புதன், மார்ச் 29, 2017

த. பிரிட்டோ எனும் தீவிர வாசகன்



த. பிரிட்டோ எனும் தீவிர வாசகன்

மு.சிவகுருநாதன்


மணலி அப்துல்காதர், அ.மார்க்ஸ், மு.சிவகுருநாதன், பா.ரவிக்குமார், த.பிரிட்டோ


     கீழத்தஞ்சையில் திருத்துறைப்பூண்டி என்னும் சிறு நகரத்தில் இருந்துகொண்டு நிறப்பிரிகை, கல்குதிரை என இலக்கிய, அரசியல் இதழ்களையும் படைப்புகளையும் தேடி வாசிக்கும் தீவிர இலக்கிய வாசகனாகவும் கூர்ந்த திறனாய்வாளாகவும் படைப்பாளியாகவும்  இருந்த த. பிரிட்டோ 25.03.2017 பிற்பகல் கல்லீரல் பாதிப்பு – மஞ்சள் காமாலையால் மரணடைந்தார். 

    தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய, அடித்தட்டு மக்கள் வாழும் பகுதியாக இது இருப்பினும் பி.எஸ்.ஆர், மணலி கந்தசாமி, ஏ.ஜி.கே. போன்ற ஆளுமைகளால் சுயமரியாதை, எழுச்சி பெற்ற பகுதி என்பதாலும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய கருத்தியல் பின்புலமும்  மாற்றுச் சிந்தனைகளும் வாசிப்பு மற்றும் இலக்கிய அமைப்புகளும் நிறைந்த பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. 

   இப்பகுதியில் இடைநிலை ஆசிரியராக பணி செய்த பிரிட்டோவின் வாசிப்பு மற்றும் படைப்புத்திறன் தனித்துவமிக்கது. ஆனால் அது சரிவரப் பயன்படாமல் மடைமாற்றம் செய்யப்பட்டதால் தமிழுக்கு ஒரு அரிய படைப்பாளி கிடைக்கவில்லை என்றே சொல்லவேண்டும். அ.மார்க்ஸ், கல்யாணி, கோ.சுகுமாரன் உள்ளிட்ட ஆளுமைகளின் தோழமை இவருக்கு உண்டு. புரட்சிப் பண்பாட்டு இயக்கம், மக்கள் கல்வி இயக்கம் என களச் செயல்பாட்டாளராகவும் இவரது பணி தொடர்ந்தது. கவிஞர் சுதாவுடன் காதல் திருமணம்; யதார்த்தன் என்றொரு மகன். 

   எழுத்தாளர் அசோகமித்ரன் மீது இவருக்கு தனித்த ஈடுபாடு. சிறு பத்தரிக்கை தொடங்க முடிவு செய்து, அதை அசோகமித்ரனிடம் சொல்லி படைப்பு கேட்டபோது, “பார்ப்பானைத் திட்டத்தானே பத்தரிக்கை ஆரம்பிக்கிறீர்கள்”, என்று கடிந்துகொண்ட நிகழ்வும் ஒருமுறை நடந்தேறியது. அசோகமித்ரன் எண்பதுகளிலும் இவர் ஐம்பதிலும் இறந்தது பெரும்சோகம். 

அ.மார்க்ஸ் வலப்புறம் நிற்பது பிரிட்டோ


    த. பிரிட்டோவுடன்  மணலி அப்துல்காதர், ச.பாண்டியன், ராயநல்லூர் பாண்டியன், தய். கந்தசாமி, பா.ரவிக்குமார், விவேக், செல்லப்பா, இளம்பிறை என்று தீவிர இலக்கிய வாசிப்புக்கென நண்பர்கள் குழாமே உண்டு. நகுலன், பிரமிள், லா.ச.ரா., கோணங்கி மட்டுமல்லாது மார்க்வெஸ், போர்ஹே  என ஆழ்ந்து வாசிக்கும் தன்மை மிக்கதாக இக்கூட்டம் இருந்தது. ‘கவிதைக்காக’, ‘தகழி’ என்ற இரு சிறுபத்தரிக்கைகளை பிரிட்டோ நடத்தினார். பின்னாளில் மணலி அப்துல்காதர் நடத்திய ‘கிழக்கு’ என்னும் இதழில் அவருடைய கைவண்ணம் இருந்தது. யோனிகா என்னும் புனைப்பெயரில் படைப்புகள் எழுதினார். 

   1990 களின் மத்தியில் ‘நிறப்பிரிகை’  ஒழுங்கு செய்த புதுமைப்பித்தன் கருத்தரங்கில்தான் பேரா. அ.மார்க்சை நேரில் சந்தித்தேன். அதே நிகழ்வில் இந்தத் திருத்துறைப்பூண்டி நண்பர்கள் பிரிட்டோ, மணலி அப்துல்காதர், கொளப்பாடு ச.பாண்டியன், பா.ரவிக்குமார் போன்றோரையும் சந்திக்க நேரிட்டது. அதன்பிறகு பல்வேறு மாலை சந்திப்புகள் திருத்துறைப்பூண்டியில் அடிக்கடி நிகழும். 

   அதன்பிறகு ‘சுபமங்களா’வுக்காக குடந்தையில் அ.மார்க்சின் நேர்காணலை எடுத்தோம். பிரிட்டோ, மணலி அப்துல்காதர், மு.சிவகுருநாதன் ஆகிய மூவரும் எடுத்த அந்த நேர்காணலுக்கு எழுத்து வடிவமளித்தது பிரிட்டோவே.

    குமுதம் சிறுகதைப்போட்டியில் பரிசும் பெற்றார். ஆனால் அதிகம் எழுதுவதில்லை. பின்பு திண்டுக்கல்லில்  நடைபெற்ற பாரதிராஜா படைப்புகள் குறித்த ஆய்வரங்கப் போட்டியில் இவரது கட்டுரை இரண்டாவது பரிசு (தங்கச் சங்கிலி)  பெற்றது. அதன்பிறகு இவரது சாய்வு சினிமாவை நோக்கியாதாக மாறியது. 

   அதன்பொருட்டு  இருவரும் திருத்துறைப்பூண்டியிலிருந்து பொன்னேரிக்கு மாறுதல் பெற்றனர். அதன் பிறகு தொடர்பு அறுந்தது. அ.மார்க்ஸ். பாண்டியன், காதர் போன்ற தோழமைகளுடன் எப்போதாவது திடீரென்று தொடர்பில் வருவார்; பிறகு சிலகாலம் காணமற் போய்விடுவார். எல்லாக் குடும்பங்களிலும் ஏற்படுவதைப் போன்றே அவருக்கும் சிக்கல்கள், பிரிவுகள். இறுதியில் எல்லாம் சரியாகிவிட்டதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். 

   சுமார் 20 ஆண்டுகள் சென்னை வாழ்க்கை இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருமுறை நானும் கொளப்பாடு பாண்டியனும் ஆட்டோவில் பிரிட்டோவைத் தேடி அரைநாள் அலைந்து திரிந்து சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம். அவ்வப்போது நண்பர்களிடம் தொடர்பில் இருந்ததே வியப்பான செய்தி.  ஊரில் அப்பா இறந்ததற்கு பிரிட்டோ வரவில்லை என்ற செய்தி வியப்புக்க்குரியதாக இல்லை. ஏனெனில் அவருக்குள் கலகமனம் உண்டு. இந்த கலகத்தன்மையோடு சினிமாவில் இயங்குவது முடியாத செயல் என்று கருதலாம். 


    முரளி நடித்த ‘ஊட்டி’ என்ற படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். அதன் பின்னர் வேறு  சில படங்களிலும் பணி செய்தார். ஆனால் இயக்குநராகும் எண்ணம் கடைசி வரியில் ஈடேறாமல் போய்விட்டது. ஆனால் பிரிட்டோ நினைத்திருந்ததால் நல்ல படைப்பாளி மற்றும் விமர்சகனாக ஆகியிருக்க முடியும். 

ஞாயிறு, மார்ச் 12, 2017

கல்விக்குழப்பங்கள் – இப்போது நூலாக…

                                        கல்விக்குழப்பங்கள் – இப்போது நூலாக… 


        (சமூக வலைத்தளங்களில் வெளியான கல்விக்குழப்பங்கள் தொடர் கட்டுரைகளும் ‘தி இந்து’ கட்டுரை ஒன்றும் பாரதி புத்தகாலயம் (புக் ஃபார் சில்ரன்) மூலம் நூலாக்கம் பெற்றுள்ளது. நேற்று (மார்ச் 11, 2017) இல் வெளியான அந்நூலின் முன்னுரையிலிருந்து...)



                                    கல்வியில் கசடுகள் நீங்க…

                                              மு.சிவகுருநாதன்




           இவை மிகவும் சின்ன சின்ன விஷயங்கள். இவற்றை எங்கு தவறவிடுகிறோம் என்பதுதான் பிரச்சினை. இவையனைத்தும் கல்விக் குழப்பங்கள் மட்டுமல்ல; கற்றல் – கற்பித்தல் குழப்பங்களும் கூட. மிகவும் எளிமையான இவற்றைக் கூட கண்டுகொள்ளாத நமது சமூகமும் கல்விமுறையும் என்ன செய்கிறது? எங்கே போகிறது?

        தலையணை சைஸில் நிறைய புத்தகங்களைப் பொதிமூட்டைபோல் சுமந்துசென்று படிப்பதுதான் கல்வி என்பதான மாயைகளும், பாடநூல்கள், பள்ளி மற்றும் கற்றல் சூழலிலுள்ள கற்பிதங்கள் தகர்க்கப்படவேண்டும். கல்வி விழிப்பை உண்டாக்குவது, சிந்திக்கத் தூண்டுவது. பெரியார் சொன்னது போல் நமது சிந்தனையில் தேங்கிப்போன கசடுகளை வெளியேற்றுவதாக அல்லவா கல்வி இருக்கவேண்டும்!













      

           மாவட்ட அளவிலான ஆசிரியர்கள் பணியிடைப் பயிற்சியில் பாடநூல்களில் உள்ள சில பிழைகளைச் சுட்டிக்காட்டிய தருணத்தில் சிலரது ஏற்பும் பலரது எதிர்ப்பும் பதிவானது. பாடநூற்கள் ஆகச்சிறந்த அறிவாளிகள், கல்வியாளர்கள், பேராசிரியர்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. எனவே பிழைகளுக்கு இடமில்லை, இவை பிழைகளே அல்ல என்பதே அந்த எதிர்ப்பின் சாரமாக இருந்தது.

       பாடநூற்கள் தவிர்த்தப் பிற நூற்களை வாசிப்பதில் ஆசிரியர்களுக்கு இருக்கும் ஆர்வம், இவற்றை வாசிக்க வீடு மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இருக்கும் தடைகள் ஒருபுறமும் அச்சிட்ட அனைத்தையும் வேதமாகக் கருதும் சமூக மனநிலை இருப்பது மறுபுறமும், இவை இரண்டிற்குமான இடைவெளி இங்கு அவதானிக்கத்தக்கது.

     பாடநூல்களைத் தாண்டி வாசிக்கும்போதுதான் இங்குள்ள பிழைகள் கண்ணுக்குப் புலப்படுகின்றன. எனது வாசிப்பு அனுபவத்தில் கண்ட சிலவற்றை மட்டும் இங்கு பதிவு செய்துள்ளேன். இங்கு அனைத்து வகுப்புகள் மற்றும் பாடங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.


      நாமும் பாடநூல் பிழைகளைச் சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கிறோம். ஆண்டுதோறும் பாடநூற்களின் ‘திருத்திய பதிப்புகள்’ வெளியிடப்படுகின்றன. “மூக்கு இருக்கும் வரை சளி இருக்கும்”, என்பார்களே, அதைப்போல பிழைகள் களையப்பட்ட பாடில்லை. ‘தி இந்து’ (பிப். 05, 2015) கட்டுரை வெளியான பிறகு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இது முழுமையடையவில்லை. திருத்தம் செய்தல் என்கிற போர்வையில் புதிய பிழைகளைக் கொண்டு சேர்ப்பது அவமானகரமானது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்டான் வனவிலங்கு சரணாலயம் திருவாரூர் மாவட்டத்தில் இருப்பதாக புதிதாக இணைத்திருக்கிறார்கள்.

      இதன் விளைவாக 'பஹிஷ்கிரித் ஹிதகரிணி சபா' (Bahishkrit Hitaharini Sabha), மகத் பேரணி ஆகியன திருத்தம் செய்யப்பட்ட நல்ல காரியம் நடத்துள்ளது. இவ்வளவு காலமும் ‘பெயின்டராக’ இருந்த ஹிட்லர் இவ்வாண்டேனும் ‘ஓவியராக’ மாறியதற்காக நாம் மகிழ்ச்சியடையலாம்.

      இவற்றில் நான் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. ஏற்கனவே நிருபணமான உண்மைகள், கருத்தியல்கள் ஆகியவற்றை கல்விச்சூழலில் அணுகவும், நான் வாசித்த நூல்களோடு பாட நூற்களை ஒப்பிடவும் முயன்றுள்ளேன். அவ்வளவே.

     பாடநூல்களையும் பள்ளி மற்றும் கல்விச்சூழலின் நடைமுறைகள், கற்பிதங்கள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். இவற்றைக் கருத்தியல் ரீதியாக இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

      உதாரணமாக தேசப்பற்றை மட்டும் வலிந்து வலியுறுத்தும் நிலையில் ‘மதச்சார்பின்மை’ என்பது அரசியல் சட்டத்தில் இருந்தால் மட்டும் போதுமா? அவற்றைப் பொதுத் தளத்தில் குறிப்பாக நடைமுறைப்படுத்த அரசுகள் ஏதேனும் செய்ய வேண்டுமல்லவா? அதற்கான கடைமையும் பொறுப்பும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டல்லவா!



கல்விக் குழப்பங்கள் (கட்டுரைத் தொகுப்பு)

மு.சிவகுருநாதன்

வெளியீடு:

புக் ஃபார் சில்ரன்

பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்..



முதல்பதிப்பு: பிப்ரவரி 2017

பக்கம்: 175

விலை: ரூ. 140

விற்பனை உரிமை:

பாரதி புத்தகாலயம்

தொடர்பு முகவரி:



பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600018.




தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com

இணையம்: www.thamizhbooks.com

வியாழன், மார்ச் 09, 2017

வரலாற்றெழுதியலில் தொடரும் காழ்ப்புணர்வு

வரலாற்றெழுதியலில் தொடரும் காழ்ப்புணர்வு

மு.சிவகுருநாதன்


         இருண்ட காலம் என்று திரிக்கப்பட்டு பின்னர் சங்கம் மருவிய காலம் என்று சொல்லப்பட்ட களப்பிரர் காலம் கி.பி. 250 முதல் கி.பி. 575 வரையுள்ள சுமார் 300 ஆண்டு காலம் என்பது ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமியின் முடிவு.

       களப்பிரர்கள் மீதான வரலாற்று அறிஞர்களின் காழ்ப்பு கொஞ்ச நஞ்சமல்ல. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை, சதாசிவ பண்டாரத்தார், மு.அருணாசலம் பிள்ளை, ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா.இராசமாணிக்கனார், எம்.எஸ் .ராமசாமி அய்யங்கார் உள்ளிட்ட பலரும் களப்பிரர்கள் பற்றி வெறுப்பை உமிழ்ந்துள்ளதை அவருடைய சொற்களைக் கொண்டு உணரலாம்.

       களப்பிரர்களையும் அவ்வம்சத்து அரசர்களையும் இருண்ட குலம், இருண்ட காலம், இருள் படர்ந்த காலம், காட்டுமிராண்டிகள், கொள்ளைக்காரர்கள், கொடுங்கோலாட்சி செய்தவர்கள், நாகரீகத்தின் எதிரிகள், கலியரசர்கள், கொடிய அரசர்கள், நாடோடிகள், தமிழ் வாழ்வை – மொழியைச் சீரழித்தவர்கள், மக்களைக் கொன்று செல்வங்களைச் சூறையாடியவர்கள், தமிழ் மொழி – பண்பாட்டை அழித்தவர்கள், அரச பாரம்பரியமற்றவர்கள் என்றெல்லாம் இவர்களால் வசைமாரி பொழியப்பட்டது தமிழ் வரலாற்றெழுதியலின் அவலம். மயிலை சீனி வேங்கடசாமி ஒருவரே களப்பிரர்களின் இருண்ட காலத்தை விடியற்காலமாக்கியவர். (களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி வேங்கடசாமி)

      இந்நிலையில் நேற்றைய (08.03.2017) ‘தி இந்து’ நாளிதழில் “களப்பிரர் ஆட்சி குறுகிய காலமே நடந்தது” என்ற செய்தி வெளியாகியுள்ளது. தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி (தினமலர்) தெரிவித்ததாக இச்செய்தி சொல்கிறது. இதற்கு ‘தி இந்து’ நாளிதழ் அளிக்கும் முக்கியத்துவம் நமக்கு வியப்பளிக்கிறது.

      1986 இல் கரூரில் கிடைத்த நான்கு பிராமி எழுத்துகள் கொண்ட நாணயத்தின் வழி ஒட்டுமொத்த களப்பிரர் வரலாற்றை விண்டுரைக்கும் ஆய்வாளர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் பாங்கு உலக மகா அதிசயம்! நாணயவியல் துறையில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. ஆனால் இப்படி ஒரு நாணயத்தைக் கொண்டு களப்பிரர் வரலாற்றை வடிவமைக்கும் போதுதான் நமக்கு அய்யம் எழுகிறது. இந்த நடுநிலையற்ற வெறுப்பாய்வு நமக்கு என்ன சொல்கிறது?

      களப்பிரர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் தமிழகப் பகுதிகளை ஆளவில்லை என்றால் அப்பகுதிகள் யாரால் ஆளப்பட்டது என்பதையும் சொல்ல வேண்டுமல்லவா? களப்பிரர்கள் வழிவந்த முத்தரையர்களும் பல்லாண்டுகள் செந்தலை (தஞ்சாவூர்) யைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட வரலாற்று உண்மைகளை எங்கு சென்று புதைப்பது? செந்தலைத் தூண் கல்வெட்டுகள் நமக்கு இதைத்தானே உணர்த்துகின்றன. களப்பிரர்கள் மீதான காழ்ப்புணர்வு என்று முடிவுக்கு வரும்? அறிவியற்பூர்வமான, நடுநிலையான, புறவயமான வரலாற்றாய்வுகளை நோக்கி தமிழுலகம் என்று பயணிக்குமோ என்கிற ஆதங்கமே மிஞ்சுகிறது.

      சிந்துவெளி காளை உருவத்தை குதிரையாக கணினி வரைகலை செய்து புனைவு வரலாற்றெழுதிகளை செய்ததுபோல் களப்பிரர் காலம் என்ற ஒன்று இல்லைவே இல்லை என்று புதிய புனைவுகளை உற்பத்தி செய்யவேண்டியதுதான் பாக்கி.