புதன், மே 11, 2022

உணவும் இந்தியாவும்

 உணவும் இந்தியாவும்

மு.சிவகுருநாதன்

 


 

 

         இந்திய உணவு என்று ஒன்றைச் சுட்ட முடியாது. இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பு. இவற்றில் பல நூறு வகையான உணவுமுறைகள் வழக்கில் உண்டு. அவை பழங்காலத்திலிருந்தே மத்திய ஆசியா, பாரசீகம், அரேபியா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் போன்ற பல பகுதி உணவுமுறைகளின் தாக்கங்களுக்கு ஆட்பட்டுள்ளன.

      இவற்றை வட மற்றும் தென்னிந்திய உணவுகள் என்று வகைப்படுத்துவது கூட பொருத்தமாக இருக்காது. வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரமும் உணவுப்பண்பாடும் வேறானது. அதைப்போலவே ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல் என வேறுபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்தமான் - நிகோபர் தீவுகள், இலட்சத்தீவுகள் ஆகியவற்றின் உணவுகளும் ஒன்றாக இருக்கவேண்டிய கட்டாயமில்லை.

       இதைப்போலவே தென்னிந்திய உணவு வகைகளும் ஒருபடித்தானவை அல்ல. தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா, கோவா, ஒடிசா போன்ற மாநிலங்களுக்கும் தனித்த உணவுக் கலாச்சாரம் உண்டு. தமிழகத்தின் உணவுப் பாரம்பரியம் நீண்ட, நெடிய வரலாற்றைக் கொண்டது.

     மிதவெப்ப மண்டலப் பகுதியான வட இந்தியச் சமவெளிகளில் கோதுமை மிகுதியாக விளைகிறது. எனவே அவர்களது உணவில் கோதுமை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. வெப்ப மண்டலப் பகுதியான தென்னிந்தியாவில் நெல் அதிகம் விளைகிறது. ஆகவே அரிசி இவர்களது உணவில் அதிகம் பங்காற்றுகிறது. மேலும் வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவின் உணவுகளில் நீரின் அளவு அதிகம். இதற்கும் காலநிலையே காரணமாகும். வடக்கைப்போல சப்பாத்தியுடன் வெறும் பருப்பை (Dal) வைத்து நம்மால் உண்ண இயலாது; குருமா, குழம்பு, சட்டினி போன்ற அதிக நீருள்ள துணைப்பொருள்கள் தேவைப்படுவது இதன் பொருட்டாகும்.

      சங்க காலத்தில் தமிழர்களின் உணவு முறைகள் சிறப்பாக இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. இது ஒரு நீண்ட மரபுத் தொடர்ச்சியாகும். காலையில் எளிய திரவ உணவான கஞ்சி; மதியம் திட உணவாக சிறுதானியக் களி; மாலை நேரங்களில் சிறுதானிய அல்லது அரிசி உணவு மற்றும் மீன், இறைச்சிகளுடன் என அளவான, சத்துகள் நிறைந்த, உடலுக்கு ஆற்றலைத் தரும் உணவுப் பண்பாடு நம்முடையதாக இருந்திருக்கிறது. கஞ்சி, கூழ், பால் என்ற திரவ உணவு வகைகளில் கேழ்வரகு, கம்பு, தினை, வரகு, சாமை, சோளம் போன்றவையும் திட உணவுகளில் இந்தச் சிறுதானியங்களுடன் உளுந்து போன்ற பருப்பு வகைகளும் வெந்தயமும் பயன்பட்டுள்ளன. புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுப்பொருள்கள் ஆகிய சத்துகளுடன் நார்ப்பொருள்களும் இணைந்து செரித்தலை எளிமையாக்குவது இந்த உணவு முறையின் சிறப்பாகக் கொள்ளலாம். கொழுப்பைத் தவிர்ப்பது அல்லது குறைவாகப் பயன்படுத்துவது என்பது அன்றைய உணவுப் பண்பாட்டின் ஓரங்கமாக இருந்து வந்திருக்கிறது. அவர்களது உழைப்பு கொழுப்பு உடலில் தங்குவதை அனுமதிக்கவில்லை.

      இரவில் உணவுண்ணுதலைத் தவிர்ப்பது சமணப் பண்பாடாகும். மின்சார வசதிகளற்ற அக்காலத்தில் நம்மையறியாமல் பூச்சிகள் உணவுடன் உட்செல்லாமல் தடுக்கவே இந்த ஏற்பாடாகும். மாலை நேரங்களிலேயே இரவு உணவை எடுத்துக்கொள்வது அன்றைய தமிழர்களின் பழக்கமாக இருந்துள்ளது.

      தமிழர்களின் உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருள்கள் பெரும்பாலும் மருத்துவக்குணம் கொண்ட மூலிகைப் பொருள்களாக இருப்பதை அறியலாம். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு மிளகாய் நம்மிடம் வருவதற்கு முன்பு மிளகுக் காரமே நம் உணவை நிறைத்தது. மிளகின் மருத்துவ குணங்களைச் சொல்ல வேண்டியதில்லை. மிளகுடன் மஞ்சள், சீரகம், சோம்பு (பெருஞ்சீரகம்), வெந்தயம், மல்லி (தனியா) ஆகியவை இணைந்த கலவையே தமிழர்களின் பாரம்பரிய மசாலாவாகும்.  நமது உணவில் கார-அமிலத் தன்மையுள்ள உணவு வகைகளின் விகிதாச்சாரம் சரியான அளவில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் செரிமானப் பிரச்சினையும் வயற்றுப்புண்ணும் உண்டாகும். தமிழர் உணவில் இயற்கையாகவே இந்த அளவு சரியாகப் பின்பற்றப் படுகிறது. சைவ, அசைவ உணவுகளுக்கு ஏற்றவகையிலும் இந்த விகிதங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. கூடவே புண்களை ஆற்றவும் கிருமிக்கொல்லியாகவும் செயல்படும் மருத்துவக்குணம் கொண்ட மஞ்சள் சேர்க்கப்படுவதன் காரணம் எளிதில் விளங்கும்.

         அந்நியத் தாக்கத்தால் பூசணி போன்றவை அடித்தட்டு மக்களிடமிருந்து பறிக்கப்பட்டிருந்தாலும் சத்துள்ள, இயற்கையான மரக்கரி உணவும் தமிழர்களின் வாழ்முறையாக நீடித்து வந்துள்ளது.  கறிவேப்பிலை, கொத்துமல்லி, வெற்றிலை போன்றவை உணவின் பகுதியாக இருந்தன. பழங்கள், தயிர்-வெங்காயம், மோர், நீராகாரம் எனக் காலநிலைக்கேற்ற உணவுப்பழக்கம் அமைந்திருந்தது. உணவே மருந்தாகவும் நோய் கண்டால் அதைக் குணமாக்க தமிழ் மருத்துவ முறைகளும் கையாளப்பட்டன. காய்ச்சல் போன்ற நோய்களை மரப்பட்டைகள், மூலிகைகள் அல்லது சுக்கு பானகம் (கஷாயம்), கொத்துமல்லி காபி போன்ற எளிய வீட்டு மருந்துகள்   குணப்படுத்தின.

       அன்று மண்ணால் செய்யப்பட்ட கலன்களே சமையலுக்கும் உண்ணவும் பயன்பட்டன. இதனால் உலோகப்பொருள்களால் உண்டாகும் பிரச்சினைகள் இல்லை. காரியம், நெகிழி போன்றவற்றின் இன்றையப் பயன்பாடுகள் உணவை மேலும் நஞ்சாக்கின்றது. தமிழர் சமையலில் எண்ணெய்களுக்கும் இடமுண்டு. நெய்யுடன் எள், தேங்காய், நிலக்கடலை, ஆமணக்கு, இலுப்பை  போன்றவற்றின் எண்ணெய்கள் சமையலுக்கு உதவின. இன்றைய கனிம எண்ணெய்களும் மரபணு மாற்ற எண்ணெய் வித்துகள் மூலம் பெறப்பட்ட எண்ணெய்களும் இல்லாததால் நமது முன்னோர்கள் தப்பித்தார்கள்!    

       சுமார் 7500 கி.மீ. நீண்ட கடற்கரையைக் கொண்ட தென்னகத்தின் வெப்பமண்டலத்தில் வசிக்கும் கடும் உழைப்பாளிகளின் புரதத் தேவையை நிறைவு செய்வதில் மீன் மற்றும் கடலுணவுகளின் பங்கு அளப்பரியது. இவை நமது அயோடின் பற்றாக்குறையையும் போக்குகின்றன. யாருக்கு அயோடின் தேவை என்பதைக் கருத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் அயோடின் என்ற நிலை ஏற்பட்டது பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது.

        பவுத்தம் ஊன் உண்ணாமையைத் தீவிரமாக வலியுறுத்தவில்லை. பிற அவைதீக சமயங்களான சமணம், ஆசீவகம் போன்றவை இறைச்சியைத் தவிர்த்து தாவர உணவுகளைப் பரப்புரை செய்தன. பெருந்திரள் மக்கள் செல்வாக்கை இவைகள் பெற்றிருந்த போதிலும் மக்களின் அன்றாட உணவில் மீன், இறைச்சி போன்றவற்றிற்கு முதன்மை இடமிருந்தது. இறைச்சிகளில் கோழி, ஆடு, மாடு, பன்றி என்றில்லாமால் அவர்களது பகுதிகளில் கிடைக்கின்றவற்றை உண்டனர். பிற்காலத்தில் வள்ளலார் போன்றோர் ஜீவகாருண்யத்தின் வழி சைவ உணவுகளை உண்ண வலியுறுத்தினார்.  சைவ உணவுப் பழக்கம் இனக்குழு மற்றும் சாதி சார்ந்ததாக இருந்ததே தவிர பெருந்திரள் மக்கள் சமூக வயப்பட்டதாக இல்லை. இம்மக்கள் திரள் கடும் உழைப்பாளிகளாக இருந்தது முதன்மைக் காரணமாகும். சைவ உணவுகளால் அன்றும் இன்றும் மனிதனுக்குத் தேவையான சத்துகளைப் பதிலீடு செய்ய முடியவில்லை என்பதே உண்மையாகும்.

        சீனர்களின் உணவுப்பட்டியலிலுள்ள கருங்குரங்கு, பூனை, வவ்வால், பாம்பு, தவளை, நத்தை, தேள், பூரான், வெட்டுக்கிளி  போன்றவை நம்மை சில நொடிகள் அதிர்ச்சியடைய வைத்தாலும் ஒருவகையில் இவை இயற்கையானவை. நைட்ரேட், பாஸ்பேட் சத்துகளை ஈடு செய்வதற்காக நெப்பன்தஸ் (குடுவைத் தாவரம்) பூச்சிகளை உண்கிறதல்லவா! ஒப்பீட்டளவில் இவற்றைவிட செயற்கையாகத் தயாரிக்கப்படும் மைதா, நூடுல்ஸ், சேமியா, சவ்வரிசி உள்ளிட்ட எந்த உணவும் மேம்பட்டதல்ல.

       பீசா, பர்கர், சிப்ஸ், கோக், பெப்சி போன்று இன்று நமது உணவில் முக்கிய  இடத்தைப் பெற்றிருப்பது  நூடுல்ஸ் ஆகும்.  இதற்கு வடக்கு, தெற்கு பாகுபாடெல்லாம் கிடையாது. பழங்காலத்திலிருந்து உலகின் பெரும்பகுதி மக்களின் உணவில் இடம்பிடிப்பது அரிசி, கோதுமை, சோளம் போன்றவையாகும். இந்த இடத்தை இன்று மைதா ஆக்ரமிக்கிறது. இது அரிசி, கோதுமை, சோளம் போன்று இயற்கையான உணவுப்பொருளல்ல; செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. கோதுமை மற்றும் மரவள்ளிக் கிழங்கு மாவின் நிறத்தை நீக்க பென்சாயில் பெராக்சைடு என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டு வெண்மையாக்கப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துகள் கிட்டத்தக்க முழுமையாக நீங்குகின்றன. பல்வேறு நோக்கங்களுக்காக பல கட்டங்களில் இதனுடன் சேர்க்கப்படும் நச்சு வேதிப் பொருள்களான நிறமூட்டிகள், சுவையூட்டிகள், பதப்படுத்திகள், தாது எண்ணெய்கள் போன்றவை உடல்நலக்கேட்டை உற்பத்தி செய்பவையாகும்.

         அரிசி, கோதுமை போன்றவற்றில் நூடுல்ஸ் செய்யப்படுவதாகவும், அது உடலுக்கு நல்லது என்றும் பரப்புரை செய்யப்படுகிறது. பொதுவாக நூடுல்ஸ் தயாரிக்கும்போது அதன் பகுதிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலிருக்க (மெழுகு, திரவ பாரபீன்) வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானது. எனவே இது இட்லி, இடியாப்பம், தோசை, சப்பாத்தி போன்றதல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இட்லி  நீராவியில் வேகும் நல்ல உணவு, அதில் துணிகளுக்குப் பதிலாக நெகிழியைப் பயன்படுத்தினால் இட்லியின் நிலை என்னவாகும்?

        சந்தைகளில் விற்கப்படும் ‘ஆட்டா’ எனப்படும் கோதுமை மாவிலும் இந்த மைதா சேர்க்கப்படுகிறது. உணவகங்களில் தோசை போன்ற பண்டங்களை எளிதாகத் தயாரிக்க, மெலிதாக இருக்க எனப் பல காரணங்களுக்காக தோசை மாவுடன் மைதா சேர்க்கப்படுவதும் உண்டு. இதற்கு அங்காடிகளில் இலவசமாகத் தரப்படும் கோதுமையைச் சுத்தப்படுத்தி அறைத்துப் பயன்படுத்துவது மிக நல்லது.

       உணவை மூலப்பொருள்களைக் கொண்டு நாமே உருவாக்க வேண்டும். சந்தையில் விற்கப்படும் செயற்கையான உடனடி/துரித உணவு வகைகள், அடைக்கப்பட்ட உணவுகள் மிக ஆபத்தனவை. இவற்றை வாங்கிப் பயன்படுத்தி நமது உடல்நலத்திற்கு உலை வைக்க வேண்டாம். எனவே முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு இயற்கையான முறைகளில்  உருவாக்கப்படும் உணவுகளே உண்ண ஏற்றவை என்பதை உணர வேண்டும்.

       ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் அவர்களது தவறான கொள்கைகள், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றால் உணவு உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டு கடும் பஞ்சங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. மேலும்  அன்றைய நிலையில் வேளாண் நிலப்பரப்பு மிகவும் குறைவாக இருந்தது. இந்திய விடுதலைக்குப்பின் பசுமைப்புரட்சி உணவுத் தேவையையும் பஞ்சத்தையும்  போக்க உதவியது. அன்றைய காலகட்டத் தேவை என்றளவில் இது நம்மீது திணிக்கப்பட்டது. உணவு உற்பத்தியில் இன்று தன்னிறைவு அடைந்துவிட்டதால் பசுமைப்புரட்சியை (வீரியக் ரகங்கள், வேதியுரங்கள், பூச்சிக்கொல்லிகள்) மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இத்தகைய முயற்சிகள் ஏதும் நடைபெறவில்லை. இயற்கை வேளாண்மை, இயற்கையுரம், மண்புழு உரம் என்பதுகூட இன்று ‘கார்ப்பரேட்’களில் கைகளில் சென்றுவிட்டது.  

      பசுமைப்புரட்சியைவிட அதிக கேடுகளை உருவாக்கும் மரபணு மாற்றப் பயிர்கள், விலங்குகள் என அடுத்தகட்டச் சீரழிவின் உச்சத்தில் இருக்கிறோம். மனிதத் தேவைக்கேற்ப இயற்கையான தாவர வகைகளை உருவாக்குவதை விட்டு செயற்கையான பயிர் வகைகளை உருவாக்குவது கொடூரமானது. இதன்மூலம் தீவிர உடல்நலக் கேடுகளையும் தலைமுறை, தலைமுறையாகத் தொடரும் மரபுவழிக் குறைபாடுகளையும் உடன்விளைவாகப் பெறுகிறோம்.  வளர்ந்துவரும் இறைச்சித் தேவைகளுக்காக மீன், இறால், கோழி, மாடு, பன்றி, முயல் போன்றவற்றில் வளர் ஊக்கிகளைப் பயன்படுத்துவதும் மரபணு மாற்றங்கள் செய்வதும் நமது உடல்நலத்துடன் சூழலையும் கெடுப்பதாகும். நமது உணவிற்குப் பயன்படும் தாவர, விலங்குகளை இயற்கையான முறைகளில் உற்பத்தி செய்து, அவற்றை அளவோடு நுகர்வதைப் பண்பாடாக வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. முதலீட்டியச் சந்தைகள் நம்மீது திணிந்துள்ள நுகர்விய மோகத்திலிருந்து நாம் கட்டாயம் விடுபட்டாக வேண்டும்.  

நன்றி: ‘பொம்மி’ சிறுவர் மாத இதழ் - மே 2022

சனி, மே 07, 2022

கல்விப்புலம் காணாத பாடங்கள்!

 கல்விப்புலம் காணாத பாடங்கள்!

மு.சிவகுருநாதன்


 

பகுதி: ஒன்று

          “உலகின் ஆபத்தான விலங்கு மனிதன்”, என்று குழந்தைகளிடம் நேரடியாகச் சொன்னால் சரிவருமா?  எனவே முகம் பார்க்கும் கன்ணாடியை வழியே  அதன் மூடியைக் கவனமாகத் திறந்து பார்க்கச் சொல்லி புதிர் போடுவதன் மூலமாக உண்மைநிலை இயல்பாக உணர்த்தப்படுகிறது.  இதைப் படிக்கும் குழந்தைகள் கூடுதல் ஆர்வம் தொற்றிக் கொள்ள நூலில் எளிதாக நுழைந்துவிடுகிறார்கள். புவியில் கடைசியாக தோன்றிய மனிதன் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இப்புவியில் வாழ்ந்துவரும் உயிரினங்களின் அழிவுக்குக் காரணமாக உள்ளான் என்பதை அவர்கள் தெளிவாக உணர்கிறார்கள்.

           ஐந்தறிவு (ஆறறிவு), ஐந்திணை, ஐம்பூதம் ஆகியவற்றை என புவிக்கோள இருப்புகளைக் குழந்தைகளுக்கு ஏற்றபடி சூழலியல் புரிதலோடு விளக்கி எழுதப்பட்ட பாடங்களே ‘பசுமைப் பள்ளி’யாக  உருவாகியுள்ளன. இவற்றை சிறார்களுக்கான கதைகள் என்றோ, மொத்தத்தில் ஒரு சிறார் நாவல் என்றோ கூடக் கருதலாம். கல்விப்புலத்தில் கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல், வகுப்பறை, ஆசிரியர், கல்விமுறை என  அனைத்தாலும் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தவறவிடப்பட்ட பாடங்களை ‘பசுமைப் பள்ளி’ தன்னுள் கொண்டிருப்பதால், அது முதன்மைமிக்க ஒன்றாகிறது.

தாவரங்கள் -மரம் – ஓரறிவு (உடம்பு) 

ஊர்வன - மண்புழு – ஈரறிவு (உடம்பு, நாக்கு)

பூச்சிகள் – கறையான் – மூன்றறிவு  (உடம்பு, நாக்கு, மூக்கு)

பறவைகள் – தேனீ – நான்கறிவு (உடம்பு, நாக்கு, மூக்கு, கண்கள்)

பாலூட்டிகள் – ஓங்கில் – ஐந்தறிவு (உடம்பு, நாக்கு, மூக்கு, கண்கள், காது)

மனிதர்கள் – ஆறாம் அறிவு (ஐம்புலனுடன் பகுத்தறிவும்)

      “அறம் செய விரும்பு”, என்று மட்டும் படித்த குழந்தைகளுக்கு “மரம் செய விரும்பு’ முற்றிலும் புதுமைதான்! இதைப் படிக்கும் குழந்தைகள் இனி யாரையும் ‘மரமண்டை’ என்று திட்டமாட்டார்கள்! மரம், களிமண், காட்டுமிராண்டி போன்ற வசைச் சொற்கள் உருவான விதம் பற்றிக்கூட இந்நூல் ஆராயத் தூண்டுகிறது. மனிதன் தன் குற்றங்களை மறைப்பதற்கும் பிறரைப் பலியாக்கவும் தாவரங்கள், விலங்குகள், தொல்குடிகள் ஆகியவற்றின் மீதான வசைச் சொற்களை உருவாக்கியிருக்க வேண்டும். குழந்தைகளுக்கான மொழிநடை நூலில் இருக்கிறது. குழந்தைகள் இவற்றை நேரடியாகப் படித்து அறிந்திட முடியும். இதை யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. பாடநூல்கள் இவ்வாறு எளிமையாகவும் கருத்தூன்றியும் அமைந்துவிட்டால் ஆசிரியர்களின் பணி மிகவும் எளிமையாகிவிடும்.  ஆனால் பாடநூல்கள் பெரும்பாலும் சொல்லிக் கொடுக்கக்கூட லாயக்கற்றவையாக இருக்கின்றன. அதைப் பிறகு பார்ப்போம்.  

        “மண்புழு உழவனின் நண்பன்’ என்பது கல்வியில் தொடரும் பாலபாடம். அவைகள் மனிதனுக்கு உதவிசெய்வதற்காகவே பிறந்தவை, உலகமே மனிதனுக்குத்தான் என்பது போன்ற எண்ணங்களை விதைக்க இது போதுமானதாக இருக்கிறது. பொறியாளர், சுரங்கப் பொறியாளர், வேதி வல்லுநர் போன்ற புதிய முகங்களை குழந்தைகள் சரியாக அடையாளம் காணும் வாய்ப்பை, அதாவது பாடநூல்கள் தவறவிட்ட வாய்ப்பை இந்நூல் வழங்குகிறது.

     கறையான், குளவி, தேனீ, குருவிகள் போன்றவை ஒருவகையில் கலைஞர்கள்தானே! இவைகள் கட்டும் புற்று, கூடு, தேனடை ஆகியன கலையம்சமும் நிபுணத்துவமும் கொண்டவையாக இருக்கின்றன. காற்றின் திசையையும் பருவமழையையும் முன்னறிவிக்கும் காகம், தூக்கணாங்குருவி போன்றவற்றைவிட மனிதனின் ஆறறிவு மேம்பட்டதா? தமக்குத் தொடர்பில்லாத மனிதனைக் காப்பாற்றும் ஓங்கிலை (டால்பின்) ஐந்தறிவு என்று சொல்தல் தகுமா? காடுகளில் வாழும் இயற்கை மனிதர்களான பழங்குடிகளை ‘காட்டுமிராண்டிகள்’ என்று சொல்லும் தகுதி ‘நாட்டுமிராண்டிகளுக்கு’ உண்டா? என்று குழந்தைகளிடம்  சிந்தனை உசுப்பலை விதைக்கிறது இந்நூல்.    

          அறிவு என்பது உலகை ஆள்வதோ, ஆதிக்கம் செலுத்துவதோ, இயற்கையை வெல்வதோ அல்ல. மாறாக இயற்கையுடன் கைகுலுக்கி வாழ்வதே அறிவு என்று குழந்தைகளுக்கு உணர்த்தப்படுகிறது. அறிவு ஆற்றலெனும் அதிகாரமாக இருக்க இயலாது; அது ஒரு தோழமை உணர்வு. இந்தப்புரிதல் பழங்குடிகளிடம் இயல்பாக இருக்கிறது; எனவே நாமும் பழங்குடிகளாக மாறவேண்டிய தேவையிருக்கிறது.

         ஆறறிவுகளை அறிந்த பின்னர்  ஐந்திணைகள் அணிவகுக்கின்றன. நமது முன்னோர்களின் ஐந்திணை அறிவு எங்கே போயிற்று? அவற்றை  நம்மிடமிருந்து பறித்தது யார்? “மலைகள் தூள்களாகின்றன. காடுகளைக் காணவில்லை. வயல்களுக்கு வாழ்வில்லை. கடல் கதறுகிறது. பாலையும் பாழாகிறது”, என்று ஆட்காட்டிக் குருவி வழியே சொல்லப்படுகிறது.  

·         கிரானைட் மலை

·         பலகைக் காடு

·         மனை வயல்

·         கழிவுக் கடல்

·         தாது மணல்

       போன்ற தலைப்புகளே   ஐந்திணைகளின் சீரழிவை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.              

     “மலையும் மலை சார்ந்த இடமும்” இருந்த  குறிஞ்சி “கிரானைட்டும் கிரானைட் எடுக்கும் இடமுமாக” மாறியதை  குறிஞ்சி மலரும்,

  “காடும் காடு சார்ந்த இடமான” முல்லை “பலகையும் பலகை எடுக்கும் இடமாகிப்போன” அவலத்தை மருதமலரும்,

“வயலும் வயல் சார்ந்த இடம்” என முன்பு சொல்லப்பட்ட மருத நிலம், “மனையும் மனை சார்ந்த இடமாகத்” திரிந்த நிலையை மருதப்பூவும்,

 “கடலும் கடல் சார்ந்த இடமான” நெயதல் “கழிவும் கழிவைக் கொட்டும் இடமாகிப் போனதை” நெய்தல் மலரும்,

 “மணலும் மணல் சார்ந்த இடமான” தேரிக்காடு இன்று தாதுக்களும் தாதுக்கள் பிரிக்கும் இடமாக மாறியதை பாலைப்பூவும்,

        குழந்தைகளுக்கு மிக அழகிய எளிய நடையில் புரிய வைக்கின்றனர். இதன் வழியே ஐவகை நிலங்களின் நிலையும் இன்றைய சீரழிவும் ஒருசேர விளக்கம் பெறுகின்றன.

     அடுத்து ஐம்பூதங்கள். பூதம் என்பது அழகான தமிழ்ச்சொல் அல்லவா! அது எப்படி குழந்தைகளையும் மனிதர்களையும் மிரட்டும் ஒன்றாக மாறிப்போனது? நிலம், தீ, நீர், காற்று, வானம் ஆகிய இந்த ஐம்பூதங்களை  அழிக்கும் பேரூயிராக, ‘பெரும் பூதமாக’ மனிதன் ஏன் மாறினான்?  ஐம்பூதங்களை

·         மூச்சுக் காற்று  (காகம்)

·         உயிர் நிலம்  (புடையான்/இருதலை மணியன்)

·         வெப்பம் தணிப்போம் (சூரியன்)

·         நன்னீர் நன்று (சேல் கெண்டை)

·         வானம் காப்போம் (முகில்)

        ஆகிய தலைப்புகளில் குழந்தைகள் பாடம் கற்கிறார்கள்.

     கொரோனாப் பெருதொற்று சிலகாலம் மாணவர்களை பள்ளியை விட்டு விரட்டியது. இந்நிலையில் இணைய வகுப்புகள் வளர்ந்தன. நிறைய பன்னாட்டுக் கம்பெனிகள் (பைஜூ, வேதாந்தா) கொசுக்களைப்போல பல்கிப் பெருகின. இதன் குறியீடாக கொசு வருவதாக நினைக்கிறேன். காடழிப்பையும் பேருயிர் அழிவையும் கொசு மூலம் எடுத்துக்காட்டுவது அழகு.

        பசுமைப்பள்ளியின் ஆசிரியர்கள்: புதிர்ப்பெட்டி, மரம், மண்புழு, கறையான், தேனீ, ஓங்கில், மாம்பழ வண்டு (ஆறறிவு உயிர்கள்), ஆட்காட்டி (ஐந்திணை அறிமுகம்), ஐந்திணை மலர்கள் (குறிஞ்சி, முல்லை, மருதல் - பூமருது, நெய்தல், பாலை மலர்கள்), ஐம்பூத அறிமுகம் (வௌவால்), காகம், புடையான்/இருதலை மணியன,  சூரியன், சேல் கெண்டை,  முகில்,  கொசு (இணைய ஆசிரியர்)

        ஆசிரியர்களுக்கு உயிர் இருக்க வேண்டுமா என்ன? உயிருள்ளவையும் உயிரற்றவையும் சேர்ந்ததுதானே இந்தப் புவிக்கோளம்!  எனவே சூழலைப் பயிற்றுவிக்க இவர்களே உண்மையான ஆசிரியர்கள். குழந்தைகளுக்குப் பாடங்கள் எழுத  மட்டுமல்ல; சூழலியலைப் போதிக்கவும் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தகுதியற்றவர்கள்!

       மறை நீரைப்போலவே  மரத்தாது (செல்லுலோஸ்) போன்ற புதிய சொல்லாக்கங்களையும்  அறிமுகம் செய்கிறார். இனிய, எளிய மொழிநடை இதன் சிறப்பு. யாவரும் இந்நூலில் எளிதாக நுழைந்துவிடலாம். ஆனால் இதன் தாக்கம் என்றும் நீடித்து நிற்கும். பாடநூல்கள் இத்தன்மைகளுக்கு எதிராக  இருக்கின்றன. எனவே பெரும்பாலான குழந்தைகளுக்கு கல்வி வெறுப்பாகவும் கசப்பாகவும் மாறிவிடுகிறது.

           நக்கீரன் முன்னுரையில் கூறியபடி, வகுப்பறைக்கு வெளியே கற்க வேண்டிய பாடங்களை உயிரினங்களே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல் அமைந்த ‘பசுமைப் பள்ளி’ வாரத்திற்கு அரை நாளாவது குழந்தைகளுக்கு வாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? பசுமைப் பள்ளியில் வானமே கூரை, திசைகளே சுவர்கள், இயற்கையே பாடநூல். தாவரங்களும் உயிரினங்களும் இயற்கையுமே இதன் ஆசிரியர்கள். இப்பள்ளியில் குழந்தைகள் மட்டுமல்ல, முன்பு குழந்தைகளாக இருந்த பெரியவர்களும் கற்கலாம் என்று அழைக்கிறது இந்நூல். மொத்தத்தில் நமது வகுப்பறைகள் தவறவிட்ட, கல்விப்புலம் காணாத  பாடங்களைப் ‘பசுமைப் பள்ளி’ நமக்குத் தருகிறது. 


 

பகுதி: இரண்டு

        ஏன் பாடநூல்களும் வகுப்பறைகளும் (கல்விப்புலம்) இவற்றைத் தவறவிடுகின்றன?  என்ற கேள்வியை நாம் கேட்டாக வேண்டும். புதிய பாடநூல்களுக்கான பாடத்திட்டப் பணிமனை நான்காண்டுகளுக்கு முன்பு நடந்தது. அப்போது அறிவியல் பாடத்தில் சூழலியல் பகுதிகளைச் சேர்க்க அறிவியல் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இது புவியியல் பகுதியில்  சேர்க்க வேண்டியது; அறிவியலில் அல்ல என்பது அவர்களது வாதம். அதன்படியே பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு புதிய பாடநூல்கள் தயாரிக்கப்பட்டன. அறிவியல் பாடத்தில் உயிரியல் பகுதியில் கூட சூழலியல் பார்வைக்கான இடமில்லை.  மரபணு மாற்றம், மரபணுப் பொறியியலின் நன்மைகள் பக்கமெங்கும் நிறைந்துள்ளன.  சூழலியல் வாழ்வோடு இணைந்துப் பயிலவேண்டியது; குறிப்பிட்ட பாடத்துடன் முடிந்துபோகும் ஒன்றல்ல என்பதை கல்விப்புலம் உணர எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியவில்லை.

        6 முதல் 10 ஆம் வகுப்பு முடிய இயற்பியலுடன் கணினி அறிவியல் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சமூக அறிவியலுடன் வணிகவியல் பாடங்களை இணைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குடிமையியல் என்ற பெயரை அரசியல் அறிவியல் என்று மாற்ற இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. இப்போது பொருளியல் படித்தவர்கள் பணி கேட்கிறார்கள்; இனி அரசியல் அறிவியல் பட்டம் படித்தவர்களும் பட்டதாரி ஆசிரியர் வேலை கேட்பார்கள் என்பது பதிலாகச் சொல்லப்பட்டது. பொறியியல் படித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராகும்போது அரசியல் அறிவியலுக்கு மட்டும் இடமில்லாமல் போவதேன்?  இதுதான் கல்விப்புலச் சூழல்.

         மறைநீர் போன்ற சூழலியல் கருத்துகள் இன்று பாடநூலில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இவை சூழலியல் புரிதலுடன் எழுதப்பட்டவை அல்ல; வெறும் நகலெடுப்புகளாக இவை இருக்கின்றன. மேலும் உலகமயம், வணிகமயத்திற்கு ஆதரவான கருத்துருவாக்கத்திற்கு துணைசெய்ய இவை பயன்படுத்தப்படுகின்றன. (எ.கா.) வேளாண்மையில் நீர்ப் பயன்பாட்டைக் குறைத்தல், மாற்றுப்பயிர் சாகுபடி. குழந்தைகளுக்கான மொழி பாடநூல்களில் அறவே இல்லை. ஆறாம் வகுப்புப் பாடம்கூட ஆங்கிலத்தில் எழுதப்பட்டுப் பின் தமிழில் பெயர்க்கப்படுகிறது. இதற்கு  ‘Google Translate’ பயன்படுவதுதான் விந்தை!

        பொருளியலிலும்கூட பகுதியில் ‘மறைநீர்’ (Virtual Water) அறிமுகமாகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறதா? கொஞ்சம் பொறுங்கள்! ‘தமிழகத்தின் வேளாண்மை’ (பக்.327) என்ற இப்பாடத்தில் வேளாண்பயிர்கள் உற்பத்தியின் மறைநீர் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது. தோல், பின்னலாடை, கார் தொழிற்சாலைகளைப் பற்றிய பேச்சே இல்லை!

          நெல், கோதுமை போன்ற உணவுப்பயிர்களைச் சாகுபடி செய்ய அதிகளவு நீர் தேவைப்படுகிறது. எனவே சொட்டு நீர்ப்பாசனம் போன்ற நவீன முறைகளைப் பின்பற்றவும் நெல்லுக்குப் பதிலாக மாற்றுப் பயிர்களைப் பரிந்துரைக்கவுமான ஏற்பாடாகவே இருக்கிறது. நெல்லுக்கு எப்படி நுண்ணீர்ப் பாசனத் தொழிநுட்பம் சாத்தியமாகும்? எனவே வேறு பயிரை உற்பத்தி செய்யுங்கள், என்பதே இதன் பொருள். அன்று அவுரி; இன்று எண்ணைய் பனை என நீண்ட பட்டியலே இருக்கிறது.

         பசும்பொன் முத்துராமலிங்கர் காமராஜருக்கு ஆட்டுக்குட்டி வரிகட்டி தேர்தலில் போட்டியிட வைத்த கதைகள் (7 தமிழ்) மட்டுமல்ல; சிட்டுக்குருவிகளுக்குப் பாரதியார் அரிசி வைத்த கதையும் (6 தமிழ்) குழந்தைகள் படிக்கக் கிடைக்கின்றன. இதன்மூலம் பாடமெழுதிகளின் சூழலியல் அறிவை உணரமுடியும்.

       “உயிர்களிடத்தில் அன்பு வேணும்”, என்ற கருத்தை குழந்தைகளிடம் பதியவைக்கப் பாடநூலுக்குக் கிடைத்தது மநுநீதிச்சோழன் கதை (5 தமிழ்) மட்டுமே!  இங்கே நீதிமன்றங்களும் மநுநீதி வாயிலாகவே அறிமுகம் ஆகின்றன. இவை மநுநீதியை சமூகக் கடமைகள் (8 சமூக அறிவியல்) என வரையறுக்கின்றன.

        பாடநூல் உருவாக்கத்தில் ஒரு படிநிலை வரிசை (Hierarchy) கடைபிடிக்கப்படும். இடைநிலை ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை (1-5 வகுப்புகள்) பட்டதாரி ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வகுப்புகளுக்கு (6-10 வகுப்புகள்) முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகளுக்கு (+1 & +2) கல்லூரி மற்றும் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் பாடங்களை எழுதுவார்கள். விதிவிலக்காக சிலர் கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்படுவர். அவர்களது சொற்களும் எழுத்துகளும் அம்பலம் ஏறாது.  ஆனால் பாடம் எழுத ஆசிரியர்களும் பேராசிரியர்களும் பொருத்தமானவர்கள் அல்ல என்பதே எனது முடிவு. இதற்காக யாரும் வருத்தப்படத் தேவையில்லை.  வகுப்பறை அதிகாரத்துடன் பாடநூல் அதிகாரத்தையும் அவர்கள் சுமக்க வேண்டாம் என்று கருதுகிறேன்.

        எல்லாவற்றையும் மேலாய்வு செய்ய பேராசிரியப் பெருமக்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) அதிகாரிகளும் இருப்பார்கள். இவர்களது தணிக்கை மற்றும் திருத்தங்கள் திரைப்படத் தணிக்கையைவிட மோசமானது.  மொகலாயர்களின் கடைசி அரசர்  ஔரங்கசீப் என்று பாடநூலில் சொல்லிவிட்டு, தவறு இருந்தால் உரிய ஆதாரங்களைக் கொடுங்கள் என்பார்கள். இவற்றை எழுதுவதற்கு எது ஆதாரமாக இருந்தது என்று அவர்கள் என்றும் சொன்னதில்லை!  பாடநூல்களில் மேற்கோள் நூல்கள் என்று பெரும்பட்டியல் நம்மை மிரட்டும். பாடத்திற்கு அவற்றிற்கும் துளியும் தொடர்பிருக்காது. (எ.கா.) வரலாறு – ரொமிலா தாப்பர், அஸ்கோ பர்போலா, பர்ட்டன் ஸ்டெயின், இர்பான் ஹபீப், நொபொரு கரஷிமா, க.ராஜன், சண்பகலெட்சுமி, ஏ.எல்.பாஷம்

              பாடநூல் குழுவில் இருக்கும் பேரா. க.அ.மணிக்குமார் வேலூர் புரட்சியை (1806) இந்திய வரலாறு கண்டுகொள்ளவில்லை என்று  ‘இந்து தமிழ் திசை’யில்   நடுப்பக்கக் கட்டுரை எழுதுவார். அவர் எழுதிய பாடநூலிலும் (8, 10 வரலாறு) ‘வேலூர் கலகம்’ என்றுதான் இருக்கும்!

        வளர்ப்பு மீன்களில் தூண்டப்பட்ட இனப்பெருக்கம் (ஹைபோஃபைசேஷன் – Hypophysation), கோழி வளர்ப்பு, மரபணுப் பொறியியல் ஆகிய அறிவியலில் உச்சமாகப் போற்றுவதை மட்டும் இலக்காக கொண்டு பாடநூல்கள் (+1 விலங்கியல், வணிக விலங்கியலின் போக்குகள்) இயங்குகின்றன. இதன் உண்மையான மறுபக்கத்தைக் காணத் தவறுகின்றன. அந்த இடத்தை ‘பசுமைப் பள்ளி’ போன்ற நூல்கள்தான் நிரப்புகின்றன.

         சூழலியல் போராளி நம்மாழ்வாரை பாடநூல் அறிமுகம் செய்கின்றது என்று சிலருக்குப் பெருமையாக இருக்கிறது. கூடவே பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதனும் ஒரே பக்கத்தில்தான் அறிமுகம் செய்யப்படுகிறார். கோ.நம்மாழ்வார் என்று குறிக்கும் பாடநூல் மா.சா.சுவாமிநாதன் என்றும் மான்கொம்பு சாம்பசிவம்  சுவாமிநாதன் என்றும் விரித்தெழுதி அறிமுகப்படுத்துகின்றனர். அவர் எங்காவது இவ்வாறு எழுதியிருக்கிறாரா? நமக்கு ‘மான்கொம்பு’ என்றதும் மணலூர் மணியம்மாவைக் குத்திக் கொன்றப் படுகொலைதான் நினைவிற்கு வருகிறது. 

          9 ஆம் வகுப்பு அறிவியலில், “கரிமப் பொருள்களை செரிமானம் செய்தபின் இவை நைட்ரஜன் சத்து நிறைந்த புழுவிலக்கிய மண் (Vermicasting) எனப்படும் கழிவை வெளியேற்றுகின்றன”, (பக்.309) என்று மண்புழுவைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கிறார்கள். Vermi compost ஐத்தான் இவ்வாறு சொல்கிறார்கள். நாங்கூழ் மண்தான் இங்கு  ‘புழுவிலக்கிய மண்’ ஆகிறது. +1 விலங்கியலில் நாங்கூழ் கட்டிகள் (castings)  மண்புழு கழிவு (vermi cast) என்கிறார்கள்.

    “மண்புழு உழவர்களின் சிறந்த நண்பன். மண்புழுக்கள் ஓரு ஆண்டில் ஒரு மெட்ரிக் டன் அளவு மண்ணை மேலும் கீழும் இடமாற்றம் செய்கிறது. இது 100 லிட்டர் புதைபடிவ எரிபொருளுக்குச் சமம்”. (பக்.257, +1 விலங்கியல்) காந்தியவாதி ஜே.சி.குமரப்பா டிராக்டர் சாணி போடுமா? என்று கேட்டார். டிராக்டரால் உழுவதும் மண்புழு மண்ணைத் துளையிடுவதும் இவர்களுக்கு ஒன்றாகவே தெரிகிறது. மேற்பகுதி மண்ணைக் கிளறி, அடிப்பகுதி மண்ணை அழுத்திவிடுவதுதான் டிராக்டரின் பணி.

    “அணுக்கரு உலையானது அதிக அளவில் மின் உற்பத்திக்குப் பயன்படுகிறது”, “இந்திய மின் உற்பத்தியில் அணு சக்தியானது ஐந்தாவது வளமாக உள்ளது”,  (பக்.84, 10 அறிவியல்)  என்றெல்லாம் அணு உலைப் பெருமைகள் உண்மைகளை மறைக்கப் பயன்படுகின்றன.

       சர்ப்பகந்தி (ரவுல்பியா செர்பன்டினா) என்ற மூலிகைத் தாவரத்தை ‘சிவன் அவல் பொறி’ (9 அறிவியல்)  என்றே அறிமுகம் செய்கின்றனர். இதைப்போல அறிவியலில் மதவாதத்தை  தேவையின்றி நுழைக்கும் கொடுமையும் பல இடங்களில் நடக்கிறது. ஆனால் சூழலியல் புரிதலின்றி வெறுமனே அறிவியல் பெருமை பாடுவது தொடர்கிறது.

        வெளிமானை (Black buck) ‘ப்ளாக் பக்’ மற்றும் கருப்பு பக் என்றே பாடநூல் சொல்கிறது. இரலை என்பது ஆண் மானையும் கலை என்பது பெண் மானையும் குறிக்கும். கருமான், புல்வாய், திருகுமான், முருகுமான் என்றெல்லாம் அழைக்கப்படும் இவ்விலங்கு ஆந்திரா, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களின் விலங்களாகவும் உள்ளது. நமது மாநில மலரான செங்காந்தளைக் கூட ‘மலபார் லில்லி’ என்றே பாடநூல் அறிமுகம் செய்கிறது. நீலகிரி வரையாட்டையும் தர்/தரர் என்றெல்லாம் சொல்லி அழகு பார்க்கிறது பாடநூல்!

         அடித்தட்டு மக்கள், தொழிலாளர் உரிமைகள், மதவாத எதிர்ப்பு போன்ற சில அம்சங்களாவது நாம் இடதுசாரிகளைக் குறிப்பாக மார்க்சியர்களை நேர்மறையாக  அணுக வேண்டியுள்ளது. சூழலியல் என்று வந்துவிட்டால் ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் போல இவர்களிடம் சண்டையிட்டே ஆகவேண்டும். பாடநூல் உருவாக்கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமுஎகச  போன்ற பல்வேறு  இடதுசாரி அமைப்புகளின் பங்களிப்புகள் அதிகம். எனவே (கூடங்குளம்) அணு உலை, தேனி நியூட்ரினோ ஆய்வகம், செயற்கைகோள்கள், ஏவூர்திகள், இஸ்ரோ, அப்துல்கலாம் பெருமைகள் பாடநூலின் நிறைகின்றன. சூழலியல் கருத்துகள் ஆங்காங்கு, அதுவும் சரியற்ற முறையில், விகிதத்தில்  தூவப்படுகின்றன.

        ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை (2020) இவர்களுடன் சேர்ந்துதான் அனைவரும் மிகக்கடுமையாக எதிர்த்தோம்.  இன்று ‘இல்லம் தேடிக் கல்வி’ போன்ற அதன் நகலைக் கொண்டாடும் நிலைக்கு வந்துள்ளனர். இவர்களும் தன்னார்வலர்கள், என்.ஜி.ஓ.க்களின் பிரதிநிதிகளாக மாறியுள்ளது வரலாற்றுச் சோகம். மார்க்சியத்தைப் புரிந்துகொள்ள இயலவில்லை என்பது அந்தக் காலம்; மார்க்சியர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே இந்தக் காலம்!

பகுதி: மூன்று

             இன்று தமிழக அரசு பல்வேறு குழுக்கள் அமைத்து பல அறிவிஜீவிகளுக்கு இடமளிப்பதைப்போல, 2018 இல் புதிய பாடநூல் தயாரிப்பிற்காக பல்வேறு குழுக்கள்  அப்போதைய பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரனால் அமைக்கப்பட்டன. இதில் பிரபஞ்சன், தியோடர் பாஸ்கரன், டிராஸ்கி மருது, வ.கீதா, ச.தமிழ்ச்செல்வன், த.வி.வெங்கடேஸ்வரன், ஏ.எஸ்.பத்மாவதி, அப்பணசாமி, இரா.எட்வின், ஷாஜஹான்,  போன்ற பல இலக்கிய ஆளுமைகளும் இ.சுந்தரமூர்த்தி, சி.சுப்பிரமணியம், ச.மாடசாமி, கி.நாச்சிமுத்து, வீ.அரசு, பா.மதிவாணன், க.அ.மணிக்குமார், ஆ.இரா.வேங்கடாசலபதி போன்ற பல  ஆய்வாளர்களும்  இடம் பெற்றனர்.

        இந்தக் காலகட்டத்தில் நண்பர்களுடன் செயலாளர் த.உதயச்சந்திரனை நேரில் சந்தித்து  பாடத்திட்ட பணிமனை நடந்த அபத்தங்களை எடுத்துக்காட்டி கவனிக்க வேண்டிய அம்சங்களை எடுத்துக் கூறினோம். எழுத்துப்பூர்வமான கடிதமும் வழங்கினோம். சூழலியல் சார்ந்த பாடங்களை நக்கீரன், கோவை சதாசிவம் போன்றோரைக் கொண்டு எழுத வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தோம். நல்லவேளையாக அக்கோரிக்கை ஏற்கப்படவில்லை! இத்தகைய எழுத்துகளை பாடநூல் தயாரிக்கும் அதிகாரிகள் விரும்புவதோ, ஏற்பதோ இல்லை.

       எனது அனுபவம் ஒன்று:  ஆறாம் வகுப்பு முதல் பருவ சமூக அறிவியல் வரலாற்றுப் பகுதியில் வரலாறு தொடர்பான ஓர் அறிமுகப்பாடம் (வரலாறு என்றால் என்ன?).  அப்பாடத்திற்குச் செயல்பாடுகள் தயாரிக்கச் சொன்னார்கள்.  நானும் 10 செயல்பாடுகளை எழுதி அனுப்பினேன். அவற்றில் ஒன்று: “நானும் ஒரு வரலாற்று ஆசிரியன்”

          தாத்தா, பாட்டி அண்டை வீட்டுப் பெரியவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் உரையாடி இல்லம், தெரு, ஊர் / நகர், பள்ளி நிகழ்வுகளைக் கேட்டுக் குறிப்பெடு. பள்ளி பற்றிய விவரங்களைச் சேகரி. குறிப்பெடுத்த, சேகரித்த செய்திகளைக் கொண்டு உன் குடும்பம், தெரு, ஊர் / நகர், பள்ளி  வரலாற்றை எழுதிப்பார்.

        பள்ளிகளில் விவரப் பலகை இருக்கும். அதைப் பார்த்து கூட பள்ளியைப் பற்றி 10 வரிகள் எழுதமுடியும். ஆனால் பாடத்தில் இது எவ்வாறு இடம் பெற்றது தெரியுமா?  “நானும் ஒரு வரலாற்று ஆசிரியர்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக. இதுதான் தமிழகப் பாடநூலின் பொதுக்குணம். 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொருளியல் பகுதியில் ‘பணம் மற்றும் கடன்’ என்றொரு பாடம். இப்பாடத்தின் செயல்பாடு, “நீ வெளிநாட்டிற்குச் சென்று கட்டிடக்கலை வல்லுநருக்கான மேற்படிப்பைப் பயில கல்விக் கடன் பெறும் வகையில் வங்கி மேலாளருக்கு விண்ணப்பம் ஒன்று வரைக”.   (பக்.324)

           ஒருவேளை நக்கீரனின் ‘பசுமைப் பள்ளி’ நூலின் பாடங்கள் பாடநூல் மேலாய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டால் என்ன நடந்திருக்கும்? ஒரு கற்பனை:  

·         மண்புழு என்ன பொறியாளரா? உழவனின் நண்பன் என மாற்றுங்கள்.

·         நாட்டுமிராண்டிகள் என்று சொல்வது தவறு. நாட்டு மனிதர்கள் என்று  மாற்றி எழுதவும்.

·         ஐந்திணைப் பாடங்கள் அரசின் கொள்கைகளை எதிர்க்கின்றன. கம்யூனிசக் கொள்கைகளையும் நக்சல் சிந்தனைகளையும் பாடநூலில் இணைக்க முடியாது.

·         மனிதன் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளைக் குழந்தைகளிடம் விதைக்கிறது.

·         மனிதனின் ஆறாவது அறிவான பகுத்தறிவை விமர்சிப்பது தவறானது.

·         இந்தப் பாடங்கள் குழந்தைகளுக்கும் பாடநூலுக்கும் ஏற்றதல்ல.

                                  என்றெல்லாம் பரிந்துரை செய்யப்படும். மொத்தத்தில் இந்நூல் கல்விப்புல அதிகாரிகளால் நிராகரிக்கப்படும்.

(நக்கீரனின் ‘பசுமைப் பள்ளி’ நூல் குறித்த அறிமுகம்.)

 

நூல் குறிப்புகள்:

பசுமைப் பள்ளி – நக்கீரன்

பக். 72, விலை: ரூ.100

முதல் பதிப்பு: டிசம்பர் 2021

வெளியீடு:

காடோடி பதிப்பகம்

6, விகேஎன். நகர், நன்னிலம் – 610105,

திருவாரூர் – மாவட்டம்.

அலைபேசி:  8072730977

  (ஏப்ரல் 02, 2022 திருவாரூரில் ‘தனிச்சொல்’ அமைப்பு ஏற்பாடு செய்த விமர்சன அரங்கிற்காக தயாரிக்கப்பட்ட கட்டுரையின் முழு வடிவம். இதன் பகுதி: ஒன்றின் சுருங்கிய வடிவம் ‘பேசும் புதிய சக்தி’ மே 2022 மாத  இதழின் நூல் அறிமுகம் பகுதியில் வெளியானது.)

  நன்றி: ஜமாலன், க.ஜவகர், நக்கீரன், ஜெ.ஜெயகாந்தன், எஸ்.செந்தில்குமார் மற்றும்  பேசும் புதிய சக்தி இதழ்