வியாழன், செப்டம்பர் 25, 2014

நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

நாகூரில் மத வன்முறை உருவாகும் சூழல்- உண்மை அறியும் குழுவின் இடைக்கால அறிக்கை

நாகப்பட்டினம்,
செப்டம்பர் 23, 2014.

குழுவில் பங்குபெற்றோர் :                        

பேரா: அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைபூண்டி
மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர்,
அப்துல்காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி,
முகம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை,
அபு ஃபைசல், பத்திரிகையாளர், சென்னை.

   கடந்த ஆகஸ்ட் 30 அன்று நாகூர் பட்டினச்சேரி சீராளம்மன் கோவில் பூச்சொறிதல் திருவிழா ஊர்வலத்தில் நடந்த சம்பவங்கள் மற்றும் அதை ஒட்டி உருவாகியுள்ள பதட்ட நிலை ஆகியவை தொடர்பான உண்மைகளை அறிய உருவாக்கப்பட்ட இக்குழு நேற்று பகல் முழுவதும் நாகூரில் பலரையும் சந்தித்தது.



    அன்றைய வன்முறையில் தாக்கப்பட்ட இளைஞர்கள் ரஞ்சித், பிரபு, காட்டுப்பள்ளி எனப்படும் ஹிலுறு ஜாமிஆ மஸ்ஜித் ஜமா அத் தலைவர் எம்.எம்.தாஹிர்,, செயலர் முகம்மது தாஜுதீன், நாகூர் ஆரிய நாட்டுத் தெரு பஞ்சாயத்தார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே நிஜாமுதீன், தற்போது கைதாகியுள்ள முஸ்லிம் இளைஞர்களின் பெற்றோர்கள் ஜகபர் அலி மற்றும் சாதிக், விடுதலைச் சிறுத்தை அமைப்பின் முன்னாள் நகரச் செயலர் முருகன், த.மு.மு.க மாவட்டத் தலைவர் ஜபருல்லா முதலானோரைச் சந்தித்தது. காவல்துறைக் கண்காணிப்பாளர் தற்போது விடுப்பில் உள்ளதால் இந்தப் பிரச்சினையை விசாரித்து வரும் நாகை க்ரைம் பிராஞ்ச் துணைக் கண்காணிப்பாளர் ரெங்கராஜன் அவர்களிடமும் விரிவாகப் பேசியது.

சம்பவம்

    இந்த ஆண்டு வி.எச்.பிஅமைப்பைச் சேர்ந்த நாகூர் முத்துகிருஷ்ணனின் முயற்சியால் முஸ்லிம் மக்கள் குறிப்பிட்ட அளவில் வசிப்பதும் காட்டுப் பள்ளி வாசலுக்கு அருகில் அமைந்துள்ள பண்டகசாலைத் தெருவில் முதன் முறையாக விநாயகர் சிலை வைக்கப்பட்டு  சென்ற ஆகஸ்ட் 29 அன்று சிலை ஊர்வலமும் நடத்தப் பட்டுள்ளது. அடுத்த நாள் மீனவ மக்களின் பூச்சொறிதல் ஊர்வலம் முஸ்லிம் மக்கள் வசிக்கிற மியான் தெரு வழியாக நடந்துள்ளது. பட்டினச்சேரி சீராளம்மன் ஆலயத்திற்கு இவ்வழியே பூச்சொறிதல் ஊர்வலம் வருவது வழக்கம் என்றாலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மியான் தெருவிற்கு இணையாக உள்ள  பண்டகசாலைத் தெரு வழியான சாலை சீர் செய்யப்பட்டிருந்ததால் அவ்வழியே ஊர்வலம் நடந்து வந்துள்ளது. இந்த ஆண்டு பண்டக சாலைத் தெருவில் சாக்கடை வேலை நடந்து கொண்டிருந்ததால் அவர்கள் வேறு வழியில் செல்ல முடிவெடுத்தபோது அண்ணா தி,மு.க வின் கவுன்சிலர் சின்னப் பிள்ளை என்பவர் மியான் தெருவழியாகச் செல்லுமாறு திருப்பியுள்ளார்.





   பத்தாண்டுகளுக்கும் மேலாக வேறு வழியில் சென்று கொண்டிருந்த ஊர்வலம் இந்த ஆண்டு தம் தெரு வழியே பள்ளிவாசலை ஒட்டி வந்ததையும், வழக்கமாக வருவது போலல்லாமல் இம்முறை தாரை தப்பட்டைகளுடன் பெருந்திரளாக வந்ததையும் கண்டு முஸ்லிம்கள் பதட்டம் அடைந்துள்ளனர். என்றைக்கும் இல்லாமல் இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளதும் அவர்களின் இந்தப் பதட்டத்திற்கு ஒரு காரணம். மாலை நேரத் தொழுகைக்காக பாங்கு ஒலிக்கத் தொடங்குகையில் தாரை தப்பட்டைச் சத்தம் கூடாது எனக் கூறியுள்ளனர். வாக்குவாதம் நடைபெற்று இறுதியில் சற்று நேரம் தாரை தப்பட்டைகள் நிறுத்தப்பட்டு பின் ஊர்வலம் தொடர்ந்துள்ளது. ஊர்வலமே இவ்வழியாகச் செல்லக் கூடாது என முஸ்லிம்கள் தடுக்கவுமில்லை. பாங்கு ஒலிக்கும்போது நாங்கள் தாரை தப்பட்டையை ஒலிப்போம் என மீனவர் தரப்பில் பிடிவாதம் பிடிக்கவும் இல்லை. காவல்துறை சரியாகச் செயல்பட்டிருந்தால் இன்றைய பிரச்சினையே ஏற்பட்டிருக்காது.

   தொடர்ந்து பதட்டத்துடன் பள்ளிவாசல் அருகில் திரளாக முஸ்லிம் இளைஞர்கள் கூடி இருந்துள்ளனர். இப்படி முன் அறிவிப்பு இன்றியும் அனுமதி இன்றியும் பிரச்சினைக்குக் காரணமான ஊர்வலம் குறித்து பள்ளிவாசலில் அமர்ந்து செயலர் தாஜுதீன்,

     கொறடா சாதிக், நூர் சாதிக், மசூத் அலி முதலானோர் காவல் துறைக்குப் புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்துள்ளனர். அச்சமயம் “அர்த்த ஜாம இளைஞர்கள் கழகம்” என்கிற அமைப்பைச் சேர்ந்த ரஞ்சித் எனும் இளைஞர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளார். இந்த அமைப்பு இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய ஒன்று எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற முஸ்லிம் இளைஞர்கள் ரஞ்சித்தை நிறுத்தியுள்ளனர். அது கைகலப்பாக மாறும் நேரத்தில் ரஞ்சித்தின் நண்பனும் அதே அமைப்பச் சேர்ந்தவரும், முதல் நாள் விநாயகர் ஊர்வலத்திற்குக் காரணமாக இருந்தவருமான பிரபு எனும் இளைஞர் வந்துள்ளார். கைகலப்பில் ரஞ்சித் மற்றும் பிரபு இருவரும் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த பள்ளி வாசலில் அமர்ந்து புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்த கொறடா சாதிக் உள்ளிட்டோர் ஓடி வந்து தாக்கியவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.






   தாக்கப்பட்ட ரஞ்சித், பிரபு இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் (குற்ற எண் 346 / 2014, நாகூர் காவல் நிலையம்) புதுத் தெருவைச் சேர்ந்த நூர் சாதிக், மியான் தெருவைச் சேர்ந்த கொறடா சாதிக் எனப்படும் ஜாபர் சாதிக், ஆஷிக், அம்ஜத் அலி, அஷ்ரப்  மற்றும் சிலர் ஆகியோர் மீது இ.த.ச 147, 148, 323, 324, 307, 294 பி, 506 (1), பி.பி.டி 3,4 ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

     இதுவரை பஷீர் அகமது, மசூத் அலி, அஜ்மல், நூர் சாதிக் ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளனர். கொறடா சாதிக், ஆஷிக், அம்ஜத் அலி ஆகியோர் முன் ஜாமீன் பெற்றுள்ளனர்.

எமது பார்வைகள்
  1. பதட்டம் மிக்க சூழலில் இப்படி  முன்னூறுக்கும் மேற்பட்டோர்  தாரை தப்பட்டைகளுடன் பங்கு பெற்ற பூச்சொறிதல் ஊர்வலம் ஒன்று முஸ்லிம்கள் செறிவாக உள்ள ஒரு பகுதியில் நடைபெற்ற போது  காவல்துறை எந்த முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளாததும், உரிய பாதுகாப்பு அளிக்காததும் வியப்பையும் கவலையையும் அளிக்கிறது. தங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும் எனத் தெரியாது எனக் காவல்துறையின் சார்பாக எங்களிடம் அளிக்கப்பட்ட பதில் ஏமாற்றமளிக்கிறது.
  2. முஸ்லிம் இளைஞர்களால் ரஞ்சித், பிரபு ஆகியோர் தாக்கப்பட்டது உண்மை என்ற போதிலும், தாக்குதலில் ஆயுதம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. சாதாரண கைகலப்புதான் நடந்திருக்கிறது. ஆனால் கொலை முயற்சி உட்பட இத்தனை கடுமையான பிரிவுகளின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது காவல் துறை உள்நோக்கத்துடன் செயல்படுகிறதா எனும் கேள்வியை எழுப்புகிறது. மதக் கலவரம் தொடர்பான பெரிய பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிய இப்படியான கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது எனும் காவல் துறையின் பதிலை எங்களால் ஏற்க இயலவில்லை. நீதி வழங்கு நெறியின் மிக அடிப்படையான அம்சம், “ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு குற்றமற்றவர் கூட தண்டிக்கப்படக் கூடாது” என்கிற நெறி இங்கு கேலிக் கூத்தாக்கப் படுகிறது.
  3. இப்போது கைது செய்யப்பட்டுள்ள அம்ஜத் அலி, பஷீர் அகமது, அஜ்மல் ஆகியோரது பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இல்லை. பஷீர் அகமது சம்பவத்தின் போது அவர் வேலை செய்யும் செருப்புக் கடையில் இருந்துள்ளார். இதை அவர் வேலை செய்த ராயல் செருப்புக் கடை முதலாளி ஹாஜா பக்ருதீனிடம் விசாரித்து உறுதிப் படுத்திக் கொண்டோம். அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொறடா சாதிக்கும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு இரவு முழுவதும் வைத்திருந்து பின் வீட்டுக்கு அனுப்பப்பட்ட எஸ்.டி.பி ஐ தலைவர் தாஜுதீனும், மசூத் அலியும் சம்பவ நேரத்தில் பள்ளி வாசலில் அமர்ந்து புகார்க் கடிதம் எழுதிக் கொண்டிருந்துள்ளனர். நாகூர் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன், எஸ்.பி.சி.அய்.டிக்கள் ஜார்ஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் இதைப் பார்த்துள்ளனர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறுகின்றனர். செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் தாக்கப்பட்ட ரஞ்சித், பிரபு ஆகியோரே இதைக் கூறியுள்ளனர், எங்களிடமும் அவர்கள் இதைக் கூறினர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தங்களை அடிக்கவில்லை எனவும் தாங்கள் அவர்களை அடையாளம் காட்ட முடியும் எனவும் கூறினர். அமைதிக் கூட்டத்தில் காவல் துறை சார்பாக, “நீங்கள் உண்மையான குற்றவாளிகளைக் கொண்டு வந்தால் இப்போது கைது செய்யப்பட்டவர்களை குற்றப் பத்திரிக்கை எழுதும் போது நீக்கி விடுகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்தவரும் சம்பவ இடத்தில் இல்லாதவருமான நூர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நாங்கள் கேட்டபோது காவல்துறை தரப்பில் திருப்தியான பதில் எதுவும் சொல்லப்படவில்லை. அடித்தவர்களைத்தான் கைது செய்கிறோம் என அவர்களால் சொல்ல இயலவில்லை.
  4. நாகூரில் எல்லோராலும் மதிக்கப்படுபவரும் தலித்கள், மீனவர்கள் உட்பட எல்லோராலும் ஏற்கப்படக் கூடியவருமான முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன் இரு தரப்புடனும் பேசி சமாதானத்தை ஏற்படுத்திக்  கொண்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று நிஜாமுதீன் முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டமொன்றிற்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத நிலையில், ஏராளமான போலீசார் வீட்டைச் சுற்றி வளைத்ததோடு தனியாக அவர் மனைவி இருந்ததையும் பொருட் படுத்தாது காம்பவுன்ட் சுவரில் ஏறிக் குதித்து கதவுகளைத் தட்டி, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து அச்சம் ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து அவர் அடுத்த நாள் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டபோது அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை. கொறடா சாதிக் என்பவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் இருந்தபோதும் சமீப காலங்களில் எந்த வழக்கும் அவர் மீது இல்லை. தவிரவும் இந்தச் சம்பவத்தின்போது அவர் பள்ளியில் அமர்ந்து புகார் எழுதிக் கொண்டிருந்துள்ளார். தாக்குதலைத் தடுத்துள்ளார். அவர் மீது பொய்க் குற்றம் சாட்டித் தேடுவது காவல்துறை சொல்வதுபோல வன்முறைகளைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்று அல்ல. மாறாக இத்தகைய நடவடிக்கைகள்தான் தீவிரவாதிகளை உருவாக்கும் முயற்சிகளாக உள்ளன என்பதைக் காவல்துறை உணர வேண்டும்.
எமது கோரிக்கைகள்:
  1. தற்போது கைது செய்யப்பட்டுளவர்கள் மர்றும் தேடப்படுபவர்களில் பலரும் குற்றமற்றவர்கள் எனக் காவல்துறையே ஏற்றுக்கொள்வதால் இவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும், தேடுதல்களும் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்ட ரஞ்சித்தும் பிரபுவும் கூறுவது போல உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சரியான பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டும்.
  2. இந்தப் பிரச்சினைக்கு முழுவதும் காரணமாக இருப்பது நாகூர் காவல் நிலையம் சம்பவத்தன்று உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததுதான். இது குறித்து உரிய துறை விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நாகூர் காவல் நிலையப் பொறுப்பாளர்கள் மற்றும் உளவுத் துறையினர் முழுமையாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும் நாகை மாவட்டத்தில், சச்சார் ஆணையப் பரிந்துரையின்படி காவல் மற்றும் உளவுத் துறைகளில் உரிய எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இடம்பெறச் செய்ய வேண்டும்.
  3. தலித்கள், மீனவர்கள் முதலான மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி ஒரு பெறும் மதக் கலவரத்தை உண்டு பண்ணி மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் லாபம் சம்பாதிக்க இந்துத்துவ சக்திகள் இப்பகுதியில் முயல்கின்றன. அரசும் காவல்துறையும் இந்தப் பிரச்சினையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். “அர்த்த ஜாம இளைஞர்கள் சங்கம்” “ஆன்மீக இளைஞர்கள் சங்கம்” முதலான பெயர்களில் இங்கு தலித் மற்றும் மீனவ இளைஞர்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பும் முயற்சி மேற்கொள்ளப்படுவதை அரசு கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
  4. இந்துத்துவ சக்திகளின் பிளவுபடுத்தும் நோக்கத்திற்கு மீனவப் பஞ்சாயத்தினர் ஒத்துழைக்காததை இக்குழு பாராட்டுகிறது. இரு இளைஞர்களைத் தாக்கிய குற்றவளிகள் கைது செய்யப்பட வேண்டும் .என்றுதான் நாங்கள் சொல்கிறோம் என்றாலும் இந்து முன்னணியினர் இன்று (செப் 22) நடத்துகிற ஆர்பாட்டத்தில்  நாங்கள் கலந்து கொள்ளவில்லை என அவர்கள் எங்களிடம் கூறினர். நாகூர் வாழ் முஸ்லிம்கள் இந்துத்துவ அமைப்புகளின் பிளவு முயற்சிகளைக் கணக்கில் கொண்டு பிற சமூகங்களுடனான தமது ஒற்றுமையை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்பு : 

அ.மார்க்ஸ், 
தய்.கந்தசாமி, 
27/7, ஏ.எஸ்.என். காம்ப்ளெக்ஸ், 
திருத்துறைப்பூண்டி- 614 713.  
செல்:
 +91 94441 20582, 
+91 9486912869

முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் - உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை

முத்துப்பேட்டையில் தொடரும் விநாயகர் ஊர்வல வன்முறைகள் - உண்மை அறியும் குழு இடைக்கால அறிக்கை

முத்துப்பேட்டை
செப் 23, 2014.

குழுவில் பங்குபெற்றோர் :  
                       
பேரா: அ.மார்க்ஸ், தேசியத் தலைவர், மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO), சென்னை,
வழக்குரைஞர் தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைபூண்டி
மு.சிவகுருநாதன், மனித உரிமைகளூக்கான மக்கள் கழகம், திருவாரூர்,
அப்துல்காதர், சமூக ஆர்வலர், திருத்துறைபூண்டி,
முகம்மது ஷிப்லி, துணை ஆசிரியர், மக்கள் ரிப்போர்ட்,சென்னை,
அபு ஃபைசல், பத்திரிகையாளர், சென்னை.



    முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தை ஒட்டி முஸ்லிம்கள் மீது வன்முறை மேற்கொள்ளப்படுவது கடந்த 20 ஆண்டு காலமாகத் தொடர்கதையாகி விட்டது. எங்கள் குழுவே இது தொடர்பாக இதற்கு முன் நான்கு முறை இங்கு வந்துள்ளது. எங்களின் பழைய அறிக்கைகள் இந்த வரலாற்றை விரிவாகக் கூறுகின்றன.

      எங்களின் அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளதை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் விநாயகர் ஊர்வலப் பாதையை மாற்றுவதொன்றே இதற்குத் தீர்வு என்பதையும் ஆணையாக இட்டுள்ளது. எனினும் நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருவதுபோல மன்னார்குடி சாலை வழியாக ஊர்வலம் திருப்பப் படுவது ஒன்றே இதற்கான தீர்வு.   ஆனால் இது இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இந்துத்துவ சக்திகள் அதை நடைமுறைப்படுத்த விடுவதுமில்லை. காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் வன்முறையைத் தடுக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்காததால் ஆண்டுதோறும் பிரசினை தொடர்கிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் வந்தாலே இங்கு வாழும் முஸ்லிம்கள் அச்சம் பதட்டம் இழப்புகள் ஆகியவற்றைச் சந்திப்பதும் தொடர்கிறது. வன்முறையின் பலன்களை வன்முறையாளர்களே அனுபவிப்பது என்னும் கொடுமையும் தொடர்கிறது. இன்று முத்துப்பேட்டை பேரூராட்சி இடைத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றி பெறத் துவங்கியுள்ளதை வேறெப்படி விளங்கிக் கொள்வது?



      இந்த ஆண்டும் ஊர்வலத்தில் முஸ்லிம் வீடுகள் தாக்கப்பட்டதை அறிந்து எங்கள் குழு மீண்டும் இங்கு வந்து நேற்று மாலை முழுவதும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் வீடுகளுக்குச் சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டது. பா.ஜ.க மாவட்டத் தலைவர் பேட்டை சிவாவுடனும், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கணபதி மற்றும் புலனாய்வு அதிகாரி சண்முகவேல் ஆகியோருடனும் பேசியது. இன்று காலை திருவாரூர் மாவட்ட ஏ..டி.எஸ்.பி அனார்கலி பேகம் அவர்களுடன் விரிவாகப் பேசியது.

சம்பவம்

      சென்ற செப்டபர் 3 அன்று விநாயகர் ஊர்வலத்தை ஒட்டிப் பெரிய அளவில் வெளி மாவட்டங்களிலிருந்து காவல்துறையினர் மற்றும் ஆயுத ரிசர்வ் படையினர் கொண்டு வந்து குவிக்கப் பட்டுள்ளனர். மதியம் 12 மணி முதல் ஊர்வலப் பாதையில் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் காவல்துறை கெடுபிடிகள் கடுமையாக இருந்துள்ளன. யாரும் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. பள்ளிவாசல்களிலும் கூட தொழுகை நேரம் தவிர பிற நேரங்களில் யாரும் இருக்க அனுமதிக்கப்படவில்லை. கிட்டத்தட்ட முஸ்லிம் சமூகமே அன்று முழுவதும் ஒட்டு மொத்தமாக சிறைக் கைதிகள் போல நடத்தப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலம் எப்போதும்போல அவர்கள் சொன்ன நேரத்தைத் தாண்டி சுமார் 8மணி அளவில் பழைய பஸ் ஸ்டான்ட் அருகே வந்தபோது இரவுத் தொழுகைக்காக பாங்கு ஒலித்துள்ளது. காவல்துறையினர் ஊர்வலத்தை நிறுத்தியுள்ளனர். உடனடியாகக் கூட்டத்தில் தலைமை ஏற்று வந்து கொண்டிருந்த பா.ஜ.க செயலாளர் கருப்பு (எ) முருகானந்தம் முதலானோர் காவல்துறையினர் முஸ்லிம்கள் வீட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டுத் தமக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி மைக்கில் முழங்கத் தொடங்கியுள்ளனர்.

   மீண்டும் ஊர்வலம் நகர அனுமதிக்கப் பட்டபோது பழைய பேருந்து நிலையத்திலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ரயில்வே கேட் வரை இரு பக்கங்களிலும் உள்ள முஸ்லிம் வீடுகள் மீது ஊர்வலத்தினர் கல் வீசித் தாக்கத் தொடங்கியுள்ளனர். சுமார் 10 வீடுகளில் சன்னல் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்ததை எங்கள் குழு கண்டது. என்ன நடக்குமோ என்கிற அச்சத்துடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு முஸ்லிம்கள் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

      இப்படியான கல் வீச்சுக்கள் நடந்தபோது காவல்துறைக் கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார் மற்றும் மூன்று மாவட்டக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் இருந்த காவற் படையினர் அதைத் தடுப்பதற்கு எந்த முயற்சியையும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றுள்ளதை. வீடியோ பதிவுகள் காட்டுகின்றன. கடந்த ஆண்டுகளில் சாலையின் இரு மருங்கிலும் கயிறுகள் கட்டப்பட்டு ஊர்வலம் கட்டுக்குள் செல்லுவதற்கு வழி செய்யப்பட்டிருந்தது. அத்து மீறி முஸ்லிம் வீடுகள் பக்கம் நகர்வோர் உடனடியாக அங்கு நின்றிருக்கும் காவலர்களால் தடுக்கப்பட்டு கயிறுகளைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ளவும் அது வசதியாக இருந்தது. இம்முறை அதுவும் இல்லை என்பதும் ஏன் அது இம்முறை கடை பிடிக்கப்படவில்லை என்பதும் தெரியவில்லை. ஊர்வலத்தில் செல்வோர் முஸ்லிம் வீடுகளின் மீது எறிவதற்காக சாலையில் கிடக்கும் கற்களைப் பொறுக்குவதையும் வீடுகளின் மீது வீசுவதையும் காட்டும் வீடியோ பதிவுகள் உள்ளன.
  
      அடுத்த நாள் (செப் 4) வீடுகள் தாக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.முத்துப்பேட்டை காவல் நிலையம் மு.த.அ.எண் 361 முதல் 368 வரை உள்ள அறிக்கைகளை எம் குழு பர்வையிட்டது.இ.த.ச 143, 188, 506 (2), பி.பி.டி சட்டம் 3(1) ஆகிய பிரிவுகளின் கீழ் கருப்பு (எ) முருகானந்தம், ராஜேந்திரன், மகேஷ், குமரப்பா, குமரவேல் ஆகியோர் தலைமையில் வந்த ஊர்வலத்தினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

      அடுத்த நாள் காலை சுமார் 4 மணி அளவில் கொய்யா மகால் அருகில் உள்ள எல்சன் ஷேக் தாவூது என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கடை வைத்துள்ள மணி என்பவரின் கடைக்குள் ஷட்டரைத் தூக்கி பெட்ரோல் தோய்த்த எரியும் துணி ஒன்று உள்ளே வீசப் பட்டுள்ளது. இதன் விளைவாக சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைதுள்ளன. முஸ்லிம்கள் மீது பழி வர வேண்டும் என இது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் கடை வைத்துள்ளவர் இந்துவானாலும் கடை முஸ்லிம் ஒருவருடையது என்பது குறிப்பிடத் தக்கது.

      அன்று மதியம் 11 மணி அளவில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருப்பு உட்பட சுமார் ஆறு பா.ஜ.க மற்றும் இந்துத்துவத் தலைவர்கள் திடீரென முத்துப்பேட்டைக் காவல் நிலையத்திற்குள் புகுந்து எங்கள் மீது ஏன் வழக்குத் தொடுத்துள்ளீர்கள், எங்கள் ஆட்களை ஏன் கைது செய்கிறீர்கள், முடிந்தால் எங்களைக் கைது செய்யுங்கள் எனச் சவால் விட்டுள்ளனர். தாங்கள் அவ்வாறு காவல் நிலையம் சென்றதை பா.ஜ.க மாவட்ட நிர்வாகி பேட்டை சிவா எங்களிடம் ஏற்றுக் கொண்டார். முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டுள்ளவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக யாரோ சில சுமார் 10 பேர்களைத் தற்போது பெயருக்குக் கைது செய்துள்ளனர். வன்முறைகளுக்குக் காரணமான கருப்பு உள்ளிட்டோர் எந்தப் பிரச்சினைகளும் இன்றி நடமாடிக் கொண்டுள்ளனர்.

     காவலுக்குக் கொண்டுவரப்பட்ட காவல்துறையினர் மேற்கொண்ட சில பாலியல் அத்துமீறல்கள் இம்முறை வெளிவந்துள்ளன. காவலர்கள் பெண்கள் தனியாக உள்ள வீடுகளில் புகுந்து தண்ணீர் கேட்பது முதலான பாவனைகளில் அங்குள்ள பெண்களிடம் சில்மிஷங்கள் செய்துள்ளனர். சுமார் 50 நிகழ்வுகள் இவ்வாறு நடந்துள்ளன என ஒருவர் எங்களிடம் தெரிவித்தார்.  பெண்கள் தொடர்பான பிரச்சினை என்பதால் பலரும் இதைப் பெரிதாக்காமல் மனசுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அவமானத்தில் நொந்து போயுள்ளனர். இவற்றில் சில பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. (எ.கா: ‘காக்கி உடையில் வந்த கயவர்கள்’, நக்கீரன், செப் 20 – 23). ஆகஸ்ட் 4 அன்று இரவு பட்டறைகுளம் பகுதியில் உள்ள துப்புரவுப் பணியாளர் தெருவில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த ஒரு காவலர் சரோஜா எனும் பெண்ணிடம் வம்பு செய்ய அவரை உடனடியாக அப்பகுதி மக்கள் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்புவிக்க, அவர்கள் அந்தக் காவலரைத் தப்புவித்துள்ள செய்தி பத்திரிக்கையில் வந்துள்ளது.

      செப் 8 அன்று பழைய தியேட்டர் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து வம்பு செய்த திருத்துறைபூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சந்திரசேகர் என்பவரை அப்பகுதி மக்கள் தாக்கியபோது அவர் தையல் எந்திரத்தின் மீது விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

    இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு முத்துப்பேட்டைக் காவல்துறையினர் முஸ்லிகள் மீது வழக்குப் போட்டு அச்சுறுத்தலைத் தொடங்கியுள்ளனர்.  வீடுகளில் கல்லெறிந்து சேதம் விளைவித்ததற்காக வன்முறைக்குக் காரணமான சிலர் கைது செய்யப்பட்டதற்கு ‘பாலன்ஸ்’ பண்ணுவதற்காக இப்படி முஸ்லிகள் சிலர் மீது பொய் வழக்குப் போட்டு தொல்லை செய்கின்றனர். அதோடு இப்படிச் சில முஸ்லிகள் மீது வழக்குப் போட்டு மிரட்டினால்தான் அவர்கள் தாங்கள் கொடுத்துள்ள புகார்கள் பற்றி ஒன்றும் பேசாமல் இருப்பார்கள் எனவும் காவல்துறை கருதுவதாகத் தெரிகிறது. “எங்களுக்குக் கொஞ்சம் முஸ்லிம்கள் வேணும்” என ஒரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

     இப்படிப் பாதிக்கப்பட்ட சிலரையும் நாங்கள் சந்திக்க முடிந்துள்ளது. நெய்யக்காரத் தெருவிலுள்ள அன்சாரி என்பவர் காவலர் சந்திரசேகர் தாக்கப்பட்ட வழக்கில் 506 (2) பிரிவில் கைது செய்யப்பட்டு நேற்று மாலைதான் பிணையில் வெளி வந்துள்ளார். சந்திரசேகரைத் தாக்கியவர்களில் ஒருவர் என இத்ரிஸ் என்பாரைத் தேடி வந்தவர்கள். இத்ரிஸ் கனி என்கிற பெயரைத் தவிர அச் சம்பவத்தோடு வேறு தொடர்பே இல்லாத அன்சாரியின் தம்பி வீட்டில் ஆகஸ்ட் 6  இரவில் காம்பவுன்ட் சுவர் ஏறிக் குதித்து கதவுகளைத் தட்டி அட்டகாசம் செய்துல்ளனர். இத்ரிஸ் அப்போது ஊரில் இல்லை. மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவரது சகோதரி மகனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இத்ரிசின் அண்ணன் அன்சாரி கைலி பனியனுடன் காவல் நிலையம் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டு ரிமான்ட் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர் சுவாமிநாதன்தான் காம்பவுன்ட் சுவரேறிக் குதித்தவர்.

     கல்கேணித் தெருவில் உள்ள காதர் ஹுசேன் என்பவர் சந்திரசேகர் தாக்கப்பட்ட போது சத்தம் கேட்டு அந்த இடத்திற்கு என்ன நடக்கிறது எனப் பார்க்கச் சென்றுள்ளார். அவரைத் தேடி வருவதாகச் சொல்லி  11ந் தேதி இரவு 12.45 மணி அளவில் அவரது மனைவி ரம்ஜான் பேகமும் மகளும் தனியாக இருந்தபோது எஸ்.ஐ சுவாமிநாதன் மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி குணசேகரன் தலைமையில் வந்த காவலர்கள் வெளி கேட் மற்றும் வீட்டுக் கதவுகள் உடையும்படி சேதப் படுத்தி பெண்களை அச்சுறுத்தியுள்ளனர். காதர் ஹுசேன் தான் கைது செய்யப்பட நேருமோ என அஞ்சி இப்போது தலைமறைவாக உள்ளார். காதர் ஹுசேனிடம் முன்னதாக குணசேகரன் பணம் கேட்டுத் தொந்தரவு செய்து வந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.
இந்தப் பிரச்சினையில் தற்போது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட அன்சாரி மட்டுமல்லாமல் ஆசாத் நகர் மீரா ஹுசேன், கொய்யாத் தோப்பு ஹலீல் ரஹ்மான் எல்லோருமே அப் பிரச்சினையில் எந்தவகையிலும் சம்பந்தப்படாதவர்கள்.

      பெண்களிடம் காவலுக்கு வந்திருந்தவர்கள் செய்த சில்மிஷங்கள் குறித்து ஒரு காவல் அதிகாரி, “பாதுகாப்புக்கு இவன்களைக் கொண்டு வந்தால், இவன்களிடம் இருந்து ஜனங்களைப் பாதுகாக்க வேண்டி இருக்கு” என அலுத்துக் கொண்டதையும் சிலர் எங்களிடம் கூறினர்..

  காவல்துறைக் கண்காணிப்பாளருடன் எங்களுக்குத் தொடர்பு கிடைக்காததால் திருவாரூர் மாவட்ட ஏ..டி.எஸ்.பி அனார்கலி பேகம் அவர்களிடம் பேசினோம். ஊர்வலப் பாதையை மாற்றுவது தொடர்பான நீதிமன்ற ஆணை குறித்த தகவல்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை எனவும் தற்போது அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனவும் அடுத்த ஆண்டு அது நடைமுறைப்படுத்த ஆவன செய்யப்படும் எனவும் கூறினார். முஸ்லிம் வீடுகளைத் தாக்கியபோது நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அதிகாறிகள் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். அப்பாவிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அடுத்த ஆண்டு வெளியூர்களிலிருந்து விநாயகர் ஊர்வலத்திற்கு ஆட்கள் கொண்டு வருவதையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



எமது பார்வைகளும் பரிந்துரைகளும்
  1. இப்படி ஆண்டுதோறும் முத்துப்பேட்டை வாழ் முஸ்லிம்கள் அஞ்சிக் கிடப்பதும், ஊர்வலம் முடியும் வரை அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்க நேர்வதும் மிகவும் வேதனைக்குரிய ஒன்று. வெளியிலிருந்து ஒரு பெருங் கும்பல் அசிங்கமாகப் பேசி கல்வீசித் தாக்கும்போது உள்ளே அடைந்து கிடக்கும் இளம் பிள்ளைகளின் மனம் எத்தனை பாடுபடும், அது பிற்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கவலை அரசுக்கும் நிர்வாகத்திற்கும் இல்லாதது வேதனை. ஊர்வலத்தில் செல்பவர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது எனத் தாங்கள் சொல்லியிருந்த போதும் பாங்கு ஒலிக்கும்போது தடுத்து நிறுத்தப்பட்டதால் சிலர் வன்முறையில் ஈடுபட நேர்ந்து விட்டது எனப் பேட்டை சிவாவும் ஏற்றுக் கொண்டார்.
  2. இப்படியான அச்சம் முஸ்லிகள் மத்தியில் நிரந்தரமாக எற்படுத்தப் பட்டுள்ளதைப் பயன்படுத்திச் சில காவல்துறையினர் மிரட்டல்கள், லஞ்ச ஊழல்கள், பணம் கேட்டுத் தொல்லை செய்தல், பொய் வழக்குப் போடுதல், பெண்களிடம் சில்மிஷம் முதலியவற்றைச் செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டுவிடுகிறது.
  3. இந்த நிலைமையைத் தடுப்பதற்கான ஒரே வழி ஊர்வலப் பாதையை பட்டுக்கோட்டை சாலையிலிருந்து மாற்றி மன்னார்குடி சாலை வழியாக அனுப்புவதுதான். அரசும் மாவட்ட நிர்வாகமும் இதை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். எங்களிடம் பேசிய பேட்டை சிவா எக்காரணம் கொண்டும் ஊர்வலப் பாதையை மாற்றுவது என்கிற விஷயத்தில் எந்தச் சமரசமும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.
  4. இம்முறை ஊர்வலத்தினர் தாக்கியபோது பார்த்துக் கொண்டு அமைதி காத்த காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்குட்படுத்தப் பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கருப்பு முதலானவர்கள் மீது மு,த.அ பதிவு செய்யப்பட்டிருந்த போதும், காவல் நிலையத்திற்கு வந்து அவர்கள் சவால் விட்ட பின்னும் அவர்கள் கைது செய்யப்படாமல் அனுப்பப் பட்டது குறித்தும் விசாரணை செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் காவலர் சந்திரசேகரனைத் தாக்கியதாகக் கைது செய்யப்பட்ட அப்பாவிகள் வழக்கிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
  5. ஊர்வலத்தில் வன்முறை செய்பவர்கள் பெரும்பாலும் வெளியிலிருந்து கொண்டு வரப்படும் ஆட்கள்தான். இம்முறை நாகப்பட்டினம், மீமிசல், ஒரத்தநாடு, நீடாமங்கலம் முதலான ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இது தடை செய்யப்பட வேண்டும்.
  6. இருபதாண்டுகளுக்கும் மேலாக விநாயகர் ஊர்வல வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. இதன் சகல பரிமானங்களையும் ஆய்வு செய்யவும், நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
  7. இவ்வாறு அடிக்கடி மத வன்முறைகள் நடைபெறும் பகுதிகளில் காவல்துறையில் போதிய அளவில் சிறுபான்மையினர் நியமிக்கப்பட வேண்டும் என சச்சார் ஆணையம் பரிதுரைத்துள்ளது. இது இம்மாவட்டத்தில் குறிப்பாக முத்துப்பேட்டை பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தவிரவும் இத்தகைய பகுதிகளில் காவல் நிலையங்களில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். 

தொடர்பு : 

அ.மார்க்ஸ், 
தய்.கந்தசாமி,
 27/7, ஏ.எஸ்.என். காம்ப்ளெக்ஸ், 
திருத்துறைப்பூண்டி- 614 713.  
செல்: 
+91 94441 20582, 
+91 9486912869

நன்றி: அ.மார்க்ஸ்