திங்கள், ஜனவரி 22, 2018

வரையறைகள் தேவைதானா?



வரையறைகள் தேவைதானா?


மு.சிவகுருநாதன்


      புதிய பாடம் அல்லது தலைப்பை அறிமுகம் செய்யும்போதும் அறிஞர்களின் வரையறைகளை அளிப்பது இங்கு வழக்கமாக உள்ளது. தொடக்க நிலைகளில் இது அவசியமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. வரலாறு பற்றி ஹெரோடொட்டஸூம் புவியியல் பற்றி அரிஸ்டாட்டிலும் மக்களாட்சி பற்றி ஆப்ரகாம் லிங்கனும் பொருளியல் பற்றி ஆடம் ஸ்மித்தும் லயனல் ராபின்ஸூம் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று நமது குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

   8, 9 ஆகிய வகுப்புகளுக்கு தேசியப் பங்கு மாற்றகம் (NSE – National Stock Exchange) வெளியிட்டுள்ள பொருளியல் அறிமுக நூல்கள் ஒப்பிட்டளவில் சமச்சீர் புத்தகங்களை விட சிறப்பானவை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். நடைமுறை வாழ்விலிருந்து உழைப்பு, உற்பத்தி, வருவாய், விற்பனை, வணிகம் போன்றவற்றை விளக்க முடியாதா என்ன?

      இவைகள் இல்லாமல் இப்பகுதிகளை அறிமுகம் செய்ய முடியாதா? அறிந்தவற்றிலிருந்து அறியாத ஒன்றை மிக எளிமையாக அறிமுகம் செய்ய வாய்ப்பிருந்தும் வழக்கமான இவ்வுத்தியைக் கையாள்வது மிகவும் சலிப்பைத் தருவதாக உள்ளது. வரையறைகளையாவது சொல்லித் தொலைத்துவிட்டுப் போங்கள்! ஏன் மொழியை இப்படித் திருகி இளம்பிஞ்சுகளை ஏன் வதைக்கிறீர்கள்? 

    பொதுவாக முதல் வகுப்பாக இருந்தால் கூட பாடநூலை ஆங்கிலத்தில் எழுதி பிறகு தமிழில் பெயர்க்கும் நடைமுறையே காலம் காலமாகப் பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் மிக அபத்தமான தமிழ் வடிவம் ஒன்று கிடைக்கிறது. இதையே படித்துத் தொலைக்க வேண்டிய கட்டாயத்தில் நமது குழந்தைகள் இருக்கின்றனர். இதை வரிக்குவரி வேதமாக ஒப்பிப்பது நமது ஆசிரியப் பெருந்தகைகளில் பணியாகவும் உள்ளது.  

    இலயனல் ராபின்ஸ் (Lionel Robbins) அவர்களின் பொருளியல் விளக்கம் இவ்வாறு தரப்படுகிறது. ‘லயனல்’ என்று சொல்வது தமிழ் மரபல்லவே; எனவே ‘இலயனல்’ ஆவதைக் கவனிக்க! இதைப்போலவே ‘ரப்பர்’ என்பது ‘இரப்பர்’ ஆவதையும் கண்டு ரசிக்கலாம்! இந்த விக்கிபீடியா பாணி மொழிபெயர்ப்பு எரிச்சல் தரவல்லது. அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று ‘இலயனல் இராபின்சு’ என்பர். “விருப்பங்களோடும், கிடைப்பருமையுள்ள மாற்று வழிகளில் பயன்படத்தக்க சாதனங்களோடும் தொடர்புள்ள மனித நடவடிக்கைகளைப் பற்றி பயிலுகின்ற அறிவியல் பொருளியலாகும்”, (பக். 216, ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவம் – தமிழ் வழி)

   ஆங்கில வழியில் கீழ்க்கண்டவாறு உள்ளது. “Economics is the science which studies human behavior as a relationship between ends and scarce means which have alternative uses”, (page: 52, Social Science, VII th Text book) 
  
   Scarce, scarcity ஆகிய சொற்களுக்கு பற்றாக்குறை என்ற எளிய மொழிபெயர்ப்பிருக்க ‘கிடைப்பருமை’ என்ற சொல் ஏன்? கிடைப்பதற்கு அரிய/ அருமையான என்ற பொருளில் ‘கிடைப்பருமை’ என்று குழந்தைகளுக்கு வழங்குவதன் நோக்கம் விளங்கவில்லை. எத்தனை ஆசிரியர்கள் இதன் பொருளை மாணவர்களுக்கு உணர்த்தினார்கள் என்ற அய்யமும் கூடவே எழுகிறது. 

   உழைப்பு பற்றிச் சொல்லும்போது, “அந்த உழைப்பு உடல் உழைப்பாகவோ, மன உழைப்பாகவோ இருக்கலாம். ஒரு சமையல்காரரின் உழைப்பு உடல் உழைப்பு ஆகும். ஒரு ஆசிரியரின் உழைப்பு மன உழைப்பு ஆகும். இன்பத்திற்காகச் செய்யப்படும் எந்த வேலையும் உழைப்பாகாது. உற்பத்திக் காரணியான உழைப்பிற்கு அளிக்கப்படும் வெகுமதி கூலி ஆகும்”, (பக். 219, மேலே குறிப்பிட்ட அதே பாடநூல்.)

   மேற்கண்ட பத்தி உணர்த்த வருவது என்ன? சமையற்காரரின் உழைப்பு வெறும் உடல் உழைப்பு மட்டுந்தானா? அதில் மனம் / மூளை / அறிவு செயல்படுவதே இல்லையா? உடலோ, மனமோ ஒத்துழைக்காமல் உழைப்பு சாத்தியமா? 

    ‘உற்பத்திக் காரணிகள்’ என்னும் இந்தப் பாடத்தில் உழைப்பு, மூலதனம் குறித்து பக்கம் பக்கமாக பேசப்படுகிறது. மருந்துக்குக் கூட கார்ல் மார்க்ஸ் பெயர் இல்லை. ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் ‘குடியரசு’ என்றொரு பாடம். கிரிக்கெட், கால்பந்து ஆட்டங்களைப் போல நமது அரசு இயங்க விதிமுறைகள் உண்டு. அதுவே அரசியல் அமைப்புச் சட்டம் என்றெல்லாம் விளக்குவார்கள். அம்பேத்கர் என்ற பெயர் எங்கும் இருக்காது. கார்ல் மார்க்ஸ் இன்றி மூலதனம் பற்றியும் அம்பேத்கர் இன்றி அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் பேசும் விளக்கும் நம்மவர்களின் திறமை மெச்சத்தக்கது! நரேந்திர மோடி, அருண் ஜேட்லி, மன்மோகன்சிங், ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அனுவாலியா போன்றோர் பொருளியல் அறிஞர்களாகத் தெரிகின்றபோது  அமர்த்யா சென் போன்றோர் பொருளியல் அறிஞர்களாக எப்படித் தெரியமுடியும்?

சனி, ஜனவரி 06, 2018

கல்வி அடிப்படைவாதம்

கல்வி அடிப்படைவாதம்

மு.சிவகுருநாதன்

     வேலூர் மாவட்டம் பணபாக்கம் பள்ளி மாணவிகள் தற்கொலை மற்றும் அதனைத் தொடர்ந்த பல்வேறு நிகழ்வுகள் குறித்து நமது ஆசிரியப் பெருந்தகைகளும் ஊடகங்களும் தீர்ப்பெழுதி முடித்து விட்டார்கள். ஆனால் யாரும் உண்மையான காரணங்களைக் கண்டடையவில்லை. 

   ஊடகங்களும் அரசுகளும் ஆசிரியர்கள்தான் காரணமென்கின்றன. ஆசிரியர்களோ மாணவர்களைத் தண்டிக்கும் முறையே இன்றும் வேண்டும் என்று பிடிவாதம் செய்கின்றன. மீண்டும் குருகுலக்கல்விப் பெருமை பாடவும் இது வாய்ப்பாக அமைகிறது. சமூக ஊடகங்களில் ஆசிரியர்கள் பலரது எதிர்வினை அவர்களது கல்வியையும் பெற்ற பட்டங்களையும் கேள்விக்குள்ளாகின்றன. 

      பெண் குழந்தைகள் சிகரெட் புகைக்கும், நடனமாடும் காணொளிகளை நாள்தோறும் வெளியிட்டு, “பாரீர்! கல்விச் சீரழிவை!! ஆசிரியர்களின் கையைக் கட்டியதன் விளைவு!!!”, என்று உரக்க கூவுகிறார்கள். அதுவும் பெண் குழந்தைகள் சிகரெட் புகைப்பதும் நடனமாடுவதும் கல்விச் சீரழிவு என்று சொல்லும் இந்தக் கல்விக் கல்விக் கலாச்சார வாதிகளின் பண்பை உணந்துகொள்ள போதுமானது. இது ஒரு குற்றச்செயல் என்கிற அடிப்படை உணர்வு கூட இல்லாமற் போனதன் காரணம் விளங்கவில்லை? 

   குருகுலக் கல்விப் புகழ்பாடும் சாதிய, இந்துத்துத்துவ மனநிலைக்கு ஆசிரியர்கள் செல்வது, அவர்களது அடிப்படைவாத பண்பை நமக்கு தெளிவாக்குகிறது. மெக்காலே கல்வியின் குறைகளைக் கொண்டே குருகுலக் கல்வியில் சரணடைவது மிக மோசமானது. கல்வியின் இந்த அடிப்படைவாதம் மிக மோசமானது. இது கல்வியைப் படுகுழிக்குள் தள்ளவல்லது. 

   மதம், மொழி, இன, சாதி அடிப்படைவாதங்களைப் போலவே இந்தக் கல்வி அடிப்படைவாதமும் அபாயகரமானது. கல்வி பற்றிய பழம் மதிப்பீடுகள், வேதக் கல்வி, குருகுலக் கல்வி, நன்னூல் இலக்கணங்கள் வாயிலாக கல்வியை அணுகுதல் என்பதை நாம் கல்வி அடிப்படைவாதமாக  வரையறுக்கலாம். 

   கல்வியில் நடக்கும் அநீதிகளுக்குக் கல்வி முறை பெரிதும் காரணமாக இருக்கிறது. அதைத் தடுக்க, தட்டிக் கேட்க வாய்ப்பிருந்தும் வாளாயிருக்கின்ற ஆசிரியர்களுக்கு இதில் பெரும்பங்கு இருக்கிறது. இருக்கின்ற முறைகளை எவ்வித விமர்சனமின்றி செக்குமாட்டுத் தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் சமூக அநீதி என்பதையும் ஆசிரியர்களும் சங்கங்களும் உணர்வதேயில்லை. 

    இன்றையக் கல்விக் கொடுமைகளுக்குக் காரணமான சிலவற்றைப் பட்டியலிடலாம்.


  • கல்விமுறைகள், தேர்வு முறைகள்
  • பாடத் திட்டங்கள், பாட நூல்கள், கற்பிக்கும் முறைகள்
  • பள்ளிகளில் காலிப் பணியிடங்கள்
  • உள்கட்டமைப்பு வசதிகளின்மை
  • அரசின் கொள்கைகள்
  • கல்வி அலுவலர்களின் அதிகாரப் போக்கு
  • ஆசிரியர்களின் மனநிலை, உளவியலற்ற அணுகுமுறை
  • ஆசிரிய சங்கங்களின் மக்களுக்கு எதிரான போக்கு
  • கல்வி பற்றிய புரிதலின்மை
  • அடிப்படைவாத கல்வி அணுகுமுறை

   கல்வி பற்றிய புரிதல் புரிதலின்மை சமூகம் முழுதும் விரவியுள்ளது. அரசுக்கே இது இல்லை என்பதே உச்சம். தெரியவில்லை என்று சொல்வதைவிட கல்வியைக் கைகழுவத் தயாராகும் அரசுகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? கல்வியை வணிகமாக்கிய மத்திய, மாநில அரசுகள் கல்விச் சீரழிவிற்கு முதன்மைக் காரணமாக இருக்கின்றன. 

    ‘நீட்’ தேர்வு சர்ச்சையில் கல்வியை பொதுப்பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும் என்று பரவலாகப் பேசப்பட்டது. நல்லதுதான். 1960 களின் இறுதியில் கோத்தாரி கல்விக்குழு கல்வி ஒதுக்கீட்டை 6% ஆக்கச் சொன்னது. 50 ஆண்டாகியும் அரசுகள் செயல்படுத்தவில்லை. இன்றைய நிலையில் 10% கூட போதாது. கார்ப்பரேட் பிச்சைகள் (இங்கு இலவசம் என்ற சொல்லைத் தவிர்க்கிறேன்) வாராக்கடன்கள் அளவைப் பார்த்தால் 10% எளிதில் சாத்தியப்படும் என்பது விளங்கும். ஆனால் அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்களை மட்டுமே ஒழிக்க நினைக்கும் நடுத்தர வர்க்க கல்விச் சமூகங்கள் இதை உணர வாய்ப்பே இல்லை. 

    மத்திய அரசின் கல்வி ஒழிப்பு நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, மாநில அரசு கல்விக்கு என்னதான் செய்கிறது?  இன்றைய பள்ளிக் கல்வியின் நிலையை ஆராய்ந்தால் இது நன்கு புலப்படும். அனைவருக்கும் தொடக்கக் கல்வித்திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் போன்ற திட்டங்கள் இல்லையென்றால் மாநிலத்தில் கல்வியே இல்லை என்கிற நிலைதான். மாநில அரசின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களை இந்தத் திட்டத்தின் கீழ் மாற்றி மாநில அரசு சாதனை புரிந்திருக்கிறது! இதனால் 1 முதல் 10 முடிய உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் பெருமளவு நிரம்பியிருக்கிறது. ஒப்பீட்ட்டளவில் மேனிலை வகுப்புகளில் காலியிடங்கள் அதிகம்.

      மேனிலைக் கல்வியில் 11, 12 வகுப்புகளுகளிலும் அரசுக் கல்லூரிகளிலும் காலிப் பணியிடங்களுக்கு அளவில்லை. இங்கு பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியர்கள் அதாவது தற்காலிக ஆசிரியர்கள்; கல்லூரிகளில் கவுரவ (!?) விரிவுரையாளர்கள். பணபாக்கம் பள்ளி மாணவிகள் கொலையில் (வேறு வழியில்லை; அரசு, துறை, ஆசிரியர்கள், சமூகம் என அனைத்து தரப்பும் சேர்ந்து செய்த கொலைதான்!) உடனடியாக நான்கு தற்காலிக ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு அதிகபட்ச ஊதியம் ரூ.5,000 தாண்டாது. உள்ளூர் பெற்றோர் ஆசிரியர் கழகம் அல்லது மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியவற்றால் நியமனம் செய்யப்பட்டவர்கள். 

     சில பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களைவிட தற்காலிக ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகள் ஏராளம். இவர்களை குழந்தைகள் அணுகும் தன்மையில் வேறுபாடுகள் இருக்கிறது. பணபாக்கம் நிகழ்விற்கு இது ஒரு காரணம். 

   தி.மு.க. ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்ட மேனிலைப்பள்ளிக்கு தலைமையாசிரியர், கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் என 5 பணியிடங்களை மட்டுமே அனுமதித்தனர். இதன் மூலம் ஒரு பாடப்பிரிவு மட்டுமே தொடங்க முடியும். தமிழுக்கு ஆசிரியர் தேவையில்லை என்பது இவர்களது கணிப்பு. 

    பின்னர் அ.இ.அ.தி.மு.க. அரசு இவர்களுடன்கூட தமிழ், வரலாறு, பொருளியல், கணக்குப் பதிவியல் – வணிகவியல் என கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தியது. இது பாராட்டத்தக்க முயற்சி.  ஆனால் பழைய பள்ளிகளுக்கு இந்தப் பணியிடங்கள் வழங்கப்படவில்லை. காலியிடங்களும் முழுமையாக நிரப்பப் படவில்லை.

       ‘நீட்’ தேர்வுக்குத் தயாரிக்கிறோம் என்று சொல்பவர்கள் மேனிலை வகுப்புகளில் தாவரவியல், விலங்கியல் பாடங்களில் தனித்தனி ஆசிரியர்கள் இல்லை. கணிதவியல் பிரிவிற்கான குறுகிய பாடத்தையும் (short version) அறிவியல் பிரிவிற்கான (long version) இரண்டையும் தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றில் ஒன்றை மட்டும் படித்த ஆசிரியர்கள் எடுக்கிறார்கள். தனித்தனி பாட ஆசிரியர்கள் நியமிப்பதை நிறுத்தி உயிரியல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இதில் ‘நீட்’ தயாரிப்புப் பெருமைக்கு அளவில்லை.

   தொழிற்கல்விப் பாடப்பிரிவுகளை தவணை முறையில் ஒழித்தாகிவிட்டது. கணினி அறிவியல் ஏதோ பெயருக்கு மட்டுமே. நிரந்தரக் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் இரு கணினிப்பிரிவுகள் தொடங்க முடியும். புதிய கணினிகள், கணினி ஆய்வகம் இருக்க வேண்டும். கழிப்பறைகளே பிரச்சினை எனும்போது கணினி ஆய்வகம் பற்றி பேசமுடியுமா என்ன? கணிதவியல் பாடத்திற்குப் பதிலாக உயிரியல் பாடம் உள்ள கணினிப்பிரிவுகள் இங்கு தொடங்கப்படுகின்றன. கல்வித்துறை விதிகள் இதை அனுமதிக்கின்றன. தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்கும் இந்த குயுக்தி நடைமுறைகள் மூலம் மெத்தப்படித்தவர்களின் சூதும் வாதும் வெளிப்படக் காணலாம். 

    அண்மையில் ஒரு முதுகலை வரலாற்றுப் பாட ஆசிரியரிடம் பேசும்போது, “200 மதிப்பெண்களுக்குப் பதிலாக 90 மதிப்பெண்கள் தேர்வு நடத்துவதும் 10 மதிப்பெண்களை அகமதிப்பீடாக வழங்குவதும் கல்வியின் தரத்தைச் சீரழிக்கும்”, என்று பொங்கி எழுந்தார். இத்தனை ஆண்டுகாலம் 11 ஆம் வகுப்பைப் புறக்கணித்து ஒரு வகுப்புப் பாடத்திற்கு மட்டும் 200 மதிப்பெண்கள் தேர்வு நடத்திய மோசடியை அவர் மட்டுமல்ல; இந்த கல்விச் சமூகங்கள் என்றும் உணரப் போவதில்லை. 

    11 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்துதல், அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் 10 அளித்தல் போன்றவற்றை இன்றைய நிலையில் கல்வித்துறையின் பெருஞ்சாதனையாகவே மதிப்பிடலாம். இதனை சாத்தியமாக்கிய கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன், கல்வி அலுவலர்கள், கல்வியமைச்சர் ஆகியோர் பாராட்டிற்குரியவர்கள். இதைத் தேர்வுச் சீர்திருத்தங்களின் ஓரங்கமாக ஏற்கலாம். ஆனால் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு மிக நீண்டது. 

   தேர்வு முறைகளை மாற்றாமல் கல்வியில் புரட்சி சாத்தியமில்லை. வெறும் மனப்பாடத்திறனை மட்டுமே சோதிக்கும் போட்டித்தேர்வுகளும் பள்ளித்தேர்வுகளும் ஒழிக்கப்பட வேண்டியன. அதற்கு இந்த அகமதிப்பீட்டு முறை ஒரு முன் முயற்சியாக  அமையும். 1 முதல் 9 முடிய உள்ள் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீட்டு முறை (CCE)  அமலில் உள்ளது. இதை சர்வரோக நிவாரணி என்று சொல்ல முடியாவிட்டாலும் 60:40 என்கிற விகிதாச்சாரம் மனப்பாடக் கல்வியை சிறிது குறைக்கும். 50:50 என்பதே நமது இலக்காக அமைவது நலம். மொழிப்பாடங்களுக்கு இரு தாள்கள் என்ற கொடுமையும் ஒழிக்கப்பட வேண்டியதே. 

    இதே  முப்பருவ மற்றும் CCE முறை 10, 11, 12 சிறிய மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டால் நல்லது. 70:30 அல்லது  75:25 என்ற விகிதங்களில் 10, 11, 12 வகுப்புகளுக்கு அமைவது நல்லது. 10 மதிப்பெண்கள் போதாது. இருப்பினும் தொடக்கப்புள்ளியாக இதை வரவேற்பதில் நமது ஆசிரியர்களுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்? சில பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என்பதற்காக பழைய தேர்வு முறையே தேவை என்பது அறிவீனம். 

     புதிய பாடத்திட்டம் அமலாகும் வரை காத்திராமல் பழைய பாடநூலுக்கே 11, 12 வகுப்புகளில் புதிய முறை அமல் செய்திருப்பது  சிறப்பு. ஆனால் 10 வகுப்பிற்கு ஏன் இதை அமல் செய்யவில்லை? இதைக் கேட்பதற்கு ஆசிரிய சமூகங்கள், சங்கங்கள் தயாராக இல்லை என்பதுதான் வேதனையானது. இவர்கள் CCE யினால் கல்வி கெட்டுவிட்டதாக புலம்பித் தீர்ப்பவர்கள். எனவே அகமதிப்பீட்டையும் விரும்பவில்லை என்பதே உண்மை. 

    தேர்வுகள், மதிப்பெண்கள், தேர்ச்சி விழுக்காடு போன்ற மிரட்டல்கள், நெருக்கடிகள் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய இருதரப்பிற்கும் உண்டு. இவற்றைக் கடக்கவாவது புதிய முறையை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இருந்தும், மனப்பாடக் கல்வியை இன்னும் கொண்டாடும் மனநிலையை அடிப்படைவாதமன்றி வேறென்ன சொல்வது? 

    ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல; கல்வி அலுவலர்களுக்கும் உளவியல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். தேர்ச்சி நெருக்கடிகளை உண்டாக்கி மாணவர்களைத் தற்கொலைக்குத் தள்ளுவது  இவர்கள் அனைவருமே. ஏதாவது நிகழ்வு நடக்கும்போது பாதிக்கப்படுவது ஆசிரியர்கள் மட்டுமே. அப்போதாவது புத்தி வரவேண்டாமா? கல்வித்துறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், ஊடகங்கள் ஆகிய அனைத்து தரப்பும் குழந்தைகளுக்கு பெரும் உளவியல் நெருக்கடியை உண்டு பண்ணுகிறது. இதற்குத் தேர்வு முறை அடிப்படையை அசைக்க வேண்டியுள்ளது. எனவே அவை சார்ந்த நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது அவசியமானது.

    கல்வியில் மாற்றம் வர இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. கல்வி சார் சமூகங்களும் இயக்கங்களும் இதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது  அவசியம். இது கூடிய விரைவில் நடக்க வேண்டும். இனியாவது குழந்தைகளின் கல்விப் படுகொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழமைவாத சிந்தனைகளை ஒழித்து மாற்றுக்கல்வி குறித்து இனியாவது யோசிப்போம்.