திங்கள், டிசம்பர் 31, 2018

அறிவியல் சிந்தனைகள் இன்னும் மேம்பட வேண்டும்


அறிவியல்  சிந்தனைகள் இன்னும் மேம்பட வேண்டும்


(இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 09) 
 
மு.சிவகுருநாதன்

 (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு அறிவியல்  பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.) 


 
   ஆறாம் வகுப்பு ‘மின்னியல்’ பாடத்தில் மின்னுற்பத்தி நிலையங்களில் நடைபெறும் ஆற்றல் மாற்றங்கள் பற்றிச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. அதில் “நீர்மின் நிலையங்களில் அணைக்கட்டிலிருந்து பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது”, (6, பக்.21&22)  என்றுள்ளது. இதற்கு அணையிலிருந்து நீர் வெளியேறும் படமும் கொடுக்கப்பட்டுள்ளது. 

   உண்மையில் அணையிலிருந்து குழாய்கள் வழியே வெளியேற்றப்படும் நீர் வழியே நீராழி (விசையாழி) சுழற்றப்படுகிறது. அணையிலிருந்து நீர் வெளியாகும்போது மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்கிற கற்பிதத்தைப் பாடநூல்கள் உருவாக்கக்கூடாது. அணைக்கட்டிற்குப் பதிலாக நீர்மின் நிலையப் படம் இணைக்கப்படவேண்டும். டர்பைன் (Turbine) என்பதை விசையாழி அல்லது நீராழி என்று மொழிபெயர்க்கலாமே! 

 ‘உங்கள் விஞ்ஞானியை அறிந்து கொள்ளுங்கள்’ எனும் குறிப்புகளை வரவேற்கலாம். ஆனால்…?


மைக்கேல் ஃபாரடே (22, செப்டம்பர் 1791 – 25 ஆகஸ்ட் 1867) ஒரு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆவார் (9, பக்.52). “ஹென்றி க்வைன் மோஸ்லே என்பவர் ஓர் ஆங்கில இயற்பியலாளர் ஆவார் (9, பக்.73), என்று பிரிட்டிஷ் விஞ்ஞானி,  ஆங்கில இயற்பியலாளர் என்றெல்லாம் எழுதுவது ஏன் என விளக்குங்கள்!


    தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 முதல் அக்டோபர் 18, 1931) ஓர் அமெரிக்க கண்டுபிடிப்பாளர். (6, பக். 29, மேலும் அறிந்து கொள்வோம்) அமெரிக்க கண்டுபிடிப்பாளர் - அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. (குழந்தைக் கவிஞர் - குழந்தை கவிஞர்  என்பதற்கு வேறுபாடு உண்டல்லவா!)

   இரத்த ஓட்ட மண்டலம் (6, பக்.82) ரத்தச் சுழற்சி மண்டலாவது எப்போது? அனைத்து வகுப்புகளிலும் இதே நிலைதான். Blood Circulatory  System என்பது எப்படி இரத்த ஓட்டமாகும் என்பதை யாராவது விளக்கினால் நல்லது! 

  “வெயில் காலங்களில் அதிக வெப்ப ஆற்றல் இரயில் தண்டவாளங்களை விரிவடையச் செய்கின்றது. எனவேதான் இரயில்பாதைகளில் சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும் நீங்கள் இதனைப் பார்த்திருப்பீர்கள்” (9, பக்.02) சொல்லிப் பழைய படத்தையும் வெளியிடுகிறார்கள்.

     வெப்பம் விரிவடைதலுக்கு ரயில் தண்டவாள இடைவெளி (பக்.13, ஆறாம் வகுப்பு மற்றும் பக்.02, ஒன்பதாம் வகுப்பு) சுட்டப்படுகிறது. இப்போது தண்டவாளங்கள் அவ்வாறு இடைவெளி விட்டு அமைக்கப்படுவதில்லை. அவை துண்டுகளின்றி ‘வெல்டிங்’ முறையில் இணைக்கப்படுவதை மாணவர்களே பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. பாடநூல்கள் எப்போது நடைமுறை மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளும் என்பது புரியாத புதிர்!

    எக்ஸெரிச்சியா (6, பக்.67) என்று அழுத்த வேண்டுமா என்ன? பல இடங்களில் வல்லினம் மிகுவதேயில்லை. கேட்டால் இது தமிழ்ப்பாடமா, அறிவியல்தானே என்று கேட்கக்கூடும். மொழி தவிர்த்த பிற பாடங்களில் பிழைகளைக் கவனிக்க வேண்டியதில்லை என்பது இங்குப் பொதுப்போக்காகியுள்ளது.

   மொழியாக்கங்கள் பற்றி நிறையச் சொல்லலாம். தாவரத் திசு விளக்கப்படம் தமிழிலும் விலங்குத் திசுக்கள் முற்றிலும் ஆங்கிலத்தில் உள்ளது (9, பக்.158). இது தமிழ் வழிப்பாடநூல் என்பதை யாராவது சொல்ல வேண்டும். 

Catalyst – கிரியா ஊக்கி (வினையை வேகப்படுத்தும் தனிமம்) (9, பக்.198).
வினையூக்கி என்ற சொல் இருக்கின்றதே! ‘கிரியா’ தமிழ்ச்சொல்லா? சேர்மங்கள் வினையூக்கியாக செயல்படாதா என்ன? 

Electrolyte - மின்பகு திரவம் (9, பக்.199). மின்பகுளி என்ற சொல் வெகுகாலத்திற்கு முன்பே பயன்பாட்டில் உள்ளதே! மின்பகுளி – மின்சாரம் பாயும் திரவம் (9, பக்.38) என்று ஓரிடத்தில் விளக்கமும் அளிக்கப்படுகிறது.
Equator - பூமத்திய  ரேகை (9, பக்.199). நிலநடுக்கோடு என்னவாயிற்று? இன்னும் எவ்வளவு காலம் ‘ரேகை’யைப் பயன்படுத்துவீர்கள்? 

Phloem – புளுயம் (பட்டையம்) (9, பக்.199). ஃபுளோயம் புளுயம் ஆவதேன்? பட்டையம் தகுந்த சொல்லாக்கமா? இவை மரப்பட்டையில் மட்டுமே காணப்படுமா?

TV Remote – டிவி தொலையுணர்வி (9, பக்.29) என்று மொழிபெயர்ப்பதைப் பாராட்ட சொற்களே கிடைக்கவில்லை! அது என்ன ‘டிவி தொலையுணர்வி’? ‘Remote Sensing’  என்பதை எப்படி மொழிபெயர்ப்பீர்கள்? 

MRI – காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (9, பக்.61).  Magnetic Resonance Imaging என்பதற்கு பொருத்தமான மொழியாக்கமா இது? 

டியூராலுமின் (வலிவலுமினியம்) (9, பக்.80). வலு அலுமினியம் ‘வலிவலுமினியம்’ ஆன பின்னணி எதுவோ? ‘விமான உடம்பு பாகங்கள்’ என்பது நகைப்பிற்கிடமாக இல்லையா?

துரு ஏறா எஃகு, எஃகிரும்பு    (9, பக்.80) துரு இல்லா எஃகு (அ) துரு பிடிக்காத எஃகு என்ற பயன்பாட்டை இவ்வாறு மாற்றக்காரணம் என்ன?  எல்லா இடங்களிலும் பிரித்துப் பிரித்து எழுதுபவர்கள் ‘எஃகு இரும்பை மட்டும் சேர்த்து எழுதுவதேன்?  
                               
IUPAC (International Union of Pure and Applied Chemistry) இது சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் எனும் இடத்தில் பதியப்பட்டுள்ளது (9, பக்.74). பதிவு செய்யப்பட்டதா அல்லது தொடங்கப்பட்டதா? 


இரத்தம், இரசியா, இரயில், இராட்சத வாயுக்கோள், இராஜதிராவகம் என்று மொழிக்கு முதலில் வராத ‘ரகரத்தை’க் கண்டுகொள்பவர்கள் டானிக், லாக்டிக், டார்டாரிக் ஆகிய பல சொற்களைக் காண மறுப்பது ஏன்?

கந்தக அமிலம் (சல்பூயூரிக் அமிலம்) (9, பக்.112). இந்த ஓரிடம் தவிர்த்து பிற இடங்களில் ஆங்கிலச் சொல்லில் தருவது என்றால் அனைத்து வேதிப்பொருளுக்கும் இதை ஏன் கடைபிடிப்பதில்லை? 

“கார்பானிக் அமிலம் காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுகிறது”, (9, பக்.112). காற்று அடைக்கப்பட்ட பானங்கள் எவை? கார்பன் டை ஆக்சைடு அடைக்கப்பட்ட பானங்களை காற்று அடைக்கப்பட்ட பானங்கள் என்று சொல்வது சரியா? குளிர்பானங்களில் கார்பன் டை ஆக்சைடு சேர்க்கப்படும்போது தானே கார்பானிக் அமிலம் கிடைக்கிறது? இவற்றைத் திறக்கும்போதுதானே கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது? 

    உப்பைப் பற்றி இரு இடங்களில் இவ்வாறு பேசப்படுகிறது. அவற்றைக் கீழே தருகிறேன்; படித்து இன்புறுக.

   “உன் சமையலறையில் நீ பயன்படுத்தும் உணவுச் சேர்க்கைப் பொருள் எது? நிச்சயமாக அந்தப் பொருள் ‘சாதாரண உப்பு’ ஆகும்”, (9, பக்.92).
  “உப்பு என்றால் வறுவல்களில் சேர்க்கப்படும் ஒரு வெண்மையான சேர்மம் உங்கள் நினைவிற்கு வரலாம். ஆனால் இது ஒரு வகை சாதாரண வகை உப்பாகும். கடல்நீரில் பலவகையான உப்புகள் கரைந்துள்ளன. அவற்றிலிருந்து சோடியம் குளோரைடு பிரித்தெடுக்கப்படுகிறது”, (9, பக்.119).                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                Digital (டிஜிட்டல்) (6, பக்.98), Ethernet (ஈதர்நெட், ஈதர் வலை இணைப்புக்கம்பி) (6, பக்.99) போன்ற சொற்கள் ஏன் மொழிபெயர்க்கப்படாமல் விடப்படுகிறது?

   “தாவரங்கள் வளிமண்டலக் காற்றுடன் நிகழ்த்தும் வாயுப்பரிமாற்றம் அவற்றின் இலைகளிலுள்ள ஸ்மொட்டா என்ற மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம் நடைபெறுகிறது”, (6, பக்.55) Stomata என்பது இலைத்துளைகளின் ஆங்கிலப்பெயர்.  Stomata என்ற இலைத்துளைகள் என்று இருமொழிகளை சேர்த்து எழுதத் தொடங்கினால் முடிவே இருக்காது. 

    ஜிங்க் சல்பேட், காப்பர் என்று பயன்படுத்துவது மாணவர்கள் குறியீடுகள், மூலக்கூறு வாய்பாடுகள் எழுதுவதற்கு எளிமையாக்க இருக்கலாம். ஆனால் இரும்பு சல்பேட் (பக்.120) என்று எழுதும்போது இவற்றையும் துத்தநாக சல்பேட், தாமிரம் என்று எழுதுவதுதானே முறை? செம்பு (பக்.80) என்று குறிப்பிடப்படுகிறது. செம்புதான் தாமிரம் என்பதைக் குறிப்பது நல்லது. இங்கு செம்பு என்ற தாமிரம் என்று சொல்வதில் தவறில்லை. காப்பர் என்ற தாமிரம் என்று சொல்ல முடியாதல்லவா!  இப்படி ஆங்கிலச்சொல்லையும் தமிழ்ச் சொல்லையும் இணைத்துச் சொன்னால் சொற்றொடர்கள் நீண்டுகொண்டே போகும். 

   மூலக்கூறு வாய்பாடுகளில் தனிமங்களின் முதலெழுத்தை பெரிய எழுத்தில் (capital letters) எழுத வேண்டும் என்ற நியதி பின்பற்றப்படவில்லை. ஒன்பதாம் வகுப்பில் சரியாக எழுதியிருக்கிறார்கள். ஆறாம் வகுப்புதானே என்று நினைத்திவிட்டார்கள் போலும்!

 “மந்த வாயுக்கள் வேதிப்பண்புகளின்படி எதனுடனும் வினைபுரிவதில்லை”, (9, பக்.82) என்று சொல்லப்படுகிறது. இவை எளிதில் வினைபுரிவதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். வினையே புரிவதில்லை என்று சொல்வது சரியா?   
                                                                                                                                                                                                                                                                                               
(இவை மேலோட்டமான பார்வையே. அறிவியல் படித்தவர்கள் பாடநூலை ஆழ்ந்து வாசிக்கும்போது நிறைய பிழைகளும் குழப்பங்களும் காணக்கிடைக்கும். அத்தகைய வாய்ப்பு இங்கு அரிதாகவே உள்ளதை இன்றைய கல்வியின் கேடுகளில் ஒன்றாகவே அவதானிக்க முடியும்.)

                                           (நிறைவடைந்தது.) 

(ஜனவரி 2019 லிருந்து மூன்றாம் பருவப் பாடநூல் விமர்சனங்கள் தொடரும்…)

வெள்ளி, டிசம்பர் 21, 2018

பொதுத்தேர்வை மையப்படுத்தும் பாடங்கள்: குழந்தைகள் மீதான வன்முறை


பொதுத்தேர்வை மையப்படுத்தும் பாடங்கள்:  குழந்தைகள் மீதான வன்முறை

(இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை - பகுதி: 08) 
 
மு.சிவகுருநாதன்

 (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – வரலாறு  பாடப்பகுதியில் ஐரோப்பிய வரலாறு – பாடம் எண்: 1, 2 மற்றும் 4  பற்றிய கருத்துகள்.)




   ஒன்பதாம் வகுப்பு வரலாற்றுப் பாடத்தில் (இரண்டாம் பருவம்) செவ்வியல் உலகம், இடைக்காலம், நவீன யுகத்தின் தொடக்கம் ஆகிய மூன்று பாடங்களில் ஐரோப்பிய வரலாறு பேசப்படுகிறது.  இடையிடையே கிழக்காசிய வரலாறு (சீனா, ஜப்பான்) வந்தாலும் பெரும்பகுதி ஐரோப்பிய வரலாறே. உள்ளூர் வரலாறே (தமிழ்நாடு) சொல்லிக் கொடுக்காத நிலையில் ஒன்பதாம் வகுப்பிற்கு ஏன் மிகக் கடினமான ஐரோப்பிய வரலாறு என்று கேட்டால் யாரிடமிருந்தும் பதில் வராது. ஒரே காரணம் இவ்வகுப்பிற்கு அரசுப் பொதுத்தேர்வு இல்லை என்பதுதான்.  ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலை நோக்கும்போது நமக்கு இவ்வாறுதான் தோன்றுகிறது.  
                                                                                                                                                                                    அரசுப் பொதுத்தேர்வு உள்ள வகுப்பிற்கு எளிமையான பாடங்கள், இல்லாத வகுப்பிற்கு கடினப்பாடங்கள் என்பது எழுதப்படாத விதி. 7, 9, 11 ஆகியவகுப்புகளுக்கு இவ்விதி கடைபிடிக்கப்படுகிறது. 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்றாலும் அந்த அந்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாதால் இந்நிலையே நீடிக்கும் அபாயம் உண்டு. 

  “அலெக்ஸாண்டரின் இறப்பிற்குப் பின்னர் பண்பாடு மிக விரைவாக வளர்ந்தது. வரலாற்று அறிஞர்கள் இதனை (கி.மு.(பொ.ஆ.மு.) 323) ஹெலனிஸ்டிக் நாகரிகம் என்று அழைக்கின்றனர்”, (பக்.04) இதற்கான காரணம் சொல்லப்படவில்லை; விளக்கப்படவுமில்லை. 


    கிரீஸ்: ஹெலனிக் உலகம் (பக்.02), ரோம்: ஹெலனிஸ்டிக் உலகம் (பக்.04) என்று சொல்வதன் பொருள் என்ன? ஹெலனிக் உலகில் கிரீஸ், ஹெலனிஸ்டிக் உலகில் ரோம் என்று சொல்வது ஓரளவு பொருத்தமுடையதாக இருக்கும். 

    ஆசியா மைனர் (அனடோலியா) எனப்படும் மேற்காசியாவிலுள்ள தற்போதைய துருக்கி நாட்டின் பகுதியில் உஸ்மான் பே (கி.பி.1299) என்பவரால் தொடங்கப்பட்ட அரசு, உஸ்மானியப் பேரரசாக கி.பி. 1453 இல் இரண்டாம் முகமது கான்ஸ்டாண்டிநோபிளை (இஸ்தான்புல்) கைப்பற்றிய பிறகு நடந்தது. இது ஓட்டமான் பேரரசு (Ottomon Empire) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. கிரந்த எழுத்து வெறுப்பால் இது உதுமானியப் (பக். 24) பேரரசாகிறது (உபயம்: விக்கிபீடியா). உதுமானியப் பேரரசு (பக். 24), உதுமானிய துருக்கியர்கள் என்றுதான் பாடம் எழுதப்படுகிறது. கிறித்தவம் என்று எழுதுவதுகூட குழப்பத்தை உண்டுபண்ணாது. உதுமானியா, ஓட்டோமான்  இரண்டும் ஒன்று எனப் புரிந்துகொள்வது கடினமே! 

    விஜயநகரப் பேரரசு என்றுதானே இவர்கள் எழுதுகிறார்கள்? மாவோ (Mao) வை மா –சே –துங் என்று பாடத்தில் படித்தபோது இவர் வேறு யாரோ என்ற எண்ணமே அன்று எங்களுக்கு ஏற்பட்டது. அதைப்போலவே இன்றும் பாடநூல்கள் இருக்கின்றன. 

    அரேபியாவின் சரசனிக் கட்டடக்கலை (பக்.22) குறிப்பிடப்படுகிறது. அதன் இந்தியத் தாக்கம், இந்தோ-சரசானிக் கட்டடக்கலை பற்றியும் குறிப்பிடுவது சரியாக இருக்கும். 

     “முன்னதாக, ‘வெல்லும்’ (Vellum) என அழைக்கப்பட்ட, விலங்குத் தோலின் மீது கையினால் எழுதப்பட்ட எழுத்துப்பிரதிகளே பயன்பாட்டில் இருந்தன”, (பக்.57) ஓலைச்சுவடிகளில் எழுத்தாணியால் எழுதியதைப்போல பதப்படுத்தப்பட்ட விலங்குத் தோலில் வெறும் கைகளால் எழுதப்பட்டதா? அல்லது வேறு கருவிகள் கொண்டு எழுதப்பட்டதா என்பதைச்  சொன்னாலென்ன? தொடக்கத்தில் எழுதும் மை கொண்டு எழுதப்பட்டதும், பிற்காலத்தில் இவற்றில் அச்சிட்டதும் நடந்தது.

    “வட்டார மொழியில் எழுதுவது என்பதன் அறிமுகமும், நடைமுறையும் தாந்தேயிலிருந்து தொடங்கியது. அது வட்டார மொழிகளின் வளர்ச்சியைச் செழுமைப்படுத்தியது. தேசிய அரசுகளின் எழுச்சிக்கு அறிவார்ந்த ஓர் அடித்தளத்தை வழங்கியது”, (பக்.61)

   மொழிபெயர்ப்புகள் பற்றியும் கண்டிப்பாகச் சொல்லவேண்டும். Vernacular languages – தேச மொழிகள் என்று மொழிபெயர்க்கப்படுகிறது. Slave revolts – அடிமைகளின் கிளர்ச்சிகள் என்று சொல்லப்படுகிறது. அடிமைகள் புரட்சி செய்ய தகுதியற்றவர்களா?  Oligarchy ஐ செல்வர்களின் குழு ஆட்சி என்று மொழி பெயர்க்கிறார்கள். 

    இத்தகைய பாடநூல் மொழிபெயர்ப்புகளுக்கு கண்டிப்பாக சாகித்ய அகதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பு விருது வழங்கலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன். 

உதாரணத்திற்கு சில மொழிபெயர்ப்புகள்: 

   “Similarly, though the exploration of the oceans had begun earlier, the European States were constrained to find an alternative route immediately because the Ottoman Turks were controlling the route”. (page: 51)

    “அதேபோல, பெருங்கடல்கள் மீதான ஆய்வுத் தேடல் முன்னதாகவே தொடங்கியிருந்த போதிலும்கூட, ஐரோப்பிய அரசுகள் மாற்றுப் பாதைகளைக்  கண்டறிவதில் பல தடைகள் இருந்தன. காரணம், அப்போது உதுமானியத் துருக்கியர்கள் வழியைக் கட்டுப்படுத்துகிறவர்களாகியிருந்தனர்”, (பக். 58)

   “பெருங்கடல்கள் மீதான ஆய்வுத் தேடல் முன்னதாகவே” தொடங்கியது என்றால் எப்போது? கி.பி. 1453 க்கு  முன்பு என்றால் ஓட்டோமான் துருக்கியர்கள் எப்படி கட்டுப்படுத்தியிருக்க முடியும்? ‘கட்டுப்படுத்துகிறவர்களாகியிருந்தனர்’ என்று மிக நீளமாகச் சொற்களைச் சேர்த்து  எழுதுவது ஏன்? 9 ஆம் வகுப்பு மாணவனின் வயதை பாடத்திட்டம் உருவாக்குவோர், பாடம் எழுதுவோர் கவனித்தில் கொள்ள வேண்டாமா?  இதுவே தமிழ் வழி வேண்டாம் ஆங்கில வழியிலேயே எளிமையாகப் படிக்கலாம் என்று மாணவர்களையும் பெற்றோர்களையும் துரத்துகிறது. கல்லூரிகளில் தமிழ் வழியில் தேர்வெழுதுவதைவிட ஆங்கில வழியில் எழுதுவதே நல்லது என்கிற முடிவுக்கு வருவதற்கும் மொழியாக்கம் ஒரு காரணமாகவும் இருக்கிறது. 

   “The printing press enabled the production of multiple copies of a manuscript and their spread all over Western Europe”, (page: 51)

    “ஒரு கையெழுத்துப் பிரதியின் பல மறுபிரதிகளின் உற்பத்தியை அச்சு இயந்திரம் சாத்தியமாக்கியது. மேலும், மேற்கு ஐரோப்பா முழுவதிலும் அவை பரவுவதற்கு வழிவகுத்தது”, (ப. 57)

   “அச்சு இயந்திரம் பலபிரதிகளின் உற்பத்தியை சாத்தியமாக்கியது”, என்று எளிமையாகச் சொன்னால் என்ன இடர் வந்துவிடப்போகிறது?

   “பதினான்காம் நூற்றாண்டின் மையப்பகுதி வாக்கில், அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பினால் பல பிரதிகள் அச்சிடும் நிலை உருவானதுடன் அவை பரந்த அளவில் சுற்றுக்கும் விடப்பட்டன”, (பக்.65) 

   மொழிபெயர்ப்புக் குளறுபடிகள் ஒருபுறமும் மீண்டும் மீண்டும் சொல்வது ஒருபுறகும் என தமிழ் வழிப்பாடநூல்களின் பக்கங்களை அதிகமாக்குவதில் போய் முடிந்துள்ளது.                                               

   ஒரு தலைப்பின்கீழ் நான்கு ஒரு மதிப்பெண்கள் வினாக்கள் கேட்கும் முறை 9, 10 வகுப்புகளில் உண்டு. ஒன்பதாம் வகுப்புப்ப் பிதிய பாடநூலில் ‘மறுமலர்ச்சி’ என்னும் தலைப்பின் கீழ்,  

(அ) இத்தாலிய நகர அரசுகளில் முதன்முதலில் மறுமலர்ச்சி தோன்றுவதற்கான காரணங்களைக் கூறுக.

(ஆ) மனித நேயர்கள் சிலரையும், அவர்களது படைப்புகளையும் குறிப்பிடுக.

(இ) மறுமலர்ச்சி காலக் கலைக்கும் இடைக்காலக் கலைக்கும் உள்ள வேறுபாடுகளை வரிசைப்படுத்துக.

(ஈ) மனிதநேயம் பற்றி விளக்குக. (பக். 72) 

       ஒரு மதிப்பெண்கள் வினாக்களை கேட்காமல் 2 மற்றும் 5 மதிப்பெண் வினாக்களைக் கேட்பது சரியா? 

    உள்ளூர் வரலாறோ அல்லது உலக வரலாறோ மிகச்சுருக்கமாக ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு சொன்னால் போதாதா? ஏன் இவ்வாறு நீட்டி முழக்கித் திரும்பத் திரும்ப சொல்லவேண்டியதும் குழப்ப வேண்டியதும் அவசியமில்லைதான். 

   பள்ளி மாணவர்களுக்கான பாடநூல் மொழியை இன்னும் நாம் கண்டடையவில்லை. பெரியவர்களுக்கான மொழியை குழந்தைகளிடம் திணிப்பதும் வன்முறையல்லவா!  
 
    செவ்வியல் காலத்தில் இந்தியா, இதே காலகட்டத்தில் இந்தியா (இடைக்காலம்), இதே காலத்தில் ஐரோப்பாவில் (பிற்காலச் சோழர்கள், ஐரோப்பிய நவீன கால விடியலின்போது இந்தியா என்று ஒப்பிட்டுக்காட்டுவதை வரவேற்கலாம்.

        அடுத்தக் கட்டுரையுடன் இத்தொடர் நிறைவடையும்…

                     (இன்னும் வரும்…)