திங்கள், டிசம்பர் 31, 2012

டாஸ்மாக் தமிழகம்


டாஸ்மாக் தமிழகம்                      - மு.சிவகுருநாதன்

  
  குடி தமிழ்க் கலாச்சாரத்தின் ஓரங்கம் என்பது இங்கு பலருக்கு மறந்தே போய்விட்டது. அவ்வை அதியமானுடன் கள்ளுண்ட காட்சிகள் சங்கப்பாடல்களில் விரியும். தென்னை மற்றும் பனை மரங்களில் வடிக்கப்படும் கள் உள்ளிட்ட பல்வேறு மதுவகைகள் அந்தந்த வட்டாரத் தன்மையுடன் குடிக்கப்பட்டு வந்த தமிழ் மரபு இன்று கேள்விக்குள்ளாகியிருக்கிறது. தமிழின் தொன்மை, பெருமை பேசுபவர்கள் இவற்றைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள் என்பதுதான் விளங்கவில்லை. 

  குடி கலாச்சாரம் இன்று இழிவானதாகக் கருதப்படுவதற்கு நமது காலனீய மதிப்பீடுகளும் IMFL (Indian Made Foreign Liquor)  வருகையுமே முக்கியக் காரணமாகும். கடந்த பத்தாண்டுகளாக மது விற்பனையை அரசே ஏற்று நடத்திவருவது (டாஸ்மாக்) இங்கு குறிப்பிடத்தக்கது. குடியை இழிவாகக் கட்டமைக்கும் ஓர் கலாச்சார நிறுவனமான அரசே மது விற்பனை செய்வதுதான் முரண் நகை. டாஸ்மாக் மூலம் தமிழக அரசு மது விற்பனையை இலக்கு வைத்து நடத்துவதின் பின்னாலுள்ள சாராய ஆலை முதலாளிகளின் வணிக நலன் இங்கு கவனப்படுத்தவேண்டிய அம்சம்.

  2011-2012 ஆம் ஆண்டில் தமிழகத்தின் மது விற்பனை வருவாய் ரூ 18,000 கோடி. கடந்த ஒன்பதாண்டுகளில் இவ்வுயர்வு ஆறு மடங்காகும். வரும் நிதியாண்டில் (2012-2013) ரூ21,000 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு டாஸ்மாக் வியாபாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது. அரசுக்கடையாக இருப்பினும் பள்ளி மாணவனுக்கு மது விற்பனை செய்ய எவ்வித தடையுமில்லை என்பதே இங்கு நடைமுறை.

  டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டுதான் மாநில அரசு இலவசங்களை வாரி வழங்குகிறது. எனவே அவைகள் வேண்டாம் என்று நடுத்தர வர்க்க மனோபாவம் குரலெழுப்புகிறது. 2 ஜி அலைக்கற்றை ஊழலில் மத்திய அரசு இழந்த தொகை ரூபாய் ரூ 1,76,000 கோடி உணவு, வேளாண் இடுபொருள்களுக்கு கொடுக்கப்படும் மானியம் போன்றதே என்று பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

  நூறுநாள் வேலைத்திட்டத்தில் ஊதியத்தை ரூ 119 லிருந்து ரூ 132 ஆக உயர்த்தியிருப்பதாக அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே முந்தைய கூலியான ரூ 100 முழுமையாக வழங்கப்படுவதில்லை என பல இடங்களில் சாலை மறியல் நடைபெறுகிறது. இந்தப் பணத்தில் பெரும்பகுதி டாஸ்மாக் கடைகளைச் சென்றடைகிறது என்றபோதிலும் ஏழை மக்களுக்கு இலவசங்கள், மானியங்கள் ஆகியவற்றை கொடுக்கக்கூடாதென குரலெழுப்புவதன் பின்னாலுள்ள அரசியலையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

  வெறும் ரூ 5 அடக்கவிலையில் தயாராகும் 720 மி.லி. முழுப்பாட்டில் மது ரூ 300 –ம் அதற்கு மேலும் விற்பனையாகிறது.அருட்செல்வர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மலிவு விலையில் மதுவைத் தயாரித்து விற்பனை செய்யலாம் என்று முன்பொருமுறை சொன்னது நினைவிருக்கலாம். இதைப்போலவே பீருக்கான அடக்க விலையும் மிகக்குறைவே. (சுமார் ரூ 2) அப்பாவி ஏழை மக்களிடம் அநியாயமாக வாங்கப்படும் பெருந்தொகையும் விற்பனை வரி, ஆயத்தீர்வை என அரசிற்கும் மிடாஸ், மோகன் புரூவரீஸ், கிங்ஸ் டிஸ்டிலரீஸ் போன்ற சாராய முதலாளிகளுக்கும் போய் சேருகிறது. மதுப்பாட்டில்களில் மது உயிருக்கும்,வீட்டிற்கும்,நாட்டிற்கும் கேடு என எச்சரிக்கை வாசகம் சொல்கிறது. மது விற்பனை செய்யும் நாட்டிற்கு வருமான மிகுவதால் இதைத் திருத்தம் செய்துவிடலாம். 

  இந்த IMFL சரக்குகளின் தரம் கேள்விக்குரியது. இத்துடன் கூடவே போலி மற்றும் கலப்பட மது பானங்களால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு அவர்களின் உழைப்பு விரயமாகிறது; சுரண்டப்படுகிறது. கள் போன்ற உள்நாட்டு மது வகைகளை குடித்துப் பழகியோருக்கு இந்த IMFL சரக்குகளை பயன்படுத்த முறையான பயிற்சிகள் இல்லை. கள்ளுடன் தண்ணீர் கலந்து யாரும் குடிப்பதில்லை. எனவே IMFL சரக்குகளுடன் தண்ணீர் கலவாமலேயே குடித்து உடல்நலத்தை விரைவில் இழந்து மரணமடைந்துவிடுகின்றனர். போலி, கலப்பட மது வகைகளின் பாதிப்பு மறுபுறம்.

  கள்ளுண்ணுதலைத் தடை செய்யும் நமது அரசுகள் அயல் மது வகைகளின் விற்பனையை அதிகரிக்கப்பாடுபடுவதன் நோக்கம் ஒருவாறு விளங்கத்தான் செய்கிறது. சாராய முதலாளிகளின் வர்க்க நலன்களே இங்கு முதன்மையானது. கள் தடை செய்யப்பட்டதன் பின்னணியை நாம் இவ்வாறுதான் விளங்கிக்கொள்ள முடியும்.

    குஜராத்தைபோல் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைபடுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். குஜராத்தில் முழு மதுவிலக்கு என்று சொல்வதே அபத்தம். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மதுவிலக்கிலிருந்து விலக்கு பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

   அரசும் மது ஆதரவாளர்களும் மது விலக்கை அமல்படுத்துவது சாத்தியாமேயில்லை என கைவிரிக்கின்றன. ஆனால் கள் கடைகளைத் திறப்பது குறித்து இவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். அரசு மது விலக்கை அமல்செய்தால் கள்ளச்சாராயம் பெருகும் என்று சொல்கிறது. அரசின் காவல்துறை கள்ளச்சாராயத்தையோ டாஸ்மாக் கலப்படத்தையோ கண்டுகொள்வதில்லை என்பதோடு மாமூல் பெற்றுக்கொண்டு வளர்த்தெடுக்கின்றன.

   அரசும் மது விற்பனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் அரசியல்வாதிகளும் சாராய வியாபாரிகளும் பிநாமிகளும் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதே அரசின் நிலை. இப்படியிருந்தால்தான் தேர்தலில் குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து வாக்குகளைப் பெறமுடியும் என்று அனைத்துக் கட்சியினரும் திடமாக நம்புகின்றனர். எனவே அரசு வித்தாலும் தனியார் வித்தாலும் மது வேண்டும் என்பது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. இதற்கு இடதுசாரிகளும் விதிவிலக்கல்ல.

   மாடு வளர்ப்பவர்கள் அதன் பாலை கறந்து விற்பனை செய்வதில் எந்தத் தடையும் இல்லாத போது தென்னை, பனை மரங்கள் வளர்ப்பவர்கள் அவற்றிலிருந்து கள் இறக்குவது மட்டும் குற்றமானது நமது அரசுகளின் சார்புத்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகும்.

  பள்ளிகள், கோயில்கள், குடியிருப்புகள் ஏன் சமத்துவபுரங்களில் கூட டாஸ்மாக் மதுபானக்கடைகள் நிறைய திறக்கப்படுகின்றன. இவற்றை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் அரசு இவைகளைக் கண்டுகொள்வதாக இல்லை. இந்த இடங்களில் கடைகள் திறப்பது ஒருபுறமிருக்கட்டும். 18 வயதிற்கு குறைந்த பள்ளி மாணவர்களுக்கு மது வகைகளை விற்பனை செய்யாதிருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே வேதனை தரும் செய்தி. ஒவ்வொரு ஊராட்சிதோறும் மதுக்கடைகள் திறப்பதை அரசு குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது புலனாகிறது.

  அடக்குமுறை, பழிவாங்கல், சர்வாதிகாரம், குடும்ப மாஃபியா ஆதிக்கம் போன்ற பலவற்றைப் போலவே கள்ளைத் தடை செய்வது, டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசின் வருவாயைப் பல மடங்கு பெருக்குவது ஆகியவற்றில் ஜெ.ஜெயலலிதாவுக்கும், மு.கருணாநிதிக்கும் நிரம்ப ஒற்றுமைகள் உண்டு. எனவே ஆட்சி மாறினாலும் மதுக்கொள்கைகள் யாதொரு மாற்றமும் அடைவதில்லை.

  கள்ளை அனுமதிப்பது என்ற முடிவே இதற்குச் சிறந்த தீர்வாக இருக்கமுடியும். அரசு கள்ளுகடைகளைத் திறப்பது என்று இதற்கு அர்த்தமல்ல. கள் விற்பனையில் வணிகமயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, உள்ளூர் அளவில் கள்ளை உற்பத்தி செய்து அங்கேயே விற்பனை செய்யும் நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும். அப்போதுதான் கள்ளில் கலப்படம் செய்தல், போதையூட்டிகளைச் சேர்த்தல் போன்றவை தடுக்கப்படும். இன, மொழி, குலப்பெருமைகள் பேசுபவர்கள் மீண்டும் பழங்கால தொல்குடி வாழ்க்கைமுறைக்குத் திரும்ப மது உண்ணலிலாவது நினைவுபடுத்த முயற்சி செய்யலாம்.

  இந்த மாதிரியான நடவடிக்கைகளை அரசு எடுக்குமென இன்றைய சூழலில் எதிர்பார்க்கமுடியவில்லை. மது விலக்கு வேண்டுமென்று போராடும் தமிழ் அறிவுஜீவிகள்  பழமைவாதப் பார்வைகளிலிருந்து மீண்டு தொலைநோக்கோடு தென்னை மற்றும் பனைமரக் கள்ளிற்காக குரல் கொடுக்கவேண்டும்.  


வியாழன், டிசம்பர் 06, 2012

மானாமதுரை இரட்டை என்கவுன்டர் கொலை - உண்மை அறியும் குழு அறிக்கை

மானாமதுரை இரட்டை என்கவுன்டர் கொலை - உண்மை அறியும் குழு அறிக்கை                                                                                                                                                                                மதுரை,                                                                                                                                                  05-12-2012


          சென்ற அக்டோபர் 27 அன்று மானாமதுரைக்கு அருகில் உள்ள வேம்பத்தூரில் மருதுபாண்டியர் குரு பூஜைக்குச் சென்று வந்த கும்பல் ஒன்றுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட உரசலின்போது குடிபோதையில் இருந்த இளைஞர்கள் தாக்கி சம்பவ இடத்திலேயே திருப்பாச்சேத்தி கவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் கொல்லப்பட்ட செய்தி எல்லோரையும் கவலையில் ஆழ்த்திய ஒன்று. சாதித் தலைவர்களின் குருபூஜை என்கிற பெயரில் உருவாக்கப்படும் சாதி உணர்வுடன் கூடிய கும்பல் மனநிலை மற்றும் வன்முறை உளநிலைக்கு ஒரு இளம் காவல்துறை அதிகாரி பலியாக நேர்ந்ததை நாமெல்லோரும் கண்டித்தோம். வேம்பத்தூர் மற்றும் அருகிலுள்ள புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முக்குலத்து (அகம்படியர்) இளைஞர்கள் இக் கொலையில் முக்கிய பங்கு பெற்றிருந்தனர். அவர்களில் பலர் இருபதுகளிலும் அதனினும் குறைந்த வயதுகளிலும் இருந்தவர்கள் என்பது இன்னும் நமக்குக் கவலை அளிக்கக் கூடியதாக இருந்தது.

       காவல்துறையினர் விரைந்து களம் இறங்கினர். அன்று மாலையே பலர் கைது செய்யப்பட்டனர். நடவடிக்கைக்கு அஞ்சி இக் கிராமங்களிலிருந்த இளைஞர்கள் பலரும் ஓடி ஒளியத் தொடங்கினர். டி.ஜி.பி இராமானுஜம் உட்பட உயர் அதிகாரிகள் பலரும் அப்பகுதிக்கு வந்து போயினர். புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் முக்கிய பங்காற்றியதால் காவல்துறையின் கவனம் அதன்மீது திரும்பியது. அவர்கள் அக்கிராமத்தில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். தனது துறையைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்படுவதை இம்மியும் சகித்துக்கொள்ளாத காவல்துறை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பழிவாங்கும் நோக்குடன் என்னென்ன விதமான அணுகல்முறைகளைக் கையாளுமோ அத்தனையும் இங்கும் செயல்படுத்தப்பட்டது.  கைது செய்யப்பட்டவர்கள் கடும் சித்திரவதைக்குள்ளாயினர். கிராமத்திற்குள் புகுந்து வீடுகள் தாக்கப்பட்டு உடைக்கப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இருமுறை இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒருமுறை பொதுவான தாக்குதலும், அடுத்தமுறை குறிப்பான வீடுகள் இலக்காக்கித் தாக்கப்படுதலும் நடந்தது.

    இன்னொருபக்கம் காவல்துறை அதிகாரிகள் புதுக்குளத்தைச் சேர்ந்த மூத்தவர்களிடம் நைச்சியமாகப் பேசி இளைஞர்களைக் கொண்டு வந்து ஒப்படைக்கச் செய்தனர். அடக்குமுறைக்கு அஞ்சிய ஊர்ப் பெரியவர்கள், ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் போக, மேலும் எட்டுப்பேரை அவர்களாகவே கொண்டு வந்து ஒப்படைத்தனர். ஆல்வின் சுதனின் கொலைக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள்  மீது முறையான வழக்குத் தொடர்வதில் அவர்கள் எல்லாவகையிலும் ஒத்துழைத்துக் கொண்டிருந்த சூழலில், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்த இருவர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட செய்தி வந்தது, சென்ற நவம்பர் 30 அன்று, சிறையிலிருந்த  புதுக்குளத்தைச் சேர்ந்த பிரபு (27), பாரதி (20) என்கிற இரு இளைஞர்கள் தமிழ்நாட்டின் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையால்   என்கவுன்டர் செய்து கொல்லப்பட்டது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியது.

        குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிக அளவில் கொல்லப்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. அதிலும் நீதிமன்றக் காவலில் உள்ளவர்கள் கொல்லப்படுவது என்பது கவலைகுரிய ஒன்றாக உள்ளது. எனவே இந்த என்கவுன்டர் கொலைகள் குறித்த உண்மைகளை அறிய,

பேரா.அ.மார்க்ஸ்,  மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
பேரா. சே.கோச்சடை. மக்கள் கல்வி இயக்கம் (PEM), காரைக்குடி,
வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்(PUHR), மதுரை,
வழக்குரைஞர்  ஏ.எஸ்.அப்துல் காதர், மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (NCHRO), மதுரை.

       ஆகியோர் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று முழுவதும் சம்பவத்துடன் தொடர்புடைய மானாமதுரை, புதுக்குளம், வேம்பத்தூர், என்கவுன்டர் நடந்ததாகச் சொல்லப்படுகிற கால்பிரவு முதலான பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பலரையும் விசாரித்தது. குறிப்பாகக் கொல்லப்பட்ட பிரபு, பாரதி குடும்பத்தினர், புதுக்குளம் கிராம முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் பாண்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கூடுதல் அரசு வழக்குரைஞர் முத்து முனியாண்டி மற்றும் கிராம மக்களைச் சந்தித்தது. என்கவுன்டர் செய்த டி.எஸ்.பி வெள்ளத்துரையின் மானாமதுரை அலுவலகத்திற்குச் சென்றபோது அவர் அங்கில்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டு நாங்கள் அவரைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னபோது, காரணத்தை கேட்டறிந்த அவர் எங்களைச் சந்திக்க இயலாது எனவும், மேற்கொண்டு ஏதும் பேச இயலாது எனவும் மறுத்தார். எனினும் சிவகங்கை காவல்துறைக் கண்காணிப்பாளர் சக்திவேலு அவர்களை நாங்கள் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் விரிவாகப் பேசினார்.

எங்களுக்குக் கிடைத்த தகவல்களும் அந்த அடிப்படையிலான அய்யங்களும்:

        காவல்துறைக்கும் மக்களுக்கும் முரண்பாடுகள் வரும்போது அவற்றை ஒரு மிகப்பெரிய சவாலாகக் கருதிப் பழிவாங்குவது வழக்கமாக உள்ளது. ஒரு அரசு ஊழியரைத் தாக்குவது, கொல்வது என்பதற்கு அப்பால் ஒருவகையான மத்தியகால மனநிலையுடன் எங்களின் அதிகாரத்திற்கு ஒரு சவாலா என்கிற மமதையோடு நடவடிக்கை மேற்கொள்வதைக் காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாகக் காவல்துறையால் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தப் படுபவரும், என்கவுன்டர் கொலைகளுக்காகவே பதவி உயர்வு கொடுத்து ஊட்டி வளர்க்கப்பட்டு வருபவரும், இதுவரை 12 என்கவுன்டர் கொலைகளைச் செய்தவருமான வெள்ளத்துரையை இரு வாரங்களுக்கு முன் மானாமதுரையில் உதவிக் கண்காணிப்பாளராக நியமித்தபோதே இப்படி நடக்கும் என்பது எல்லோரும் ஊகித்ததுதான். இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் அடுத்து என்கவுன்டரில் யார் கொல்லப்படுவார்கள் என முன்கூட்டியே சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

     ஊரில் புகுந்து கடுமையாகத் தாக்கியதில் சுமார் எட்டு வீடுகள் பெரிய அளவில் சேதமடைந்திருந்ததை எங்கள் குழு கண்டது. கொல்லப்பட்ட பிரபு, பாரதி ஆகியோரின் வீடுகள் அதிக அளவில் சேதப்படுத்தப்பட்டிருந்தன. பாத்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் முதலியனவும் உடைக்கப்பட்டிருந்தன, பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தைக் காவல்துறையினர் கொள்ளையடித்துச் சென்றதாகவும், டி.ஜி.பி இராமானுஜம் அப்பகுதிக்கு வந்து சென்ற பின்பே இத்தகைய தாக்குதல் தொடரப்பட்டதாகவும் மக்கள் கூறினர். பெரிய அளவில் வீடுகள் சேதப்படுத்தபட்டிருந்ததை நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம். சுட்டுக் கொல்லப்பட்ட பாரதியின் வீட்டில் போலீசார் செய்த அட்டூழியத்தின் விளைவாக அவரது பாட்டி ஒருவரும் சில நாட்கள் முன் இறந்து போயுள்ளார். போலீசார் தள்ளியதில் மண்டையில் அடிபட்டதாலேயே அவர் இறந்ததாக அவ்வீட்டர் குற்றம்சாட்டுகின்றனர்.

      உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதனைக் கொன்ற கும்பல் இரு சுமோக்களில் வந்துள்ளது. அதிகபட்சம் அவர்கள் 20 பேர்கள் இருக்கலாம். ஆனால் தேடுதல் வேட்டையில் சுமார் 37 முதல் 40 பேர்கள் வரைக் கைது செய்யப்பட்டு இன்று கொல்லப்பட்ட இருவர் போக மீதி 24 பேர்கள் சிறைகளில் உள்ளனர். இவர்களில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தோர். இவர்களில் இருவர் தஞ்சையிலுள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் உள்ளதாக அறிகிறோம். இன்னும் பலரும்கூட குறைந்த வயதுடையவர்கள்தான் எனவும், வயதைக் கூட்டிச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வழக்குரைஞர்கள் கூறுகின்றனர்.

        கைது செய்யப்பட்டு இன்று சிறையில் உள்ள சக்திவேலு மற்றும் மதியரசன் ஆகியோருக்கும் ஆல்வின் சுதன் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் இருவரும் இன்று கைதுசெய்யப்பட்டுச் சிறையில் உள்ள மற்றவர்களின் சாதியைச் சேர்ந்தவர்களுமல்ல. விருதாசலத்திலிருந்து கரும்புவெட்ட வந்திருந்தவர்கள் அவர்கள்.

         என்கவுன்டரில் கொல்லப்பட்ட இருவரில் பிரபு மீது மட்டுமே முன்னதாக ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளதுந்தவிர இருவர் மீதும் பி.சி.ஆர் வழக்கு ஒன்றும் உள்ளது. இவை இரண்டையும் தவிர மற்றபடி பெரிய வழக்குகள் ஏதுமில்லை. என்கவுன்டர் செய்யப்பட்ட அன்று மதியம் இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டம் பிரயோகிக்கப்பட்டு அவர்களது உறவினர்களிடம் அதற்குரிய ஆணை கொடுக்கப்பட்டுக் கட்டாயமாகக் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் என்கவுன்டரில் கொல்வது எனத் தீர்மானித்த பின்பே அவசரமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

     இரண்டு சுமோக்களில் வந்தவர்கள்தான் ஆல்வின் சுதனைக் கொன்றனர் என்றபோதும் இவர்களில் யார் தாக்கியதில் அவர் இறந்தார் என்பதை உறுதி செய்ய இயலாத சூழலில், ஏற்கனவே வழக்குகள் உள்ள இந்த இருவரும் தேர்வு செய்யப்பட்டு என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இவர்கள் இருவரில் பாரதியை சுதன் கொல்லப்பட்ட அன்றே அவரது வீட்டில் வைத்துக் கைது செய்துள்ளனர். மூன்று நாள் வரை சட்ட விரோதக் காவலில் வைத்துக் கடும் சித்திரவதை செய்த பின்னர் வேறோர் இடத்தில் பிடிபட்டதாகச் சொல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.  கொல்லப்பட்ட பிரபுவும் இன்னும் இருவரும் திருப்பூரில் நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள். இவர்கள் இருவரும் தப்பித்தோடும் மனநிலையில் இல்லை. தாங்கள் கொல்லப்படப் போவதாக காவலர்கள் மூலம் அறிந்த அவர்கள் தங்களைப் பார்க வந்தவர் உறவினர்களிடம் அழுதுள்ளனர். தங்களைக் காவல் நீடிப்பிற்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும், வீடியோ கான்ஃபெரென்சிங் மூலமாகக் காவல் நீடிப்பு செய்ய வேண்டுமெனவும் கெஞ்சியுள்ளனர். பிரபுவின் மனைவி ரோஜா (20) சென்ற 29 அன்று தன் கணவரின் உயிருக்குப் பாதுகாப்புக் கோரி முதல்வர், உள்துறைச் செயலர் மற்றும் மனித உரிமை ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். எனினும் காவல்துறையினர் தாம் நினைத்ததைச் சாதித்துள்ளனர்.

        என்கவுன்டர் செய்யப்பப்பட்டதைப்பற்றிக் காவல்துறையினர் சொல்கிற கதைப்படி,  நவம்பர் 30 அன்று மதுரைச் சிறையிலிருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு இருவரையும் கொண்டு செல்லும்போது, மதுரை லேக் ஏரியா நடையாளர் கழகத்திற்கருகில் இருவரும் “தப்பி ஓடியுள்ளனர்”. ஏதோ ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்று, எங்கெல்லாமோ ஓடி இறுதியில் அன்று இரவு கால்பிரவு கிராமத்தில் தங்களுடன் மோதியதாகக் காவல்துறை சொல்வது இம்மியும் நம்பும்படியாக இல்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அப்பகுதியில் யாரும் சொல்லவில்லை. அந்த மோட்டர் சைக்கிள் எப்படி அவர்கள் கையில் கிடைத்தது, அதன் சொந்தக்காரர் யார், அவர் விசாரிக்கப்பட்டாரா என்பது குறித்தும் காவல்துறையிடம் பதிலில்லை. இரண்டு பேர்களையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல ஓட்டுநர் தவிர ஒரு எஸ்.அய், இரு காவலர்கள் என மூன்று எஸ்கார்ட்களே கூடச் சென்றதாக காவல்துறைக் கண்காணிப்பாளர் கூறினார். இப்படிக் கைதிகள் தப்புகையில் உடனடியாக எஸ்கார்ட்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இன்றுவரை அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

      இருவரும் என்கவுன்டர் செய்யப்பட்ட நேரம் இரவு 8.45 மணி எனக் காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.  ஆனால் மாலை 6 மணி வாக்கிலேயே காட்சி ஊடகங்களில் என்கவுன்டர் செய்தி வந்துவிட்டது, என்கவுன்டர் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் இடத்திற்கருகில் வீடுகள் இல்லை. அப்படியான ஒரு இடத்தை இரண்டு நாட்கள் முன்னதாகவே வெள்ளத்துரை தேடி இப்பக்கத்தில் அலைந்து கொன்டிருந்ததாகவும் ஒரு சிலர் கூறினர். அப்பகுதியின் தலையாரி ஓட்டனேந்தல் பாண்டியை எம் குழுவினர் விசாரித்தபோது, தனக்குக் காலையில்தான் செய்தி தெரிவிக்கப்பட்டதாகவும், தான் உடல்களைப் பார்க்கவில்லை எனவும் கூறினார். அந்த இடத்தை நாங்கள் சென்று பார்வையிட்டபோது, தலையாரி காட்டிய இடத்தில் என்கவுன்டர் செய்யப்பட்டதற்கான எந்தத் தடையமும் இல்லை. தவிரவும் கொல்லப்பட்ட இருவரது உடல்களையும் உடனடியாக எரிக்குமாறு காவல்துறையினர் உறவினர்களை வற்புறுத்தியதும் நமக்கு ஐயத்தை ஏற்படுத்துகிறது. எனினும் இந்த வற்புறுத்தலை மீறி இருவர் உடலும் எரிக்காமல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

  கொல்லப்பட்ட இருவரும் கடும் சித்திரவதைகளால் படுகாயமடைந்திருந்தனர். அவர்கள்  ஆள் நடமாட்டமுள்ள பகுதி ஒன்றில்  நான்கு காவலர்களைச் சமாளித்து, அங்குள்ள யாருக்குமே தெரியாமல் தப்பினர் என்பதைச் சிறு குழந்தைகள் கூட நம்பமாட்டார்கள்.  

எமது பார்வைகளும் கோரிக்கைகளும்

   தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் 9 என்கவுன்டர் கொலைகள் நடந்துள்ளன. இவை அனைத்துமே போலியானவைதான். எல்லோருமே பிடித்துச் சென்று கொல்லப் பட்டவர்கள்தான். அதிலும் இவ்விருவரும் நீதிமன்றக்காவலில், நீதிமன்றத்தின் பொறுப்பில் இருந்தவர்கள். இப்படி நீதிமன்றத்தை மட்டுமே நம்பி இருந்தவர்களைக் கொல்வதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது எனலாம். மணல்மேடு சங்கர், தமிழ்த் தேசியப் போராளிகளான ராஜாராம், சரவணன் உள்ளிட்டோர் இப்படி ஏற்கனவே கொல்லப்பட்டவர்கள். தன் மகன் கொல்லப்படப்போவதாக சங்கரின் தாய் உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று முறையிட்டபோதும் கூடப் பயனில்லை. தங்களின் பொறுப்பில் உள்ளவர்கள் இப்படி நாயைச் சுடுவதுபோலக் கொல்லப்படுவதை நீதிமன்றங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதன் பொருளென்ன? மனச்சாட்சியுள்ள நீதிபதிகள் இவற்றைச்  suo moto வாக எடுத்துக்கொண்டு தலையிட்டிருக்க வேண்டாமா? நீதிமன்றங்கள் என்ன செய்துகொண்டுள்ளன?

   தற்போது இ.த.ச 176 பிரிவின்படி நடைபெறும் மாஜிஸ்ட்ரேட் விசாரணையால் எந்தப்பயனுமில்லை. என்கவுன்டர் என்ற பெயரால் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைகளை சி.பி.ஐ விசாரித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். போலீசின் பிடியிலிருந்து இருவரும் தப்பிச் சென்றது மற்றும் என்கவுன்டரில் இருவரும் கொல்லப்பட்டது ஆகிய இரு வழக்குகளும் சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    புதுக்குளம் ஊர்ப் பெரியவர்கள் காவல் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மானாமதுரைக்குப் புதிதாக மாற்றலாகி வந்துள்ள வெள்ளத்துரையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். ஊர்ப் பெரியவர்கள் எழுந்து வணக்கம் சொன்னபோது இதுவரை 12 என்கவுன்டர் கொலைகளைச் செய்துள்ள வெள்ளத்துரை, அவர்களின் கண்களைச் சந்திக்க இயலாமல் குனிந்து அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு அகன்றுள்ளார். தான் செய்யப் போகிற காரியம் அவரை ஏறெடுத்துப் பார்க்கும் திறனை இழக்கச் செய்துள்ளது.

    என்கவுன்டர் கொலை நடந்தவுடன் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும், என்கவுண்டர் கொலை செய்த அதிகாரிகள் வழக்கு விசாரணையில் தாங்கள் தற்காப்புக்காகத்தான் கொலை செய்ய நேர்ந்தது என்பதை நிறுவிய பின்னரே வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ள நெறிமுறை. என்கவுண்டரில் சம்பத்தப்பட்ட காவலர்களுக்கு வீரப் பரிசுகள் (gallantary awards) வழங்கப்படக் கூடாது எனவும், முறை மீறிய பதவி உயர்வு (out of turn promotions)) தரக்கூடாது எனவும் இந்த நெறிமுறைகள் கூறுகின்றன. தமிழக அரசும் இந்நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு சிறைத் துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நெறிமுறை வழங்கியுள்ளது (தலைமைச் செயலரின் கடிதம் ஆகஸ்ட் 8, 2007). ஆனால் தன் ஆணையத் தானே மீறுவதிலும், சட்டங்களைக் காலில் போட்டு மிதிப்பதிலும் முன்னுக்கு நிற்கும் காவல்துறை இவற்றை மதிப்பதே இல்லை. கீழ்நிலையில் இருந்த வெள்ளத்துரை இன்று உதவிக் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளது, அவரது என்கவுன்டர் கொலைச் சாதனைகளுக்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

  என்கவுன்டர் கொலைகளை அதே காவல்நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளே விசாரிக்கக்கூடாது என்பதும், என்கவுன்டர் செய்யப்பட்டவ்ர்களின் உறவினர்கள் இது தொடர்பாக முன்வைக்கும் அய்யங்கள் விசாரணையில் முக்கிய கவனம் பெறவேண்டும் என்பதும் தேசிய மனித உரிமை ஆணையம் அளித்து, தமிழக அரசு ஏற்றுக்கோண்ட இதர நெறிமுறைகள். இந்த அடிப்படையிலேயே நாங்கள் சி.பி.ஐ விசாரணை கோருகிறோம். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இது அப்பட்டமான கொலை எனச் சொல்வதால், திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்து, மாஜிஸ்ட்ரேட் விசாரணையுடன் அதை முடித்துவிடாமல் உறவினர்களின் குற்றச்சாட்டைக் கணக்கில் எடுத்து விசாரிக்க வேண்டும் இதற்கு ஏதுவாக வெள்ளத்துரை மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகள் உடனடியாகத்  தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.  முதற்கட்ட விசாரணையில் இது போலி என்கவுன்டர் எனத் தெரியும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

   புதுக்குளம் கிராமத்தில் எட்டு வீடுகள்  உடைத்து நொறுக்கப்பட்டது, சொத்துக்கள் அழிக்கப்பட்டது, மற்றும் களவாடப்பட்டது தொடர்பான புகார்களும் இவ் விசாரணையில் விசாரிக்கப்பட வேண்டும். நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    கொல்லப்பட்ட பிரபுவின் மனைவி இருபதே வயது நிரம்பிய சிறு பெண். ஒரு வயதில் அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. தனது பொறுப்பிலிருந்தபோது கொல்லப்பட்ட பாரதி, பிரபு இருவருக்கும் நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக இழப்பீடு வழங்க ஆணையிட வேண்டும். உடனடி உறவினர்களுக்கு அரசுப்பணி வழங்க வேண்டும்.

   இந்த என்கவுன்டர் கொலைகளை ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் எதிர்த்துள்ளன. எனினும் இதைக் கண்டித்துச் சுவரொட்டி ஒட்டிய ‘தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை’ச் சேர்ந்த காளைலிங்கம், தேவதாஸ் என்கிற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கைதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் இரண்டும் திரும்பப் பெறப்பட வேண்டும்.

    இந்த என்கவுன்டரை வெள்ளத்துரை செய்தபோதும் மொத்தத் தமிழகக் காவல்துறைக்கும் இதில் பொறுப்புண்டு. தமிழகக் காவல்துறை தன் என்கவுன்டர் கலாச்சாரத்தைக் கைவிடவேண்டும். இந்தியாவெங்கும் இப்படிப் போலி என்கவுன்டர்களுக்காகக ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்படப் பலர் இன்று சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த என்கவுன்டர் கொலைகளை நாங்கள் கண்டிப்பதென்பது எந்த வகையிலும் உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதனின் கொலைக்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என்பதன் பொருளில் அல்ல. சுதனின் கொலையை மட்டுமல்ல, அதன் பின்னணியாக உள்ள சாதீயக் கும்பல் வன்முறைக் கலாச்சாரத்தையும் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சுதனைக் கொன்றவர்கள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு அதிகபட்சத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால் சட்டத்தைக் காவல்துறை தன் கையில் எடுத்துக் கொள்வது மிகப் பெரிய ஆபத்தாகிவிடும். எவ்வகையிலும் சனநாயக ஆட்சி முறைக்கு இது ஏற்புடையதல்ல

நன்றி:- அ.மார்க்ஸ் மற்றும் கோ.சுகுமாரன்

வெள்ளி, நவம்பர் 30, 2012

உச்சநீதிமன்றம் இனியாவது செயல்படவேண்டும்


உச்சநீதிமன்றம் இனியாவது செயல்படவேண்டும்
                                 -மு.சிவகுருநாதன்

    காவிரி நதிநீருக்கான நமது பாரம்பரிய உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோய் இன்று ஒரு சொட்டு நீர் கூட இல்லை என்ற நிலைக்கு போயிருக்கிறோம்.

    காவிரி நடுவர் மன்ற இடைக்காலத்தீர்ப்பு, இறுதிதீர்ப்பு எதையும் கர்நாடக அரசு மதித்ததில்லை. சமீபத்திய உச்சநீதிமன்ற உத்தரவையும் அவர்கள் செயல்படுத்தவில்லை. மாறாக அந்த ஆணைகளை எல்லாம் காலில் போட்டு மிதிக்க்கும் ஓர் மாநில அரசை நீதிமன்றங்களும் மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் மிகவும் ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயம்.  

   இவ்வளவிற்கும் மத்தியில் தி.மு.க. கூட்டணியில் ஆட்சி; கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி; தமிழகத்தில் பா.ஜ.க. உடன் கூட்டணி சேரத்துடிக்கும் ஏன் மறைமுகக் கூட்டணி வைத்திருக்கும் அ.இ.அ.தி.மு.க வின் ஆட்சி. இவர்கள் அனைவரும் சேர்ந்து தமிழக மக்களை முட்டாளாக்கிக் கொண்டுள்ளனர். மாறாக கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., காங்கிரஸ், இடது சாரிகள், ஐக்கிய ஜனதா தளம் போன்ற அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. இதுதான் தமிழகத்தின் அவலம்.

   தன்னுடைய ஆணைகளை செயல்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை கண்டிக்கக்கூட மனமில்லாத உச்சநீதிமன்றம் கட்டை பஞ்சாயத்து லெவலில் மறு உத்தரவு பிறப்பிப்பதுதான் மிகவும் கொடூரமானது. காவிரி நடுவர் மன்றம், காவிரி நதிநீர் ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகிய எதனுடைய உத்தரவையும் மதிக்காத கரநாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச்சொல்லும் உச்சநீதிமன்ற வழிகாட்டலை என்னவென்று சொல்வது?

  இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளித்து கர்நாடக அரசுடன் நேற்று (29.11.2012) பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியுடன் திரும்பியிருக்கிறார். கர்நாடக அரசின் தொடர் நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கு  இதில் வியப்பெதுவுமில்லை. இந்நிலை உச்சநீதிமன்றத்திற்கு தெரியாமல் போனதுதான் வேதனை.

     பேச்சுவார்த்தையின் முடிவுகள் தமிழக அரசின் சார்பில் இன்று (30.11.2012) உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றம்  வரும் திங்கள்கிழமை (03.12.2012) உரிய முடிவெடுக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

  நீதிமன்றங்களின்பால் இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்கள் இனியாவது உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்குமென நம்பிக் காத்திருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட இரு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் வெளியிட்டு இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கவேண்டும்.

  • இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படும் கர்நாடக அரசை உடன் கலைக்கவேண்டும்.
  • கர்நாடக அணைகளை மத்திய அரசு / காவிரி நதிநீர் ஆணையம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை உடன் விடுவிக்கவேண்டும்.

வெள்ளி, நவம்பர் 16, 2012

தருமபுரி: தலித்கள் மீதான வன்கொடுமை உண்மை அறியும் குழு அறிக்கை

தருமபுரி: தலித்கள் மீதான வன்கொடுமை உண்மை அறியும் குழு அறிக்கை


தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல் 
உண்மை அறியும் குழு அறிக்கை 
                                                                                                                      தருமபுரி
                                                                                                                     நவம்பர் 15, 2012




     சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய மூன்று தலித் கிராமங்கள், அருகாமைக் கிராமங்களிலுள்ள வன்னியர் சாதியினரால் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்ட செய்தி தீண்டாமை ஒழிப்பிலும், சமூக ஒற்றுமையிலும் அக்கறையுள்ள பலரையும் கலங்கடித்தது. சுமார் பத்தாண்டுகள் முன்புவரை “தமிழகத்தின் நக்சல்பாரி” என்றெல்லாம் அழைக்கப்பட்ட இப்பகுதி இன்று வரை நக்சல் எதிர்ப்புக் காவற்படைகளின் கடும் கண்காணிப்பிற்குரிய ஒன்றாக உள்ளது. நக்சல்பாரிகள் எனப் பொதுவாக அறியப்படும் பல்வேறு மார்க்சிய, லெனினிய, மாவோயிஸ்ட் கட்சிக் குழுக்களால் தீண்டாமை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்ட பகுதியும்கூட இது. இத்தகைய ஒரு பகுதியில் இப்படி ஒரு வன்கொடுமை நிகழ்ந்தது வருத்தத்தையும் வியப்பையும் அளித்தது. இந்தியத் துணைக் கண்ட அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்நிகழ்வு குறித்து ஏராளமான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணமுள்ளன. இவற்றைத் தொகுத்து, இவற்றின் உண்மைத் தன்மைகளை மதிப்பிடுவதும், இந்த வன்முறையின் பின்னணி, நிர்வாகத்தின் கவனக் குறைவுகள் மற்றும் அலட்சியங்கள் ஏதுமிருப்பின் அவற்றைக் கண்டறிவதும்,, உடனடி நிவாரணங்கள், எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றைப் பரிந்துரைப்பதும் அவசியமாகிறது. இந்த அடிப்படையில் உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டது.



                                                            எரிந்த வேன்


     தென்னிந்திய அளவில் மனித உரிமைக் களத்தில் பணிசெய்யும் முக்கிய அமைப்புகளில் நீண்ட காலமாகச் செயலாற்றும் அநுபவமிக்க மூத்த மனித உரிமைப் போராளிகள் பலரும் பங்குபெற்ற இக்குழுவை சென்னையில் செயல்படும் ‘சிவில் உரிமைக் கண்காணிப்புக் குழு’ (Civil Rights Monitoring Committee)  ஒருங்கிணைத்துச் செயல்படுத்தியது.

உண்மை அறியும் குழு உறுப்பினர்கள்

  1.   பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (People’s Union for Human Rights - PUHR), சென்னை,
  2.    திரு. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for People’s Rights - FPR), புதுச்சேரி,
  3.  திரு. வி.எஸ்.கிருஷ்ணா, தலைவர், மனித உரிமைக் கழகம் (Human Rights Forum), ஆந்திர மாநிலம்,
  4.   பேரா. நகரி பாபையா, மக்கள் ஜனநாயகக் கழகம் (people’s Democratic Front), பெங்களூரு,
  5.    திரு. சிவலிங்கம், ஸ்வாபிமான தலித் சக்தி (Swabimana Dalit Sakthi), பெங்களூரு,
  6.   வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (People’s Union for Human Rights), மதுரை
  7.    திரு. ஜி.கே.ராமசாமி, மக்கள் ஜனநாயகக் கழகம் (People’s Democratic Front), பெங்களூரு,
  8.  பி.பரிமளா, சேவ் டமில்ஸ் மூவ்மென்ட் (Save Tamils Movement), சென்னை,
  9.   திரு. ஜான்சன், சேவ் டமில்ஸ் மூவ்மென்ட் (Save Tamils Movement), சென்னை,
10.  கவின்மலர், பத்திரிக்கையாளர், சென்னை,
11.  திரு. செந்தளிர். பத்திரிக்கையாளர், சென்னை
12.  ரேவண்ணா, ஸ்வாபிமான தலித் சக்தி (Swabimana Dalit Sakthi), பெங்களூரு,
13.  திரு. கணேஷ், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (People’s Union for Civil Rights). பெங்களூரு,
14.  திரு. பி.ஷண்முகம், கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் (Karnataka Tamils Movement). பெங்களூரு,
15.  அம்ரிதாபா பாசு, மாணவப் பத்திரிக்கையாளர் (Student Journalist), சென்னை,
16.  ஷடாக்‌ஷி கவாடே, மாணவப் பத்திரிக்கையாளர் (Student Journalist), சென்னை,
17.  விஷ்ணுபுரம் சரவணன், விடுதலைக் குயில்கள், கும்பகோணம்.
18.  எஸ். நாசர், சேவ் டமில்ஸ் மூவ்மென்ட் (Save Tamils Movement), சென்னை,

       இக் குழுவினர் நேற்று (நவம்பர் 14) தருமபுரி மாவட்டத்தில் நாய்க்கன்கொட்டாய்க்கு அருகிலுள்ள, தாக்குதலால் பாதிக்கப்பட்ட நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பள்ளி கிராமங்களுக்குச் சென்று அழிவுகளைப் பார்வையிட்டனர். அங்குள்ள மக்களைச் சந்தித்து விரிவாகப் பேசினர். செல்லன்கொட்டாயிலுள்ள இறந்துபோன நாகராஜின் வீட்டிற்கும் சென்றனர். வெறிச்சோடிக் கிடந்த அந்தக் கிராமத்தில் யாருமில்லை. தாக்குதலுக்குக் காரணமாயிருந்த வன்னிய கிராமங்கள் பலவற்றிலும் இன்று யாரும் இல்லை. குறிப்பாக ஆண்கள் யாரும் இல்லை. காவல்துறை நடவடிக்கைகளுக்கு அஞ்சி அவர்கள் அருகிலுள்ள கிராமங்களில், உறவினர்கள் வீடுகளில் ஒளிந்துள்ளதாகத் தெரிகிறது. தருமபுரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் அவர்களையும் சந்தித்து விரிவாகப் பேசினர்.

பின்னணி

         தமிழகத்தின் வட மேற்கு எல்லையிலுள்ள தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய வரட்சி மாவட்டங்களில் ஒன்று. பெண் சிசுக் கொலை, தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவற்றிற்கும் பெயர் பெற்ற மாவட்டம் இது. தருமபுரி மாவட்டத்தில், குறிப்பாக தற்போது தலித் மக்கள் மீதுத் தாக்குதல் நடைபெற்ற இப்பகுதியில் 1970களில்  நக்சல்பாரி இயக்கம் வளர்ந்தது. தீண்டாமை, கந்து வட்டிக் கொடுமை, கள்ளச் சாராய மாஃபியா முதலானவற்றை எதித்துப் போராடியது. கடும் அடக்குமுறையை ஏவி அரசு இவ்வியக்கத்தை ஒடுக்கியது. வால்டர் தேவாரத்தின் தலைமையில் தருமபுரி, திருப்பத்தூர், சேலம் பகுதிகளைச் சேர்ந்த 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

   செப்டம்பர் 12, 1980 அன்று இப்பகுதியில் செயல்பட்டு வந்த பாலனைப் போலீஸ் பிடித்துச் சென்று அடித்துக் கொன்றது, நக்சல்பாரி இயக்கத்தில் இருந்து பிரிந்து, தொடர்ந்து அங்குச் செயல்பட்டு வந்த குழுக்கள் பறை அடிப்பது, பிணந்தூக்குவது முதலான தீண்டாமைக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வந்தன. சாதி மறுப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தன. இன்னொரு பக்கம் காவல்துறைக் கண்காணிப்புகளும் அடக்குமுறைகளும் தொடர்ந்தன.

   ஜனவரி 10, 2000 அன்று இப்பகுதியில் கட்சிப் பணி புரிந்த பொறியாளர் ரவீந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டார். நவம்பர் 24, 2002 அன்று ரவீந்திரன் கொலையின் நேரடி சாட்சியாகவும் இப்பகுதியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தவருமான சிவா சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடனிருந்த 28 பேர் கைது செய்யப்பட்டு பொடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் இன்று எரிக்கப்பட்ட நத்தம் காலனியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நக்சல்பாரி இயக்கம் கொடுமையாக ஒடுக்கப்பட்ட பின்பு இப்பகுதியில் வன்னியர்கள் மத்தியில் பா.ம.கவும், தலித்கள் மத்தியில் விடுதலைச் சிறுத்தைகளும் வளரத் தொடங்கின. பொடாவில் கைதாகியிருந்தவர்களில் ஒரு சிலரும் கூட விடுதலைச் சிறுத்தைகளில் இணைந்தனர். அதேபோல முன்னாள் நக்சல்பாரி இயக்க உறுப்பினர்களாகவும் அநுதாபிகளாகவும் இருந்த பலர் பா.ம.க வில் இணைந்தனர்.

       நக்சல்பாரி அமைப்பின் முயற்சியில் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து ஒரளவு விடுபட்ட மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அருகிலுள்ள தொழில் நகரங்களுக்குச் சென்று பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர். அதன்மூலம் ஓரளவு அவர்களின் வீடுகளில் மிகவும் அடிப்படையான வசதிகள் உருவாயின. தொலைக்காட்சிப் பெட்டி, வாஷிங் மெஷின், டிஷ் ஆன்டெனா, கான்க்ரீட் வீடுகள் சகிதம் தலித் பகுதிகள் மாற்றம் பெற்றன. பிள்ளைகள் கல்லூரி மற்றும் தொழிற் படிப்புகளில் பயிலும் நிலையும் உருவானது. எனவே அவர்கள் யாரும் தீண்டாமைக்குட்பட்ட சாதிக் கடமைகள் எதையும் செய்வதில்லை.
 
                                          நகைகளைக் காணோம்


      மங்கியிருந்த சாதீய உணர்வுகள் மீண்டும் தலை எடுக்கத் தொடங்கின. பறை அடிப்பது, பிணந்தூக்குவது முதலிய பணிகளை வெளியூர்களிலிருந்த தலித்களைக் கொண்டு ஆதிக்க சாதியினர் நிறைவேற்றிக் கொண்டனர். சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிரான முணுமுணுப்புகள், கண்டனங்கள், ஊர்க்கூட்டங்கள் முதலியனவும் நடை பெறலாயின. இப்பகுதியைச் சேர்ந்ததில்லை ஆயினும் சற்றுத் தொலைவிலுள்ள மருக்கலம்பட்டி கோழிமக்கனூர் என்னுமிடத்தில் முனுசாமி மனைவி கம்சலா என்கிற தலித் பெண்மணி பாதைத் தகராறு ஒன்றில் சாதி இந்து ஒருவரால் இரண்டாண்டுகளுக்கு முன் குத்திக் கொல்லப்பட்டார்.  

தற்போதைய வன்முறை


      நாய்க்கன்கொட்டாய், நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவனின் மகன் இளவரசன் (23) என்கிற தலித் இளைஞனும், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த நாகராஜ் மகள் திவ்யா (21) என்கிற வன்னியர் சாதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் சுமார் இரண்டாண்டுகள் காதலித்து, சென்ற அக்டோபர் 14, 2012 அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்திற்குப் பெண் வீட்டாரிடமிருந்து கடும் எதிர்ப்பும் மிரட்டலும் இருந்துள்ளது. இதை ஒட்டி மணமக்கள் டி.ஐ.ஜி சஞ்சய் குமார் மற்றும் எஸ்.பி அஸ்ரா கார்கிடம் புகார் செய்தனர். அவர்களும் பாதுகாப்பு அளித்துள்ளனர்.



                 அன்று நிகழ்ந்த கொடுமையை நினைக்கையில்...


      எனினும் வன்னிய சாதியில் முக்கியமானவர்களும், உள்ளூர் பா.ம.க தலைவர்களும் திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்து அழைத்து வருமாறு திவ்யாவின் தந்தை நாகராஜை வற்புறுத்தியுள்ளனர்.  தந்தையின் வேண்டுகோளை திவ்யா ஏற்கவில்லை. இந்நிலையில் சென்ற நவம்பர் 4 அன்று பா.ம.கவின் தருமபுரி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் மதியழகன் உள்ளிட்ட பலர் தம் சாதியினரைப் பெருந்திரளாகத் திரட்டி நாய்க்கன்கொட்டாயில் சாதிப் பஞ்சாயத்து ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் இந்தக் காதல் திருமணம் குறித்துக் கடுமையாகப் பலரும் பேசியுள்ளனர். இறுதியில் அவர்கள் திரண்டு சென்று, இளவரசனின் ஊரான நத்தம் காலனி ஊர்த்தலைவர் சக்தி என்பவரைச் சந்தித்து திவ்யாவைத் தம்மிடம் ஒப்படைக்குமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் எனவும் மிரட்டியுள்ளனர்.

      சுற்றத்தாரின் வற்புறுத்தல் மற்றும் இதனால் ஏற்பட்ட அவமானம் ஆகியவற்றால் சென்ற நவம்பர் 7 மதியம் 2 மணி அளவில் வித்யாவின் தந்தை நாகராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் எனச் சொல்லபடுகிறது. அன்று மாலை 4 மணி அளவில் பா.ம.க தலைவர் மதியழகன், வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜா, கொட்டாவூர் எஸ்.மாது ஆகியோர் தலைமையில் பெருந்திரளாகத் திரண்ட வன்னியர்கள் நாகராஜின் பிணத்தைத் தூக்கி வந்து, நத்தம் காலனியில் இருந்த இளவரசனின் வீட்டின் முன் வைத்து, ஆத்திரத்துடன் சாதி சொல்லி இழிவாகப் பேசிக் கொண்டே, கடப்பாரை, உருட்டுக் கட்டைகள், இரும்புத் தடிகள் முதலான கொடும் ஆயுதங்களுடன் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதலைத் தொடங்கினர். பெரிய அளவில் வீடுகளை எரித்து வன்முறைகளை மேற்கொண்டபின் பிணத்தை எடுத்துச் சென்று நெடுஞ்சாலையில் கிடத்தினர். தொடர்ந்து கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய தலித் குடியிருப்புகளும் தாக்கிச் சூறையாடப்பட்டுப் பின் எரியூட்டப்பட்டன. தாக்குதலினூடே சாலை மறியல், மரங்களை வெட்டிச் சாலைகளில் போட்டு தீயணைப்பு வண்டிகள் உட்பட எதுவும் வர இயலாமல் தடுத்தனர். ஆயுதங்களுடன் கூடிய பெருந்திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் வீடுகளிலிருந்த தலித் மக்கள் வெளியே ஓடி உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டனர். அப்படியும் கையில் அகப்பட்டவர்களை அடித்துள்ளனர்.  வன்முறையில் சில பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

                  இது ஒரு பெட்டிக்கடை இருந்த இடம்

இத் தாக்குதலின் விளைவான பாதிப்புகள் குறித்து அரசு மற்றும் ஊடகங்களின் மதிப்பீடு:  

       268 வீடுகளும் நத்தம் காலனி 144; கொண்டம்பட்டி 90; அண்ணா நகர் 34), 50 இரு சக்கர வாகனங்களும், நான்கு வேன்களும் எரிக்கப்பட்டன எனவும், இதனாலும் இதை ஒட்டி நடந்த சூறையாடல்களினாலும் ஏற்பட்ட இழப்பீட்டின் மதிப்பு சுமார் 3.5 கோடி முதல் 4 கோடி வரை இருக்கலாம் எனவும் காவல்துறையும் வருவாய்த்துறையும் மதிப்பிட்டுள்ளன.  

    ஆனால் அரசின் இந்த இழப்பீடு குறித்த மதிப்பீடு தவறென தேசியப் பட்டியல் சாதியினருக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. சென்ற நவம்பர் 12 அன்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ஆணையம் மொத்த இழப்பு சுமார் 6.95 கோடிகள் வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. 40 வீடுகள் முழுமையாக எரிந்து அழிந்துள்ளன எனவும், 175 வீடுகள் எரிந்து பாதிக்கப்பட்டுள்ளன எனவும் ஆணையத் தலைவர் ஆர்.எல்.புனியா தெரிவித்துள்ளார்.

   இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் இப்போது எரிக்கப்பட்ட 268 வீட்டு உரிமையாளர்களுக்கும் தலா 50,000 ரூபாய்கள் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சில பாத்திரங்கள், வேட்டி, புடவை, இன்று வரை மூன்று வேளை உணவு ஆகியன வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக எரிக்கப்பட்டுள்ள 40 வீடுகளையும் தலா 1.5 லட்ச ரூபாயில் புதிதாகக் கட்டித் தருவது எனவும், பிற எரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வீடுகள் அனைத்தையும் மொத்தம் 40.9 இலட்ச ரூபாயில் சீரமைத்துத் தருவது எனவும் அரசு அறிவித்துள்ளது.


காவல்துறை நடவடிக்கை

 தருமபுரியில் தலித்துகள் தாக்கப்பட்டது குறித்து கிருஷ்ணபுரம் காவல்நிலையத்தில் போடப்பட்ட வழக்கு விவரங்கள்: 

நத்தம் காலனி: Cr. No. 296/12 u/s 147, 148, 435, 436, 427, 307 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act. 300 பேர் மீது வழக்கு.  இதில் 87 பேர் அடையாளம் தெரிந்தவர்கள். 20பேர்கைது.  அண்ணா நகர்: Cr. No. 295/12 u/s 147, 148, 435, 436, 427, 307 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act.  500 பேர் மீது வழக்கு. இதில் 17 பேர் அடையாளம் தெரிந்தவர்கள். 7 பேர் கைது. 

கொட்டாம்பட்டி: Cr. No. 297/12 u/s 147, 148, 435, 436, 427, 307 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act. 80 பேர் மீது வழக்கு. 26 பேர் கைது.  செங்கல்மேடு: Cr. No. 298/12 u/s 147, 148, 435, 436, 427, 307, 395 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act. 44 பேர் மீது வழக்கு. 39 பேர் கைது. 

இது தவிர சாலை மறியல் செய்ததற்காகவும், மரங்களை வெட்டிச் சாலையில் போட்டு போக்குவரத்தைத் தடை செய்ததற்காகவும் மேலும் இரு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இதுவரையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127.  

எமது பார்வைகள்

1. கலவரம் தொடங்கியபின் உடனடியாக நடவடிக்கை எடுத்துக் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோதும் காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இன்றைய நிலையைத் தடுத்திருக்கலாம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, சாதிக் கலவரங்களுக்கு வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து விழிப்புணர்வுக் குழுக்கள் முதலியவற்றை அமைத்து அவற்றைக் கண்காணிக்க வேண்டும். அப்பகுதியில் துப்பாக்கி லைசன்ஸ் முதலியவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை அரசு கடைபிடிப்பதே இல்லை. இது சரியாகக் கடைபிடிக்கப்பட்டால் இது போன்ற கலவரங்களை முன்கூட்டியே தடுக்கலாம். 

2. இக்காதல் திருமணம் நடைபெற்று சுமார் மூன்று வாரங்களுக்குப் பின் இவ்வன்முறை நடைபெற்றுள்ளது. இடைப்பட்ட காலத்தில் தன் உயிருக்கு ஆபத்து என இக்காதல் தம்பதியர் டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி அளவில் புகார் அளித்துள்ளனர். இப்பகுதியில் சாதி உணர்வுகள் தலை எடுத்து வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்தியிருந்தால் இன்றைய நிகழ்வுகளைத் தடுத்திருக்கலாம். சென்ற செப்டம்பர் 17 அன்று வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு குறித்து தருமபுரியில் நடத்தப்பட்ட விளக்கக் கூட்டத்தில், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மிகவும் சாதி வெறியுடனும், வன்முறையைத் தூண்டும் விதத்திலும், காதல் திருமணங்களைக் கண்டித்தும் பேசியுள்ளார். பின்னர் அக்டோபர் 4ல் நடைபெற்ற சாதிப் பஞ்சாயத்திலும் இந்தக் காதல் திருமணம் குறித்துக் கடும் நடவடிக்கைகள் பற்றி சாதி வெறியுடன் பேசப்பட்டுள்ளது. இதை உளவுத்துறையினர் குறிப்பெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு நடந்தும் இப்படியான ஒரு வன்முறைத் தாக்குதலை காவல்துறை ஊகிக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது. சாதி வெறி ஒரு பக்கம் என்றால், காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை இவ் வன்முறையின் காரணமாக அமைந்துள்ளது.

3. கலவரத்தன்று ஒரு வேனில் போலீஸ்காரர்கள் இருந்தும் கலவரத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக கிருஷ்ணபுரம் காவல் நிலைய டி.எஸ்.பி ஒரு வன்னியர் எனத் தெரிகிறது. இன்று அவருக்குக் கீழே உள்ள அதிகாரிகள் இருவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுவும் கூட இந்தக் காரணத்திற்காகப் பணி நீக்கம் செய்யப்படவில்லை. தவிரவும் இன்னமும் அந்த டி.எஸ்.பி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய பகுதிகளில் ஆதிக்கம் செய்யும் அதே சாதியினரை காவல் மற்றும் ரெவின்யூ பதவிகளில் அமர்த்துவது பொதுவாக இது போன்ற வன்முறைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்கள் நீதி பெறுவதற்கும் தடையாக அமைந்து விடுகிறது.
.
4. இவ்வன்முறை மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. உரிய ஆயுதங்களுடன் சென்று தொலைக்காட்சிப் பெட்டிகள். மின் விசிறிகள், வாகனங்கள், பீரோக்கள் முதலியன உடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.. முழு அழிவுகளும் மேற்கொள்ளப்படும் வரை காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் உள்ளே நுழைவதற்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்துள்ளன. உடைத்து எரியூட்டப்பட்டது தவிர பொருட்கள், நகைகள், சேமிப்புகள் முதலியன கொள்ளை அடிக்கப்பட்டும் உள்ளன. ஆக இது மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு வன்முறை (organized violence).

5. தலித் மக்கள் இதுபோல ஆதிக்க சாதியினரைச் சார்ந்திராமலும், ஓரளவு ஆதிக்கச் சாதியினருக்குச் சமமான அளவில் அடிப்படை நவீன வசதிகளுடனும் வாழ்கிற சூழலில் நடைபெறும் சாதி வன்முறைகள், அவர்களின் இத்தகைய வசதிகளையும் பொருட்களையும், சம அந்தஸ்தில் கட்டப்பட்ட வீடுகளையும் அழிப்பதாக உள்ளது கவனிக்கத்தக்கது. கொடியங்குளம் மற்றும் தென்மாவட்டக் கலவரங்களிலும் இத்தன்மையைக் காண முடியும். ஆண்களைக் கொலை செய்வது, பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்குவது, நவீன வாழ்வு தலித்களுக்கு ஏற்படுத்தியுள்ள வசதிகளை அழிப்பது என்பன தலித் மக்களின் மீதான வன்கொடுமை வடிவங்களாக உள்ளன.

6. தமிழகம் முழுமையும் சாதி மதங்களைத் தாண்டிய காதல் திருமணங்கள் கவுரவக் கொலைகளால் எதிர் கொள்ளப்படுதல், அல்லது அத்தம்பதியர் தற்கொலைக்குத் தூண்டப்படுதல் என்கிற நிலை அதிகமாகியுள்ளது. சாதி அமைப்புகள், சாதி அரசியல், சாதிக் கட்சிகளின் பெருக்கம் என்பன இதன் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லாச் சாதி அமைப்புகளுமே, குறிப்பாக கொங்கு வேளாளர் அமைப்பு, வன்னியர் சங்கம் முதலியன காதல் திருமணங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றன. சென்ற சித்திரை முழு நிலவுத் திருநாளில் மகாபலிபுரத்தில் கூட்டப்பட்ட வன்னியர் சங்க விழாவில், அச்சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இவ்வாறு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களும் இதைக் கண்டிக்கவில்லை.



                                       அப்பு, பாலன் நினைவாக...

        ஒருபக்கம் இன்றைய வாழ்க்கை முறையில் திருமண வயது தள்ளிப் போகிறது இருபாலரும் இணந்து கல்வி பயில்வதும் வேலை பார்ப்பதும் அதிகமாகி வருகிறது, செல்போன் மூலம் எந்நேரமும், பெரியவர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இவை காதலித்துத் திருமணங்கள் செய்யும் நிலையை அதிகரித்துள்ளன. இந்தக் காதல் திருமணங்கள் பலவும் சாதிகளைத் தாண்டியதாகத்தான் அமைகின்றன.


                                  இரும்பு பீரோ உடைத்துக் கொள்ளை

         ஆனால் அதே நேரத்தில் சாதி மத இறுக்கங்கள் சமூகத்தில் அதிகமாகிக் கொண்டே போகின்றன. சாதிக் கட்சிகளும் சாதி
அமைப்புகளும் அதிகமாகியுள்ளன. சாதி அல்லது மதம் போன்ற ஒரு குறிப்பான அடையாளங்களின் அடிப்படையில் கட்சிகள் உருவாகும்போது அவர்களின் அதிகபட்ச ஆதரவிற்கு ஒரு எல்லை, limit ஏற்பட்டுவிடுகிறது. எனவே தமது குறிப்பிட்ட ஆதரவுச் சாதியை அதிகபட்சமாகத் திரட்டி consolidate பண்ணுவது என்பதே இக்கட்சிகளின் ஒரே வேலையாகி விடுகிறது. எனவே மற்றவர்களின் மீது வெறுப்பை விதைப்பதற்கு இவை தயங்குவதில்லை.

தன் சாதி ஆதிக்கத்தை விரிவுப்படுத்துவது, தன் சாதிக்காரரை முதலமைச்சர் ஆக்குவது, தன் சாதிப் பெண்களை வேறு யாரும் குறிப்பாகக் குறைந்த சாதியினர் திருமணம் செய்வதைத் தடுப்பது என்பதெல்லாம் இன்று வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. எல்லாச் சாதி அமைப்புகளும், மதவாத அமைப்புகளும் காதல் திருமணங்களுக்கு எதிராக இருப்பதையும் காணலாம். காதலர் தினக் கொண்டாட்டங்கள் மீது வன்முறை மேற்கொள்வது, காதலர்களை அடித்துப் பிரிப்பது என்பதெல்லாம் அதிகமாகியுள்ளன. இந்த வன்முறையைப் பொருத்தமட்டில் பா.ம.கவின் சாதி அரசியல் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது. இதுவரை பா.ம.க தரப்பில் மட்டுமே இந்த வன்முறை கண்டிக்ககப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.



                                        தொழிற் பொருட்கள் நாசம்

7. இழப்பீடு குறித்த அரசின் மதிப்பீடும், தற்போது கொடுக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையும் மிகக் குறைவு. பொருளிழப்பு குறித்த தேசிய பட்டியல் சாதி ஆணையத்தின் மதிப்பீடாகிய 7 கோடி ரூபாய் என்பதே சரியாக இருக்கும்.  ஆனால் கொடுக்கப்பட்டுள்ள உதவித் தொகையின் மதிப்பு சுமர் 1.75 கோடி ரூபாய்கள் மட்டுமே. எரிக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கும் (தலா 1.75 இலட்சம்), சீர்திருத்துவதற்கும் (எஞ்சிய 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் மொத்தம் ரூ 40.9 இலட்சம்) அரசு செலவழிக்கத் திட்டமிட்டுள்ள தொகை மிக மிகக் குறைவு. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி பட்டியல் சாதியினரது வீடுகள் இவ்வாறு அழிக்கப்படும்போது இது தொடர்பான நிதியிலிருந்து அவ்வீடுகள் திருப்பிக் கட்டித் தரப்பட வேண்டும்.  திருத்தப்பட்ட விதிகளின்படி இது போன்ற இழப்புகளின்போது கொடுக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையின் குறைந்தபட்ச மதிப்பு 1,20,000 ரூபாய்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


                                                 சோற்றுக்குக் 'கியூ'


எமது பரிந்துரைகள்
  1. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படி தமிழகம் முழுவதும் சாதிக் கலவரம் நடைபெறும் வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து உரிய கண்காணிப்புக் குழுக்கள் முதலியவற்றை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். சட்டத்திலும் விதிகளிலும் கண்டுள்ள இதர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். உடனடி நடவடிக்கையாக அரசு இதை மேற்கொள்ள வேண்டும். காதல் திருமணத் தம்பதியர் புகார் கொடுத்திருந்தும் கலவரச் சூழலை ஊகித்து உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். வெறுமனே வேறு காரணங்களைச் சொல்லி தற்காலிகப் பணி நீக்கம் செய்து, பிறகு சில மாதங்களுக்குப் பின் அவர்களது பணி நீக்கத்தை ரத்து செய்வது என்பதாக அல்லாமல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசு அதிகாரிகள் பொறுப்பைத் தட்டிக் கழைத்தல் என்கிற பிரிவின் கீழ் குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகராஜின் தற்கொலையேகூட சாதிக் கலவரத்தைத் தூண்டுவதற்காகச் செய்யப்பட்ட கொலையோ என்கிற சந்தேகம் சிலர் மத்தியில் இருப்பதால், நாகராஜின் பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவாக வெளியிட்டு, அந்த அடிப்படையில் தேவையாயின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  2. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளைக் கடைபிடிக்காத காவல் மற்றும் ரெவின்யூ அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு இச்சட்டம் திருத்தப்பட வேண்டும். சாதி மீறிய திருமணத்திற்கு எதிராகப் பேசுவதையும் இச்சட்டத்தின் கீழ் சாதி கூறி இழிவு செய்வது, வன்முறையைத் தூண்டுவது என்கிற அளவில் குற்றமாக்க வேண்டும்.
  3. வன்முறையில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை சுமார் 800 பேர்கள். போடப்பட்டுள்ள வழக்குகளிலும் வன்முறை மேற்கொண்டவர்களாக அதிகம் பேர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தும் இதுவரை 127 பேர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர், விரைந்து பிறரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்குகளின் விசாரணைக்கென சிறப்பு நீதிமன்றம் அமைத்து, ஆந்திர மாநிலம் குண்டூர் போன்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டதுபோல பாதிக்கப்படட கிராமங்களிலேயே இந்நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும்.  

                                                           எரிந்த வேன் 
4.   வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கண்டுள்ளபடி எரிக்கப்பட்ட வீடுகளை இதற்குரிய நிதியிலிருந்து அரசே கட்டித்தர வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் இதற்கென குறைந்தபட்சம் ஐந்து இலட்ச ரூபாய்கள் ஒதுக்க வேண்டும். பகுதியாக இழப்புகள் ஏற்பட்டுள்ள வீடுகளுக்குப் பாதிப்புகளுக்குத் தகுந்தாற்போல இழப்பீடு வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை மூன்று இலட்சத்திற்குக் குறையக் கூடாது.  பொருள் இழப்புகள் தொடர்பாக ஒவ்வொரு வீட்டிலும் இழப்பீட்டை மதிப்பிட சுதந்திரமான நடுநிலையாளர் குழு ஒன்றை அரசு நியமித்து அதனடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும். திருட்டுக் குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட்டுப் பொருட்கள் மீட்கப்பட வேண்டும்.
 
5.இதுபோன்ற கும்பல் வன்முறைகளில், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி ஒடுமொத்த வன்முறையாளர்களின் மீதும் collective fine போடுவதற்கு வழி உண்டு. அது இங்கே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சொத்திழப்புகளை மதிப்பிட்டு இவ்வாறு வசூலிக்கப்படும் கூட்டு அபராதத் தொகையிலிருந்து அது ஈடு செய்யப்பட வேண்டும். 
 
6.   எரியூட்டப்பட்ட வீடுகளில் அழிந்துபோன குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை முதலான அடிப்படை ஆவணங்களை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும், இதற்கென மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் வழங்க வேண்டும்.
 
7.காதல் மற்றும் காதல் திருமணங்கள் குறித்து இளைஞர்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வு ஊட்டும் அதே நேரத்தில், காதல் திருமணங்கள் சமூகத்தில் அதிகமாகக் கூடிய நிலை தவிர்க்க இயலாது என்பதை ஒரு பொதுக் கருத்தாக மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். பெற்றோர்கள் இது குறித்துப் பதற்றமடையத் தேவையில்லை என்கிற உணர்வு பரவலாக்கப்படுதல் அவசியம். சாதி அடிப்படையில்லாத அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் இதில் முன்கை எடுக்கவேண்டும். தீண்டாமை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வைச் சமூகத்தில் பெருக்குவதில் இவர்கள் முன்நிற்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் செயற்கரிய செய்வோருக்கு வீரப் பரிசுகள் வழங்குவதைப்போல தீண்டாமைக்கு எதிராகச் செயல்படுவோருக்கும் ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
 
8.தலித் மக்கள் ஓரளவு நடுத்தர வர்க்க வசதியுடன் வாழத்தொடங்கினாலும் கிராம அளவில் அவர்கள் வலுவற்று இருப்பதையே இவ்வன்முறை காட்டுகிறது, கிராமங்களில் நிலமே அதிகாரத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்பதால் இப்பகுதியில் உள்ள தலித் மக்களுக்கு அரசு நிலம் வழங்க ஆவன செய்ய வேண்டும். தவிரவும் தலித் கிராமங்களில் உரிய அடிப்படை வசதிகள், ரேஷன் கடைகள் முதலியன அமையாததும் இம்மக்கள் ஆதிக்க சாதியினரைச் சார்ந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. தலித் குடியிருப்புகளில் இத்தகைய அடிப்படை வசதிகள், குறிப்பாகக் கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட வேண்டும். 
 
9.   பள்ளி மாணவர்கள் பலரையும் வெண்டுமென்றே வழக்கில் தொடர்புப்படுத்திக் கைது செய்துள்ளதாக வன்னியர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அதிக அளவில் இளைஞர்கள் வன்முறையில் கலந்து கொண்டதைப் பலரும் உறுதிப்படுத்தினர். இளைஞர்கள் மத்தியில் இவ்வாறு சாதி உணர்வு உருவாவது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. எவ்வாறாயினும் வன்முறை நடவடிக்கைகளில் தொடர்பில்லாத மாணவர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
  
தொடர்புக்கு: 

அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு,சாஸ்திரி நகர்,   சென்னை- 600020, செல்: 94441 20582

நன்றி: அ.மார்க்ஸ் மற்றும் கோ.சுகுமாரன்