வியாழன், ஜூன் 20, 2013

மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை

மாவோயிஸ்ட் கட்சியிலிருந்து விலகி தேர்தல் பாதைக்குத் திரும்பியவர்களை துன்புறுத்தும் தமிழகக் காவல்துறை


                                              பத்திரிகைக் குறிப்பு
                                                                                                                                                                                                                                                                                      சென்னை
                                                                                                                                                                                                                                                                                        ஜூன் 20, 2013

      அரசியல் சட்ட ஆளுகையிலும் (constitutional governance), அடிப்படை அரசியல் உரிமைகளிலும் அக்கறையுள்ள குடிமக்களாகிய, கீழே கையெழுத்திட்ட நாங்கள், தமிழக அரசும் அதன் காவல்துறையும், ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, வெளிப்படையாக இயங்க முடிவு செய்துள்ள ஒரு குழுவினரை, அவ்வாறு இயங்க விடாமல் கைது செய்து சிறையில அடைத்துத் துன்புறுத்தும் ஒரு சட்ட விரோதக் கொடுமையை ஊடகங்களின் வாயிலாக மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

அரசு கொள்கைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகிற  மாவோயிஸ்ட் இயக்கத்தினரைப் பார்த்து, ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மைய நீரோட்டத்தில் இணையுங்கள் என அறிவுரை கூறும் அரசு, அவ்வாறு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுத் தேர்தல் பாதை உட்பட பிற மக்கள் திரள் பாதையை ஏற்றுக் கோண்டுள்ளதாக வெளிப்படையாக அறிவித்து, வெளிப்படையாக இயங்கிவரும் ஒரு குழுவினரைத் தொடர்ந்து கைது செய்து துன்புறுத்தி வருகிறது. இதிலிருந்து அரசின் நோக்கம் ஆயுதப் போராளிகளை மக்கள் திரள் பாதைக்குத் திருப்புவதல்ல. மாறாக அரசுடன் சமரசம் செய்து கொள்ளாமல் அதன் கொள்கைகளை விமர்சிக்கும் யாரையும்  இயங்காமற் செய்வதுதான் என்பது விளங்குகிறது.

பின்னணி : தற்போது ‘மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சி’ என்கிற பெயரில் தமிழகத்தில் இயங்கி வரும் குழுவினரில் பலர் சில ஆண்டுகளுக்கு முன் மாவோயிஸ்ட் கட்சியில் இருந்து செயல்பட்டவர்கள். அவர்களில் சிலர் சென்ற 2002ல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊத்தங்கரையில் கைது செய்யப்பட்டு ‘பொடா’ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் பெண்கள் 2005லும், ஆண்கள் 2007லும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் பலர் மாவோயிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டப் பாதையை விமர்சித்து மக்கள் திரள் பாதையை முன்னிலைப்படுத்தியதை ஒட்டி 2007ன் இறுதியில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டனர்.

இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் சிலர், தொடக்கத்தில் ‘புதிய போராளிகள்’ என்கிற பெயரில் இயங்கி. தற்போது  மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சி என்கிற அமைப்பை உருவாக்கி வெளிப்படையாகச் செயல்பட்டு வருகின்றனர்.. இக்கட்சியின் தலைவர் துரை. சிங்கவேல் (52). இவரது மனைவி ராகினி (44). ராகினி, இக்கட்சியின் பெண்கள் அமைப்பின் நிர்வாகி.
இவர்கள் பிணையில் விடுதலை ஆகிய காலந்தொட்டு மிகவும் வெளிப்படையாக இயங்கி வருகின்றனர். ‘புதிய போராளி’ எனும் அரசியல் இதழை வெளிபடையாக் நடத்தி வருகின்றனர். இதுவரை மூன்று இதழ்கள் வந்துள்ளன. அவை இணையத் தளங்களிluம் கிடைக்கின்றன. அவ்வப்போது வெளியிடப்படும் துண்டறிக்கைகளில் அவர்கள் தாங்கள் மக்கள் திரள் பாதைக்குத் திரும்பிவிட்டதைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.  அந்த அடிபடையில் பொது நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகின்றனர்.

துரை சிங்கவேல் அ.மார்க்ஸ் எழுதிய அரபுலக எழுச்சி குறித்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுடன் பங்கு பெற்று விமர்சனவுரை நிகழ்த்தியதும் சென்ற மே 5 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மாவோ நூல்கள் விமர்சனக் கூட்டத்தில் பங்கு பெற்று ஆய்வுரை நிகழ்த்தியதும் அவர்கள் வெளிப்படையாக இயங்கி வருவதற்கான சில எடுத்துக்காட்டுகள். மாவோயிஸ்டுகள் சட்டிஸ்கரில் சென்ற சில வாரங்களுக்கு முன் நடத்திய தாக்குதல்கள்  குறித்த விவரண நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக் காட்சியில் இடம் பெற்றபோது, அதில் துரை சிங்கவேல் மக்கள் திரள் பாதையை வற்புறுத்திப் பேசியது குறிப்பிடத் தக்கது.

எனினும் தமிழகக் காவல்துறையும்,  சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பான (clandestine organisation) கியூ பிரிவு போலீசும் இவர்கள் இவ்வாறு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு மக்கள் திரள் பாதையை ஏற்றுக் கொண்டதைச் செரிக்கவும், அனுமதிக்கவும் தயாராக இல்லை என்பதைச் சென்ற அக்டோபர் 6, 2012 அன்று அவை மேற்கொண்ட நடவடிக்கை வெளிப்படுத்தியது. குன்றத்தூரில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் அவர்களும், அவர்களது ஆதரவாளர்களும், கல்வியாளர்களும் கூடி, தேர்தலில் பங்கேற்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னாள் ஆயுதப் போராளிகள் இவ்வாறு தேர்தல் பாதைக்குத் திரும்புவது குறித்து ஆலோசித்த போது அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த கேள்விகளுக்குத் தமிழகக் காவல் துறை இன்று வரை பதில் அளிக்கவில்லை..அப்போது கைது செய்யப்பட்டவர்களில் துரை சிங்கவேலும் அவரது மனைவி ராகினியும் அடக்கம்.

கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு உண்மை : துரை சிங்கவேல் பிணையில் விடுதலை ஆகித் தன் மனைவி ராகினியுடன் குடும்ப வாழ்க்கையை மெற்கொள்ளத் தொடங்கிய பின் அதிலும் தமிழகக் காவல் துறை தலையிட்டது. 2002ல் பலர் பொடாவில் கைது செய்யப்பட்டபோது பாரதி எனும் ஒருவர் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றார். ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. அவர் ஆணா , பெண்ணா என்பது கூட அப்போது காவல் துறைக்குத் தெரியவில்லை. எனினும் துரை சிங்கவேல் குடும்ப வாழ்க்கையத் தொடங்கிய பின் , அவர் மனைவி ராகினிதான் பாரதி எனச் சொல்லித் தினந்தோறும் அவர் வீட்டுக்கு வந்துத் தொல்லை செய்யத் தொடங்கினர். தொல்லை பொறுக்க முடியாத ராகினி இறுதியில் சென்னை உயர் நீதி மன்றத்தை அணுகினார்,

ராகினியின் மனு (CrL. OP No. 9141 of 2012 dated 16.04. 2012)  நீதியரசர் நாகமுத்து அவர்கள்முன் வந்தது. அரசு மற்றும் காவல் துறையின் சார்பாக முன்னிலையான கூடுதல் பப்ளிக் ப்ராசிகியூட்டர், “விசாரணைக்காக மனுதாரர் ராகினியைத் நாங்கள் கைது செய்யவோ விசாரிக்கவோ தேடவில்லை” (the petitioner is not wanted either for arrest or for enquiry as uf now)  எனச் சொன்னதை ஏற்று, “மனுதாரர் ராகினியை விசாரிக்க வேண்டுமானால் குற்ற நடைமுறைச் சட்ட விதிகளுக்குட்பட்டு முறையாகச் சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விசாரணை என்கிற பெயரில் அவர் துன்புறுத்தப் படக் கூடாது” என நீதிமன்றம் ஆணையிட்டது..

தற்போது நடந்தது : சென்ற 14 அன்று துரை சிங்கவேலு மற்றும் அவர் மனைவி ராகினி ஆகியோர் தருமபுரிக்கருகில் உள்ள கடம்பத்தூர் ரயில் நிலயத்தில் துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்துக் கொண்டிருந்ததாகவும், காவல் துறையினரைக் கண்டவுடன் அவர்கள் தப்பிக்க முயற்சித்தபோது பிடிபட்டதாகவும் அடுத்த நாள் செய்தித் தாள்களில் கண்டபோது கீழே கையெழுத்திட்டுள்ள நாங்கள் வியப்படைந்தோம். இது குறித்து நாங்கள் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின. அவை:

1.துரை சிங்கவேலும் அவரது மனைவி ராகினியும் சென்ற 13ந் தேதி அன்றே, இரவு 11 மணி அளவில் குன்றத்தூரில் உள்ளவர்களது வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர். திடீரென யாரோ சிலர் உள்ளே நுழைந்து வன்முறையாகத் தங்களை இழுத்துச் செல்ல முயன்றவுடன் ராகினி, அவரது தோழர் ஒருவருக்குப் போன் செய்ய முயன்றுள்ளார். அழைக்கப்பட்ட அந்த நண்பர் ராகினி பேச விடாமல் தடுக்கப் பட்டதை உணர்ந்து உற்ற நண்பர்களுக்குச் சொன்னவுடன் அவர்கள் ராகினி மற்றும் துரையுடன் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் யாருக்கும் தொடர்பு கிடைக்கவில்லை.
காலையில் அப்பகுதியில் சென்று விசாரித்தபோது, ஒரு சிறிய தள்ளு முள்ளுடன் அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டதைச் சுற்றியுள்ளோர் உறுதிப்படுத்தினர். வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது, அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டிருந்தது உறுதியானது.

2.அத் தம்பதிக்கு என்ன நடந்தது, அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அவர்களில் அக்கறையுள்ள பலரும் விசாரிக்கத் தொடங்கினர். அன்று மதியம் சென்னை உயர் நீதி மன்ற வழக்குரைஞர் செங்கொடி கியூ பிரிவு காவல்துறைக் கண்காணிப்பாளர் சம்பத்தைத்  தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, அவர்கள் இருவரும் விசாரணைக்காகத் தருமபுரி கொண்டு செல்லப்பட்டதாக அந்த அதிகாரி பதிலுறுத்தார். எனவே அன்று (அதாவது 14) மாலை அவர்கள் தருமபுரி கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக இப்போது காவல்துறை சார்பாகச் சொல்லப்படுவது அப்பட்டமான பொய்.

3.கைது செய்யப்பட்ட ராகினியை, முன் குறிப்பிட்ட நீதிமன்ற ஆணையை மீறி, அவர்தான் தேடப்பட்ட பாரதி என ஒத்துக் கொள்ளச் சொல்லித் துன்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து சிறையிலும் அவர் இவ்வாறு வற்புறுத்தப் பட்டு வருகிறார். இதன் மூலம் அவரை 2002ம் ஆண்டு வழக்கில் பொடா சட்டத்தில் கைது செய்து நிரந்தரமாகச் சிறையில் அடைப்பது என்கிற நோக்குடன் தமிழகக் காவல்துறை செயல்பட்டு வருவது வெளிச்சமாகியுள்ளது. தற்போது அவர்கள் இருவர் மீதும் CrPC 353, 124, 17(1) CLA ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது. 

கவனத்தில் கொள்ள வேண்டிய மேலும் ஒரு உண்மை : கைது செய்யப் பட்டுள்ள தம்பதியர் இருவரும் நிலுவையிலுள்ள வழக்குகளில் வாய்தா நாட்களில் நீதிமன்றங்களில் சரியாக முன்னிலை ஆவதில்லை என்பது இக்கைதை ஒட்டித் தமிழகக் காவல்துறை பரப்பி வரும் இன்னொரு அப்பட்டமான பொய். துரை சிங்கவேல் மீது நிலுவையில் இரு வழக்குகள் உள்ளன, ஒன்று 2002ம் ஆண்டு பொடா வழக்கு. மற்றது 2012 குன்றத்தூர் வழக்கு. பின்னது இன்னும் விசாரணைக்கு வரவில்லை. பொடா வழக்கைப் பொருத்த மட்டில் துரை மிகச் சரியாக வாய்தாக்களில் நீதி மன்றத்தில் தன்னை முன்னிலைப் படுத்தி வருகிறார், கடைசியாக அவர் ஜூன் 3 அன்று பூந்தமல்லி  நீதிமன்றத்தில் முன்னிலை ஆனார் ராகினியைப் பொருத்த மட்டில் அவர் மீது குன்றத்தூர் (2012) வழக்கு மட்டுமே உள்ளது. அது இன்னும் விசாரணைக்கே வரவில்லை. எனவே அவர் வாய்தாக்களுக்கு ஒழுங்காக நீதிமன்றங்களில் முன்னிலைப் படுவதில்லை என்கிற குற்றச் சாட்டு முற்றிலும் பொய்.

எமது கேள்விகளும் கோரிக்கைகளும்:
  1. 1.   தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தை ஒழித்துக் கட்டிவிட்டதாக முதல்வர் ஜெயலலலிதா  தொடர்ந்து சொல்லி வருகிறார். மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியினர் மாவோயிஸ்ட் கடட்சியின் ஆயுதப் போராட்டப் பாதையை விமர்சித்ததால் அதிலிருந்து நீக்கப்பட்டு, தேர்தல் பாதை உள்ளிட்ட மக்கள் திரள் பாதைக்குத் திரும்பியவர்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. வெளிப்படையாக இயங்கி வரும் இவர்களை தமிழக் காவல் துறையின் கியூ பிரிவினரும், நக்சல் ஒழிப்புப் பிரிவும் துன்புறுத்தி வருவதன் பொருளென்ன? ஆயுதப் போராட்டத்தை விட்டுவிட்டு மைய நீரோட்டத்தில் கலந்தாலும் நாங்கள் விட மாட்டோம் என்பதுதான் அவர்கள் இத்தகைய இயக்கங்களைச் சேர்ந்தோருக்குச் சொல்ல விரும்பும் செய்தியா?
  2. 2.   உளவுத் துறையாக உருவாக்கப்பட்டு இன்று காவல் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ள சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பான கியூ பிரிவும், எந்த வேலையும் இல்லாமல் இப்படியான வம்பு வழக்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் நக்சல் ஒழிப்புப் பிரிவும் (Naxal Special Wing) கலைக்கப்பட வேண்டும்.
  3. 3.   124A என்கிற தேசத் துரோகச் சட்டம் (Sedition Act)  பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், தேச விடுதலைப் போராளிகளைத் துன்புறுத்துவதற்காக அந்நிய அரசு கொண்டு வந்த ஒரு ஒடுக்குமுறைச் சட்டம். நமது அரசியல் சட்டம் குடிமக்களுக்கு வழங்கும் உரிமைகளுக்கு (பிரிவு 19) இது எதிரானது. அரசின் கொள்கைகளை ஏற்பதற்கும் எதிர்ப்பதற்கும் நமது அரசியல் சட்டம் குடிமக்களுக்கு உரிமை வழங்குகிறது. தவிரவும் ஒருவர் தன் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதற்கும், அதற்காக இயக்கம் கட்டுவதற்கும், நிதி சேகரிக்கவும் தடையற்ற உரிமைகளை அரசியல் சட்டம் வழங்குகிறது. இந்நிலையில் இதற்கு முற்றிலும் விரோதமான 124 A சட்டத்தைப் பயன்படுத்தி மருத்துவர் பினாயக் சென் முதல் துரை சிங்கவேல் ராகினி தம்பதி வரை துன்புறுத்தப் படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக அரசு இச்சட்டத்தைப் பயன்படுத்தி இயக்கத்தவர்களைத்  துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் சட்டத்திற்கு எதிரான இச்சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும்.
  4. 4.   வெளிப்படையாக இயங்கி வந்த இவர்கள் குன்றத்தூரில் அவர்களின் இல்லத்தில் வைத்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் செய்தி தெரிவிக்க விடாமல் அவர்கள் வன்முறையாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அடுத்த நாள் மதியம் கியூ பிரிவின் பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் அவர்கள் இருவரும் தருமபுரிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக அவர்களின் வழக்குரைஞரிடம் கூறியுள்ளார், எனினும் தற்போது துரை சிங்கவேலும் அவரது மனைவி ராகினியும் வன்முறையாகக் கடத்திச் செல்லப்பட்ட அடுத்த நாள் மாலை கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கைதில், உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு வழக்குத் தீர்ப்பில் விதித்துள்ள எந்த நெறிமுறையும் கடைபிடிக்கப்படவில்லை. இத்தகைய விதி மீறல்கள் மற்றும் பொய் கூறல்களுக்காகச் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உடனடியாக தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரித்துத் தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
  5. 5.   ராகினி, தாம் தேடி வரும் பாரதி இல்லை என அரசு வழக்குரைஞர் உயர் நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டுள்ளார். ராகினியை இது குறித்து விசாரிக்க வேண்டுமெனில் முறையாகச் சம்மன் அனுப்பி அழைத்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்று அவர் கட்டாயமாகக் கடத்தப்பட்டு, தான் பாரதி என ஒத்துக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப் படுகிறார். அவரை 2002 பொடா வழக்கில் இணைக்கும் முயற்சியையும் காவல் துறை மேற்கொள்கிறது. இது ஒரு நீதிமன்ற அவமதிப்புக் குற்றம். இதற்குக் காரணமான காவல்துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக வழக்குத் தொடரப்பட வேண்டும். ராகினையைப் பொடா வழக்கில் சிக்க வைத்துத் துன்புறுத்தும் முயற்சியைக் காவல்துறை உடனடியாகக் கைவிட வேண்டும்.
  6. 6.   வெளிப்படையாக இயங்கி வந்த இருவர் இன்று திருட்டுத் தனமாகக் கைது செய்யபட்டுள்ளனர். ஆயுதப் பாதையிலிருந்து தேர்தல் பாதைக்குத் திரும்பி வெளிப்படையாகச் செயல்பட்டு வந்தவர்களை இவ்வாறு துன்புறுத்துவது ஆரசு கொள்கைகளுக்கு எதிரானது. துரை சிங்கவேல் மற்றும் ராகினி உடனடியாக விடுதலை செய்யப்டுவதோடு பொய் வழக்குப் போட்டுத் துன்புறுத்தியதற்காக அவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.



பேரா. அ.மார்க்ஸ் (மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்),
கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு),
முனைவர் ப.சிவகுமார்   
பேரா. மு.திருமாவளவன் (முன்னாள் அரசு கல்லூரி முதல்வர்கள்), வி.சீனிவாசன் (சுற்றுச் சூழல் ஆர்வலர்),
மற்றும்
உயர் நீதி மன்ற வழக்குரைஞர்கள் மனோகரன் (மக்கள் வழக்குரைஞர் சங்கம்), செங்கொடி,
கி.நடராசன்,
ரஜினி (மதுரை) .

தொடர்பு : 
அ.மார்க்ஸ்,
3/5,முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
சென்னை- 20,
செல்: 94441 20582

நன்றி: அ.மார்க்ஸ்

சனி, ஜூன் 15, 2013

ஆசிரியர் தேர்வில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு மோசடிகள் - துணை அறிக்கை

ஆசிரியர் தேர்வில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு மோசடிகள் - துணை அறிக்கை

(இந்த இட ஒதுக்கீட்டு மோசடியின் முழுப் பின்னணியையும் அறிய எமது இந்தத் துணை அறிக்கையையும் முதன்மை அறிக்கையையும்  சேர்த்து வாசிக்கவும்.)
                                                                  
                                                                                                 சென்னை                                                                                                                                              ஜூன் 13, 2013


      சென்ற ஜூன் 10 அன்று வெளியிடப்பட்ட எமது அறிக்கை தமிழக அரசு சென்ற ஆண்டு மேற்கொண்ட டெட் தேர்வு மற்றும்  பட்டதாரி / இடைநிலை ஆசிரியப் பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள இட ஒதுக்கீட்டு ஊழலில் உடனடிக் கவனம் பெற வேண்டிய முக்கிய பாதிப்புகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்தது. இந்த ஊழலின் முழு வரலாற்றையும் கவனம் கொள்ள வேண்டிய இதர அம்சங்களியும் எமது இந்த இணைப்பு முன்வைக்கிறது:

1.கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தை இந்திய அரசு இயற்றியபோது ஆக 21,2009), அச் சட்டத்தின் 23ம் பிரிவின்படி, ‘தேசிய ஆசிரியர் கல்விக் கழகம்’ (NCTE) இது தொடர்பான அதிகார மையமாக (academic authority) அறிவிக்கப்பட்டது. தவிரவும் இவ்வாறு வழங்கப்படும் கல்வி தரமாக அமைவதற்காக, இனி நியமிக்கப்படும் ஆசிரியர்கள், இக் கழகத்தால் வகுக்கப்படும் நெறிமுறைகளின்படி நடத்தப்படும்  ‘ஆசிரியர் தகுதிதித் தேர்வு’ (TET – Teacher Eligibility Test) ஒன்றில் வெற்றி பெற வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது (பிரிவு 23{1}). இந்த ‘டெட்’ தேர்வு தொடர்பான நெறிமுறைகளையும் தேசிய ஆசிரியர் கழகம் சென்ற பிப்ரவரி 11, 2011 அன்று வெளியிட்டது (No 76-4/2010/NCTE/Acad). இதன் 9ம் பிரிவு இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண்கள் குறித்துக் கீழ்க்கண்டவாறு வரையறுத்தது:

“விதி 9 : (பொதுவாக) 60%-க்கு மேல் (அதாவது மொத்த மதிப்பெண்கள் 150ல் 90க்கு மேல்) பெற்றவர்கள் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். பள்ளி நிர்வாகங்கள் (அரசு, உள்ளாட்சி, அரசு உதவி பெறும், அரசு உதவி பெறாத), (அ) அவரவர் பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப SC/ST, OBC, மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து வகையான இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண்களில் தளர்வுகளை வழங்கிக் கொள்ளலாம்”

2. தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் இது குறித்த அறிவிப்பை மாநில அரசுகளுக்கு அனுப்பியதை ஒட்டி தமிழக அரசு, நவம்பர் 2011ல் உரிய அரசாணையை வெளியிட்டது (G.O.Ms.181, School Education (C1) Department, dated 15.11.2011).

இந்த ஆணையின் முக்கிய கூறுகள்: பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு நடத்தும் அதிகாரம் தமிழக அரசின் ‘ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு’ (TRB) அளிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு முறையேனும் வாரியம் இத் தேர்வை நடத்தியாக வேண்டும். தேவையாயின் ஒரே ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளையும் நடத்திக் கொள்ளலாம்.

தவிரவும் (i) இடை நிலை ஆசிரியர்க்கான தேர்வு குறித்த வழக்கொன்று உச்ச நீதி மன்றத்தில் உள்ளதால் அந்தத் தீர்ப்பு வரும் வரை ஆசிரியத் தேர்வு பதிவு மூப்பின் அடிப்படையில் வழங்கப்படும் (ii) பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வைப் பொருத்தமட்டில், தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் விதித்துள்ள நெறிமுறைகளின் அடிபடையில் டெட் தேர்வு நடத்தப்பட்டு அந்த அடிப்படையில் தேர்வு மேற்கொள்ளப்படும்.

இந்த 181 ஆணையின் பின்னிணைப்பாக டெட் தேர்விற்கான நெறிமுறைகளாக முன் குறிப்பிட்ட தேசிய ஆசிரியர் கல்வி ஆணையம் வழங்கிய நெறிமுறைகள் அப்படியே இணைக்கப்பட்டன, அதாவது வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்கள் பொதுவாக 60 என்றாலும் அவ்வவ் மாநில மற்றும் நிர்வாகக் கொள்கைகளுக்கு ஏற்ப நலிந்த பிரிவினர்க்குத் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து நிர்ணயிக்கலாம் என்பதே ஆசிரியத் தேர்வு ஆணையத்திற்கு தமிழக அரசு அளித்த நெறிமுறை.

3. இந்த ஆணையின்படி ஆசிரியத் தேர்வு வாரியம் சென்ற மார்ச் 7, 2012 அன்று டெட் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களாக அனைவரும் 60 மதிப்பெண்கள் பெற வேண்டும் என விதிக்கப்பட்டது.
இவ்வாறு தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைப் பொருத்தமட்டில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களைக் குறைத்து நிர்ணயிக்க வழங்கிய உரிமையைத் தமிழக ஆசிரியத் தேர்வு வாரியம் தன்னிச்சையாக ரத்து செய்தது.

அதே நேரத்தில் சட்டிஸ்கர், மணிப்பூர், ஒரிசா, உத்தர பிரதேசம், உத்தரகான்ட், பஞ்சாப், பீஹார், அருணாசலப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில், ஒதுக்கீட்டுப்  பிரிவினருக்கு, வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் 20 சதம் வரை சலுகை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  அருகிலுள்ள, காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் ஆந்திர மாநிலத்தில் டெட் தேர்வில் வெற்றி பெற பிற்படுத்தப்பட்டோர் 50 சதம் பெற்றால் போதும் எனவும் பட்டியல் சாதியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 40 சதம் பெற்றால் போதும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது (APTET Notification, May 2012).

4. இவ்வாறு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 24, 2012ல் அறிவிக்கப்பட்டன. ஆனால் கலந்து கொண்ட 6,76,763 பேர்களில் வெறும் 2448 பேர்களே 60 சத மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது வெற்றி வீதம் இரண்டு பதவிகளுக்கும் சராசரியாக வெறும் 0.36 சதம்.

5. காலியிடங்கள் அனைத்தையும் இவர்களைக் கொண்டு நிரப்ப இயலாது என்பதாலும், எக்காரணம் கொண்டும் தரத்தை விட்டுக் கொடுக்க இயலாது என்பதாலும் அக்டோபர் 14, 2012 அன்று மறுதேர்வு நடத்தப்படும் எனவும் அதில் ஏற்கனவே டெட் எழுதித் தோற்றவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் எனவும் காரணம் கூறி தமிழக அரசு  இதற்கென இன்னொரு அரசாணையை வெளியிட்டது (G.O.Ms.222, School Education Department, dated 24.08.2012).  தேர்வு நேரம் ஒன்றரை மணி என்பதிலிருந்து 3 மணிகளாக அதிகரிக்கவும் பட்டது.

இவ் ஆணையில், “முதல் டெட் தேர்வில் 60 சதம் மதிபெண் பெறாதவர்களுக்கு மறு டெட் தேர்வு நடத்தப்படும்” என அறிவித்ததன்தன் மூலம், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வெற்றித் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து நிர்ணயிக்கத் தேவையில்லை, அனைவரும் 60 சத மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே வெற்றி பெற்றவராகக் கருதபடுவர் என்கிற தேர்வு வாரியத்தின் முடிவிற்கு அரசின் கொள்கை ஏற்பு உள்ளது என்பது உறுதியாகியது

6. இவ்வாறு அறிவிக்கப்பட்ட மறு தேர்வு நடைமுறைகளை எதிர்த்து பாதிக்கப்பட்டோரால் உயர் நீதி மன்றத்தில்  வழக்குகள் தொடரப்பட்டன. அவை இரு முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தன. அவை: (i) முதல் டெட் தேர்வில் கலந்து கொண்டோர் மட்டுமே இரண்டாவது டெட் தேர்வில் கலந்து கொள்லலாம் எனில், அதற்கு இடைப்பட்ட காலத்தில் டெட் தேர்வு எழுதுவதற்குத் தகுதி பெற்றோருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது அரசியல் சட்டம் வழங்கும்உரிமைகளுக்கு எதிரானது. (ii) முதல் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 2448 பேருக்கும் ஆசிரியப் பணி அளிக்கப்படும் என அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. டெட் தேர்வு என்பது தகுதித் தேர்வுதான். பிற பணி நியமனத் தெரிவு நடைமுறைகளை (Selection processes) மேற்கொள்ளாமல் டெட் தேர்வு மதிபெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பணி நியமன ஆணை வெளியிடுவது சட்ட விரோதமானது.

7. இப்படி ஒரு சிக்கல் முளைத்தவுடன் அரசு இரு முடிவுகளை நீதிமன்றம் முன் வைத்தது (i) முதல் டெட் தேர்வு நடத்தப்பட்ட தேதிக்குப் பின் தேர்வு எழுதத் தகுதி பெற்றோரும் அறிவிக்கப்பட்ட தேர்வில் பங்கு பெறலாம். இதற்கான அறிவிப்பும் நடைமுறைகளும் வெளியிடப்படும். (ii) ஆசிரியப் பணி நியமனத் தெரிவிற்கான நெறிமுறைகளைத் தீர்மானிக்கப் பள்ளிக் கல்வி அமைச்சர் தலைமையில் அரசு முதன்மைச் செயலர், ஆசிரியத் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகிய நால்வர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது (G.O.(2D) No.36, School Education Department, dated 14.09.2012).

அரசின் இவ்விளக்கங்களை ஏற்று இரண்டாவது டெட் தேர்வை அக்டோபர் 14, 2012 அன்று நடத்துமாறு ஆணையிட்டார் நீதியரசர் எஸ். நாகமுத்து (நவம்பர் 21, 2012). ஆக, முதலாவதாக நடத்தப்பட்ட தேர்வின் துணைத் தேர்வாகவும் (Supplementary Exam) இல்லாமல், முற்றிலும் புதிய தேர்வாகவும் இல்லாமல் இரண்டாவது தேர்வு நடத்தப்பட்டது.

8. இந்த வழக்கில் அரசு தரப்பில் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்ட தகவல்களில் ஒன்று, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மொத்த காலி இடங்களின் எண்ணிக்கை சுமார் 26,116 என்பது. இந்த எண்ணிக்கை இதுவரை வகுப்புவாரி ஒதுக்கீடுகளுடன் முறையாக அறிவிக்கை செய்யப்படவில்லை என்பதோடு, காலிப் பணியிடங்கள் தொடர்பாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு எண்ணிக்கை அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

9. மேற்குறித்த நால்வர் குழுவின் பரிந்துரையினடியாக அரசாணை எண் 252 (தேதி : 05-10-2012) வெளியிடப்பட்டது. இது இரு முக்கிய அம்சங்களைக் கொண்டிருந்தது. (i) முன் குறிப்பீட்ட 222 ஆணையைச் சுட்டிக் காட்டி டெட் தேர்வில் வெற்றிபெற அனைவரும் குறைந்தபட்சம் 60 சதம் பெறவேண்டும் என்பதற்கு மீண்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குப் பிற மாநிலங்களில் தகுதி மதிப்பெண்ணில் தளர்ச்சி அளித்துள்ளது போலத் தமிழகத்தில் அளிக்க முடியாது என்பதுதான் அ.தி.மு.க அரசின் கொள்கை என்பது உறுதியானது.  (ii) ஆசிரியப் பணி நியனமனத்திற்கு விண்ணபித்தோர் +2/ பட்டப்படிப்பு/ ஆசிரியப் பயிற்சிப் படிப்பு/ டெட் ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் ஒவ்வொன்றிற்கும் எவ்வளவு weightage தரப்படும் என்பது நிர்ணயித்து அறிவிக்கப்பட்டது. [இடை நிலை ஆசிரியராயின் +2 மதிப்பெண்களுக்கு weightage 15, D.T.Ed க்கு 25, டெட் க்கு 60. பட்டதாரி ஆசிரியராயின் +2க்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, B.Ed க்கு 15, டெட்க்கு 60 ].

இவ்வாறு weightage கொடுத்துள்ளதில் இரு பிரச்சினைகள் பாதிக்கப்பட்டோரால் முன்வைக்கப் படுகின்றன. அவை : (i) ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது புதிய அரசுப் பணிகள் கிடையாது என ஒரு கொள்கை முடிவெடுத்துச் செயல்பட்டதை அறிவோம். இதன் விளைவாக இன்று ஆசிரியப் பதவிக்கு விண்ணப்பிப்போரில் 1990க்கு முன் பள்ளி இறுதித் தேர்வு எழுதியோரும் அடக்கம். அப்போதைய தேர்வு முறைகளுக்கும் தற்போதைய தேர்வு முறைகளுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இப்போதைய தேர்வு முறையில் கூடுதலாக மதிப்பெண்கள் எடுப்பது எளிது. எனவே 90கள் மற்றும் அதற்கு முன் பள்ளி இறுதித் தேர்வு முடித்தோரையும் அதற்குப் பின் முடித்தோரையும் ஒரே நிலையில் வைத்து ஒரே மாதிரியாக weightage நிர்ணயிப்பது தவறு எனப் பதிவு மூப்புடையோர் கூறுகின்றனர். (ii) weightage நிர்ணயிப்பில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இரு பிரிவினருக்குமே +2 மற்றும் D.T.Ed தேர்வுகளில் 50 மதிப்பெண்களுக்குக் கீழ் வாங்கியவர்களுக்கு weightage ஏதுமில்லை, அதாவது weightage 0. B.Ed தேர்வில் 50 சதத்திற்குக் கீழ் மதிப்பெண் பெற்றவர்களுக்கு weightage 10 கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு +2 மற்றும் பட்டப் படிப்பில் 50 மதிப்பெண்களுக்குக் கீழ் பெற்றவர்களுக்கு எவ்வித weightage தராததும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இங்கொன்றைக் குறிப்பிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தமட்டில், உச்ச நீதி மன்றத்தில் எஸ்.எல்.பி மனு ஒன்று இது தொடர்பாக நிலுவையில் உள்ளதால், மேற்குறித்தவாறு  weigtage அறிவிக்கப்படட்போதும் பதிவு மூப்பே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

10. அக்டோபர் 14, 2012 அன்று இரண்டாவது டெட் தேர்வு நடத்தப்பட்டு அதில் 19,000 பேர் தேர்வு பெற்றதாக அறிவித்து அவர்களுக்குச் சென்ற ஆண்டு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்ட வரலாறை நாம் அறிவோம்..

11.  கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேர் எழுதிய இத் தேர்வில் வெறும் 19,000 பேர்களே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தோல்வியுற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்  181 ஆணயின்படித் தமக்கு தேர்வுத் தகுதி மதிப்பெண்களில் சலுகை அளிக்கப்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்க இயலும் என்பதைச் சுட்டிக்காட்டி, தம்மையும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவராகக் கருதி (பணி நியமனத் தெரிவிற்கான) சான்றிதழ் பரிசோதனைக்கு அழைக்க ஆணையிடுமாறு உயர் நீதிமன்றத்தை அணுகினர், இவ்வழக்கு ஒய்வு பெறுமுன் நீதியரசர் சந்துரு முன் வந்தது, ஆசிரியத் தகுதியில் தாம் எந்தவிதச் சமரசத்தையும் மேற்கொள்ள விரும்பவில்லை என்கிற அரசுத் தரப்பு வாதத்தை நீதிபதி சந்த்ரு ஏற்றுக் கொண்டார்.

தவிரவும் தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுக்கு இருக்கும்போது ஏன் ஆந்திர மாநிலத்தில் வகுப்புவாரியாகத் தகுதி மதிபெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காகத் தமிழகத்திலும் அப்படிச் செய்ய வேண்டும் எனத் தனக்கு விளங்கவில்லை என அலுத்துக் கொண்டார். பாரதீய சேவா சமாஜ் எதிர் யோகேஷ்பாய் அம்பாலால் படேல் என்னும், இந்தப் பிரச்சினையுடன் அவ்வளவாகப் பொருத்தமில்லாத ஒரு வழக்கில் (2012) உச்ச நீதி மன்றம், “நிர்ணயிக்கப்பட்ட தகுதி இறுக்கமாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டி மனுதாரர்களின் ரிட் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தார்.

12. இந்தத் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித் தாள்களிலும், தேர்வுத் தாள்களை மதிப்பிடுவதற்காக வழங்கப்பட்ட பதில் குறிப்புகளிலும் தவறுகள் உள்ளன. பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வில் மட்டும் (இரண்டாவது தாள்) சுமார் எட்டு கேள்விகள் இப்படித் தவறாக உள்ளன. 2011ல் நடைபெற்ற கணினி ஆசிரியர் தேர்வில் இவ்வாறு தவறாகக் கேட்கப்பட்ட கேள்விகளை நீக்கிவிட்டு தேர்வுத் தாள்கள் மதிப்பிடப்பட்டன. ஆனால் இந்த டெட் தேர்வில் இப்படியான தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டும் தவறுகள் முழுமையாகத் திருத்தப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு பாத்ஹிக்கப்பட்டோரால் வைக்கப்படுகிறது. ஒருவேளை உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் வெற்றி பெற்றோரது எண்ணிக்கை மாறியிருக்கும். இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.

13. பள்ளி மேல்நிலை ஆசிரியர்கள் தேர்வில் ஆசிரியத் தேர்வு ஆணையம் தேர்வுப் பட்டியலை வெளியிட்டபோது இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் பட்டியல் வெளியிட்டு நீதியரசர் நாகமுத்து அவர்களால் அப்பட்டியல் ரத்து செய்யபட்டது குறித்து எமது முதன்மை அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. தேசிய ஆசிரியர் கல்விக் கழக (NCTE) நெறிமுறைகளின்படி ஆசிரியப் பணிக்கு விண்ணப்பிப்போர் டெட் தேர்வில் வெற்றி பெற்றிருப்பதோடு,அவர்களின் அடிப்படைக் கல்வித்தகுதியிலும் (+2, பட்டப்படிப்பு),  50 சத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் சாதியினருக்கு இந்தத் தகுதி மதிப்பெண்ணில் 5 சதச் சலுகை அளிக்கலாம். தமிழக அரசு இந்நெறிமுறையைப் பின்பற்றவில்லை. அடிப்படைக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் குறைந்த பட்சமாக வெற்றி பெற்றிருந்தாலே போதும் என்கிற நிலை இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.. அடிப்படைக் கல்வித் தகுதியில் (+2, பட்டப் படிப்பு) வெற்றி பெறுவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண் இங்கு வெறும் 35 தான். B.Ed  தேர்விலும் வெற்றி பெறுவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண் 40. இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் மட்டுமே இங்கு வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் 50சதம்.

சுமார் 35,000 காலிப்பணியிடங்களுக்கு முறையான அறிவிக்கைகளைச் செய்யாமல் நடத்தப்பட்ட தேர்வு இது., இட ஒதுக்கீட்டிற்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஒரு மாநிலத்தில், வெற்றித் தகுதி மதிப்பெண்களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்புகள் வழங்க விதிகள் அநுமதித்தும், பிற மாநிலங்கள் பலவற்றிலும் அவை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தும், தமிழகத்திலேயே கல்லூரி ஆசிரியர்களுக்கு அத்தகைய நடை முறைகள் கடைபிடிக்கப்பட்டிருந்தும், அவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு  இன்று ஆசிரியப் பணி மறுக்கப்பட்டுள்ள கதை இதுதான்.

ஏன் முறையான காலிப் பணியிடங்களை அறிவிக்க வில்லை? ஆசிரியத் தகுதியில் சமரசம் கூடாதென்றால் தமிழக அரசு கல்லூரிக் கல்வியிலும், பள்ளிக் கல்வியிலும் வெவ்வேறு அணுகு முறைகளை ஏன் கடை பிடிக்கிறது என்கிற கேள்விகளை எழுப்ப நீதிமன்றங்களும் தயாராக இல்லை. பிரச்சினைகள் வரும்போது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே  அரசு அவ்வப்போது புதிய ஆணைகளை இட்டுள்ளது என்பதையும் கூட நீதிமன்றங்கள் சிரத்தை எடுத்துக் கவனிக்க வில்லை.

எனவே...
  1. தற்போது அரசு அடுத்த டெட் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது (Ad No 3/2013 dt 22-05-2013). இது முந்தைய அறிவிப்பில் கண்டுள்ள அனைத்துத் தவறுகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து, தமிழகத்திற்கு உரிய வகையில் டெட் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிபெண்களை நிர்ணயிக்கவும் இதர தொடர்புடைய பிரச்சினைகளை ஆய்வு செய்யவும் கல்வியாளர்களின் குழு ஒன்றை அமைக்க வேண்டும். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பிற மாநிலங்களிலும் தமிழகத்தில் கல்லூரி ஆசிரியர்களுக்கான செட் தேர்விலும், மத்திய அரசு நடத்தும் நெட் தேர்விலும் கடைபிடிக்கபடுவது போல வகுப்பு வாரியாகத் தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்துச் செயல்படுத்த வேண்டும்.
  2. இத்தகு கொள்கை முடிவு எடுக்கப்பட்ட பின் அந்த அடிப்படையில் சென்ற ஆண்டு நடத்தப்பட்ட டெட் தேர்வுப் பட்டியலைப் புதிதாக வெளியிட வேண்டும். தவறான கேள்விகள் மற்றும் பதில்கள் (Key) இருந்தன எனக் கல்வியாளர் குழு சிட்டிக்காட்டினால், பாதிக்கப்பட்டோருக்கு உரிய மதிப்பெண் திருத்தமும் அளிக்க வேண்டும். வெற்றி பெற்றோருக்கு உரிய சான்றிதழ் வழங்க வேண்டும்.
  3. +2, பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சிப்பட்டம் அல்லது பட்டயம், டெட் தேர்வுகளில் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கான weightage அளிப்பது  தொடர்பாகப் பல ஆண்டுகட்கு முன்னர் படிப்பை முடித்தோருக்கும், சமீபமாகப் படித்து முடித்தோருக்கும் ஒரே weightage அளிப்பது தொடர்பாக எழுந்துள்ள குறைகளையும் மேற்குறிப்பிட்ட குழு கவனத்தில் எடுத்டுக் கொண்டு முடிவு காண வேண்டும்.. அடிபடைக் கல்வியில் 50 சதத்திற்கும் குறைவாகப் பெற்றோருக்கும் உரிய weightage அளிக்க வேண்டும். அதைக்காட்டிலும் அடிப்படைக் கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் எதுவாயினும் அதற்கேற்றவாறு தசமத் துல்லியமாக weightage கணக்கிடுதல் சாலச் சிறந்தது.
  4. இந்த அடிப்படையில், சென்ற ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து, கட் ஆஃப் மதிப்பெண்கள், கட் ஆஃப் தேதி முதலானவற்றை முறையான தனி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுப் புதிய பணி நியமனங்களைச் செய்ய வேண்டும்.
  5. இதன் பின்னர் புதிய நெறிமுறைகளுக்கு ஏற்ப புதிய டெட் தேர்வு அறிவிப்பைச் செய்ய வேண்டும். பின் காலிப் பணியிடங்களைக் கணக்கிட்டு முறையான அறிவிக்கைகளைச் செய்து பணி நியமனத்திற்கான தெரிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
  6. மேற்குறித்த கோரிக்கைகளுடன் எமது முதன்மை அறிக்கையில் கண்டுள்ளவாறு, ஆசிரியர் தேர்வாணையத் தலைவர் சுர்ஜித் சவுத்ரி இந்த டெட் தேர்வில் செய்துள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை செய்யப்பட வேண்டும். அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இவ்விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மொத்தமுள்ள காலிப் பணியிடங்கள், வகுப்பு வாரியான எண்னிக்கை முதலானவற்றுடன் முறையான அறிவிக்கை வெலியிடாமை, தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியலை வெளியிட்டபோது தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்பட்ட சாதியினருக்கு உரிய பலன்கள் கிடைக்காவண்ணம் முற்படுத்தப்பட்ட சாதியினரை OC எனக் குறிக்காமல் ‘பொதுப் பிரிவு’ (GT) எனக் குறித்து மோசடி செய்தது முதலான குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் அவர் விசாரிக்கப்பட வேண்டும். வேறொரு வழக்கில் உயர் நீதி மன்றம் இது குறித்துக் கண்டித்து, அவர் இவ்வாறு தயாரித்த பட்டியலை ரத்து செய்தும் கூட மீண்டும் அவர் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் தேர்விலும் இதே குற்றத்தைப் புரிந்துள்ளார். இனி இத்தகைய தவறுகள் ஏற்படாது எச்சரிக்கை மேற்கொள்ளப்படுதல்  அவசியம்.
  7. டெட் தேர்வில் வெற்றித் தகுதி மதிப்பெண்கள் வகுப்புவாரியாக நிர்ணயிக்கப்படுதல் கட்டாயம். அந்தந்த மாநிலங்களுக்குத் தக்கவாறு இதை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தேர்வுச் சுதந்திரம். இது வேறு வகைகளில் பொருள் கொள்ள இயலாத வண்ணம் சரியான சொற்களில் வரையறுக்கப்படுதல் அவசியம். இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தேசிய ஆசிரியக் கல்விக் கழகம் தனது நெறிமுறைகளின் 9ம் பிரிவைக் கறாராக அமைக்கவேண்டும்.
  8. இந்தப் பிரச்சினை மேலுக்கு வந்தபின் இன்று இட ஒதுக்கீட்டிற்கு எதிரான சக்திகள், “அரசுப் பள்ளிகளின் தரம் பற்றிக் கவலைப் படாதவர்கள்தான் இந்த இட ஒதுக்கீட்டு மோசடியைப் பெரிதுபடுத்துகின்றனர்” என்கிற கருத்தைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். அரசுப் பள்ளிகளின் தரக் குறைவிற்குக் காரணம் அங்குள்ள ஆசிரியர்கள் தகுதிக் குறைவானவர்கள் என்பதல்ல. சொல்லப்போனால் ஒபீட்டளவில் தரமும் அநுபவமும் உள்ள ஆசிரியர்கள் அரசு பள்ளிகளிலேயே உள்ளனர். பல தனியார் பள்ளிகள் பயிர்சி எறாத ஆசிரியர்களிக் கோண்டே நடத்தப்படுகின்றன என்கிற உண்மையை நாங்கள் வேறு சில சந்தர்ப்பங்களில் நிறுவியுள்ளோம். போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களின்மை, நிர்வாகச் சீர்கேடுகள் போதிய அகக்கட்டுமானங்களின்மை, கல்வி தொடர்பில்லாத நிர்வாகப் பணிகளுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பயன்படுத்துதல் ஆகியனவே அரசுப் பள்ளிகளின் தரக் குறைவிற்குக் காரணம். இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் ஆசிரியத் தேர்வில் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டினால் எல்லாம் சரியாகிவிடும் என்பது அப்பட்டமான ச்சதி வெறியைத் தவிர வேறேதுமில்லை. பிரச்சினைக்குரிய டெட் தேர்வில் முறையாக இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டிருந்தால் மேலும் 17,000 ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளுக்குக் கிடைத்திருப்பர், அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் தரம் மேலும் உயர்ந்திருக்கும் என்கிற உண்மையை இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. இப்படியான குற்றச்சாட்டுகள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது எளிதில் வைக்கப்படுவதை அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். தமது சங்க உறுப்பினர் மத்தியில் கடமை உணர்வும், ஏழை எளிய மாணவர்கள்பால் கடப்பாட்டுணர்வும் அதிகரிப்பதற்கு அவை முன்கை எடுக்க வேண்டும்.
  9. இந்த அறிக்கை தயாரிப்பிற்குத் தேவையான தரவுகளையும், ஆவணங்களையும், விளக்கங்களையும்  தந்துதவிய பேராசிரியர் தேவா அவர்களுக்கும், எமது முதன்மை அறிக்கை வந்தவுடன் தொடர்புகொண்டு புதிய தகவல்களைத் தந்துதவிய பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், குறிப்பாகத் தரங்கம்பாடி ஆசிரியர்கள் விஜயகுமார் மற்றும் ரவி ஆகியோருக்கும் எம் நன்றிகள்.
  பேரா. அ.மார்க்ஸ்,  
முனைவர் ப.சிவக்குமார்,  
பேரா.மு.திருமாவளவன்,  
வழக்குரைஞர்  ரஜினி. 

நன்றி: பேரா. அ.மார்க்ஸ்

செவ்வாய், ஜூன் 11, 2013

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு மோசடி - அறிக்கை

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு மோசடி - அறிக்கை



                                                                                                                                                                                                                                                                சென்னை
                                                                                                                                                                                                                                                               ஜூன் 09, 2013            
சென்ற ஆண்டு தமிழக அரசு 19,000 ஆசிரியப் பணியிடங்களை நிரப்பியதாகப் பெருமையுடன் அறிவித்தது. இதில் மிகப் பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதன் விளைவாக ஆசிரியத் தகுதியுள்ள சுமார் 3,00,000 பேர்களுக்கு விதிமுறைகளின்படி அளிக்கப்பட வேண்டிய ஆசிரியத் தகுதிச் சான்று  மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இட ஒதுக்கீடு பெறும் சுமார் 15,000 பேர் உடனடியாகப் பெற்றிருக்கக் கூடிய வேலை வாய்ப்பும் பறிபோயுள்ளது. நமது அரசியல் சட்டக் கடப்பாடு,  தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் (NCTE) விதிமுறை, நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றை அப்பட்டமாக மீறி இம்மோசடி நடை பெற்றுள்ளது.

விளக்கம் :  முதலில் நாம் சில உண்மைகளை மனம் கொள்ள வேண்டும். அவை :

1.நமது அரசியல் சட்டத்தின்படி கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

2. ஆசிரிய வேலை வாய்ப்பிற்கு அதற்குரிய D.T.Ed, B.Ed, M.A/ M..Sc முதலான கல்வித் தகுதிகள் தவிர NET, SET, TET முதலான தகுதித் தேர்வுகளிலும் (Eligibility Tests) வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

3. இந்தத் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான குறைந்த மதிப்பெண்களை, இட ஒதுக்கீட்டுத் தகுதியுள்ள ஒவ்வொரு பிரிவினர்க்கும் அவர்கள் பயன்பெறும் வண்ணம் தனித்தனியே நிர்ணயிக்க வேண்டும்.  இந்தக் குறைந்த பட்ச மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்கு உரிய சான்றிதழ் அளிக்க வேண்டும்.அந்தச் சான்றிதழை அவர் அடுத்த குறிப்பீட்ட சில ஆண்டுகளுக்கு வேலை கிடைக்கும் வரை பயன்படுத்தலாம். அவர் தன் மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ள விரும்பினால் அடுத்தடுத்த தேர்வுகளில் பங்கும் பெறலாம்.

4. இந்தத் தகுதித் தேர்வு ஆசிரியப் பணி நியமத்திற்கான போட்டித் தேர்வு அல்ல. வெறும் கல்வித் தகுதி அளிக்கும் தேர்வு மட்டுமே. ஆசிரிய நியமனத்திற்கான காலிப் பணியிடங்களின் அடிப்படையில் இதைச் செய்யக் கூடாது. அதாவது எவ்வளவு காலி இடங்கள் உள்ளனவோ அந்த அடிப்படையில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளவர்களை அறிவிக்க இயலாது. எப்படி B.Sc., B.Ed என்பது போன்ற கல்வித் தகுதி எவ்வளவு காலி ஆசிரியப் பணிகள் உள்ளன என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு கல்வித்தகுதி என்கிற அடிப்படையில் வெற்றி பெறும் எல்லோருக்கும் வழங்கப்படுகிறதோ அவ்வாறே தகுதித் தேர்வுச் சான்றுகளும் வழங்கப்பட வேண்டும். தகுதிச் சான்றுகள் பெற்றவர்கள் குறிப்பிட்ட காலம் வரை காலிப் பணியிடங்கள் அறிவிக்கப் படும்போதெல்லாம் அவ் வேலைக்குத் தகுதிபடைத்தவராக இருப்பர்..

5. பணி நியமனம் என்பது முறையாகத் ‘தனி அறிவிப்பு (separate notification) வெளியிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டும். இவ் அறிவிப்பில் ஒவ்வொரு பாடத்திற்குமான காலி இடங்களின் எண்ணிக்கை,  அதில் ஒவ்வொரு வகுப்புவாரிப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்ந்தெடுக்கும் முறை, (வேலை வாய்ப்புப் பதிவு மூப்பு, போட்டித் தேர்வு அல்லது வேறு ஏதேனும் முறை) ஆகியவை குறிப்பிடப்படவேண்டும். அதன் அடிப்படையில் முறையான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு, பிறகு, ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குமான ‘கட் ஆஃப் மதிப்பெண் அல்லது கட் ஆஃப் பதிவுத் தேதி ஆகியன வெளியிடப்பட வேண்டும். பின் இந்த அடிப்படையிலேயே பணி நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

6. பணி நியமனத்தின்போது, சட்டவிதிகளின்படி, முதலில் பொதுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை நிரப்ப வேண்டும், ஏனெனில் பொதுப் பிரிவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. ‘ரேங்க்’ வரிசையில் உள்ள யார் வேண்டுமானாலும் அதில் இடம் பெறலாம். அதாவது பொதுப் பிரிவு என்பது இட ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு (முற்பட்ட வகுப்பினர்) மட்டுமானது அல்ல. பட்டியல் மற்றும் பிற்படுத்தப் பட்டவர்க்கும், அவர்கள் உரிய மதிப்பெண்கள் பெற்றிருக்கும் பட்சத்தில் அதில் இடம் பெறலாம். இப்படி பொதுப் பிரிவு நிரப்பப்பட்ட பின்னரே பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவுகள் நிரப்பப்பட வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன? : இதுவரை எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதைப் பார்த்தோம். இனி சென்ற ஆண்டு தமிழக அரசின் ஆசிரியத் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் சவுத்ரி இதை எப்படி நடத்தினார் என்பதைப் பார்ப்போம்.

1.எந்த முறையான அறிவிப்பும் இன்றி ஆசிரியப் பணி நியமனம் மேற்கொள்ளப்பட்டது. எவ்வளவு காலிப் பணி இடங்கள் இருந்தன என்பது கடைசி வரை அறிவிக்கப்படவே இல்லை. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அரசு தரப்பில் கூறப்பட்டவற்றை எல்லாம் கணக்கில் கொண்டால் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியப் பணிகளில் சுமார் 35,000 காலி இடங்கள் இருந்தன எனலாம்.  ஆனால் இறுதியில் 19,000 இடங்களே நிரப்பட்டன. இதுவும் கூட எப்படி நடந்தது? முதலில் ஒரு ’டெட்’ தேர்வு நடத்தி அதில் இந்த இரு ஆசிரியப் பணிகளுக்கும் மொத்தத்தில் சுமார் 2500 பேர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளதாக 2012 ஆகஸ்ட் 24 அன்று அறிவிக்கப்பட்டது. அதிகக் காலி இடங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி மறுபடி ஒரு டெட் தேர்வு நடத்தியபோது இம்முறை மொத்தம் 19,000 பேர் தகுதியுடையவர்களாயினர் என அறிவித்துப் பணி நியமனம் அளிக்கப்பட்டது. ‘தகுதி பெறாததால்’ இரு ஆசிரியப் பணிகளிலும்  சுமார் 17,000 காலி இடங்கள் நிரப்பப்படாமற் போயின. பட்டதாரி ஆசிரியப் பணிகளில் மாத்திரம் அரசு அறிவிப்பு ஒன்றின்படி, 19,500 காலிப் பணி இடங்கள் இருந்தன. ஆனால் நிரப்பாப்பட்டதோ வெறும் 8,718 இடங்கள்தான். தகுதி உடையவர்கள் இல்லாததால் பிற இடங்கள் நிரப்பப்படவில்லையாம். இது உண்மையா?

2.முழுப் பொய். பொய் என்பதைக் காட்டிலும் மோசடி. ஏனெனில் முன்னர் குறிப்பிட்டபடி டெட் தேர்வு என்பது பணி நியமனத்திற்கான போட்டித் தேர்வு அல்ல. தகுதித் தேர்வு. குறிப்பிட்ட எண்ணிக்கைகளுக்கான ஒரு போட்டித் தேர்வைப் போல டெட் தேர்வை நடத்தி அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்ய இயலாது. சரி, இப்படி நடத்தப்பட்ட இந்த டெட் தேர்வும் சரியாக நடத்தப்பட்டதா?

3.இல்லை. மிகப் பெரிய மோசடி இதில் நடந்தது. தேசிய ஆசிரியக் கல்விக் கழக நெறிமுறைகளின் 9ம் விதிப்படி ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிபெண்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளன.  தமிழக அரசுத் தேர்வாணையம், கல்லூரி ஆசிரியர்களுக்கு நடத்தக்கூடிய தகுதித் தேர்வுகளிலும் இம்முறை கடைபிடிக்கப்படுகிறது. அதே போல அருகிலுள்ள ஆந்திர அரசு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நடத்துகிற டெட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஒருவர் பிற்படுத்தப்பட்டவர் ஆயின் 50 சதமும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 40 சதமும், பிறர் (அதாவது முற்பட்ட வகுப்பினர்) 60 சதமும் பெற வேண்டும் என விதித்துள்ளது. தமிழக அரசு ஏன் இந்தச் சட்டபூர்வமான நெறிமுறையை செயல்படுத்தவில்லை? நமது மாநிலத்திற்குரிய வகையில் (1) பிற்படுத்தப்பட்டோர் (2) மிகப் பிற்படுத்தப்பட்டோர் (3) தாழ்த்தப்பட்டோர் (4) ஏன் அருந்ததியர் மற்றும் ஆதரவற்றோர், விதவையர். முன்னாள் இராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குத் தனித் தனியே தகுதி மதிப்பெண்களை அறிவித்து ஏன் தேர்வை நடத்தவில்லை?   அடிப்படையான இந்த இட ஒதுக்கீட்டுக் கடப்பாட்டைத் தமிழக அரசு இந்தத் தேர்வில் மீறியதன் விளைவு என்ன? 

4. இந்த டெட் தேர்வில் மொத்தம் 6,80,000 பேர் பங்கு கொண்டனர். இதில் தகுதி பெற்றவர்களாக சுர்ஜித் சவுத்ரி அறிவித்தது வெறும் 19,000 பேர்கள் மட்டுமே. ஆனால் தேசிய ஆசிரியப் கல்விக் கழகத்தின் இட ஒதுக்கீட்டு நெறிமுறை பின்பற்றப்பட்டிருந்தால், ஒரு கணக்கீட்டின்படி இந்தத் தேர்வில் சுமார் 3,00,000 பேர் தகுதி பெற்றிருப்பர். இவர்களால் 35,000 காலிப் பணி இடங்களும் நிரப்பப்பட்டிருக்கும். அதாவது மேலும் 17,000 பேருக்கு வேலை கிடைத்திருக்கும். அல்லது அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய அடித்தளச் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேலும் 17,000 ஆசிரியர்கள் கிடைத்திருப்பர். அது மட்டுமா? 

5.தகுதி பெற்ற மூன்று லட்சம் பேர்களில் வேலை கிடைத்த 35,000 பேர்கள் போக எஞ்சியுள்ளோர் ஆசிரியப் பணிக்குத் தகுதி பெற்றவர்களாகத் தொடர்ந்து காலிப் பணி இடங்கள் வரும்போதெல்லாம் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியில் சேர்ந்து கொண்டிருக்கலாம். இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாதால் வாய்ப்பிழந்த பல்லாயிரக்கணக்கானோரும் தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் என்பதும் கவனிக்கத் தக்கது,

6.சுர்ஜித் சவுத்ரியின் மோசடி இத்தோடு முடிந்துவிடவில்லை.இத்துடன் தொடர்பில்லாத இன்னொரு ஆசிரியப் பணி நியமனத்தில் சுர்ஜித் சவுத்ரியின் கீழுள்ள த.நா ஆசிரியத் தேர்வாணையம் மேற்கொண்ட ஒரு இட ஒதுக்கீட்டு மோசடியை உயர் நீதி மன்றம் சென்ற அக்டோபர் 1, 2012 அன்று கடுமையாகக் கண்டித்தது. அந்தத் தீர்ப்பின் 27-வது பத்தியில், “ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் இந்த நீதிமன்றத்தில், அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, ‘பொதுப்பிரிவு(GT) இடங்களை முறைப்படி, எப்படி நிரப்ப வேண்டுமென இதுவரை நீதிமன்றங்கள் அளித்துள்ள தீர்ப்புகளை, ஆசிரியர் தேர்வு வாரியம் முற்றிலும் அறிந்திருக்கவில்லை என்பதும் இதுநாள் வரையிலும் அவர்கள் தேர்வு செய்து வெளியிட்டுள்ள பட்டியல்கள் அனைத்தும் தவறான முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன என்பதும் தெளிவாகத் தெரிகிறது! எனவே, இதுவரை வெளியிடப்பட்டுள்ள அனைத்துப் பட்டியல்களையுமே திரும்பப்பெறுமாறு உத்தரவிடப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நடந்தது இதுதான். ஒவ்வொரு பிரிவினருக்குமான கட் ஆஃப் மதிப்பெண்ணை வெளியிடாததோடு, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவர் பெயருக்கும் முன்னால் அவர்களது இட ஒதுக்கீட்டுப் பிரிவைக் குறிப்பிட்ட தேர்வாணையம், முற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் GT அதாவது பொதுப் பிரிவு எனப் பதிவு செய்திருந்தது. இப்பட்டியலின்படி இட ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்தால் முதலில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களது இடங்கள் அவர்களால் நிரப்பப்படும், பொதுப் பிரிவில் இடம் பெற வாய்ப்புள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவினரையும் அவரவர் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் முடக்குவதன் மூலம் பொதுப் பிரிவு முழுமையையும் முற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டும் வாரி வழங்க வாய்ப்பளிக்கப்பட்டது. இது மொத்தத்தில் பிற பிரிவினர் பெறும் வாய்ப்புகளைக் குறைத்தது. தனது தவறை ஆணையம் ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஆனால், “இதுவரை வெளியிடப்பட்டுள்ள அனைத்துப் பட்டியல்களையுமே திரும்பப்பெறுமாறு” நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் நாம் இப்போது பேசிக் கொண்டுள்ள டெட் தேர்வில் முதலில் வெளியிடப்பட்ட (ஆகஸ்ட் 24, 2012) பட்டியலை தேர்வு ஆணையம் ரத்து செய்து திருத்தவில்லை. அது மட்டுமா?

7.நியமிக்கப்பட்ட 19,000 ஆசிரியப் பணிகளிலும் திரும்பவும் நீதிமன்றக் கண்டனத்தையும் மீறி    மறுபடியும் பொதுப் பிரிவை இறுதியாகப் பூர்த்தி செய்து, அதன் மூலம் பொதுப் பிரிவின் அனைத்து இடங்களையும் முற்பட்ட சாதியினருக்கு ஆணையம் தாரை வார்த்துள்ளது. தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைக்க வேண்டிய வேலை எண்ணிக்கைகளைக் குறைத்தது. 


எமது பார்வைகளும் கோரிக்கைகளும்
  1. சமீபத்தில் தமிழ்நாடு உயர் கல்வி மன்றத்தின் (TANSCHE) சார்பாக இனி பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வுப் படிப்புகளில் ஆங்கில மீடியத்தில் படிப்பவர்கள் assignment, thesis ஆகியவற்றை ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பரவலாக எதிர்ப்பு எழுந்த பின் தமிழக அரசு அதைத் திரும்பப பெற்றுக்கொண்டது. உயர் கல்வி மன்றத் துணைத் தலைவராக இருந்த சிந்தியா பாண்டியன் பதவி விலகினார். ஆனால் இந்தப் பிரச்சினையில் தொடர்ந்து அரசு மௌனம் காப்பதைப் பார்க்கும்போது இந்த இட ஒதுக்கீட்டு மோசடி அரசின் மேல்மட்ட ஒப்புதலுடனேயே நடந்துள்ளதாகத் தெரிகிறது. இது ஆகக் கீழான அடித்தள மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை  மிகவும் தந்திரமாகப் பறிக்கும் செயல். இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். அரசு இது குறித்து விளக்கமளிக்க வேண்டும். நீதிமன்ற ஆணைகளை அவமதித்ததோடு, அடிப்படை விதிகளையும் மீறிய தேர்வாணையத் தலைவர் சுர்ஜித் சவுத்ரி தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இக் குற்றங்களுக்காக  விசாரித்துத் தண்டிக்கப்பட வேண்டும்.
  2. சென்ற ஆண்டு நியமனம் செய்யப்பட்ட 19,000 பணிகளையும் உடனடியாக ரத்து செய்து ஆணையிட வேண்டும்.,தேர்வுத் தகுதி மதிப்பெண்களைப் பிரிவு வாரியாக நிர்ணயித்து அந்த அடிப்படையில் டெட் தேர்வு முடிவுப் பட்டியலை புதிதாக வெளியிட்டுச் சான்றிதழ்களையும் வெளியிட வேண்டும். காலியாக உள்ள அனைத்து ஆசிரியப் பணியிடங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு முறையான அறிவிக்கை வெளியிட வெண்டும். பின்னர் கட் ஆஃப் மதிப்பெண் அல்லது கட் ஆஃப் பதிவுத் தேதி ஆகியவற்றை முறைப்படி தனியாக வெளியிட்டு காலியாகவுள்ள சுமார் 35,000 ஆசிரியப் பணி இடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். முந்தைய பணி நியமனத்தை ரத்து செய்வதால் அப்படிப் பணியமர்த்தப்பட்டவர்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்படாது என்பது குறிப்பிடத் தக்கது. இந்தப் 19,000 பேரில் முறையற்றுப் பணி நியமனம் பெற்றுள்ள சில முற்படுத்தப்பட்ட சாதியினர் ,மட்டுமே பாதிக்கப்படுவர். மாறாக மேலும் 17,000 பேருக்கு ஆசிரியப் பணி உடனடியாகக் கிடைக்கும்.
  3. அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நீதிமன்றம் தன்னிச்சையாக (suo moto) இதைக் கவனத்தில் ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வெறும் இட ஒதுக்கீடு மோசடி மட்டுமல்ல, நீதிமன்ற அவமதிப்பும் கூட என்பது குறிப்பிடத் தக்கது.
  4. தமிழகத்திற்கு ஒரு நீண்ட இட ஒதுக்கீட்டுப் பாரம்பரியம் உண்டு. அப்படியும் கூட இந்த இட ஒதுக்கீட்டு மோசடி இதுவரை பரவலான கவனத்தை ஈர்க்காதது வருந்தத்தக்கது. இட ஒதுக்கீட்டில் அக்கறையுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு போராட வேண்டும்..

பேரா. அ.மார்க்ஸ், முன்னாள் இயற்பியல் பேராசிரியர், சென்னை, செல்: 94441 20582
பேரா. முனைவர் ப.சிவகுமார், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை, செல்: 95511 22884
பேரா, மு, திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை, செல்: 98401 80048
வழக்குரைஞர் ரஜினி, மதுரை, 944329 4892

தொடர்பு: தங்கத் தமிழ் வேலன், தமிழ்நாடு மக்கள் கட்சி, 4/29,புதுத் தெரு, கண்ணம்மாப்பேட்டை, தி.நகர், சென்னை – 17, செல்: 99529 30165

நன்றி: அ.மார்க்ஸ்