செவ்வாய், ஜூலை 31, 2012

கண்டிரமாணிக்கம் புத்தர் சிலை இன்று... 31.07.2012



கண்டிரமாணிக்கம் புத்தர் சிலை இன்று...   31.07.2012

                                                           -மு.சிவகுருநாதன் 

பிளக்ஸ் மறைப்பில் சேலை சுற்றப்பட்ட புத்தர் சிலை 28.07.2012 மதியம் 2.00 மணி

புத்தர் சிலையை மறைக்கப் பயன்படுத்திய  கோயில் நிர்வாகத்தின் பிளக்ஸ் விளம்பரத்தட்டி.

பிளக்ஸ், சேலை மறைப்பு அகற்றிய பிறகு புத்தர் சிலை 31.07.2012 மதியம் 01.30 மணி.


      திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை பற்றிய தகவல்கள் நாளிதழ்களில் வெளிவந்தன. திரு.அறிவொளி (ஞானஒளி) தனது முகநூலில் குறிப்பு வெளியிட்டார்.

   28.07.2012 அன்று பேரா.அ.மார்க்ஸ், புதுவை கோ.சுகுமாரன், புதுவை சு.காளிதாஸ், அமானுஷ்யன், மு.சிவகுருநாதன் ஆகிய நாங்கள் திருவாரூர் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்தோம். பிளக்ஸ் தட்டி மறைப்பில் சிவப்பு சேலை சுற்றப்பட்டிருந்த புத்தரை படமெடுத்து நாங்கள் முகநூலில் உடன் வெளியிட்டோம்.

   30.07.2012 சென்னை தினமலர், திருச்சி காலைக்கதிர் ஆகியவற்றில் படத்துடன் செய்தி பிரசுரமானது. அதன் பிறகு விழித்துக்கொண்ட தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியன மிக அவசர அவசரமாக சேலை மறைப்பை அகற்றி புத்தர் சிலையை மறைத்து வைக்கப்பட்ட பிளக்ஸ் தட்டியையும் இறக்கி கீழே வைத்திருக்கிறார்கள். சிலைக்கு அடியில் குறிப்பும் எழுதிவைத்திருக்கிறார்கள்.

    இவை எல்லாவற்றையும் செய்துவிட்டு புத்தர் சிலை மறைக்கப்படவேயில்லை என பொய்சொல்லி வருகிறார்கள். தற்பொது தியாகராஜர் ஆலயத்தின் மேற்குவாசல் நோக்கி இருக்கும் புத்தரை கிழக்குபுறமாகத் திருப்பி வைத்து, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதல்ல என்று எழுதிவைக்கப்போவதாக பேசிக்கொள்கிறார்கள்.

 அருங்காட்சியகத்தில் இருக்கும் பிற சிலைகளுக்கும் இவ்வாறு எழுதிவைப்பார்களா இவர்கள்? புத்தர் சிலையை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கிறேம் என்றுசொல்லி எடுத்துவந்து வாசலில் கிடத்திவைப்பது எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை. இனியாவது சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் திருந்துவார்களா?

தமிழகமெங்கும் செழித்திருந்த பவுத்த-சமண மதங்கள்


தமிழகமெங்கும் செழித்திருந்த பவுத்த-சமண மதங்கள்
                                                 
                                       -மு.சிவகுருநாதன்














     திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம் கிராமத்தில் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் குழி தோண்டியபோது சுமார் ஐந்தரை அடி உயர புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டு அச்சிலை மணிகண்டனால் அவ்வூரில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இச்சிலையை ஆய்வு செய்த குடவாயில் பாலசுப்பிரமணியன், டாக்டர் ஜம்புலிங்கம் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த சிலை பிற்கால சோழர் காலத்தை அதாவது 10-11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருத்து சொல்லியுள்ளனர்.

   இப்பகுதிகளில் அடிக்கடி புத்தர், மகாவீரர் சிலைகள் முழுமையாகவோ உடைபட்ட நிலையிலோ கிடைக்கின்றன. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் என்றழைக்கப்படுகிற தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் புத்த-சமண மதங்கள் கோலோச்சிய காலம் பற்றிய புதையுண்ட உண்மைகள் இவைகள் மூலம் வெளிச்சத்திற்கு வருகின்றன. தமிழகம் முழுதும் இதுதான் உண்மை என்றபோதிலும் இந்த மாவட்டங்களை குறிப்பிட்டு சொல்வதற்குக் காரணம் இந்தப் பகுதிகள் சோழப்பேரரசின் ஆளுகை மற்றும் பெருமை பேசப்படும் பகுதியாக இருப்பதுதான்.

   தமிழ்நாடு முழுதும் களப்பிரர் காலம் தொட்டும் அல்லது அதற்கு முன்பும் இங்கு பரவியிருந்த தமிழ் புத்தம், தமிழ் சமணம் பற்றிய ஆய்வுகள் இங்கு முறையாக நடைபெறவில்லை. அதைச் செய்வதற்கு குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஆட்கள் இங்கில்லை. இரா.நாகசாமி, குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்ற ஆய்வாளர்களிடம் தமிழ் புத்தம், தமிழ் சமணம் குறித்த நேர்மையான ஆய்வு நோக்கம் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இவர்களுடைய ஆய்வுகள் முற்றிலும் சோழப்பெருமை பேசுவதாகவே இருப்பதால் நமது அவநம்பிக்கையை இங்கு பதிவு செய்யவேண்டியுள்ளது. மயிலை.சீனி.வேங்கடசாமி போன்ற ஆளுமைகள் இன்றில்லை.

   கண்டிரமாணிக்கத்தில் கிடைத்த புத்தர் சிலையை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகார வர்க்கம் கைப்பற்றி (இது அவர்களின் மொழி) திருவாரூர் மாவட்ட அருங்காட்சியகத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அருங்காட்சியக வாயிலில் வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு இந்துத்துவவாதிகளிடமிருந்து எதிர்ப்பு வரவே ஓர் சிவப்புச் சேலையால் சுற்றி அருங்காட்சியக வாயிலில் அமர்த்தப்பட்டு பிளக்ஸ் போர்டு ஒன்றால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

   28.07.2012 அன்று பேரா.அ.மார்க்ஸ், புதுவை கோ.சுகுமாரன், புதுவை சு.காளிதாஸ், அமானுஷ்யன் ஆகியோருடன் நானும் திருவாரூர் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்தவுடன் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம். பிளக்ஸ் தட்டி மறைப்பை எடுக்க அனுமதி மறுக்கப்படவே சுற்றப்பட்டிருந்த சேலையை மட்டும் அகற்றி புத்தரை பக்கவாட்டில் மட்டுமே எங்களால் படமெடுக்கமுடிந்தது. அருங்காட்சியக காப்பாளர் கருணாநிதி இச்சிலையால் நிறைய பிரச்சினைகள் வருகிறது என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். விரைவில் இந்தச் சிலை சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுமென்றார்.

   தங்களுக்குத் தேவைப்படும்போது புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகச் சொல்லி விழுங்கும் இந்துத்துவம் சைவக் கோவிலுக்குள் இருக்கும் அருங்காட்சியகத்தில் புத்தர் சிலையை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பதை என்ன சொல்ல? துளிகூட சகிப்புத்தன்மை இல்லாததாய் இந்துமதம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அரசு ஏன் சைவ அல்லது வைணவக் கோயில்களுக்குள் அருங்காட்சியகத்தை அமைக்கிறது? புத்த – சமண சிற்பங்கள் கிடைத்தால் அவற்றை எங்கே கொண்டுபோய் வைப்பார்கள்? தஞ்சையில் அரண்மனையிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாலுகால் மண்டபத்திலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்ணகி சிலைக்காக குரல் கொடுக்கும் பெருந்தலைகள் புத்தர் சிலை இவ்வாறு அவமானப்படுத்தப்படுவது குறித்தெல்லாம் வாய் திறப்பதில்லை.

    கண்டிரமாணிக்கம் கிராமத்தில் ஏற்கனவே சைவ, வைணவக் கோயில்கள் இருக்கின்றன. புத்தருக்கும் அங்கு ஓர் கோயில் கட்டி வழிபட விரும்புகிறார்கள். அரசு சட்டங்கள் இதற்கு அனுமதியளிக்காது என்று அருங்காட்சியக காப்பாளர் கருணாநிதி எங்களிடம் கூறினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கத்தில் இம்மாதிரியான நிகழ்விற்காக போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்தது நினைவிருக்கலாம்.  

  புத்தர் சிலையை திருவாரூர் தியாகராஜர் கோயில் வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தில் வைப்பது பற்றி மாவட்ட ஆட்சியர் எடுத்த முடிவு விமர்சனத்திற்குரியது. இங்கு ஒன்றை நாம் கவனிக்கவேண்டும். புத்தர் சிலையை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்தாலாவது பரவாயில்லை. ஏற்கனவே மூக்கு சிதைந்தநிலையில் உள்ள புத்தர் சிலையை எவ்வித பாதுகாப்புமின்றி அருங்காட்சியக வாசலில் பொறுப்பற்ற முறையில் வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    சிலையை இங்கு வைக்க எதிர்ப்பு காட்டுபவர்கள் பகுத்தறிவுவாதிகளோ வெளியிருக்கும் வேறு எவரோ இல்லை. இவர்கள் இந்தக் கோயில் சார்ந்தவர்கள். அவர்களால் புத்தர் சிலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. ஏற்கனவே மூக்குடைந்த நிலையிலுள்ள புத்தர் சிலைக்கு மேலும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்குண்டு. ஓர் சிவலிங்கம் அல்லது பெருமாள் விக்ரகத்தை இவ்வாறு வாசலில் வைத்திருக்க இவர்கள் அனுமதிப்பார்களா என்று கேட்கவேண்டும்.

  புத்தரைக் கடவுளாக்குவதோ சிலை வழிபாட்டை வலியுறுத்துவதோ எமது விருப்பமல்ல. புத்தரும் மகாவீரரும் இந்தியாவில் தோன்றிய மாபெரும் சிந்தனையாளர்கள். வைதீக பாசிசத்திற்கெதிராக அடித்தட்டு மக்களைத் திரட்டி பெரும் புரட்சியை நம் மண்ணில் நடத்தியவர்கள். மிக நீண்ட இந்திய சிந்தனை மரபை பிரதிபளித்தவர்கள். இன்று அவர்களும் கடவுளாக மாற்றப்பட்டபோதிலும் வைதீகக் கடவுள்களின் அட்டூழியங்களை இவர்கள் நிகழ்த்தியதில்லை. அம்பேத்கர், பெரியார் போன்றோரின் உழைப்பால் இன்றும் அடித்தட்டு மக்கள் திரளுக்கு நெருக்கமாக இருப்பவர்கள். இவர்களை இழிவு செய்வது பெரும் மக்கள் திரளை இழிவு செய்வதாகும்.

   கண்டிரமாணிக்கம் சென்று சிலை கிடைத்த இடத்தைப் பார்வையிடும் முடிவைக் கைவிட்டு திருவாரூர் கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு என்ற கிராமத்திற்கு அருகிலுள்ள தீபங்குடி தீபநாயக சுவாமி (ரிஷபதேவர்) சமணர்கோவிலுக்குச் சென்றோம். இந்து சமய அறநிலையத் துறையின் எண்கண் செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயிலில் ரூ 60 லட்சங்கள் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இக்கோயிலின் பூசகர் பார்சுவநாதன் கோயிலைத் திறந்து காட்டினார். சமண மதத்தின் முதலாவது தீர்த்தங்கரர் ரிஷபதேவரின் ஆலயம் இது. இக்கோயில் முன்பு 1990 இல் புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை புதுப்பிக்கப்படும்போதும் பழமை கொஞ்சம் கொஞ்சமாக அழிவுறுகிறது. தீபங்குடி சமணர் ஆலயம் பற்றிய எனது கட்டுரையை வாசிக்க கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்

தீபங்குடி சமணப்பள்ளி

http://www.musivagurunathan.blogspot.in/2010/11/blog-post_23.html

   திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் கண்டிரமாணிக்கம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை குறித்த பதிவுகளை முக நூலில் (facebook) அ.மார்க்ஸ், கோமகன் போன்றோர் செய்துள்ளனர். அவற்றின் இணைப்புகள் பின்வருமாறு:

அ.மார்க்ஸ்   

http://www.facebook.com/marx.anthonisamy

அறிவொளி  

http://www.facebook.com/Thiru.Arivoli 

வியாழன், ஜூலை 26, 2012

இனி சாலையெங்கும் டாஸ்மாக் எச்சரிக்கைகள்!


இனி சாலையெங்கும் டாஸ்மாக் எச்சரிக்கைகள்! 
                                
                                  - மு.சிவகுருநாதன்


    பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றை தனியாரிடம் விட்டுவிட்டு அரசுகள் மதுக்கடைகளை நடத்தத் தொடங்கியுள்ளன. அரசு எந்திரம் இலக்கு வைத்து மதுபான விற்பனையை அதிகப்படுத்தியுள்ளன. பள்ளி, கல்லூரிகள், கோயில், மருத்துவமனை, குடியிருப்பு ஏன் சமத்துவபுரங்களில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கக்கப்படுகின்றன.

  சாலையோரங்களில் இருக்கும் டாஸ்மாக் மதுபானக்கடையில் குவாட்டர் வாங்கி மூடியைத்திறந்து அப்படியே ராவாக மடமடவென்று குடித்துவிட்டு அப்படியே நிதானமிழந்து வீழ்பவர்களை நாம் தினந்தோறும் பார்க்க முடியும். இதன் காரணமாக நிகழும் சாலை விபத்துகள் ஏராளம். மதுவைத் தவிர பிற காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

   தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் பாதசாரிகளின் உயிருக்கு உத்திரவாதமின்றி அமைக்கப்படுகின்றன. சைக்கிளில் செல்வோரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது. எவ்வளவோ தொழில்நுட்பங்கள் முன்னேறியிருக்க சைக்கிள் பின்புற பிரதிபளிப்பான் (indicators) இன்னும் பழையபடிதான் உள்ளது. அதுகூட எதேனும் லேசாக மோதினால்கூட நொறுங்கிவிடும். சாலைகளில் மரங்களில் ஒட்டப்படும் பிரதிபளிப்பான் கூட பரவாயில்லை. சைக்கிள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏன் இவற்றை கவனிக்க மறுக்கின்றன. பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் சாலைகளில் சென்று வீடு திரும்புவது உறுதியில்லாத நிலை உள்ளது.

   திருவாரூர் - திருத்துறைப்பூண்டி மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி குடிபோதை சாலை விபத்துகள் நடந்தேறுகின்றன. சென்ற ஆண்டில் மணலி கிராமத்திற்கருகே நடந்த சாலை விபத்தொன்றால் நான் பல கிலோ மீட்டர் தூரம் நடந்துவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

  திருத்துறைப்பூண்டி திருவாரூர் நெடுஞ்சாலையில் ஆலத்தம்பாடி, மணலி ஆகிய கிராமங்களுக்கு இடையில் பழையங்குடி ஊராட்சிப் பகுதியில் தலைவர் ஏ.எஸ்.பாண்டியன் மதுபான கடைப்பகுதி என எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளார். தமிழகமெங்கும் இந்த மாதிரி எச்சரிக்கைப் பலகை வைக்கவேண்டும். தலித் குடியிருப்புகள் நிறைந்த இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. குடிபோதை விபத்துகள் அடிக்கடி நிகழும் இப்பகுதியில் வேறுவழியின்றி ஊ.ம.தலைவர்  எச்சரிக்கைப் பலகை வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வேகத்தடைகள் அமைக்க கோரிக்கைகள் வரலாம். தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளிக்கூடப் பகுதிகளில்கூட வேகத்தடைகள் வைக்கப்படுவதில்லை.

   பள்ளிப்பகுதிகளில் வருங்கால அப்துல் கலாம்கள் நடமாடும் இடம் என்று பல இடங்களில் விளம்பரப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நமது குழந்தைகளை இதைவிட மோசமாக இழிவுபடுத்தமுடியும் என எனக்குத் தோன்றவில்லை. இதைப்போல ஒவ்வொரு டாஸ்மாக் கடை அருகே சாலைகளில் மாநில அரசின் வருவாயைப் அதிகரிக்கும் புரவலர்கள் நடமாடும் இடம் வாகனங்கள் மெதுவாகச் செல்லவும் என்றுஅறிவிப்புப் பலகைகள் வைக்கலாம்.

   மக்கள் நலனைக் கணக்கில்கொள்ளாது வருவாயை மட்டும் நம்பி அரசு நடத்தும் டாஸ்மாக் சூதாட்டத்தில் அப்பாவி ஏழை கூலித்தொழிலாளிகள் பலியாவது வேதனையான உண்மை. கள்ளுக்கடைகளை மூடிவிட்டு சசிகலா, விஜய் மல்லையா போன்ற சாராய முதலைகள் நலன்கள் மட்டும் அரசால் பாதுகாக்கப்படுகின்றன.

   100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் கூலித்தொகையில் பெரும்பகுதி டாஸ்மாக் கடைகளையே சென்றடைகிறது. குடியால் உடல்நலம் கெட்டு மரணமடைவது ஒருபுறமிருக்க குடிபோதை விபத்துகள் நடப்பதால் பல்லாயிரம் உயிர்கள் மாண்டுபோகிறது. ஜெ.ஜெயலலிதாக்களும் மு.கருணாநிதிகளும் இந்நிலை நீடிக்கவே விரும்புகிறார்கள். அப்போதுதான் குவாட்டர் பாட்டிலில் குடிமகனின் வாக்கைத் தக்கவைக்க முடியும் என்பது இவர்களது அசாத்திய நம்பிக்கை. இதை மாற்றக்கூடிய சக்தி நமது குடிமகன்களிடம் இருக்கிறதா என்பதே நம்முன் எழும் மிகப்பெரிய கேள்வி.

ஞாயிறு, ஜூலை 22, 2012

ஆயிரம்விளக்கு மக்கிஸ் கார்டனில் குடிசைகள் எரிப்பு உண்மை அறியும் குழு அறிக்கை

ஆயிரம்விளக்கு மக்கிஸ் கார்டனில் குடிசைகள் எரிப்பு உண்மை அறியும் குழு அறிக்கை

                                                                                                                                                     சென்னை,
                                                                                                                                                     ஜூலை 21,2012

சென்ற 2009 ஜூன், ஜூலை மாதங்களில் சென்னையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகிற பகுதிகளில் திடீர்த் தீவிபத்துக்கள் ஏறபட்டன. கூவம் முதலான கழிவு நீர்ச் சாக்கடைகளாக மாற்றம் பெற்றுள்ள நதிக் கரைகளின் ஓரம் அமைந்திருந்த குடிசைப் பகுதிகள் பலவும் திடீரெ மர்மமான முறையில்  தீப்பற்றி எரிந்து சாம்பலாயின.  அக் குடிசைகளில் வாழ்ந்து வந்த எளிய மக்கள் செம்மஞ்சேரி முதலான தொலைவிலுள்ள மாற்று இடங்களுக்குச் செல்லுமாறு வற்புறுத்தப் பட்டனர். அக்குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று எச்சரிக்கப்பட்டவர்கள் என்பதும்,. மர்மமான முறையில் தீப்பிடித்தல், வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் பகுதிகளாக அவை இருத்தல் ஆகியனவும் அடித்தள மக்களின் நலன்களில் அக்கறையுள்ள பலரின் கவனத்தையும் ஈர்த்தன.  ‘குடிசை மக்கள் வாழ்வுரிமை இயக்கம்’ என்னும் அமைப்பு இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் பலரும் அடங்கிய உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து ஒரு விரிவான அறிக்கையை அளித்தது.



பல தரப்பட்ட அறிஞர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய அக்குழு இது தொடர்பான பல அம்சங்களையும் ஆய்வு செய்து இரு பகுதிகளாக அவ்வறிக்கையை உருவாக்கியது. முதற்பகுதி இத் தீவிபத்துக்கள் மக்களை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டவட்டமான சதியாக இருக்கலாம் என்கிற அய்யத்தை முன் வைத்து இது குறித்த விசாரணை ஒன்றைக் கோரியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணங்கள் குறித்த கோரிக்கைகள் சிலவற்றையும் முன் வைத்தது. இரண்டாம் பகுதி ஏற்கனவே தொலை தூரங்களில் குடியேற்றப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளின் அவலங்களைச் சுட்டிக்காட்டி, அவர்களுக்கான உடனடி நிவாரணங்கள் குறித்தும், நிலப் பறிப்பு மற்றும் மீள் குடியேற்றம் குறித்தும் காத்திரமான சில பரிந்துரைகளை முன் வைத்தது.

இவ்வறிக்கை உரிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பப் பட்டதோடு ஆயிரக் கணக்கான பிரதிகள்  அச்சிடப்பட்டு மக்கள் மத்தியில் வினியோகிக்கவும் பட்டன.
எனினும் அரசு இதை முற்றிலுமாகப் புறக்கணித்தது. பாதிக்க்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பலன்களும் கிட்டவில்லை என்பதோடு குடிசைகள் எரிக்கப்படுவதும் மக்கள் வெளியேற்றப் படுவதும் தொடர்கிறது.



இதன் ஓர் அங்கமாகவே ஆயிரம்விளக்குக் காவல் நிலையம் அருகிலும் அப்போலோ மருத்துவ மனையின் இதய நோய் மையத்திற்கு எதிரிலும், கூவம் நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ள மக்கீஸ் கார்டன் அல்லது திடீர் நகர் (ஆற்றோரப் பகுதி) என்று அழைக்கப்படுகிற குடிசைப்பகுதி தற்போது எரிந்துள்ளது. சென்ற ஒரு மாதத்திற்குள் மும்முறை தீப்பற்றி சுமார் 130க்கும் மேற்பட்ட குடிசைகள் அழிந்துள்ளன. அம்மக்கள் இன்று மழையிலும் வெயிலிலும் இருக்க இடமின்றி அவதிப் படுகின்றனர்.

இது குறித்த உண்மைகளை அறிந்து வெளிக் கொணர  கீழ்க் கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது:
  1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை
  2. வழக்குரைஞர் உதயம் மனோகரன், சென்னை
  3. ஶ்ரீநிவாசன், மனித உரிமை ஆர்வலர், சென்னை
  4. எழுத்தாளர் கவின்மலர், பத்திரிக்கையாளர், சென்னை
  5. சகா, பத்திரிக்கையாளர், சென்னை
  6. மு.திருமாவளவன், முன்னாள் அரசு கல்லூரி முதல்வர், சென்னை
  7. மதுமிதா தத்தா, நீதி மற்றும் அமைதிக்கான பிரச்சாரக் குழு, சென்னை
இக்குழு நேற்றும் இன்றும்  மக்கீஸ் கார்டனில் எரிக்கப்பட்ட குடிசைகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் பலரையும் சந்தித்துப் பேசியது.   எழும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்  திரு.த.இராமதாஸ், மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயந்தி, குடிசைமாற்று வாரியச் செயலரும் மாவட்ட வருவாய் வாரிய அதைகாரியுமான திரு.செ.பன்னீர்செல்வம், வணக்கத்துக்குரிய சென்னை நகர மேயர் திரு.சைதை துரைசாமி ஆகியோரை நேரில் சந்தித்தும்,. ஆயிரம்விளக்கு பகுதி காவல்துறை உதவி ஆணையர் திரு. சரவணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசியது.

குடிசைகள் தீப்பற்றிய நிகழ்வு

ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலைக்கருகில் கூவம் நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ள மக்கீஸ் தோட்டப் பகுதியில்  சுமார் 200 குடும்பங்கள் 60 ஆண்டு காலமாக வசித்து வருகின்றன. கூவம் நதியின் அனைத்து அழுக்குகளையும் சுமந்துகொண்டு, எந்த அடிப்படை வசதிகளுமில்லாத இப்பகுதியில் நீண்ட காலமாக இம்மக்கள் கொடிய கொசுக்கடிகள் மத்தியில் வாழ்வதற்கான ஒரே காரணம், அவர்களின் வாழ்வாதாரம் இப் பகுதியில் அமைந்துள்ளது என்பதுதான். பெண்கள் பெரும்பாலும் ‘பங்களா வேலை’, அதாவது அருகிலுள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்கின்றனர். மற்ற நேரங்களில் பழைய துணி விற்பது, வெற்றிலை பாக்கு விற்பது. தையல் முதலிய தொழில்களைச் செய்கின்றனர். ஆண்கள் கூலி வேலை, துணி தேய்ப்பது, சாவு மேளம் அடிப்பது, பெயின்ட் அடிப்பது, ஆட்டோ ஓட்டுவது, கட்டிடக் கூலி வேலை முதலான தொழில்களைச் செய்கின்றனர்.

இவர்களின் இந்தக் குடிசை வீடுகளில் அரசு கொடுத்த தொலைக் காட்சி, ஃபேன் முதலியன உண்டு. இக்குடிசைகளிலிருந்து சுமார் 100 குழந்தைகள் அருகிலுள்ள பள்ளிகளில் படிக்கின்றனர். குடும்பத்தில் குறைந்த பட்சம் இருவரேனும் வேலை செய்து சம்பாதித்தால் மட்டுமே அவர்கள் உயிர் வாழ இயலும். குழந்தைகள் படிக்க இயலும். இடம் பெயர்ந்தால் இது சாத்தியமே இல்லை என்கிற ஒரே காரணத்திற்காகவே இவர்கள் இத்தனை கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு இங்கே மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்தக் குடிசைப் பகுதிக்கு இணையாகத்தான் கூவத்தின் மறுகரையில் மதுரவாயிலிலிருந்து சென்னைத் துறைமுகத்தை இணைக்கும் அதிவேக உயர் நெடுஞ்சாலைப் பணி நடை பெறுகிறது. இதற்காக அமைக்கப் படும் தூண்கள் இவ் வீடுகளுக்கு நேர்ப் பின்புறம் அமைந்துள்ளன. இந் நெடுஞ்சாலை முழுக்க முழுக்க கூவம் ஆற்றுக்குள் அமையுமானால் நீரோட்டத்திற்குத் தடையாக இருக்கும் என்கிற மறுப்பு  தெரிவிக்கப் பட்டதன் விளைவாக இந்தப் பாதையைச் சற்றே தள்ளி வைக்கும்(re alignment) பொருட்டு தற்போது இப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பணி நடைபெறும் இடங்களில் அமைந்திருந்த பல குடிசைப் பகுதிகள்தான் மூன்றாண்டுகளுக்கு முன் திடீர் திடீரென எரிந்து சாம்பலாயின. இது குறித்து எமது 2009 அறிக்கையில்  விரிவாகக் காணலாம்.

தற்போது நடைபெற்ற இத் தீவைப்புகள் குறித்து இப்பகுதியச் சேர்ந்தவர்களும்  இன்று வீடிழந்து நிற்பவர்களுமான முத்து மகன் டிக்சன் (42), இறந்துபோன செல்வகுமார் மனைவி பூங்கொடி (50), பாளையத்தின் அம்மா வேணி (50), பாளையத்தின் மனைவி தேவிகா (25), அப்பையன் மனைவி மேரி (29), மூன்று பெண்களுக்குத் தாயான இந்திரா (45) மற்றும் அங்கே நாங்கள் சென்றபோது குழுமியிருந்த முப்பதுக்கும் மேற்பட்ட குடிசை வாசிகள் கூறியதிலிருந்து:

சென்ற மாதம் 12 செவ்வாய் மதியம் 11.45 மணி அளவில் திடீரென வீடுகள் பற்றி எரியத் தொடங்கின. தீயணைப்பு எந்திரங்கள் வந்து தீயை அணைப்பதற்கு முன் 70 வீடுகள் எரிந்து சாம்பலாயின. பிரச்சினை அத்தோடு முடியவில்லை. மீண்டும் இன்னொரு செவ்வாய் இரவு, புதன் காலை (ஜூலை2) 12.30 மணி அளவில் தீப் பற்றி இம்முறை 45 வீடுகள் சாம்பலாயின. எஞ்சியிருந்த கூரைக் குடிசைகள் 15ம் சென்ற செவ்வாய் இரவு புதன் காலை (ஜூலை 11) 2.30 மணி அளவில் எரிந்து சாம்பலாயின. ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் கான்க்ரீட் கூரையிட்ட சில வீடுகள் மட்டுமே தற்போது தப்பியுள்ளன.

ஒவ்வொரு வீட்டிலுமிருந்த டி.வி, டேபிள் ஃபேன், உடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், ரேஷன் கார்ட், குழந்தைகளின் பாடப் புத்தகங்கள் மற்றும் சாதிச் சான்றிதழ்கள், ஓட்டர் ஐ.டி முதலிய எல்லாம் எரிந்து போயுள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்த பட்சம் சராசரியாக 50,000 ரூ இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இன்று அவர்கள் அனைவரும் மழையிலும் வெயிலிலும் மேற்கூரையின்றி அல்லல் படுகின்றனர். வயது வந்த பெண் குழந்தைகளை அருகில் உறவுள்ளவர்கள் அத்தகைய வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர். சில நாட்களுக்கு முன் மழை பெய்தபோது அருகிலுள்ள கடை ஓரங்களிலும் லாட்ஜ் வாசல்களிலும் ஒதுங்கியுள்ளனர்.

மழை இல்லாத நாட்களில் எரிந்துபோன குடிசைகளிலேயே சமைத்துச் சாப்பிட்டுவிட்டு உறங்குகின்றனர். கூவம் நாற்றமும் கொசுக்களும்தான் அவர்களுக்குத் துணை. இரவில் பாம்புகள் வந்துவிடுவதாகவும் ஒரு மூதாட்டி கண்ணீர் மல்கச் சொன்னார்.

அரசு நடவடிக்கைகள்

ஒவ்வொரு முறை தீப்பற்றிக் குடிசைகள் எரிந்தவுடனும் அருகிலுள்ள ஆயிரம்விளக்குக் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். பாதுகாப்பும் கோரியுள்ளனர். 558/12, 661/12, 701/12 என மூன்று முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை நிலையத்தில் விசாரித்து அறிந்தோம். முதல் தடவையும் இரண்டாம் தடவையும் எரிந்ததை ஒட்டிப் பாதுகாப்புக் கோரியும் எவ்விதப் பாதுகாப்பும் கொடுக்கப்படவில்லை. எந்த அதிகாரியும் வந்து விசாரிக்கவும் இல்லை. எல்லாம் எரிந்து முடிந்தபின் சில நாட்கள் போலீஸ்பாதுகப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் நேற்றிரவு (ஜூலை 19) கொடுக்கப்படவில்லை.

போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதே இரண்டு நாட்களுக்கு முன், இரவில் யாரோ கூவத்தின் அக்கரையிலிருந்து மண்ணெண்ணை போத்தலை வீசியுள்ளனர். சுமார் 40ஆண்டுகளாக வெள்ள ஆபத்து தவிர தீ விபத்து நடந்ததில்லை. சுமார் ஒரு மாத காலத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக அத்தனை குடிசைகளும் எரியுமாறு இன்று விபத்துக்கள் நடந்துள்ளன. திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகவே தோன்றும் இவ்விபத்துக்கள் குறித்து இந்த அய்யத்தை முன் வைத்துப் புகார்கள் அளிக்கப்பட்டபோதும் காவல்துறை அந்தக் கோணத்திலிருந்து விசாரிக்கவில்லை. இது தொடர்பாக காவல்துறை உதவி ஆணையர் சரவணனைக் கேட்டபோது மின்கசிவால் ஏற்பட்ட விபத்து என்கிற அடிப்படையிலேயே விசாரிக்கப் படுவதாகச் சொன்னார். இம்மக்களை இந்த இடத்திலிருந்து வெளியேற்றுவதற்காகத் திட்டமிட்டுச் செய்யப்பட்டதாகத் தோன்றுகிறதே, அந்தக் கோணத்தில் விசாரிக்கவில்லையா எனக் கேட்டபோது, “அப்படியானால் அரசு செய்தது என்றல்லவா ஆகும்? அரசு இப்படிச் செய்யுமா? மக்களுக்கு வசதிகளைத்தானே அரசு செய்து கொடுக்கும்?” என்றார்.



தீயணைப்பு நிலைய அலுவலர் இராமதாஸ் கூறும்போது தீயணைப்புத் துறை என்பது ஒரு சேவை அமைப்புத்தான், தீயின் காரணங்கள் குறித்துத் தாம் ஏதும் சொல்ல இயலாது என்றார். எழும்பூர் பகுதியில் இது போல தீ விபத்து வாய்ப்புள்ள பகுதிகள் ஐந்து தான். செய்தி கிடைத்த சில நிமிடங்களில் தாங்கள் அங்கு சென்று விட முடியும் என்றாலும் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு அங்கு ஹோஸ் பைப்களை இணைத்துத் தண்ணீர் கொண்டு செல்வதற்குள் எரிந்து முடிந்து விடுகின்றன என்றார். இப்பகுதிகளில் 20,000 லிட்டர் தண்ணீர் பிடிக்கக்கூடிய சின்டெக்ஸ் டாங்குகளை நிறுவுவது, சாலிட் ஹய்ட்ரன்ட் முறையில் தீயணைப்புச் சாத்தியங்கள் முதலியன நிறுவப்பட்டால் உடனடியாகத் தீயைப் பரவாமல் தடுக்க வாய்ப்புள்ளது என்றார். ஆனால் அரசு அத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதில்லை.

முதல் விபத்து நடந்த அடுத்த நாள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான  வளர்மதி அவர்களும் மேயர், துணை மேயர் ஆகியோரும் வந்து பார்த்துள்ளனர். சென்ற வாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் செய்தபோதும் அமைச்சர் வந்துள்ளார். கூட வந்தவர்கள் முழுமையாகக் குறைகளைத் தெரிவிக்கக் கூடத் தங்களை விடவில்லை எனவும், “அம்மா அங்கெல்லாம் வரமாட்டாங்க, யாராவது ஒருத்தர் மட்டும் பேசுங்க” எனக் கறார் பண்ணியதாகவும் கூறினர். “இங்கே ஏன் இருக்குறீங்க/ காலி பண்ணுங்க. செம்மஞ்சேரியில மாற்று இடம் தருகிறோம்” என்று அமைச்சர் கூறியுள்ளார். விரும்பியவர்களுக்கு செம்மஞ்சேரியில் இடம் தருவதாகத் தானும் சொன்னதாக மேயர் எங்களிடம் கூறினார்.

தேர்தலின்போது  இதே அமைச்சர் அம்மக்ககளிடம் கூவத்தை ஒட்டி பாதுகாப்புச் சுவர் எழுப்பித் தருவதாகவும், கான்க்ரீட் கூரைகளுடன் கூடிய வீடுகள் கட்டித் தருவதாகவும் வாக்களித்ததை அம் மக்கள் எம்மிடம் நினைவுகூர்ந்தனர். மீண்டும் அதே இடத்தில் கூரை போட்டுக் கொள்வதாக அவர்கள் சொன்னபோது மறுபடியும் எரிந்து போனால் தாம் பொறுப்பல்ல என அமைச்சர் தரப்பில் கூறப்பட்டதாகவும் மக்கள் கூறினர்.



எக்காரணம் கொண்டும் அம்மக்கள் செம்மஞ்சேரி போன்ற தொலை தூரத்திற்குச் செல்லத் தயாராக இல்லை. “இரண்டு பேரும் சம்பாரிச்சாத்தான் பிள்ளைங்களப் படிக்க வைக்க முடியும். அங்கே போனா வீட்டு வேலை செய்கிற எங்கள் பொம்பளைங்களுக்கு வேலை கிடைக்காது. எங்க பிள்ளைகள் 50கி.மீ தினம் பயணம் செஞ்சு படிக்க முடியாது. எங்க வாழ்க்கைதான் சாவு மேளம் அடிச்சும் துணி தேச்சும் கழிஞ்சு போச்சு. எங்க பிள்ளைங்களாவது படிச்சு ஆபீசராகணும் சார்” என்றார் ஒருவர்.



அருகில், சுமார் 5 கி.மீ சுற்றளவுக்குள் இடம் கொடுத்தால் போகத் தயார் என எல்லோரும் கூறினர். அமைச்சரிடம் அவ்வாறு கூறியபோது அப்படி ஏதும் இருந்தால் நீங்கள் பார்த்துச் சொல்லுங்கள் என்று பதில் வந்துள்ளது. அப்படிச் சாத்தியம் இல்லை என்கிற தொனியில் சற்றுக் கேலியாக அப்பதில் சொல்லப்பட்டதாக மக்கள் கூறினர். மேயர் அவர்களும் இக் கருத்தை எங்களிடம் கூறினார். அப்படி இடம் ஏதாவது சொன்னால் முதல்வரிடம் சொல்லி உடனடியாகச் செய்து தருகிறேன் என்றார்.
செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான புற நகர்ப் பகுதிகளில் மட்டுமே குடிசை மாற்று வாரியம் கட்டிடங்கள் கட்ட முடியும் எனவும் நகரத்திற்குள் இனி குடிசை மாற்று வாரியக் கட்டிடங்கள் கட்ட வாய்ப்பில்லை என்றும் குடிசை மாற்று வாரியச் செயலர் பன்னீர்செல்வம் கூறினார்.

முதல் விபத்து நடந்து சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னரே குடும்பம் ஒன்றுக்கு அய்யாயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். பாட நூல்கள், குடும்ப அட்டைகள், மாற்று உடைகள் என அனைத்தையும் இழந்து நிற்கும் இவர்களுக்கு வழக்கமாகத் தரப்படும் அரிசி, புடவை முதலான எந்த உதவிகளும் செய்யப்படவில்லை. அரசு இம்மக்களை இவ்விடத்திலிருந்து வெளியேற்றும் நோக்குடன் செயல்படுவதாகத் தெரிகிறதே என மாவட்ட ஆட்சியரிடம் நாங்கள் கேட்டபோது அரசுதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும், தான் ஒரு சிறிய அதிகாரி எதுவும் செய்ய இயலாது என்றார். எனினும் சாதகமான பரிந்துரைகளை அரசுக்கு அளிப்பதாக வாக்களித்தார்.


கடந்த ஒரு மாத காலமாக அம் மக்கள் ரேஷன் முதலானவற்றையும் பெறவில்லை. உடனடியாக அவர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்க வேண்டுமென நாங்கள் கேட்டபோது ஆது தன் அதிகாரத்தில் இல்லை எனவும் சிவில் சப்ளை உதவி ஆணையரை அணுகுமாறும் ஆட்சியர் கூரினார். எனினும் மேயரிடம் நாங்கள் இதைக் கூறியபோது மிகவும் விரிவாகவும் அக்கறையுடனும் எங்களிடம் பேசிய அவர், உடனடியாக இதைச் செய்து தருவதாக வாக்களித்தார்.

எமது பார்வைகளும் கோரிக்கைகளும்
  1. கடந்த பலஆண்டுகளாகத் தீவிபத்து ஏதும் ஏற்படாத இப்பகுதியில் திடீரென விபத்துகள் ஏற்பட்டிருப்பதும், அதுவும் தொடர்ச்சியாக மும்முறை அடுத்தடுத்து அனைத்து வீடுகளும் எரியும் வரை விபத்துக்கள் நடந்துள்ளன என்பதும் பல அய்யங்களை ஏற்படுத்துகின்றன. வெறும் மின்கசிவே இதற்குக் காரணம் என்றால் அடுத்தடுத்து இப்படித் திடீரென மின்கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்தக் கோணத்திலிருந்தே காவல் துறை இதை விசாரிப்பது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. முதல்முறை தீப்பற்றியவுடன் உரிய பாதுகாப்பை காவல்துறை அளித்திருக்குமேயானால் அடுத்தடுத்த விபத்துக்களைத் தடுத்திருக்கலாம். குடிசைகள் எரிந்தது தொடர்பான இவ் விசாரணையைத் தமிழகக் காவல்துறையின் பொறுப்பில் விடுவது எந்தப் பயனையும் அளிக்காது. திட்டமிட்டுத் தம்மை வெளியேற்றுவதற்காகக் குடிசைகள் எரிக்கப் பட்டன என்கிற மக்களின் நியாயமான அய்யத்திற்கு மதிப்பளித்து இது தொடர்பாக பதவியிலுள்ள நீதிபதி ஒருவரின் தலைமையிலான விசாரணை ஒன்றிற்கு ஆணையிட வேண்டும். இவ் விசாரணையில் 2009 முதல் இவ்வாறு வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகிற பகுதிகளில்  நேர்ந்த தீப்பற்றல்கள் அனைத்தும் உள்ளடக்கப்பட வேண்டும்.
  2. தீ விபத்தைக் காரணம் காட்டி அம்மக்களைச் செம்மஞ்சேரி முதலான தொலை தூரப் பகுதிகளுக்கு விரட்டியடிக்கும் அரசு முயற்சி கண்டிக்கத் தக்கது. அது அம்மக்களின் வாழ்வில் பெரிய அழிவை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட அம் மக்கள் அனைவரும் தலித்கள். முதல் தலைமுறையாகப் படிக்க நேர்ந்துள்ள அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் இதனால் பாழாகும். எனவே அரசு இம்முயற்சியைக் கைவிட வேண்டும். அவர்களை மீண்டும் அங்கேயே வசிக்க அனுமதிப்பதோடு ஏற்கனவே குடும்ப அட்டை, மின்வசதி ஆகியவற்றுடன் நீண்டகாலமாக அங்கேயே வாழ்ந்தவர்கள் என்கிற வகையில் அவர்களுக்கு அமைச்சர் வளர்மதி அவர்கள் தேர்தல் காலத்தில் வாக்களித்தபடி கூவம் கரையில் தடுப்புச் சுவர் எழுப்பி கான்க்ரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும்.
  3. அல்லது 5 கி.மீ சுற்றளவுக்குள் இடம் ஒன்றை அரசு கைப்பற்றி அதில் அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றைக் கட்டித் தரவேண்டும். இத்தகைய பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கும்போது அப்படி ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கோரிக்கை வைப்பவர்களிடமே அரசு தரப்பில் பதிலுரைப்பது மிகவும் பொறுப்பற்ற ஒரு செயல். அரசிடமே இது குறித்துப் போதுமான தகவல்கள், ஆவணங்கள் முதலியன இருக்கும். நிறைய அரசு நிலங்கள் முதலியவற்றைத் தனியார்கள் ஆக்ரமித்துள்ளனர். பஞ்சமி நிலங்கள், வக்ஃப் நிலங்கள் ஆகியவையும் இவ்வாறு ஆக்ரமிக்கப் பட்டுள்ளன. அரசு நினைத்தால் தற்போது சென்னை நகருக்குள் வசிக்கும் குடிசைப் பகுதியினரை நகருக்குள்ளேயே குடியமர்த்த வாய்ப்புண்டு. சென்னை நகருக்குள் இது போன்ற சாத்தியமுள்ள இடங்களைச் சம்பந்தப் பட்ட அரசுத் துறைகளின் மூலம் கண்டுபிடித்து அதன் பட்டியலொன்றை வெளியிட வேண்டும்.  வளர்ச்சி, மற்றும் சென்னையை அழகு படுத்தல் குறித்த  மேட்டிமைப் பார்வையிலேயே நின்று கொண்டு பிரச்சினையை அணுகினால் நகருக்குள் இடமில்லை என்பதுதான் பதிலாக வரும். குடிசை வாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கிலிருந்து பிரச்சினையை அணுகினால் வேறு தீர்வுகள் நமக்குக் கிடைக்கும். ஆனால் அரசுகள் மாறினாலும் அவற்றின் அணுகல் முறைகள் குடிசை மக்களின் வாழ்வுரிமையைக் காக்கும் திசையில் இல்லை என்பதையே நாங்கள் சந்தித்தவர்களின் பேச்சுக்களிலிருந்து எங்களால் உணர முடிந்தது.
  4. சென்னை நகரெங்குமுள்ள தீப்பற்றும் வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் சாலிட் ஹைட்ரன்ட் தீயணைப்பு வசதியையும், 20,000 லி கொள்ளளவுள்ள சின்டெக்ஸ் தொட்டி அமைப்பதையும் அரசு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும்
  5. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள உதவித் தொகை போதாது. அரசு உடனடியாக அவர்கள் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் ரூ 50,000 உதவித் தொகை அளிக்க வேண்டும். உதவித் தொகை அளிப்பது, மாற்று இடம் தேடுவது, விபத்தில் அழிந்த ஆவணங்களைப் புதுப்பித்துத் தருவது முதலிய பணிகள் வெவ்வேறு துறைகளிடம் இருப்பது உடனடித் தீர்வுகளைச் சாத்தியமில்லாமல் ஆக்குகிறது. இதுபோன்ற தருணங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இப் பணிகள் ஒருங்கிணைக்கப் படுதல் அவசியம். உடனடியாக இம்மக்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கி ரேஷன் முதலியவை தட்டுப்பாடின்றிக் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
  6. தொலை தூரத்தில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அவர்களின் வாழ்வாதாரம் கெடாமல் இருக்க இலவச பஸ் பாஸ் வழங்குதல் வேண்டும். 
  7. நகர மத்தியிலிருந்து இம்மாதிரி அடித்தள மக்களை வெளியேற்றி துணை நகரங்களாக உருவாகும் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது அங்கு உருவாகும் காட்டுமானப் பணிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு மலிவான உழைப்புச் சக்திகளை உருவாக்கித் தரும் மறைமுகத் திட்டமோ என்கிற அய்யமும் உள்ளது. எனவே அரசு குடிசை வாழ் மக்களை தொலைதூரத்திற்குக் கொண்டு செல்லுதல் என்கிற முயற்சியைக் கைவிட வேண்டும்.
  8. இனி கட்டப்படக் கூடிய குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களில் ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி அளவில் இருக்க வேண்டும். தற்போது உள்ள 130 சதுர அடி என்பது ஒரு குடும்பம் வாழத் தகுதியற்றது.


தொடர்புக்கு:
  
அ.மார்க்ஸ்,    
 3/5, முதல் குறுக்குத் தெரு,     
சாஸ்திரி நகர்,          
அடையாறு,      
சென்னை- 600 020.                                                                            
செல்: 94441 20582,    98406 98236


நன்றி:- அ.மார்க்ஸ்