form of police and Revenue Departments were anti-Dalit and conniving with the dominant castes.

They recommended that the State government take note of this and make sure that Dalits and members of castes other than the dominant castes of the locality be replaced with the existing staff on a mutual transfer. Following the recommendations of the Scheduled Caste and Tribes Prevention of Atrocities Act 1989, the State should form committees in all these villages to monitor caste discrimination.

The State government should completely demolish the ‘untouchability' wall in Uthapuram and immediately construct the bus shelter and drainage system and allow Dalits to participate in temple festivals.

Create new pathway

The team also demanded that a new pathway be established by the district administration on a war footing. They demanded action against the police who had failed to book the caste Hindus who attacked the Dalits, under the SC/ST Act.

courtesy:

the hindu -06.07.2010

திங்கள், ஜூலை 05, 2010

உத்தபுரம் (மதுரை), டொம்புச்சேரி, பெரியகுளம் (தேனி) ஆகிய பகுதிகளில் தொடரும் சாதி வெறியும் அரசின் அலட்சியமும்!





















உத்தபுரம் (மதுரை), டொம்புச்சேரி, பெரியகுளம் (தேனி) ஆகிய

பகுதிகளில் தொடரும் சாதி வெறியும் அரசின் அலட்சியமும்!

உண்மை அறியும் குழு அறிக்கை

கீழே கையொப்பமிட்டுள்ள மனித உரிமை ஆர்வலர்களாகிய நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள இரு ஊர்களுக்கும் நேற்று (ஜுலை 4, 2010) சென்று மக்களைச் சந்தித்தோம். தொடர்புடைய காவல் நிலையங்களுக்குச் சென்று வழக்கு விவரங்களையும் அறிந்து கொண்டோம்.

உத்தபுரத்தைப் பொறுத்தமட்டில் சுவர் இடிக்கப்பட்டது தொடங்கி இதுவரை மும்முறை அங்குச் சென்று வந்துள்ளோம். தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்டு சுமார் ஒன்றரையாண்டு ஆன பின்னும் கூட இன்றும் அவ்வழியே தாழ்த்தப்பட்டவர்களின் (பள்ளர்), வாகனப் போக்குவரத்தை ஆதிக்கச் சாதியினர் (பிள்ளைமார்கள்) அனுமதிக்கவில்லை. “உத்தமபுரம் என்கிற பெயர்ப் பலகையுடன் வளைவு அமைத்து அதில் வாகனங்கள் சென்று வர ஏற்பாடு செய்யப்படும்” என முதல்வர் கருணாநிதி வாக்களித்திருந்தும் கூட இதுதான் இன்றைய நிலை. சென்ற சில நாட்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு சிலர் ஒரு ஆட்டோவில் போலீஸ் துணையுடன் ஒரே ஒரு முறை சென்று வந்ததையே பெரிய ‘சாதனை’யாகச் சொல்லக் கூடிய அளவுக்கு அங்கே நிலைமை மோசமாக உள்ளது. அரசு எந்த வகையிலும் நிலமையைச் சீர் செய்து 1) உடைந்த சுவர் வழியே வாகனப் போக்குவரத்தை ஏற்படுத்தவோ 2) பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள கோயில் அருகிலுள்ள ஆல மரத்தைச் சுற்றி வந்து பள்ளர்கள் முளைப் பாறி எடுக்கும் நிலையை மீண்டும் ஏற்படுத்தவோ 3) பேருந்து நிறுத்தத்தில் ‘ஷெல்ட்டர்’ ஒன்றைக் கட்டவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மாறாக சர்ச்சைக்குரிய கோயிலில் பிள்ளைமார்கள் மட்டும் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.கே.ரங்கராஜன் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் இதற்கு வழங்கிய ரூ. 3.5 லட்சத்தைச் சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

'ஷெல்ட்டர்’ கட்டும் முயற்சியை இப்படி முறியடித்ததோடு பள்ளர்கள் பேருந்திற்காக காத்திருக்கும் போது அமரக் கூடிய சாக்கடையை ஒட்டிய கட்டைச் சுவரின் மீது சென்ற சில நாட்களுக்கு முன் (ஜீன் 17) சாக்கடையை வாரி கொட்ட பிள்ளைமார்கள் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தங்கள் பகுதியில் வந்தடையும் அந்தச் சாக்கடைக்கு உரிய வடிகால் அமைத்துத் தர வேண்டும் என்பது பள்ளர்களின் கோரிக்கையாக இருந்த போதும், காவல்துறையின் பார்வையிலேயே இப்படி நடந்துள்ளது. பள்ளர்கள் மத்தியில் பிளவு ஒன்றையும் காவல்துறையினர் திட்டமிட்டு உருவாக்கி மாரிமுத்து என்ற அச்சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் பிள்ளைமார்களுமாக அதைச் செய்துள்ளனர். பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் புஷ்பம் குடும்பத்தினரை திட்டமிட்டு காவல்துறையினர் பள்ளர்களிடமிருந்துப் பிரித்து எதிராக நிறுத்தியுள்ளனர். இதன்மூலம் இரு சாதிகளிடையேயான பிரச்சினையை பள்ளர்களுக்கு இடையிலான பிரச்சனைப் போல முன்வைக்கின்றனர். எழுமலை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் இந்த தோரணையிலேயே எங்களிடம் பேசினார்.

உட்காரும் கட்டைச் சுவர் மீது போடப்பட்ட சாக்கடையை அள்ள வேண்டும் என பள்ளர்கள் திரண்டு வந்து கேட்டபோது காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்து காலம் தாழ்த்தியுள்ளது. இதனால், பிரச்சனை முற்றி இரு தரப்பிலும் கற்கள் வீச உடனடியாக எழுமலை காவல்நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் பள்ளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளது. ஈஸ்வரன் (தலையில் 20 தையல்), சங்கரலிங்கம் (கையில் காயம்), ராமன் (இடது கையில் முறிவு) உள்ளிட்ட சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். அடுத்த நாள் அழகம்மாள் என்ற பெண் உட்பட பொன்னையா, சங்கரலிங்கம், பெ. ராமராஜ், நாகராஜ், தங்கராசு, கணேசன், குருசாமி, முனியாண்டி, சுந்தரராஜ், நாகராஜ், தங்கராசு, மணி ஆகியோர் பள்ளர்கள் தரப்பிலும், பிள்ளமார்கள் தரப்பில் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலைக் கண்டித்து ஜீன் 21 அன்று மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டுள்ளது. அன்றுதான் பாலபாரதியுடன் பள்ளர்கள் சிலர் ஆட்டோவில் உடைக்கப்பட்ட சுவர் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்ட நிகழ்வு நடந்தது. இதை ஒரு பெரிய சாதனையாக எழுமலை காவல் ஆய்வாளர் குறிப்பிட்டார்.

சென்ற வாரத்தில் (ஜூன் 28) பள்ளர் தரப்பில் கைது செயப்பட்டவர்கள் பிணை பெற்று விடுதலையாகி வந்த கையோடு பழைய வழக்கொன்றைக் காரணம் காட்டி சிறை வாசலிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையின் அப்பட்டமான சார்புத் தன்மையை இது வெளிப்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகத்தின் ஆசியுடன் இது நிகழ்ந்துள்ளது. இந்திய அளவில் கவனம் ஈர்க்கப்பட்ட ஒரு பிரச்சனையில் தமிழக அரசு இப்படி மெத்தனம் காட்டுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பிள்ளைமார்கள் மத்தியில் அரசு ஆதரவு அளித்த தெம்புடன் கூடிய சாதிவெறி அதிகரித்துள்ளதையும் நாங்கள் நேரில் கண்டோம்.

தேனி நகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் குச்சனூர் முருகன் கோயில் செல்லும் வழியில் அமைந்துள்ள டொம்புச்சேரி என்னும் ஊரில் சுடுகாட்டுப் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. பிள்ளைமார்கள், கள்ளர்கள், செட்டியார்கள், பள்ளர்கள், அருந்ததியர்கள், பறையர்கள் ஆகியோர் வசித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளர்களுக்கு என ஊருக்கு வெளியே சித்தவங்கி ஓடை என்னுமிடத்தில் 3 ஏக்கர் நிலத்தில் சுடுகாடு ஒன்றை அரசு அமைத்துள்ளது. எனினும் அங்கு சென்று வர முறையாக சாலை வசதி ஏதும் செய்யப்படவில்லை. எனவே, பள்ளர்கள் ஊருக்குக் கிழக்கே சுடுகாட்டிலேயே பிணங்களைப் புதைத்து வந்துள்ளனர். அங்கு பிணங்களை எரிக்கும் வழக்கமில்லை.

இந்நிலையில் கடந்த ஜீன் 23 அன்று பள்ளர் சமூகப் பெண் ஒருவரை மணந்து அவர்களோடு ஒருவராக வாழ்ந்து வந்த கதிர்வேல் பண்டியன் என்ற கவுண்டர் ஒருவர் இறந்து போனார். அவரது பிணத்தைப் புதிய சுடுகாட்டில் எரிப்பதற்கு, தற்போது அங்கு செல்வதற்கு உள்ள ஒரே வழியான பேச்சியம்மன் கோயில் சாலை வழியாக, சவ ஊர்தி ஒன்றில் வைத்து எடுத்துச் செல்ல பள்ளர் சமூகத்தினர் முயன்றுள்ளனர். கோயிலை விரிவாக்கி கட்டியுள்ளதால் அவ்வழியே எடுத்துச் செல்லக்கூடாது எனத் தேவர்கள் தடுத்துள்ளனர். வேண்டுமானால் தங்கள் தெரு வழியே கொண்டு செல்லலாம் என அவர்களில் ஒரு சிலர் கூறியுள்ளனர். வேறு சிலர் தடுத்துள்ளனர். பள்ளர் குடியிருப்பின் இறுதியில் உள்ள பள்ளர் சாவடியில் சில மணி நேரம் பிணம் கிடந்துள்ளது. பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாத நிலையில் தேவர் தரப்பிலிருந்து கல் வீச்சு தொடங்கியுள்ளது. பள்ளர் சாவடி கல்வீச்சில் சிதைந்துள்ளதையும் அவர்கள் வீட்டுக் கதவுகள் சில உடைந்துள்ளதையும், அவர்களில் சிலர் காயம்பட்டுள்ளதையும் நாங்கள் நேரில் பார்த்தோம். பள்ளர்கள் தரப்பிலிருந்தும் ஒரு சிலர் கல் வீசித் தாக்கினாலும் தேவர் தரப்பில் பெரிய சேதம் இல்லை. இதற்கிடையில் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் முத்துச்சாமி, துணைக் காவல் கண்காணிப்பாளர் அன்வர்ஷா ஆகியோர் தலைமையில் ஒரு போலீஸ் படை வந்து இறந்தவரது பிள்ளைகளின் ஒப்புதலின்றி பிணத்தை எடுத்துச் சென்றுள்ளது.

தனது தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய போலீஸ் அனுமதிக்கவில்லை எனவும், பிணத்தை என்ன செய்தார்கள் எனத் தெரியவில்லை எனவும், இறுதிச் சடங்குக் கூட செய்ய இயலாமல் போனது ஆறாத துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் அவரது மகன் ராஜா கூறினார். கல்லடி சம்பவம் நடைபெற்ற போது அங்கிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் கலாராணி என்பவர் சாதி உணர்வுடன் தேவர்களைத் தூண்டி விட்டதாக பள்ளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது பள்ளர்கள் தரப்பில் 11 பேரும், தேவர்கள் தரப்பில் 11 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அப்பட்டமான தீண்டாமை உணர்வுடன் பள்ளர்கள் தாக்கப்பட்ட போதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படாமல் ஒரே குற்ற எண்ணின் கீழ் (930/2010) பி.சி.பட்டி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. ஒரே குற்ற எண்ணின் கீழ் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 148, 336, 427, 332 மற்றும் பொதுச் சொத்து சேதம் விளைவிப்புச் சட்டப் பிரிவு 36 ஆகியவற்றின் கீழ் தாக்கியவர்கள், தாக்கப்பட்டவர்கள் என இருசாரார் மீதும் காவல்துறை வழக்குப் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

நாங்கள் ஊருக்குச் சென்று ஒன்றிய தலைவர் திருமதி. பஞ்சவர்ணம் உட்பட எல்லா தரப்பினரையும் சந்தித்துப் பேசினோம். பிள்ளைமார்கள், தேவர்கள், செட்டியார்கள் முதலிய ஆதிக்கச் சாதியினர் ஒரு பக்கமாகவும், பள்ளர், பறையர், அருந்ததியர் ஒரு பக்கமாகவும் செங்குத்தாக பிரிந்துக் கிடப்பதை எங்களால் காண முடிந்தது.

மூன்று நாட்களுக்கு முன்பு (ஜீலை 2) சமதானக் கூட்டம் ஒன்றை ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோர் நடத்தியுள்ளனர். அடுத்த 40 நாட்களுக்குள் பள்ளர்கள் தமது பிணங்களை எடுத்துச் செல்ல ஏதுவாக பொதுச் சுடுகாட்டை நோக்கி தனிப் பாதை அமைத்துத் தருவதாக நிர்வாகம் வாக்குறுதி அளித்ததை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் கைது செய்யப்பட்ட யாரும் விடுதலை செய்யப்படவில்லை. பள்ளர்கள் தரப்பில் நிலவிய அச்சத்தின் விளைவாக சம்பவத்தையொட்டி சில நாட்கள் அனைவரும் ஊரை விட்டு ஒடித் தலைமறைவாகி இருந்துள்ளனர்.

பொதுவாக தேனி, போடி, தேவாரம், எழுமலை முதலான பகுதிகளில் தலித்துகளுக்கு எதிரான சாதி வெறித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வருவாய் மற்றும் காவல்துறையினர் இதற்குத் துணை போய் வருகின்றனர். பெரியகுளத்தில் கடந்த ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்த நாளில் மாலை போடுவதற்காக தாரைத் தப்பட்டைகளுடன் ஊர்வலம் சென்று சிலை முன் கூடியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரை நிகழ்ச்சியை நிறுத்துமாறு தேவையின்றி போலீசார் கூறியுள்ளனர். அதையொட்டி விளைந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. சாமிதுரைவேல், வடைகரை காவல்நிலைய ஆய்வாளர் சீராளன் ஆகியோர் இதைச் செய்துள்ளனர். யாரும் காயமடையாத போதும் தலித் மக்களில் 15 பேர் கைது செய்யப்பட்டதும், இன்று வரை அவர்கள் நிபந்தனைப் பிணையிலேயே அவதியுறுவதும் அதனால் அப்பகுதியில் அச்சம் சூழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றார் அப்பகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் திரு. பிச்சை.

எமது பரிந்துரைகள்:


1)இந்திய அளவில் கவனம் பெற்ற உத்தபுரத்தில் பிரச்சனை சிறிதளவுக் கூட தீர்க்கப்படவில்லை. அங்குத் தொடர்ந்து தீண்டாமை நிலவுவதையும், மாவட்ட நிர்வாகம் அதற்குத் துணை போவதையும், தமிழக அரசு மவுனமாக ஆதரவளிப்பதையும் வன்மையாக்க் கண்டிக்கிறோம். தீண்டாமைச் சுவர் முழுமையாக இடிக்கப்பட்டு அவ்வழியே தடையற்ற போக்குவரத்தை ஏற்படுத்துதல், திரு. டி.கே.ரங்கராஜன், எம்.பி. அளித்த ரூ. 5 லடசத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக ‘ஷெல்ட்டர்’ அமைத்தல், ஆல மரத்தைச் சுற்றி கட்டப்பட்டுள்ள சுவரை இடித்தல் முதலான நடவடிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


2)போடி, தேனி, தேவாரம், எழுமலை முதலான பகுதிகளில் தீண்டாமை ஒதுக்கமும், சாதி உணர்வும் மிகுந்துள்ளதை அரசுக் கவனம் கொள்ள வேண்டும். இப்பகுதியில் வருவாய் மற்றும் காவல்துறைகளில் ஆதிக்கச் சாதிகள் அல்லாத அதிகாரிகள் அதிக அளவில் பணி அமர்த்தப்பட வேண்டும். போதிய அளவில் தலித் அதிகாரிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளவாறு ஊர் தோறும் குழுக்கள் அமைத்து தீண்டாமை இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.


3)டொம்புச்சேரியில் மாவட்ட நிர்வாகம் வாக்களித்தபடி போர்க்கால துரிதத்துடன் புதிய சுடுகாட்டுப் பாதை அமைக்கப்பட வேண்டும். கதிர்வேல் பாண்டியன் குடும்பத்தாரை அவரது இறுதிச் சடங்குகள் செய்யவிடாமல் தடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது உடலுக்கு என்ன நேர்ந்தது என்பது விளக்கப்பட வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஏன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும். வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு சிறையில் உள்ளோர் விடுதலைச் செய்யப்பட வேண்டும். தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு, பள்ளர்களின் உடைக்கப்பட்ட ஊர்ச் சாவடி திருத்தி அமைக்கப்படுதல் ஆகியவற்றையும் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.


4)பெரியகுளத்தில் சென்ற ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற தேவையற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டு, வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.


5)சுடுகாடு மற்றும் சுடுகாட்டுப் பாதை தொடர்பான பிரச்சனைகள் தமிழகமெங்கும் உள்ளன. இம்மாதிரியான இடங்களில் இரண்டு மூன்று போலீஸ் வேன்களை நிறுத்தி வைத்தால் போதும் என்கிற ரீதியில் இதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாகக் கையாள்வதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்து ஆராய்ந்து பொதுவான கொள்கை முடிவு எடுக்க நீதித்துறையினர், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.


அ. மார்க்ஸ், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.

கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி.

வழக்கறிஞர் ரஜினி, மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), மதுரை.

பேரா. சே. கோச்சடை, மக்கள் கல்வி இயக்கம், காரைக்குடி.

விடுதலை வீரன், ஆதித் தமிழர் பேரவை, மதுரை.

வழக்கறிஞர் எம். ஃபரக்கத்துல்லா, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (NCHRO), திண்டுக்கல்.

மு. சிவகுருநாதன், மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), திருவாரூர்.

கு. பழனிச்சாமி, மனித உரிமைக்கான மக்கள் கழகம் (PUHR), மதுரை.


தொடர்புக்கு:

அ. மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை – 600020.செல்: 9444120582.


நன்றி :

சனி, ஜூலை 03, 2010

நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமார் தற்கொலை: அதிகாரத்துவம் பொறுப்பேற்க வேண்டும் - அ. மார்க்ஸ்

நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமார்

தற்கொலை: அதிகாரத்துவம் பொறுப்பேற்க

வேண்டும் - அ. மார்க்ஸ்

நுண்கலைக் கல்லூரி மாணவர் சசிகுமாரின் மரணம் அவரை அறிந்த எல்லொருக்கும் மிக்க மனவருத்தத்தை அளிக்கிறது. மாணவர் போரட்டம் குறித்த உண்மையறியும் குழுவில் பங்கேற்ற வகையில் அவரை இரண்டு முறை பார்த்துள்ளேன். போராடுகிற மாணவர்கள் சிலர் என்னைச் சந்திக்க வந்தபொழுது அவர் இல்லை. அடுத்த நாள் நான் மற்றும் பேராசிரியர்கள் சிவகுமார், திருமாவளவன், கவிஞர் குட்டி ரேவதி, அயன்புரம் ராசேந்திரன், வழகுரைஞர் முருகன், பிரேமா, ரேவதி முதலானோர் கல்லூரி வளாகத்திற்குச் சென்ற போதுதான் அவரை முதலில் பார்த்தேன். அடுத்தநாள் பத்திரிகையாளர் சந்திப்பிற்கும் வந்திருந்தார். இரு சந்தர்ப்பங்களிலும் அவர் கண்களில் ஒரு பதற்றத்தையும் உடலில் ஒரு படபடப்பையும் கண்டது இன்னும் என் நினைவில் நிற்கிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தான் காரணமாகிப் போனோமோ என்கிற குற்ற உணர்வும், உலகச் செம்மொழி மாநாட்டில் 1330 குறள்களையும் சுடுமண் சிற்பங்களாகக் காட்சிப்படுத்தும் தன் லட்சியம் கைகூடாமலேயே போய்விடுமோ என்கிற பரிதவிப்பும் கூடவே அவர் முகத்தில் அப்பட்டமாக வெளளிப்பட்டது.

”உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத்தான் திரும்பப் பெற முடியாது என்கிறார்கள். ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை, கவலைப்படாதீர்கள்” என்றேன். “ இதெல்லாம் ரொம்பச் சாதாரணமான வழக்கு. எளிதாகச் சமாளித்து விடலாம். ஒண்ணும் அலட்டிக்காதீங்க.” என்று சுகுமாரனும் ஆறுதல் சொன்னார். சசிகுமாரின் கண்களில் தெரிந்த பதட்டம் கூடியதே தவிர குறையவில்லை.

ஒன்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் பிரச்சினையில் மாணவர்கள் தாங்கள் செய்த தவறை ஒத்துக் கொள்கிறார்கள். மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால் கல்லூரி நிர்வாகம், ஒரு ஆசிரியருக்குள்ள எந்தத் தகுதியும் இல்லாத பொறுப்பு முதல்வர் மனோகரன், கலை பண்பாட்டுத் துறைச் செயலாளர் இறையன்பு அய்.ஏ.எஸ் ஆகியோர்தான் தம் தவறுகளை ஏற்க மறுத்தார்கள், மறுக்கிறார்கள். இந்த முரணை எங்கள் அறிக்கையிலும் சுட்டிக்காட்டி இருந்தோம். இத்தனைக்கும் மாணவர்கள் செய்த தவறுகள் பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திலும் நம் பிள்ளைகள் செய்யக் கூடியவைதான். ஆனால் நிர்வாகம் செய்த தவறுகளோ அதிகாரத்துவத்தின் அத்தனை குரூரங்களையும் உள்ளடக்கியவை. பொறுப்பு முதல்வரின் கார் கண்ணாடியை சசிகுமார் உடைக்க நேர்ந்த நிகழ்வுக்கு முந்தைய சம்பவத் தொடர்ச்சியை எங்கள் அறிக்கையில் பாருங்கள். சாதனை புரியும் துடிப்புடன் இருந்த ஒரு இளம் கலைஞன் எப்படி அந்த நிலைக்குத் தள்ளப்பட்டான் என்பது விளங்கும்.


நான் 37 ஆண்டு காலம் அரசு கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளேன். இதில் கடைசிப் பத்தாண்டுகள் தவிர்த்து ஏனைய காலங்களில் கிராமப்புற கல்லூரிகளில்தான் ஆசிரியராக இருந்தேன். நமது கிராமப்புற கல்லூரிகள் என்பன முழுக்க முழுக்க கிராமங்களின் பிரதிபலிப்பாகவே இருக்கும். சாதி, ஊர் என கிராமங்களில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் அங்கிருக்கும். இதைவிடப் பெரிய கலவரங்கள், சண்டைகளை எல்லாம் நான் பார்த்துள்ளேன். இரண்டாம் முறை நான் தஞ்சை சரபோசி கல்லூரியில் பணி செய்தபோது ஒரு மாணவன் முதல்வரை கத்தியால் குத்திவிட்டான். ஆசிரியருடைய ’பைக்கை’ உடைப்பது, கார் கண்ணாடியை உடைப்பது எனப் பல சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். இப்படியாகச் சேதம் விளைவிப்பது, சிறு கலவரங்கள் முதலான நிகழ்வுகளை நாங்கள் எப்படி எதிர் கொள்வோம் என்றால், அந்த மாணவனை ‘சஸ்பெண்ட்’ செய்வோம்; பொதுவாக உள்ள இரண்டு ஆசிரியர்களை வைத்து ஒரு ‘என்கொயரி கமிஷன்’ அமைப்போம்; பெரிய பிரச்ச்சினையாக இருந்து கல்லூரி மூடி இருந்தால் ஒரு வாரத்தில் திறப்போம். ரொம்பப் பெரிய பிரச்சினையாக இருந்தால் படிப்படியாக ஏழெட்டு நாட்களில் திறப்போம். மாணவன் செய்த தவறின் அளவைப் பொறுத்து ஒரு சிறிய அபராதம் விதித்து, தேவையானால் ஒரு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, அல்லது பெற்றோரில் ஒருவரை அழைத்து எச்சரித்து மாணவனை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக்கொள்வோம். பிரச்சினை முடிந்துவிடும். பெரிய பிரச்சினைகளின் போது கல்லூரி கவுன்சில் அல்லது ஆசிரியர் கூட்டம் போட்டு விவாதிப்போம்.


ஆனால் இங்கு என்ன நடந்தது? உடனடியாக முதல்வரின் கார் கண்ணாடியை உடைத்த சசிகுமார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்ததுடன் சம்பந்தமில்லாத இரு மாணவர்கள்மீதும் (இருவரும் தலித்துகள்) புகார் கொடுக்கப்பட்டது. முதல்வருக்கு அவ்விரு மாணவர்கள்மீது முன் விரோதம் உண்டு. சாதி உணர்வும் இதில் ஒரு பங்கு வகித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த மாணவர்களில் ஒருவரும் அவரது சகோதரரான இன்னொரு மாணவரும் முதல்வருக்கு வேண்டிய, அவரது சாதிக்காரர் எனச் சொல்லப்படுகிற ஒரு போலீஸ் அதிகாரியால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டனர். சம்பந்தமில்லாத அவ்விரு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவரின் சகோதரரிடம் எழுதி வாங்கிக்கொள்ளப்பட்டது. சசிகுமார் உட்பட மூன்று மாணவர்களும் பிணை பெற்று வெளியே வர வேண்டியதாயிற்று. இன்னிலையில்தான் சுமார் ஒரு மாதம் கழித்து, சுற்றுலா சென்ற மாணவர்களெல்லாம் திரும்பி வந்தபின் மாணவர்கள் வேலை நிறுத்தம், உள்ளிருப்புப்போராட்டம் முதலியவற்றை தொடங்கினர்.


தமிழகத்திலுள்ள இரு நுண்கலைக் கல்லூரிகளும் மாநில அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் வருகின்றன. இத்துறையின் இயக்குனர் இறையன்பு ஒரு அய்.ஏ.எஸ் அதிகாரியான போதிலும் ஒரு எழுத்தாளர், சமூக அக்கறை உள்ளவர் என்கிற வகையில் மனிதாபிமானத்துடன் இப்பிரச்சினையை அணுகி விரைவாகத் தீர்ப்பார் என்றுதான் நாங்கள் நம்பினோம். எங்கள் அறிக்கை பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் தொட்டு அமைந்தது. ஒரளவு முழுமையாகவும் இருந்தது. நண்பர் எனச் சொல்லத்ததக்க அளவிற்கு நெருக்கமில்லையாயினும் இறையன்புவை அறிவேன். பரஸ்பரம் இருவருக்கும் மற்றவர்மீது மரியாதை உண்டு. எங்கள் அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்ததோடு இது தொடர்பாகக் குறைந்தது நான்கு முறையாவது அவரோடு பேச நேரிட்டது. இரண்டு விஷயங்களை நான் அவரிடம் வற்புறுத்தினேன். சசிகுமார் உள்ளிட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள்; கல்லூரியை விரைவாகத் திறவுங்கள் என்பவைதான் அவை. பொறுப்பு முதல்வர் மனோகரன் மீதான விசாரணை உள்ளிட்ட பிற பரிந்துரைகளை விரிவாக அறிக்கையில் சொல்லியிருந்தோம்.


என்னுடைய இரு வேண்டுகோளுக்கும் சாதகமான பதில் இறையன்புவிடமிருந்து வரவில்லை. வழக்குகளை திரும்பப் பெறுகிற அம்சத்தில், குறிப்பாக சசிகுமார்மீதான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளதால் ஒன்றும் செய்ய இயலாது என்கிற ரீதியில் பதில் இருந்தது. கல்லூரியைத் திறப்பதிலும் அவருக்கு உடன்பாடில்லை. கல்லூரியைத் திறந்தால் மீண்டும் மாணவர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் என்கிற அச்சம் அவருக்கிருந்தது. ஆனால் நிலைமை அதுவல்ல. மாணவர்கள் கல்லூரியைத் திறக்கவே விரும்பினார்கள். கல்லூரி மூடிக்கிடப்பதை எந்த மாணவர்களும் விரும்பமாட்டார்கள். அப்படியே வேலை நிறுத்தம் செய்தால்தான் என்ன, கல்லூரியை மறுபடி சிறிது காலம் மூடினால் போச்சு. இப்படியான பிரச்சினைக்கெல்லாம் மூன்று மாத காலமெல்லாம் கல்லூரியை மூடி வைத்திருப்பதெல்லாம் ரொம்ப அநியாயம். என்னுடய ஆசிரிய அனுபவத்தில் இப்படி நான் அறிந்ததில்லை. கல்லூரியைப் பத்து நாளைக்குள் திறந்திருந்தால் ஒன்றும் நடந்திருக்கப் போவதில்லை. நிலைமை சுமுகமாகியிருந்திருக்கும். சசிக்குமாரை இப்படி அநியயமாக இழந்திருக்கமாட்டோம்.


இறையன்பு இதைப் புரிந்துகொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க ஒரு அதிகாரியாக (bureaucrat), அதிகாரத்துவ அணுகல் முறையுடனேயே இப்பிரச்சினையை அணுகினார். கல்லூரி முதல்வர் பொறுப்பில் ஆசிரியரல்லாத ஒருவரை நியமித்தார். (இதுவும் நான் அறிந்திராத ஒன்று.) கல்லூரியை இறுக மூடிவிட்டு ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்துவிட்டு ஒய்ந்தார். போராட்டத்தினூடாக மாணவர்கள் தன்னைப் பற்றிப் பேசிய சில பேச்சுக்களை ரொம்பவும் ‘பர்சனலாக’ எடுத்துக்கொண்டு கோபப்பட்டார். (மாணவர்கள் அவரது சாதி குறித்து தவறாக ஒரு அவதூறை சொன்னது உண்மைதான்.) போராட்டங்களின்போது ஒருமையில் பேசுவது, ஒழியச் சாபமிடுவது. கொடும்பாவி கொளுத்துவது எல்லாம் வழக்கம்தான். முதலமைச்சர், பிரதமர் யாரும் இதற்குத் தப்புவதில்லை. போராட்டம் முடிந்தால் எல்லாம் மறந்துவிடும். ஒழியச் சொன்னவர்களுக்கே சால்வை போர்த்தி நன்றி தெரிவிப்பதும் உண்டு. அரசியல்வாதிகளால் இதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதிகாரி ஒருவரால் இதைப் புரிந்து கொள்ள இயலாமற் போனதில் வியப்பில்லை.


கல்லூரிக்குள் நடக்கிற பிரச்சினைகளை குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சினையைப் போல் கையாளவேண்டும். பிள்ளைகள் தவறு செய்யும்போது ஒரு தந்தை எப்படி அணுகுவாரோ அப்படி நிர்வாகம் அணுக வேண்டும். எந்தத் தந்தையாவது கண்ணாடியை உடைத்ததற்காகப் போலீசில் புகார் கொடுப்பாரா? கண்ணாடியின் விலை பத்தாயிரம் ரூபாய் இருக்குமா? ஆனால் இன்று கொடுத்த விலையின் மதிப்பு…..? இரங்கல் கூட்டத்தில் சசிகுமாரின் அன்னை அன்று அழுத காட்சி இன்னும் நெஞ்சைப் பதற வைக்கிறது. அந்தத் தாயின் கண்ணீருக்கு அதிகாரம் என்ன பதிலைச் சொல்லப்போகிறது? நாம்தான் என்ன பதிலைச் சொல்லப்போகிறோம்?


ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். சசிகுமாரின் மரணத்தில் ஏதோ ஒரு வகையில் நமக்கும் ஒரு பங்கிருக்கத்தான் செய்கிறது. அவரின் பதட்டம், கலைஞனுக்கெ உரித்தான அங்கீகார ஏக்கம், அவருக்கிருந்த குற்ற உணர்வு இவற்றை நாம் கவனம் கொண்டிருக்க வேண்டும். செம்மொழி மாநாடு நெருங்க நெருங்க தனது கனவு நனவாகப் போவதில்லை என்கிற உண்மை அவருக்கு உறைக்கத் தொடங்கியது. அந்த நேரத்தில் நாம் அவரைத் தனியே விட்டிருக்கக் கூடாது. போராட்டம் என்பது வெறுமனே போராடுவது மட்டுமல்ல. ’சாலிடாரிட்டி’ அதன் பிரிக்க இயலாத அங்கம். போராட்டத்தினூடாகப் பாதிக்கப்பட்டவர்கள் தாம் தனிமைப்படவில்லை என்பதை உணர்கிறார்கள். இந்த வாய்ப்பை ஏதோ ஒரு வகையில் சசிகுமாருக்கு நாம் அளிக்கத் தவறினோமா?


நுண் கலைக் கல்லூரிகள் இரண்டும் ஆணி வேர் முதல் உச்சங் கொழுந்து வரை அழுகிக் கிடக்கிறது. 150 ஆண்டு காலப் பழமை மிகு இந் நிறுவனம் ஒழுங்கு செய்யப்பட்டுத் இந்திய அளவிலுள்ள இதர நுண்கலைக் கல்வி நிறுவனங்களைப் போல தரம் உயர்த்தப்பட வேண்டும். எங்கள் அறிக்கையில் இந்த நோக்கிலும் சில பரிந்துரைகளைச் செய்துள்ளோம்.


சசிகுமாரின் நினைவாக, அவரது இறுதி லட்சியமாக இருந்த திருக்குறளைச் சுடுமண் சிற்பங்களக வடிக்கும் திட்டத்தை நிறைவேற்ற முனைவோம்

நன்றி:

வியாழன், ஜூலை 01, 2010

சென்னையைப் பிச்சைக்காரரகள் இல்லாத நகரமாக்கும் முயற்சி - உண்மை அறியும் குழு அறிக்கை

சென்னையைப் பிச்சைக்காரரகள் இல்லாத

நகரமாக்கும் முயற்சி

- உண்மை அறியும் குழு அறிக்கை


07. ஜூன் 2010
சென்னை


சென்னைநகர மேயர் வணக்கத்துக்குரிய எம்.சுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களாக சென்னையைப் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்கும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிவருவதை அறிவோம். (இந்து நாளிதழ், மே 5, மே 17, மே 21, மே 24, 2010). 179 பேர்கள் இவ்வாறு மே 24 வரை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கும் முதியோர் வாழ்வு இல்லங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பிச்சைக்காரர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்தும் இரண்டாம் கட்ட நடவடிக்கை ஜூன் 6 முதல் தொடங்க உள்ளதாகவும் இதில் மாநகராட்சி ஊழியர்களுடன் தொண்டு நிறுவனங்களும் பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 18 தொண்டு நிறுவனங்களுடன் இது தொடர்பாகப் பேச்சு வார்த்தைகளையும் நடத்தியுள்ளார். தண்டையார்பேட்டையிலுள்ள தொற்றுநொய் தடுப்பு மருத்துவமனையில் (காலரா ஹாஸ்பிடல்) மே 4 அன்று நடைபெற்ற விழா ஒன்றில் மாநகராட்சி ஊழியர்கள் சென்னை நகரத் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கும் 420 மனநலமற்றவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களில் 152 பேர்கள் அன்று வரை பிடித்து வரப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தெருக்களில் அலைந்து கொண்டிருக்கும் ‘பிச்சைக்காரர்களை’ வலுக்கட்டாயமாகப் பிடித்துச சென்று மனநல காப்பகத்தில் அடைப்பதில் விதிமுறைகள் மீறப்படுவதாகவும் இவர்களில் பலா; ஆரோக்கியமான மனநிலையுடன் உதிரித்தொழில்கள் புரிந்து கொண்டிருந்த வீடற்றவர்கள் மற்றும் பிற ஊர்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் இடம் பெயர்ந்து வந்த தொழிலாளிகள் எனவும் மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தகவல்கள் வந்ததை ஒட்டி இது குறித்த உண்மைகள் அறிய உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது.


இதில் பங்கு பெற்றவர்கள்:


பேரா.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்

மதுமித்தா தத்தா, வெட்டிவேர் கூட்டமைப்பு

பேரா.மு.திருமாவளவன் முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்

சந்திரிகா, மென்பொருள் பொறியாளர்.


இக்குழுவினர் சென்ற மே 5, மே 18, மே 22 ஆகிய நாட்களில் தண்டையார்பேட்டை தொற்றுநொய் மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம, மேல்பாக்கம் பிச்சைக்காரர்கள் அரசு பாதுகாப்பு முகாம் ஆகியவற்றிற்குச் சென்று உரிய அதிகாரிகளையும வாய்ப்புள்ள இடங்களில் பிடித்துவரப்பட்டிருந்த ‘பிச்சைக்காரர்களையும்’ சந்தித்துப் பேசியது. இது தொடர்பாக வேறு சிலரிடமும் கருத்துக்களைக் கேட்டு தொகுத்துக் கொண்டது.


எங்கள் ஆய்வில் கண்டறிந்த முக்கிய உண்மைகள்


• சென்னை மாநகராட்சியிலுள்ள 10 மண்டலங்களிலுள்ள சுகாதார ஆய்வாளர்களைப் பயன்படுத்தி இவ்வாறு தெருக்களில் அலைந்து கொண்டுள்ளவர்கள், உறங்குபவர்கள் பிடித்துவரப்பட்டுள்ளனர்.. பார்ப்பதற்கு அழுக்காகவும நிரந்தரத் தொழில் மற்றும் வாழ்விடங்கள் அற்றவர்களாகவும் தோன்றுகிறவர்கள் இவ்வாறு கட்டாயமாகப் பிடித்து வரப்பட்டுள்ளனா. வேறு எந்த விசாரணைகளோ நிருபணங்களோ செய்யப்படாமலேயே இழுத்து வரப்பட்டுள்ளனர்.. இந்த முயற்சியில் மனநல மருத்துவ நிபுணர்களோ காவல்துறையினரோ பயன்படுத்தப்படவில்லை. மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.


• பிடித்து வரப்பட்ட முறை மிகவும் மனிதாபிமானம் அற்றதாக உள்ளது. திடீரென வாகனத்தை அருகே கொண்டுவந்து நிறுத்தி, ‘உனக்கு முடிவெட்டி விடுகிறோம்’ என்று சொல்லிக் கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியுள்ளனர். ‘நீங்கள் ஏற மறுத்திருக்கலாமே?’ என நாங்கள் வினவியபோது ‘‘எப்படி முடியும்? எங்களைப் பேசுவதற்கே விடவில்லை. நான்கைந்துபேர்கள் சூழ்ந்துகொண்டு கட்டாயமாக வேனில் ஏற்றினார்கள்’’ என்று கூறினார்கள்.


• பிடித்து வரப்பட்டவர்களைத் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து, குளிப்பாட்டி, மொட்டையடித்து, புதிய ஆடைகளை அணிவித்து, வார்டுகளில் பூட்டி வைத்துள்ளனர். உறவினர்கள் யாரும் வந்து அடையாள அட்டை முதலான ஆதாரங்களைக் காட்டினால் அவர்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு இதுவரை 11 பேர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மே 24 அன்று மேயர் கூறியுள்ளார். மே 4 அன்று நடைபெற்ற விழாவில் 12 பேர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மேயர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அன்றுவரை (மே4) 20 பேர்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிலர் உடல்நலமில்லாததால் சென்னைப் பொதுமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் 93 பேர்கள் கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.


• எமக்குக் கிடைத்த தகவல்களின்படி இதுவரை இவ்வாறு கீழ்ப்பாக்கம் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் வருமாறு.


மே 4 - 78 ஆண்கள், 9 பெண்கள்

மே 5 - 10 ஆண்கள், 1 பெண்

மே 11 - 0 ஆண்கள், 1 பெண்

மே 20 - 9 ஆண்கள், 5 பெண்கள்

மொத்தம் - 97 ஆண்கள், 16 பெண்கள்

=113 பேர்


இவர்களில் மே 4ல் ஒரு ஆணும் மே 5 ல் ஒரு பெண்ணும் உடல்நலமின்றி பொதுமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மே 24 வரை மொத்தம் 179 பேர் மனநலக்காப்பகம் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மேயர் மே 24 அன்று குறிப்பிட்டுள்ளார். ஜனசக்தி (மே 25) இதழில் வந்துள்ள செய்தியின்படி இதில் 31 பேர் தொண்டுநிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட மே 5 (இந்து) அறிக்கையின்படி முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் 20. அதேபோல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு அறிக்கையில் 3 எனவும் இந்த அறிக்கையில் 5 எனவும் மேயர் கூறியுள்ளார். இப்படி மேயரது அறிக்கையில் பல முரண்கள் உள்ளது கவலையளிக்கிறது.


மனநலக் காப்பகத்தில் ஒருவரை வைப்பதற்கான சட்டநெறிமுறைகள்

(இந்தியமனநோய் மருத்துவ சட்டநலவிதிகள்) வருமாறு :



ஒரு மனநோயாளி தாமாகவே காப்பகத்தில் சேர்வதற்கு முன்வந்தால் 24 மணிநேரத்திற்குள் மருத்துவ அதிகாரி ஒருவரால் அவர் சோதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பது தவிர்க்க இயலாதது என பரிந்துரைக்கப்பட வேண்டும். ஒரு நோயாளியைக் கட்டாயமாக 90 நாட்கள் வரை மருத்துவமனையில் அடைத்து வைக்கலாம். ஆனால் அவர் மனநோயாளி என்பதை இரு மருத்துவநிபுணர்கள் உறுதிசெய்ய வேண்டும்.


உறவினர்கள் ஒப்புதல் இல்லாமல் 6 மாதம் வரை ஒருவரைக் கட்டாயமாக மருத்துவமனையில் வைக்க வேண்டுமென்றால் மாஜிஸ்ட்ரேட் உத்தரவு (reception order) பெறப்படவேண்டும்.


மனநோயாளி என காவல்துறை யாரையும் சந்தேகப்படுமானால் அவரைப் பிடித்து 24 மணிநேரத்துக்குள் மாஜிஸ்டிரேட் முன் கொண்டுசெல்லவேண்டும். அவர் விசாரித்து, தேவையானால் மருத்துவ நிபுணர்களின் கருத்தைக் கேட்டு மருத்துவமனையில் அடைக்க உத்தரவிடலாம். மூன்றாம் நபர் யாரும் ஒரு மனநோயாளி பற்றி தெரிவிக்க வேண்டுமெனில் மாஜிஸ்ட்ரேட்டிடம் புகார் சொல்ல மட்டுமே முடியும்.


மனநோய் வார்டில் 10 நாட்கள் வரை வைத்திருந்து, அவர் உண்மையிலேயே மனநோய் உள்ளவர்தானா என்று கண்காணிக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிடலாம்.


மாஜிஸ்ட்ரேட்டின் இந்த அதிகாரத்தைக் காவல்துறை ஆணையர் எடுத்துச் செயல்படுத்த அனுமதியுண்டு.


நகர மேயர் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் மேற்கண்ட விதிமுறைகள் ஏதும் கடைப்பிடிக்கப்படவில்லை. கீழ்ப்பாக்கம் மனநலக்காப்பகத்தில் கொண்டுவரப்பட்ட 113 பேர்களில் மே 20 அன்று கொண்டுவரப்பட்ட 14 பேர்களுக்கு மட்டும் மாஜிஸ்டிரேட் உத்தரவு பெறப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அந்த ஆணை பெறப்படவில்லை.


மனநிலை சரியில்லாதவர்கள் என சந்தேகப்படுபவர்களைக் காவல்துறையிடம் அடையாளம் காட்டி மாஜிஸ்டிரேட் முன் அவர்களை நிறுத்தாமல், மாநகராட்சி ஊழியர்களே அவர்களைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அடைத்துப் பூட்டியுள்ளனர்


மாஜிஸ்டிரேட் ஆணையில்லாமல் எப்படி இவர்களைக் காப்பகத்தில் அனுமதித்தீர்கள் என காப்பகம் மனநல நிறுவன இயக்குனர் டாக்டர்.ஆர்.சத்தியநாதன் அவர்களை வினவியபோது, இந்திய மனநல மருத்துவச் சட்டத்தின் சிறப்புப் பிரிவுகளின் (Special Provisions) அடிப்படையில் அப்படி செய்துள்ளதாக பதிலளித்தார். அப்படி செய்துகொள்வதற்கு இரு மருத்துவ நிபுணர்கள் அவர்களைப் பரிசோதித்துச் சான்று வழங்கியிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யப்படவில்லை. நாங்கள் கேள்விப்பட்டவரை தண்டைடார்பேட்டை மருத்துவமனைக்கு சில அரசு மனநோய் நிபுணர்கள் மற்றும் தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் சுமார் 20.30 பேர்கள் மட்டுமே மனநோய் உள்ளவர்கள் எனக் கூறியதாகவும் அறிகிறோம்.


மனநோய்க் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு சுமார் இருவாரங்களுக்குப் பின்னர், அவர்களிடம் தன் விருப்பத்தின் அடிப்படையில் தானாகவே முன்வந்து காப்பகத்தில் சேர்ந்துகொண்டதாக கைநாட்டு பெறப்பட்டுள்ளது. இது மனநோய்ச்சட்டம் மட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளையே மீறுவது.


மனநோய்க்காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 முதல் 40 சதம் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதைக் கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பக இயக்குனர் டாக்டர்.சத்தியநாதன் அவர்களே ஏற்றுக்கொண்டுள்ளார். அவர்களில் பலர் பேசுகிற உள்ளூர் மொழிகள் தெரிந்த மருத்துவ நிபுணர்கள் யாரும் இங்கே கிடையாது. மொழி தெரியாத நிபுணர்கள் ஒருவர் மனநோயாளியா, இல்லையா எனக் கண்டறிய இயலாது. இது குறித்தெல்லாம் சத்தியநாதன் அவர்களைக் கேட்டபோது,. ‘‘என்ன செய்வது? கார்ப்பரேஷன் அதிகாரிகள் கொண்டுவந்து சேர்க்கச் சொல்கிறாகள். ஒரு மருத்துவர் என்கிற முறையில் நான் எப்படி சிகிச்சை அளிக்க இயலாது எனச் சொல்ல முடியும்?’’ என்றார். இது மிகவும் பொறுப்பற்ற பதிலாகத் தோன்றாது. மனநலக் காப்பகம் என்பது கிட்டத்தட்ட சிறைச்சாலை போல. விருப்பமில்லாத ஒருவரை மனநோயில்லாதபோதும் இங்கே அடைத்துவைத்தால், அவருக்கு மனநோய் ஏற்படவும் கூடும். இதுகுறித்தெல்லாம் பிச்சைக்காரர் தொல்லை இல்லாத சென்னையை உருவாக்க விரும்புபவர்களுக்குக் கவலையில்லை.


பிடித்து வரப்பட்டவர்களில் சிலரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அவர்களில் பலர் ஆரோக்கியமானவர்கள். உதிரித்தொழில் புரிந்துகொண்டிருந்த இவர்கள் கட்டாயமாகப் பிடித்துவரப்பட்டுள்ளனர்.


சில எடுத்துக்காட்டுகள் :



1. பாட்சா (வயது 50 இருக்கலாம்) - பாரத் தியேட்டர் ரவுண்டானா அருகில் பிடித்துள்ளனர். இரும்பு பொறுக்குவது (scrap picker) தன் வேலை என்றார்.

2. கந்தவேல் (25) - புதுப்பாளையம் போர் வண்டியில் வேலை செய்வதாகக் கூறினார்.

3. கன்னையன் - செங்கல்பட்டைச் சேர்ந்தவர். சென்னையில் பேப்பர் போடும் தொழில் செய்தவர், வீடற்றவர்.

4. மதனகோபால், சீர்காழி - கட்டிடத் தொழிலாளி/வீடற்றவர் (ஒரு சிகரெட் பெட்டி அட்டையில் தன் முகவரியை வைத்துக்கொண்டு ’எப்படியாவது காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சினார்)

5. நாகராஜன், பரமக்குடி - கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு தேநீர்க்கடையில் சரக்கு மாஸ்டராக இருந்ததாகச் சொல்கிறார்.

6. லலிதா, - பூ விற்பவர், பெரம்பூர் வீட்டு முகவரி உள்ளது.


மொழி தெரியாத இடம்பெயரும் தொழிலாளர்களிடம் எம்மால் உரையாட முடியவில்லை.


பிடித்து வரப்பட்டு உடல்நலமில்லாதவர்கள் எனக் கண்டறியப்பட்டபின் சென்னை பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பதை மேயர் தனது பிந்தைய பேட்டிகளில் குறிப்பிடவில்லை. இவர்களில் இருவர் இறந்துபோனார்கள் என அறிகிறோம். ‘பெயர் தெரியவில்லை’ எனப் பதிவு செய்து இவர்கள் கதை முடிக்கப்பட்டுள்ளது.


எமக்குக் கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி மே 29 அன்று நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் மாஜிஸ்ட்ரேட் ஆணையுடன் கீழ்ப்பாக்கம் மனநோய்க் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மனநலம் குன்றியவர்கள் (mentally retarted) எனவும் மனநோயாளிகளெனக் (mentally ill) கூற இயலாது எனவும் அறிகிறோம். விதிகளின்படி மனநோயாளிகளை மட்டுமே காப்பகத்தில் சேர்க்க முடியும். சமீபத்தில் மனநோய்க் காப்பகத்தைப் பார்வையிட்ட பரிசீலனைக்குழுவைச் (monthly review committee) சேர்ந்த மாஜிஸ்டிரேட் மனநலம் குன்றியவர்கள் உத்தரவு (reception order) பெற்றிருந்தாலும் எப்படி இங்கு அனுமதிக்கப்படலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பார்வைகள்

பிச்சைக்காரர்கள் இல்லாத சென்னையை உருவாக்குவதன்

சமூகப்பொருளாதாரப் பின்னணி



உலகமயச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக உலகத்தரமான நகரங்களை உருவாக்குதல் அமைகிறது. பளபளக்கும் நால்வழிச்சாலைகள் இணைக்கப்பட்ட நவீன நகரமாகவும் வெளிநாட்டு மூலதனம் குவியக்கூடிய மய்யமாகவும் மருத்துவச்சுற்றுலாவுக்கும் சிறப்புப்பொருளாதார மண்டலங்களுக்கும் தகுதியுடையவையாக நகரங்களை உருவாக்குவது ஆட்சியாளர்களின் நோக்கமாக உள்ளது. அவர்களின் கண்களுக்குத் தெருவில் அலைகிற பிச்சைக்காரர்களும் நகரின் மத்தியில் துருத்தி நிற்கும் குடிசைகளும் பெரிய உறுத்தல்களாக உள்ளன. காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஒட்டி டெல்லியில் பிச்சைக்காரர்கள் அகற்றப்படுகின்றனர். தமிழகத்துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத்திட்டங்களில் ஒன்றான சிங்காரச்சென்னையை உருவாக்கும் நோக்கில் இன்று சென்னை நகரங்களிலுள்ள குடிசைகள் அகற்றப்பட்டு லட்சக்கணக்கில் குடிசைவாழ் மக்கள் நகரத்திற்கு அப்பால் கடத்தப்பட்டுள்ளனர். சென்னை வளர்ச்சித்திட்டம், கூவம் தூய்மைத்திட்டம், அடையாறு பூங்காத்திட்டம் என்ற பெயர்களில் இவை நடத்தப்படுகின்றன. துணைமுதல்வருக்கு அணுக்கமான மாநகராட்சி மேயர் இதன் அடுத்தகட்டமாக இப்போது சென்னையை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாகச் சுத்திகரிக்க முயல்கிறார். இந்த அடிப்படையில் வீடற்ற உதிரித்தொழிலாளர்கள், மனநோய் பிறழ்ந்தவர்கள் என முத்திரை குத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பிடித்து வரப்படுகிறார்கள். நகரங்களில் திரியும் பிச்சைக்காரர்களை வேண்டாத இடையூறுகளாகக் கருதும் நமது மத்தியதர வர்க்க மனநிலை மேயரின் இந்த தூய்மையாக்க நடவடிக்கையுடன் பொருந்திப் போய்விடுகிறது. எனினும் பிச்சைக்காரர்களை ஒழித்துக்கட்டப்பட வேண்டியவர்களாக பொதுமக்கள் கருதவில்லை என்பதற்கு நமது கோயில்கள் மற்றும் புனிதத்தலங்களில் குவிந்துள்ள பிச்சைக்காரர்களே சான்று.


பஞ்சம், வறட்சி, ஆறுகள் வற்றிப்போதல், அரசின் தவறான பொருளாதாரத் திட்டங்களால் உருவாகும் வேலையின்மை ஆகியவற்றின் விளைவாகத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் வருகிற மக்கள் பல்வேறு உதிரித்தொழிலாளர்களாக சென்னை மாநகரில் வாழ்வைத் தொடங்குகின்றனர். ஒண்ட குடிசை இல்லாத இவர்கள் பிளாட்பாரம், கோயம்பேடு மார்க்கெட், பேருந்துநிலையம் முதலான இடங்களில் இரவுகளைக் கழிக்கின்றனர். பிற வெளிமாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் தொழிலாளர்கள் (migrant workers) உள்ளூர் முதலாளிகளால் பெரியளவில் சுரண்டப்படுகின்றனர். தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைகளும் இவர்களுக்குக் கிடையாது. எத்தகைய பாதுகாப்பும் அற்றவர்களாகவும் கடுமையாகச் சுரண்டப்படுபவர்களாகவும் இவர்கள் உள்ளனர். புதிய சட்டமன்றம் கட்டும் பணியிலும் இவ்வாறு ஏராளமான பிறமாநிலத் தொழிலாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஓசூர் போன்ற நகரங்களில் உள்ள பாதுகாப்பற்ற தொழிற்சாலைகளில் பணியாற்றும் இவர்களில் பலர் விபத்துகளில் இறக்கின்றனர், பலர் ஊனமாகின்றனர், பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் இடம்பெயர்ந்து வருகிற இம்மக்களைப் பற்றி அரசோ மாநகராட்சியோ வளர்ச்சித்திட்ட இயக்குனர்களோ கவலைப்படுவதில்லை. மாறாக வளர்ச்சித்திட்டங்களுக்கும் அகக்கட்டுமான வளர்ச்சிகளுக்கும் (infrastructural developments) தடையானவர்களாகவே பிச்சைக்காரர்கள், வீடற்றவர்கள், இடம்பெயர் தொழிலாளர்கள், குடிசைவாழ்மக்கள் முதலானவர்கள் கருதப்படுகின்றனர். இதன் ஓரம்சம் சென்னை மாநகராட்சித் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள பிச்சைக்காரர்கள் ஒழிப்புத்திட்டம்.


காலனியக் காலச்சட்டங்களின் இன்றைய பொருத்தமின்மை
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வேலையற்ற, வீடற்ற ஏழை, எளிய மக்களும் உதிரித்தொழிலாளர்களும் சட்டத்தின் உதவியோடு குற்றவாளிகள் ஆக்கப்படுகின்றனர். ஏழ்மை இதன்மூலம் குற்றமாக்கப்படுகிறது. சட்டம் இதற்குத் துணைபோகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பிச்சைக்காரர்கள் சட்டம் (1945) அப்படியே சுதந்திர இந்தியாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது (தமிழ்நாடு பிச்சை எடுப்பு தடுப்புச்சட்டம் 1954). மேல்பாக்கம் அரசு பாதுகாப்புமுகாமிற்கு நாங்கள் சென்றபோது அங்கு 105 பேர் சிறைவைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் மேற்குறித்த சட்டப்பிரிவுகளின்கீழ் பிச்சை எடுத்த குற்றத்திற்காக 1 முதல் 3 ஆண்டுகள் வரை மதுரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய உருப்படியான தொழிற்பயிற்சிகள் எதுவும் இந்த ‘காப்பக முகாம்களில்‘ அளிக்கப்படுவதில்லை. இன்றைய பொருளாதாரச் சூழலுக்குச் சற்றும் பொருத்தமற்ற பானை வளைதல், தச்சுத்தொழில், தையல் தொழில் முதலியவை இங்கு பயிற்சி அளிக்கப்படுவதாக அறிந்தோம். சிறைக்கைதிகளைப் போலவே இவர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். செய்யும் வேலைகளுக்குப் போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை.


முடிவுரை மற்றும் கோரிக்கைகள்


பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்து வாழ வேண்டும் என்பதோ மனநோயாளிகள் சிகிச்சை இன்றி தெருக்களில் அலைய வேண்டும் என்பதோ எங்கள் விருப்பமில்லை. ஆனால் சென்னையை அழகுபடுத்தும் நோக்கத்திற்காக அவசர கோலமாக இவர்களைச் சற்றும் மனிதாபமின்றி பிடித்துச் செல்வதும் ஆரோக்கியமான உதிரித்தொழிலாளர்களை மனநோயாளிகள் என முத்திரை குத்தி மனநோய்க்காப்பகத்தில் அடைப்பதையும் இதிலுள்ள விதிமீறல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். மற்றும் இது மத்தியதர வர்க்கத்தின் கனவான சிங்காரச்சென்னை என்ற பெயரில் ஏழை மக்களை அப்புறப்படுத்தும் திட்டத்தின் ஓர் அங்கம் என்று நாங்கள் கருதுகிறோம். ஊடகங்களும் சென்னைமாநகராட்சி மற்றும் மேயரின் நடவடிக்கைகளின் நோக்கங்களை ஆராயாமல் இதுவரை அறிக்கைகளை வெளியிட்டுவந்துள்ளன.


1. அனாதைகளாக இருந்தபோதிலும் வீடுகள் இல்லாதபோதிலும் போதிய உணவு கிடைக்காதபோதிலும் மனிதர்கள் அடைத்து வைக்கப்படுவதை விரும்புவதில்லை. இந்த அடிப்படை உணர்வை அரசு புரிந்துகொள்ள வேண்டும். காலனிய ஆட்சியில் உருவாக்கப்பட்ட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சட்டம், பிச்சைத்தொழில் தடுப்புச்சட்டம் முதலியன நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்குத் தகுந்தவாறு திருத்தப்பட்டு மேலும் மனிதநேயமிக்கதாக மாற்றப்பட வேண்டும்.


2. சென்னை மேயரின் அறிக்கைகள் அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இது பிச்சை எடுப்பதை ஒழிப்பதற்கான திட்டமா, இல்லை., மனநோயாளிகளை அகற்றும் திட்டமா என்பது விளங்கவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டுக் குழப்புவதுபோலத் தோன்றுகிறது. சென்னைமாநகராட்சி இப்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், அதன் நோக்கம், எதிர்காலத்திட்டம், இதுவரை பிடிக்கப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள், அவர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். அதுவரை ஜூன் 6 அன்று தொடங்கியுள்ள இரண்டாம்கட்ட நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.


3. மனநோய்க்காப்பகத்தில் அடைக்கப்பட்டவர்களில் பலர் மனநோய் இல்லாதவர்கள் என அய்யம் உள்ளதால் உடனடியாக இவர்கள் அனைவரையும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மருத்துவநிபுணர் குழு ஒன்றால் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.


4. சென்னை நகரை அழகுபடுத்தும் திட்டம் என்பது உண்மையில் சென்னையில் உள்ள எல்லா மக்களுக்கும் பயன்படுகிற, எல்லா மக்களையும் மேம்படுத்துகிற திட்டமாக அமைய வேண்டும். வீடற்றவர்கள் குறித்த திட்ட ஆணையத்தின் ஆய்வை இணையதளத்தில் பரிசீலித்தோமானால், வீடற்றவர்கள் மற்றும் இடம் பெயரும் தொழிலாளர்களின் நலன் குறித்து அரசு கவலைகொள்ளாதது விளங்குகிறது. இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் வீடற்றவர்களின் பிரச்சினை மிக முக்கியமான ஒன்று. சமீபத்தில் நடைபெற்ற தாய்லாந்து நாட்டு மக்கள் எழுச்சியில் இடம்பெயர் தொழிலாளர்கள் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் இவர்கள் இரவுகளில் தங்கிச்செல்ல தற்காலிக இருப்பிடங்கள் (temporary shelters) அமைக்கப்பட வேண்டும்.


5. தொண்டுநிறுவனங்களுடன் மாநகராட்சி ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாகத் தெரிகிறது. தொண்டு நிறுவனங்கள் நடத்துகிற முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள், மறுவாழ்வுத்திட்டங்கள் ஆகியவற்றை மாகராட்சி பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிறுவனங்கள் எத்தகைய நோக்கங்கள், விதிமுறைகள் ஆகியவற்றுடன் செயல்படுகின்றன என்பது விளங்கவில்லை. தத்தெடுப்பது (adoption) போன்ற செயல்பாடுகளில் இதுபோன்ற நிறுவனங்கள் பல செய்துள்ள ஊழல்களை நாம் அறிவோம். ‘பான்யான்‘ என்கிற அமைப்பு சில ஆண்டுகள் முன்பு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் எதிர்த்ததும் அது தொடர்பான சர்ச்சைகளும் நினைவுகூரத்தக்கன. நிலவும் மனநோய் மருத்துவச் சட்டத்தின்படி மனநோயாளிகளை மூன்றாவது நபர்கள் கையாள்வதற்கு வழியில்லை. அவர்கள் காவல்துறையிடம் புகார்கள் சொல்வதற்கு மட்டுமே அனுமதி உண்டு. எனவே எத்தகைய அடிப்படையில் தொண்டுநிறுவனங்கள் இத்திட்டத்தில் செயல்படப் போகின்றன என்பது வெளிப்படையாக்கப்பட வேண்டும்.

நன்றி :lumpini.in