புதன், நவம்பர் 24, 2010

தீபங்குடி - சமணப்பள்ளி:- மு.சிவகுருநாதன்

 தீபங்குடி - சமணப்பள்ளி:-  மு.சிவகுருநாதன்
    









   தமிழக வரலாற்றில் வரலாற்று ஆசிரியர்களால்   ‘இருண்ட காலம்’ என்று வருணிக்கப்படும் காலப் பகுதி களப்பிரர்கள் (கி.பி.250 - கி.பி.600) ஆண்ட, தமிழகத்தில் சமண, பவுத்த சமயங்கள் அரச மதங்களாக கோலோச்சிய காலப்பகுதியாகும். பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் புறக்கணிப்புக்கு உள்ளான இக்காலப் பகுதி பற்றிய ஆய்வை நிகழ்த்தி வரலாற்றின் இருண்ட பக்கங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்கள்.   அவர் சமணமும் தமிழும் என்ற தனது நூலில் தீபங்குடி பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். 


    “இதுவும் (தீபங்குடி) பழைய சமண ஊர்.   இங்கிருந்த சயங்கொண்டார் என்னும் சமணர் ‘தீபங்குடிப்பத்து’ என்னும் சிறந்த, இனிய, அழகிய பாடல்களைப் பாடியுள்ளார்.   இவரே ‘கலிங்கத்துப் பரணி’ என்னும் நூலை இயற்றியதாகக் கூறுவர்.   இத்தீபங்குடியில் இப்போதும் சமணர்கள் உள்ளனர். சமணக் கோயில் ஒன்றும் இருக்கிறது”.  

(எழுதப்பட்ட ஆண்டு 1954). 


    திருவாரூர் - கும்பகோணம் சாலையில் அரசவனங்காட்டிற்கு அருகில் தீபங்குடி என்னும் சிற்றூர் உள்ளது.   இது குடவாசல் வட்டத்தைச் சேர்ந்தது.

சமணத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு:

    சமண மதத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாந்த மதம், ஸியாத்வாத மதம் என்னும் பல்வேறு பெயர்களும் உண்டு.  சமணம் என்பது துறவு நிலையைக் குறிக்கும்.  சமணக் கடவுளுக்கு அருகன் என்ற பெயரும் உண்டு.   தீர்த்தங்கரர்களுக்கு ஜீனர் (புலன்களையும் கர்மங்களையும் வென்றவர்) என்ற பட்டப் பெயர் வழங்கப்படுகிறது.   நிகண்டர் என்பது சமணக் கடவுளின் பற்றற்ற தன்மையைக் குறிக்கும்.  சமணம் மட்டுமே ஏகாந்தவாதத்தை மறுத்து அநேகாந்தவாதத்தை (ஸியாத்வாதம்) வலியுறுத்திய மதம்.


    பிறவிச் சக்கரம் எனப்படும் ஸ்வஸ்திக் சின்னம், அதன்மேல் மூன்று புள்ளிகள் (மும்மணி: நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம்) அதன்மேலே பிறை போன்ற கோடும் அக்கோட்டின் மேல் ஒற்றைப் புள்ளியும் (வினை நீங்கி மோட்சம் அடைதல்) சமணர்களின் தத்துவக்குறியாகும். 


    இஸ்லாமியர்களின் இறைத் தூதராக நபிகள் போற்றப்படுவது போல் சமணக் கொள்கைகளை பரப்பச் செய்தவர்கள் தீர்த்தங்கரர்கள் என்றழைக்கப்பட்டனர்.  முதலாவது தீர்த்தங்கரர் விருஷ­ப தேவர் எனப்படும் ஆதிபகவன் (தீபநாயக சுவாமி).   இவருடைய பள்ளிதான் தீபங்குடியில் உள்ளது.  இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் தோன்றி இருப்பதாக சமணர்கள் நம்புகின்றனர்.  24வது தீர்ததங்கரராக இருந்தவர் வர்த்தமான மகாவீரர் ஆவார்.

தீர்த்தங்கரர்களின் பெயர்ப் பட்டியல்:


    01. விரு­ஷப தேவர் (ஆதி பகவன்)
    02. அஜித நாதர்
    03. சம்பவ நாதர்
    04. அபி நந்தனார்
    05. சுமதி நாதர்
    06. பதும நாபர்
    07. சுபார்சவ நாதர்
    08. சந்திரப் பிரபர்
    09. புஷ்ப தந்தர் (சுவாதி நாதர்)
    10. சீதள நாதர் (சித்தி பட்டாரகர்)
    11. சீறியாம்ச நாதர்
    12. வாச புஜ்யர்
    13. விமல நாதர்
    14. அநந்த நாதர் (அநந்தஜித் பட்டாரகர்)
    15. தரும நாதர்
    16. சாந்தி நாதர்
    17. குந்து நாதர்
    18. அர நாதர்
    19. மல்லி நாதர்
    20. முனி சுவர்த்தர்
    21. நமி நாதர் (நமி பட்டாரகர்)
    22. நேமி நாதர் (அரிஷ்ட நேமி)
    23. பார்சுவ நாதர்
    24. வர்த்தமான மகாவீரர்.


        23-வது தீர்த்தங்கரரான பார்சுவ நாதர் கி.மு. 817 முதல் 717 வரையில் 100 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  அவர் வீடுபேறடைந்து 118 ஆண்டுகளுக்குப் பிறகு 24-வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் கி.மு. 599 முதல் கி.மு. 527 வரையில் 72 ஆண்டு காலம் வாழ்ந்தவர்.  பவுத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தரும் (கி.மு. 563 - கி.மு.483) ஆசிவக மதத்தைத் தோற்றுவித்த மற்கலியும் இவரது சம காலத்தவர்கள்.  மற்கலி மகாவீரருடன் சேர்ந்து இருந்து, பின்னர் கருத்து மாறுபட்டு ஆசிவக மதத்தை ஏற்படுத்தினார். இவர்கள் இருவரையும் விட வயதில் மூத்தவர் மகாவீரர்.  சமண மதமும் இரண்டு மதங்களையும் விட காலத்தால் முற்பட்டது.


    சமண சமயத் தீர்த்தங்கரர்கள் ஒவ்வொருவரும் காளை, யானை, குதிரை, வாலில்லா குரங்கு போன்ற இனச் சின்னங்களுடன் (totemic emblem ) தொடர்புப்படுத்தப்படுகிறார்கள்.  தொன்மைக்கால கருத்துகள், சமய அறநெறிச் சாரங்கள் ஆகியவற்றின் கலவையாக சமணம் இருப்பதாக தேவி பிரசாத் சட்டோபாத்யாயா கணிக்கிறார்.


    பவுத்தம் பல்வேறு பிரிவாக பிரிந்தது போல் சமணத்திலும் சுவேதாம்பரர், திகம்பரர், ஸ்தானகவாசிகள் போன்ற பிரிவுகள் ஏற்பட்டன.  சுவேதாம்பரர் வெண்ணிற ஆடைகளை அணிபவர்கள்.  திகம்பரர் (திக்+அம்பரம் = திகம்பரம்) என்றால் திசைகளை ஆடையாக உடுத்துபவர் என்று பொருள்.  இவர்கள் ஆடைகளை உடுத்தாத நிர்வாணிகள்; அமணர் என்றும் அழைக்கப்படுவர்.  ஸ்தானகவாசிகள் உருவ வழிபாட்டு எதிர்ப்பாளர்கள்.  இவர்கள் தமது பள்ளியில் சமண ஆகமங்களை வைத்து வணங்கக் கூடியவர்கள்.


    பெண்கள் தாழ்ந்த, இழிந்த பிறவிகள்; பாவம் செய்தவர்கள் பெண்ணாகப் பிறக்கிறார்கள் என்பது சமண மத நம்பிக்கை.  பெண்ணாகப் பிறந்தவர்கள் மோட்சம் (வீடுபேறு) அடைய முடியாது என்று நம்புகிறார்கள்.  ஆனால் சுவேதாம்பரர்கள் பெண்களும் துறவு பூண்டு வீடுபேறு அடையலாம் என்று கூறுகின்றார்.  திகம்பரர்கள் இதை மறுத்து பெண் அடுத்த பிறவியில் ஆணாகப் பிறந்தால்தான் மோட்சம் என்பதை வலியுறுத்துகின்றனர்.


    அகிம்சையை தீவிரமாக வலியுறுத்திய சமணம் துறவறத்தில் ஈடுபடும் துறவிகளுக்கு 28 வகையான ஒழுக்கங்களை தீவிரமாக கடைபிடிக்கவும் வலியுறுத்தியது.  இவையனைத்தும் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளக் கூடியவை ஆகும்.  முனிவர்களது ஒழுக்கங்கள் 28-ஐ மூல குணங்கள் என்பார்கள்.  அவை: மாவிரதங்கள் ஐந்து, சமிதி ஐந்து, ஐம்பொறி அடக்கம் ஐந்து, ஆவஸ்யகம் ஆறு, லோசம், திகம்பரம், நீராடாமை, பல் தேய்க்காமை, தரையிற் படுத்தல், நின்று உண்ணல், ஒரே வேளை உண்ணல் ஆகியவனவாகும்.  நமது ரத்த சுழற்சியை முடக்கி நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்யும் யோகாசனங்கள் சமண முனிவர்களால் உருவாக்கப்பட்டவை.


    சைவக் கடவுள் சடைமுடி உடையவன்; எனவே சடையன் என்று கூட  அழைக்கப்பட்டான்.  முதல் தீர்த்தங்கரரான ஆதி நாதர் (ரிஷ­ப தீர்த்தங்கரர்) தவிர எஞ்சிய தீர்த்தங்கரர்கள் சடை முடியற்றவர்கள்.  இவர்களது உருவங்களும் அவ்வாறே காணப்படுகின்றன.  காரணம் சமணத் துறவொழுக்கத்தில் லோசம் என்ற தலைமயிர் வளர வளர கைகளால் பிய்த்துக் கொள்ளும் வழக்கம் உண்டு.  இந்திரன் வேண்டுகோளை ஏற்று ஆதிபகவன் தலை மயிரை பிய்த்துக் கொள்ளாமல் பாதியில் நிறுத்தி சடை முடியுடன் இருந்ததாக புராணக் கதை ஒன்றுண்டு.


    தீபங்குடியில் வாழ்ந்த (கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) பரணிக்கோர் செயங்கொண்டார் என பாராட்டப்பட்ட கலிங்கத்துப்பரணி பாடிய செயங்கொண்டார், பிற்காலச் சோழன் முதலாம் குலோத்துங்கனின் அரசவைப் புலவர்.  சோழனது கலிங்க வெற்றியையும், வீர தீரத்தையும் சைவப் புகழையும் பரணியாகப் பாடியவர்.  செயங்கொண்டார் சமணர் என்று மயிலை.சீனி.வேங்கடசாமி எழுதினாலும் பரணி பாடிய போது சமணராக இல்லாமல் சைவராக மாறியிருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.


    கலிங்கப் போரில் தோல்வி கண்ட கலிங்கப் படை வீரர்கள் புதரில் சிக்குண்டு பாதித் தலைமயிர் பிய்ந்து போன நிலையில் மீதியையும் தாங்களாகவே பிய்த்துக் கொண்டு நாங்கள் கலிங்க வீரர்கள் இல்லை; அமணர்கள் என்று பொய் சொல்லி சோழப் படைகளிடமிருந்து தப்புவதாக கலிங்கத்துப் பரணியில் பின்வரும் பாடல் வழி நமக்கு தெரிய வரும் போது அன்றும் இன்றும் போரின் விளைவுகள் நம் மனத்தில் நிழலாடுவதை தவிர்க்க முடியாது.
   
        “வரைக் கலிங்கர் தமைச்சேர மாசையயற்றி
        வன்தூறு பறித்தமயிர்க் குறையும்வாங்கி
        அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கரெல்லாம்
        அமணரெனப் பிழைத்தாரும் அநேகராங்கே!”
            - கலிங்கத்துப் பரணிப் பாடல்.


    உண்ணாநோன்பு இருந்து உயிர் துறத்தல் சமணப் பழக்கமாகும்.  இதற்கு வடக்கிருத்தல் (சல்லேகனை) என்று பெயர்.  தாங்க முடியாத மனவேதனை தரும் இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு உடைய காலத்தில் சல்லேகனை (வடக்கிருத்தல்) செய்து உயிர்விடுதல் சமணர் மரபு.  தீர்த்தங்கரர்கள் வீடு பேறடைந்த வடதிசையை புண்ணிய திசையாக அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.  பத்திரபாகு, கவுந்தியடிகள் போன்ற சமயப் பெரியோர் மட்டுமல்லாது, கபிலர், சேரமான் பெருஞ்சேரலாதன், கோப்பெருஞ்சோழன் உடன் பிசிராந்தையார் மற்றும் பொத்தியார் போன்றோர் வடக்கிருந்து உயிர் துறந்த செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன.  சமணக் கொள்கை அக்காலத்தில் பெற்ற செல்வாக்கை இது எடுத்துக்காட்டுகிறது. அகிம்சை, ஊன் உண்ணாமை போன்ற சமணக் கொள்கைகளை சமணத்தை அழித்து இந்து மதம் ஏற்றுக் கொண்டது வியப்பான ஒன்றாகும்.   தீபாவளிப் பண்டிகை சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்ற பண்டிகையாகும்.


    தீபம் + ஆவலி = தீபாவலி ( தீபம் - விளக்கு, ஆவலி - வரிசை).  மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறடைந்ததால் விடியற்காலையில் நீராடிப் பின்னர் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாடுவது வழக்கமானது.  சமணம் வீழ்ந்த பிறகு இந்துக்களாக மாறிய சமணர்கள் தொடர்ந்து கொண்டாடிய  இப்பண்டிகைக்கு இந்துக்கள் பிற்காலத்தில் நரகாசுரன் கதையைப் புனைந்து கொண்டனர் என்பது தெளிவாகிறது.   சிவராத்திரியையும் சமணர் கொண்டாடுகின்றனர்.   திருக்கயிலாய மலையில் ஆதிபகவன் வீடு பேறடைந்தது மாசி சிவராத்திரி ஆகும். 


    பல்வேறு இறுக்கமான கொள்கைகளையுடைய சமணம் தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு வரை சிறப்படைய காரணம் உண்டு.  வைதீக இந்து மதம் நால் வருணக் கோட்பாட்டின் மூலம் உயர்வு - தாழ்வு கற்பித்தது.   மேலும் உழவுத்தொழிலை இழிவானதாக்கி அதில் ஈடுபடுவோரை ஒதுக்கி வைத்தது.  மாறாக, சமணம் பிறப்பால் உயர்வு - தாழ்வு பாராட்டவில்லை.  மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க் கொலை செய்யும் தொழில்களைத் தவிர்த்த பயிர்த் தொழில் போன்ற பிற தொழில்களைப் போற்றியது.
 
அதனால் பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமணத்தைப் பின்பற்றினர்.  சமணத் துறவிகள் ஊர் ஊராகச் சென்று தம் சமயத்தை போதிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர்.   சமண முனிவர் கூட்டத்திற்கு சங்கம் என்று பெயர்.   இதுவும் தமிழகத்தில் சமணம் பரவக் காரணமாக அமைந்தது.


    பவுத்தமும், சமணமும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது.  நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் செய்தனர்.  கொலை மற்றும் புலால் உண்ணுதலை அறவே தவிர்த்தனர்.   மக்களிடையே உயர்வு - தாழ்வு பாராட்டவில்லை.  ஆனாலும் இந்த இரண்டு மதங்களும் தங்களுக்குள்ளாக சண்டையிட்டு வந்தன.   இவை மட்டுமல்லாது ஆசீவகம், ஆருகதம் (சமணம்),  வைதீகம், பவுத்தம் ஆகிய நான்கும் ஒன்றையயான்று பகைத்து வந்தன.   இந்த சமயப் போர்கள் பண்டைக் காலம் தொட்டு நடைபெற்றன.   இந்த வட நாட்டு மதங்கள் குறிப்பாக சமணம், பவுத்தம் தென்னாடு வந்த பிறகும் இவற்றிற்கிடையேயான போர் நின்றபாடில்லை. 


    பண்டைக்காலத்தில் தமிழர்கள் ‘திராவிட’ (தமிழ்) மதத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள்.   முருகன், கொற்றவை, சிவன், திருமால் போன்ற தெய்வ வழிபாட்டை திராவிட (தமிழ்) மதமென  மயிலை.சீனி.வேங்கடசாமி வரையறுக்கிறார்.   வைதீகப் பிராமணர்களின் உயிர்ப் பலியிடுதலுக்கு நிகராக திராவிட சமயத்தாரும் முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு ஆடு, மாடு, கோழிகளைப் பலியிட்டனர்.  அன்றைய வைதீக மதம் சைவம், வைணமாக பிளவுபடவும் இல்லை. 


    இந்த நிலையில் இங்கு வந்த பவுத்தமும் சமணமும் மக்களிடையே பேராதரவு பெற்ற நிலையில் களப்பிரர்கள் ஆட்சிக் காலத்தில் அரச மதமாகவும் இருந்தபடியால் சிறப்பான வளர்ச்சிப் பெற்றது.  களப்பிரர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு பவுத்த, சமண சமயங்களும் வீழ்ச்சியுறத் தொடங்கின. 


    கி.பி. 7, 8, 9ஆம் நூற்றாண்டுகளில் வைதீக மதப் பிரிவான சைவமும் வைணவமும் தழைத்தோங்க பக்தி இலக்கிய காலகட்டம் பெரும்பங்கு வகித்தது.  இக்கால கட்டத்தில் நடைபெற்ற பல்வேறு வகையான சமயப் போர்களின் விளைவாக பவுத்தமும் சமணமும் தமிழகத்திலிருந்து முற்றிலும் மறையும் நிலையை அடைந்தது.


    சமணம் vs பவுத்தம்; இந்து vs  பவுத்தம்; இந்து vs சமணம் ஆகிய மும்முனைப் போராக அன்றைய சமயப் போர் இருந்தது.  வைதீக இந்து மதப் பிரிவான சைவமும் வைணவமும் இணைந்து சமண, பவுத்தத்தை எதிர்த்து நின்றது.  அவைதீக மதங்களான சமணமும் பவுத்தமும் கூட தங்களுக்குள்ளாக போரிடக்கூடிய சூழல் அக்கால கட்டத்தில் இருந்தது.   சமணம் வேதங்களை முற்றிலுமாக மறுத்தது.  பவுத்தம் அவ்வாறு இல்லை.


    கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், உடைமைகளைக் கவர்தல், கொடுமைப்படுத்துதல், யானைகளை ஏற்றி மிதித்துக் கொல்லுதல் என்பதாக சமணத்திற்கெதிரான போரில் பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.  சமணர், சாக்கியர் தலையை அறுப்பது பற்றி தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாடல் பேசுகிறது.


    சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்மந்தர் மதுரையில் எண்ணாயிரம் (8000) சமணர்களைக் கழுவேற்றிய செய்தியை பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்கள் மூலம் அறிய முடிகிறது.  மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபம்  உள்ளது.  அதில் சமணர்களைக் கழுவேற்றும் காட்சிகளை ஓவியமாகத் தீட்டி வைத்திருப்பதை இன்றும் நாம் காணலாம்.இப்போதும் கூட மதுரையில் நடைபெறும் திருவிழாவில் ஐந்து நாட்கள் கழுவேற்றும் உற்சவம் நடப்பதைக் காணலாம்.






    காஞ்சிபுரத்து அருகில் உள்ள திருவோத்தூரில் சைவ - சமண கலகம் நடைபெற்றது.  அங்குள்ள சிவன் கோயிலில் சமணர் கழுவேற்றும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  சோழ நாட்டில் சீர்காழி பழையாறையில் நடைபெற்ற சைவ - சமணப் போரில் யானைகளைக் கொண்டு சமணர்களை மிதித்துக் கொன்றதாக வரலாறு.


    திருவாரூரில் நடந்த சைவ - சமண கலகம் பற்றி பெரியபுராணப் பாடல் வழியே அறிய முடிகிறது.  63 நாயன்மார்களில் ஒருவரான தண்டியடிகள் காலத்தில் திருவாரூரில் சமணர் செல்வாக்கு மிகுந்திருந்தது.  கமலாலயம் எனப்படும் திருக்குளம் மிகச் சிறியதாகவும் அதனைச் சுற்றி நான்கு பக்கமும் சமணர்களின் சொத்துக்கள், பள்ளிகள், பாழிகள், மடங்கள் நிறைந்திருந்தன.  குளத்தைப் பெரிதாக்க தண்டியடிகள் விரும்புகிறார்.  வழக்கம் போலவே சிவபெருமான் அரசன் கனவில் வந்து தனது விருப்பத்தை வெளிப்படுத்த சமணர்களை ஓடத் துரத்திய பிறகு சமணப் பள்ளிகள், மடங்கள், பாழிகள் ஆகியவற்றை இடித்து குளத்தை விரிவுப்படுத்திய செய்தியை கீழ்க்கண்ட பெரியபுராணப் பாடல் நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.


    “அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர்தம்   
    சொன்ன வண்ண மேஅவரை ஓடத் தொடர்ந்து துரந்தற்பின்
    பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து
    மன்னவனும் மனமகிழ்ந்து வந்து தொண்டர் அடிபடிந்தான்”.


    சைவ - வைணவர்கள் பல்வேறு புனை கதைகளை உருவாக்கி அவற்றை சமணர்கள் மீது போட்டு பழி சுமத்தினார்கள்.  “போம்பழியயல்லாம் அமணர் தலையோடே”, என்ற பழமொழி இதற்குத் தகுந்த உதாரணமாகும்.


    மதுரை ஒத்தக்கடையில் அமைந்துள்ளது யானைமலை.   இம்மலை பார்ப்பதற்கு யானை படுத்திருப்பது போல் தோன்றுவதால் அப்பெயர் பெற்றிருக்கலாம்.   இங்குள்ள குகைகள் சமணர் வாழ்ந்த இடமாகும்.  2000 ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் இங்கு காணப்படுகின்றன.  இவைகள் போதிய பராமரிப்பு இன்றி சிதைந்து காணப்படுகிறது.


    இங்குள்ள சமணர்கள் அழித்தும், விரட்டியும் வைணவர்கள் நரசிங்கப்பெருமாள் கோயில் அமைத்தனர்.  அத்துடன் சமணர்கள் மதுரையை அழிக்க மந்திரத்தால் யானையை உண்டாக்கி அனுப்பியதாகவும் அந்த யானையை நரசிங்கப்பெருமாள் (விஷ்ணு) அம்பெய்து கொன்றவுடன் அது கல்லாக சமைந்து போனது என்று புராணக் கதை செய்தனர்.


    இன்று இந்த யானை மலையை, தஞ்சை மாவட்ட பெருந்தச்சர் அவையத்தின் ஸ்தபதி அ.அரசு என்பவரின் குடவரைக் கோயில் மற்றும் சிற்ப நகரம் அமைக்கும் செயல் திட்டத்தை ஆராய டிசம்பர் 2009-ல் ஒரு அரசாணையை வெளியிட்டது.  அப்பகுதி மக்கள் திரண்டு போராடியதையடுத்து பிப்ரவரி 2010-ல் அரசு வெளியிட்ட அரசாணைப்படி சிற்ப நகர முடிவை கைவிடுவதாக அறிவித்தது.


    இந்த யானை மலையில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி எழுத்துக்கள் காணப்படுவதோடு வடமொழி, கிரந்த மற்றும் தமிழ் வட்டெழுத்துக்களும் காணப்படுகின்றன.  சமணர்கள் வாழ்ந்த  குகைகள், படுக்கைகள், ஓவியங்கள், சிற்பங்கள் என பலவற்றை இங்கு காண முடியும்.  மகாவீரர், பார்சுவநாதர் போன்றோருடைய புடைப்புச் சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.  இங்கு நரசிங்கப் பெருமாள் கோயில் கி.பி.77-ல் உருவாக்கப்பட்டது.   இன்று தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் யானை மலை சரியான பராமரிப்பு இன்றி கல்குவாரிகள் மூலம் உடைப்பு வேலைகளும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வருகிறது.  எஞ்சியிருக்கும்  யானை மலையின் மிச்சமும் பெருந்தச்சர் அவையத்தின் கோரிக்கை மூலம் தகர்ந்து போகவிருந்தது, இப்பொழுது மக்களின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது.  மீண்டும் வேறு வடிவில் இத்தகைய கோரிக்கைகள் வர வாய்ப்பு உள்ளது.    சிற்ப நகரத்திற்கு செலவு ரூ. 1500 கோடி.  அதன் மூலம் கிடைக்கும் கிரானைட் கற்கள் மூலம் ரூ.5000 கோடி வரை வருமான கிடைக்கும் என்பதே இதற்குக் காரணமாகும்.  அன்று சமணர்களுக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு எற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு இன்றும் இருக்கிறது.


    சோழர் தலைநகரான உறையூர் (திருச்சி) மணற்புயலால்  அழிந்து போக சமணர்களின் மந்திரசக்தியால் அழிந்ததாக கதை சொல்லப்பட்டது.    சோழன் மீது கோபங்கொண்ட சிவன் மண்மழை பெய்வித்ததாக பிற்காலத்தில் மற்றொரு கதையும் புனையப்பட்டது.  உறையூர் மணற் புயலால் அழிந்தது உண்மை.  அப்பழி சமணர் மீது வைப்பதன் காரணத்தை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.


    இம்மாதிரியான சமயப் போர்களின் விளைவாக சமணர்கள் உயிருக்கு பயந்து சைவ - வைணவ சமயத்தில் இணைந்தனர்.  கூடவே தமது சமயக் கொள்கைகள், பழக்கவழக்கங்களை இந்து சமயத்தில் புகுத்தினர்.  ஊன் உண்ணாமை, உண்ணா நோன்பு போன்ற பழக்கங்கள் இவ்வாறாகவே வைதீக இந்து மதத்தை வந்தடைந்தன.


    நீலகேசி, சீவகசிந்தாமணி, திருக்கலம்பகம், திருக்குறள் போன்றவை சமண சமய நூல்களாகும்.  திருக்குறளில் வரும் ஆதி பகவன், எண்குணத்தான், மலர்மிசை ஏகினான் போன்ற சொற்கள் சமண மதம் சார்ந்தவை.   முதலாவது தீர்த்தங்கரர் விரு­பதேவரின் மற்றொரு பெயரே ஆதி பகவன் என்பதாகும். அன்று பாடலிபுரம் என்றழைக்கப்பட்ட திருப்பாதிரிப்புலியூர்  சமண மடத்தின் தலைவராய் இருந்த ஆச்சார்ய சிரீ குந்த குந்தர் எழுதிய நூல் திருக்குறள் என சமண சித்தாந்தம் சொல்கிறது.  தமிழக ஓவியர் வேணுகோபால் சர்மா என்பவர் வரைந்த ஒரு ஓவியத்தைத் திருத்தங்கள் செய்து திருவள்ளுவர் உருவம் அரசால்அறிவிக்கப்பட்டது நமக்கெல்லாம் தெரியும்தானே!    மணக்குடவர், காலிங்கர் போன்ற உரையாசிரியர்கள் தவிர பரிமேலழகர் போன்ற உரையாசிரியர்கள் அனைவரும் திருக்குறளுக்கு சைவ உரையே எழுதி வந்துள்ளனர். 


    இனி தீபங்குடி சமணப்பள்ளிக்கு வருவோம்.  பல்வேறு வகையான சமயப் போர்களுக்கிடையே இப்பள்ளி நிலைத்திருப்பது வியப்பாக உள்ளது.  நாம் அதற்குப் பல்வேறு காரணங்களைச் சொல்ல முடியும்.
       
    இன்று இக்கோயில் சமணப் பள்ளி என்று அழைக்கப்படுவதில்லை.  தீபநாயகசுவாமி திருக்கோயில் என்றே சொல்லப்படுகிறது.  இக்கோயில் இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில்தான் தற்போது உள்ளது.  எண்கள் கோயில் செயல் அலுவலரின் நிர்வாகத்தின் கீழ் இக்கோயில் உள்ளது.


        இக்கோயில் பார்ப்பதற்கு சைவ, வைணவக் கோயில்களைப் போலவே உள்ளது.  இங்கு நடைபெறும் அர்ச்சனை, அபிஷேகம், பூசை போன்றவை சைவ, வைணவக் கோயில்களில் உள்ளதைப் போலவே உள்ளது.  சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்யப்படுகிறது.  இங்கு அர்ச்சகராகப் பணியாற்றும் திரு.பார்சுவநாதன் அபிஷேக முறையில் மாற்றம் இருப்பதாகத் தெரிவித்தார்.   சைவ - வைணவக் கோயில்களைப் போல எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுவதில்லை என்றும் தண்ணீர், பால், சந்தனம் என்ற வரிசையில் அபிஷேகம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.  அட்சய திருதியை, ஆடிவெள்ளி, நவராத்திரி, சிவராத்திரி ஆகிய பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகவும் சொன்னார்.


    இவர்கள் திகம்பரச் சமணர் (ஆடையில்லாதவர்) ஆதலால்  அருகக் கடவுள் உருவங்கள் ஆடையின்றியும் சாஸ்தா, இயக்கி போன்ற பரிவாரத் தெய்வ உருவங்கள் ஆடையுடனும் அமைக்கப்பட்டுள்ளன.  சமணக் கடவுளரின் உருவங்கள் அமர்ந்த அல்லது நின்ற வண்ணமே அமைக்கப்படுகின்றன.   பவுத்த, வைணவக் கோயில்களில் உள்ளதைப் போன்ற படுத்த வண்ணம் அமைந்த பள்ளிகொண்ட காட்சிகளை சிற்பமாக அமைக்கும் வழக்கம் சமணத்தில் இல்லை. 


    தீபங்குடி கோயிலுக்கு முன்னால் ஒரு மடம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.  சமண முனிவர்கள் தங்கிய மடமாகவும் அல்லது அன்னசத்திரமாகவும் இருந்திருக்க வேண்டும்.



    மார்வாடிகள் என்று அழைக்கப்டும் வடநாட்டுச் சமணர்கள் வியாபாரிகளாக செல்வச் செழிப்புடன் இருக்கின்றனர்.  ஆனால் தமிழ்நாட்டிலுள்ள சமணர்கள் மிகுந்த ஏழைகளாகவே உள்ளனர்.  இங்குள்ள 10 குடும்பங்களும் மிகச் சாதாரணமாக உள்ளன.  இவர்கள் பிராமணர்களை விட உயர்ந்தவர்கள் என்று தங்களை கூறிக் கொள்வதோடு அவர்களைப் போலவே பூணூலும் அணிகிறார்கள்.   சந்தனம், குங்குமம் இட்டுக் கொள்கிறார்கள்.  புலால் உண்ணுவதில்லை.  இரவில் உண்ணாமல் சூரியன் மறைவதற்கு முன்பாக உண்ணுகின்றனர். 


    சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் இவர்களுக்கு பிற்பட்ட வகுப்பாருக்கு உள்ள சலுகைகள் கிடைப்பதில்லை.  முற்பட்ட வகுப்பு என்றே சாதிச் சான்று தமிழக அரசால் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.  எனவே, கல்வி, வேலை வாய்ப்புகளில் இவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.  கோயில் அர்ச்சகருக்கு வெகு சொற்ப ஊதியமே கிடைக்கிறது.  ஆனால் இக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன.   அவற்றின் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.


    பழமையான இக்கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை.   இப்போது இருக்கும் கல்வெட்டுக்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு 27.07.1990ல் நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது வைக்கப்பட்டதுதான்.  பழங்கால கல்வெட்டுக்கள் எதையும் உள்ளே காணமுடிவதில்லை.   காரணம் குடமுழுக்கு, திருப்பணி என்ற பெயர்களில் புடைப்புச் சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியவற்றின் மீது வண்ணம் பூசுவதும், கல்வெட்டுக்களை அதன் தொன்மையைப் பற்றி ஏதுமறியாமல் உடைத்தெறிவதையும் வழக்கமாக உள்ள நாட்டில் ஆதாரங்களை தேடுவது கடினமான பணியாகும்.  பழந்தமிழ் ஓலைச் சுவடிகளின் பெருமை புரியாமல் வெந்நீர் போடுவதற்குப் பயன்படுத்தியதைப் போலத்தான் இதுவும்.


    கோயிலின் அமைப்பு, நிலை ஆகியவற்றைப் பார்க்கும்போது அதன் தொன்மை நமக்குப் புலப்படுகிறது.  இதனுடைய காலத்தைச் சரியாக கணிக்க முடியாவிட்டாலும் கோயிலின் தொன்மை, அங்கு இன்னும் வாழ்கின்ற சமணர்கள் ஆகியவற்றைக் கொண்டு நோக்கும்போது களப்பிரர் காலத்தைச் (கி.பி.250-கி.பி.600) சேர்ந்ததாக இருக்கலாம் என்பதை அவதானிக்க முடிகிறது.  


    இப்பள்ளி சமயப் போர்களில் அழிந்து போகாமல் எஞ்சியிருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.  வைதீக மதங்களான சைவம் மற்றும் வைணவத்துடன் ஒத்துப்போகும் மனநிலை காலப்போக்கில் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.  சமணராக இருந்து சைவராக மாறிப் போன ஜெயங்கொண்டார் போன்ற இவ்வூர் பெரியவர்கள் களப்பிரர்களுக்குப் பின்னால் வந்த அரசர்களிடமும் சைவ, வைணவ மதங்களிடமும் ஓர் இணக்கமான உறவைப் பேணியிருக்கவும் கூடும் என்று நம்ப வரலாற்றில் இடமிருக்கிறது.


துணை நின்ற நூல்கள்:

    01. சமணமும் தமிழும்             -     பூம்புகார் பதிப்பகம்
    02. பெளத்தமும் தமிழும்         -    நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு
    03. களப்பிரர் காலத் தமிழகம் -    (அ.மார்க்ஸ் அவர்களின் நீண்ட பின்னுரையுடன்) விடியல் பதிப்பகம்
      (மேற்கண்ட மூன்று நூல்களும் மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்டவை)
    04. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்     -    தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
                            தமிழில்: வெ. கிருஷ்ணமூர்த்தி   
    05. வால்காவிலிருந்து கங்கை வரை    -    ராகுல சாங்கிருத்தியாயன்
                            தமிழில்: கண. முத்தையா
    06. பகவான் புத்தர்            -    தர்மானந்த கோஸம்பி           
                            தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ.
    07. மாயையும் எதார்த்தமும்        -    டி.டி.கோசாம்பி
                            தமிழில்: வி.என்.ராகவன்
    08. சொல்வதால் வாழ்கிறேன்        -    அ. மார்க்ஸ்

வியாழன், நவம்பர் 18, 2010

ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி :19.11.2010

ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி:     19.11.2010






                   தோற்றம்:  07.03.1931                                               மறைவு: 19.11.2005

திருமிகு.ச.முனியப்பன்  அவர்கள்,
கிளை அஞ்சல் தலைவர்,
நிறுவனர்,
தலைமையாசிரியர்,
வ.உ.சி. உதவி தொடக்கப்பள்ளி,
அண்ணாபேட்டை-614714,
வேதாரண்யம் -வட்டம்,
நாகப்பட்டினம்- மாவட்டம்,  
 
என்றும் நினைவில்...

சாரதாமுனியப்பன்,
திருக்குவளைக்கட்டளை,
அண்ணாபேட்டை - 614714.

மு.தமிழரசி-வ. அண்ணாதுரை,

மு. சட்டநாதன்- இரா.மல்லிகா,

மு. செந்தில்நாதன்-ம.இராசலெட்சுமி,

மு. மங்கையர்க்கரசி,
மு. இராமநாதன்-சி.சுந்தரவள்ளி,
மு.சிவகுருநாதன்-த. ரம்யா.

பேரன்- பேத்திகள்:
 

பா. பாரதி,
பா. சிவா,

அ. லெட்சுமிபாரதி,

அ. திவ்யபாரதி, 
ச. ஐஸ்வர்யா,

ச. விக்னேஷ்வரன்,  
செ. அருண்,
செ. கார்த்திகா,
இரா. பிரவீன்,  
இரா. பிரியதர்சினி.

ஞாயிறு, நவம்பர் 14, 2010

பெயர் /விளம்பரப் பலகைகளில் தமிழ்

பெயர் /விளம்பரப் பலகைகளில் தமிழ்.
                                                                                        -மு.சிவகுருநாதன்.                                                                       





சென்னை மாநகராட்சியில்  விளம்பரபலகை மற்றும் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டு ஆங்கங்கே தமிழ் எழுத்துக்களைக் காணமுடிகிறது.சில தனித்தமிழ் மொழியாக்கங்கள் நகைச்சுவையாக இருந்தாலும்   இதுவரையில் தமிழில் எழுதப்படாத பல பன்னாட்டு நிறுவனகளின் பெயரைத் தமிழில் காணும்போது நன்றாகத்தான் இருக்கிறது. நிறைய      நிறுவனங்களின்   பெயரைப்  நிறுவனங்களின் பார்க்கும்போது எப்படி உச்சரிப்பது என்பதுகூட தெரிகிறது. 

வலிந்து திணிக்கப்பட்ட சில தமிழ்ப் பெயர்கள் நகைப்பிற்கிடமாக உள்ளதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.காலப்போக்கில் பயன்பாட்டில் புதிய சொல்லாக்கங்கள் புழக்கத்தில் வருவதற்கு இது வழிவகுக்கும். இந்த நடவடிக்கையை எடுத்துள்ள மேயர் மா.சுப்ரமணியனின் செயல் பாராட்டுக்குரியது.இச்செயல்பாடு தமிழகத்தின் அனைத்து பெருநகரங்கள் மற்றும் நகரங்கள் எல்லாவற்றிலும் நடைமுறைக்கு வரவேண்டும்.

மத்திய அரசின் துறைகளில் அந்தந்த மாநில மொழிகள் இடம்பெறவேண்டும் என்ற கொள்கை பல நேரங்களில் கடைபிடிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் மைல்கற்கள் தமிழில் இல்லை என்பது அடிக்கடி பேசும் விஷயமாக உள்ளது. மாநிலங்களில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அந்தந்த மாநில மொழி, இந்தி,ஆங்கிலம் ஆகிய மூன்றும் இருக்குமாறு பார்த்துக்கொள்வது மரபு.ஆனால் பல நேரங்களில் இம்முறை பின்பற்றப்படுவதேயில்லை. இவை குறித்து மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிகக் கட்டிடத்தில் இயங்கிவருகிறது. அதற்க்குச் செல்லும் இரு வழிகளில் ஒன்றில் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் பெயர்ப்பலகையும்   மற்றொரு வழியில் தமிழில் மட்டும் ஒரு பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டுள்ளது.உள்ளேயும் தனித்தனியேதான் பெயர்ப்பலகைகள் வைத்திருக்கிறார்கள்.  (படம் காண்க.)



ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் தமிழையும் இடம் பெறச் செய்வதில் என்ன சிக்கல் என்று தெரியவில்லை? பொருளாதாரச்சிக்கல் இருக்க வாய்ப்பில்லை. தமிழ் மற்ற இரு மொழிகளுடன் இடம் பெறுவதை வேண்டுமென்றே தவிர்க்க நினைப்பது புரிகிறது.

தமிழ்   அமைப்புகளும், சில அரசியல் கட்சிகளும் பெயர் மற்றும் விளம்பரப் பலகைகளில் தமிழ் தவிர இதர மொழி எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் போராட்டத்தில் அடிக்கடி ஈடுபடுவதுண்டு.நாம் தமிழ் தவிர இதர மொழிகளில் எழுதவேண்டாம் என்று சொல்லவில்லை. 

தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை உரிய முக்கியத்துவம் அளித்து எழுத வேண்டியது அவசியம். மாநில அரசு இது குறித்து மத்திய அரசு அலுவலங்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவேண்டும். "தமிழ் வாழ்க " என்று தமிழகமெங்கும் பல்லாயிரம் யூனிட் மின்சாரத்தை வீணாக்குவதைவிட  இது பயனுள்ள வேலையாகும்.    மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பிராந்திய மொழிகளை மதிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் .

சனி, நவம்பர் 13, 2010

யூனிகோடு கன்சார்ட்டியம் (UNICODE CONSORTIUM) அல்லது கனிமொழி தமிழறிஞராகவும் அரவிந்தன் கணினித்தமிழ் வல்லுனராகவும் மாறிய கதை.

யூனிகோடு  கன்சார்ட்டியம் (UNICODE CONSORTIUM) அல்லது கனிமொழி தமிறிஞராகவும் அரவிந்தன் கணினித்தமிழ்  வல்லுனராகவும் மாறிய  கதை.                                                                                                                                                                                                              -மு.சிவகுருநாதன்  

வடமொழி மற்றும் கிரந்த எழுத்துக்களை யூனிகோடு கன்சார்ட்டியம் 
(UNICODE CONSORTIUM) என்று அழைக்கப்படும் ஒருங்குறியீட்டு கூட்டமைப்பில் சேர்ப்பது  தொடர்பான முடிவை தமிழறிஞர்களுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளதாக 07.11.2010 அன்று நாளிதழ்களில் செய்தி வெளியானது.
  
இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறைஅமைச்சர் ஆ.ராசாவுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதிஒரு கடிதம் எழுதியுள்ளதாகவும் இப்பிரச்சினை தொடர்பாக முதல்வர் கூட்டிய கூட்டத்தில், நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் கா.பொன்முடி , திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் பேராசிரியர் மு.அனந்தகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் கனிமொழி , எழுத்தாளர் து. ரவிக்குமார்(வி.சி) எம்.எல்.ஏ., தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.ராசேந்திரன், சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்ப நிபுணர் (!?) கனிமொழியின் கணவர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும்  அச்செய்தி சொன்னது.




ஒரு முன் கதை சுருக்கம்:


 உலகளவில் உள்ள அனைத்து மொழிகளின் எழுத்துகளையும்கொண்டு  உருவாக்கப்பட்ட யூனிகோடு  (Unicode)  என்ற  ஒருங்குறி முறை ஒரு கணினி எழுத்து குறியீட்டு முறை எனலாம் . தமிழ் யூனிகோடை  செம்மொழி மாநாட்டின் போதுதான்   தமிழக அரசு அங்கீகரித்து   முறையான அறிவிப்பை வெளியிட்டது.



வெவ்வேறு எழுத்துருக்களை பயன்படுத்தும் நிலை  மாறி, யூனிகோடு எழுத்துருவின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. அந்த முறையைக் காலத்துக்கு ஏற்ப நடைமுறைப்படுத்த 'யூனிகோடு கன்சார்ட்டியம்' (unicode consortium ) என்ற அமைப்பு செயல்படுகிறது.இந்த 'யூனிகோடு கன்சார்ட்டியம்' (unicode consortium )  என்பது பன்னாட்டு நிறுவனம்.இதில் தனி நபர்கள் மற்றும் அரசுகள் அங்கத்தினராக இருக்கின்றனர்.

இந்நிறுவனத்தில் வாக்குரிமை பெற்ற உறுப்பினராக   இந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை  உள்ளது.இந்த முறையில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு குறிப்பிட்ட இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.  தமிழ் எழுத்துக்களுக்கு யூனிகோடில் 128 இடங்கள்தான்  கிடைத்துள்ளது.  அந்தஇடங்களைக்கொண்டு  247    தமிழ் எழுத்துகளையும் ஒருங்குறிக்குள்  (unicode  ) கணினி வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர்.  

புழக்கத்தில் இருக்கும் ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ ஆகிய கிரந்த எழுத்துகளும்  தமிழ் எழுத்துகளுடன் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தினால்  247   தமிழ் எழுத்துகளுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கி எளிமையான பயன்பாட்டை உருவாக்க முடியும் என தமிழ்க்  கணினி வல்லுநர்கள் "யூனிகோடு கன்சார்ட்டியம்"  (unicode consortium )அமைப்பிடம் தொடர்ந்து  வேண்டுகோள் விடுத்து  வருகிறார்கள்.

2010 ஜூலை 10ஆம் நாள், ஸ்ரீ ரமண சர்மா என்ற நபர் ஒரு பரிந்துரையை "யூனிகோடு கன்சார்ட்டியம்" (unicode consortium ) அமைப்பிடமும் இந்திய அரசிடமும்   சமர்ப்பித்துள்ளார். அதில்   26 கிரந்த எழுத்துகளைச் நீட்சித்தமிழ் 
(EXTENDED TAMIL ) என்ற பெயரில்  சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார்.இது
மூன்று மாதங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கும்  அனுப்பப்பட்டது .  


தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா தலைமையிலானஇந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை  2010   செப்டம்பர் 6-ம் நாள் கிரந்த மற்றும்   புலவர்கள் 14 பேர்க் கொண்டு  நடத்தப்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவினைப் பரிந்துரையாக  ஒருங்குறி ஆணையத்துக்கு(unicode consortium ) இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அனுப்பியுள்ளது.


அக்கூட்டத்தில் கலந்துகொண்ட  14 பேர்களில்  ஒருவரான  ஸ்ரீ ரமண சர்மா காஞ்சி சங்கரமடத்தைச்  சேர்ந்தவர்.ஆ.ராசா தலைமையிலானஇந்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை  என்ன மாதிரியான முடிவை அனுப்பியுள்ளது என்று தெரியவில்லை.


 03.11.2010 இல்  கூடிய தமிழறிர்கள் ,  "ஒருங்குறி (unicode ) எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமஸ்கிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.  இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்". எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் .


03.11.2010 அன்று மாலை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், 17 அறிஞர்கள்  கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்களாம் .17 அறிஞர்கள்  யார் என்ற விவரம் தெரியவில்லை.


அவர்கள் புதிதாகச் சேர்க்க விரும்பும்  கிரந்த ஒருங்குறி(unicode  ) எழுத்துப் பட்டியலில் "எ,ஒ,ழ,ற,ன' ஆகிய ஐந்து தமிழ்  எழுத்துகளைச் சேர்ப்பதனால் ஏற்படும் சாதக பாதகங்களை ஆராய தகுந்த கால அவகாசம் வேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கை. 


04.11.2010 அன்று மாலை பேராசிரியர் ஆனந்தகிருட்டிணன் மூலம் முதல்வருக்கு தகவல் சொல்லப்பட்டு முதல்வர் தமிழுக்காக   தீபாவளி கூட கொண்டாடாமல்  இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட  தமிழ் அறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் நிரம்பிய மேற்படி கூட்டம் நடந்ததாக அறிகிறோம்.


 நவ.06   இல் "யூனிகோடு கன்சார்ட்டியம்" (unicode consortium ) அமைப்பு  யூனிகோடில் தமிழுக்கான  கூடுதல்  இடம் குறித்த முடிவை  வரும்    பிப்ரவரி 26  (2011) க்கு    தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து நமக்கு நிறைய அய்யங்கள் எழுகின்றன.


மூன்று மாத காலமாக இப்பிரச்சினை குறித்து தி.மு.க. வின் மத்திய அமைச்சர் என்ன செய்துகொண்டிருந்தார்? ஸ்ரீரமண  சர்மா  உள்ளிட்ட 14 அறிஞர்கள் (?!) அளித்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது? ஸ்ரீரமண சர்மாவில்  கோரிக்கை வழி மொழியப்பட்டிருக்கும் என்பதில் அய்யமில்லை 

.யூனிகோடு (unicode) என்ற ஒழுங்குரியமைப்பில் தமிழுக்கு அதிக இடங்களைப் பெற்றுத்தர ஆ.ராசாவின் தகவல் தொழில் தொடர்புத்துறை இதுவரை ஏன் முயலவில்லை? இந்தியாவில் பயன்படுத்தப்படுகிற 22  மொழிகளைத் தவிர கிரந்தம், சமஸ்கிருதம் உள்ளிட்ட வழக்கில் இல்லாத    மொழிகளுக்கு ஒருங்குறியில் (unicode  ) இடமளிக்க முயலும் போது தமிழுக்கான இடத்தை அதிகரிக்கக் கேட்பதில் என்ன தவறு?

தமிழோடு கிரந்தம் நெருங்கிய தொடர்புடையது.இந்நிலையில் இது பற்றி விவாதிக்க அழைக்கப்பட்ட 14 பேரில் ஏன் தமிழறிஞர்கள் இல்லை? இது ஆ.ராசாவுக்கு தெரியமா? தெரியாதா? தெரியாதென்றால்   அவருக்கு எதற்கு அமைச்சர் பதவி?

ஒரு பக்கம் தமிழறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டுள்ள தனித்தமிழ்வாதிகள் ஏற்கனவே தமிழில் ஏற்கப்பட்டுள்ள ஜந்து கிரந்த எழுத்துக்களை ஏற்க மறுத்து வருகின்றனர். இது நியாயமற்றது. மாறி வரும் சூழலுக்குத் தகுந்த வகையில் மொழியில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. தனித்தமிழ்வாதிகளை பாசிச மனநிலையையும் தூய்மைவாதத்தையும் நாம் ஏற்க முடியாது.

ஆனால் தமிழுக்கான ஒருங்குறி (unicode) இடம் போதாத நிலையில் தமிழ் எழுத்துக்களை கிரந்த எழுத்துருவுடன் இணைப்பதையும், அதற்கான இடத்தை தமிழிலிருந்து அளிப்பதை எதிர்ப்பது நியாயமானதே. யூனிகோடு கன்சர்ட்டியத்திற்கு (unicode consortium ) உரிய பரிந்துரைகள் செய்ய வேண்டிய ஆ.ராசாவின் துறை சில மொழி விரோதிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகிருப்பதாகத் தோன்றுகிறது.

மத்திய அரசின் நிலைதான் இப்படியென்றால்      மாநில அரசின் களம் தாழ்ந்த செயல்பாடு வருத்தத்தை அளிக்கிறது.. யூனிகோடு கன்சர்ட்டியம் (unicode consortium )முடிவெடுக்க சில நாட்கள் இருக்கும்  முன்பு பலரது வேண்டுகோளால் விழித்துக் கொண்ட தமிழக அரசு உரிய துறை வல்லுனர்களையும் தமிழ் மற்றும் பிறமொழி அறிஞர்களையும் கொண்டு வெளிப்படையான விவாதம் செய்யாமல் ஏதோ ஒரு ரகசியக் கூட்டம் போட்டு அதில் எடுக்கப்பட்ட முடிவு முதல்வர் தலைமையில் கூடிய ஒரு அறிஞர் (?!) குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதுவது என்ற நிலையுடன் முடிந்திருக்கிறது.

தஞ்சைத்  தமிழ்ப் பல்கலைக்கழகம் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து  கொண்டவர்கள் பற்றிய விவரம் இல்லை. முதல்வர் தலைமையில் கலந்து கொண்ட அறிஞர்களில் வைரமுத்து, கனிமொழி, து.ரவிக்குமார், கனிமொழியின் கணவர் அரவிந்தன் (சிங்கப்பூர் ) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஒரு உயர்மட்ட அறிஞர் குழு அமைக்கப்போவதாகவும் அறிவிப்பு உள்ளது. அதிலும் மேற்கண்டவர்கள் இடம் பெற வாய்ப்பு மிக அதிகம்.

மேற்கண்ட நபர்கள் தமிழுக்கும், கணினி தொழில் நுட்பத்திற்கும் ஆற்றிய பங்கு பணிகள் என்ன? இவர்களைத் தமிழறிஞர்கள் என்றும் கணினித்தமிழ்  தொழில் நுட்பவல்லுனர்கள் என்று அரசு நற்சான்று வழங்கக் காரணம் என்ன? தமிழ் தொடர்பான கணினி நுட்பத்திற்கும் தமிழ் மொழியின்  வளர்ச்சிக்கும் பணியாற்றுகின்ற அறிஞர்கள் தமிழகத்தில் அல்லது அயலகத்தில் இல்லையா? ஏன் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள  அரசு மறுக்கிறது?      உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, தஞ்சை பெரிய கோவில் -1000  வது ஆண்டு விழா  மற்றும் தமிழ், வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், கலை போன்ற எந்தத் துறையாயினும் அமைக்கப்படுகின்ற குழுக்களில் இவர்களுடைய பெயர் இல்லாமல் இருப்பதில்லை. 

முதல்வருக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் என்ற ஒரே தகுதியை  விட இவர்களுக்கு வேறு எந்தத் தகுதியும்  குறிப்பிட்ட பிரிவில் இல்லை என்பதே உண்மை. இவர்களை அறிஞர்கள், வல்லுநர்கள் என்று அழைப்பதையாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வெற்று    ஆரவாரக் கூச்சல்கள் மூலம் தமிழ்ப் பெருமை பேசி வருகின்ற தி.மு.க. மற்றும் இதர திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழையும் அதன் அறிவுலகத்தையும் மிகவும் துச்சமாக மதித்து இலக்கியம், வரலாறு போன்றவற்றில் புனைவுகளை உருவாக்கி போலியான அறிவு ஜீவி கும்பலை உலவ விடுவதை கண்டிக்காமல் இருக்க முடியாது.         












வியாழன், நவம்பர் 11, 2010

சிவில் உரிமை இயக்கங்களின் அறவியல் முகம்

சிவில் உரிமை இயக்கங்களின் அறவியல் முகம்

                                                                                                                                                                     -மு.சிவகுருநாதன்







(டாக்டர் கே.பாலகோபால் :வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால் -தொகுப்பும் ,மொழியாக்கமும் :அ.மார்க்ஸ் -நூல் குறித்தான பார்வை )

        "இந்தியாவில் மனித உரிமை இயக்கத்தைப் பொறுத்தவரை பாலகோபால் "வாராது வந்த மாமணி" .ஒரு சகாப்தம் ,இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தைக் கனக்கச் செய்துவிட்டு ,அவர் மறைந்துவிட்டார் . தன்னைப்பற்றி ஒரு கணமேனும் நினைத்திருந்தால் ,அவர் தன் உடலையும் உயிரையும் இப்படி அலட்சியம் செய்திருக்கமாட்டார்."
   
       "என்னைவிட அவர் 12 வயது இளையவர் , எனினும் நான் என்னை அவருடைய கால் தூசாகவே கருதி வந்திருக்கிறேன் .  அத்தகைய அறவியல் , மனித நேய ஆளுமையை இனி என் வாழ்நாளில்  ஒரு போதும் சந்திக்கப்போவதில்லை."
                                                       
                                                                        -எஸ்.வி.ஆர்., உயிரெழுத்து, நவம்பர் 2009 


          "காந்தியைப்போல வன்முறையற்ற வழிமுறையை (அஹிம்சை) இந்தியச் சிந்தனை மரபிலிருந்து (குறிப்பாக சமணம் ) வரித்து அதற்கொரு   ஆன்மிகப் பரிமாணத்தையும் பாலகோபால் அளிக்கவில்லை . காந்தி ஒரு கற்பனாவாதி  ( utopian ) . ஆயுதங்களற்ற இராணுவம் , சிறைச்சாலைகள் அற்ற நாடு , தண்டனை வழங்காத நீதிமன்றங்கள் பற்றியெல்லாம் கனவு கண்டவர் . இந்தக் கனவுகளையெல்லாம் அடியாழத்தில் புதைத்துக்கொண்டு எதார்த்த அரசியல் தளத்தில் இயங்கியவர் , பாலகோபால் எதார்த்தத்தின் சிக்கல்களை முழுமையாகப் புரிந்துகொண்டு அத்துடன் ஒரு அறப்பரிமாணத்தை    இணைக்க முயன்றவர் . அந்த வகையில் அவர் காந்தியைவிடக் கூடுதலான ஒரு எதார்த்தவாதி".

                                                                                     -அ.மார்க்ஸ்,தீராநதி, நவம்பர் 2009

            எஸ்.வி.ஆர்., அ.மார்க்ஸ் ஆகிய இரு மனித உரிமை செயல்பாட்டாளர்களின்  கருத்துக்கள் பாலகோபாலின்  பெருமையை நமக்கு உணர்த்துகின்றன.

           இந்நூலில் பாலகோபாலின் ஒரு கட்டுரை மற்றும் நேர்காணல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாலகோபால் குறித்த நினைவுகளையும் வாழ்க்கை குறிப்பையும் அ.மா. தந்துள்ளார்.

            ஆந்திராவில் APCLC - ல் செயல்பட்டு கருத்து முரண்பாட்டால் அதிலிருந்து விலகி, பின்னர் HRF ஐ 1998 ல் தொடங்குகிறார். 1989 -ல் ஆந்திர காவல் துறையால் கூலிப்படை "பிரஜா பந்து " வால் கடத்தப்பட்டு 3 நாட்கள் பிணையில் இருக்கிறார். அச்செய்தியை பத்திரிகைகள் அதிகம் எழுதிய போது கிராமங்களில் இதைவிட பெரிய மனித உரிமை மீறல்கள் தினந்தோறும் நடைபெறுகின்றன.அதில் கவனம் செலுத்துமாறு வேண்டியது அவரது தன்னலமற்ற  தன்மையை வெளிப்படுத்துகிறது.

                         மக்கள் இயக்கங்களின் பயனற்ற தன்மை,வறட்டுத்தனமான பார்வை போன்றவற்றை  விமர்சனம் செய்து சிவில் உரிமை குறித்த அறவியல் அணுகுமுறையை கையாண்டவர். பெரிய அளவில் மக்கள் பங்கேற்க அமைதி வழி அணி திரட்டலை பரிந்துரைத்து அதன் சாதகங்களை பட்டியலிடும் போது அவரது போராட்ட வடிவங்கள் தூலமாகத்  தெரிகின்றன.

                      "உடனடியான பொருளாதார மற்றும் சமூகக் குறிக்கோள் இல்லாத எந்த ஒரு இயக்கமும் விரிந்த மக்கள் இயக்கமாக மாறமுடியாது." என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். அரை குறையான ஜனநாயகம்  நிலவும் நாட்டில் உடனடி பொருளாதரக் கோரிக்கைகள் வெகுசனத் தன்மை அடைய வேண்டுமானால், சிவில் உரிமை இயக்கங்கள் உழைக்கும் வர்க்கத்தில் பிறந்து அறிவுஜீவிகளாக மாறியுள்ள  புதிய இளந்தலைமுறையை ஈர்க்க வேண்டும் என்கிறார். 

                   சிவில் உரிமை இயக்கங்கள் தலித்களை ஈர்ப்பதில் வெற்றி பெற்ற அளவிற்குப் பெண்களை ஈர்ப்பதில் வெற்றி பெறவில்லை என்று ஒத்துக்கொள்கிறார். ஒடுக்கு முறைகள் அதிகரிக்கும் போது புதியவர்கள் சிவில் உரிமை இயக்கங்களின் பால் ஈர்க்கப்படலாம் என்று நம்பிக்கை வைக்கிறார்.

                தனது உடல்நிலையைக் கூட சரியாக கவனத்தில் கொள்ளாத பாலகோபாலின்  பணிகள் மிகவும் அரிதானது. முன்னுரையில்  அ.மா. குறிப்பிட்டுள்ளது போல் அவரது படைப்புக்கள் தமிழில் வெளிவர வேண்டும். மனித உரிமைப் பணி செய்வோர்க்கு அது அரிச்சுவடியாக அமையக் கூடும். பாலகோபாலை அறிமுகம் செய்வதில் இச்சிறு நூல் முழுமை பெற்றுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

டாக்டர் கே. பாலகோபால்
“வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால்”
தொகுப்பும் மொழியாக்கமும்: அ. மார்க்ஸ்
விலை: ரூ.18 பக்கங்கள்: 48

வெளியீடு :
 மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம்   (PUHR),
3/5, முதல் குறுக்குத் தெரு, 
சாஸ்திரி நகர், 
சென்னை – 600020.
செல்: 9444120582.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), 
179'அ".மகாத்மா வீதி(மாடி) ,
புதுச்சேரி.-605001.
 9894054640
peoples_rights@hotmail.com

நூல் தயாரிப்பு /விற்பனை : 

புலம். 
216/332 -திருவெல்லிக்கேணி  நெடுஞ்சாலை , 
திருவெல்லிக்கேணி, 
சென்னை-600005 
செல் :9840603499
மின்னஞ்சல் :pulam2008@gmail.com 













                                                                                         
                                                                           

புதன், நவம்பர் 10, 2010

நவீன ராஜராஜ சோழனாக ஏங்கும் மு.கருணாநிதி

நவீன ராஜராஜ சோழனாக ஏங்கும் மு.கருணாநிதி
                                                                                                                      -மு .சிவகுருநாதன்

                  

   கோவை செம்மொழி மாநாட்டு ஆரவாரங்களுக்குப் பிறகு தஞ்சாவூரில் பெரியகோயில்   ஆயிரமாவது ஆண்டுவிழா கொண்டாடி மகிழ்ந்துஇருக்கிறது தமிழக அரசு.விழாவின்போது தஞ்சை எங்கும் தோரணங்கள்;அதில் பெரியகோயில் -ராஜராஜன்;பழைய தலைமைச் செயலகம் -மு.கருணாநிதி என படங்கள் மின்னின .புதிய தலைமைச் செயலகத்தை ஏன் போடவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.ரொம்பவும் நியாயமான கேள்வி?தமிழ்நாட்டின் அவலம் இதுதான்.                                                        


                   எது  எப்படி இருப்பினும் இந்த மாதிரியான அபத்தக் கூத்துகளுக்கு மத்தியில் சோழ மன்னன் ராஜராஜனைப்போல தமிழக மன்னனாக மு.கருணாநிதியை அவரது உடன்பிறப்புகளும் இறுமாந்து ஏற்றுக்கொள்கின்றனர் .      இம்மாநாட்டில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு;அதன் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அயோத்தி தீர்ப்பை நேரடியாக விமர்சனம் செய்யாமல் கிண்டல் தொனியில் பேசியது போன்றவை    ராஜராஜசோழனாக மாற எத்தனிக்கும் அவரது மனப்போக்கை பிரதிபலிக்கிறது.

                முதல்வர் தஞ்சை மாநாட்டு நிறைவுரையில்  செம்மை நெல் என்றொரு நெல் ரகத்தை அறிமுகம் செய்வதாகவும் அதற்கு ராஜராஜன்-1000 என்று பெயர் சூட்டியும் அறிவிப்பு வெளியிட்டார். தற்போது IR-20  என்றொரு நெல் ரகம் உண்டு.அதைப்போல   RR-1000   (சுருக்கமாக இப்படிச்சொல்லியே நமக்கு பழகிவிடும்.) மற்றொரு நெல் ரகம் என்று யாரும் நினைக்கவேண்டாம்.செம்மை நெல் என்பது நெல் ரகம் அல்ல.அது ஒரு சாகுபடி முறை.


                       ஆனால் இன்று வரை இந்த தவறுதலான அறிவிப்பிற்கு உரிய விளக்கம் அரசு தரப்பில் இல்லை.
ஆனால் சாலையோரமெங்கும் உடன் விளம்பரப் பலகைகள் வைத்தாயிற்று. தமிழக மன்னர் சொல்லிய சொல்லை மாற்றக் கூடாதல்லவா? எனவே ராஜராஜன் -1000 முறையில் நெல் சாகுபடி செய்வீர்! (படம் காண்க ) என்று ராஜராஜன் -1000 நெல் என்பதை பெரிய எழுத்திலும் முறையில் என்பதை மிகச் சிறிய எழுத்திலும் எழுதி விளம்பரம் செய்ய வேண்டிய அவலம் தமிழக வேளாண்துறை அலுவலர்களுக்கு ஏற்பட்டுள்ளது .

மன்னராச்சே! சொன்னது சொன்னதுதான்! மாற்ற முடியுமா என்ன?    

                    தஞ்சை மாநாட்டுப்பணிகள்  தொடங்கப்பட்டதிலிருந்தே முதலாம் ராஜராஜன் சமாதி பற்றி தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளவேண்டும், ராஜராஜன் சிலையை பெரிய கோயில் உள்ளே நிறுவவேண்டும் என தமிழ் தேசியர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் முதல்வர் பேச்சில் செம்மை நெல் @ ராஜராஜன் -1000 நெல் தவிர எந்த அறிவிப்பும் இல்லை. 


                   கருணாநிதியால் நிறுவப்பட்ட ராஜராஜன் சிலையை பெரிய கோவில் உள்ளே வைக்க இந்திய தொல்லியல் துறை அனுமதிக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கதுதான். ராஜராஜன் சிலை என்ன, கருணாநிதி, இளவரசர்கள், இளவரசிகள் சிலைகளைக் கூட நிறுவிக்கொள்வதில் எமக்கெல்லாம் எவ்வித மறுப்பும் இல்லை.
                    

                                    பெரும் போராட்டத்திற்குப் பிறகு உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை அகற்றி விட்டோம்  என்று பீற்றிக்கொள்ளும் இவ்வரசு (உத்தப்புரத்தில் அந்தப் பாதையை தலித்கள் இன்னும் பயன்படுத்த முடியாதது வேறுகதை.)
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தன் நுழைந்த வடக்கு வாசல் தீண்டாமைக் கதவை திறக்க செய்தது என்ன? 

                தமிழக அரசின் அறநிலையத் துறை அமைச்சர் இராம.பெரியகருப்பன் "ஆகம விதிகளை மீற முடியாது என்கிறார். என்ன மசுரு ஆகம விதிகள் என்பதை அமைச்சர்தான் விளக்க வேண்டும். 


           நீதிமன்ற ஆணையின் மூலம் கோயில் அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகும் தீண்டாமை இழிநிலை தொடர்கிறது. ராஜராஜன் சிலையை உள்ளே வைப்பதோடு நந்தன் வாசலையும் திறந்து வைத்தால் நன்றாக இருக்கும்.


                              அயோத்தி நிலம் குறித்த அலகாபாத் உயர்நீதி மன்றத் தீர்ப்பு செப். 30 ,2010  வெளியானது. அத்தீர்ப்பு இந்து மத நம்பிக்கைகள், புராணங்கள் போலியான தொல்லியல் ஆய்வு மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது நாடெங்கும் பெருத்த சர்ச்சையை எழுப்பிருப்பதோடு நடுநிலையாளர்களின் கண்டனத்திருக்கும் ஆளாகியிருக்கிறது. 


                                   இத்தீர்ப்பை நேரடி விமர்சனம் செய்ய விரும்பாத மு.கருணாநிதி, "பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமன் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது.ஆனால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராஜராஜன் சமாதி நினைவுத்தூண் போன்றவற்றை காணமுடியவில்லையே ", என்ற ஆதங்கத்தையும் சேர்த்து வெளிப்படுத்தினர்.


                                     தமிழ்ப்பெருமை ,சோழப்பெருமை, ராஜராஜனாக தன்னையே புனைவுருவாக்கம்  செய்தல், ராஜராஜனின் நவீன அவதாரமாக அடையாளப்படுத்திக்கொள்ளல், குடவோலை முறை என்ற திருவுளசீட்டு முறையை ஜனநாயக முறையாக கற்பிதம் செய்தல் போன்ற பல்வேறு சொல்லாடல்களை உருவாக்கி அந்த நிழலில் தன்னை இருத்திக் கொள்வதற்கு மு.கருணாநிதி பெருமுயற்சி செய்கிறார். 

             இந்த மாதிரியான கேளிக்கைகள் தனிநபர் துதிபாடல்கள் நிரம்ப உள்ள தமிழ்ச் சமூகததில் இத்தகைய செயல்பாட்டிற்கு பெருத்த வரவேற்ப்பு  கிடைக்கக்கூடும். எதிர்ப்பு வெகு சொற்ப அளவில் இருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது. ஆனால் அறிவுத்தளத்தில் நமது மதிப்பீடுகள் வீழ்ச்சியடைவதை அவதானிக்க முடியும். 

        
              ராஜராஜனால் பணியமர்த்தப்பட்ட நூற்றுக்கணக்கான தேவரடியார்கள், பல நூறு ஆண்டுகள் தொடர்ந்த அந்தப் பாரம்பரியம்,அதில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்கள், ராஜாஜிகள், சத்தியமுர்த்திகள் போன்றோரை நேர்நின்று எதிர்த்த முத்துலட்சுமி ரெட்டியின் செயல்பாடுகள் போன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கு எதிராக, இன்று மு.கருணாநிதி வைதீகத்துடன் சேர்ந்து செய்கின்ற சித்து வேலைகள், சதிராட்டத்தை பரதமுனிவரின் நாட்டியமாக மாற்றத்  துடிக்கிற பத்மா சுப்ரமணியன்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம்  போன்றவற்றை வருங்காலம் மன்னிக்காது.



கொசுறு :

001.கி.பி. 1972 இல் மு.கருணாநிதி ராஜராஜனுக்கு சிலை வடித்தார்.
002.கி.பி.1985 இல்  எம்.ஜி. ராமச்சந்திரன் ராஜராஜனின் 1000 வது சதய விழா               கொண்டாடினார்.
003.கி.பி.1995 இல்  ஜெ.ஜெயலலிதா உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில்  நடத்தினர்.
004.கி.பி.2010 இல்  மு.கருணாநிதி பெரிய கோயில் 1000 வது ஆண்டுவிழா எடுத்தார்.


                       இனி வரக்கூடிய ஜெயலலிதாக்கள், இளவரசர்கள், இளவரசிகள் கொண்டாட என்ன செய்வது என்று வருந்தாமலிருக்க சில உருப்படியான யோசனைகள்.

001.கி.பி.2012 இல் முதலாம் ராஜேந்திரன் முடிசூடிய 1000 வது ஆண்டு விழா.
002.கி.பி.2014 இல் முதலாம் ராஜராஜன் முக்தி அடைந்த 1000 வது  ஆண்டு விழா.
003.கி.பி.2022 இல் கங்கைகொண்டசோழபுரம்  நிர்மாணிக்கப்பட்ட1000 வது  ஆண்டு விழா.

செவ்வாய், நவம்பர் 09, 2010

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல்                      -மு.சிவகுருநாதன் 
(அ.மார்க்ஸ்-ன்   "மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல்: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சத்தியமே"    என்ற குறு நூல்  குறித்த விமர்சனம் )   



          முக்கியத்துவம் வாய்ந்த சமகால நிகழ்வுகள் குறித்த தமது பார்வைகளை உடனே முன்வைக்க என்றுமே அ.மார்க்ஸ் தயங்கியதில்லை . அந்த வகையில் "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு " குறித்த இக்குறுநூல்  "பயணி " பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.  

             நாடு விடுதலை அடைந்து  63 ஆண்டுகள் ஆன பிறகும் கூட சாதிய கட்டுமானம் மிகவும் வலுவடைந்து இறுக்கமான ஒன்றாக மாறியுள்ளது . "ஜாதி ஒன்றும் தேசிய அவலம் அல்ல " (பிரிய சாகல் - இந்தியா டுடே : மே, 26, 2010) என்றெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு இந்துத்துவ பிற்போக்கு சக்திகள் கூறிக் கொண்டிருக்கிற நிலையில், சாதி வாரி கணக்கெடுப்பு எதிர்ப்பிற்குப் பின்னாலுள்ள அரசியலை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது . அந்த வேலையை இந்நூல் செய்கிறது .


             1872 இல் ஹண்டரால்   முதல் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது . 1881 ரிப்பன் பிரபுவின் காலத்தில் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை இறுக்கமாக நெறிப்படுத்தப்பட்டது . அதிலிருந்து  1941 தவிர 10  ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.1931 இல் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது . விடுதலைக்குப் பின்னர் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை .

          2001 கணக்கெடுப்பில் 39  விதமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன . 2011 கணக்கெடுப்பில் சுமார் 50  தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன . மதம், மொழி போன்ற கேள்விகளுடன் சாதி உட்பிரிவு பற்றி மற்றொரு வினாவும் கேட்கப்படுவதை "சாதிவாரி கணக்கெடுப்பு என்று சொல்வதே அபத்தம் "என்பதை அ.மார்க்ஸ் விளக்குகிறார்(பக்.16 ).

        சாதி என்ற வகையினத்தை ஒரு அலகாக சேர்ப்பதற்கு அரசு சிரமப்படத் தேவையில்லை.அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, வாக்குரிமை அளிப்பது பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்ற வேலையில் இடம் பெயர்ந்த இந்தியர்களை கணக்கெடுப்பில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையின் நியாயத்தையும் (பக். 34 ) வெளிப்படுத்துகிறார்.தற்போது கணக்கெடுக்கும்போது 45 நாள்களில் இங்கு இருப்போர் குறித்த விவரங்கள் மட்டுமே பதியப்படுகிறது .

       சாதியுணர்வு அதிகமாகும் ;சமூகத்தில் பிளவு ஏற்படும் என்றெல்லாம்  சாதிவாரி இட ஒதுக்கீட்டு எதிர்ப்பளர்கள் முன்வைக்கும் வாதங்களில் எவ்வித நேர்மையும் இல்லை.தலித்களில் உள்ஒதுக்கீடு போன்ற அம்சங்கள் நடைமுறைக்கு வரும்போது பிற வகுப்புகளிடமும் இத்தகைய கோரிக்கைகள் எழ வாய்ப்பு உள்ளது.அத்தகைய சூழலில்   சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் உணரப்படுகிறது.

         தமிழ் தேசிய இயக்கங்கள் சில சாதியைக் கேட்டால் தமிழன் என்று சொல் என பிரச்சாரம் செய்து வருகின்றன.மேலும் சில சாதி அமைப்புகள் பொதுப் பெயரில் தங்களது சாதிப் பெயரை பதிவு செய்யுமாறு கோரிக்கை வைக்கின்றன.அதிலுள்ள உள்பிரிவுகள் எம்.பி.சி.,பி.சி.,போன்றவற்றில் இருக்கக்கூடும்.அந்த சாதி சங்கத் தலைவர்கள் அரசியல் பேரம் பேச மட்டுமே இது உதவியாக இருக்கும்.இது போன்ற சிக்கல்கள் இருப்பினும் சாதி வாரி கணக்கீட்டை மறுப்பது எவ்வகையிலும்  நியாயமாகாது.

         இக்கணக்கெடுப்பில் சாதி பற்றிய விவரந்தான் கேட்கப்படுமே தவிர அதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமிருக்காது.
சாதிவாரி கணக்கெடுப்பில் எதிர்கொள்ளும் குளறுபடிகள், சிக்கல்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி அதற்கு தகுந்த விளக்கங்களுடன் சாதிவாரி கணக்கெடுப்பின் நியாயப்பாட்டை இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.


மக்கள் தொகை கணக்கெடுப்பின் அரசியல்: 
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு சத்தியமே -
அ.மார்க்ஸ் 
பயணி வெளியீடு  
விலை:25  
முதற்பதிப்பு:2010  
216/332 -திருவெல்லிக்கேணி  நெடுஞ்சாலை , 
திருவெல்லிக்கேணி, 
சென்னை-600005  
செல்: 9445724576 
payanibooks@gmail.com