சனி, ஜனவரி 31, 2015

சுழலியல் இதழ் அறிமுகம்: காடு – உயிரினங்களின் தடங்களைத்தேடி… - சுழலியல் இருமாத இதழ்



சுழலியல் இதழ் அறிமுகம்: காடு – உயிரினங்களின் தடங்களைத்தேடி…
- சுழலியல் இருமாத இதழ்
          -    மு.சிவகுருநாதன்



 

 தமிழில் குழந்தை இலக்கியத்தைப் போலவே சுழலியலுக்கும் களங்கள் நிறைய இருந்தும் வரவுகள் மிகக் குறைவான அளவே உள்ளன. அண்மையில் வெளியாகும் ஒன்றிரண்டு முயற்சிகள் அந்த இடைவெளியை நிரப்புகின்றன.

   அந்தவகையில் காடு சுழலியல் இதழாக முழுவதும் வண்ணத்தில் மிக அழகான வடிவமைப்பில் நம் கைகளில் தவழ்வது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. ‘தடாகம்’ வெளியீடாக வந்திருக்கும் ‘காடு’ தமிழ் சூழலியலாளர்கள் பலரது பங்களிப்பில் உருவாகியுள்ளது. 

   எறும்புகள் – ஆறுகால் மனிதர்கள் என்ற நக்கீரனின் தொடர் கட்டுறை எறும்பினம் அழிந்த வரலாற்றைப் பேசுகிறது. எறும்புகளைக் கொல்வதற்கு நாம் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் இறுதியில் நம்மையும் பாதிக்கிறது என்பதையும் கட்டுரை விளக்குகிறது.

  சூழலியல் கலைச்சொற்கள் ஒவ்வொரு இதழிலிலும் பட்டியலிடப் படுகின்றன. ‘தமிழகப் பழங்குடி மக்கள்’ பற்றி ‘வாழும் மூதாதையர்கள்’ என்கிற கட்டுரைத் தொடரை அ. பகத்சிங் எழுதியுள்ளார். முதல் இதழில் அறிமுகமும் அடுத்த இதழில் நீலகிரி தோடர்கள் பற்றியும் விவரிக்கிறது.

   முதல் இதழில் புதுச்சேரியில் காண்டல் திட்டுக்களை (சதுப்பு நில / அலையாத்திக் காடுகள்) உருவாக்கி அவற்றைப் பாதுகாத்துப் பராமரித்து வரும் புதுவை செல்வமணிகண்டனுடனான நேர்காணல் வந்திருக்கிறது. இரண்டாம் இதழில் காட்டுயிர் ஆவணப்பட இயக்குனர், இயற்கையிலாளர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்ட டேவிட் அட்டன்பரோவின் நேர்காணல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. அறிவியல் மனித நாகரீகத்திற்கு அடிப்படையாக உள்ளதை இவர் தெளிவுபடுத்துகிறார்.

  முதல் இதழில் மரக்காணம் முதல் செஞ்சி வரையுள்ள 700 ச.கி.மீ. பரப்பளவில் விரிந்திருக்கும் கழிவெளி – காக்கப்படவேண்டிய பூமி என்னும் ப. அருண்குமார் கட்டுரையில் அங்குள்ள உள்ளான், உப்புக்கொத்தி, கூழைக்கிடா, வக்கா, போன்ற பறவையினங்கள் மற்றும் அதன் சூழலைப் படபிடித்துக் காட்டுகிறது. அடுத்த தழில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் ஆகிய பகுதிகளில் நசிந்துவரும் மீன்பிடித் தொழில் பற்றி ‘காணமல் போகும் கடல் வளம்’ கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.

  சுறா, கானமயில், யானை, கொம்பன், பாறுக்கழுகுகள், ரயில் பூச்சிகள், ஓங்குமால் வரையாடுகள், பச்சோந்து, பிளாடிபஸ், காட்டுக் கீச்சான் போன்ற பல்வேறு உயிரினங்கள் குறித்த தகவல்களால் காடு நிரம்பி வழிகிறது. 

   இதழ் முழுவதும் அழகிய வண்ணத்தில் நல்ல தாளில் அச்சிட்டு வெளியிடுவது சிறப்பு. மஞ்சள் பத்தரிக்கைகளை வாங்கி அவர்களைக் கொழிக்கச் செய்யும் தமிழ்நாட்டு நூலகங்களும் பள்ளிகளும் இம்மாதிரியான இதழ்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினால் இதழ் நின்று போகாமல் தொடர்ந்து வெளிவர உதவும். அரசு நூலகங்கள் தனிச்சுற்றுக்கான இதழை வாங்கும் எனச் சொல்லமுடியவில்லை. பள்ளிகளும் ஆசிரியர்களும் இம்மாதிரியான இதழ்களை வாங்கி ஊக்கப்படுத்துவது நலமாக இருக்கும்.

பதிப்பாசிரியர்: பா. அமுதரசன்
ஆசிரியர்: ஏ. சண்முகானந்தம்
தனி இதழ் : ரூ 60  ஆண்டுக்கு: ரூ 300
இணையம்/மின்னஞ்சல்:
 thadagam.com/kaadu
 kaadu@thadagam.com
வெளியீடு:
தடாகம் / பனுவல் புத்தக விற்பனை நிலையம்,
112, திருவள்ளுவர் சாலை.
திருவான்மியூர்,
சென்னை – 600041.
044-43100442
8939967179

வியாழன், ஜனவரி 29, 2015

சிற்றிதழ் அறிமுகம்: திணை காலாண்டிதழ்



சிற்றிதழ் அறிமுகம்: திணை காலாண்டிதழ்
                      
                       - மு.சிவகுருநாதன்



      கலை இலக்கியப் பெருமன்ற இதழாக குமரி மாவட்டத்திலிருந்து வெளிவந்துகொண்டிருந்த திணை காலாண்டிதழ் பல ஆண்டுகளுக்கு முன்பு நின்றுபோனது. சிறுபத்தரிக்கைகளுக்கு இது இயல்பான ஒன்றுதான். தற்போது திணை காலாண்டிதழ் மீண்டும் வெளிவருவது மகிழ்வான செய்தி. சி.சொக்கலிங்கம் (நிர்வாக ஆசிரியர்), வி.சிவராமன் (ஆசிரியர்), நட.சிவகுமார் (பொறுப்பாசிரியர்) ஆகியோரது பொறுப்பில் திணை 6-வது இதழ் (டிசம்பர் 2014 – மார்ச் 2015) தற்போது வெளியாகியுள்ளது.

   இந்துத்துவ ஆட்சியாளர்களிடமிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டிணைவை வலியுறுத்துவதோடு கலாச்சார அரசியல் மற்றும் நாட்டார் மரபிலுள்ள பிற்போக்குத்தனங்கள் குறித்தும் எச்சரிக்கை செய்திருப்பது வரவேற்கவேண்டிய அம்சமாகும்.

   “இந்திய-தமிழகச் சமூக அமைப்பின் அடிப்படை அலகுகள் சாதிகள் என்பதை இடதுசாரிகள் கோட்பாட்டு ரீதியாக ஒப்புக்கொள்ளவில்லை. மூன்றாம் உலக நாடுகளுக்க்கான தேசியக் கோட்பாடு இங்கு உருவாக்கப்படவில்லை. உள்ளூர் எதார்த்த நிலையிலிருந்து நமக்கான மார்க்சியத்தை உருவாக்கத் தவறிவிட்டோம். மூன்றாம் உலக நாடுகளின் புதிய இடதுசாரிகள் தமது நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளைச் சொந்த மொழியில் பேசுபவர்களாகப் பரிணமிப்பது ஒன்றே சரியான தீர்வு”, என ந.முத்துமோகன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். 

     “சிலப்பதிகாரத்தை புனைவு அல்லது வரலாறு என்ற வரையறைக்குள் பொருத்துவதற்கு சிரமப்படுவதைக் காட்டிலும் புனைவு அல்லது அறிவியல் என்று பிரித்தறியப்பட்டிராத தமிழ்ச்சூழலில் புனைவின் சாத்தியங்களோடு பண்பாட்டைப் பதிவு செய்யும் முயற்சியாக ஏற்றுக்கொண்டு அணுகுவது”, குறித்து டி.தர்மராஜ் விளக்குகிறார் (இளங்கோ என்னும் இனவரைவியலாளர்).

  நோபல் பரிசு குறித்து கெளதம சித்தார்த்தனின் உரையாடலை முன்னுறுத்தி பேட்ரிக் மோடியானா, ஹாருகி முரகாமி போன்றோர்களின் நாவல்கள் பற்றி ஹெச்.ஜி.ரசூல் எழுதியுள்ளார்.

 எம்.எஸ்.எஸ்.பாண்டியனுக்கு ஜே.ஆர்.வி.எட்வர்ட் – ம், ராஜம்கிருஷ்ணனுக்கு பொன்னீலனும் எஸ்.பொ. விற்கு இரா.காமராசும் அஞ்சலிக் குறிப்புகள் வரைந்துள்ளனர். இவர்களது தமிழில் பங்களிப்புக்கள் முக்கியத்துவம் மிக்கது.

    நரேந்திர மோடி, தினநாத் பத்ரா ஆகியோரின் மோசடி அறிவியலை விமர்சிக்கும் செய்தியாளர் கரன் தாப்பரின் ‘இந்து’ கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

   இடாலோ கால்வினோவின் ‘நகரத்தில் காளான்கள்’ சிறுகதையும் கன்னடச் சிறுகதை மொழிபெயர்ப்பும் இடம் பெறுகிறது. நட.சிவகுமாரின் அதிகதை ஒன்று இருக்கிறது. நிறைய கவிதைகள் ஓர் நூல் விமர்சனமும் இருக்கிறது 

இதழ் – 06 (டிசம்பர் 2014 – மார்ச் 2015) ISSN 2347 3533
தனி இதழ் ரூ 50
ஆண்டுக்கு ரூ 200

தொடர்புக்கு:

நட.சிவகுமார், பொறுப்பாசிரியர்,
திணை,
22/56/68 பட்டாணி விளை,
தக்கலை – 629175,
கன்னியகுமரி – மாவட்டம்.
மின்னஞ்சல்: thinai13@gmail.com
செல்: 9442079252

புதன், ஜனவரி 28, 2015

அரசுகள் + அரசு ஊழியர்கள் = மதச்சார்பின்மை



அரசுகள் + அரசு ஊழியர்கள் = மதச்சார்பின்மை
                                                         - முசிவகுருநாதன் 
                   
    தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் செ. உமாசங்கர் கிருஸ்தவ மதப் பரப்புரை செய்ததும் இது தொடர்ந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமைச்செயலாளர் கே.ஞானதேசிகன் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளதும் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.

    நமது அரசியலமைப்புச் சட்டம் இந்திய ஒன்றியத்தை மதச்சார்பற்ற மக்களாட்சிக் குடியரசாக வரையறுத்துள்ளது. இதை நமது ஆட்சியாளர்களுக்கே அடிக்கடி நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. இங்கு முடிந்த அளவிற்கு இந்து அடிப்படைவாதத்தை அனைத்து நிலைகளிலும் பரப்பிவிட்டு இந்துத்துவம் ஓர் வாழ்க்கைமுறை என்று கதைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். 

    அரசின் செயல்பாடுகளிலும் அனைத்து மட்டங்களில் உள்ள ஊழியர்களின் செயல்பாடுகளிலும் உறுதியான மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படவேண்டும் என்பதே சட்டதோடு சேர்ந்து பலரும் வலியுறுத்துவது. ஆனால் இங்கு நடப்பதென்ன?

   மத்திய பா.ஜ.க. அரசாகட்டும் தமிழகம் போன்ற பல மாநில அரசுகளாகட்டும் இந்துத்துவ அரசுகளாகவே செயல்படுகின்றன. அரசு ஊழியர்கள் பெரும்பான்மை மத நடவடிக்கை ஈடுபடுதலோ அல்லது அவற்றிற்கு சேவை செய்தலோ இங்கு பிரச்சினைக்குள்ளாக்கப் படுவதில்லை. சிறுபான்மை மதத்தினர் சார்ந்து இங்கு பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு உமாசங்கரின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது என்று பொருளல்ல. 

   பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் இந்து மதம் சார்ந்த நடைமுறைகள் இங்கு மரபாக கட்டமைக்கப்பட்டுள்ளன. அடிக்கல் நாட்டுதல், பூமி பூசை செய்தல், திறப்பு விழா என்ற பெயரில் கணபதி ஹோமம் நடத்துதல் என ஒவ்வொரு நிலைகளிலும் இந்து மத நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு பெருமளவு எதிர்ப்பின்றி அரங்கேற்றப்படுகிறது.

  அரசு அலுவலகத்திற்குள் மற்றும் அலுவலக வளாகத்திற்குள் நிறைய இடங்களில் கோயில்கள் கூட கட்டப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இந்துக் கடவுளர்களின் படங்கள் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் மாட்டப்படுகின்றன. சரஸ்வதி பூசை கொண்டாடாத பள்ளிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரசு அலுவலகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. 

  முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சரஸ்வதி வந்தனம் பாடியதை எதிர்த்து வெளிநடப்பு செய்த தமிழகத்து போலி திராவிடக் கட்சி சரஸ்வதி பூசையைப் பள்ளிகளில் கொண்டாடக்கூடாது என அரசாணை வெளியிட்டதோடு தமது கடமை முடிந்துவிட்டதாக ஒதுங்கிக் கொண்டன. இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை அரசும் கல்வித்துறையும் தட்டிக்கழிக்கின்றன. 

   இருக்கின்ற மதவாதம் போதாதென்று முந்தைய தி.மு.க. அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் கொண்டாட வேண்டுமென ஆணையிட்டது. பொங்கல் கூட இங்கு இந்துமத நடைமுறைகளைப் பின்பற்றி அரங்கேற்றப்படுதலை நாம் வேடிக்கைப் பார்த்து கொண்டுள்ளோம். மதநீக்கம் செய்யப்பட்ட பண்டிகை இங்கு சாத்தியமா என்பது ஆராயத்தக்கது. 

  நமது அரசியல் சட்டம் இந்தியக் குடிமகனுக்கு அளித்திருக்கக் கூடிய மத சுதந்திர உரிமை அரசு ஊழியர்களுக்கு அப்படியே பொருத்திப் பார்க்கமுடியாது. உமாசங்கரின் வாதம் சரியானதல்ல. அவர் மதப்பரப்புரை செய்ய விரும்பினால் அரசுப் பதவியைவிட்டு விலகிச் செய்வதுதான் நல்லது. ஆனால் பல்வேறு மத நடவடிக்கைகளைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் நமது அரசுகள் இதில் மட்டும் முனைப்பு காட்டுவது கண்டிக்கபடவேண்டியதாகும். உமாசங்கரை எதிர்த்துப் பிரச்சினை செய்பவர்கள் பெருமாள்முருகனுக்கு எதிராக நின்ற அதே இந்துத்துவ பாசிச சக்திகள் என்பதை மறுக்கமுடியாது. 

    இவர்களுக்கு ஆதரவாக இருக்கும் தமிழக அரசும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு எந்திரம் முழுமையும் ஜெ.ஜெயலலிதாவின் விடுதலைக்காக அனைத்து கோயில்களிலும் யாகங்கள் நடத்தி வருவதை சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் உள்ளது. உமாசங்கர் மீது எடுக்கவேண்டிய ஒழுங்கு நடவடிக்கையை தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள் மீது எடுக்கவேண்டியிருக்கும். இதைச் செய்வது யார்?
   நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு ஊழியர்களே. இவர்களது பணிக்காலம் ஐந்தாண்டுகள் அவ்வளவே. இவர்களில் பலர் சட்டங்களை விதிமுறைகளைப் பின்பற்றியதுண்டா? அண்மைய உதாரணங்கள் கூட இல்லை என்பதை நிருபிக்கும். .
 

   ‘காதல் ஜிகாத்’ செய்கிறார்கள் என்று இஸ்லாமியர்களை இழிவுபடுத்திய யோகி ஆதித்ய நாத், பா.ஜ.க. விற்கு வாக்களிக்கதவர்களின் பிறப்பை இழிவுபடுத்திய சாத்வி ஜோதி நிரஞ்சனா, மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் மதத்தில் சேரவேண்டிய சதீஷ் கவுதம், இந்துப் பெண்கள் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றதோடு நில்லாது கோட்சே தேசபக்தர் என்றும் பேசிய சாக்‌ஷி மகராஜ் ஆகியோர் இங்கு தங்குதடையின்றி பேசவும், உலவவும் அதிகப்படியான உரிமைகள் வழங்கப்படுவது ஏன் கேள்விக்குள்ளாக்கப் படவில்லை?



   பெரும்பான்மையினர் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு வாழ்க்கைமுறை என்று தப்பித்துக் கொள்ளமுடிகிறது. ஆனால் சிறுபான்மையினர் எதையும் சொல்லாமல்கூட தப்பிக்கமுடியாது என்கிற நிலை இருப்பது இந்திய ஜனநாயக்கத்தை கேலிக்கூத்தாக்குவதாகும்.

  பணி நிமித்தமாக அயோத்தி வந்த மத்திய உள்துறைச் செயலர் மாதவ் கோட்பால் பாலராமர் விக்கிரகத்தை வணங்க மறுத்த செய்தியைப் படிக்கும்போது (இது மோடியின் காலம் – அ.மார்க்ஸ்)  இவரைப்போல பலர் இந்தியாவில் இருப்பதால் இன்னும்கூட மதச்சார்பின்மை மிச்சமிருப்பதை உணர முடிகிறது.

   இறுதியாக, அடித்தட்டு தலித் மக்களிடமிருந்து வரும் தலைவர்கள் மத சேவகம் செய்யப்போய்விட்டால் இம்மக்களுக்களுக்கான விடுதலை என்னாவது? உமாசங்கரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைவிட தலித் மக்களின் விடுதலை முதன்மையானது.