செவ்வாய், ஜனவரி 29, 2019

ஒரு நாள் - 800 கடைகள் - பல ஆயிரம் ரூபாய்கள்


ஒரு நாள்  - 800 கடைகள்  - பல ஆயிரம் ரூபாய்கள்    
     
மு.சிவகுருநாதன் 


(42 –வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒருநாள் வாசகப்பார்வை)




    சென்ற ஆண்டு ஜனவரியில் (2018) இல் நடந்த 41 வது புத்தகக் காட்சிக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது என்ற வருத்தம் இருந்த நிலையில் இவ்வாண்டு (2019) எப்படியும் சென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் மாட்டுப் பொங்கலன்று (16.01.2019) ஒருநாள் மட்டும் சென்றுவரும் வாய்ப்பு கிடைத்தது. சென்ற ஆண்டு பாடநூல் பணிகளினால் தொடர்ந்த சென்னைப் பயணம் புத்தகக் காட்சிக்குச் செல்லமுடியாத தடையை உருவாக்கிவிட்டது.

   சென்னைப் புத்தகக் காட்சிக்கு செல்லமுடியாவிடினும் வேறுவழிகளில் புத்தகம் வாங்காமல், படிக்காமல் பொழுதுகள் கழிவதில்லை. மிகப்பெரிய சென்னைப் புத்தகக் கண்காட்சியைச் சுற்றுவதும், நூல் வாங்குவதும், நண்பர்களைச் சந்திப்பதும் தனித்த மகிழ்வைத் தருவன. 

    தமிழகத்தின் பல நகரங்களில் கண்காட்சிகள் நடந்தாலும்  இந்த மிகப்பெரிய கண்காட்சிக்கு ஒருநாள் என்பது யானைப்பசிக்குச் சோளப்பொறிதான்! பொங்கல் விடுமுறைகள் இருப்பினும் கடும் பனி, போக்குவரத்து இடையூறுகள் போன்றவை இதற்கு மிகத்தடையாக அமைந்துவிடுகின்றன.  

    போதுமான, தூய்மையான கழிவறைகளின்மை, தூய்மைக்கேடுகள், தூசு ஒவ்வாமைக் குறைபாடுகள் உள்ளிட்ட இடர்கள் ஆண்டுதோறும் தொடர்கின்றன. நிரந்தரக் காட்சியிடம் அமைத்து அதில் மாதந்தோறும்  புத்தகங்கள், கைவினைப் பொருள்கள், ஓவியங்கள், சிற்பங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் எனப் பல கண்காட்சிகளையும்  இலக்கிய அரங்குகளையும் நடத்த முடியும். இத்தகைய ஏற்பாட்டைச் செய்வதற்கு அனைவரும் முன்முயற்சியெடுக்க வேண்டும். 

  நடைபாதைகள் போதுமான இடைவெளியின்றி இருப்பது பெருத்த இடையூறாக உள்ளது. மேலும் நுழைவாயில் நடைபாதைகளையாவது அதிக இடைவெளியில் அமைப்பது நல்லது. அவ்வழிகளில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

      புத்தகக் கண்காட்சி குறித்து தகவல்களை அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் தினமும்  வழங்குகின்றன. இருப்பினும் ஊடக வெளிச்சம் பிரபலங்களிடமே விழுகிறது. சாமான்ய வாசகர்களை பெரும்பாலும் யாரும் கண்டுகொள்வதில்லை. அதிகம் விளம்பரமில்லாத சிறிய பதிப்பகங்கள் வெளியிடும் நல்ல நூல்களை இவைகளால் கண்டுகொள்ளப்படுவதில்லை. பிரபலங்கள் பலர் வாங்கியதாகப் பட்டியலிட்ட நூல்களுக்கும் அவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாமலிருந்தது, அல்லது இன்னும் அவர்கள் அந்தக் காலத்திலேயே இருந்தனர்.

  ஒவ்வோராண்டும் புத்தகக் காட்சியின்போது ‘ராயல்டி’ தொடர்பான சர்ச்சை எழுப்பப்படுகிறது. ஆனால் இதுவரை தீர்வொன்றும் எட்டப்படவில்லை. பதிப்புத்துறையில் சர்ச்சைகளும் குளறுபடிகளும் அதிகம். ‘உயிர்மை’ மற்றும் ‘கிழக்கு’ பதிப்பகங்களில் இதுவரையில் நூல்களை வெளியிட்டு வந்த எஸ்.ராமகிருஷ்ணனும் சாருநிவேதிதாவும் முறையே தேசாந்திரி, ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ் என்று தொடங்கி வியாபாரம் பார்க்க போய்விட்டனர். எழுத்து என்னாவது? இவர்களுக்கும் வேறு வழியில்லை. ‘ராயல்டி’  இல்லாத நிலையில் எழுத்தை மட்டும் நம்பி வாழ்வதெப்படி? விற்பனையில் சாருவை எஸ்ரா விஞ்சிவிட்டார் என்றே தோன்றுகிறது. இன்னொருவர் ஜெயமோகனும் விரைவில் ‘விஷ்ணுபுரம்’ பதிப்பகம் தொடங்கப்போவதாகவும் கூறப்படுகிறது. எழுத்தும் பதிப்பும் வேறாக இருக்கும் நிலை தமிழ்ச் சூழலில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. 

     சிலிக்குயில், விடியல், அலைகள், கருப்புப்பிரதிகள், அடையாளம், சுழல் வெளியீடு, புலம், எதிர் வெளியீடு, பயணி, முரண் போன்ற பல சிறிய பதிப்பகங்கள் வழியே வந்த அ.மார்க்சின் நூல்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘உயிர்மை’யில் வெளியானது.  அ.மார்க்ஸ் நூல்கள் தற்போது மீண்டும் ‘அடையாளம்’ பதிப்பகம் மூலமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. முன்பு ஒரு முறை நீதிமன்ற வழக்கொன்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

     வேண்டிய நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கவும் தோழர்களைச் சந்திக்கவும் இந்தக் கண்காட்சி ஒரு வாய்ப்பாக அமைவது சிறப்பு. இந்த ஒரு நாளில் வழக்கறிஞர் பொ.இரத்தினம், தோழர்கள் புலம் ஏ.லோகநாதன், சிராஜ், விழியன், சீனிவாச ராமநுஜம், பாரதிதம்பி, திருத்துறைப்பூண்டி பா.ரவிக்குமார், விஜய் பிரபாகரன் போன்றவர்களை சந்திக்க வாய்ப்பும்  கிடைத்தது.

    கண்காட்சியின் இறுதிநாள் வரையில் புதிய நூல்கள் வந்துகொண்டிருக்கும்.  இம்முறையும் கடைசி நாள்களில் வெளியாகும் புத்தகங்களை தவறவிட்டேன்  என்றுதான் சொல்ல வேண்டும்.  எனது இரண்டாவது நூலான பாரதி புத்தகாலாயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்ட ‘கல்வி அறம்’ என்னும் நூலும் இறுதிநாளில்தான்  (20.01.2019) வெளியானது.

    வழக்கம் போல தோழர் ‘புலம்’ ஏ.லோகநாதன் உதவியுடன் புத்தகங்களை வாங்கிச் சேமித்து அங்கேயே பார்சல் மூலம் அனுப்பச் சொல்லிவிட்டு ஊருக்குக் கிளம்பிவிட்டேன்.  உள்ளூர் நண்பர் த.மனோகரன் ‘உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம்’ தொகுதி 01 (தொகுப்பு) ஆ.இரா.வேங்கடாசலபதி வாங்கிவரச் சொன்னார். அதை உ.வே.சாமிநாதையர்  நூல் நிலையத்தில் வாங்கினேன். இந்நூல் பற்றி முரசொலியில் எழுதியிருந்தார்களாம்!

     வாசிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. புதிய நூல்கள் எண்ணற்றவைகள் வந்தவண்ணமே உள்ளன. எந்த நவீன மின்னணுக் கருவிகள் வந்தபோதிலும் புத்தகங்களைத் தொட்டு, உறவாடி  வாசிக்கின்ற உணர்வை எதுவும் தர இயலாது.  

       எப்போதும் போல நான் வாங்கிய நூல்கள் பலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன். 

அன்னம் – தஞ்சாவூர்

  • வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் - மயில் குயிலாச்சுதடி (புனைவு விமர்சனமும் கதையாடலாய்வும்) வே.மு.பொதியவெற்பன்
  • அரை நூற்றாண்டுக் கொடுங்கனவு (கீழ்வெண்மணிக் குறிப்புகள்) செ.சண்முகசுந்தரம்
  • காஹா சத்தசஈ: தெரிந்தெடுக்கப்பட்ட பிராகிருத மொழிக்கவிதைகள் அறிமுகமும் மொழிபெயர்ப்பும் (மொழியாக்கம்) சுந்தர் காளி, பரிமளம் சுந்தர்

பாரதி புத்தகாலயம் / புக்ஸ் ஃபார் சில்ரன்
  • முதுகுளத்தூர் படுகொலை (தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும்) – கா.அ.மணிக்குமார் (தமிழில்) ச.சுப்பாராவ்
  • பாம்பாட்டிச் சித்தர் (சித்தர்கள் குறித்த ஆய்வு நூல்) – ச.மாடசாமி
  • ஸ்னோலின் நாட்குறிப்புகள் – வெனிஸ்டா ஸ்னோலின்
  • காளி (சிறுகதைகள்) – ச.விஜயலட்சுமி
  • பண்டைய இந்தியாவில் சூத்திரர்கள் - ராம்சரண் சர்மா (தமிழில்) ப்ரவாஹன்
  • 21 ஆம் நூற்றாண்டில் மூலதனம் - தாமஸ் பிக்கட்டி (தமிழில்) பேரா. கு.வி.கிருஷ்ணமூர்த்தி
  • எசப்பாட்டு – ஆண்களோடு பேசுவோம்… - ச.தமிழ்ச்செல்வன்
  • அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள் - ச.தமிழ்ச்செல்வன்
  • பக்கத்தில் வந்த அப்பா – (தொகுப்பு) ச.தமிழ்ச்செல்வன் (எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம்)
  • வரலாறும் வர்க்க உணர்வும் - ஜார்ஜ் லூகாஸ் (தமிழில்) கி.இலக்குவன்
  • தீஸ்தா செதல்வாட் நினைவோடை  (தமிழில்) ச.வீரமணி
  • குஜராத் - திரைக்குப் பின்னால்… - ஆர்.பி.ஶ்ரீகுமார் (தமிழில்) ச.வீரமணி, தஞ்சை ரமேஷ்
  • களப்பணியில் கம்யூனிஸ்ட்கள் (பாகம்:02) - ஜி.ராமகிருஷ்ணன்
  • எறும்பும் புறாவும் - லியோ டால்ஸ்டாய் (தமிழில்) பியாரி செரீபு, பதிப்பாசிரியர்: யூமா.வாசுகி
  • மனிதன் யார்? - வெ.சாமிநாத சர்மா
  • எம்.எஸ்.சுப்புலெட்சுமி உறுதியான வாழ்க்கை சரிதம் - டி.ஜே.எஸ்.ஜார்ஜ் (தமிழில்) ச.சுப்பாராவ்
  • இளையோருக்கு மார்க்ஸ் கதை - ஆதி வள்ளியப்பன்
  • எப்படி? எப்படி? அன்றாட வாழ்வில் அறிய வேண்டிய அறிவியல் - ஆதி வள்ளியப்பன்
  • தமிழர் தாவரங்களும் பண்பாடுகளும் – பேரா. கு.வி.கிருஷ்ணமூர்த்தி
  • சாதியற்ற தமிழர் சாதித்தமிழர் (சாதிக்குப் பிந்தைய தமிழ்ச் சமூகம்) - பக்தவத்சல பாரதி
  • மூலதனம் கற்போம் (மார்க்சின் மூலதனம் – மூன்று தொகுதிகளின் சுருக்கம்) - த.ஜீவானந்தம்
  • மார்க்சியம் என்றால் என்ன? (ஒரு தொடக்கநிலைக் கையேடு)- சு.பொ.அகத்தியலிங்கம்
  • கார்ல் மார்க்ஸ் – சுருக்கமான வரலாறும் மார்க்சிய அறிமுகமும் – லெனின் (தமிழில்)  வீ.பா.கணேசன்
  • சாதி என்கிற வன்முறை - பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள்: நீதிபதி கே.சந்துரு தலைமையிலான பொது விசாரணை அறிக்கை - கே.சந்துரு (தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி)
  • நிலவுக்குள் பயணம்: சந்திராயன் அறியப்படாத உண்மைகள் - த.வி.வெங்கடேஸ்வரன்
  • நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே - க.நாராயணி
  • தேனி நியூட்ரினோ திட்டம் – அச்சங்களும் அறிவியலும் - த.வி.வெங்கடேஸ்வரன்
  • பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள் – முனைவர் ய.மணிகண்டன்
  • பகுத்தறிவின் குடியரசு (தபோல்கர், பன்சாரே, கல்புர்கி – தெரிவு செய்யப்பட்ட எழுத்துகள்) (தமிழில்)  கி.ரா.சு.
  • உலகை உலுக்கிய 40 சிறுவர்கள் - ஆயிஷா இரா.நடராசன்
  • 1729 - ஆயிஷா இரா.நடராசன்
  • இரண்டாம் சுற்று - ஆர்.பாலகிருஷ்ணன் (எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம்)
  • பென்சில்களின் அட்டகாசம் – விழியன்
  • திரு.குரு ஏர்லைன்ஸ் – விழியன்
  • காலப்பயணிகள் – விழியன்
  • ஒரே ஒரு ஊரிலே… (சிறார் நாவல்) – விழியன்
  • கடல்ல்ல்ல்ல் (காட்டு நண்பர்களின் கடல் நோக்கிய பயணம்) – விழியன்
  • மாகடிகாரம் (தாத்தாக்களின் தாத்தா கடிகாரம்)  – விழியன்
  • ஜூப்பிட்டருக்குச் சென்ற இந்திரன் (சிறார் கதைகள்)  – விழியன்
  • என் பெயர் ராஜா - வ.மு.கோமு
  • நொண்டிச் சிறுத்தை - வ.மு.கோமு
  • கபி என்கீற வெள்ளைத் திமிங்கலம் - வ.மு.கோமு
  • மாலாவும் மங்குனி மந்திரவாதியும் - வ.மு.கோமு
  • பேரன்பின் பூக்கள் (மலையாள சிறார் கதைகள்) – சுபங்களா (மொ) யூமா.வாசுகி
  • ஒன்பது ஆட்திண்ணிகளும் ஒரு போக்கிரி யானையும் – கென்னத் ஆண்டர்சன்  (தமிழில்) பா.கமலநாத்
  • குழந்தைகளும் குட்டிகளும் – ஓ.பெரோவ்ஸ்கயா (தமிழில்) ருக்மணி
  • சீருடை – ஆசிரியர் குறித்த திரைப்படங்கள் – கலகல வகுப்பறை சிவா 


நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். / பாவை பப்ளிகேஷன்ஸ் 

 

  • தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800-1500) – நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு
  • பிராமண போஜனமும் சட்டிச் சோறும் (இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும் சாதி உருவாக்கமும்) – ஆ.சிவசுப்பிரமணியன்
  • ராகுல்ஜியின் சுயசரிதை – ராகுல் சாங்கிருத்யாயன்  2 பாகங்கள் ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்) ஏ.ஜி.எத்திராஜூலு
  • சிந்து முதல் கங்கை வரை (சிம்ம சேனாதிபதி) - ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்) மாஜினி
  • விஞ்ஞான லோகாயத வாதம் - ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்) ஏ.ஜி.எத்திராஜூலு
  • ஐரோப்பியத் தத்துவயியல் - ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்) ஏ.ஜி.எத்திராஜூலு
  • பௌத்தத் தத்துவயியல் - ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்) ஏ.ஜி.எத்திராஜூலு, ஆர்.பார்த்தசாரதி
  • இஸ்லாமியத் தத்துவயியல் - ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்) ஏ.ஜி.எத்திராஜூலு
  • இந்துத் தத்துவயியல் - ராகுல் சாங்கிருத்யாயன் (தமிழில்) ஏ.ஜி.எத்திராஜூலு
  • புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ் – ராஜ் கௌதமன்
  • ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் – ராஜ் கௌதமன்
  • பொய் + அபத்தம் = உண்மை – ராஜ் கௌதமன்
  • ஆரம்ப கட்ட முதாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – ராஜ் கௌதமன்
  • சோமநாதர்: வரலாற்றின் பல குரல்கள் ரொமிலா தாப்பர்
  • இன்றைய இந்தியா – ரஜனி பாமிதத் (தமிழில்) எஸ்.ராமகிருஷ்ணன்
  • இந்திய வரலாறு – டாக்டர் ந.சுப்ரமணியன்
  • மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் – ஆனந்த் டெல்டும்டே (தமிழில்) கமலாலயன்
  • சோமநாதர் வரலாற்றின் பல குரல்கள் – ரொமிலா தாப்பர் (தமிழில்) கமலாலயன்
  • பண்டைக்கால இந்திய – ஆர்.எஸ்.சர்மா (தமிழில்) ரா.ரங்கசாமி (மாஜினி)
  • தலித்தியமும் உலக முதலாளியமும் (சமூகவியல் – பொருளியல் ஆய்வு) – எஸ்.வி.ராஜதுரை
  • முதலாளியமும் அதன் பிறகும் சரக்கு உற்பத்தியின் தோற்றமும் வீழ்ச்சியும் – ஜார்ஜ் தாம்ஸன்  (தமிழில்)  எஸ்.வி.ராஜதுரை
  • சர்வதேசத் தொழிலாலர் சங்கத்தின் வரலாறும் பரபும் – மார்ஸெலோ முஸ்ட்டோ (தமிழில்)  எஸ்.வி.ராஜதுரை
  • காலனியமும் கச்சேரித் தமிழும் – ஆ.சிவசுப்பிரமணியன்
  • தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி – ஆ.சிவசுப்பிரமணியன்
  • புத்தகத்தின் பெருநிலம் – ஆ.சிவசுப்பிரமணியன்
  • தமிழ்ப் பண்பாட்டில் சினிமா – கார்த்திகேசு சிவத்தம்பி
  • பண்டைத் தமிழ்ச் சமூகம்: வரலாற்றுப் புரிதலை நோக்கி – கார்த்திகேசு சிவத்தம்பி
  • கருத்தியல் பற்றிய சிந்தனைகள் – தேவி பிரசாத் சட்டோபாத்தியாய (தமிழில்)  பேரா.சே.கோச்சடை
  • தமிழக மக்கள் வரலாறு: காலனிய வளர்ச்சிக் காலம் – புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை  எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில்)  ரகு அந்தோணி

பொதுமைப் பதிப்பகம்

  • சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் – தோழர் தமிழரசன்
  • பெண்ணாடம் மாநாட்டு அறிக்கைகள் (1984 மே 5,6) – தோழர் தமிழரசன்


விடியல் பதிப்பகம்

  • மார்க்சியம் இன்றும் என்றும்  - தொகுதி:01 கார்ல் மார்க்ஸ் பிரடெரிக் ஏஞ்செல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கை தொகுப்பும் விளக்கமும்: பில் கஸ்பர் (தமிழில்) கே.சுப்பிரமணியன்
  •  மார்க்சியம் இன்றும் என்றும்  - தொகுதி:02 கார்ல் மார்க்ஸ் மூலதனம் – சித்திர வடிவில்: டேவிட் ஸ்மித் (தமிழில்) ச.பிரபுதமிழன், சி.ஆரோக்கியசாமி
  •  மார்க்சியம் இன்றும் என்றும்  - தொகுதி:03 மாந்தர் கையில் பூவுலகு (தமிழில்) பரிதி
  • அம்பேத்கர் இன்றும் என்றும்: அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தீண்டாமை, இந்துமதத்தின் புதிர்கள், பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்)

எதிர் வெளியீடு

  • உங்கள் மனிதம் சாதியற்றதா? – ஜெயராணி
  • அரசியலின் இலக்கணம் – ஹெரால்டு ஜே.லாஸ்கி (தமிழில்) க.பூரணச்சந்திரன்
  • வரலாற்றில் பிராமண நீக்கம் – இந்திய சமூகத்தின் ஆதிக்கமும் எதிர்ப்பும் – ப்ரஜ் ரஞ்சன் மணி (தமிழில்) க.பூரணச்சந்திரன்
  • கசார்களின் அகராதி ஆண்பிரதி – மிலோராத் பாவிச் (தமிழில்) ஶ்ரீதர் ரங்கராஜ்
  • கசார்களின் அகராதி பெண்பிரதி – மிலோராத் பாவிச் (தமிழில்) ஶ்ரீதர் ரங்கராஜ்
  • நான் செய்வதைச் செய்கிறேன் (சீர்திருத்தம், சொல்லாட்சி, செயலுறுதி ஆகியன பற்றி…) ரகுராம் ஜி.ராஜன் (தமிழில்) ச.வின்சென்ட்
  • தமிழகத்தின் பறவைக் காப்பிடங்கள் ஏ.சண்முகானந்தன், முனைவர் சா.செயக்குமார்
  • பயங்கரவாதி என புனையப் பட்டேன் – மொகமது ஆமிர் கான், நந்திதா ஹக்ஸர் (தமிழில்) அப்பணசாமி
  • கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் – பனிப்போர் முதல் இன்று வரை - நந்திதா ஹக்ஸர் (தமிழில்) செ.நடேசன்
  • எங்கே செல்கிறது இந்தியா - கைவிடப்பட்ட கழிப்பிடங்கள், தடைபட்ட வளர்ச்சிகள், சாதியத்தின் விலைகள் – டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ்   (தமிழில்) செ.நடேசன்
  • மயிலம்மா போரட்டமே வாழ்க்கை (பிளாச்சிமடை கோக்கோ கோலா நிறுவனத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் வரலாறு) தமிழில். சுகுமாரன்

கருப்புப்பிரதிகள்

  • அம்பேத்கர் என்ற பெயர் ஒரு பார்ப்பனருடையதா? கழுவப்படும் பெயரழுக்கு யாக்கன் (கலகம் வெளியீட்டகம்)  
  • ஜாதியற்றவளின் குரல் – ஜெயராணி


காலச்சுவடு

  • பாளையங்கோட்டை – ஒரு மூதூரின் வரலாறு – தொ.பரமசிவன், ச.நவநீதகிருஷ்ணன்
  • நீடாமங்கலம்: சாதிக்கொடுமையும் திராவிட இயக்கமும் - ஆ.திருநீலகண்டன்
  • மேற்கத்திய ஓவியங்கள் (பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரை) – பி.ஏ.கிருஷ்ணன்
  • மழைக்காலமும் குயிலோசையும் – மா.கிருஷ்ணன் (இயற்கையியல் கட்டுரைகள்)
  • பறவைகளும் வேடந்தாங்கலும் – மா.கிருஷ்ணன் (பதிப்பாசிரியர்: பெருமாள்முருகன்)
  • கௌரி லங்கேஷ் - மரணத்துள் வாழ்ந்தவர் (தேர்வும் தொகுப்பும்)  சந்தன் கௌடா (தமிழில்) பொன்.தனசேகரன்
  • இதுவே சனநாயகம்   – தொ.பரமசிவன்
  • மரபும் புதுமையும் – தொ.பரமசிவன்
  • மஞ்சள் மகிமை – தொ.பரமசிவன்
  • நேர்காணல்கள்  – தொ.பரமசிவன்
  • நான் மலாலா – பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை – மலாலா யூசுஃப்ஸை (இணைந்து எழுதியவர்: கிறிஸ்டினா லாம்ப்) (தமிழில்) பத்மஜா நாராயணன்

ஆல் சில்ட்ரன் பப்ளிஷிங்

  • சாஞ்சி – சோஹைல் ஹாஷ்மி
  • குதுப்மினார் – நாராயணி குப்தா
  • கேவலாதேவ் பறவைகள் சரணாலயம் – இராக் ப்ரூச்சா
  • மகாபலிபுரம்  - நந்திதா கிருஷ்ணா
  • சத்ரபதி சிவாஜி ரயில் முனை – சுபுஹி ஜீவானி (தமிழில்) தி.அ.ஶ்ரீனிவாஸன்


அடையாளம்

  • பெரியார்? பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகள் மீதான ஒரு கவன ஈர்ப்பு – அ.மார்க்ஸ்
  • மாற்றுக்கல்வி பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன? – அ.மார்க்ஸ்
  • இந்துத்துவமும் சியோனிசமும் – அ.மார்க்ஸ்
  • பொது சிவில் சட்டம் பாஜக அரசின் இன்னொரு தாக்குதல் – அ.மார்க்ஸ்
  • இந்திய அரசும் கல்விக்கொள்கைகளும் – அ.மார்க்ஸ்
  • புத்தம் சரணம் – அ.மார்க்ஸ்
  • நான் ஏன் இந்து அல்ல? – காஞ்சா அய்லய்யா (இந்துத்துவம் பற்றிய ஒரு சூத்திர விமர்சன்பம்: தத்துவம், பண்பாடு மற்றும் அரசியல் பொருளாதாரம்)  தமிழில்: மு.தங்கவேலு, அரச.முருகுபாண்டியன்
  • நான் யார்? (173 ஜென் கதைகளாலும் 10 மாடு மேய்க்கும் படங்களிலிருந்தும் விழிப்புணர்வு பெறுங்கள்) தேடலும் வீடுபேறு அடைதலும் (தொகுப்பும் செம்மையாக்கமும்) கேரன் சிவன்
  • மைத்ரேயி மற்றும் பல கதைகள் – எம்.டி.முத்துக்குமாரசாமி
  • வார்ஸாவில் ஒரு கடவுள் (நாவல்)  – தமிழவன்
  • தமிழகத்தில் நாடோடிகள் – பக்தவத்சல பாரதி
  • இலங்கையில் சிங்களவர் – பக்தவத்சல பாரதி
  • பண்பாட்டு உரையாடல் – பக்தவத்சல பாரதி
  • தமிழகப் பழங்குடிகள்  – பக்தவத்சல பாரதி
  • என்வின் கண்ட பழங்குடிகள் – வெரியர் எல்வின் (தமிழில்) சிட்டி, மீள்பார்வை: பக்தவத்சல பாரதி
  • உங்களுடன் ஓர் அந்நியன் (மன்ச்சோர்வுற்றவரை பராமரிப்பது எப்படி?)  – வேலெரி ஸ்டில்வெல் (தமிழில்) செ.பாபு ராஜேந்திரன்
  • எவ்வளவு இளமை – இவ்வளவு சோகம் – அதனால் கேளுங்கள்:  இளவயதினரின் மனச்சோர்வுக்குச் சிகிச்சை அளிப்பது எப்படி?  ஃபிலிப் கிரஹாம், கரோல் ஹியூஸ் (தமிழில்) செ.பாபு ராஜேந்திரன்


புலம்

  • புது வீடு புது உலகம் (நாவல்) – கு.அழகிரிசாமி
  • அயோத்திதாசரும் சிங்காரவேலரும் - நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் -  வெளிவராத விவாதங்கள் (பதிப்பும் தொகுப்பும்) ஸ்டாலின் ராஜாங்கம்

அகநி வெளியீடு

  • வந்தவாசிப் போர் – 250 (தொ) டாக்டர் மு.ராஜேந்திரன், டாக்டர் அ.வெண்ணிலா

மைத்ரி புக்ஸ்

  • லட்சுமி என்னும் பயணி – லட்சுமி அம்மா

தும்பி

  • தும்பி சிறுவர் இதழ்கள் (12 முதல் 21 முடிய)

வெள்ளி, ஜனவரி 25, 2019

‘கல்வி அறம்’ நூல் முன்னுரையிலிருந்து…


‘கல்வி அறம்’ நூல் முன்னுரையிலிருந்து… 

மு.சிவகுருநாதன்


(42 –வது சென்னைப் புத்தகக் காட்சியின் இறுதி நாளன்று -ஜனவரி 20, 2019 -  ‘கல்வி அறம்’ எனும் எனது இரண்டாவது நூல் வெளியானது. பாரதி புத்தகாலயத்தின் ‘புக்ஸ் ஃபார் சில்ரன்’ இந்நூலை வெளியிட்டுள்ளது. இதன் முன்னுரையிலிருந்து சில பகுதிகளும் நூல் விவரமும் இங்கு தரப்படுகிறது.)




             நமது நாட்டில் கல்விசார் நெருக்கடிகள் ஏராளம். இதற்கு அரசின் கொள்கைகள், செயல்பாடுகள், கல்விசார் சமூகத்தின் அலட்சியம் போன்ற பல்வேறு காரணிகள் உள்ளன. அவைகள் அவ்வளவு எளிதில் களையப்படும் என்று நம்பும் சூழல் இல்லை. மாற்றங்களைப் பற்றி வெளியே எவ்வளவுதான் பேசினாலும் உள்ளுக்குள் நடக்கும் செயல்கள் அவற்றிற்கு முரணாகவே அமைகின்றன. கல்வியை வெளியே நின்று அணுகுவதும் அதன் அமைப்பு உள்ளிலிருந்து அணுகுவதும் முற்றிலும் வேறுபட்ட பார்வைக் கோணங்களைத் தரும். 

   மெக்காலே கல்விமுறை குறைபாடுடையது என்று கருதும் நமது ஆசிரியச் சமூகம் பெரும்பாலும் குருகுலக்கல்வியிடந்தான் சரணடைகிறது. இதற்கு  மெக்காலே கல்விமுறை எவ்வளவோ பரவாயில்லைதானே! உலகமயத்திற்குப் பின்பு கல்வியின் முகம் பெரிதும் மாற்றமடைந்துள்ளது; கூடவே ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்களின் முகங்களும். 

   +1 மாணவர்கள் சேர்க்கையில் இட ஒதுக்கீடு, +1 மதிப்பெண்கள் மற்றும் மொழித்தாள்கள் குறைப்பு, கலைப் பாடங்களுக்கும் அகமதிப்பீட்டு முறை, புதிய பாடத்திட்டம் – பாடநூல்கள் போன்ற வரவேற்கத்தக்க அம்சங்கள் இருந்தபோதிலும் இறுதியில் இவற்றைப் பின்னுக்கு இழுக்கும் சக்திகள் வெற்றியடைவது கல்வியின் இன்றைய இழிநிலையை உணர்த்துவதாக உள்ளது.  +1 மதிப்பெண்கள் மேற்படிப்பிற்குத் தேவையில்லை, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தோல்வியடைந்த +1 மாணவர்கள் நீக்கம் ஆகியன நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றன. 

    பாடத்திட்டம் – பாடநூல் மாற்றங்கள், புதிய தேர்வு முறைகள் ‘நீட்’ போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்கும் ஆயிரங்கணக்கானவர்களை மட்டும்  முதன்மைப்படுத்தியிருக்கும் சூழலில் கல்விப் புலத்திலுள்ள லட்சக்கணக்கிலான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. அனைவருக்குமான வாய்ப்புகள், தேர்ச்சி, இடம் ஆகியன உறுதி செய்யப்படுவதுதான் சமூக அறமாக இருக்க முடியும். ஆனால் நடைமுறை எதார்த்தம் வேறு மாதிரி உள்ளது. இவற்றைக் களைய பெரும்பான்மையான கல்விசார் சமூகம் எவ்வித முயற்சியுமின்றி வேறு வழிகளில் பயணிக்கிறது. 

   +1, +2 மாணவர்களுக்கு அளிக்கும் சலுகைகளை 9, 10 மாணவர்களுக்கும் அளித்தால் கல்வியின் தரம் குறைந்துவிடுமா என்ன? 200, 150, 100 மதிப்பெண் தேர்வுகளை அகற்றி, 70, 90 என மாற்றியது புரட்சி என்றால் இன்னும் 10 ஆம் வகுப்பில் 75, 100 மதிப்பெண் தேர்வுகள் ஏன்? அடுத்தக் கல்வியாண்டில் (2019 -2020) 9 ஆம் வகுப்பிற்கும் இது நீளுமே! 

   மாணவர்களுக்குப் பல்வேறு விலையில்லாப் பொருள்களை வழங்கும் தமிழக அரசு மாணவர்கள் துளியும் விரும்பாத தேர்வு வினாத்தாளுக்கு மட்டும் கட்டணம் வசூலிப்பது அறமாகுமா என்று கேட்கத் தோன்றுகிறது. ‘கஜா’ புயலின்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் வினாத்தாள் தொகை வசூலிக்கப்பட்டது சர்ச்சையானது. ஆனால் தமிழகம் முழுமையும் இதுதானே நடைமுறை! காலாண்டு, அரையாண்டு, ஆண்டுத்தேர்வுகள் மற்றும் முப்பருவத் தேர்வுகளுக்கும் வினாத்தாள் கட்டணம் மொத்தமாகத் தொடர்ந்து வசூலிக்கப்பட்டுதான் வருகிறது. 

   பள்ளிக் கட்டடங்களின் தரமின்மை, பள்ளி நடைமுறைகளில் காணப்படும் சாதி மற்றும் பாலினப் பாகுபாடுகள், கழிவறை, குடிநீர், விளையாட்டிடம் போன்ற அடிப்படை வசதிகளின்மை போன்றவை நீதிமன்றங்கள் உத்திரவிட்டும் இன்னும் நிறைவேற்றப்படாமல்தான் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம், கணினி, அறிவியல், மொழியியல் ஆய்வகங்கள், Smart Class ஆகியன இருக்க வேண்டுமல்லவா!

   பாடக்குறிப்புகள், (இப்போது ‘பாடத்திட்டம்’ ஆகிவிட்டது!) கற்பிக்கும் முறைகள் ஆகியவற்றைத் திணிக்கும் கல்வித்துறை ஆசிரியர் கல்விப் (பட்டயப் பயிற்சி, இளங்கலைப் பட்டம்) படிப்புகளில் புதியப் பாடத்திட்டம், நவீன கற்பிக்கும் முறைகள், புதிய உத்திகள் என மேம்பட்ட மாற்றங்கள் எதையும் அறிமுகம் செய்வதில்லையே, ஏன்? ஆசிரியர்கள் சமூக ஊடகங்களில் பாடக்குறிப்புகள், விடைக்குறிப்புகள், நோட்ஸ்கள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொள்வதுதான் பெருமளவில் நடக்கிறது. 

   ஆசிரியர்களுக்கு அதிக நாள்கள், நேரங்கள் பணியிடைப் பயிற்சிகள் அளித்துவிட்டால் மட்டுமே போதுமானது என்கிற என்கிற ‘குளிர் சாதன அறைத் திட்டங்கள்’ மாறுவது எப்போது? பயிற்சியின் தரத்தில்  வெறுமனேக் கூடிக் களைந்து, பொழுது போக்குதல் என்பதைத்தவிர நடக்கும் முன்னேற்றம் என்ன என்பதை கல்வித்துறை ஆய்வு செய்ததுண்டா?

   கட்டாயத் தமிழ் வழிக்கல்வி தொடக்க நிலையில் கூட இன்றும் சாத்தியமில்லாத நிலையே நீடிக்கிறது. இங்கு தமிழ் உணர்வுகளைத் தூண்டி நன்மை தேடும் அரசியல் பேசுபொருள் மட்டுமே. தொடக்கநிலையில் ஆங்கில வழியில் பயில்வோர் மேல் வகுப்பில் தமிழ் வழிக்கு வருவது அரிது. தமிழ் வழிப் பாடநூல்களின் மொழி நடை மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆங்கில வழிக்குத் துரத்தவே செய்கிறது. தொடக்க நிலையில்கூட தமிழில் பாடங்கள் எழுதப்படாமல் ஆங்கிலத்தில் எழுதி மொழிபெயர்ப்பதன் விளைவு இது. இதைப் பற்றிய முறையான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

   வளரிளம்பருவக் குழந்தைகளை நெறிப்படுத்த பாலியல் கல்வி போன்ற வாய்ப்புகளைக் கல்வி தவறவிடலாகுமா? வெறும் அறிவு, ஒழுக்கம் ஆகியனவற்றை மட்டும் முன்நிறுத்தாமல் பவுத்தம் போன்ற இந்திய அவைதீக மரபுகள் முன்னிறுத்திய அறம் என்னும் சொல்லாடலை நமது கல்விமுறை கைக்கொள்ள வேண்டும். அதுவே கல்வியை வளப்படுத்தும் வழி. கல்வியில் அக்கறையுள்ள அனைவரும் தொடர்ந்து விவாதித்து கல்வியை மேம்படுத்துவோம். 


  
நூல் விவரங்கள்:
கல்வி அறம்
மு.சிவகுருநாதன்

வெளியீடு: Books for Children (புக்ஸ் ஃபார் சில்ரன்)

(பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்)

முதல்பதிப்பு: டிசம்பர்  2018

பக்கங்கள்: 174

விலை:  ரூ. 150

தொடர்பு முகவரி: 

பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24356935, 24332924

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
 
இணையம்: www.thamizhbooks.com

வாட்ஸ் அப்: 8778074939