வியாழன், டிசம்பர் 24, 2020

எதிர் அறவியல்

எதிர் அறவியல்

 

மு.சிவகுருநாதன்

 

    +1, +2 வகுப்புகளில் அறவியலும் இந்தியப் பண்பாடும் (Ethics  and Indian Culture) என்றொரு பாடமிருப்பதை அறிவீர்கள். அறவியலும் பண்பாடும் விரிந்த பொருள் கொண்டவை. வேத, வைதீக, இந்து மத நச்சுக் கருத்துகளை அறமென இப்பாடநூல்கள் புனைந்துரைக்கின்றன. உள்ளதை உள்ளபடி சொல்லிச் செல்வதுதானே முறையாக இருக்க இயலும். மாறாக அவற்றை வாழ்க்கை நெறியாகவும் கடைபிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தும் பாசிசச் சொல்லாடல்கள் எங்கும் நீக்கமற நிறைகின்றன. ‘அழிவில்லாத நிலையான அறம்’ என்று இவர்களால் போற்றப்படும் ‘சனாதன தரும’த்தை பொது அறமாகக் கட்டமைக்கின்றனர். இத்தகைய ‘எதிர் அறவியலை’த் தமிழ்ச் சமூகம் இவற்றை வெறுமனே கடப்பது வியப்பிற்குரியது.

‘ஸ்மிருதிகள்’ பற்றி உள்ளவை:

   “இவை உயர்ந்த உள்ளங்களின் சிந்தனைத் தொகுப்புகள்” சூத்திரங்கள், தரும சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்பன ஸ்மிருதிகளாகும். இவை எழுதப் பெற்றவை. இதில் தரும சாஸ்திரம் என்பது சட்டம், சமுதாய நடைமுறைகளை விவரிக்கின்றன. பல்வேறு சாதிக் கடமைகளையும், பல்வேறு நிறுவனங்களையும் (அமைப்புகளை) விளக்குகின்றன. நடைமுறை வாழ்வில் குற்றம், குற்றங்களுக்குரிய தண்டனை முறை, குழந்தை தத்தெடுப்பு (adoption), மரபுரிமையாகச் சொத்தைப் பெறும் சட்ட உரிமைகள் போன்றவை இவற்றுள் விவரிக்கப்பட்டுள்ளன”. (பக்.42, 12 அறவியலும் இந்தியப் பண்பாடும்)

‘பின்வேதகாலச் சமூக நிலை’ எனும் தலைப்பில்:

 

   “பின் வேதகாலச் சமூகம், வர்ணாசிரம முறைச் சமூகமாகக் காணப்பட்டது. அம்முறையின்படி மக்களிடையே

1.   பிராமணர்

2.   சத்ரியர்

3.   வைசியர்

4.   சூத்திரர் ஆகிய சமூகப் பிரிவினர் இருந்தனர்.

 

பிராமணர்கள்

 

     கல்வி கற்பது, சமயச் சடங்குகள் செய்வது, வெகுமதிகளைப் பெறுவது, சமுதாயத்திற்கு நல்வழி, உலக நன்மைக்காக இறைவனை தியானிப்பது இவர்களது வாழ்வியல் ஒழுக்கமாகும் .

 

சத்திரியர்கள்

 

    நாட்டை ஆள்வதும், நாட்டைக் காப்பதும் இவர்களுக்குரிய கடமைகளாகும். இவர்கள் வீரம் பொருந்தியவராகவும் ஆளுந்தன்மை உடையோராகவும் திகழ்ந்தனர். தன்னலம் (பக்.43) கருதாமல் பிறரைக் காக்கும் கடமைஉணர்வு மிக்கவர்களாக திகழ்ந்தனர்.

வைசியர்கள்

வாணிகத்திலும், பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபாடு உடையவர்கள். நேர்மையாக வாணிகம் செய்து அறவழியில் பொருளீட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனர்.

சூத்திரர்கள்

    முதல் மூன்று பிரிவினர்களுக்கும் வேண்டிய பணிகளைச் செய்வது இவர்களது பணிகளாகும். தமக்கு இடப்பட்ட பணியை நிறைவேற்றி முடித்தனர்”. (பக்.44)

    “இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது”, (பக்.59) என்ற உண்மையை, அறத்தை இவர்கள் விண்டுரைக்கும்போது நமக்குப் புல்லரிக்கிறது. ‘பக்தி இயக்கம் தோன்றக் காரணங்களில்’ மட்டும் “உயர் குடியினராகக் கருதப்பட்டவர்கள், பிற பிரிவினரிடம் பாகுபாடு காட்டினர்” (பக்.150) என்று கூறப்பட்டுள்ளது.

 

‘புராணங்களின் நோக்களைக் காண்க:

 

     “புராண இலக்கியமானது ஆழ்ந்த இந்து சமயக் கருத்துகளைக் கொண்டதாகவும் பருப்பொருள் தத்துவமாகவும், அறிவியலாகவும் போற்றப்படுகிறது. சமயம், தத்துவம், அறிவியல் இவை ம்மந்தமாக வெளிப்பட்ட ங்கால மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் அவற்றில் புரியாத கடினமான கருத்துகளையும் மிகச் சுவையாகவும், உவமான, உவமேயங்ளின் மூலமும் விளக்கி மக்ளின் மனத்தில் பதியச் செய்து புராணங்ளின் முக்கிய நோக்கமாகும்.

 

     வேதக் கட்டளைகளான ‘உண்மைபேசு’ (ஸ்த்யம் வத), தருமத்தைச் செய் (தர்மம் சர) என்பனவற்றை நீதிக்கதைகள் மூலம் விளக்கிக் கடைப்பிடிக்கச் செய்தன. வாழ்வைச் சீர்படுத்துவதும் சமய ஞானமும், கடவுள்  (பக்.52) பக்தியும் கலந்த தெய்வீக உணர்வினைத் தருவதும் புராணங்களாகும். (பக்.53)  

 

‘புராணங்களின்இன்றியமையாமை’யைக் கவனிக்க:

 

    “புராணங்கள் பழைமை வாய்ந்தவை என்றும், சமயக் கருத்துகளை மட்டுமே பிரதிபலித்தன எனவும் கொள்ளுதல் தவறு. புராணங்கள் வாழ்வின் பல்வேறு நிலைகளில் மக்களுக்குப் பயன்படும் அரிய உண்மைகளை எளிமையாக ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கூறியுள்ளன”. (பக்.52)

 

வீன காலத்திற்கு வேதங்ளின் ஏற்புடைமை

 

  • “வேதங்களில் கூறப்பட்டுள்ள அரிய உண்மைகள் இன்றைய உலகில் அறிவியல் உண்மைகளோடு மிகவும் ஏற்புடையதாய் காணப்படுகின்றன. மேலும், இன்றைய வாழ்வின் அடிப்படைப் பண்பாட்டுக் கூறுகளையும் பிரதிபலிக்கின்றன.
  • புவியின் வயது, விண்வெளியின் எல்லைகள், சூரியனின் உட்பகுதி, (பக்.53) வானநூல் பற்றிய கருத்துகளை வேதங்கள் கூறியுள்ளன. இவை அனைத்தும் இன்றைய அறிவியல் உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
  • ஆயுர்வேதம் எனப்படும் மருத்துவ இயல், தனுர்வேதம் எனப்படும் போர்க்கலை, காந்தர்வ வேதம் எனப்படும் நுண் கலை ஆகிய மூன்றும் வேதங்களாலும், இதிகாசங்களாலும் விளக்கப்படுகின்றன. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் இதனை ஏற்றுக் கொள்கின்றன.
  • ஆயுர்வேத மருத்துவம் என்ற முறை ஆன்மிகத்தையும் மருத்துவத்தையும் இணைக்கிறது.
  • மூலிகை மருத்துவம் பற்றிய தெளிவான அறிவை ஆயுர்வேதம் கூறுகிறது.
  •   உலோகவியல் பற்றிய கருத்துகள் வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
  • காலக் கணக்கிற்கு உதவும் கணித அறிவும் வேதத்தில் கூறப்பட்ட அறிவாகும்.
  • விண்வெளியில் காணப்படும் பல்வேறு கிரகங்கள், நட்சத்திரங்கள் பற்றி விளக்கமான செய்திகள் வேதத்தில் கூறப்பட்டுள்ளன.
  •   நியாய-வைசேடிகம் என்ற தத்துவம் அணு விஞ்ஞானம், அணுவின் அமைப்பையும், தன்மையையும் , ஆற்றலையும் குறிப்பிடுகிறது.
  • வேதத்தில் இந்தியாவின் இருப்பிடம் புவியியல் வல்லுநர்களால் கூறப்பட்டுள்ள அட்ச, தீர்க்க ரேகைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. கிரகணங்கள் நடைபெறும் காலத்தை முன் கூட்டியே கணக்கிடும் கலையை வேதங்கள் விளக்கிக் கூறுகின்றன.
  • தனி மனித வாழ்க்கை, சமூக வாழ்க்கை, தனி மனிதன் சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொதுமக்களின் கடமை பற்றியெல்லாம் வேதங்கள் விளக்கியுள்ளன. இத்தகைய மேன்மை பொருந்திய வேதத்தைக் கற்றுணர்ந்து, நம் வாழ்வில் பின்பற்றி உயர்வதே மனிதவாழ்வின் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

 

     வேத உபநிடதங்களை ஏற்கும் சனாதன தர்மம் என்கிற இந்து மதத்திற்கு ஒரு குறிப்பிட்ட நூல் மட்டுமே புனிதநூலாக அமையவில்லை. வேதம், உபநிடதம், பகவத்கீதை, புராணங்கள், இதிகாசங்கள் என்ற நீண்ட பட்டியலே உண்டு. ஒவ்வொன்றும் மனித இயல்புகளுக்குத் தக்கபடி வாழ்க்கை நெறிமுறை மற்றும் தத்துவங்களைப் போதிக்கிறது. வேதங்களில் யாகங்களும் சடங்குகளும் முக்கியத்துவம் பெற்றன. உபநிடதங்களில் எளிதில் புரிந்து கொள்ள முடியாத தத்துவ உண்மைகள் காணப் படுகின்றன. எனவே, உபநிடதங்களை அனைவரும் புரிந்து கொண்டு, நடைமுறை வாழ்க்கை மேற்கொள்ள பகவத்கீதை, புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் வழிகாட்டுகின்றன. 

 

நிறைவுரையாக…

 

    இந்தியப் பண்பாட்டிற்குக் கிராம வாழ்க்கை முறை, கூட்டுக் குடும்பமுறை போன்றவற்றைக் கொடையாகத் தந்தது வேத காலப் பண்பாடாகும். சிந்துவெளி நாகரிகத்தின் பழைமையான வேளாண்மை முறை வேதகாலத்தில் தான் புதிய பரிணாம வளர்ச்சி பெற்றது எனலாம். அரசன், அரசமைப்பு, நிருவாக முறை, போன்றவை புதிய வளர்ச்சி பெற வேதகாலமே வித்திட்டது. இந்திய இலக்கிய வளர்ச்சியை வேதகாலமே தொடங்கி வைத்தது. கிரேக்கர்கள், அரேபியர்கள், துருக்கியர்கள், ஐரோப்பியர்கள் இந்தியாவை ஆட்சி செய்தாலும், இந்தியப் பண்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தது வேதகாலப் பண்பாடாகும். (பக்.54)

    கங்கை நதி புனிதமானதாம்! ஏன் சரஸ்வதி நதியை மறந்தனர் எனத் தெரியவில்லை?

 

     “இந்தியாவின் நீளமான நதி, புனிதமான நதி, மிக அதிக எண்ணிக்கையிலான துணைநதிகளைப் பெற்றுள்ள நதி என்று பல சிறப்புகளைக் கங்கை நதி பெற்றுள்ளது”. (பக்.19)

 

‘இந்து மதம்’ பற்றிச் சொல்லப்படுவன: 

 

இந்து என்னும் சொல்லின் தோற்றம்

 

      “கிரேக்கர், அராபியர், பாரசீகர் போன்ற அயல்நாட்டினர், பாரத நாட்டைச் சிந்து ஆற்றின் பெயரால் (ஸிந்து) ஹிந்து என்று அழைத்தனர். அது நாளடைவில் ஹிந்து என்று மாறியது. இது தமிழில் இந்து என்று வழங்கப்படுகிறது. இப்பெயர் இந்திய துணைக்கண்டமாகிய நிலப்பரப்பு மட்டுமின்றி, இங்கு வாழ்கின்ற மக்கள், பண்பாடு போன்றவற்றிற்கும் இவர்களது சமயத்திற்கும் பெயராகி உள்ளது.

 

இந்து என்னும் சொல்லின் பொருள் 

 

      “இந்து அல்லது 'ஹிந்து' என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம் – ஹிம்சையில், து–துக்கிப்பவன் எனப் பொருள்படும். ஓர் உயிர் எந்தகாரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால், அத்துயரத்தைத் தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்றமுன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும். (இந்த விளக்கத்தைச் பெரிய சங்கராச்சாரி கூட ஏற்கவில்லை. பார்க்க: தெய்வத்தின் குரல் – பகுதி-1)

 

       இந்து சமயம், சனாருமம், வேசமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்’ என்றால் 'அழிவில்லாத நிலையான அறம்' எனப்படும். இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் ’வேத சமயம்’ என்றும், வேத நெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்து சமயத்தின் அடிப்படை

 

    இந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு கடவுளை அடைவதாகும். எல்லாவற்றையும் விட இவர் மேலானவராக இருப்பதால், கடவுளைப் பரம்பொருள் என்று இந்து சமயம் கூறுகிறது. கடவுள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்கிறார். படைக்கும்போது அவர் பிரம்மன் என்றும், காக்கும்போது விஷ்ணு என்றும், அழிக்கும்போது சிவன் என்றும் அறியப்படுகிறார். இந்த வெவ்வேறு மூன்று தொழில்களைச் செய்யும் பரம்பொருளையே மும்மூர்த்திகள் என்று கூறுகின்றனர். ஆன்மா, வினைப்பயன், மறுபிறப்பு, வீடுபேறு போன்றவை இந்து சமயத்தின் அடிப்படை கருத்துகள் ஆகும்”. (பக்.58)

ஐந்து வேள்விகள்- (பஞ்ச யக்ஞம்)

 

“தெய்வவழிபாடு (தேவ யக்ஞம்) கடவுளை நாள்தோறும் வழிபடுதல் வேண்டும்.

வேதம் ஓதுதல் (பிரம்ம யக்ஞம்) நாள்தோறும்  வேதங்களையும் , அறநூல்களையும் ஓதுதல் வேண்டும்.

முன்னோர் ழிபாடு (பித்ரு யக்ஞம்) இறந்த மூதாதையர்கள் தெய்வங்களாக உள்ளனர் எனக் கருதி அவர்களை வழிபடவேண்டும்.

உயிரினங்கள் வழிபாடு (பூத யக்ஞம்) செடி, கொடி, மரம், விலங்கு, உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் கடவுளாகக் கருதி அவற்றுக்கு உணவு அளித்துப் பேணவேண்டும்.

மனித வழிபாடு (மனுஷ்ய யக்ஞம்) அறவோரையும், துறவிகளையும் வணங்கி உதவிடவேண்டும்.

இந்து தர்மம்

 

இந்து சமயம் ஒவ்வொரு இந்துவுக்கும் தனி மனித கடமைகள் (ஆசிரம தர்மம்), சமூகக் கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்) என இரு கடமைகளை வலியுறுத்துகிறது.

1. தனிமனிகடமைகள் (ஆசிரம தர்மம்)

மனித வாழ்க்கையின் நான்கு படிநிலைகளில் ஒவ்வொரு காலத்திலும் அவன் ஆற்ற வேண்டிய கடமைகளைப்பற்றி கூறுகிறது. அவை பிரம்மச்சரியம், கிருகஸ்தம், னப்பிரஸ்தம், சன்னியாசம். இவை படிப்படியாக மனிதன் வாழ்வு முழுமை பெற ஏற்படுத்தப் பட்டவையாகும்.

2. சமூகக்கடமைகள் (வர்ணாஸ்ம தர்மம்)

இந்து சமயம் ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்துள்ள சமூகத்திற்கெனச் சில கடமைகளை ஆற்றவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன

பிராமர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவார். இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது”. (பக்.59)

    ஐந்து வேள்விகள், இந்து தர்மக் கடமைமைகள் எல்லாம் இந்து என்ற பேரடையாளத்தில் இணைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பொதுவானதல்ல. வருணக் (சாதி) கடமைகள் சமூகக் கடமைகள் ஆகாது. இங்கு சாதியும் சமூகமும் ஒன்றாக்கப் படுகிறது. பிராமணர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட கடமைகளை பிறர் எப்படி பங்கேற்க முடியும்?

 

இந்து சமயத்தின் பெருமைகள்

 

  •   “இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையானது. அஃது உலகெங்கும் பரவி இருந்ததை நவீன கால ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.
  • இந்து சமயத்தில் இடம் பெற்றுள்ள முக்கியக் கருத்துகள் பிற சமயங்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • இந்து சமயம் பிற சமயங்களை இழிவுபடுத்தாமல், அவற்றின் கோட்பாடுகளை மதித்து அரவணைத்துச் செல்கிறது.
  • இந்து சமயத்தின் மீது பல்வேறு தாக்குதல்கள் நிகழ்ந்த போதும் அது தாழாமல் உயர்ந்து திகழ்கிறது.
  • இந்து சமயம் வெறும் நம்பிக்கை உணர்வோடு நின்றுவிடாமல் நம்பிக்கைகளுக்கான அறிவியல் காரணங்களையும் தன்னகத்தே கொண்டது.
  • மனித உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தாது சுதந்திரமாக வாழும் உரிமையை வழங்குகிறது. நமது சமூகங்களில் கட்டுப்பாடு நிலவினாலும் சமயத்தில் அளப்பரிய சுதந்திரம் வழங்கப்படுகிறது.
  • இல்லறத்தில் இருப்பினும் துறவறத்தில் இருப்பினும் நல்வாழ்வின் வாயிலாக வீடுபேறு அடையலாம் எனக் கூறுகிறது.
  • மக்கள் செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப மறுபிறவி உண்டெனக் கூறி, மக்களின் வாழ்வை நெறிப்படுத்தித் துன்பமற்ற வாழ்க்கைக்கு வழிசெய்கிறது.

இந்தியப் பண்பாட்டிற்கு இந்து சமயத்தின் கொடை

 

  • இந்து சமயத்தில் காணப்படும் இல்லறம், மனிதாபிமான உணர்வு, சகிப்புத் தன்மை, உயர்ந்த ஆன்மிகக் கோட்பாடுகள் போன்றவை இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகத் திகழ்கின்றன.
  • இந்து சமய இலக்கியங்களான வேதங்கள், உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்றவை இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகிற்கே வழங்கப்பட்ட கொடைகளாகும்.   
  • யோகா என்னும் அற்புதமான அறிவியல் உண்மையை, மிகப்பெரிய கொடையாக இந்து சமயம் உலகிற்கு அளித்துள்ளது.
  •  கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை இவற்றில் மனிதனின் ஆன்மிக உணர்வுகள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உலகிற்குக் காட்டிய சமயம், இந்து சமயமேயாகும்.   
  • உருவ வழிபாட்டு முறை, வீடுபேறு அடைவற்கான அறநெறி கோட்பாடுகள் அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம், சைவ, சித்தாந்த நெறிகள் போன்ற தத்துவக் கோட்பாடுகளையும் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்திருப்பது இந்து சமயம்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை”.   (பக்.66)

           

    இந்தியப் பண்பாட்டிற்குச் சமண சமயத்தின் கொடையாக, “கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு சமணக் கல்வி போதிக்கப்பட்டது” (பக்.71) என்கின்றனர். பிற்காலச் “சோழர்கள் ஆட்சியில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் கல்வி போதிக்கப்பட்டன. கோயில்கள் கல்விக் கூடங்களாகத் திகழ்ந்தன”, (பக்.117) எனும்போது மதம் வெளிப்படுவதில்லை. இவர்களது கோயில் தமிழ்க் கல்வியை (!?) இலக்கியப் பட்டியலே வெளிச்சம் போட்டுக் காட்டும்.

 

      இவர்களது வழமையான பிற்காலச் சோழப்பெருமைகளில் ‘குடவோலை நோய்க்கு’ இடமில்லாது போகுமா? எந்நோய்க்கு மருந்து கண்டாலும் இந்நோய்க்கு முடியாது என்பது திண்ணம். இந்த திருவுளச்சீட்டு முறையில் உறுப்பினரின் முதல் தகுதி பிராமணராக இருக்க வேண்டும் என்பதே. தற்காலத் தேர்தல்கள், உள்ளாட்சி முறை என்றெல்லாம் பிதற்றுவது நோயின்றி வேறில்லை. 

பிரம்மதேயங்கள்

     “நான்கு வேதங்களையும் கற்றுத் தேர்ந்த அந்தணர்களுக்கு, அரசன் கொடையாக வழங்கும் நிலம் பிரம்மதேயம் எனப்படும். இந்நிலங்கள் இறையிலி நிலங்களாக வழங்கப்படுவதால், அந்தணர்கள் இந்நிலத்திற்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டனர்”. (பக்.109)

கிராமஆட்சிமுறை

 

“சோழர் காலத்தில் கிராம ஆட்சிமுறை சிறப்புப் பெற்றிருந்தது. கிராமசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, அதன் செயல்பாடுகள் குறித்து உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்படுள்ளது.

குடவோலைமுறை

   முதலாம் பராந்தகன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் குடவோலை முறையின் மூலம் சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகள் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

சபை உறுப்பினராவதற்குத் தகுதிகள்

 

உறுப்பினராவதற்குக் கால்வேலி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்.

சொந்த நிலத்தில் வீடு இருக்க வேண்டும்.

35 வயது முதல் 70 வயதிற்குள் நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

வேதங்கள், புராணங்கள் கற்றுத் தேர்ந்தவராக இருக்கவேண்டும்.

ஒரு முறை உறுப்பினராய் இருந்தோர், அடுத்த ஐந்து ஆண்டுக்குப் பிறகே உறுப்பினராக முடியும். 

 

தேர்ந்தெடுக்கும் முறை

 

      ஊர் பல குடும்புகளாகப் (Ward) பிரிக்கப்படும். ஒவ்வொரு குடும்பிலும் தகுதியுடையவர்களின் பெயர்களைப் பனை ஓலையில் எழுதி அதனைக் குடத்தில் இடுவார்கள். தேர்தல் நாளன்று அக்குடத்தைச் சபையோர் முன் நன்றாகக் குலுக்கிய பின், 5 வயதுக்குட்பட்ட சிறுவனைக் குடத்திலுள்ள ஓர் ஓலையை எடுக்கச் செய்வர். அதில், யார் பெயர் வருகிறதோ, அவரையே உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பர். இவ்வாறு, சபையின் உறுப்பினர்கள் குடவோலை முறையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்”. (பக்.115)

 

    எல்லா வகுப்புகளிலும் இதே கதைதான். “பராந்தகச் சோழனின் உத்திரமேரூர்க் கல்வெட்டு, சோழர் கால கிராம ஆட்சி முறையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இக்கல்வெட்டில் கிராம உறுப்பினர்களின் தகுதிகள், தேர்ந்தெடுக்கப்படும் முறை ஆகியவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன”. (பக்.05, 11 அறவியலும் இந்தியப் பண்பாடும்)

 

உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் குடவோலைமுறை’

 

     “கிராம ஊராட்சி சபைஉறுப்பினரை தேர்ந்தெடுக்க, சோழர் காலத்தில் குடவோலை தேர்தல் முறை பயன்படுத்தபட்டது. இத்தேர்தலில் குற்றமற்றோரையும் தகுதியுள்ளோரையும் நிற்கச் செய்வார்கள். அவர்களின் பெயர்களை ஓலையில் எழுதி மக்கள் எதிரில் அவற்றைக் குடத்தில் இட்டுக் குலுக்குவார்கள். சிறுபிள்ளையைக் கொண்டு ஓர் ஓலையை எடுக்கச் செய்து அதில் வரும் பெயருடைய நபரையே தேர்ந்தெடுக்கப்பட்டவராகக் கொண்டு போட்டிப் பூசலின்றி தேர்தல் நடந்தது. இதனை, தற்கால தேர்தல் முறைக்கு முன்னோடியாகக் கருதலாம்”. (பக்.05, 11 அறவியலும் இந்தியப் பண்பாடும்)

 

“பாண்டியர்களின் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் வலிமை பெற்றுத் திகழ்ந்தன. இதில் மூன்று வகை சபைகளிருந்தன.

 

பிராமணர்கள் இருந்த பிரம்மதேயச் சபை

பிரம்மதேயமல்லாத ஊர்களிலிருந்த சபை

வணிகர்கள் வாழ்ந்த நகரசபை

 

        மேற்காணும் சபைகளைப்பற்றி, மானூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சபை உறுப்பினர்கள் ‘குடவோலை‘ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தகுதிக்கேற்ப வாரியப் பணிகளில் நியமிக்கப்பட்டனர்”. (பக்.120)  என்று பாண்டியர் காலத்தில் இருக்கும்போது பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே கிராம சபை எப்படி இருந்தது என விளக்க வேண்டாமா?

 

      “ஆயக்காரர்களோடு சேர்ந்து கிராம மக்களுக்குச் சேவை புரிவதற்கு புரோகிதர், பொற்கொல்லர், தச்சர், குயவர் போன்ற தொழிலாளர்களும் நியமனம் பெற்றனர். இவர்கள் செய்த தொழிலுக்கு இறையிலி நிலங்கள் வழங்கப்பட்டன. பரம்பரை பரம்பரையாக இந்நிலங்கள் அனுபவித்துக் கொண்டு கிராம மக்களுக்குச் சேவைகள் புரிந்தனர். விவசாயிகள் அறுவடைக் காலங்களில் மகசூலின் சிறு பகுதியை இவர்களுக்கு அளிப்பதும் உண்டு. இம்முறை, கிராம அமைப்புகளாகிய கிராம சபைகள் மறைவதற்குக் காரணங்களாக இருந்தன”. (பக்.131)

 

கல்வி

     “சோழர் காலத்தில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழியில் கல்வி போதிக்கப்பட்டன. கோயில்கள் கல்விக் கூடங்களாகத் திகழ்ந்தன. முதலாம் பராந்தகன் வேதபாடசாலை நடத்துவதற்காக, மான்யம் அளித்துள்ள செய்தியைக் காமப்புல்லூர் கல்வெட்டு பகர்கின்றது. முதலாம் இராஜராஜன் காலத்தில் வேதங்களையும், இலக்கணங்களையும் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளை அணியூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இராஜேந்திரன் காலத்தில் வேதங்களைப் போதிக்கும் கல்விக் கூடங்கள் திரிபுவனம், எண்ணாயிரம், திருவொற்றியூர், வேம்பந்தூர் போன்ற இடங்களில் இருந்தன. பிற்காலச் சோழர்கள் காலத்தில் தமிழிலக்கியம் அதன் உச்சத்தை அடைந்தது. இறவாப்புகழ் பெற்ற தமிழிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் இயற்றப்பட்டன. அவை,

 

இலக்கியம் 

 

          ஔவையார் - ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை

          சேக்கிழார் - பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் (பக்.116)

கம்பர் - கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபரந்தாதி, சரஸ்வதி அந்தாதி, இலக்குமி அந்தாதி, சிலை எழுபது

புகழேந்திப் புலவர் - நளவெண்பா

ஒட்டக்கூத்தர் - மூவருலா, பிள்ளைத்தமிழ் (குலோத்துங்க சோழன்)

ஜெயங்கொண்டார் - கலிங்கத்துப்பரணி

கச்சியப்ப சிவாச்சாரியார் - கந்த புராணம்

போன்ற நூற்படைப்புகள் சோழர் கால இலக்கியத்திற்குப் பெருமை சேர்ப்பவையாகும்”. (பக்.117)

 

இந்தியப்பண்பாட்டிற்குச் சோழர்களின் கொடை

 

  •  “மன்னருக்கு வாரிசு இல்லாத போது, அரச குடும்பம் சார்ந்த / சாராத ஒருவர் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறை, நல்லாட்சிக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகும்.
  • கிராம சபை உறுப்பினர்களைக் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் முறையானது, இந்தியப் பண்பாட்டிற்குச் சோழர்கள் நல்கிய சிறந்த கொடையாகும்.
  • சோழர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குடும்புகள் முறை, தற்கால கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அடிப்படையானது.
  • சோழர் காலத்தில் நிலங்கள் அளக்கப்பட்டு தரம் வாரியாக வரி விதிக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழன் நிலம் அளந்து தரம் பிரித்ததால் ‘உலகளந்த சோழன்' என்று புகழப்பட்டார்.
  • ஐம்பெரு மற்றும் ஐஞ்சிறு காப்பியங்கள், இலக்கண நூல்கள், நிகண்டுகள் போன்றவை தமிழ் இலக்கியப்படைப்பிற்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் சிறந்த கொடைகளாகும்.
  • நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிரத் திவ்விய பிரபந்தம், சோழர் காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த இலக்கியக் கொடையாகும்.
  • குலோத்துங்க சோழப் பேரேரி, இராசேந்திர சோழப் பேரேரி போன்றவை சோழர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும்.
  • ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் அவர்களின் தகுதியும் கடமையும் பற்றிச் சோழர் கால கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
  • சோழர் காலத்தில் வேதக்கல்வி மற்றும் மருத்துவக்கல்வி போன்றவை இந்தியப் பண்பாட்டிற்கு அளித்த நன்கொடையாகும்”. (பக்.119)

 

      வேத, புராணப் பெருமைகளுக்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல, சைவ, வைணவப் பெருமைகள். அவற்றைக் கீழ்க்கண்ட வரிகள் நிருபிக்கும்.

 

     “புல்லாகிப்பூடாய்…… என்ற பாடல் வரிகள் பல்வகை உயிரிகளின் பரிணாம வளர்ச்சியை விரிவாகக் கூறுகின்றன. ‘மானுடப் பிறப்பினுள் மாதா உதிரத்து ஈரமில் கிருமி செறிவினில் பிழைத்தும்‘ எனத் தொடங்கும் பாடலடிகள் கருவியல் (Embrology) அறிவை நன்கு தெரிவிக்கின்றன”. (பக்.155)

 

    சுவாமி தயானந்த சரஸ்வதியின் ‘சுத்தி இயக்கம்’ குறித்த பாடமெழுதிகளின் இந்துத்துவப் பார்வையைக் கண்டுகொள்ளுங்கள். பிற சமயங்களுக்குச் சென்ற இந்துக்கள் ஏன் மீண்டும் இந்துவாக மாற வேண்டும்? அவர்களைக் கட்டாயப்படுத்தி இணைக்கும் தீண்டாமைச் சடங்கு முறையே சுத்தி இயக்கமாகும். (மீண்டும் இந்துவாதல் என்றால் சூத்திரன் மற்றும் பஞ்சமன் ஆதல் என்பதுதான் உண்மை.) 

 

     “ஆரிய சமாஜம் தோன்றுவதற்கு முன் பிற சமயங்களுக்குச் சென்ற எவரும், மீண்டும் இந்து சமயக் கோட்பாடுகளை ஏற்று இந்துவாக மாறமுடியாத நிலை இருந்தது. சுத்தி இயக்கத்தின் (Sudhi Movement) மூலம் பிற சமயத்தில் உள்ள இந்துக்களைத் தன் சமயத்தில் மீண்டும் இணைத்துக்கொண்டது”.  (பக்.180)

 

   ஸ்ரீ நாராயணகுரு பற்றி எழுதும்போது, “அவரது காலத்தில் வாழ்ந்த மக்கள் இரண்டு பிரிவாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் அவர்ணர், சவர்ணர் என்றும் குறிப்பிடப் பட்டனர். அவர்ணர்கள் கல்வி கற்கக்கூடாது, சாஸ்திரங்களைக் கற்கக்கூடாது, கோயில்களை நிறுவக்கூடாது, (பக்.186) பூஜைகளைச் செய்யக்கூடாது என்ற சவர்ணர்களின் அடக்குமுறைக்கு முடிவு கட்ட நாராயணகுரு உறுதி பூண்டார். எனவே, திருவனந்தபுரத்திற்கு அருகில் அருவிப்புரத்தில் கோயில் கட்டி சவர்ணர்கள் மட்டுமே பிரதிஷ்டை செய்யமுடியும் என்ற கட்டுப்பாட்டை உடைத்தெறிந்தார்”, (பக்.187) என்று குறிப்பிடுகின்றனர்.

 

    ஏதோ நாராயணகுரு காலத்தில் அதுவும் கேரளாவில் மட்டும் சாதி வேறுபாடுகளும் ஒடுக்குமுறைகளை இருந்ததாகச் சொல்வது எவ்வளவு பெரிய வன்முறை?

 

    “ஜோதிபா பூலே மராத்திய மாநிலத்தில் பூனாவில் பிறந்தவர். பூத்தொடுக்கும் குடும்பத்தில் பிறந்தமையால் பூலே என்று அழைக்கப் பட்டார்”, (பக்.187) என்று கண்டுபிடிக்கிறார்கள். உண்மை என்ன?

 

     ஜோதிபா புலே மராட்டிய அடித்தட்டு விவசாய குடும்பங்களில் ஒன்றான கோர்ஹே (Gorhe); தோட்ட வேலை இவர்களது குலத்தொழில். பூக்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப் பயிரிட்டு வணிக செய்தனர். பூக்களை உற்பத்தி செய்து வணிகத்தில் ஈடுபட்டதால் புலே என்பது குடும்பப் பெயரானது. (புல் என்றால் பூ என்று பொருளாகும்.)

 

     பெரியார், “பெயருக்குப் பின்னால் வரும் சாதியின் பெயரை ஒழிக்கப் பாடுபட்டார்”. (பக்.189) இது பாராட்டா? விமர்சனமா? வேத, புராண, இந்து மதப் பெருமைகளைப் பேசும்போது வராத தன்மை பெரியாரைச் சொல்லும்போது மட்டும் வருவதேன்?

 

     “உலக சுகாதார மையம் (WHO), உடல்நலம் என்பது, நோயிலிருந்து விடுபடுதல் என்பது மட்டுமல்லாது உடல், மனம், சமூக நலம் போன்றவற்றைப் பேணிக்காப்பதுமாகும் என விளக்குகிறது. ஒருவர், தம் உடலில் எவ்வித நோயும் இல்லாத நிலையுடன் நல்ல உடலமைப்பைப் பெற்று நலமுடனும் மனநலத்துடனும் சமூகத்தில் அனைவரிடமும் ஒழுக்க நெறிகளோடு வாழும் முறையை யோகா கல்வி நமக்குக் கற்றுத் தருகிறது. மேலும், இந்தியாவின் பண்பாட்டைப் பேணிக் காக்கவும் அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கவும் யோகாகல்வி நமக்கு உதவுகிறது”. (பக்.219)

 

    வேதங்கள், புராணங்கள், வருண தர்மம் (சாதி) ஆகியவற்றை ஏற்கும் ஒருவன் (இந்துத் தன்னிலை) மனநலத்துடன் வாழ்வதாகக் கற்பனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம். இவ்வளவு அழுக்குகளையும் அதனோடு இணைக்கப்பட்ட யோகா மூலம் அறநெறிகளை உற்பத்தி செய்வது  கற்பிதம்  மட்டுமல்ல; நகைச்சுவையும் கூட. 

 

 

இறுதியாக ஒரு பயிற்சி:

 

    சமண சமயத்தில் ஐந்து பெரும் நோன்புள் (அல்லது) பஞ்சமஹாவிரதம்

 

1.   எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காமை– அகிம்சை (Ahimsa)

2.   உண்மைபேசுதல் – வாய்மை (Satya)

3.   திருடாமை– பிறர் பொருளைக் கவராமை (Asteya)

4.   சொத்துகள் சேர்த்தலை விடுதல் – பற்றுகளிலிருந்து விடுபடல் (Abarigraha)

5.   தன்னடக்கம் - பிரம்மச்சரியம் (Brahamacharya)  (பக்.68)

 

      இவை சமண நோன்புகளாகப் பட்டியலிடப் படுகிறது. யோகாவை இந்து மதக் கொடையாக மாற்றியாகிவிட்டது. பின்வரும் ‘யோகம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்’ எனும் பாடத்தில் கீழ்க்கண்டவை சொல்லப்படுகிறது. இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளைக் காண்க. 

 

இயமம்

 

“மனத்தில் உள்ள விரும்பத்தகாத எண்ணங்களை நீக்குவதற்கான வழிமுறைகளை இயமம் வெளிப்படுத்துகிறது. இது சமூகக் கடமைகளை வலியுறுத்தும் ஐந்து வகையான பிரிவுகளைக் கொண்டது. அவை முறையே,

1.   அஹிம்சை - வன்முறை இல்லாமை

2.   சத்தியம் – உண்மை

3.   அஸ்தேயம் – திருடாமை

4.   பிரம்மச்சரியம் - தன்னடக்கம்

5.   அபரிக்ரஹம் – அதிக பொருள் சேர்க்காமல் மகிழ்ச்சியாக இருத்தல்.  (பக்.199)

 

(அடுத்த கட்டுரையுடன் நிறைவடையும்.)

செவ்வாய், டிசம்பர் 15, 2020

பாடநூல் திருத்தங்கள் மற்றும் நீக்கங்களின் வெறுப்பரசியல்

பாடநூல் திருத்தங்கள் மற்றும் நீக்கங்களின் வெறுப்பரசியல்

 

மு.சிவகுருநாதன்  

 

      புதிய பாடநூல்களில் சில திருத்தங்கள் சுற்றறிக்கைகள் மூலம் விரைவாகச் செய்யப்பட்டன. இதில் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகள் மற்றும் சாதியமைப்புகளின் அழுத்தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளுக்கு பாடநூலில் சிறு இடம் கிடைத்திருந்தது. இன்று  அப்பகுதிகள் முழுவதும் பெரும் வெட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளன. ஆதிக்க மதவாத சக்திகளுக்கு ஆதரவாகப் பாடநூலைத் தயாரிப்பதை கேட்கவோ, தடுக்கவோ இங்கு யாருமில்லை. NCERT பாடநூல்கள் கூட அவ்வப்போது கண்டுகொள்ளப்படுகிறது; இங்கு எவ்வித எதிர்வினையும் இல்லை.

 

    தந்தை பெரியார், சுயமரியாதை இயக்கம் மற்றும் மாற்றுச்சிந்தனைகளின் மீதான காழ்ப்பு, அடையாள அரசியல், இஸ்லாமிய வெறுப்பு ஆகியன பாடநூல் பக்கங்களில் நிறைந்து கிடக்கின்றன. சமூக அக்கறையுள்ள அனைவரும் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். 

 

    SCERT ஒரு சுற்றறிக்கை மூலம் சென்ற ஆண்டு (2019-2020) பாடநூலில் சில திருத்தங்களை அறிவித்திருந்தது. அவற்றுள் சில:

 

7 தமிழ் முதல் பருவம்: காமராசர் ஆட்டுக்குட்டிப் பரிசு பெற்று வரிகட்டித் தேர்தலில் போட்டியிட்ட காதை!

 

7 சமூக அறிவியல் (புவியியல்) முதல் பருவம்: இந்தி ஆட்சி மொழி!

 

8 சமூக அறிவியல் (வரலாறு) முதல் பருவம்: “ஆங்கிலேயர்கள் தங்களது நாட்டிற்கு சென்ற பிறகு இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை நிறுவ வேண்டுமென எண்ணி முஸ்லிம் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் சமய அறிஞர்கள் புரட்சியில் கலந்து கொண்டனர்”.


9 அறிவியல்: கிராஃபைட் வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தாது.

 

10 சமூக அறிவியல் (தொகுதி:1) – வரலாறு மற்றும் 11 வரலாறு (தொகுதி:2): வைகுண்ட சுவாமிகள் படம் மற்றும் சில பகுதிகள்

 

10 சமூக அறிவியல் (தொகுதி:1) – பொருளியல்: “மத்திய காலத்தில் தெற்கு இந்தியாவில் வர்த்தகர்களாக கத்ரிகாஸ், நாகராஸ், மும்முரிந்தாஸ், அய்யோவோலி 500, செட்டீஸ், பிருடாஸ், கோவராஸ் போன்ற பல வர்த்தக குழுவினர் செயல்பட்டனர். தொகாராஸ், கோவாராஸ் போன்ற சில வர்த்தக குழுவினர் ஆலய வளாகத்தில் மட்டுமே சந்தித்து வர்த்தகத்தை மேற்கொண்டனர்”.

 

  10 சமூக அறிவியல் (தொகுதி:2) இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்கை ஒட்டி கீழ்க்கண்ட வரிகளை மட்டும் நீக்கி உத்தரவிட்டனர்.

 

“அதே போன்று இந்து மகா சபா மற்றும் ராஷ்டிரிய சுவயம்  சேவக் சங் (R.S.S) ஆகியன முஸ்லிம்களுக்கு  எதிரான நிலைப்பாட்டை எடுத்தன”. 

 

   10 சமூக அறிவியல் தொகுதி 2, அலகு: 8, ‘தேசியம்: காந்திய காலகட்டம்’ என்ற பாடத்தில் ‘இந்து வகுப்புவாதம், முஸ்லிம்  வகுப்புவாதம் மற்றும் இந்திய  தேசியம்’ என்ற தலைப்பில் கீழ்க்கண்ட பத்தி இடம் பெற்றிருந்தது.

 

    “காங்கிரஸை ஒரு இந்து அமைப்பு என்று  குறைகூறிய முஸ்லிம் லீக், இந்தியாவில்  முஸ்லிம்களின் ஒரேயொரு பிரதிநிதியாக  தாம் மட்டுமே விளங்குவதாக அது தெரிவித்தது. அதே போன்று இந்து மகா சபா மற்றும் ராஷ்டிரிய சுவயம்  சேவக் சங் (R.S.S) ஆகியன முஸ்லிம்களுக்கு  எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் நலன்கள் ஒன்றுக்கொன்று  வேறுபட்டவை மற்றும் எதிரானவை என்று  இந்து மகா சபையும் முஸ்லிம் லீக்கும் கோரின.  ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையின் சில நடவடிக்கைகளான வங்கப் பிரிவினை, தனித்  தொகுதிகள் ஆகியவை மத வேறுபாடுகளைத்  தூண்டி தங்கள் நலன்களைப் பாதுகாக்கும்  செயல்களுக்கு ஊக்கம் கொடுத்தன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ரஹ்மத் அலி 1933இல்  பஞ்சாப், காஷ்மீர், வடமேற்கு எல்லை மாகாணம்,  சிந்து மற்றும் பலுச்சிஸ்தான் ஆகிய மாகாணங்களை  இணைத்து பாகிஸ்தானை உருவாக்கும்  எண்ணத்தை வெளிப்படுத்தினார். இந்து-முஸ்லிம்  ஒற்றுமையை வலியுறுத்தி வந்த முஹம்மது  இக்பால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு  முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார்.  இந்திய தேசியத்தை வலியுறுத்திவந்த காந்தியடிகள்,  நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் இதர தலைவர்கள் நாட்டை இரண்டாகப் பிரிக்கும் கருத்துக்கு எதிர்ப்பு  தெரிவித்தனர்”. (பக்.50, பக்க எண்கள் பழைய பாடநூலின் படி…)

 

    இந்த நீக்கம் யாருக்கானது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இவ்வாண்டு திருந்திய பதிப்பில் (2020) இப்பத்தி முழுவதையும் நீக்கியுள்ளனர். மேலும் பெரியார் பற்றிய பாடப்பகுதிகள் அதிகமாக நீக்கப்பட்டுள்ளன. காரணத்தை விளக்கவும் வேண்டுமோ! பெரியார், அண்ணா பெயரைச் சொல்லி ஆள்வோரின் அரசியலிது.

 

    வைகுண்ட சுவாமிகள் பற்றிய பகுதிகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணம் தெரியவில்லை. 10 சமூக அறிவியல் அலகு 9 இல் பெரியார் பற்றிய பகுதிகள் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம்? அலகு 10 இலும் பெரியார் இருக்கிறார் என்று காரணம் சொல்ல இயலாது. அங்கும் பல்வேறு பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

 

10 சமூக அறிவியல் வரலாறு அலகு: 9, ‘தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்’ பாடத்தில் வெட்டுண்ட பகுதிகள்:

 

தமிழ்நாட்டின் தொடக்ககால தேசிய அதிர்வுகள்

 

 

   “பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சென்னையில் உருவான, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, கல்விகற்ற நபர்களைக் கொண்டகுழுக்கள் பொது விஷயங்களில் அக்கறை செலுத்தத் தொடங்கின. இந்தியாவின் ஏனைய பகுதிகளில் நடந்ததைப் போலவே இவர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க சென்னை வாசிகள் சங்கம், சென்னை மகாஜன சங்கம் எனும் அரசியல் சார்ந்த அமைப்புகளை ஏற்படுத்தினர்”. (பக்.61)

 

சுதேசி நீராவி கப்பல் நிறுவனம்

 

“இருந்த போதிலும் ஐரோப்பியக் கம்பெனியின் முறையற்ற கழுத்தறுப்பு போட்டியினாலும் அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான போக்கினாலும் வ.உ.சி. யின் முயற்சிகள்  தோல்வியில் முடிந்தன”. (பக்.64)

 

“சுதேசி இயக்கத் தலைவர்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட கொடூரமான அடக்குமுறை தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தை ஓர் முடிவுக்குக் கொண்டு வந்தது”. (பக்.65)

 

தமிழ்நாட்டில் புரட்சிகர தேசியவாதிகளின்  செயல்பாடுகள்

 

   “ஏனைய இடங்களில் நடந்ததைப் போலவே சுதேசி இயக்கம் இளைஞர்களுக்கு  எழுச்சியூட்டியது. தலைவர்கள் இல்லாத சூழலில்  அவர்கள் புரட்சிகரப் பாதையை நோக்கித்  திரும்பினர்”. (பக்.65)

 

சில புரட்சிவாத செய்தித்தாள்களும் 

 

“பாரதியின் பாடல்களும் அரசுக்கு எதிரானதெனத்  V.V. சுப்பிரமணியனார் அரவிந்தகோஷ் தடைசெய்யப்பட்டன. 1910இல் அரவிந்த கோஷ்,  V.V. சுப்ரமணியனார் ஆகியோரின் வருகைக்குப் பின்னர் பாண்டிச்சேரியில் புரட்சிகர  நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. இத்தகைய  நடவடிக்கைகள் முதல் உலகப்போர் வெடிக்கின்றவரை தொடர்ந்தன”. (பக்.65)

 

ஆஷ் கொலை

 

“மக்களிடமிருந்து பிரிந்துநின்ற இந்த இளம்  புரட்சியாளர்கள் தேசபக்தி உடையவர்களாக  இருந்தபோதிலும், மக்களை ஊக்கப்படுத்தவும்  அணிதிரட்டவும் தவறிவிட்டனர்”. (பக்.65)

 

அன்னிபெசன்ட் அம்மையாரும் தன்னாட்சி இயக்கமும்

 

  “இதன் பின்னரும் கூடமேலும் சில சீர்திருத்தங்களைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் ஆங்கிலேயரின் போர் முயற்சிகளுக்கு ஆதரவு நல்கியது”. (பக்.65)

 

    “பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் இவ்வியக்கத்தில் சேர்ந்து தன்னாட்சி இயக்க வகுப்புகளில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. அம்மாணவர்கள் சாரணர் இயக்கக் குழுக்களாகவும் (Scouts) தொண்டர் குழுக்களாகவும் மாற்றப்பட்டனர். அன்னிபெசன்ட்டும் அவருடன் பணியாற்றியோரும் பொதுமேடைகளில் பேசுவதும் எந்த ஒரு அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. 1917இல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அன்னிபெசன்ட் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தன்னாட்சி இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்த B.P. வாடியா போன்றோர் தொழிற்சங்கங்களை உருவாக்கி தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டுவதில் முக்கியப் பங்காற்றினர். இத்தலைவர்கள் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இடங்களிலுள்ள நிலைகளை மேம்படுத்தியதோடல்லாமல், தொழிலாளர்களை விடுதலைப் போராட்டத்தின் பகுதியாக மாற்றுவதிலும் வெற்றி பெற்றனர். இருந்தபோதிலும் காந்தியடிகள் தேசியத் தலைவராக எழுச்சி பெற்ற நிலையில் அன்னிபெசன்டும் தன்னாட்சி இயக்கங்களும் ஒளிமங்கின”. (பக்.66)

 

பிராமணர் அல்லாதோர் இயக்கமும் காங்கிரசிற்கு சவாலும்

 

    “இதே சமயத்தில் சென்னை மாகாணத்தில்  கல்வி வேகமாக வளர்ந்தது. கல்வியறிவு பெற்ற பிராமணர் அல்லாதோரின் எண்ணிக்கை அதிகமானது. மேலே விவாதிக்கப்பட்ட தீவிர  அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகள்  படித்த பிராமணரல்லாதவர்களை அரசியலில்  ஈடுபடவைத்தது. பிராமணர்களின் மேலாதிக்கத்தில் இருந்த அரசுப் பணிகளிலும்,  தேர்வு செய்யப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதித்துவத்திலும், அரசு வாய்ப்புகளில்  நிலவும் சமநிலையற்ற தன்மையும் சாதியப் பாகுபாடும் இருப்பது குறித்து அவர்கள்  பிரச்சனைகளைக் கிளப்பினர். மேலும்  காங்கிரசிலும் பிராமணர்களே மிகப்பெரும்  எண்ணிக்கையில் இருந்தனர்”. (பக்.66)

 

“மேலும் இக்காலப் பகுதியைச் சேர்ந்த இரு முக்கிய பிராமணர் அல்லாதோரின் தலைவர்களான T.M. நாயர்,  P. தியாகராயர் ஆகிய இருவரிடையே நிலவிய  கருத்து வேற்றுமையை சரிசெய்து இணக்கத்தை ஏற்படுத்தினார். இவ்விருவருமே தொடக்கத்தில்  காங்கிரசில் அங்கம் வகித்தவர்களே. காங்கிரஸ்  அமைப்பினுள் பிராமணரல்லாதவர்கள்  எவ்வாறு ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதைப் பார்த்துத் தெளிவுபெற்றவர்களாவர்”. (பக்.66)

 

“அவர்கள் ஆங்கிலத்தில்  ஜஸ்டிஸ் (Justice – நீதி) தமிழில் திராவிடன், 

தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா எனும் மூன்று  செய்தித்தாள்களையும் தொடங்கினர். விரைவில்  இவ்வமைப்பு நடத்திய ஆங்கில நாளிதழின்

பெயரான ஜஸ்டிஸ் என்பதே அவ்வமைப்பின் பெயராகி ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) என  அழைக்கப்படலாயிற்று. அமைப்புக்கான  கிளைகளை உருவாக்கும் முகமாக மாகாணம்  முழுவதிலும் ஜஸ்டிஸ் கட்சி பல மாநாடுகளை  நடத்தியது”. (பக்.66)

 

இடஒதுக்கீட்டுக்கான கோரிக்கை (முழுமையும்)

 

     “நீதிக்கட்சி தனது நோக்கங்களை கோடிட்டுக் காட்டி பிராமணரல்லாதோரின் அறிக்கையை (Non- Brahmin Manifests) வெளியிட்டது அவை: அரசுப் பணியிடங்களில் பிராமணரல்லாதோர்களுக்கு  இடஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவ அமைப்புகளில்  இடஒதுக்கீடு என்பனவாகும். இவ்வமைப்பு  தன்னாட்சி இயக்கத்தைப் பிராமணர்களின் இயக்கம் என எதிர்த்தது. தன்னாட்சி இயக்கம்  பிராமணர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக் கூடுமென அஞ்சியது. இது காங்கிரசையும்  பிராமணர்களின் கட்சியென விமர்சித்தது.  பாராளுமன்ற அரசியல் சீர்திருத்தங்கள் குறித்து 1917இல் மாண்டேகுவின் அறிவிப்பைத்  தொடர்ந்து தமிழ்நாட்டில் அரசியல் விவாதங்கள்  தீவிரமடைந்தன. நீதிக்கட்சி வகுப்புவாத  பிரதிநிதித்துவத்தைக் கோரியது (சமூகத்திலுள்ள பல்வேறு பிரிவினர்களுக்கும் பிரதிநிதித்துவம்).  சென்னை அரசாங்கம் நீதிக் கட்சியை ஆதரித்தது.  ஆங்கிலேயரின் ஆட்சி பிராமணர் அல்லாதோரின் முன்னேற்றத்திற்குத் துணைபுரியுமென  நீதிக்கட்சி நம்பியது. 1919ஆம் ஆண்டுச் சட்டம்  பிராமணரல்லாதோர்களுக்குத் தேர்தலில்  இடஒதுக்கீடு வழங்கியது. இந்நடவடிக்கையைக் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்தது ஆனால்  நீதிக்கட்சியால் இது வரவேற்கப்பட்டது”. (பக்.67)

 

நீதிக்கட்சி அமைச்சரவை

 

“பிராமணரல்லாதோரின் நலனுக்காக நீதிக் கட்சி  பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது.  அவை வருமாறு: உள்ளாட்சித்துறைகளிலும்  கல்விநிலையங்களிலும் வேலைவாய்ப்பில்  இடஒதுக்கீடு செய்யப்பட்டது. பணியாளர் தேர்வுக்குழு நிறுவப்பெற்றது. இது பின்னர் பொதுப் பணியாளர் தேர்வாணையமானது. இந்து  சமய அறநிலையத்துறை சட்டமும் சென்னை அரசு தொழில் உதவிச் சட்டமும் இயற்றப்பட்டன.  தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. ஏழை எளிய  மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காகப் புறம்போக்கு  நிலங்களை பட்டாசெய்து வழங்கப்பட்டன.  வசதியற்ற மக்கள் பிரிவினரிடையே கல்வி  கற்பதை ஊக்குவிப்பதற்காக கல்வி கட்டணச்  சலுகை, கல்வி உதவித்தொகை வழங்குதல்,  மதிய உணவுத் திட்டம் ஆகிய நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டன”. (பக்.67)

 

ஜார்ஜ் ஜோசப்

 

“தனது நீண்ட பொது வாழ்வின் போது, அவர் கேரளாவில்  வைக்கம் சத்தியாகிரகத்தை வழிநடத்தினார்,  ஏனெனில் இது இந்தியாவின் அனைத்து  குடிமக்களுக்கும் சமூக உரிமைகள்  தொடர்பான பிரச்சினையாக அவர் கருதினார்.  தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரைச் சமூகங்களின் பாதுகாவலராக விளங்கினார்”. (பக்.68)

 

 

  “மதுரை தொழிலாளர் சங்கம் (Madurai Labour Union) (1918) எனும் அமைப்பை ஏற்படுத்துவதற்கு ஹார்வி மில் தொழிலாளர்களுக்கு உதவினார். இச்சங்கத்தின் தொடக்ககாலப் போராட்டங்கள் நூற்பாலைத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வையும் வேலைநேரக் குறைப்பையும் பெற்றுத்தந்தன”. (பக்.68)

 

 ஈ.வெ.ரா வின் ஆக்கபூர்வச் செயல்பாடுகள் (முழுமையும்)

 

    “இக்காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசியலில்  ஈ.வெ.ரா முக்கியப் பங்குவகித்தார். கதரின் பயன்பாட்டை மேம்படுத்தி அதன் விற்பனையை அதிகரிக்கத் தீவிரமாகச் செயல்பட்டார்.  கள்ளுண்பதற்கு தனது எதிர்ப்பைக் காட்டும்  வகையில் தனக்குச் சொந்தமான தோப்பிலிருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி  வீழ்த்தினார். திருவாங்கூர் அரசின் ஆட்சியிலிருந்த வைக்கம் எனும் ஊரில் நடைபெற்ற கோவில்  நுழைவுக்கான சத்தியாகிரகத்திலும்  முக்கியப்பங்கு வகித்தார். கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள் ஒடுக்கப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்கள் நடமாடக்கூட முடியாத அல்லது உயர்சாதி மக்களிடமிருந்து குறிப்பிட்ட தூரம் விலகியே நின்றாக வேண்டிய காலகட்டமது. கேரளாவின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஈ.வெ.ரா அங்கு சென்று அவ்வியக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டினார். அவர் கைது செய்யப்பட்டு  ஒருமாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.  விடுதலை செய்யப்பட்ட பின்னரும் வைக்கத்தை விட்டு வெளியேறமறுத்தார். எழுச்சியூட்டும் விதத்தில்  உரைகள் நிகழ்த்தியதற்காக இரண்டாவது  முறையாகக் கைது செய்யப்பட்டு ஆறுமாதகால  கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. விடுதலையாகி ஈரோடு திரும்பியபோது கதர் விற்பனையை முன்னேற்றுவது குறித்து  பேசியதற்காகக் கைது செய்யப்பட்டார். 1925 ஜுன் மாதத்தில் வைக்கத்தில் கோவிலைச் சுற்றியிருந்த  வீதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.  சாதிப் பாகுபாட்டுக்கு எதிராகவும் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அவர் செய்த பங்களிப்பிற்காக வைக்கம் வீரர் (Vaikom 

Hero) என பாராட்டப்பட்டார்”. (பக்.69)

 

சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனை (முழுமையும்)

 

    “ஆயினும் இக்காலகட்டத்தில் ஈ.வெ.ரா  காங்கிரசின் மீது மிகவும் அதிருப்தி  கொண்டிருந்தார். அது பிராமணர்களின் நலன்களை மட்டுமே மேம்படுத்துவதாக  உணர்ந்தார். சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனையும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம்  தொடர்பாக காங்கிரசுக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடும் ஈ.வெ.ராவை காங்கிரசை விட்டு  வெளியேற வைத்தன. 

 

     தேசியக் கல்வியை முன்னெடுக்கும் பொருட்டு  ஒரு குருகுலமானது V.V. சுப்பிரமணியனாரால்  சேரன்மாதேவியில் நிறுவப்பெற்றது. இது காங்கிரசிடமிருந்து நிதியினைப் பெற்றது.  இருந்தபோதிலும் இப்பள்ளியில் சாதியின் அடிப்படையில் மாணவர்கள் பாகுபடுத்தப்பட்டனர்.  பிராமண மாணவர்களுக்கும் பிராமணர் அல்லாத  மாணவர்களுக்கும் தனித்தனியே உணவு  பரிமாறப்பட்டது. உணவிலும் வேறுபாடுகள்  இருந்தன. இது ஈ.வெ.ரா வின் கவனத்திற்கு  கொண்டுவரப்பட்டபோது அவர் மற்றொரு தலைவரான P. வரதராஜுலுவுடன் இணைந்து  இப்பழக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கி கடுமையாக  விமர்சித்தார். 

 

     1925 நவம்பர் 21இல் காஞ்சிபுரத்தில்  நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில்  அவர் சட்டசபையில் பிராமணரல்லாதோருக்கு  பிரதிநிதித்துவம் வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்தார். இதன் பொருட்டு  1920 முதல் அவர் மேற்கொண்ட முயற்சிகளில்  தோல்வியுற்றார். இவர் முன்மொழிந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதால் வேறு சில  பிராமணரல்லாத தலைவர்களுடன் மாநாட்டை விட்டு வெளியேறினார். வெளிவந்தவர்கள்  தனியே சந்தித்தனர். விரைவில் காங்கிரசிலிருந்து  விலகிய ஈ.வெ.ரா சுயமரியாதை இயக்கத்தைத்  தொடங்கினார்”. (பக்.69)

 

 

நீல் சிலை அகற்றும் ராட்டம் (1927)

 

“சென்னை மாகாணத்தின் பலபகுதிகளிலிருந்து வந்திருந்த போராட்டக்காரர்களுக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த S.N. சோமையாஜுலு தலைமையேற்றார். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அச்சமயம் சென்னைக்கு வந்த காந்தியடிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்”. (பக்.70)

 

சைமன் குழுவைப் புறக்கணித்தல்

 

  “எதிர்ப்புகளை ஒடுக்க காவல்துறை படைப்பிரயோகம் செய்தது”. (பக்.70)

 

 

சட்ட மறுப்பு இயக்கம்

 

பூரண சுயராஜ்ஜியத்தை நோக்கி

 

  “1920 களில் தமிழ்நாட்டில் காந்தியடிகள் தலைமையிலான காங்கிரஸ் விரிந்துபட்ட அடித்தளத்தைக் கொண்ட அமைப்பாக மாறிக் கொண்டிருந்தது”. (பக்.70)

 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்

 

“1930 மார்ச் 12இல் தண்டியை நோக்கி உப்பு  சத்தியாகிரக யாத்திரையைத் துவக்கினார்.  சட்டமறுப்பு இயக்கமானது மாணவர்கள், கடைகள் வைத்திருப்போர், தொழிலாளர், பெண்கள் ஆகியோரின் பங்கேற்புடன் மக்கள் பெருவாரியான எண்ணிக்கையில் கலந்து  கொண்ட போராட்டமாகும். கிராமப்புறங்களிலும்  நகரங்களிலும் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள்,  கடையடைப்பு ஆகியனவும் சுதேசி நாடகங்களை மேடையேற்றுவது சுதேசிப் பாடல்கள் பாடுவது  ஆகியனவும் அன்றாட நிகழ்வுகள் ஆயின.  சென்னை நகரில் கடைகளுக்கு முன்பாக மறியல்கள் நடத்தப்பட்டதுடன் அந்நியப் பண்டங்கள் புறக்கணிக்கப்பட்டன”. (பக்.71) 

 

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

 

   “துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்தபோது ராஜாஜியும் சத்தியமூர்த்தியும் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இவ்வியக்கம் பரந்துபட்ட அளவில் நடைபெற்றது. மேலும் அஞ்சல் அலுவலகங்களை தீக்கிரையாக்குவது, தந்திக்கம்பங்களின் கம்பிகளை வெட்டி விடுவது, ரயில் போக்குவரத்திற்கு ஊறு விளைவிப்பது போன்ற வன்முறை நிகழ்வுகளும் அரங்கேறின”. (பக்.73)

 

“வேலூர் மற்றும் பணப்பாக்கம் ஆகிய ஊர்களில் தந்தி, தொலைபேசிக் கம்பிகள் வெட்டப்பட்டதுடன் பொதுக் கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இப்போராட்டத்தில் தீவிரப் பங்கேற்றனர். சூலூர் விமான நிலையம் தாக்குதலுக்குள்ளானது, கோயம்புத்தூரில் ரயில்கள் தடம்புரளச் செய்யப்பட்டன. மதுரையில் காங்கிரஸ் தொண்டர்கள் இராணுவத்துடன் மோதினர். ராஜபாளையம், காரைக்குடி மற்றும் தேவகோட்டை ஆகிய இடங்களில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது”. (பக்.73)

 

     இவையெல்லாம் நீக்கப்பட்ட நிலையில் பாடச்சுருக்கம், “ஒத்துழையாமை இயக்கம், காங்கிரசோடு ஈ.வெ.ரா வின் முரண்பாடுகள், தேசிய அளவில்  சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம், தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் ஆகியவை கூர்ந்தாராயப்பட்டுள்ளன”, (பக்.73) என்று சொல்லிக்கொண்டு நிற்கிறது!

 

10 சமூக அறிவியல் – வரலாறு: அலகு: 10, ‘தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்’ பாடத்தில் நீக்கப்பட்ட சில பகுதிகள்:

 

“இந்தியாவின் உள்நாட்டு மரபுகள், நாகரிகம் பழமையானவைகளாகக் கருதப்பட்டன. இந்தியச் சமூகமானது பழமையானதென்றும் அதில் மனிதர்கள் சாதி, பாலினம், மொழி, நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுவதாகவும் சித்தரிக்கப்பட்டது”. (பக்.77)

 

“மொழியியலாளர்களும், வரலாற்று அறிஞர்களும் தமிழ் அறிஞர்களும் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையை அங்கீகரித்துள்ளனர். அவை தமிழ் நிலப்பகுதிக்குள் ஆரியர்கள் வருவதற்கு முன்பாகவே ஒரு தனியான, சுதந்திரமான இருப்பைப் பெற்றிருந்தது”. (பக்.78)

 

   “தமிழ் மறுமலர்ச்சி பிராமணியத்தின் பண்பாட்டு மேலாதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. இப்போக்குகள் கலைகளிலும் இலக்கியங்களிலும் சமயத்திலும் பிரதிபலித்தது”. (பக்.79)

 

“இத்துடன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்மொழி இயக்கங்களான தனித்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ் இசை இயக்கம் போன்றவைகள் சமஸ்கிருதத்தின் செல்வாக்கிற்கு ஆட்படாத தூய தமிழை உருவாக்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தின”. (பக்.79)

 

‘தனித்தமிழ் இயக்கம்’  என்ற தலைப்பில் 

 

 “இவ்வியக்கம் பிற்காலத்தில் தமிழ் சமூகத்திலிருந்த பிராமணிய மற்றும் சமஸ்கிருத மரபுகளை எதிர்கொண்ட சமூக இயக்கங்களுக்கு வழிவகுத்தது”. (பக்.80)

 

திராவிட இயக்கத்தின் எழுச்சி

 

    “இந்தியாவில் பிராமணர்கள் தங்களது பிறப்பின் அடிப்படையில் சிறந்த சமூக அந்தஸ்தை அனுபவித்தனர். மேலும் மிகப்பெரும் சமூக முன்னுரிமைகளையும் பெற்றிருந்தனர். சென்னை மாகாணத்தில் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் குறிப்பாக அரசியல், கல்வி மற்றும் அரசாங்க வேலை வாய்ப்புகளிலும் அவர்களே ஆதிக்கம் செலுத்தினர். 1911ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னை மாகாண மக்கள் தொகையில் பிராமணர்களின் எண்ணிக்கை 3 விழுக்காட்டிற்கு சற்றே அதிகமாயும் பிராமணரல்லாதோரின் எண்ணிக்கை 90 விழுக்காடெனவும் காட்டியது. மேலும் 1901 முதல் 1911 வரையிலான பத்தாண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த பிராமணர் எண்ணிக்கை 4074 ஆகவும் அதே பிராமணமரல்லாதோரின் எண்ணிகை 1035 ஆகவும் இருந்தது. அன்று எவ்வாறு மக்கள்தொகை வகைப்படுத்தப்பட்டிருந்ததோ அதனடிப்படையில் ஏனைய குழுக்களைச் சார்ந்த 306 இந்தியக் கிறித்தவர்களையும் 69 முகமதியர்களையும் 225 ஐரோப்பிய மற்றும் யூரேசியர்களையும் உள்ளடக்கியிருந்தது.

    இத்தகைய சூழலில்…” (பக்.80)

 

தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (நீதிக்கட்சி)

 

“முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நிலையில் ஆங்கில அரசாங்கம்  போருக்குப் பின்னர் இந்தியாவில் பிரதிநிதித்துவ அமைப்புகளை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலனை செய்து  கொண்டிருந்தது. அப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் பிராமணர்களின் அரசியல் அதிகாரத்தை மேலும் வலுவடையச் செய்யும் என அஞ்சிய கல்வி கற்ற பிராமணர் அல்லாதவர்கள் தங்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டிக்க கொள்ள முடிவு செய்தனர்”. (பக்.81)

 

“பிராமணர் அல்லாதோர் அறிக்கையில் “சென்னை மாகாணத்திலுள்ள 4 கோடியே 1½ லட்சம் மக்களில் 4 கோடிகளுக்கு குறைவில்லாதவர்கள் பிராமணர் அல்லாதவர்களே, சென்னை மாகாணத்தின் அரசியல் சூழல் அவர்களை தங்களுக்கு உரிமையுள்ள பங்கினை எடுத்துக் கொள்ள இடமளிக்கவில்லை” என சுட்டிக்காட்டியது. மேலும் “ஆங்கிலஅரசின் உண்மையான நீதி மேலும் வாய்ப்புகளுக்கான சமத்துவம்” எனும் ஆங்கிலேயக் கொள்கைகளின் படி நடைபெறும் அரசே இந்தியர்களின் நலன்களுக்கு உகந்தது என வாதிட்டு “நாங்கள் ஆங்கிலேய அரசை ஆழமாக நேசிக்கிறோம் விசுவாதத்துடன் பற்றுக் கொண்டுள்ளோம்” என்று அறிவித்தது”. (பக்.81)

 

திட்டங்களும் செயல்பாடுகளும் 

 

“தமிழ்நாட்டினுடைய சமூகநீதி மரபுத் தொடர்ச்சியானது தனது இருப்புக்கு, நீதிக்கட்சி உருவாகி வளர்ந்து ஆட்சியிலிருந்த ஆண்டுகளுக்குக் கடமைப்பட்டுள்ளது”. (பக்.81)

 

“தமிழ்நாடு பெரும் எண்ணிக்கையிலான கோவில்களைக் கொண்டுள்ளது, அவை பெரும் செல்வ வளத்தைப் பெற்றிருந்தன.  பொதுவாக இச்சொத்துக்கள் அனைத்தும் சமூகத்தின் உயர்சாதியினரின் முற்றுரிமையில் சுரண்டப்பட்டன. மேலும் இது பொதுச் சொத்துக்கள் தவறாக நிர்வகிக்கப்படுவதற்கு வழி கோலியது”. (பக்.82)

 

‘சுயமரியாதை இயக்கம்’ தலைப்பிலிருந்து…

 

“சுயமரியாதை இயக்கம் (Self Respect Movement) அன்று நிலவிய சமூக, அரசியல் மற்றும்  பொருளாதார உறவுகளில் இருந்த சீர்கேடுகளை விமர்சனம் செய்ததோடு தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மேம்பாட்டிற்கான ஒரு திட்டத்தையும் அறிமுகம் செய்தது. சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் மீது அக்கறை கொண்ட இவ்வியக்கம் பிராமணர்களையும் அவர்களின் பண்பாட்டு மேலாதிக்கத்தையும் விமர்சனம் செய்தது”. (பக்.82)

 

“பெண்களை அதிகாரம் உள்ளவர்களாக மாற்றுவதற்கு இயக்கம் நடத்திய சுயமரியாதை இயக்கத்தினர் சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளைக் கேள்விகளுக்கு உட்படுத்தினர்”. (பக்.82)

 

“சுயமரியாதை இயக்கச்  சொற்பொழிவுகளின் மையப் பொருளாக இருந்தது 'இனம்' ஆகும். திராவிட மக்களுடைய நீண்டகால வரலாற்றின்  போக்கில் திராவிட மக்கள் ஆரிய பிராமணர்களால் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டதாக அச்சொற்பொழிவுகளில் விவாதிக்கப்பட்டன”. (பக்.82)

 

“இந்து சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இஸ்லாத்தில் இணைவதன் மூலம் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடைகிறார்கள் என்று கருதியது. முஸ்லிம் உயர்குடியினர் தமிழ்நாட்டு முஸ்லிம்களை திராவிடர்களாகவே கருதினர். இருந்தபோதிலும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது  போன்ற சில பழக்கங்களை பெரியார் விமர்சனம் செய்யத் தயங்கவில்லை. இஸ்லாம் சமூகத்தில் சீர்திருத்த முன்முயற்சிகள் மேற்கொண்ட துருக்கியைச் சேர்ந்த முஸ்தபா கமால் பாட்சா, ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த அமானுல்லா ஆகியோரை திராவிட முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டுமென பெரியார் கூறினார்”. (பக்.82&83)

 

பெரியார் ஈ.வெ.ரா.

 

“1917 க்குப் பின்னர் பிராமணரல்லாத நீதிக்கட்சியின் எழுச்சிக்குப் பின்னர் சி. ராஜாஜியின் முன் முயற்சியினால் பெரியார் மற்றும் பி. வரதராஜுலு போன்ற பிராமணரல்லாத தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டனர். ஒத்துழையாமை இயக்கத்திற்கு (1920-1922) ஆதரவாகத் தான் வகித்து வந்த அனைத்து அரசுப்  பொறுப்புகளையும் அவர் ராஜினாமா செய்தார். லாபம் தரும் தனது வணிகத்தைக் கைவிட்டு செயலார்வமிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஆனார். காதிக்கு துணைநின்ற அவர் தமிழகத்தின்  வீதிகளிலே கதர் விற்பனை செய்தார். மது விலக்கு இயக்கத்திற்கு ஆதரவாகத் தனது  தோப்பிலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலராகவும் தலைவராகவும்  பொறுப்பு வகித்தார்”. (பக்.83)

 

சட்டசபை போன்ற பிரதிநித்துவ அமைப்புகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்பதில் பெரியார்  முனைப்புடன் இருந்தார். இது  தொடர்பான ஒரு தீர்மானத்தை 1925இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் குழுவின் வருடாந்திர மாநாட்டில் நிறைவேற்ற முயற்சி செய்து  தோல்வியடைந்தார். இது  போன்ற பிரச்சனைகளால் 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறினார். அந்த ஏமாற்றத்தைத்  தொடர்ந்து …” (பக்.84)

 

“காலவோட்டத்தின் ஊடாகப் பெரியார் பல நாடுகளுக்குச் சென்றார். அந்நாடுகளைச் சேர்ந்த அறிவார்ந்த மக்களோடு உரையாடினார். சிங்கப்பூர், மலேசியா (1929-30, 1954) எகிப்து, சோவியத் ரஷ்ய குடியரசு (தற்போதைய ரஷ்யா), கிரீஸ், துருக்கி, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்த்துகல் (1931-1932) மற்றும் பர்மா (1954இல் நடைபெற்ற புத்தரின் 2500 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளச் சென்றார்) ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார். சோவியத் ரஷ்யாவிலும் ஐரோப்பாவிலும் அவர் பெற்ற பயண அனுபவங்கள் அவரை சமதர்மக் கருத்துக்களின்பால் நாட்டம் கொள்ள வைத்தன”. (பக்.84)

 

பெரியாரின் இந்தி எதிர்ப்பு நிலைப்பாடு (முழுமையும்)

 

      “தென்னிந்தியாவிலுள்ள சாதிமுறையானது வடஇந்தியப் பிராமணர்களின் வருகையோடு தொடர்புடையது என பெரியார் வலியுறுத்தினார். பண்டையத் தமிழ்ச் சமூகம் திணைகளை (நிலப்பகுதிகள்) அடிப்படையாகக் கொண்ட வேறுவகைப்பட்ட அடுக்கமைவைக் கொண்டிருந்தாக அவர் கூறினார். அம்முறை சுற்றுச்சூழல், வாழ்வாதாரத்திற்கான வழிகள், மக்கள் மேற்கொண்ட தொழில் ஆகியவற்றால் தீர்மானிக்கப்பட்டிருந்தது என்றும் கூறினார். வடஇந்திய எதிர்ப்பானது பெரியாரை இந்தி எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொள்ள வைத்தது”. (பக்.84)

 

சமயம் குறித்து பெரியார் (முழுவதும்)

 

   முன்னேற்றமும் நீதியும் வழங்கப்பட வேண்டுமாயின் சமயம் ஒழிக்கப்பட வேண்டியதன் தேவையைப் பெரியாரின் அனுபவங்கள் அவருக்குக் கற்றுக்கொடுத்தன. ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த நடைமுறைகளான, நம்பிக்கை பண்பாடு, மரபு போன்றவற்றை கட்டுடைப்பதற்குப் பெரியார் நாத்திகவாதத்தை (கடவுள் மறுப்பு) முன் வைத்தார். சமயத்தின் இடத்தில் பகுத்தறிவு வைக்கப்பட வேண்டுமென்றார். ‘‘சமயம் என்றால் நீங்கள் மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று  பொருள்” என உறுதிபடக் கூறினார். பெரியார் தன் வாழ்நாள் முழுவதையும் தான் நிறுவிய சிந்தனையாளர்கள் அல்லது பகுத்தறிவாளர்கள் அமைப்புகள் மூலமாக மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பரப்புரை செய்வதில் செலவழித்தார். கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர்கள் முறையை அவர் எதிர்த்தார். சாதி அடிப்படையில் இல்லாமல், முறையான சமய அறிவைப் பெற்றுள்ள தகுதியுடைய தனி நபர்களும் அர்ச்சகர்ஆகலாம் என அவர் வாதிட்டார். பிராமண அர்ச்சகர்களையும் வேதச் சடங்குகளையும் புறக்கணிக்கும்படி அவர் மக்களை ஊக்குவித்தார். சடங்குகளற்ற சாதிமறுப்பு, சுயமரியாதை திருமணங்களைப் பரிந்துரைத்தார். (பக்.84&85)

 

பெரியார், ஒரு பெண்ணியவாதி

 

“சொத்துக்கள், பாதுகாவலர்களாக இருத்தல், மற்றும் தத்தெடுத்தல் ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வேண்டுமென்றார். குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை ஆகியவற்றை வலுவாக ஆதரித்த அவர் தாய்மை என்பது பெண்ணுக்கு பெருஞ்சுமையாக உள்ளது என்றார்”. (பக்.85)

 

‘இரட்டைமலை சீனிவாசன்’ குறித்த பகுதியில்…

 

“ஒடுக்கப்பட்ட  மக்களோடு  தொடர்புடைய கேள்விகள், பிரச்சனைகள் குறித்து இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் நீதிக்கட்சி தலைவர்களுடன்  தொடர்ந்து விவாதித்தார். தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளைச் சந்தித்த இரட்டைமலை சீனிவாசன் அவருடன் நெருக்கமானார். 1923இல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரான அவர் நீதிக்கட்சியில் தனது செல்வாக்கினை ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தமக்களின் உரிமைகளையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார்”. (பக்.85)

 

எம்.சி.ராஜா

 

“பின்னாளில் அவர் நீதிக்கட்சியிலிருந்து விலகினார். தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும் எனக் கோரிய அவர் பொது நீர்நிலைகள், பாதைகள் முதல் இடுகாடுகள் வரைப் பயன்படுத்தும் உரிமை ஒடுக்கப்பட்ட பிரவுகளைச் சேர்ந்தோருக்கும் வேண்டுமெனக் கோரி பல பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தினார். மேலும் ஆதிதிராவிடர், ஆதிஆந்திரர் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தார்”. (பக்.86)

 

“தொடக்கத்தில் தனித் தேர்தல்  தொகுதி வேண்டுமெனக் கோரிய அவர் பூனா உடன்படிக்கைக்குப் பின்னர் அந்நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டு கூட்டுத்தொகுதி முறையைஆதரித்தார்”. (பக்.86)

 

தமிழ்நாட்டில் தொழிலாளர் இயக்கங்கள் 

 

  “இவைகளைத் தவிர தொழில் முதலாளிகளுக்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருப்பது  போல தொழிலாளர்களுக்கும் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டுமெனப் பிரதிநிதிகள்  கோரினர்”. (பக்.86)

 

ந்திய விடுதலைக்கு முன்பு மொழிப் போராட்டம்

 

“பிராமணியத் தத்துவத்தைப் பரப்புவதற்கும் அதன்மூலம் சாதிப் படிநிலைகளையும், பாலின சமத்துவமின்மையையும் பாதுகாப்பதற்குமான வாகனமே சமஸ்கிருதம் எனஅவர்கள் கருதினர். போராட்டத்தின்போது பெருவாரியான மக்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்களும், பேரணிகளும், உண்ணாவிரதங்களும் அரங்கேறின. பல்லாயிரக்கணக்கான மக்கள் இப்போராட்டங்களில் பங்கேற்றனர்”. (பக்.87)

 

  அயோத்திதாசர், அய்யங்காளி, நாராயண குரு, ஜோதிபா புலே, சர் சையது அகமதுகான், அலிகார் இயக்கம், தியோபந்த் இயக்கம் ஆகிய பகுதிகள் நிறைய வெட்டப்பட்டுள்ளன (அலகு: 5. 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கம்). பிறபகுதிகள், பெருமை பேசுதல்களில் எவ்விதக் கத்தரியும் வைக்கவில்லை.

 

    நீக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றைக் காண்போம்:

 

ஜோதிபா புலே: “முக்கியமாக அவர் பிராமண  எதிர்ப்பியக்கத்தின் தொடக்ககாலத் தலைவரென்றே அறியப்படுகிறார்”. (பக்.81)

 

   “மேற்குறிப்பிடப்பட்டுள்ள சீர்திருத்தவாதிகள் மேல்சாதியினர்க்கிடையேப் பணியாற்றிய அதேவேளையில் ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்ட  மக்களின், பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார். அவருடைய புத்தகமான குலாம்கிரி  (அடிமைத்தனம்) ஒரு முக்கிய நூலாகும். அந்நூல்  சாதிய ஏற்றதாழ்வுகளைக் கண்டனம் செய்தது”. (பக்.79)

 

   “தன்னுடைய சமகால தேசியவாதிகளைப் போலல்லாமல்  பூலே ஆங்கிலேய ஆட்சியையும் சமயப்பரப்பாளர்களின் செயல்பாடுகளையும் ஆதரித்தார். அவை ஒடுக்கப்பட்ட சாதியினரைப் பிராமணர்களின் மேலாதிக்கத்தை எதிர்க்கத் துணை நிற்கும் எனும் நிலைப்பாட்டை வரவேற்றார்”. (பக்.81)

 

 நாராயண குரு: “அந்நாட்களில் ஒடுக்கப்பட்ட  மக்கள் கோவில்களுக்கும் உயர்சாதி மக்கள்வாழும்  தெருக்களுக்கும் செல்லமுடியாது. பொது  நீர்நிலைகளிலோ, கிணறுகளிலோ நீரெடுக்க  முடியாது. ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த  ஆண்களும் பெண்களும் மேலாடையணிய அனுமதிக்கப்படவில்லை”. (பக்.81)

 

அய்யன்காளி: “பத்தொன்பதாம்  நூற்றாண்டில்  கேரளம் படுமோசமான சாதியப்பாகுபாடுகளால்  பீடிக்கப்பட்டிருந்தது. ஒரு  சில சமூகக்குழுக்கள் தீண்டத்தகாதவராகவும்  காணத்தகாதவராகவும்  கூறி ஒடுக்கப்பட்டனர்.  இந்நிலையில்  நாராயணகுரு, அய்யன்காளி (1863-1941) போன்ற சிந்தனையாளர்களால், பெருமளவில் அரசியல், பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்த  நேரத்தில், அவர்களால் நடத்தப்பட்ட வலுவான இயக்கங்கள் வியப்பூட்டும் சமூக மாற்றங்களைக்  குறிப்பாகக் கட்டமைப்பில் ஏற்படுத்தியது”. (பக்.82)

 

    “ஆடைஅணிவது உட்பட, பல மரபுசார்ந்த பழக்கங்களை அவர் எதிர்த்தார். ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மட்டும் மறுக்கப்பட்ட, உயர்சாதியினர் மட்டுமே அணியும் ஆடைகளை இவர் அணிந்தார். உயர்சாதியினர் பயன்படுத்தியதும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டிருந்ததுமான பொதுச் சாலைகளில், சவால்விடும் வகையில் காளைகள் பூட்டப் பெற்ற வண்டியில் அவர் பயணம் செய்தார்”. (பக்.82)

 

    “கீழ்சாதியாகக் கருதி ஒடுக்கப்பட்ட புலையர் சமூகமக்களின் கல்விக்காக இவ்வமைப்பு இயக்கம்  நடத்தி நிதிதிரட்டியது”. (பக்.82)

 

அயோத்திதாசர்: “பண்டிதர் அயோத்திதாசர் சாதியத்தைப் பரப்புரை செய்யவும் அதை நியாயப்படுத்தவும்  அடித்தளமாக விளங்கிய இந்துதர்மத்தின்பால்  மனக்கசப்புற்றார்”. (பக்.85)

 

     “பிராமணியத்தால் ஒடுக்கப்பட்டவர்களே உண்மையான பௌத்தர்கள் என அவர் வாதிட்டார்.  பௌத்தசமய நிலைப்பாட்டிலிருந்து தமிழ் இலக்கியங்களுக்கும் நாட்டார் வழக்காற்றியல்  மரபுக்கும் புதிய விளக்கங்கள் கொடுத்த அவர் ஒரு மாற்று  வரலாற்றைக் கட்டமைத்தார். மேலும் பௌத்த சமய மீட்பின் வழியாக இந்துசமயத்தைப் பிடித்திருக்கும்  சாதியக் கொடுமைகளிலிருந்து மக்களை விடுவிக்க  இயலுமென உழைத்தார். ஒடுக்கப்பட்டவர்களை சாதி பேதமற்ற திராவிடர் என அழைத்த அவர் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது அவர்களைச்  சாதியற்ற திராவிடர்கள் எனப் பதிவுசெய்யுமாறு  வற்புறுத்தினார்”. (பக்.86)

 

இஸ்லாமிய சீர்திருத்தங்கள்: “இதன்விளைவாக இந்தியமுஸ்லீம்கள், ஒப்பீட்டளவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த செல்வாக்குப் பெற்றிருந்த இந்துக்களைவிட ஒருசமூகம் என்றளவில்  பின்தங்கியிருந்தனர்”. (பக்.82)

 

சர் சையத் அகமத்கான்: “கல்வி, அரசுப்பணிகள், தேசிய அளவில் தலைமை வகித்தல்  ஆகியவற்றில் தங்கள் இடங்களைப் பெரிதும்  இழந்துவிட்ட  இந்திய முஸ்லீம்கள் தங்கள் சமூகம்  முன்னேற்றப் பாதையில்  செல்ல வேண்டுமானால்  ஆங்கிலக் கல்வியை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு மாற்று இல்லை என்று புரிந்துகொண்டனர். இப்புரிதலுக்கு  உயிரும் உணர்வும் கொடுத்தவரே சர் சையத் அகமத்கான் (1817-1898).”  (பக்.82)

 

அலிகார் இயக்கம்: “அலிகார் பல்கலைக்கழகம் தொடர்ந்துவந்த சந்ததியினரைச்  சேர்ந்தோரை ஒரு கற்றறிந்த மேதைகளின் கூட்டமாக உருவாக்கியது. அவர்களனைவரும்  பொதுவாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தனர்”. (பக்.83)

  

    இராஜாராம் மோகன்ராய் தலைப்பில், “அவருடைய கருத்துகளைப் பழமைவாத இந்துக்கள் எதிர்த்தனர்”, (பக்.77) என்ற வரி மட்டும் நீக்கப்படுகிறது. இதிலிருந்து இந்த நீக்கங்கள் யாருக்கானது என்பது விளங்கும்.

 

   விவேகானந்தர் தலைப்பில், “இந்து சமயச்சடங்குகளில்  கலந்துகொள்ளக்கூடாதென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த  ஒடுக்கப்பட்ட மக்களும் அதுபோன்ற சடங்குகளில்  கலந்துகொள்ளக் கட்டாயம் அனுமதிக்கப்படவேண்டும் என்றார்”, (பக்.80) என்ற பகுதி நீக்கபடவில்லை என்பதையும் கவனிக்கலாம்.

 

   தியோபந்த் இயக்கம் விடுதலைப் போரில் பங்குபெற்றதை மறைத்து வெறும் மதமீட்பு இயக்கம் என்று பாடநூல் சொல்கிறது. இஸ்லாம் சமூகத்தை பிறராகவே (Others) பாடநூல் அணுகுகிறது. இதை இந்நூலிலுள்ள பல கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன.

 

    இதேபோல் வைகுண்ட சுவாமிகள் பற்றிய குறிப்பில் சில நீக்கங்கள் சொல்லப்பட்டன. அடுத்தப் பதிப்பில் அவர் முற்றாகக் காணாமற் போய்விட்டார். ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை?

 

    அயோத்திதாசர், அய்யங்காளி, நாராயண குரு, ஜோதிபா புலே, சர் சையது அகமதுகான், அலிகார் இயக்கம், தியோபந்த் இயக்கம் ஆகிய பகுதிகள் நிறைய வெட்டப்பட்டுள்ளன (அலகு: 5. 19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கம்). பிறபகுதிகள், பெருமை பேசுதல்களில் எவ்விதக் கத்தரியும் வைக்கவில்லை.

 

    இவ்வாறு நீக்கப்பட்ட பகுதிகள் சர்ச்சைக்குரியவை அல்ல; மேலும் இவை வரலாற்று உண்மைகள்களாகும். கூடுதல் பாடச்சுமை என்ற காரணமும் எடுபடாது. மேற்குறிப்பிட்ட பாடத்தில் ( 10 வரலாறு, அலகு 5) சமயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் சமூகத்திற்கு இல்லை. இந்த எட்டு பக்கப் பாடத்தில் இந்து புத்தெழுச்சி இயக்கத்திற்கு இரு பக்கமும் பிற சமய சீர்திருத்த இயக்கங்களுக்கு பத்தியளவில் இடமளிப்பது ஏன்? இதுதான் நமது சமயச்சார்பின்மைக் கொள்கையா?

 

    இராஜா ராம்மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோர் பற்றிய பகுதிகளில் நீக்க / குறைக்க ஒன்றுமே இல்லை என்கிறபோது மாற்றுச் சிந்தனைகளைத் திட்டமிட்டு அழிப்பது ஏன்?      மதத்திற்குள்ளாக செயல்பட்ட சமூக சீர்திருத்தவாதிகளுக்கு அதிக ஒதுக்கீடும் மதங்களை விமர்சித்தவர்களுக்கு விளிம்பில் அளிக்கும் சிறிய இடமும் இவர்களது அரசியலை வெளிப்படுத்துகிறது.

 

(குறிப்பு: புதிய பாடநூல் குறித்த விமர்சனப் பதிவுகள் ‘கல்வி அபத்தங்கள்’ என்ற பெயரில் விரைவில் நூலாக வெளியாகிறது.)