வெள்ளி, ஜூலை 24, 2020

'கொரோனா’ சூழலில் பள்ளிக்கல்வி


'கொரோனா’ சூழலில் பள்ளிக்கல்வி


மு.சிவகுருநாதன்


     ‘கொரோனா’ உலகைப் பெருமளவு புரட்டிப் போட்டுள்ளது. முதலாளியம் இதையும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை மற்றும் சுரண்டல்களில் ஈடுபடவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பிலிருந்து ஐரோப்பாவும் அமெரிக்காவும் எளிதில் மீண்டுவிடும். அதன் பொருளாதார பலமும் குறைவான மக்கள்தொகையும் இதற்கு வசதியாக இருக்கும். உலகில் அதிக மக்கள் தொகையுடைய சீனாவும் தனது உழைப்பு மற்றும் பொருளாதார வல்லமையால் எளிதில் தாண்டிச் சென்றுவிடும். 



     மூன்றாம் உலகநாடுகள் என அழைக்கப்பட்ட ஆப்பிரிக்க, ஆசிய, தென் அமெரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த ஏழை நாடுகள் ‘கொரோனா’ பாதிப்பிலிருந்து மீள்வது மிகவும் கடினம். உலகில் இரண்டாவது மக்கள் தொகைகளை உடைய இந்தியா பாரதூரமான விளைவுகளை அனைத்துத் துறைகளில் சந்திக்க வேண்டியிருக்கும். 

     பல மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதே எண்ணிக்கையில் வேலையிழப்பு, கல்வியிழப்பு, இடைநிற்றல், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், வறுமை போன்ற பல்முனைத் தாக்குதல்களை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவில் சற்று அதிகமாகவே இருக்கும். 



     இதிலிருந்து மீள்வதற்கு சமூகம் சார்ந்த தொலைநோக்குத் திட்டங்கள் அவசியம். அதற்குத்தான் மக்கள் நல அரசுகள் தேவை. கெடுவாய்ப்பாக இன்று மக்கள் நல அரசுகள் அழிக்கப்பட்டு புதிய ‘காப்பரேட் நல’ அரசுகள் உருவாகியுள்ளன. எனவே அவை கார்ப்பரேட்களுக்குச் சலுகை அளிப்பது,  முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என முடிவு செய்கின்றன. 

    ‘கொரோனா’ என்பது வெறும் சுகாதார / மருத்துவப் பிரச்சினை அல்ல; மாறாக அரசியல், சமூக, பொருளாதாரச் சிக்கலும் கூட. எனவே மருத்துவர்களின் ஆலோசனைகளே போதுமானது, வேறு எதுவும் தேவையில்லை என்பதைவிட வேறு அபத்தம் இருக்கவியலாது. பலதரப்பு அறிஞர்களின் கருத்துகளும் தொலைநோக்கும் செயல்திட்டங்களும் தேவை. வெற்று முழக்கங்கள், புகழ் பாடல்களுக்குள் இவை அடங்காது.

   கடந்த 4 மாதங்களாகப் பள்ளிகள் மூடிக் கிடக்கின்றன. பெற்றோர்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கிப் போயிருக்கும் நிலையில் அவர்களுக்கு இதுகுறித்துச் சிந்திக்கக்கூட வாய்ப்பில்லை. குழந்தைகள் கல்வி மற்றும் பள்ளித் தொடர்பை படிப்படியாக இழந்து வருகின்றனர். 

    பெரும்பாலான அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு வழியில்லை. மிகக் காலதாமதமாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன; இதுவும் போதுமானதல்ல.  தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முரண்டு பிடிக்கும் துறையாக மாறிப்போனதுதான் கொரோனாவைவிட பேரவலம். 


     கல்வியாளர்களின் கருத்துகளை முற்றாக செவிமெடுப்பதில்லை. குழந்தைகளுக்கும் கல்விக்கும் எதிரான திட்டங்களை அமல்படுத்துவதிலேயே இவர்களது காலம் கழிகிறது. தனியார் சுயநிதிப் பள்ளி ஆட்களையே கல்வியாளர்கள் என்ற முகமூடிக்குள் வைத்துக் கொண்டு அவர்களுக்காகவே கல்வித்துறை செயல்படுகிறது. அடித்தட்டு மக்களைப் போலவே, அவர்களது குழந்தைகளுக்கான கல்வியும் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிறது. 

   இன்றுள்ள சூழலில் பள்ளிகளைத் திறப்பது சாத்தியமற்றது. இந்நிலையில் மாற்று ஏற்பாடுகள், முன்மொழிவுகள், திட்டமிடல்கள் பள்ளிக்கல்வித் துறை சார்ந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கெடுவாய்ப்பாக எதுவுமே நடக்கவில்லை. கல்வியாளர்கள் பலர் மாற்று வழிமுறைகளைச் சொல்லி வருகின்றனர். இணையக் கல்வி ஒன்றே மேட்டுக்குடி முன்மொழிவாக உள்ளது. இதற்கு வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை. 

     தமிழக தொலைக்காட்சிகள் மூலம் கல்வி ஒளிபரப்பு செய்வதாக அறிவித்துள்ளது. அண்மையில் சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட மூன்றாம் வகுப்பு மாணவியின் வீட்டில் தொலைக்காட்சி இல்லை; கொலையாளியின் வீட்டில் டி.வி. போடச்சொன்னதால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. கொலையில் வேறு காரணங்கள் இருப்பினும் அக்குழந்தையின் வீட்டில் டி.வி. இல்லை. இதைப்போல பல வீடுகள் உண்டு. டி.வி. இருந்தாலும் குறிப்பிட்ட சேனலைப் பார்க்கும் வசதி, இன்னும் இணைய வாய்ப்புகளற்ற கிராமங்கள் பற்றியெல்லாம் யாரும் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. 


    சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் முன்பு 5 ஆம் வகுப்பு வரை ஒரு பாடவேளை மட்டும் இணைய வகுப்பு எடுத்தனர். மத்திய அரசின் விதிமுறைகள் வந்தபிறகு 3 பாடவேளையாக மாறிவிட்ட கொடுமையும் நடக்கிறது. இதனால் குழந்தைகளின் உடல், மன நலன்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி யாரும் கவலைகொள்வதாகத் தெரியவில்லை. வகுப்பறைக் கல்விக்கு இதெல்லாம் மாற்றல்ல; முதலாளித்துவத்திற்கு வசதி செய்யும் ஓர் ஏற்பாடுதான். 

    சிறார் இலக்கியவாதியான விழியன் மற்றும் செந்தமிழ்ச் செல்வன் இணைந்து நுண் வகுப்பறைகள் (micro class rooms) என்ற கருத்தாக்கத்தையும் செயல்திட்டத்தையும் முந்தைய அறிவொளி இயக்க அனுபவங்களிலிருந்து உருவாக்கினர். குழந்தைகள் வாழுமிடத்திற்கு அருகே வசதியுள்ள இடங்களில் 5 மாணவர்களைக் குழுவாக ஒன்றிணைத்து ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் ஒரு சில மணி நேரம் கற்றல், கதைகள், பாடல்கள், சிறு விளையாட்டு போன்றவற்றின் மூலம் கல்விக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பை மீள் உருவாக்கம் செய்வது இதன் முதன்மையான நோக்கமாகும். 

   பள்ளி மற்றும் கல்வியின் மீதான குழந்தைகளின் தொடர்புக் கண்ணி அறுபடாமல் காக்க வேண்டியது இன்றியமையாதது. இந்நிலை நீடித்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகும்; கல்வி மீண்டும் அவர்களுக்கு எட்டாக் கனியாகிவிடும்.

      இதன் முழு விவரங்களை அறிய கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

https://m.facebook.com/story.php?story_fbid=10163795524365445&id=800965444

    இந்த மாதிரியைக் கொண்டு விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசணையில் தாய்த் தமிழ் பள்ளிகள் மூலம் இலவசக்கல்வியும் இலவச மதிய உணவும் வழங்கிவரும் கல்வியாளர் பேரா. பா.கல்யாணி (கல்விமணி) அவர்கள் தங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு சுமார் 11 இடங்களில் நுண் வகுப்பறைகள் அமைத்துக் கற்றல் பணியைத் தொடங்கியுள்ளார்கள். 

    அப்பள்ளி ஆசிரியர்களே இந்தப் பணிகளில் ஈடுபடுகின்றனர். குழந்தைகளின் பெற்றோர்கள் இதில் முழு ஈடுபாட்டுடன் அப்பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் அனைவருக்கும் உதவுகின்றனர். முட்டையுடன் மதிய சத்துணவும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுகிறது. விழியன் மற்றும் தோழர்களின் கருத்தாக்கதிற்கு பேரா. கல்யாணி செயல்வடிவம் கொடுத்துள்ளார். இந்த நுண் வகுப்பறையில் 5 மாணவர்கள் என்பதற்கு மாற்றாக சற்றுக் கூடுதலாக 8 மாணவர்கள் எனத் திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு உரிய சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது. முகக்கவசம், கிருமி நாசினித் திரவம், கபசுரக் குடிநீர், நில வேம்புக் குடிநீர் போன்றவையும் வழங்கப்படுகின்றன. பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பித்தும் இன்னும் உரிய அனுமதி கிடைக்கவில்லை என்கிறார் கல்வியாளர் கல்யாணி. 154 மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர்.  


    ‘கொரோனா’த் தொற்றுப் பேரிடர் காலத்தில் இப்பணி மிகவும் சிக்கலானது, கவனமுடன் செயலாற்ற வேண்டிய பணியும் கூட. பிற அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பும் அவசியம். இவர்களது பள்ளி ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது முதன்மையானப் பணியாகும். இதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பும் பங்கேற்கும் அவசியம். இதை அவர்கள் உரிய முறையில் கூட்டங்கள் நடத்தி ஒப்புதல் பெற்று இப்பணியைத் தொடங்கியுள்ளனர். 

    தன்னார்வலர்களைப் பயன்படுத்துவதாக இருந்தால், அவர்களது தேர்வில் கவனமும் எச்சரிக்கையும் அவசியம். பெரும்பாலும் ஆசிரியர்களைப் பயன்படுத்துவது நல்லது. இணைய, டி.வி. கல்விக்கு மாற்றாக முன்வைக்கப்படும் சிறு திட்டமிது. இதை அப்படியேச் செய்ய வேண்டும் என்பதில்லை. இடம், சூழலுக்குத் தக்கவாறு உரிய மாற்றங்களைச் செய்திட இயலும். 

    பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் இதைச் செயல்படுத்துவது எளிமையானது என்று பேரா. கல்யாணி குறிப்பிடுகிறார். மேலும் அவர்களுக்கு மதிய உணவை உறுதி செய்ய வேண்டியதும் கட்டாயமாகும். 

     பள்ளிகளுக்குப் பாடநூல்கள் அளிக்கப்பட்டநிலையில் 1 முதல் 9 முடிய உள்ள வகுப்புகளுக்கு மாணவர்களுக்குப் பாடநூல் வழங்குவதை அரசு நிறுத்தி வைத்துள்ளது. பள்ளி திறக்கவில்லை என்றாலும் பாடநூல்களை சமூக இடைவெளியைப் பின்பற்றி வழங்குவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்? 

     பேரா. கல்யாணி மற்றும் அவரது தோழர்களின் முன்முயற்சியால் தாய்த் தமிழ் பள்ளி நடுநிலைப் பள்ளியாக உயர்ந்துள்ளது; மழலையர் பள்ளியும் உள்ளது. முற்றிலும் இலவசக்கல்வியும் மதிய உணவும் இங்கு அளிக்கப்படுகிறது. தனிநபர்களின் நன்கொடைகளால்தான்  இப்பள்ளி செயல்படுகிறது.  
    
             நான்காம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த நுண் வகுப்பறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. படிப்படியாக இதை இதர குழந்தைகளுக்கும் விரிவு படுத்தலாம், என்றார். காலையில் வரும் குழந்தைகள் மதிய உணவிற்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். மதியம் வரும் குழந்தைகள் உணவிற்குப் பின் சிறிது நேரம் கற்றலில் ஈடுபடுகின்றனர். சிறிய வகுப்புக் குழந்தைகளுக்கு முட்டையுடன் தரமான மதிய உணவு மட்டும் வழங்கப்படுகிறது என்றும் சொன்னார். 
   

      பேரா. கல்யாணி அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப்  பணியாற்றும்போதே சமூகப்பணிகளிலும் மார்க்சிய இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். புரட்சிப் பண்பாட்டு இயக்கம், மக்கள் கல்வி இயக்கம், இருளர் பாதுகாப்புச் சங்கம், தாய்த் தமிழ்ப்பள்ளி என அவரது சமூகப்பணிகளும் மனித உரிமைப்பணிகளும் தொடர்கின்றன. இருளர் இனப் பழங்குடியினருக்காகவும் அவர்களது சமூக, கல்வி உரிமைகளுக்காகவும் தொடர்ந்து இயங்கி வருகிறர். இதற்காகவே  விருப்ப ஓய்வு பெற்று சமூக, மனித உரிமைப் போராளியாக தனது வாழ்வை ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்து வருபவர்.

        எல்லா ஊரிலும் கல்யாணிகள் இருக்க மாட்டார்கள். மாறாக கல்வித்தந்தைகளும் கல்வி வள்ளல்களுமே நீக்கமற  நிறைந்துள்ளனர். அரசுதான் இவற்றைச் செய்ய வேண்டும். தமிழ்வழிக் கல்வி, தரமான கல்வி என எதையும்  அரசுகள் வழங்கத்  தவறியதை  எடுத்துக் காட்டவே இவ்வாறு  செய்து காட்டுகின்றனர். 

     ஒவ்வொரு வகுப்புக் குழந்தைகளையும் தனித்தனியே அல்லாமல் சில வகுப்புக் குழந்தைகளைச் சேர்த்து வைக்க வேண்டியிருப்பதால் அவர்களுக்கு ஏற்ற பாடத்திட்டங்களும் பாடத்திட்டத்தோடு இணைந்து உருவாக வேண்டும். பாடநூல் பாடங்களைவிட பொதுவான கதை, பாடல், சிறு விளையாட்டு, வாசிப்பு, அடிப்படைத் திறன்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இது அமையலாம். கல்வியின் தொடர்பு குழந்தைகளிடம் அறுபடாமல், இடைநிற்றல் ஏற்படாமல் காப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். கல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைய வகுப்பில் இடமில்லை என்பதைப் போன்றதல்ல இவ்வழிமுறை; சமத்துவ, சமூக நீதிக்கான பாதை.   
    
    ‘கொரோனா’விற்கு முன்பும் தமிழகப் பள்ளிக்கல்வி நல்ல நிலையில் இல்லை; பின்பும் நிலைமை இன்னும் மோசமடைவது கல்விக்கும் சமூக நிதிக்கும் கேடாகவே முடியும். பள்ளிக் கல்வித்துறை சுயநிதிப் பள்ளிகளை மட்டும் சார்ந்து செயல்படாமல் சமூகம், குழந்தைகள் சார்பாகச் செயல்படும் கல்வியாளர்களின் கருத்துகளுக்கு உரிய வழியில் செயல்படிவம் அளிக்கவும் கல்வியில் தமிழகம் அடைந்திருந்த நிலையைத் தக்க வைக்கவும் உடனடியாகச் செயலாற்ற வேண்டிய தருணமிது.

வியாழன், ஜூலை 23, 2020

அன்பில் கரைந்த மார்க்சிய சிந்தனையாளர்



அன்பில் கரைந்த மார்க்சிய சிந்தனையாளர்

கோவை ஞானி (ஜூலை 01, 1935 – ஜூலை 22, 2020)

மு.சிவகுருநாதன்


     மார்க்சிய அறிஞரும் சிந்தனையாளருமான கோவை ஞானி என்கிற கி.பழனிச்சாமி நேற்று (ஜூலை 22, 2020) காலமான செய்த ஆழ்ந்த மனவருத்தத்தைக் கொண்டு சேர்க்கிறது. இவரது இணையர் திருமதி இந்திராணி செப்டம்பர் 09, 2012 இல் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள். 


    சில முறை அவரைச் சந்திக்கும் இனிய வாய்ப்பு கைகூடியிருக்கிறது. 1990 களில் ‘கனவு’ சுப்ரபாரதிமணியன் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றில் கோவையில் முதன்முதலாகச் சந்தித்தேன். இறுதியாக 2009 மே 24 இல் தஞ்சையில் ‘தமிழ்வெளி’ அமைப்பு ஏற்பாடு செய்த ‘கீழை மார்க்சியம்: வரலாறு-அரசியல்- மெய்யியல்’ எனும் எஸ்.என்.நாகராசன் நூலுக்கான திறனாய்வு நிகழ்வில் பங்குபெற்றதையும் மறக்க இயலவில்லை. பார்வை இழப்பிற்கு உள்ளான நிலையில் கரங்களைப் பற்றிக் கொண்டு அன்புடனும் உரையாடலும் ஞானியை இனிக் காணப் போவதில்லை என்பது பேரிடியாக வந்து தாக்குகிறது. 

      அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிலக்கியம் படித்து 30 ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணி செய்த ஞானி, அப்பணியில் முடங்கி விடாமல் வாசிப்பு, கவிதை, விமர்சனம், சிற்றிதழ்கள், மார்க்சியம், தத்துவம், தமிழ்த் தேசியம் என தொடர்ந்து இயங்கிவந்த ஆளுமையாக நம்முன் நின்றவர். வாசிப்பு, விவாதங்கள் என தமது சிந்தனையை அகலிக்கச் செய்து, அதை அடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்த்தவர்.  க.கைலாசபதி, நா.வானமாமலை, கா.சிவத்தம்பி, கோ.கேசவன், எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, அ.மார்க்ஸ் என மார்க்சிய அறிஞர்கள் வரிசையில் இடம்பெற்றவர். புதிய தலைமுறை (1968-69), வானம்பாடி (1970-73) ஆகிய இதழ்களில் பங்கு பெற்றிருந்தார். 



   மார்க்சியம் சோவியத் ரஷ்யா, சீனாவைத் தாண்டி இந்தியா, தமிழகத்திலும் புதிய பரிமாணங்களைப் பெற்றிருப்பதால் 1979 இல் ‘பரிமாணம்’ எனும் மார்க்சியச் சிற்றிதழைத் தொடங்குகிறார். சோவியத் வீழ்ச்சிக்குப் பின் உலகளவில் மார்க்சியத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டபோதிலும் புதிய மார்க்சிய சிந்தனை வெளிச்சங்கள் கிடைத்துள்ளதை ‘நிகழ்’ இதழ் (1988) விவாதப் பொருளாக்கியது. 32 இதழ்கள் வந்த ‘நிகழ்’ தமிழ்ச் சூழலில் தனது தடத்தை ஆழப் பதித்தது. பரவலான கவனிப்பைப் பெற்ற ‘நிறப்பிரிகை’ இதழைப்போலவே ‘நிகழ்’ இதழின் தேவை தமிழுக்கு அவசியமானதாக இருந்தது. டங்கல் திட்டம், ‘காட்’ ஒப்பந்தம் குறித்த விரிவான விவாதங்களை இவ்விதழ் முன்னெடுத்தது. இன்றைய பாதிப்புகளை அன்றே அக்கட்டுரைகள் தெளிவாக எடுத்துக்காட்டின. 

    1990 களில் தமிழ் வாழ்வும் வரலாறும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையில் இதனை ஆய்வு செய்யவும் தீர்வுகளைக் கண்டறியவும் ‘தமிழ் நேயம்’ இதழ் (1998) தொடங்கப்பட்டதாக அவரே சொல்கிறார். 67 ‘தமிழ் நேயம்’ இதழ்கள் வெளிவந்தன. இதன் மூலம் மார்க்சியத்துடன் இணைந்த தமிழ்த் தேசியக் கருத்தியலை வளர்த்தெடுக்க முயன்றார். 

   தனது மார்க்சிய ஆசான்களாக மார்க்சிய, பெரியாரிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரையையும் கீழை மார்க்சியம் எஸ்.என்.நாகராஜனையும் குறிப்பிடுவார். இருப்பினும் எஸ்.என்.நாகராஜனின் கீழை மார்க்சியமான ‘வைணவ மார்க்சியத்தை’ விதந்தோதி எடுத்துச் சென்றார். இதன் காரணமாக அதிக விமர்சனங்களை எதிர்கொண்டபோதிலும் பொறுப்பாகவும் இனிமையாகவும் தனது தரப்பு விளக்கங்களை சளைக்காமல் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.  

     “மேலை மார்க்சியம் என்றும், கீழை மார்க்சியம் என்றும் நாகராசன் பேசுவதைப் பலர் தவறாகப்  புரிந்துகொள்கின்றனர். இரண்டு வகை மார்க்சியமா என்கின்றனர். மேலை மார்க்சியம், உற்பத்தி சக்திகளுக்கும் கீழை மார்க்சியம், உற்பத்தி உறவுகளுக்கும் அழுத்தம் தருகிறது. மேலை மார்க்சியம் பகை முரண்பாட்டிற்கும் கீழை மார்க்சியம், நட்பு முரண்பாட்டிற்கும் அழுத்தம் தருகிறது. இப்படித்தான் நான் புரிந்து கொள்கிறேன். மேலை மார்க்சியம் உற்பத்தி சக்திகளுக்கு அழுத்தம் தருகிறது என்ற முறையில்தான் நவீன அறிவியல் தொழில்நுட்பம் பற்றியும், மார்க்சின் மெய்காண் முறையில் உள்ள குறைகள் பற்றியும் மேற்கத்திய சமூக வரலாறு பற்றியும் நாகராசன் எடுத்துரைக்கிறார்”, (நிகழ், கிழக்கு வெல்லும் – தொடர் விவாதக் குறிப்புகள்)  


    மார்க்சியத்திற்குள் ஆன்மீகத்தைத் தேடினார். “எனக்குள் இருக்கும் கடவுளை வெளியேற்றத் தொடர்ந்து ஆய்வுகள் செய்தேன். இறுதியாகக் கடவுள் என்பது ஒரு கருத்தாக்கம் மட்டுமே. இது கருத்தாக்கம் மட்டுமல்லாமல் ஓர் அழகிய கருத்தாக்கம். சற்று போதை தரும் கருத்தாக்கம்”, (தி இந்து நேர்காணல்) என்று குறிப்பிடும் ஞானி ‘கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை’, ‘நானும் கடவுளும் நாற்பதாண்டுகளும்’. என்கிற நூல்களைப் படைக்கிறார். கல்லிகை (1984,85), தொலைவிலிருந்து (1989), கல்லும் முள்ளும் கவிதைகளும் (2012)  போன்ற இவரது கவிதைத் தொகுதிகள் அந்நியமாதலையும், ஆன்மீகத் தேடலையும் எடுத்துக்காட்டுவன. அறிவியல், ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை ‘நிகழில்’ வெளியிட்டார். அதன் தொகுப்பே ‘அறிவியல் அதிகாரம் ஆன்மீகம்’ என்று வெளியானது. (காவ்யா வெளியீடு) இவரது ஆன்மீகத் தேடலே தமிழ்த் தேசியத்திற்குள் கொண்டு செலுத்தியிருக்க வேண்டும். 

      இதே கண்ணோட்டத்துடன்தான் தமிழ்ப் பக்தி இயக்கங்களை அணுகுகிறார். “தேவாரக் காலச் சூழலில் கோயில்கள், சிற்பங்கள், இறைவன் பற்றிய கதைகள், திருவிழாக்கள், வழிபாடுகள், இறைவனைப் பற்றிய இசைப் பாடல்கள் முதலியவை பெருகிய நிலையையும் சேர்த்துப் பார்த்தால் – இவற்றால் மனிதர்கள் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் பக்தி இலக்கியத்தின் இயக்கம் புலப்படும். ஆன்மாவற்ற உலகுக்கு ஆன்மாவாகவும் உயிரற்ற உலகின் உயிர்ப்பாகவும் வேதனைமிக்க உலகின் அழுகையாகவும் வேதனை தரும் சூழல்களுக்கு எதிர்நிலையாகவும் அவலமிக்க உலக வேதனைகளுக்கிடையில் அமுதமாகவும் நஞ்சாகவும் – அதாவது அபினாகவும் – பக்தி இருந்ததைப் பக்தி இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன”, பக். 33, மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்) 

    தமிழ்நேயம் இதழில் முன்னுரையாகவும் ‘அகமும் புறமும்’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதுவந்தார். இதழ் நின்ற பிறகு அதை ‘புதுப்புனல்’ இலக்கிய மாத இதழில் தொடர்ந்தார். 

     சென்னை சமஸ்கிருத சேவா சமீதியில் ஜெயகாந்தன் தெரிவித்த கருத்திற்கு கோவையில் நடந்த கூட்டத்தில்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை ஒட்டி ஞானி கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

   “மார்க்சியத்திலும் இடதுசாரி, வலதுசாரிப் போக்குகள் உண்டு. பெரியாரியமும் இதற்கு விதி விலக்கு இல்லை. பார்ப்பனீயத்தின் உள்ளும் இடதுசாரி, வலதுசாரி போக்குகள் உண்டு. ஆதிக்கத்தோடு, அரசோடு, சாதியோடு, உடைமையோடு ஒத்துச் செல்வது வலது சாரித்தனம்; எதிர்ப்பது இடதுசாரிப் போக்கு. முதலாளியத்தை ஒப்புக் கொள்கிற மார்க்சியமும், பெரியாரியமும் வலதுசாரிப் போக்கு. சாதி மதத்தை பிறகொழிக்கலாம். அதன் பிறகு சமத்துவத்தையும் சமதர்மத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்பது வலதுசாரிப் போக்கு. அதிகாரம், தனியுடைமை ஆகியவற்றை எதிர்க்காமல் சாதி, மதம், பார்ப்பனீயம் ஆகியவற்றை ஒழிக்கலாம் என்பது வலதுசாரிப் போக்கு. இடதுசாரிப் பார்ப்பனர்; ஜெயகாந்தனும் பாரதி வழியே இடதுசாரியினர்”. (தமிழ்நேயம் 23) 


   “தொல்காப்பியர், வள்ளுவர் என்று ஓயாமல் பேசுவதில் நமக்குள் போலித்தனமான நிறைவு காண்கிறோம். எதிர்காலத்துக்கும், இளைஞர்களுக்கும், அடித்தள மக்களுக்கும்  எதையும் விட்டுக் கொடுக்க மறுக்கிறோம். இவைப் பற்றியெல்லாம் தமிழ் நேயத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எழுதி எழுதி நான் சலித்து போய்விட்டேன். எழுதுவதுகூட ஒருவகையில் நம் நிகழ்காலத்தைப் பதிவு செய்வது என்பதற்கு மேல் எதுவும் இல்லை”, 20/11/2003, தமிழ் நேயம் 17 இல் சலிப்புடன் பதிவு செய்கிறார். 

    கறாரான மார்க்சிய நிலைப்பாட்டை எடுக்காமல் இலக்கியப் பிரதிகளை இயல்பாக அணுகும் விமர்சனத்தை மேற்கொண்டார். பொன்னீலன், அருந்ததி ராய் குறித்த பதிவுகள் நமக்கு இதை எடுத்துக்காட்டும். அருந்ததி ராயின் நாவல் குறித்த கட்டுரைத் தொகுப்பு ஒன்றை (டிச.1998) வெளியிட்டார். 

    பின்நவீனத்துவத்தை கட்சி மார்க்சியர்கள் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தியபோது, அவ்வாறு நிராகரிக்க இயலாது; அதிலிருந்தும் நாம் கற்றுக்கொள்வதற்கு உண்டு, என்றார். 

     மார்க்சியம், பெரியாரியம், லெனினியம், மாவோயிசம், அம்பேத்கரியம், தமிழ்த் தேசியம், வைணவம், தமிழ் மரபு, சித்தர் மரபு என எல்லாவற்றிலிருந்தும் உடன்பாடான கூறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். பகை முரண்களை மறந்து நட்பு முரண்களைக் கொண்டாடும் மனப்போக்குடையவராக இருந்தார். மார்க்சியம், தமிழ்த் தேசியம் என எவற்றையும் மானுட அன்பின் வழிநின்று அணுகினார். 

    தனது தோழர்  எஸ்.என்.நாகராசனின் கீழை மார்க்சியத்தைப் போற்றியது போன்று அறிவர் குணா (பெங்களூர் குணா) போன்றவர்களிடமிருந்தும் மார்க்சியத்தையும் அவை சார்ந்து அவர் கட்டமைத்த தமிழ்த் தேசியத்தை வளப்படுத்த முடியும் என்று நம்பினார். அவரது எழுத்துகள், இதழ் பணிகள் ஆகியன இதைத்தான் உணர்த்துகின்றன. இதில் அவர் பெற்ற வெற்றி தோல்வி என்பதைவிட தமிழ்ச் சமூகத்திற்கு அவரளித்த பங்களிப்புகள் ஈடிணையற்றவை. அவற்றில் கொள்வனக் கொண்டும்,  தள்ளுவனத் தள்ளியும் தமிழ்ச் சமூகம் தன்னை அடுத்தகட்ட நகர்விற்கு தயாராவதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.