செவ்வாய், ஜூன் 19, 2012

தஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள் உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை

தஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள் உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை



(தஞ்சையில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில்ல் அறிக்கை வெளியிடப்பட்டது.  இரண்டு பெண்களின் வாக்குமூலங்கள் அதில் உள்ளன. படித்துப் பாருங்கள்)






தஞ்சை
ஜூன் 19, 2012

தஞ்சையைச் சுற்றியுள்ள முத்துவீரக் கவுண்டன் பட்டி, மானோஜிப்பட்டி, குருவாடிப்பட்டி, ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகர், மாரியம்மன் கோயில், அம்மன்பேட்டை, ஆவாரம்பட்டி முதலான பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டக் குறவர் இன மக்கள் வசிக்கின்றனர். பழங்குடிப் பட்டியல் இனத்தவரான (scheduled tribes) இவர்கள் பன்றி வளர்ப்பு, கூடை முடைதல், அம்மி கொத்துதல் முதலான தொழில்களைச் செய்து பிழைத்து வருகின்றனர். சிலர் விவசாயம், கொத்து வேலை முதலியவற்றையும் செய்து வருகின்றனர்.

தஞ்சை நகரை ஒட்டியுள்ள அன்னை சிவகாமி நகரிலுள்ள குறவர் குடியிருப்பில் கடந்த வாரத்தில் 60 பழங்குடிக் குறவர் பெண்கள் காலவரையரையற்ற உண்ணாவிரதமிருந்த செய்தியைப் பத்திரிக்கைகளில் படித்தோம். இவர்களில் நான்கு பெண்களின் உடல்நிலை மோசமானதையொட்டி அவர்கள் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியையும் அறிந்தோம்..  தஞ்சை, அரியலூர், திருவாரூர், சேலம் மற்றும் திருச்சி மாவட்டக் காவல்துறைகளால் தாங்கள் குற்றப்பரம்பரையினராக நடத்தப்பட்டுப் பொய்வழக்குகள், சட்ட விரோதக் காவல், சித்ரவதை முதலியவற்றால் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் நடத்தினர். போராட்டத்தை வழி நடத்திய விடுதலைச் சிறுத்தைகளின் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் விவேகானந்தன் மற்றும் மனித உரிமைகளில் அக்கறை உள்ள சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இப்பிரச்சினை குறித்து விசாரிக்கக் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
3. பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்,
4. அரங்க. குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம், பேராவூரணி,
5. மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், திருவாரூர்,
6. பேரா. சி. சுப்பிரமணியன், தஞ்சை

முதற் கட்டமாக சென்ற 11ந்தேதி அ.மார்க்ஸ் அங்கு சென்று உண்ணாவிரதம் இருந்த பெண்களைச் சந்தித்துப் பேசினார். அன்று மாலை மாவட்ட ஆட்சியர் முன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் உண்ணாவிரதமிருந்த பெண்கள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.

இரண்டாங் கட்டமாக எம் குழுவினர் அனைவரும் நேற்றும் இன்று காலையும் தஞ்சை சென்று பாதிக்கப்பட்ட சுமார் 50 குறவர் இன ஆண்கள் மற்றும் பெண்களையும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் ஐ.ஏ.எஸ், மாவட்டக் கண்காணிப்பாளர் அனில் குமார் கிரி ஐ.பி.எஸ் ஆகியோரையும். தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கேப்டன் துரை, மாநிலப் பொருளாளர் திருவாதிரை ஆகியோரையும் சந்தித்தனர்..

பின்னணி

காலனிய ஆட்சியாளர்கள் இந்தியாவெங்கிலும் பல பழங்குடிகளையும், சாதிகளையும் “குற்றப் பரம்பரை” என அறிவித்து அவர்களைக் குற்றப்பறம்பரைச் சட்டத்திற்குள் (Criminal Tribes Act -1911) கொண்டுவந்திருந்த வரலாற்றை நாம் அறிவோம். இந்தப்பட்டியலிலுள்ள மக்களில் 10 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள் அனைவரும் தினம் மாலையில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து அங்குள்ள பதிவேட்டில் தம் கைரேகைகளைப் பதித்துவிட்டு,  இரவு முழுவதும் அங்கேயே தங்கிக்  காலையில்தான் வீடு திரும்ப வேண்டும். வெளியூரிலுள்ள உறவினர் வீடுகளுக்கோ, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கோ செல்ல வேண்டுமாயின் காவல் துறையிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.   இப்படியான ஒரு வாழ்வை வாழ நேர்ந்த இம்மக்களைக் காவல்துறையினர் எவ்வெவ் வகைகளிலெல்லாம் பயன்படுத்தியிருப்பர் என்பதை யாரும் யூகித்துக் கொள்ள இயலும். இலவச உழைப்பு, பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பவை தவிர தேவைப்படும்போதெல்லாம் திருட்டு வழக்குகளில் தொடர்புபடுத்திச் சிறையிலடைத்தல் என்பன இக்கொடுமைகளில் சில.

சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் இக்கொடுமைகட்கு எதிராக மக்கள் ஆங்காங்கு போராடினர்.  மதுரைக்கருகிலுள்ள பெருங்காமநல்லூரில் வாழ்ந்த பிரான்மலைக் கள்ளர்கள் இச்சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 ஆண்களும் 1 பெண்ணும் இறந்தனர். முத்துராமலிங்கத் தேவர் போன்றோரும் இச்சட்டத்திற்கெதிரான போரட்டங்களை நடத்தினர். சுதந்திரத்திர்குப் பின் இச்சட்டம் நீக்கப்பட்டது.

சட்டம் ஏட்டளவில் நீக்கப்பட்டபோதும் நமது காவல்துறையினரின் நெஞ்சத்திலிருந்து  அது நீங்கவில்லை. இந்தச் சட்டம் அளித்த அபரிமிதமான அதிகாரங்களை அவ்வளவு எளிதாக அவர்கள் இழந்துவிடத் தயாராக இல்லை. ஒருகாலத்தில் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த போதும் எண்ணிக்கையில் பலமாகவும், குறிப்பிட்ட பகுதிகளில் செறிந்தும் வாழ நேர்ந்த சாதியினர் தேர்தல் அரசியலினூடாக வலுவான அரசியல் சக்திகளாக மாறினர். ஆனால் அத்தகைய வாய்ப்புப் பெற்றிராத பழங்குடியினர்களான இருளர்கள், குறவர்கள், ஒட்டர்கள் முதலானோர் காவல்துறையினரால் குற்றப் பரம்பரையினராக நடத்தப்படுவது தொடர்ந்தது.. ஆண்டு இறுதியில் கணக்கு முடிக்கவும், கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை முடிக்கவும், சில நேரங்களில் காவல் துறையுடன் நெருக்கமாக இருந்து செயல்படும் திருட்டுக் கும்பல்களைக் காப்பாற்றவும், பதவி உயர்வுகளுக்காகவும், பதக்கங்கள்  (out of turn promotion and gallantry awards) பெறுவதற்காகவும் இவர்கள் கைது செய்யப்படுவர். வீடு  புகுந்து இழுத்துச் சென்று  பல நாட்கள் வரை சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து, குற்றங்களை ஒப்புக் கொள்ளச் செய்து சிறையில் அடைக்கப்படுவர். இவ்வாறு தேடி வரும்போது இளம் பெண்கள் தென்பட்டால் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டுத் துன்புறுத்தப் படுவர். பல நேரங்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுவதும் உண்டு.

பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் சொன்னார். ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை விழாவை வெகு விமரிசையாகக் காவல் நிலையங்களில் கொண்டாடுவது எல்லோருக்கும் தெரியும். அதை ஒட்டி பெரிய அளவில் வசூல் வேட்டையும் நடக்கும். ஆயுத பூஜை கொண்டாடும்போது காவல் நிலைய லாக் அப் அறை காலியாக இருக்கக் கூடாதாம். அதற்காக யாராவது ஒரு குறவரைக் கொண்டுவந்து பொய் வழக்கொன்றைப் போட்டு அடைத்து வைப்பார்களாம்.

காலங் காலமாக நடைபெற்று வந்த இக்கொடுமைகளை எதிர்த்துத்தான் இப்போது அந்தப் பழங்குடிப் பெண்கள் காலவரையரை அற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். இனி அவர்களின் சொற்களினூடாகச் சில சோகக் கதைகளைக் கேட்கலாம். நாங்கள் சேகரித்த வாக்கு மூலங்களில் இரண்டு மட்டுமே மாதிரிக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

வாக்குமூலங்களிலிருந்து சுருக்கமாகச் சில செய்திகள் 

1.   முத்து வீரக் கண்டியன் பட்டி செல்வராணி க/பெ வீரையன்

     “எனக்கு இரண்டு பெண்கள் ஒரு பையன். பண்ணி வளர்க்கிறது, கூலி வேலை மற்றும் வேஸ்ட் சாப்பாடு எடுக்கிறது எங்கள் தொழில். தொடர்ந்து என் புருசன் மேல கேஸ் போட்டுகிட்டே இருகாங்க. எல்லா ஸ்டேசன்லையும் அவர் மேல கேஸ் இருக்கு. மொத்தம் 17 கேஸ்கள்.  பிடிச்சிட்டுப்போய் சித்திரவதை பண்றாங்க. குறவன்ன்னா கேஸ் இல்லாம இருக்கக்கூடாதுங்கிறாங்க. பிள்ளைகள்


படிக்கக்கூடாதுங்கிறாங்க. போன வருசக் கடைசியில அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எஸ்.ஐ டேவிட் இருவரும் வந்து என் புருசனத் தேடுனாங்க, ஒப்படைக்கலன்னா உன்னை பலாத்காரம் பண்ணுவேன்னாங்க. என் அப்பா துரைசாமி கம்யூனிஸ்ட் கட்சியில இருக்கார். வார்டு மெம்பராவும் இருக்கார். அவர் இது பற்றி மேலதிகாரிங்க கிட்டப் புகார் மனு கொடுத்தார். அதனால அவரையும் சட்டக் கல்லூரியில் படிக்கிற என் தம்பியையும் பிடிச்சுட்டுப் போனாங்க. அப்பாவ விலங்கு போட்டு தெருவுல நாய் மாதிரி இழுத்துட்டுப் போனாங்க. தம்பிய விட்டுட்டு அப்பா மேல கேஸ் போட்டாங்க. பத்து பவுன் நகை கொடுத்தா விட்டுடரேன்னு சொன்னாங்க. எங்க கிட்ட இல்லன்னோம். ஏதாவது ஒரு நகை கடையைக் காமி. இங்கதான் திருட்டு நகையை வித்தோம்னு சொல்லு. நாங்க அவன்கிட்ட வாங்கிக்கிறோம்னு சொன்னாங்க. அப்போ முல்லை பெரியார் பிரச்சினை இருந்துச்சு. முத்தூட் ஃபைனான்ஸ்லதான் குடுத்தேன்னு சொல்லுன்னு சொன்னாங்க. தாங்க முடியாம நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காக மண்ணெண்ணையை ஊத்தி தீ வச்சுக்கிட்டேன்.”

50 சதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வராணி சிகிச்சைக்குப் பின் பிழைத்துக் கொண்டார். எனினும் கைது பொய் வழக்குகள் முதலியன தொடர்ந்தன. குறவர் இனத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி பெருமாள்(60), அவரது மருமகன் அன்பழகன் (28) ஆகியோர் கடந்த ஏப்ரல் 30ம் தேதியும், மானோஜிப்பட்டி நாகப்பா (37) மே 20ம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை குறவர் பழங்குடி சங்கம் ஏற்பாடு செய்தது. இதை அறிந்த காவல் துறையினர் அன்னை சிவகாமி நகர் கணேசனை (45) கடந்த 5ம் தேதியும், இச்சங்கத்தின் மாவட்ட அமைப்பாளரும் செல்வராணியின் கணவருமான முத்துவீரக் கண்டியன் பட்டி வீரையனை ஏழாம் தேதியும்   கைது செய்தது. மருத்துவக் கல்லூரிக் காவல் நிலைய ஆய்வாளர் சுபாஷ் சந்திர போஸ், வீரையனை தொலைபேசியில் அழைத்து காவல் நிலையத்திற்கு வரச் சொல்லிக் கைது செய்தார். பின் அவர் அய்யம்பேட்டைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று பழைய வழக்கொன்றில் சிக்கவைக்கப்பட்டார்.

நேற்று மாலை பிணையில் விடுதலை ஆன அவரை சிறை வாசலிலேயே சாதாரண உடையிலிருந்த போலீசார் மீண்டும் கைது செய்ய முனைந்துள்ளனர். அவரது வழக்குரைஞர் காமராஜ் தலையிட்ட பின்பு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை தன்மீது 17 பொய் வழக்குகள் போடப்பட்டன எனவும் விசாரணை முடிந்த இரு வழக்குகளிலும் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் வீரையன் எம் குழுவிடம் கூறினார். 

2.   முருகாயி க/பெ ரஜினி
  
  “மானோஜிப்பட்டி சரபோஜி நகரில் நாங்க இருக்கோம்.நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம் தவிர கொத்தனார் வேலையும் அவர் செய்வார். 2005 லிருந்து எ3ன்னையும் என் புருசன், தம்பி, மாமியார், ஓப்படியா இப்டி எல்லாரையும் குடவாசல், அரியலூர், புதுக்கோட்டை, மெடிகல் காலேஜ் இப்படி பல போலீஸ்காரங்க பிடிச்சு, அடிச்சு, சித்ரவதை பண்ணி பொய் கேஸ் போட்டு கொடுமைப் படுத்திருக்காங்க. 2005ல குடவாசல் போலீஸ் என் புருசனப் புடிச்சிட்டுப்போயி 30 நாள் வச்சிருந்தாங்க. போய்க் கேட்டா காட்ட மாட்டாங்க. அடி தாங்க முடியாம என் புருசன் தப்பிச்சு ஒடிட்டாரு. உடனே எங்கள தொந்தரவு பண்ண ஆரம்பிச்சாங்க. என்னை, மாமியார், தம்பி, அண்ணன் நாலு பேரையும் புடிச்சுட்டுப் போனாங்க. மாமியாரை தஞ்சாவூர் நூலகக் கட்டிடத்துக்குப் பக்கத்துல ஒரு மாடியில வச்சு அடிச்சாங்க. அண்ணன், தம்பி ரண்டு பேரையும் குடவாசல் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனாங்க. என்னையும் நாலு வயசு, ஒன்றரை வயசுள்ள என் ரண்டு பிள்ளைகளையும் நன்னிலம் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனாங்க. என் பிள்ளைங்க போட்டிருந்த வெள்ளி அரணா, மோதிரம் எல்லாத்தையும் புடுங்கிட்டாங்க. என்னை ஒரு வாரம் போட்டு அடிச்சாங்க. என் புருசன் போய் அரெஸ்ட் ஆனார். அப்புறந்தான் எங்களை விட்டாங்க.
5பேர் மேல கேஸ் போட்டாங்க. அப்புறம் பெயிலில் எடுத்தோம். ஆனா மறுபடி மெடிகல் காலேஜ் ஸ்டேசன்ல அவரைக் கைது செய்து 20 நாள் வச்சு அடிச்சாங்க. அப்புறம் அவர் மேல 4 கேஸ் போட்டு திருவையாறில ரிமான்ட் பண்ணினாங்க. மறுபடி பெய்ல் எடுத்தோம். 2009ல் அரியலூர் ஸ்டேஷன்லேருந்து பிடிச்சுட்டுப் போய் ஒரு வாரம் வச்சிருந்து அடிச்சுச் சித்ரவதை பண்ணி அப்புறம் ஒரு கேஸ்ல ரிமான்ட் பண்ணினாங்க. அதோட முடியல. நான், என் ஓப்பிடியா, மாமியார், சித்தப்பா மொத்தம் 11 பேர், ரண்டு ஆண், 9 பெண்கள திருச்சி போலீஸ் கைது பண்ணிக் கொண்டு போச்சு.. திருச்சி டோல்கேட் மண்டபத்தில் வச்சு ராத்திரியெல்லாம் அடிச்சாங்க. சித்தப்பாவையும், மாமியாரையும் விட்டாங்க. என்னையும் ஓப்பிடியாவையும் புடவையெல்லாம் அவுத்துட்டு வெறும் பாடி, பாவாடையோட 3 பெண் போலீஸ்கள் தொடை மேல ஏறி நின்னு ஆண் போலீசை விட்டு அடிக்கச் சொன்னாங்க. இப்படி ஒரு வாரம் நடந்துச்சி. அப்புறம் திருமானூர் ஸ்டேசனுக்குக் கொண்டுபோயி மத்தவங்க மேல குண்டர் சட்டம் போட எங்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு விட்டாங்க.  என் கொழுந்தனார் அப்புறம் அண்ணன் 2 பேர் மேல குண்டர் சட்டம் போட்டாங்க.



2010ல மறுபடி மெடிகல் காலேஜ் போலீஸ் வந்து பிடிச்சது. அங்கே வந்த புதுக்கோட்டை போலீஸ் எங்களை ஆலங்குடி கொண்டு போச்சுது. 8 நாள் வச்சிருந்தாங்க. நாலு நாள் என்னையும் எம் புருசனையும் பத்துப் பத்துப்பேர் சுத்தி நின்னு அடிச்சாங்க. அப்புறம் 6 பேர் மேல கேஸ் போட்டாங்க. எம் மேலையும் (24) ஓப்பிடியா (22) மேலையும் கொள்ளை முயற்சின்னு கேஸ் போட்டாங்க.

அப்புறம் அம்மாபேட்டையிலுள்ள அக்கா வீட்டுக்குப் போயிட்டு வர்றப்போ பஸ்சை நிறுத்தி ஏட்டு செழியன், ரவி ஆய்வாளர், சுபாஷ் சந்திர போஸ் என்கிற மூணு போலீஸ்களும் என்னை, அண்ணனை, வீட்டுக்காரரை அழைச்சிட்டுப் போனாங்க. இரவு 9 மணிக்கு என்னை விட்டுட்டாங்க. மறு நாள் போனேன். அவங்களைக் காட்டல. 28 நாள் இப்படி வச்சு அடிச்சாங்க. மஜிஸ்ட்ரேட்டிடம் பெட்டிசன் கொடுத்த பின்புதான் ரிமான்ட் பண்ணாங்க. ஆனா அப்புறம் அவரு மேல குண்டர் சட்டம் போட்டாங்க. தெற்கு ஸ்டேஷன், மெடிகல் காலேஜ், பல்கலை கழகம், கீழவாசல்ன்னு மொத்தம் எட்டு கேஸ் அவர் மேல இருக்கு. அப்புறம் திருவெறும்பூர் ஸ்டேஷன்லையும் ஒரு கேஸ் இருக்கு.”. 

அன்னை சிவகாமி நகரில் சேதுமணி மாதவன் உருவாக்கிய பெண்கள் சிறைச்சாலை.

அன்னை சிவகாமி நகரில் முருகேசன் என்பவரை அப்போது (2005) இன்ஸ்பெக்டராக இருந்த சேதுமணி மாதவன் தேடி வந்தார், முருகேசன் பயந்தோடிச் சென்றவுடன் அவரது வீட்டில் அந்தப் பகுதியிலிருந்த 15 பெண்களை உள்ளே வைத்துப் பூட்டிச் சுமார் 45 நாள் சிறை வைத்ததாகப் பலரும் வாக்குமூலங்கள் அளித்தனர். ஆய்வாளர்கள் சோமசுந்தரம், முத்தரசு, தமிழ்ச்செல்வன் முதலானவர்களும் உடந்தையாக இருந்ததாக நாகன் மகன் கணேசன் கூறினார். வேண்டும்போது வந்து பண்ணி அடிச்சு விருந்து சமைக்கச் சொல்லிச் சாப்பிட்டுவிட்டும் போவார்களாம்

ஒரு நாள் மஃப்டியில் அங்கு வந்த இன்னாசிமுத்து, தருமராஜ் என்ற இரண்டு போலீஸ்களை அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த செல்லன் மகன் ஆறுமுகம் அடித்து அங்கேயே உட்கார வைத்துவிட்டார். இதற்காக அவர் பட்ட சித்திரவதைகள், அவர் மீது போடப்பட்ட வழக்குகள் ஏராளம். ஈரோடு, சேலம், பரமக்குடி முதலான பல இடங்களுக்கும் கொண்டு போகப்பட்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு கொலை வழக்கும் அடக்கம். எனினும் விசாரணை முடிந்துள்ள 3 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டி ஆறுமுகம் என்பவரைத் தேடி வந்து அவரது மனைவி மீனாட்சியைக் கொண்டு சென்ற போலீஸ்காரர்கள் அவரைத் தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்துச் சித்திரவதை செய்துள்ளனர். வயதில் சிறிய அவரது கொழுந்தன்முன் அவரது மேற்சீலையை அவிழ்த்து வீசி. கொழுந்தன் மீது அவரைத் தள்ளி “அவளைக் கெடுறா” எனச் சொல்லி அடித்துள்ளனர். கையை அடித்து, பின்புறம் இழுத்து வளைத்துச் சித்திரவதை செய்ததில் மீனாட்சியின் சுண்டு விரல் நிரந்தரமாக வளைந்துள்ளது. அவமானம் தாங்காத மீனாட்சி மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்ய முனைந்துள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் என்பதற்காக அவரது வீட்டார் அவரைக் கண்காணிப்பில் வைத்துப் பாதுகாத்துள்ளனர். தனது ஒன்பதாவது படிக்கும் மகளையும் பன்னிரண்டாவது படிக்கும் மகனையும் பள்ளியில் சென்று அனைத்து மாணவர்களின் முன்னிலையில் அவமானம் செய்து, “நீங்கள்லாம் திருந்தினா எப்படி எங்களுக்கு வழக்குக் கிடைக்கும். எங்களின் பொண்டாட்டி பிள்ளைகள் என்ன செவாங்க? உங்களை நாங்க திருந்த விட்ருவோமா?” என ஏட்டு செழியனும் ஆய்வாளர் ரவிச்சந்திரனும் பள்ளியிலிருந்து விரட்டியதாகவும் மீனாட்சி வாக்குமூலம் அளித்தார். மகள் இப்போது பள்ளிக்குச் செல்வதில்லை.

சித்திரவதைகளில் லாடம் கட்டுவது, விரல்களில் ஊசி ஏற்றுவது, சிகரெட்டால் சுடுவது, மிக அசிங்கமாகப் பேசுவது என இந்த அப்பாவிப் பழங்குடி மக்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடுமைகள் ஏராளம்.

பெண்கள் மீதுப் பொய்யாகத் திருட்டுக் கேஸ்கள் போடுவது தவிர கஞ்சா கேஸ்கள் போடும் கொடுமையும் இங்கு நடந்துள்ளன. ஆனந்த் மனைவி கல்யாணி இவ்வாறு தன்மீது பொய்யாகக் கஞ்சா வழக்கு போடப்பட்டது குறித்து எங்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

செழியன் என்னும் ஏட்டு காளியப்பனின் மனைவி பங்காருவின் வீட்டுப்பத்திரத்தை எடுத்துச் சென்றுள்ளார்.  செழியன், ஆய்வாளர் சோமசுந்தரம் இருவரும் அவர்களின் மகன் ராஜாவின் டி,வி,எஸ் ஃபோர்ட் எனும் இரு சக்கர வாகனத்தையும்  (எண்: டி.என். ஏ.கே 49/ 7480) எடுத்துச் சென்றுள்ளனர். ஓட்டர்  அய்.டியையும் பிடுங்கிச் சென்றுள்ளனர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் மானோஜிப்பட்டியிலுள்ள தன் அக்கா வீட்டிற்கு வந்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுக் கடும் சித்திரவதைக்குப்பின் சேலம் சிறையில் அடைக்கப்பட்ட்டார். சிறையிலிருந்தபோது அவர் இறந்து போனார். 2008ல் முன்னயம்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்கிற 9 வயதுச் சிறுவனைச் சமயபுரம் காவல் துறைக் கைது செய்து கொண்டு சென்று கடுமையாக அடித்துச் சித்திரவதை செய்து தலையில் கடுமையான காயங்களுடன் வீட்டில் கொண்டு சென்று போட்டது. மூன்று நாட்களில் அவன் இறந்து போனான்.

இம்மக்ககள் அளித்துள்ள இந்த வாக்கு மூலங்களைப் படித்தால் நம் காவல்துறையிடம் இத்தனை வக்கிரங்கள் புதைந்துள்ளனவா என ஒருவர் வியப்படைவதைத் தவிர்க்க இயலாது.

நிர்வாகத்தின் விளக்கங்கள்

மாவட்ட ஆட்சியரை நாங்கள் சந்தித்துப் பேசியபோது தன் அதிகார வரம்பிற்குள்ன் சாத்தியமான வகையில் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அந்த விசாரணையில் காவல் அதிகாரிகள்மீது கூறப்பட்டிருக்கும் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும் அவர் எங்களின் குற்றச்சாட்டுகளை காவல் துறை உயர் அதிகாரிகளிடம் சொல்லுமாறும் வேறு எந்தெந்த முகமைகளிடம் இது குறித்துப் புகார்கள் செய்ய இயலுமோ அங்கெல்லாமும் முயற்சியுங்கள் என்றும் கூறினார். காவல்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிக அதிகமாக இருப்பதால் ஆர்.டி.ஓ விசாரணை மூலம் அவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்குக் கிடையாது என்பதைச் சொல்லி வந்தோம்.


ஐ.ஜி அலெக்சாண்டர் மோகன் அவர்களைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது அவர்  கிரிமினல்கள் மீது மட்டுமே தாங்கள் வழக்குகளைப் போடுவதாகவும், பொய் வழக்குகள் போடுவதில்லை எனவும் கூறினார். குற்றவாளிகள் மீது வழக்குகள் போடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை ஒரு இனத்தையே குற்றவாளியாகக் கருதி நடவடிக்கை எடுப்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம் எனச் சொன்னபோது அப்படியெல்லாம் இல்லை எனத் தான் குறவர் பிரதிநிதிகளிடம் விளக்கி அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளனர் எனப் பதிலளித்த அவர் கண்காணிப்பாளரிடம் பேசுமாறு கூறினார். கண்காணிப்பாளர் அனில் குமார் கிரி மிகவும் சுருக்கமாகப் பேசி முடித்துக் கொண்டார். காவல் துறை அதிகாரிகள் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எமது பார்வைகள்

1. காவல் துறையின் கீழ் மட்ட அதிகாரிகளே இந்த அத்து மீறல்களுக்கெல்லாம் நேரடியாகப் பொறுப்பான போதிலும் உயர் அதிகாரிகள் இதற்கு உடந்தையாகவும், இது குறித்து முறையான விசாரணைக்குத் தயாரில்லாமலுமே உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் பழங்குடிப் பிரதிநிதிகள் ஐ.ஜி அலெக்சான்டர் மோகனைச் சந்திக்கச் சென்றபோது அவர் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் வேண்டுமானால் நீங்களே போலிஸ் ஸ்டேஷனை நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார். இன்று அவர் தஞ்சையில் இருந்தும் நாங்கள் எவ்வளவோ வேண்டிக் கேட்டுக் கொண்டும் எங்களை அவர் சந்திக்கவில்லை. தொடர்ந்து சில மாதங்களாக இந்த அத்து மீறல்கள் குறித்துப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோதும் கிஞ்சித்தும் கவலைப்படாமல் கீழ்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து அத்து மீறிக் கொண்டிருந்ததை மாவட்டக் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்துள்ளது. இன்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் அக்கறையுடன் நாங்கள் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டது குறிப்பிடத் தக்கது. வெறும் ஆர்.டி.ஓ விசாரணை மூலம் நீதி கிடைக்க வழி இல்லை என்பதையே இவை அனைத்தும் உறுதி செய்கின்றன.

2. குறவர்கள், இருளர்கள், ஒட்டர்கள் போன்ற பழங்குடிகள் எண்ணிக்கையில் சிறுத்தும் எந்த ஓரிடத்திலும் பெரும்பான்மையாக இல்லாதும் இருப்பதால் இவர்களின் பிரச்சினைகளை எந்த அரசியல் கட்சிகளும் பொருட்படுத்துவதில்லை. மிகவும் அடித்தள மக்களாகவும் எவ்வகையிலும் அரசியல் அதிகாரமும் அற்றுள்ள இவர்களின் பிரச்சினைகளில் இடதுசாரிக் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டத்தை வழி நடத்துவது பாராட்டுக்குரியது. எனினும் குறிப்பான வழக்குகள் புகார்கள் ஆகியவற்றைக் காவல் துறை அதிகாரிகள் மீது பதிவு செய்து  முறையான வழக்குகளை அத்து மீறிய காவல் அதிகாரிகளின் மீது மேற்கொள்ளும் முயற்சி இதுவரை செய்யப்படாதது வருந்தத் தக்கது.

3. இது போன்று பொய் வழக்குகள் போடுவதன் மூலம் திருட்டுக்களும், கொள்ளைகளும் குறைந்ததில்லை என்பதை காவல்துறை கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.  இதன்மூலம் உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடுவது குறித்தும் அதற்குக் கவலை இல்லை.

4. இதுவரை இவ்வாறு பழங்குடி மக்களின் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் விசாரணை முடிந்த வழக்குகள் அனைத்திலும் அவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் காவல்துறைக்குக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

5. பெண்களை இவ்வாறு கொண்டுவந்து சித்திரவதை செய்து திருட்டு மற்றும் கஞ்சா வாழக்குகள் போடப்படும் கொடுமைகட்கும் அதிக முன்னுதாரணங்கள் இல்லை.

6. தஞ்சாவூரில் உள்ளவர்களைக் கொண்டு சென்று ஈரோடு, சேலம், பரமக்குடி முதலிய ஊர்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அங்கெல்லாம் அவர்களுக்கு உறவினர்களோ, தொடர்புகளோ உள்ளனவா எனக் கேட்டபோது அப்படி இல்லை என்பது தெரிய வந்தது. பொதுவாகப் பழக்கமில்லாத பகுதிகளில் திருடர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் எந்த வீடுகளிலும் திருட்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவோ அவை ந்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவோ தெரியவில்லை.

7. பலர் மீது அவர்கள் சிறையில் இருந்த காலத்தில் திருடியதாக வழக்குகள் போடப்பட்டுள்ளன. மானோஜிப்பட்டி பொதிகை நகரைச் சேர்ந்த பொன்னன் மகன் மணி  சேலம் சிறையில் இருந்த காலத்தில் பந்தநல்லூரில் திருடியதாகப் பிடித்துச் சென்று 9 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து அடித்துள்ளனர். சேலம் சிறையில் இருந்ததை அவர் நிறுவியவுடன் அவர் மீது கஞ்சா வழக்குப் போடுச் சிறையில் அடைத்தனர்.

8.. காவல் துறை பழங்குடிக் குறவர்களைத் தேவைப்படும்போது வழக்குகள் போடுவதற்கான சேமிப்புப் படையாகவே வைத்துள்ளது.. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அதிக அளவில் கைது செய்யப்படும் அவர்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப் படுகின்றனர். சிறிய அளவில் கைதுகள் நடக்கும்போது ஏராளமான வழக்குகள் அவர்கள் மீது போடப்படுகின்றன. கைதுகள், சட்ட விரோதக் காவல்கள், சித்திரவதைகள், சிறை வாழ்க்கை, வழக்குகள், பிணை விடுதலைக்கு அலைதல் என்பதாக அவர்களின் வாழ்க்கை கழிகிறது.

எமது கோரிக்கைகள்

இப்பழங்குடி மக்கள் காவல்துறை மீது வைக்கும் ஏராளமான குற்றச்சாட்டுகளை விசாரித்து நீதி வழங்குவது ஆர்.டி.ஓ விசாரணையில் சாத்தியமே இல்லை என்பதால் பதவியில் உள்ள நீதிபதி ஒருவரால் இவை விசாரிக்கப்பட அரசு உத்தரவிட வேண்டும்..

சேதுமணி மாதவன், சுபாஷ் சந்திர போஸ் சோம சுந்தரம், ரவிச்சந்திரன், தமிழ்ச் செல்வன், முத்தரசு, பழனியப்பன் முதலான ஆய்வாளர்கள் ரவி, செழியன், தருமராஜ், பன்னீர்செல்வம், பத்மநாபன் முதலான காவலர்கள் மீது இம்மக்கள் பெயர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டுகின்றனர்.  சாட்டுகின்றனர். அவர்கள் இப்பகுதியிலேயே பணியாற்றும் பட்சத்தில் விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். முதற்கட்ட விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுத் துறை நடவடிக்கை மட்டுமின்றிப் பழங்குடிகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்ற விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். சித்திரவதையில் இறந்துபோன முருகன், முத்துக்குமார் ஆகியோரின் மரணத்துக்குக் காரணமான காவல் துறையினர் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். பழங்குடியினர் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள் அனைத்துக் காவல் துறையினருக்கும் கொடுக்கப்படல் வேண்டும்.

பழங்குடிக் குறவர்கள்மீதான காவல்துறை அத்துமீறல்களை மட்டுமே இவ்வறிக்கை கவனத்தில் கொண்டுள்ளது. இனச் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருப்பது முதலான பழங்குடிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் இவர்கள் எதிர்கொள்கின்றனர். அரசின் இலவசத் திட்டங்கள் எதுவும் இவர்களைச் சென்றடைவதில்லை. மாவட்ட நிர்வாகம் இவற்றைக் கவனத்தில் கொண்டு உடனடியாகச் சரி செய்ய வேண்டும்.

இது போன்ற சிறுபான்மையாக உள்ள மக்கட் பிரிவுகளின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர ஆங்காங்கு அக்கறையுள்ள மனித உரிமை அமைப்புகளும் அரசியல் இயக்கங்களும் மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழுக்களை அமைத்துச் செயல்பட வேண்டும்.





தொடர்புக்கு: 

3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரி நகர், 
அடையாறு, 
சென்னை – 600 020.
செல்: 9444120582.

நன்றி:- அ.மார்க்ஸ்

திங்கள், ஜூன் 18, 2012

உண்மையறியும் குழு ஆய்வு


உண்மையறியும் குழு ஆய்வு


  தஞ்சையைச் சுற்றி  பல பகுதிகளில் வசிக்கும் குறவர்  இன மக்கள் மீது காவல்துறையின் பொய் வழக்குகள், சித்திரவதைகள், சட்டவிரோதக் காவல் மற்றும் பல்வேறு அடக்குமுறைகள் குறித்து பேரா.அ.மார்க்ஸ் தலைமையிலான  உண்மையறியும் குழு ஆய்வு இன்று (18.06.2012) ஆய்வு செய்தது.

இக்குழுவில் இடம்பெற்றோர்:-

பேரா.அ.மார்க்ஸ்
பேரா.பிரபா.கல்விமணி
புதுவை.கோ.சுகுமாரன்
அரங்க.குணசேகரன்
சி.சுப்பிரமணியன்
மு.சிவகுருநாதன்

   காவல்துறையால் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பலரையும் இக்குழு சந்தித்தது. மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரையும் இக்குழு சந்தித்துப் பேசியது.

    நாளை (19.06.2012) 11.30 மணிக்கு தஞ்சை பெசண்ட் லாட்ஜ் மாடியில் நடைபெறும் பத்தரிக்கையாளர் சந்திப்பில் அறிக்கை வெளியிடப்படும்.

ஞாயிறு, ஜூன் 10, 2012

எனது முதல் வகுப்பு ஆசிரியருக்கு வயது 80


எனது முதல் வகுப்பு ஆசிரியருக்கு வயது 80
                                      
                         -மு.சிவகுருநாதன்



    முதல் வகுப்பாசிரியர் பெயர் நினைவிருக்கிறதா என்று கேட்டால் பலர் பதில் சொல்லமுடியாமல் திணறக்கூடும். அந்தவகையில் எனக்கு முழு மதிப்பெண் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இன்று (10.06.2012) எனது முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் திரு.செ.வீராச்சாமி-சரோசா தம்பதிகளுக்கு எண்பதாவது அகவைக்கான விழா நடைபெற்றது. இந்த மாதிரியான சென்டிமெண்ட் சமாச்சாரங்கள் நமக்கு பிடிப்பதில்லை என்றாலும் கவிஞர் விக்கிரமாதித்யன் மணிவிழாவிற்கு திருக்கடையூர் சென்றதுபோல் இந்த 80 விழாவிற்கு வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலம் சென்று திரும்பினேன்.

  1977-1978, 1978-1979 ஆகிய கல்வியாண்டுகளில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் படித்தபோது எனக்கு ஆசிரியராக இருந்தவர் இவர். ஆசிரியராக மட்டுமில்லாமல் எங்களது குடும்ப நண்பராக இருந்தார். எங்கள் குடும்ப சுக, துக்கங்களில் பங்கெடுத்தவர்.

  எங்களது தந்தையார் திரு.ச.முனியப்பன் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் அண்ணாபேட்டை கிராமத்தில் 1952 இல் வ.உ.சி.உதவித்தொடக்கப்பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார். இந்தப்பள்ளியில்தான் எங்களது குழந்தைப்பருவம் கழிந்தது. வீட்டிற்கும் பள்ளிக்கும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்த சூழலது.

  எங்களது தந்தையும் திரு.செ.வீராச்சாமியும் 1991 இல் ஒரே சமயத்தில் பணி ஓய்வு பெற்றனர். எனது வாசிப்பு பழக்கத்திற்கு முன்னோடியாக இருந்த எங்களது தந்தையார் திரு.ச.முனியப்பன் 19.11.2005 இல் மரணமடைந்துவிட்டார். இருந்திருந்தால் அவரும் 80 ஐ நிறைவு செய்திருப்பார். என் தந்தை எனக்கு மூன்றாம் வகுப்பாசிரியர். அவரை தந்தையாக எதிர்கொண்ட தருணங்களைவிட ஆசிரியராக எதிர்கொண்டவை அதிகம்.

  என் முதல் வகுப்பு ஆசிரியர் திரு.செ.வீராச்சாமி அவர்கள் ஆயக்காரன்புலம் அரசு மேனிலைப்பள்ளியிலிருந்து (பனிரண்டாம் வகுப்பு) வெளியேற்றப்பட்டபோது என் அப்பாவின் சார்பாக பள்ளிக்கு வந்து மீண்டும் என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டவர். இதை கணையாழி புதுமலர் அனுபவச் சிறுகதையில் குறிப்பிட்டுள்ளேன்.

   என் அப்பா மட்டுமல்லாது தாத்தாவிடமும் (அம்மாவின் அப்பா) நட்பாக இருந்து எங்கள் குடும்பச் சிக்கல்கள் பலவற்றைத் தீர்த்துவைத்தவர். இன்று இந்த தம்பதிகளை வாழ்த்திவிட்டு திரும்பிய மகிழ்வு எனக்கு.

வெள்ளி, ஜூன் 08, 2012

சேலம் அங்கம்மாள் காலனி தாக்குதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

சேலம் அங்கம்மாள் காலனி தாக்குதல்: 

உண்மை அறியும் குழு அறிக்கை

சேலம்
ஜூன் 08, 2012

கடந்த நான்கு ஆண்டுகளாகச் சேலம் புதியப் பேருந்து நிலையத்திற்கருகிலுள்ள அங்கம்மாள் காலனியில் வசிக்கும் 23 குடும்பங்கள் தாங்கள் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் குடியிருப்பு நிலத்தைக் காப்பாற்றுவதற்கென  நிலப் பறிப்பு சக்திகளுக்கு (land mafia) எதிராக நடத்தி வரும் போராட்டம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக்ரமிப்புச் சக்திகளிடமிருந்து நிலத்தைக் கைப்பற்றி அம் மக்களிடம் திரும்ப வழங்க வேண்டுமெனச் சென்னை உயர் நீதி மன்றம் தெளிவான ஆணை வழங்கியும், நிலப் பறிப்பு சக்திகள் சென்ற ஆட்சிக்கு நெருக்கமாக இருந்ததன் விளைவாக அம் மக்கள் மீண்டும் அங்கம்மாள் காலனியில் குடியேற இயலாமலேயே இருந்து வந்தது. இந் நிலையில் ஆட்சி மாற்றத்தை ஒட்டித் துணிச்சல் பெற்ற மக்கள் சென்ற ஏப்ரல் 22 அன்று அங்கம்மாள் காலனியில் குடிசைகள் அமைத்துக் ‘காவேரி நகர்’ என அதற்குப் பெயரிட்டுக் குடியேறிய செய்தி விரிவாகப் பத்திரிக்கைகளில் வந்தது. எனினும் அச்சத்தின் விளைவாகவும், உரிய வசதிகள் இல்லாததாலும் ஒரு சில குடும்பங்களே அங்கு முழுமையாகக் குடியேறி வசித்து வந்தன. இந்நிலையில் சென்ற ஜூன் 2- 3 இரவு 12.30 மணி அளவில் ஒரு கும்பல் அங்கம்மாள் காலனிக்குள் நுழைந்து அங்கிருந்த மக்களை அடித்தும், குடிசைகளை நொறுக்கியும், தீவைத்தும் துரத்தியுள்ள செய்தியும், இதை ஒட்டி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உட்படப் பலர் கைது செய்யப்பட்ட செய்தியும் அடுத்தடுத்துப் பத்திரிக்கைகளில் வந்தன.  ஆறுமுகம் கைது செய்யப்பட்டது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை என முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டார்.
நில ஆக்ரமிப்புகளை எதிர்த்த மக்கள் போராட்டங்களில் அக்கறை உள்ளவர்கள் என்கிற வகையில் மேற்குறித்த சம்பவம் பற்றின உண்மைகளை அறியும் நோக்குடன் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. சிவில் உரிமைகளில் அக்கறையுள்ள அய்வர் இதில் பங்கேற்றனர். அவர்கள்:
  1.   அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை, 
  2.    கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி, 
  3.    ஏ. ஆனந்தன், குறும்பட இயக்குநர், சேலம், 
  4.    எம். செந்தில், எழுத்தாளர், சேலம்,  
  5.    ஏ. சங்கர், வழக்குரைஞர், சேலம். 
இக்குழுவினர் நேற்று முழுவதும் அங்கம்மாள் காலனி மக்கள், அவர்களின் வழக்குரைஞர்கள், தி.மு.க வழக்குரைஞர்கள், காவல் துறை ஆணையர்கள் ஆகியோரைச் சந்தித்தது.

அங்கம்மாள் காலனி மக்கள் சொன்னது:

அங்கம்மாள் காலனிக்கு எங்கள் குழு சென்று பார்த்தபோது ஒரு குடிசை தவிர அங்கு  போடப்பட்டிருந்த மீதி ஒன்பது குடிசைகளும் இருந்த சுவடே இல்லை. அங்கு அப்போது நின்றிருந்த காலனி மக்களான வைரமணி த/பெ ஏழுமலை, கணேசன் த/பெ தாச கவுண்டர், குணசீலன் த/பெ கணேசன், சகுந்தலா க/பெ வெங்கடேசன், சின்னண்ணன் த/பெ சீரங்கன், தேன்மொழி க/பெ மணிவண்ணன், மாரக்கா க/பெ கருப்பண்ணன், தங்கம் க/பெ சீனிவாசன் உட்படச் சுமார் 25 பேர்களைச் சந்தித்துப் பேசினோம். தாக்க வந்த கும்பல் எட்டு குடிசைகளை அங்கிருந்த தொலைக்காட்சிகள்  உட்பட எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கியும், ஒரு குடிசையை முழுமையாக எரித்தும் அழித்துச் சென்றதாகவும் தாங்கள் அழிவுகளை அப்புறப்படுத்தியுள்ளதாகவும் கூறினர். அவர்களின் வழக்குரைஞர்கள் ஹரிபாபு, தமயந்தி, ஜாஹிர் அகமத் ஆகியோர்  குடிசைகள் அழிக்கப்படுவதற்கு முன்பிருந்த படங்களையும், அழிக்கும்போது செல்போனில் எடுத்த படங்களையும் காட்டினர். தாக்க வந்தவர்கள் சுமார் 30 பேர்கள் இருக்கலாம் எனவும் அவர்களில் பலர் முகத்தைத் துணியால் மறைத்திருந்தனர் என்றும் கூறினர். எனினும் ஒரு சிலரைத் தங்களால் அடையாளம் காட்ட முடியும் எனவும்  ஶ்ரீதர் என்பவரை அவ்வாறு குறிப்பிட்டும் சொன்னார்கள்.

தாக்க வந்தவர்கள் தமது எட்டு வயதுக் குழந்தை கிருத்திகாவைத் தூக்கி எறிந்ததாகக் குழந்தையின் பெற்றோர் சகுந்தலாவும் வெங்கடேசும் கண்ணீர் மல்கக் கூறினர். தன்னை இரும்புக் கம்பியால் வந்தவர்கள் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தை ஒருவர் சட்டையைக் கழற்றிக் காட்டினார். “வீரபாண்டியாரின் இடத்தில் குடிசை போட  நீங்கள் யாரடா?” எனக் கத்திக் கொண்டே தம் குடிசைகள் தாக்கப்பட்டதாக அவ்வளவு பேரும் கூறினர். உடைந்த கண்ணாடி மற்றும் பீங்கான் துண்டுகளைக் கழுத்தில் அழுத்தி மிரட்டியதாகவும், தொடர்ந்து இங்கே இருந்தால் இந்தக் கதிதான் உங்களுக்கும் என எரியும் குடிசையைக் காட்டியதாகவும் அவர்கள் கூறினர்.

தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த போலீஸ் அவுட் போஸ்ட்டில் யாரும் இல்லை என்ற போதிலும் அதன் பின் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கை திருப்தி அளிப்பதக்ச் சொன்ன அவர்கள் போதிய பாதுகாப்பு தற்போது தரப்பட்டுள்ளதாகவும் கூறினர். இரண்டு ஆய்வாளர்கள், நான்கு உதவி ஆய்வாளர்கள், பத்து காவலர்கள் அங்கே காவலுக்கு நிறுத்தப் பட்டுள்ளதாக ஒருவர் கூறினார். நாங்கள் சென்றிருந்த நேரத்தில் உதவி ஆணையர் கோபி உட்பட பத்துக்கும் மேற்பட்ட காவலர்களும் அதிகாரிகளும் அங்கிருந்தனர். எனினும் மக்கள் மத்தியில் இன்னும் அச்சம் போகவில்லை.
அங்கம்மாள் காலனியின் 20,000 சதுர அடியும் கம்பி முள் வேலி வைத்து எல்லை வகுக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் குடி வந்தபோது தாமே அதைச் செய்ததாகவும், சென்ற 4ந்தேதி அன்று அரசுத் தரப்பில் அது அளக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதாகவும் மக்கள் கூறினர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதையும் குறிப்பிட்டனர்

2008ல் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்களால் கடத்திச் செல்லப்பட்டு மூன்று நாட்கள் சேலம் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் வைத்து அடித்து மிரட்டப்பட்ட சின்னண்ணன் மற்றும் வைரமணி ஆகிய இருவரும் அந்தச் சம்பவத்தை விரிவாகச் சொன்னார்கள். ஒரு வெள்ளைத் தாளில் தம்மிடம் கையெழுத்துகள் வாங்கப்பட்டதையும் குறிப்பிட்டனர். காலனி மக்களின் வழக்குரைஞர்கள் ஹரிபாபு, தமயந்தி ஆகியோர் அங்கம்மாள் காலனி தொடர்பான நில ஆவணங்கள், 2008ல் நில ஆக்ரமிப்பாளர்கள் மக்களை அடித்து விரட்டி புல்டோசர் வைத்து வீடுகளை உழுத வீடியோக்கள், மக்கள் நடத்திய போராட்டங்கள் தொடர்பான பத்திரிக்கைச் செய்திகள், ஆக்ரமிப்பாளர்களை வெளியேற்றி குடியிருப்பு நிலத்தை மக்களுக்கு மீட்டுத் தர வேண்டுமென உயர் நீதிமன்றத் தலமை நீதிபதி ஏ.கே.கங்கூலி, இப்ராகீம் கலிஃபுல்லா ஆகியோர் அளித்த ஆணை (ஜூன் 27, 2008) ஆகிய ஆவணங்களைத் தந்தனர். அவற்றையும் எம் குழு கவனமாகப் பரிசீலித்தது.

வீரபாண்டி ஆறுமுகம் தரப்பினரின் கருத்து

கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான ராஜாவைச் சந்தித்து அவர்கள் தரப்புக் கருத்தைக் கேட்க விரும்புகிறோம் என நாங்கள் தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு   கேட்டோம். தான் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் இருப்பதாகவும் உடனே வந்தால் சந்திக்கலாம் எனவும் அவர் கூறினார். நாங்களும் உடனையாக அங்கு சென்று காத்திருந்தோம். சிறிது நேரத்திற்குப் பின் அவர் ‘பிசி’யாக இருப்பதாகவும் மாலையில் எம்மை அழைப்பதாகச் சொல்வதாகவும் எங்களிடம் கூறப்பட்டது. நாங்கள் வேறு வழியின்றி வெளியேறினோம்.  ஆனால் கடைசி வரை எங்களை அவர் தொடர்பு கொள்ளவில்லை. தி.மு.க மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவர் சிவ பாஸ்கரைத் தொடர்பு கொண்டு எங்கள் விருப்பத்தைக் கூறியபோது தாம் வேலையாக இருப்பதாகவும்  முடிந்தவுடன் அழைப்பதாகவும் கூறி தொடர்பைத் துண்டித்தார். பிறகு அவர் தொடர்பு கொள்ளவேயில்லை. இருவரும் உண்மை அறியும் குழுவுடன் பேசத் தயாராக இல்லை என்பதைப் புரிந்து கொண்டோம். மாலையில்  நாங்கள்இன்னொரு முன்னாள் தி.மு.க சட்ட மன்ற உறுப்பினரான பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனைச் சந்திக்கத் தொடர்பு கொண்டபோது தாம் ஏற்காடு செல்வதால் சந்திக்க இயலாது என அவர் கூறினார் ஆறுமுகத்தின் வழக்குரைஞர் ஆர்.சீனிவாசன் மாலையில் சந்திக்கலாம் எனச் சொன்னார். நாங்கள்  இன்று காலையில்தான் அவருடன் தொடர்புகொள்ள முடிந்தது.. தற்போது தனக்கு நேரமில்லை என அவரும் மறுத்துவிட்டார்.

இதற்கிடையில் தி.மு.க வழக்குரைஞர்கள் எனவும் வழக்குரைஞர் அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் எனவும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட ஏ.ஜி.நரசிம்மன், எஸ்.மனேக்‌ஷா என்கிற இருவர் எங்களைத் தொடர்பு கொண்டு விரிவாகப் பேசினர். வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் அன்றைய தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், ஆட்சியில் இல்லாதபோது என்ன தைரியத்தில் அவர் அப்படிச் செய்திருக்க முடியும் எனவும் அவர்கள் வினவினர். ஆறுமுகத்தை சென்னையிலிருந்து சேலத்திற்குக் கொண்டு வந்துப் பின் மீண்டும் சென்னைக்கும், பின் வேலூருக்கும் இழுத்தடித்ததை அவர்கள் கண்டித்தனர். மக்கள் கொடுத்துள்ள புகாரில் அழிக்கப்பட்ட குடிசைகளின் கதவு எண் கொடுக்கப்படவில்லை, காவேரி நகர் எனக் கூறுகின்றனர் அப்படி ஒரு பெயரில் அதிகாரபூர்வமான நகர் ஏதுமில்லை என்பதுபோன்ற புகார்களை முன்வைத்தனர். தற்போது நடைபெற்ற தாக்குதலில் ஆறுமுகத்திற்குத் தொடர்பில்லை எனக் கூறுகிறீர்கள், 2008ல் அம்மக்கள் அடித்து விரட்டப்பட்டதில் அவருக்குப் பங்குண்டா என நாங்கள் கேட்டபோது அது பற்றித் தான் ஒன்றும் கூற விரும்பவில்லை என்றார் நரசிம்மன்.

காவல்துறையின் கருத்து

காவல்துறை உதவி ஆணையர் ஏ.கோபி, ஆணையர் கே.சி.மஹாலி ஆகியோரைச் சந்தித்தோம். தாக்குதல் நடந்த நேரத்தில் அவுட் போஸ்டில் இல்லாமலிருந்த பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் இடமாற்றமும் உதவி ஆய்வாளர்கள் தேவேந்திரன், பன்னீர்செல்வம் மற்றும் தலைமைக் காவலர் கோவிந்தன் ஆகியோர் தற்போது தற்காலிகப் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் தமது துறை செயல்பட்டுக் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கைது செய்யத் தொடங்கியதாக ஆணையர் கூறினார். முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் உட்பட இதுவரை 19 பேர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் 11 பேர்கள் தேடப்படுவதாகவும் அவர்களைப் பிடிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு ஆய்வாளரைப் பொறுப்பாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இத் தாக்குதலுக்கும் தொடர்பில்லை எனவும் பழி வாங்கும் நோக்குடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறதே என நாங்கள் வினவியபோது  அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாது எனவும், ஆறுமுகம் உட்படத் தாம் யாரையும் முகாந்திரமில்லாமல் (prima facie) கைது செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார். மீண்டும் அங்கம்மாள் காலனி மக்கள் அங்கு குடியேறுவதற்குப் போதிய பாதுகாப்பு அளிக்கப்டுமா எனக் கேட்டதற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்.

எமது பார்வைகள்

சேலம் அங்கம்மாள் காலனி என்பது 1959ம் ஆண்டில் சீனிவாச குப்தா என்கிற நகைக் கடை உரிமையாளரால் அவரது பணியாளர்களுக்குக் குடியிருப்பதற்காக தானமாகக்  கொடுக்கப்பட்ட இடம். மொத்தம் 20,000 சதுர அடி கொண்ட அவ்விடத்திற்கருகில் அப்போது பேருந்து நிலையம் இருக்கவில்லை. ‘ரியல் எஸ்டேட்’ முக்கியத்துவமும் அது பெற்றிருக்கவில்லை. சுமார் 50 ஆண்டு காலமாகத் தானம் பெற்றவர்களின் சந்ததியினர் அங்கே வசித்து வருகின்றனர். கூட்டுப்பட்டா, நிலவரி ரசீது, மின் தொடர்பு, குடும்ப அட்டை முதலான எல்லா ஆவணங்களும் அவர்களிடமிருந்தன. இருந்தும் இன்று பல கோடி ரூபாய் விலை மதிப்புடையதாகிவிட்ட அந்நிலத்தின்மீது அப்போது தமிழக அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் அண்ணன் மகனும் இன்று கொலை வழக்கில் சிறையில் இருப்பவருமான பாரப்பட்டி சுரேஷ் மற்றும் அவரது பினாமிகள் ஒரு கண் வைத்தனர். போலி ஆவணங்களைத் தயாரித்து அதன் அடிப்படையில் 2008ம் ஆண்டில் ஒரு நாள் அம்மக்கள் அவர்களின் நிலத்திலிருந்து அடித்து விரட்டப்பட்டனர். அவர்களின் வீடுகள் புல்டோசர் வைத்துத் தகர்க்கப்பட்டு நிலங்கள் கைப்பற்றப்பட்டன. ‘குடியுரிமைப் பாதுகாப்பு மையம்’ என்கிற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் ஹரிபாபுவின் முயற்சியால் இதற்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுச் சற்று முன் குறிப்பிட்டவாறு மீண்டும் அக்குடியிருப்பு அம்மக்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டுமெனத் தெளிவான ஆணை ஒன்றும் பெறப்பட்டது.

எனினும் அடுத்து மூன்றாண்டுகள் ஆகியும் நீதிமன்ற ஆணை நிறைவேற்றப்படாததற்கு அமைச்சரின் அதிகாரம் பின்புலமாக இருந்ததை யாரும் மறுக்க இயலாது. ஆர்.டி.ஓ விசாரணை ஒன்றை ஏற்பாடு செய்து ஆக்ரமிப்பாளர்களின் போலி ஆவணங்களின் அடிப்படையில்  அங்கம்மா காலனி நிலம் ஆக்ரமிப்பாளர்களுக்கே சொந்தம் என அறிக்கை ஒன்றும் அளிக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றத்தில் ‘ஸ்டே’ வழங்கப்பட்ட பின்பும்,  நிலம் மீட்டுத் தரப்பட வேண்டுமென்கிற உயர் நீதிமன்றத்தின் ஆணை நிறைவேற்றப்படாததற்கும் அமைச்சரின் அதிகாரமே பின்புலமாக இருந்துள்ளது. ஆட்டோ மணி என்கிற கந்து வட்டிக்காரர் ஒருவரை ஆக்ரமிக்கப்பட்ட நிலத்திற்குக் காவலாளியாக நியமித்து அவர் மூலமும், அவரது உறவினர் ஒருவர் மூலமும் அங்கம்மா காலனி மக்களில் சிலர் மீது புகார் கொடுக்கப்பட்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இரு வழக்குகளும் போடப்பட்டன. இது தவிர தங்கள் நிலத்தை மீட்பதற்கான போராட்டத்தில் பங்கு பெற்றதாகவும் ஏழு பேர்கள் மீது வழக்கொன்று உள்ளது. இன்று தீவிரமாக நடவடிக்கை எடுக்கும் காவல் துறை சென்ற ஆட்சியில் ஆக்ரமிப்பாளர்களுக்கு ஆதரவாக இருந்ததன் பின்னணியிலும் அமைச்சரின் அதிகாரம் இருந்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது பினாமிகள், அடியாட்கள் ஆகியோரை நோக்கி விசாரணை மேற்கொண்டுள்ளது தவிர்க்க இயலாத ஒன்று எனவே இக்குழு கருதுகிறது. எனினும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் யாருக்கேனும் இத் தாக்குதலில் தொடர்பில்லாத பட்சத்தில் தீர விசாரித்து அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். தாக்குதலுக்குக் காரணமாக இருந்து இன்னும் கைது செய்யப்படாதவர்களும் விரைவாகக் கைது செய்யப்பட வெண்டும்.

பரிந்துரைகள்

1.அங்கம்மா காலனியில் நிலத்தை இழந்த 23 குடும்பங்களும் மீண்டும் உரிய பாதுகாப்புகளுடன் அங்கே குடியமர்த்தப்படவேண்டும். காவல்துறையும் வருவாய்த் துறையும் போர்க்காலத் துரிதத்துடன் செயல்பட்டு இது நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கென மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் வருவாய்த் துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் அடங்கிய நிறைவேற்றுக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

2.மூன்றாண்டுகளாக நிலத்திலிருந்து விரட்டப்பட்டு, இருக்க வீடுமின்றிப் போராட்டம், வழக்குகள் என அலைந்துகொண்டிருந்த அங்கம்மா காலானி மக்களிடம் வீடுகட்டப் போதிய நிதிவசதி இல்லாததை அரசு கவனத்தில் கொண்டு பொருத்தமான அரசுத் திட்டமொன்றின் கீழ் அவர்களுக்கு வீடுகட்ட நிதி வழங்கி  உதவி செய்ய வேண்டும்.

3.அங்கம்மா காலனி இப்போது எந்த அடிப்படை வசதியுமில்லாமல் உள்ளது. மின்சாரம், குடிநீர், சாலை, கழிவுநீர் வாய்க்கால் முதலான வசதிகள் உடனடியாகச் செய்து தரப்பட வேண்டும். இது தொடர்பான முயற்சிகள் சில அரசுத் தரப்பில் தொடங்கப்பட்டுள்ளதை இக்குழு வரவேற்கிறது.

4.அங்கம்மாள் காலனி மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும்.

5.கூட்டுப் பட்டாவை மாற்றி 23 குடும்பங்களுக்கும் தனிப்பட்டாக்களை வழங்கி, அதனடிப்படையில் அவர்களுக்குக் குடும்ப அட்டைகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

தொடர்பு முகவரி: 

68 சி, அதியமான் தெரு,
பட்டைக் கோவில் அருகில்,
சேலம்-1
செல்: 94441 20582.

நன்றி:- அ.மார்க்ஸ்

யோக்கியர் வர்றார், சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள்!


யோக்கியர் வர்றார், சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள்!
                                              
                                               -மு.சிவகுருநாதன்

  பிரதமர் மன்மோகன்சிங் மிக மிக நேர்மையானவர், தூய்மையானவர். அவர் திருவாளர் பரிசுத்தம் (Mr.Clean). எனவே அவர் மீது ஊழல் புகார் சொல்லக்கூடாது. அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர் என்று பல ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் ஓயாது அலறி வருகின்றன. இவர்களைத் தவிர அன்னா ஹசாரே போன்றவர்கள் மன்மோகன் சிங்கிற்கு சான்றிதழ் வழங்கத்தவறவில்லை. சமீபத்தில்தான் CAG அறிக்கையைப் படித்த பிறகு நான் பிரதமர் மீது சந்தேகப்படுகிறேன் என்று  சொல்லியுள்ளார்.

  பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இப்படி அமோக அதரவு இருப்பதற்காக காரணம் முதலாளித்துவமும் பன்னாட்டு கம்பெனிகளும் எற்படித்தியுள்ள பிம்பமே. இந்த பிம்பத்தை பலர் அப்படியே வழிமொழிகின்றனர். இந்த நிலை பல விஷயங்களிலும் தொடர்கிறது. இந்தியாவில் வேறெந்த பிரதமருக்கும் இல்லாத பெருமை மன்மோகன்சிங்கிற்கு உண்டு. பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றது, அம்பலத்திற்கு வந்தது, கைதுகள் நடந்தது என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது இவரது ஆட்சியில்தான்.

   2 ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்,  இஸ்ரோவின் எஸ் பாண்ட் ஊழல், நிலக்கரி சுரங்க முறைகேடுகள், ராணுவத்தில் பல்வேறு ஊழல்கள் என அனைத்து வகையான ஊழல்களுக்கும் அமைச்சரவைத் தலைவர் என்கிற வகையில் பிரதமரே முழுப்பொறுப்பு. ஆனால் இந்த நிலையிலும் அவர் பரிசுத்தமானவர் என்று லாவணி பாடுவது ஊழலைவிட மோசமானது.

  2 ஜி அலைக்கற்றை ஊழலில் பிரதமருக்குள்ள பொறுப்பை யாரும் கேள்விக்குட்படுத்தவில்லை. அதுவாவது போகட்டும். பிரதமரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படும் இஸ்ரோ நிறுவன எஸ் பாண்ட் ஊழலில் பிரதமரின் பங்கு மூடி மறைக்கப்பட்டது. இதுகுறித்து இவ்வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.


 அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை எற்க மறுக்கும் பிரதமரின் போக்கையே நாம் மன்னிக்கமுடியாது. இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தான் பொறுப்பு வகிக்கும் துறைகளுக்குகூட பொறுப்பேற்க மறுப்பது எவ்வகையான தூய்மைவாதம் என்பது விளங்கவில்லை. இதற்கு பின்பாட்டுப் பாட ஒரு பெரிய கும்பல் கிளம்புவதுதான் வருத்தமாக உள்ளது.

  இஸ்ரோ பிரதமரின் கட்டுப்பாட்டில்லுள்ள ஓர் நிறுவனம். இதில் நடக்கும் பரிவர்த்தனையில் தமக்குத் தொடர்பில்லை என்று மன்மோகன் சிங் வாய்கூசாமல் பொய் சொல்கிறார். இந்த சட்டவிரோத ஒப்பந்தம் பின்னர் ரத்து செய்யப்பட்டது. நாட்டிற்கு ஏற்படவிருந்த இழப்புத் தடுக்கப்பட்டபோதிலும் இந்த விஷயம் வெளியாகாமல் இருந்திருந்தால் நாட்டின் பணம் கொள்ளை பொயிருக்கும். இந்த முறைகேட்டிற்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் முழுப்பொறுப்பேற்கவேண்டும்.

  2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கூட உச்சநீதிமன்றம்உரிமங்களை ரத்து செய்திருக்கிறது. எனவே ஆ.ராசாவை குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துவிடலாமா? ஜெ.ஜெயலலிதா டான்சி நிலத்தை வாங்கிவிட்டு நீதிமன்றத்தில் வழக்கு வருகிறபோது மீண்டும் திரும்ப அரசுக்கு ஒப்படைத்தால் எப்படி குற்றமில்லாமற்போகும்? இந்தமாதிரி இவர்கள் ஊழல் வழக்குகளில் தப்பித்துக்கொள்ள அனுமதிக்கும்போது ஊழல் எவ்வாறு ஒழியும்?

  ஒருவேளை காங்கிரஸ் அமைச்சர் தொலைதொடர்புத் துறையில் இருந்திருந்தால் 2 ஜி அலைக்கற்றை ஊழலில் கைதுகள் இவ்வளவு விரைவாக நடந்துருக்குமா என்பது சந்தேகமே. சுரேஷ் கல்மாடி மீது உடன் நடவடிக்கை எடுக்கவும் பதவியை பறிக்கவும் மிகவும் காலதாமதம் ஆனது நினைவிருக்கலாம்.

   2 ஜி அலைக்கற்றை ஊழலில் ஆ.ராசா மட்டும் பலிகடா ஆக்கப்பட்டு பலர் பாதுகாக்கப்படும் நிலை தொடர்கின்ற நிலையிலும் தி.மு.க. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை கைவிடத் தயாராக இல்லை. தனது குடும்பம், சொத்துக்கள் மற்றும் ஜெ.ஜெயலலிதாவின் அடக்குமுறைகளிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மு.கருணாநிதிக்குக் கேடயமாக உள்ளது.

 இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஊழல் புரிந்தவரும் ஊழல் செய்தவர்களைப் பாதுகாத்தவரும் எது நடந்தாலும் தனக்கு எதுவும் தெரியாதெனச் சொல்லி பிரதமர் பதவிக்குரிய மாண்பை சிதைத்தவருமான மன்மோகன்சிங் தூய்மையானவர் என்று சொல்வது யோக்கியர் வர்றார், சொம்பை எடுத்து உள்ளே வையுங்கள் என்பது போலத்தான்.

ஓர் பின் குறிப்பு:-

  இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் அன்னா ஹசாரே, பிரதமர் மன்மோகன்சிங் ஊழல் செய்யாத அற்புதமான மனிதர் என நற்சான்று வழங்கியிருக்கிறார். ஊழலுக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் ஊழல் எதிர்ப்புப் போராளியாக போலி வேடம் புனையும் அன்னா ஹசாரேவிற்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருமே பன்னாட்டுக் கைகூலிகள். முன்னவர் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து கைகட்டிச் சேவகம் செய்பவர். பின்னவரோ கார்ப்பரேட்களின் ஊழல்களையும் அத்துமீறல்களையும் கண்டுகொள்ள விரும்பாதவர். அப்புறமென்ன மாறிமாறி சொறிந்துகொள்ள வேண்டியதுதானே!

வியாழன், ஜூன் 07, 2012

தமிழகத்தில் நிழல் மாஃபியாக்களின் ஆட்சியும் ஜனநாயகத்தின் தோல்வியும்


தமிழகத்தில் நிழல் மாஃபியாக்களின் ஆட்சியும் ஜனநாயகத்தின் தோல்வியும்
                                             -மு.சிவகுருநாதன்

   நாட்டு விடுதலைக்குப்பின் தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி தமிழகத்தை இருண்ட பாதைக்குச் செலுத்தியதால் இங்கே திராவிட இயக்கம் ஆட்சிக்கு வர முடிந்தது. 1960 களின் இறுதியில் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த அண்ணாவின் தி.மு.க. பின்னாளில் மு.கருணாநிதியின் தி.மு.க. வாக ஆன பிறகு பெரும் சீரழிவைச் சந்தித்து இன்று மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. திராவிட இயக்கம் என்ன நோக்கத்திற்காக தொடங்கப்பட்டதோ அந்தநிலையும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

  சமீப காலங்களில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என எந்த ஆட்சியாக இருந்தாலும் உண்மையில் ஆட்சி – அதிகார மையம் பிறிதோரிடத்தில் இருப்பது வழக்கமாகவேயுள்ளது. இது வாக்களிக்கும் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்த ரகசியமாக உள்ளது. எனவே இதற்கு பேரளவில் எதிர்ப்பு இல்லை என்பதோடு மட்டுமில்லாமல் இந்த முறைகளுக்கேற்ப மக்கள் வாழப்பழகிக் கொண்டுள்ளார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

  மு.கருணாநிதியின் ஆட்சியில் அவரது பல்வேறு குடும்பங்களின் நிழல் அதிகார மைய மாஃபியாக்களின் கொட்டம் தாங்கமுடியாத அளவிற்கு அதிகரித்தது. ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சியில் சசிகலாவின் குடும்ப வகையறாக்களின் மன்னார்குடி மாஃபியாக்களின் கொள்ளைகள் நடைபெறும். இந்த நிலை மாறி மாறி அரங்கேறிவருகிறது. அவ்வப்போது இந்த மாஃபியாக் குடும்பங்களில் சிற்சில உரசல்கள் எற்படும்போது இவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது, கட்சியைவிட்டு நீக்கம் என்றெல்லாம் அறிவிப்புகள் வரும். ஆனால் பிறகு இவையெல்லாம் புஸ்வாணமாகிப்போகும். நமக்கும் ஞாபக மறதி ஏற்பட்டுவிடும்.

  ஜெ.ஜெயலலிதா தன் உடன்பிறவாத் தோழி சசிகலா மற்றும் குடும்பத்தினரை கட்சியைவிட்டு வெளியேற்றிய உடன் ஊடகங்கள் அதைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதின. பிறகு ஜெ.ஜெயலலிதா-சசிகலா இணைப்பு நடந்துவிட்டது. ஆனால் ஊடகங்களுக்கு நித்தியானந்தா விவகாரங்கள் போன்று அதிமுக்கியமான விஷயங்கள் வந்துவிட்டபடியால் ஜெ.ஜெயலலிதா-சசிகலா பற்றி எழத இடமோ, நேரமோ அவர்களுக்கு இல்லாமற்போய்விட்டது.

  ஜெ.ஜெயலலிதாவை தெய்வமாக வழிபடும் அவரது கட்சித்தொண்டர்கள் இதைப்பற்றியெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. வாக்களிக்கும் பொதுஜனம் கூட கவலைப்படாத நிலையில் கட்சிக்காரர்களிடம் அதிகம் எதிர்பார்க்கமுடியாதுதான். இதைப்போலவே தி.மு.க. விலும் மு.கருணாநிதியின் குடும்பங்களில் பலர் அதிகாரமையங்களாக உருவாகிறபோது கட்சிக்குள் பெரிய எதிர்ப்பு கிளம்புவதில்லை. அதற்கு மாறாக அடுத்தகட்டத் தலைவர்கள் தொடங்கி உள்ளுர்த்தலைவர்கள் வரை தங்களுடைய வாரிசுகளை சுறுசுறுப்பாக களமிறக்கிவிடுகிறனர். கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம் பொன்ற பலர் இதைத்தான் செய்துகொன்டுள்ளனர்.

    அண்ணா கட்சியே குடும்பம் என்றார். மு.கருணாநிதியோ குடும்பமே கட்சி என்ற நிலையை உருவாக்கிவிட்டார். இதற்குப் பின்னால் வந்த எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா ஆகியோர் மு.கருணாநிதியின் நடவடிக்கைகளை அப்படியே பின்பற்றத்தொடங்கிவிட்டனர். இதுவே தமிழகத்தின் தலைவிதியாக இன்றும் தொடர்கிறது.

  நிழல் அதிகார மையங்களாக இருக்கின்ற இந்த மாஃபியாக் கும்பல்கள் அரசதிகாரத்தின் அனைத்து நிலைகளிலும் தலையிடுகின்றன. இந்தத் தலைவர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சாதிக்கின்றனர். அதை நாமும் கேட்டு அமைதியாகிவிடுகிறோம்.

  ஜெ.ஜெயலலிதாவும் சசிகலாவும்  ஒரே வீட்டில் குடியிருக்கிறபோது ஜெ.ஜெயலலிதா சசிகலா தனக்கெதிராக சதிச் செயலில் ஈடுபட்டார் என்கிறார். உடன் கட்சியை விட்டும் தனது வீட்டைவிட்டு சசிகலா வெளியேற்றப்படுகிறார். அரசின் காவல்துறை மற்றும் உளவுத்துறைகள் ஜெ.ஜெயலலிதாவிற்காக சேவகம் செய்கிறது. சசிகலா குடும்பத்தினர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ராவணன், ம.நடராஜன், திவாகரன் போன்ற பலர் கைது செய்யபட்டனர். மீண்டும் சில நாட்களிலேயே சசிகலா, இளவரசி போன்றவர்கள் போயஸ் கார்டனுக்கு பூர்ணகும்ப மரியாதை உடன்  அழைத்துவரப்பட்டனர். ஊடகங்களும் பொதுஜனமும் வெறும் பார்வையாளர்களாகவே இருக்க சபிக்கப்பட்டோம்.

   ஜெ.ஜெயலலிதா ஒரு சாதாரண பெண்மணி என்றால் நாம் சசிகலா விவகாரம் பற்றி கேள்வி கேட்கமுடியாது. ஜெ.ஜெயலலிதா தமிழக முதல்வர் என்பதால் கேள்வி கேட்க மக்களுக்கும் உரிய பதிலளிக்கவேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவிற்கும் உண்டு. எனக்கு எதிராக சதியில் ஈடுபட்டார்கள் என்று புகார் சொல்லி கட்சியை விட்டும் வீட்டை விட்டும் வெளியெற்றிய சில நாட்களில் மீண்டும் தனது வீட்டில் வைத்துக்கொண்டு, சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையிலடைக்கும்போது பொறுப்பான பதவியிலிருக்கும் ஒருவர் எவ்வித விளக்கமும் சொல்லாமல் இருக்கக்கூடிய அவலம் இந்தியா போன்ற எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயகத்தில்தான் நடக்கும்.

    சசிகலா கும்பலை எல்லா அரசதிகார ஆதிக்கங்களையும் செய்ய அனுமதித்துவிட்டு, இப்போது தனக்கு எதுவும் தெரியாதென்றும் அரசின் காவல்துறையை தன்னுடைய ஏவல்துறையாக மாற்றி, மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை இதற்காக விரயமாக்குவதும் எந்தவகையான ஜனநாயகம் என்பதை இங்கு யாரும் கேள்வி கேட்கமுடியாத நிலையுள்ளது. இது மிகவும் அபாயகரமான போக்காகும்.

   வாரிசு அரசியல் இந்தியாவின் சாபக்கேடாகும். மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் இது இல்லாத இடமேயில்லை. காங்கிரஸ், பா.ஜ.க., மாநிலக்கட்சிகள் எவற்றிலும் விதிவிலக்கு இல்லாத நிலையே நீடிக்கிறது. இதன் அடுத்தகட்ட வளர்ச்சி அதிகார மைய மாஃபியாக்களின் உருவாக்கமாக நிலைபெறுகிறது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ராஜ்ஜியங்கள் இவ்வாறு விரிவடைந்தவையே.

 வாரிசு அரசியலை காங்கிரஸ் பழங்காலம் முதற்கொண்டு திறமையாக கையாண்டுவருகிறது! இதை அடியொற்றி அனைத்து மாநிலக்கட்சிகளும் பின்பற்றிவருகின்றன. இதன் மூலம் குடும்ப மாஃபியாக்கள் அரசுப் பணத்தை கொள்ளையிடத் தொடங்குகின்றன. 2 ஜி அலைக்கற்றை உரிமம், கனிம வளங்கள், அரசின் உரிமங்கள், டெண்டர்கள், சுரங்க உரிமங்கள் போன்று எதுவானாலும் இவர்களுக்கு உடனே கிடைக்கும்.

   ஜனநாயகம் என்ற பெயரில் இந்த அநியாயக் கூத்துகளை வெறும் பார்வையாளர்களாக எதிர்கொண்டுள்ள இந்தியக் குடிமக்களின் நிலைதான் மிகவும் பரிதாபமானது. குடும்ப-வாரிசு அரசியலின் கொடுமையை அனுபவிக்கும் பொதுஜனங்களின் அன்றாட வாழ்வே பெருஞ்சிரமாக இருக்கிறபோது இதையெல்லாம் கண்டுகொள்ள நேரமேது?
 
  ஜனநாயகம் இவ்வாறாக தழைக்கட்டும். நாம் இன்னும் மன்னராட்சியின் மிச்ச சொச்சங்களிலிருந்து விடுபடவில்லை. என்வேதான் இவற்றை நாம் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. ஜனநாயகம் என்ற போர்வையில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் மாஃபியாக்களின் பிடியிலிருந்து நாடு விடுதலை பெறவேண்டும். இல்லாவிட்டால் ஜனநாயகம் தோற்றுக்கொண்டேயிருக்கும்.