செவ்வாய், டிசம்பர் 29, 2015

27. சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரம்



27.  சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரம்

            (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                    மு.சிவகுருநாதன்





     (பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கமான  Books for Children’ வெளியிட்டுள்ள. ச.மாடசாமியின்  ‘என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா’ என்னும் கல்வியியல் நூல் அறிமுகம்)  


      தி இந்து, செம்மலர், சமத்துவக் கல்வி போன்ற இதழ்களில் எழுதிய கல்வியாளர் ச.மாடசாமியின் சமீபத்திய 10 கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னட்டை சொல்லும் குறிப்பைப் போல தனது நீண்ட கல்வியியல் அனுபவங்களை மிகவும் எளிமையாகச் சொல்லிப்போவது சிறப்பு.

      துப்பாக்கிக் குண்டுகளிலிருந்து பிறக்கும் அதிகாரத்தைப் போல சிவப்பு மையிலிருந்து பிறக்கும் அதிகாரத்தை தலைப்புக் கட்டுரையான ‘என் சிவப்பு பால்பாயிண்ட பேனா’ மிக அழகாகக் கட்டுடைக்கிறது. தேர்வுகள் உருவாக்கும் இந்த அதிகாரம் நிரந்தரமானதல்ல; உதிரக்கூடியது. ஆசிரியர்கள் மட்டுமல்ல; எல்லா சர்வாதிகாரிகளும் பயந்தாங்கொள்ளிகளே! அதிகாரம் பயத்தையும் உபரியாக உற்பத்தி செய்கிறது. அதனால்தான் “அதிகாரமற்று இருப்பதைப் போன்ற மகிழ்ச்சி வேறு எதில் இருக்கிறது”, என்று சொல்கிறார். கல்வி வழங்கிய இந்த அதிகாரத்திலிருந்து விடுபட்ட நிகழ்வை, எண்பதின் தொடக்கத்தில் வெறொரு சிவப்பு மை என் பேனாவுக்குள் நிரம்பியது. என் சிந்தனைப் போக்கையே மாற்றிய மை அது”, என கவித்துவமாகக் குறிப்பிடுகிறார். 

   குழந்தைகளுக்குப் பள்ளிகளில் நடக்கு அவமதிப்புகள் ஒவ்வொன்றும் மரணமே என்கிறது அடுத்த கட்டுரை. பெற்றோர் சூட்டிய பெயர்களுக்காக, சொல்லிக் கொடுத்தபடி நடன அசைவை வெளிப்படுத்தாதற்காக, சொன்னபடி ஓவியத்தை வரையாததற்காக, காது கேளாமை, டிஸ்லெக்சியா போன்ற பிரச்சினைகளுக்காக என குழந்தைகள் மரணம் ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. இந்தக் குழந்தைகளின் வலி – வேதனை - உயிருடன் மரணம் நாம் மாறவேண்டிய கட்டாயத்தை உணர்த்துகின்றன. 

    வகுப்பறையில் ஆசிரியரின் அதிகாரம் மட்டுமல்ல; ஏகபோகமும் துடைத்தெறியப் படவேண்டிய ஒன்றே. வகுப்பறை ஆக்ரமிப்புகளிலிருந்து ஆசிரியர்கள் வெளியேற ஆசிரியர்கள் அல்லாத பிறரை கற்றல்- கற்பித்தலுக்குப் பயன்படுத்துவது என்ற உத்தியை விவாத வடிவில் மிக இலகுவாக அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்துவிடுகிறார். ஓவியர்கள், கதை சொல்லிகள் என பிறர் பங்கேற்பை உறுதி செய்வதன் மூலம் ஆக்ரமிப்பை அகற்றி வகுப்பறை உயிர்ப்புள்ளதாக மாற்றலாம். நாம் வழக்கமாக செய்கின்ற பேச்சாளிகளையும் பிரசங்கிகளையும் இதில் தவிர்த்து விடுவது நலம். இவர்களது ஆக்ரமிப்பு மிகக் கொடுமையானது. 

    வடிவமைத்தல், மதிப்பிடுதல், வடிகட்டுதல் போன்ற நுட்பமான அதிகாரங்கள் நிறைந்த பள்ளி அதிகாரங்களை எளிதில் உடைக்க முடியுமா? அதிலிருந்து தப்பித்து வெளியேறுவதுதான மாணவர்களுக்குள்ள ஒரே வழி. எனவேதான் தப்பித்த குரங்குகள் சிறப்பானவை. தலையிட்டுத் தலையிட்டு வடிவமைக்காத திறமைகள், கூண்டுக்குள் சிக்காத குரங்குகள் நிறைந்த சுதந்திர வெளியான அரசுப்பள்ளிகள் பாழ்வெளியாக மாறும் கவலையை நம்முடன்  பகிர்ந்து கொள்கிறார். தனியார் பள்ளி வணிகத்தை முற்றாக ஒழித்து, அருகாமைப் பள்ளிக்கான முதல்படியை அரசும் ஆசிரியர்களுமே எடுக்கவேண்டும். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீட்டுக் குழந்தைகள் அரசுப்பள்ளிகளிலேயே படிக்கவேண்டும் உள்ளிட்ட மாற்றங்கள் அவசியத் தேவையாகும். 

    சில ஆசிரியர்களின் வகுப்பறைச் சோதனை முயற்சிகள் கவனிக்காமல் படாமற்போகும் ஆதங்கம் குறித்துப் பேசும்போது, அவற்றிற்கான எளிய தீர்வுகளை முன்வைக்கிறார். பகிர்வது, வாசிப்பது ஆகிய இரண்டுமே அது. ‘டோட்டோசான்’ என்னும் நூல் எழுதிய டெட்சுகோ குரோயாநாகி, ‘பகல் கனவை’ எழுதிய கிஜூபாய் ஆகிய இரு உதாரணங்களைத்  தருகிறார்.  

     டெட்சுகோ குரோயாநாகியின் குழந்தைப் பருவ அனுபவங்களே இந்நூலில் விரிகின்றன. டோட்டோசான் போன்ற விரட்டப்பட்ட குரங்குகளுக்காக ஜப்பானியக் கல்வியாளர் கோபயாட்சி நடத்தும் ரயில்பெட்டிப் பள்ளி விளையாட்டு முறையில் பாடங்களைக் கற்க செய்கிறது. இரண்டாம் உலகப்போர் குண்டு வீச்சில் சாம்பலானது இப்பள்ளி. விளம்பர வெளிச்சம் படாத இப்பள்ளி பிறகு மீண்டெழவேயில்லை என்கிற வருத்தமும் பதிவு செய்யப்படுகிறது. வழக்குரைஞரான கிஜூபாய் அரசுப்பள்ளி ஒன்றில் தமது பரிசோதனைகளை மேற்கொண்டவர். பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே தன்னுடைய ‘பகல் கனவை’ நனவாக்கியவர்.  

    “யாருக்குப் பேய் பிடிச்சுருக்கு?”, விளையாட்டு வகுப்பறையைக் கலகலப்பாக்குகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் இருவேறு உலகங்கள், பண்பாடுகள் என்பதை உணர்த்துகின்ற நிகழ்வு இது. ஆசிரியர் – மாணவர் உறவு இரு அதிகாரங்களாகச் செயல்படுவது எப்போதும் சிக்கல்தான். எனவே இரு பண்பாடாகத் தொடர்வது நலமென்கிறார். 

   மருத்துவ விடுப்பெடுக்க, வருங்கால வைப்பு நிதியில் பொய் சொல்லக் கூசாத ஆசிரியச் சமூகம், மாணவர்களின் பொய்களை பூதாகரமாக்குவது தேவையா என்று வினா எழுப்புகிறார். வகுப்பறையில் பொய்களுக்கும் இடம் வேண்டும். வகுப்பறைப்  பொய்யை வைத்து மாணவரது நேர்மையை அளவிடமுடியாது. பல பொய்கள் சிரித்துக் கழிக்கவேண்டியவை, என்றும் சொல்கிறார். அதிர்ச்சியாக இருக்கிறதா? பிறகெப்படி வகுப்பும் மனசும் விசாலமாகும்?

     1990 களில் புதிய  அலையாய் வந்த அறிவொளி இயக்கம் ‘பட்டா, படி’ என கற்றல் – கற்பித்தலில் புதிய வெளிச்சமும், அதுவரையில் கல்வியில் ஆதிக்கம் செய்த மொழியும் மத்தியதர வர்க்க சிந்தனையும் உடைந்தது. முறைசார் கல்வியில் ஏற்பட்ட இம்மாற்றம் பள்ளிக்கல்வியில் முழுதாக எதிரொலிக்க இயலாமற்போனதேன்? இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட உத்திகளும் திட்டங்களும் (SSA, RMSA) அதிகாரங்களையே கட்டமைத்தன. கல்வி உரிமைச் சட்டத்திற்கு இவ்வளவு ஆண்டுகள் காத்திருந்தோம். இனியும் எவ்வளவு ஆண்டுகள் கடக்கவேண்டும் நாம்?

   பள்ளிகள் வெளிப்புறத்தில் மாற்றங்கள் பல கண்டாலும் அதன் அடிப்படை மாற்றமடையாமல் இருக்கிறது. அதை சரிசெய்ய சீனாவில் மாவோ செய்த கலாச்சார புரட்சி போன்ற ஒன்றால்தான் முடியும். கல்வி ஒழுங்குப்படுத்துதல் என்கிற பேயரில் அதிகார மையமாக, பிறிதொரு மதமாக பள்ளி உருவாகியுள்ளது. சமத்துவம் என்பது பள்ளி, கல்விச்சூழலில் இல்லை. மாறாக பாகுபாட்டை விதைக்குமிடமாக பள்ளி அமைவது விநோதம். 

   கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழும் வரலாறும் இளக்காரமான, தலித் மாணவர்களுக்கு கிடைத்த படிப்பு என்கிறார். இது முற்றிலும் உண்மைதான். மேனிலை வகுப்புகளில் செய்யப்படும்  450 மேல் மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்குத்தான் கணிதம், அறிவியல் பிரிவு என்ற வடிக்கட்டல்தானே இதற்குக் காரணம். அரசுப்பள்ளிகளிலும் இதே நிலைதான். 450 வேண்டுமானல் 400 ஆகலாம். இங்கு இடஒதுக்கீட்டை அமல் செய்ய யாரும் விரும்பபில்லையே. அது ஏன்? 

    ஆசிரியராவது மாவோவின் கனவுகளுல் ஒன்று. “மாட்டின் மேல் வளர்ந்துள்ள முரட்டு மயிர் போல பாடத்திட்டம் கடுமையாக இருப்பதை”,  உணர்ந்தவர் அவர் எனவே கலாச்சாரப் புரட்சியின் போது பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த அதிரடி மாற்றங்களினால் எதிவிளைவுகள் உண்டானாலும் சீனாவில் எழுத்தறிவின்மை கணிசமாகக் குறைந்ததைச் சுட்டுகிறார். 

   பட்டம் பெற்றாலோ, பயிற்சிகள் பெற்றாலோ நமக்கு தேவையற்ற கொம்புகள் முளைத்துவிடுகின்றன. எனவே சீனாவில் வீடு அல்லது பணியிடங்களில் தேடி வந்து மருத்துவம் செய்யும் (Bare Foot Doctors) மருத்துவர்களைப் போல ‘மிண்பன்’ என்னும் பயிற்சி பெறாத ஆசிரியர்களை நியமித்தனர். அதிகாரத்தை உடைக்க இதுவும் ஓர் வழிமுறைதான். முரட்டுத்தனமாக பழைய பாடங்களை நீக்கிவிட்டு கனமான கம்யூனிசப் பாடங்களை சுமத்தியதும் தவறு என்கிறார். புரட்சிக்குப் பின்னும் இவற்றை மாற்ற முடியவில்லை; பள்ளிகளில் சுபாவத்தை மாற்றுவது கடினம் என்று ரெய்மரை மேற்கோள் காட்டுகிறார். 

    ஆசிரியர்களுக்கு இன்றுள்ள கல்விச்சூழல் கோபத்தை விதைக்கிறது. இது மாணவர்களை மிகவும் துன்புறுத்துவதாக அமைகிறது. இவற்றைக் கடக்க ஜென் மனநிலையைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை. மாணவர்கள் பெற்றுகொள்ள விரும்பாத திட்டுக்கள், வசைகள் மீண்டும் திட்டியவரை வந்தடைதல், உண்மைகளை நம்பிக்கையாக மாற்றுதல், நிரம்பிக் கிடக்கும் கோப்பையைக் காலி செய்தல் என ஜென் கதைகள் நம்மை வேறு தளத்தில் பயணிக்க வைக்கின்றன.  ஆசிரியர்கள் மூளை நிரம்பி வழிந்துகிடக்காமல், கற்றுக்கொள்வதற்கு திறந்த மனத்துடன் கோப்பைகளைக் காலியாக வத்திருக்க வேண்டுமே. கோப்பைகளைக் காலி செய்ய நீண்டகாலம் ஆகுமென்று ஐயுறவேண்டுயுள்ளது. 

   பேரா.மாடசாமி அவர்களின் சுய எள்ளல், தெளிவான நடை, தொனி  ரசிக்கும்படி உள்ளது. இந்நூல் கல்வியில் ஓர் கலாச்சாரப் புரட்சியை ஏற்படுத்த உதவிபுரியட்டும்.
   


என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா

ச.மாடசாமி

வெளியீடு:  

Books for Children (பாரதி புத்தகாலயத்தின் ஓர் அங்கம்)
முதல் பதிப்பு: செப்டம்பர் 2015
விலை:      ரூ. 50
பக்கம்: 80


பாரதி புத்தகாலயம்,
7 இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

தொலைபேசி: 044 24332424, 24332924, 24356935

மின்னஞ்சல்: thamizhbooks@gmail.com
இணையம்: thamizhbooks.com

ஞாயிறு, டிசம்பர் 27, 2015

26. கல்வி அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்கள்



26.  கல்வி அனுபவங்கள் கற்றுத் தந்த பாடங்கள்
             (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                    மு.சிவகுருநாதன்

(புலம் வெளியீடாக (ஆகஸ்ட் 2015) வந்துள்ள ‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ என்ற  ம.நவீன் எழுதிய  நூல் குறித்த பதிவு.)

நூல் முன்னட்டை


            வழக்குரைஞர் பசுபதி தொடங்கிய ‘மை ஸ்கீல்ஸ்’ அறவாரியத்திற்குத்  தொடராக எழுதப்பட்ட பத்திக் கட்டுரைகளில் தேர்ந்தெடுத்த 23 கட்டுரைகளை புலம் நூலாக்கியுள்ளது. நூலாசிரியர் ம.நவீன், ‘வல்லினம்’ (இணைய இதழ்), ‘பறை’ (ஆய்விதழ்), யாழ் (மாணவர் இதழ்) ஆகியவற்றின் ஆசிரியர். கவிதை, சிறுகதை, திறனாய்வு என பல்வேறு களங்களில் செயல்படுபவர். மலேசியாவில் பள்ளி ஆசிரியராக இருக்கும் அவர் தனது கல்விப்புல  அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொண்டுள்ளார். 

    முன்னுரையில் பிரளயன், “கற்பித்தலென்பது கலகம் செய்வதே”யென்ற நீல் போஸ்ட்மேன், சார்லஸ் வெய்ன் கார்ட்னெர் நூலை மேற்கோளைக் காட்டி கலகம் என்பதற்கான விளக்கமளிக்கிறார். “நிலவுகிற அனைத்தையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிற நமது ‘பொதுப்புத்தியோடு’ மல்லுக்கு நிற்பதும், அதில் புதிய திறப்புகளை ஏற்படுத்த முயல்வதும்கூட ஒரு கலகச் செயல்பாடுதான்”, என்று சொல்லி நவீனின் வகுப்பறை அனுபவங்களை இதனோடு பொருத்திப் பார்க்க விரும்புகிறார். 

     இதுவரையில் பின்தங்கிய மாணவனைத்தான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்திவருகிறது நமது கல்வியமைப்பு. இவர் தன்னை பின்தங்கிய ஆசிரியனாக அறிமுகம் செய்துகொள்வதோடு, “ஒவ்வொரு ஆசிரியருக்கும் அவர் செய்யும் பணி மீதும் அதன் அமைப்பு மீதும் விமர்சனம் இருக்கவேண்டும்”, என்று சொல்கிறார். இதுதான் இந்திய மற்றும் தமிழகச் சூழலில் சிக்கலான அம்சம். இங்கு அமைப்பைப் புரிந்துகொண்டு அதற்கு எதிராக செயலாற்றுபவர்கள் வெகு சொற்பமே. 

   நாள்குறிப்பு போல் விரியும் இந்த சிறிய பத்திக் கட்டுரைகள் கல்விமுறையையும் ஆசிரியர்களையும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்குகின்றன. மலேசியக் கல்விமுறைக்கும் தமிழகக் கல்வி முறைக்கும் பெருத்த வித்தியாசம் இல்லை. நாம் ‘கடைசி பெஞ்ச்’ என்பதை அவர்கள் ‘கடைசி நாற்காலி’ என்கிறார்கள் அவ்வளவே. 

   மாணவர்களில் பின்தங்கியோர் ஒருவரும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யும் நவீன், பின்தங்கிய ஆசிரியர்கள் உண்டு என சொல்லத் தயங்கவில்லை. அவர் தன்னையும் ஒரு பின்தங்கிய ஆசிரியன் என்று சொல்லி, லியோனார்டோ டாவின்சியை தெரியாத ஆசிரியர்கள் பற்றியும் சொல்கிறார். 

    வாழ்வு நான்கு சுவரைத் தாண்டியது என்பதை மாணவர்களுக்கு மட்டுமல்ல; ஆசிரியர்களுக்கு யார்தான் சொல்வது? புரிய வைப்பது? அலுமினியத் தகட்டிற்கு குளிர்பான டின்னைப் பயன்ப்படுத்தலாம் என்பதையும் செம்மறிஆடு சொன்னதைக் கேட்கும், வெள்ளாடு சொன்னதைக் கேட்காது என்பதையும்  சொல்லிக்கொடுக்க படைப்புத் திறனுள்ள மாணவர்களே வேண்டும். 

   ஓவியப்பாடம் இல்லாததால் வகுப்பைவிட்டு வெளியேறும் சிறுமி, கால்பந்தை உதைத்து விளையாட கனவு காணும் சிறுவன், மாணவிகளுடன் இணைந்து கூடைப்பந்து விளையாட விரும்பும் சிறுமி சர்வேஷ் என அங்கீகாரத்திற்கு ஏங்கும் குழந்தைகள் ஏராளம். அவர்களது இருப்பை அங்கீகரித்தால் அவர்கள் கல்வி கற்பதும் மறுத்தால் கற்க மறுப்பதும் நடந்தேறுகின்றன. 

     எய்ட்ஸ் நோயை 1000 வெள்ளியில் குணப்படுத்தும், 690 வெள்ளிக்கு ஞானம் வழங்கும் கார்ப்பரேட் சாமியார்கள் நிறைந்த உலகில், பாடத்திட்டங்களும் அறிவை மழுங்கடிக்கும், மாணவர்களை மொண்ணையாக்கும் தன்மை இருப்பது, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளை உருவாக்கும் முயற்சி. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதோ ஓர் கட்சிக்கு ஓட்டுப் போட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லக் குடிமகனாகத் தக்கவைப்பதுதான் அதிகார வர்க்கச் செயல்பாடு. இதைச் செய்வது கல்விக்கூடங்கள், ஆசிரியர்கள், பாடத்திட்டங்கள், பாடநூற்கள் ஆகியவற்றின் பணி.

   பல அய்ரோப்பிய நாடுகளில் உள்ளது போன்று, “மீன் இயல்பாய் நீந்துவதைப் போன்று, பறவை இயல்பாய் பறப்பதைப் போன்று, நீர்நாய் பந்தை லாவகமாய்ச் சுழற்றுவதைப் போன்று”, கல்வி நடைமுறைகள்  எல்லாம் இயல்பாய் அமைந்தால் மிகவும் நன்றாக இருக்குமல்லவா!

    மாணவர்களுக்குத் தொடர்பில்லாமல் தயாரிக்கப்படும் புத்தகங்களை வாசிக்கக் கட்டாயப்படுத்தும் பெரும்பாலான ஆசிரியர்கள் எதையும் வாசிப்பதில்லை என்பதுதானே நகைமுரண். ஆசிரியர்களிடம் “நீங்கள் கடைசியாக படித்த புத்தகம் எது?”, என்ற கேள்வியின் பதிலைக் கொண்டு உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை ஊகிக்கலாம் என்கிறார். திருட்டுத்தனம் செய்து வெற்றிபெற கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களிடம் இதற்கும் ‘ரெடிமேட்’ பதில்கள் இருக்கவே செய்யும். நூலின் அட்டையை மாற்றி ‘ஆய்வு’ செய்து பேராசிரியர்களாகும் நம்மவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?
 
  வகுப்பறையின் கடைசி நாற்காலி
  ம.நவீன்

வெளியீடு: புலம்
விலை: ரூ. 70

பக்.: 96
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2015

புலம்,
332/216 
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை - 600 005.
பேசி
: 98406 03499
மின்னஞ்சல்: pulam2008@gmail.com

சனி, டிசம்பர் 26, 2015

25 ஆ. தலித் விடுதலைப் போராளி அய்யன் காளி (இரண்டாம் பகுதி)



25 ஆ. தலித்  விடுதலைப் போராளி அய்யன் காளி
                  (இரண்டாம் பகுதி)

            (இந்நூல் என் வாசிப்பில்புதிய தொடர்)

                                 மு.சிவகுருநாதன்

நூல் அட்டைப்படம்


(நிர்மால்யா எழுதி ‘தமிழினி’  2001 இல் வெளியிட்ட ‘கேரளத்தின் முதல் தலித் போராளி – அய்யன் காளி’ என்னும் வரலாற்று நூல் குறித்த பதிவின் இரண்டாம் பகுதி.)


     ஈழவர், நாடார், ஆசாரி, புலையர், பறையர், குறவர் முதலிய  சாதி மக்கள் ஒடுக்கப்பட்ட சமூகச் சூழல்கள் பின்னணியில்தான் நெய்யாற்றின்கரை தாலுக்கா, கோட்டுக்கல் கிராமத்திற்குட்பட்ட வெங்கனூரில் ஓர் புலையர் குடும்பத்தில் அய்யன் காளி 1863 ஆகஸ்ட் 28 –ல் பிறந்தார். ஆவணி அவிட்டத்தில் பிறந்த குழந்தைக்கு காளி என்று பெயரிட்டனர். நாளடைவில் தந்தையின் பெயரோடு இணைந்து அய்யன் காளி ஆயிற்று. வெங்கனூரில் புத்தளத்துக் குடும்பம் என்ற நாயர் குடும்பத்தில் அடிமையாகவும் பண்ணையாளாகவும் அய்யன் காளி இருந்தார்.  ஜமீன்தார் பரமேஸ்வரன் பிள்ளை எட்டேகால் ஏக்கர் நிலத்தை அய்யன் காளி பெயரில் எழுதி வைக்கிறார். இதற்கு வந்த எதிர்ப்பை செல்வாக்குமிக்க   ஜமீன்தார் பரமேஸ்வரன் பிள்ளை பொருட்படுத்தவில்லை. 

    ஸ்வர்ணன் வீட்டு வாசலை மிதித்தது, ஸ்வர்ணச் சிறுவர்களுடன் விளையாடியது, கிணற்றைத் தொட்டது போன்றவற்றால் மிக இழிவாக நடத்தப்பட்ட விதம் அய்யன் காளியின் மனத்தை மாற்றின. புலையர் சமூகத்துடன் நெருங்கிப் பழகி, தனது அனுபவங்களைப் பகிர்தல், அவர்களுக்கு கல்வி, வழிபாட்டு உரிமை பற்றி ஆயத்தப்படுத்தத் தொடங்கினார். புலையர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பாடல்கள்  பாடுவது, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, நாடகங்கள் போடுவது என்றி இயங்கத் தொடங்கினர். திருவிதாங்கூர் புலையர் மக்கள் பேசிய தமிழும் மலையாளமும் கலந்த பேச்சுமொழியால் உரையாடல்களும் பாடல்களையும் ஓர் வடிவம் சமைக்கப்பட்டது. பின்னாளில் தனது நாடகக் குழுவை உடன் அழைத்துச் சென்று பிரச்சாரம் செய்தார். இவ்வளவிற்கும் அய்யன் காளி கல்வியறிவு பெறாதவர்.

அய்யன் காளி


  கி.பி. 1888 இல் ஶ்ரீ நாராயணகுரு அருவிப்புறம் என்னுமிடத்தில் பிராமணர்களுக்கு எதிராக சிவனை பிரதிஷ்டை செய்தார். ஈழவர்கள் சிவனை பிரதிஷ்டை செய்யலாமா என்ற ஓர் நம்பூதிரியின் வினாவிறகு ஈழவச் சிவனைத்தான் பிரதிஷ்டை செய்தேன் என பதில் சொன்னார்   நாராயணகுரு. இது நடந்தபோது அய்யன் காளிக்கு 25 வயது.   நாராயணகுருவை நேரில் சந்திக்க விரும்பிய அய்யன் காளி தனது நண்பர்களுடன் அருவிப்புறம் சென்று ஈழவப் பழைமைவாதிகளின் எதிர்ப்பை மீறி  நாராயணகுருவை அருகில் சென்று உரையாடினார். அய்யன் காளி சொன்னவற்றைக் கேட்ட நாராயணகுரு அய்யன் காளிக்கு ஆசியும் அறிவுரையும் வழங்கினார். இது அய்யன் காளிக்கு புதுத்தெம்பையும் புத்துணர்வையும் கொடுத்தது.

   1888 மார்ச்சில் செல்லம்மாவை அய்யன் காளி மணமுடித்தார். ஆறு ஆண்கள், ஓர் பெண் என மொத்தம் ஏழு பிள்ளைகள். பொன்னு, செல்லப்பன், கொச்சுகுஞ்ஞூ, சிவதாணு ஆகிய நான்கு ஆண்பிள்ளைகளும் தங்கம்மா என்ற ஓர் பெண்ணும் நீண்டகாலம் வாழ்ந்தனர். சிவதாணுவின் மகன் சி.அபிமன்யு அய்யன் காளி வரலாற்றை மலையாளத்தில் எழுதியவர்.  தங்கம்மாவிற்கு மணமுடிக்கப்பட்ட டி.டி.கேசவன் சாஸ்திரி புலையர் இனத்தலைவராகவும் அய்யன் காளியின் வாரிசாகவும் அறியப்பட்டார். 

   அய்யன் காளி முதலில் தீண்டப்படாதவர்கள் பொதுவழிகளில் நடந்து போகும் உரிமைகளை மீட்டெடுக்க போராட முனைந்தார். 1893 இல் ஓர் வில்வண்டியை வாங்கி இரண்டு வெள்ளைக் காளைகள் பூட்டி பெருமணியொலிக்க ஆதிக்க சாதியினர் பயம் கொள்ளுமளவிற்கு வலம் வந்தார். தேநீர்க் கடைகளில் தலித்களுக்கு தேநீர் வழங்கும் சிரட்டைகளை உடைத்தெறிய தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 

   அய்யன் காளியின் அடுத்த இலக்கு புலையர் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் அனுமதி பெற்றுத்தருவதாக இருந்தது. 1905 இல் வெங்கனூரில் தரையில் எழுதும் கேரளாவின் முதல் தலித் பள்ளியைத் திறந்தார். ஓலைகள் மற்றும் மூங்கிலால் கட்டப்பட்ட இப்பள்ளி ஆதிக்க சாதி வெறியர்களால் தீக்கிரையானது. 

  1910 இல் தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பள்ளிகளில் சேர்க்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அனுமதி 30 பள்ளிகளில் மட்டுமே. இதையும்  செயல்படுத்தாமல் அதிகாரிகள் ஆதிக்க சக்திகளுக்கு உதவியாக இருந்தனர். தலித் மாணவர்களின் கல்வி அனுமதி குறித்த புதுப்பிக்கப்பட்ட உத்தரவு 1914 இல் பிறப்பிக்கப்பட்டது. அய்ந்தாம் வகுப்பிற்கு பின் புல்லாட்டு அரசுப்பள்ளிக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்போது ஶ்ரீ மூலம் மக்கள் சபை உறுப்பினராக இருந்த வெள்ளிகர சோதியின் முயற்சியால் மூன்று குழந்தைகள் புல்லாட்டு அரசுப்பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இவ்வாறு சேர்க்கப்பட்டவர்களில் பின்னாளில் கொச்சி  சட்டசபையில் துணை சபாநாயகராக இருந்த டி.டி. கேசவன் சாஸ்திரியும் ஒருவர். ஆதிக்க சாதியினர் பள்ளியை விட்டு ஒட்டுமொத்தமாக விலக அரசு பள்ளியை மூடியது. கோபமுற்ற சாதிவெறியர்கள் பள்ளிக்கு தீவைத்தனர். இப்பள்ளிக்கு ‘நெருப்பு வைத்த பள்ளிக்கூடம்’ என்று பெயர். 

  1907 பிப்ரவரியில் தீண்டத்தகாத சாதியினரின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக வெங்கனூரில் ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ தொடங்கப்பட்டது. தாழத்தப்பட்ட புலையர், பறையர், குறவர் போன்றோர் உரிமைகள் பெற ஒருங்கிணைந்தனர். சங்கத்தின் தலைவராக அய்யன் காளி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். நீதிபதி கோவிந்தன் அறிவுரைகளும் ஊக்கமும் தந்தார். 

அய்யன் காளி


    இச்சங்கத்திற்கு 24 பிரிவுகள் கொண்ட விதிமுறைப்பட்டியல் தயாரித்தனர். அதில் தூய்மை, ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கல்வி, சமூக, பொருளாதார முன்னேற்றத்தை ஒட்டி விதிமுறைகள் வகுக்கப்பட்டன. விவசாயத்தொழிலாளர்களுக்கு வாரம் ஆறு நாள் வேலை, ஞாயிறு ஓய்வு நாள் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சங்கத்தின் மாத சந்தாவாக ஆண்களுக்கு அரைச்சக்கரமும் பெண்களுக்கு கால் சக்கரமும் (4 காசு) (8 காசு) தர முடிவானது. (சக்கரம் என்பது திருவிதாங்கூர் நாணயம், மதிப்பு 16 காசு) மூன்றாண்டு உழைப்பில் வெங்கனூரில் சொந்த இடம் வாங்கி, சங்கம் மெல்ல வலிமையடைந்தது.

     அய்யன் காளியின் ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் அனுமதி பெறுதலை உடனடிப்பணியாக கருதி செயல்பட்டது. 1909 – 1914 காலகட்டத்தில் திருவிதாங்கூர் திவானாக இருந்த வெளியூர் பிராமணர் பி.ராஜாகோபாலாச்சாரி தாழ்த்தப்பட்டவர்களிடம் கருணை காட்டியவர். அவரைச் சந்தித்து அய்யன் காளியும் அவரது தோழர்களும் மனு அளிக்க, 1907 –லேயே தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக திவான் தகவல் சொல்கிறார். 

     தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்கக்கூடாது, அவர்கள் கல்வி கற்றால் வேலைக்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள் என்று அரசின் உத்தரவை மறைத்தனர்; செயல்படுத்த மறுத்தனர். 1907 இல் இட்ட உத்தரவில் சில மாற்றங்கள் செய்து 1910, மார்ச் 02 இல் பள்ளிச் சேர்க்கையில் ஈழவர்களை அனுமதித்த பள்ளிகள் புலையர்களையும் அனுமதிக்க அறிவுறுத்தியபோதும் தலைமையாசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் நீக்கப்படவில்லை. இந்த உத்தரவை மறுநாள் (மார்ச், 02, 1910) முற்போக்குவாதியாக அறியப்பட்ட,  சுதேசாபிமானி ஆசிரியர் கெ.ராமகிருஷ்ண பிள்ளை சுதேசாபிமானியில் கடுமையாக விமர்சனம் செய்து தலையங்கம் எழுதினார். “பல தலைமுறையாக அறிவை விளைய வைத்துவரும் சாதியினரையும், அதைவிட பல தலைமுறையாக பயிரை விளைய வைத்துவரும் சாதியினரையும் ஒன்றாக சேர்ப்பது குதிரையையும் எருமையையும் ஒரே நுகத்தில் பூட்டுவதைப் போன்றதாகும்”, என்பது இவரது பிற்போக்குவாதம். அடுத்த ஆண்டே இவரது கருத்தில் மாற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்குள் மதமாற்றத்தைத் தடுக்கும் முயற்சி இருந்ததை மறுக்க இயலாது. 

   ஶ்ரீ மூலம் திருநாள் மகாராஜா ஆட்சி சீரமைப்பில் 1888 –ல் எட்டு உறுப்பினர் கொண்ட சட்டசபை உருவாக்கப்பட்டது. இந்திய சமஸ்தானங்களில் திருவிதாங்கூரில் மட்டும் தொடங்கப்பட்ட சட்டசபையில் உறுப்பினர் எண்ணிக்கை 1898 –ல் எட்டிலிருந்து பதினைந்தாக உயர்ந்தது. 1904 முதல் ஶ்ரீ மூலம் மக்கள் சபை செயல்பட, மக்கள் சபைக்கு பிரதிநிதிகளை அரசு தேர்ந்தெடுக்க, குறிப்பிட்ட விழுக்காடு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்கள் சபைக்கு வழங்கப்பட்டது. 

   1920 –ல் சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கை 25 ஆகி, 1922 –ல் 50 ஆக உயர்ந்தது. இதில் பணி சாராத உறுப்பினர்கள் 35. இவர்களில் 28 பேரை பொது வாக்காளர் தொகுதிலிருந்தும் மீதி எழுவரை பிரத்யேக வாக்காளர் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமானது. ரூபாய் 5 செலுத்தும் ஓட்டுரிமை வழங்கப்பட்டது. பெண்களுக்கும் ஓட்டுரிமை இருந்ததாகச் சொல்லும் நூலில் தலித்கள் பற்றி தகவல் இல்லை. 

    ‘சாது ஜன பரிபாலன் சங்க’த்தின் பிரதிநிதியாக சுபாஷினி பத்தரிக்கையாசிரியர் பி.கெ.கோவிந்தப்பிள்ளை 1911 –ல் தேர்வானார். இவர் புலையர்களின் இழிநிலை குறித்த விவரங்களைத் திரட்டி மக்கள் சபை முன்வைத்தார். அய்யன் காளி திவான் ராஜகோபாலாச்சாரியை சந்திக்க சென்றபோது ஆதிக்க வெறியர்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் தந்தி அனுப்பி திவானைச் சந்தித்து உரையாடினார் அய்யன் காளி. மக்கள் சபைக்கு அய்யன் காளி தேர்வு செய்யப்படவேண்டும் என்று திவானிடம் செல்வாக்கு பெற்ற பத்மநாபப்பிள்ளையின் வேண்டுகோளை ஏற்று, திவான் பரிந்துரைக்க, மகாராஜா 1911 டிசம்பர் 5 –ல் நியமன உத்தரவைப் பிறப்பித்தார். 

   இதற்கு நன்றி தெரிவித்து திவானுடன் கைகுலுக்கி நன்றி தெரிவித்துகொண்ட அய்யன் காளி தொடர்ந்து மக்கள் சபை கூட்டங்களில் கலந்துகொண்டு தரிசு நிலங்களை புலையர்களின் பெயரில் பட்டா வழங்குதல், புலையர் குழந்தைகள் சேர்க்கையை ஏழு பள்ளிகள் மட்டுமல்லாது  அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் பற்றிய உரையாற்றினார்.

    அரசின் உத்தரவை அமல்படுத்த ஆதிக்க சக்திகள் விரும்பவில்லை. வெங்கனூர் சாவடிப் பள்ளிக்கூடத்திற்கு அய்யன் காளி புலையக் குழந்தைகளுடன் சென்றார். அப்பள்ளி தலைமையாசிரியர்  இவர்களை விரட்டியடித்தார். ஸ்வர்ணர்கள் அய்யன் காளியையும் அவரது தோழர்களையும் தாக்கினர். இவர்களும் எதிர்த் தாக்குதல் நடத்தினர். 

    கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்குள் அனுமதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் ஆதிக்க சாதிக் குழந்தைகளைக் கொண்டு நிரப்பிவிடும் உத்தியை சாதி வெறியர்கள் பின்பற்றினர். அய்யன் காளியின் வேண்டுகோளின்படி  வெங்கனூர் புதுவல்விளாகம் மலையாளத் தொடக்கப்பள்ளிக்கு முதலிரண்டு வகுப்புகளுக்கான அனுமதி கிடைத்தது. புலையர்களில் படித்தவர்கள் இல்லை. ஆதிக்க சாதியினர் புலையக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர விரும்பவில்லை. எனவே ஆசிரியர்களைத் தேட வேண்டிய கட்டாயம் உண்டானது. பாடம் சொல்லிக் கொடுக்க இசைந்த திருவனந்தபுரம் கைதமுக்கு பரமேஸ்வரன் பிள்ளையை தடுத்து ரகளையில் ஈடுபட்டவர்களைத் தடுத்த அவரைப் பாதுக்காக்கும் வேலையை நாள்தோறும் ‘அய்யன் காளி படையினர்’ மேற்கொண்டனர். 

   1914 –ல் அரசின் உத்தரவிற்கிணங்க மக்கள் சபை உறுப்பினரான அய்யன் காளி பூசாரி அய்யப்பன் என்பவரின் மகளான எட்டு வயது பஞ்சமியை அழைத்துச் சென்றார். தலைமையாசியர் மறுக்க வாக்குவாதம் மூண்டு, ஆதிக்க சாதி வெறியர்கள் தாக்கினர். இவர்கள் வேறுவழியின்றிப் பின்வாங்க, அன்றிரவே அப்பள்ளி தீயிடப்பட்டது. மலையாள ஆண்டு 1090 இல் (கி.பி. 1915) நடந்த இந்த  கலவரம் தொண்ணூறாம் ஆண்டு கலவரம் என்றும் புலையர் கலகம் என்றும் சொல்லப்படுகிறது. நாயர்களால் உண்டாக்கப்பட்ட இக்கலகம் ‘புலையர் கலகம்’ என அழைக்கப்படுவது விநோதமல்ல; நமது வரலாற்றில் தொடரும் அவலம். 

    1915 அக்டோபர் 24 ஆம் நாள் கொல்லம் பெரிநாடு அருகே செறுமூடு கூட்டத்தைச் சீர்குலைக்கவும் புலையர்களை அணிதிரட்டிய கோபால் தாஸை கொலைசெய்யத் திட்டமிட்ட முயற்சி பெருங்கலகமாக உருவெடுத்தது. கலவர இடங்களைச் சென்று பார்வையிட பணமின்றி சிரமப்பட்ட அய்யன் காளி ரூ.500 பணத்தை திரட்டிக்கொண்டு கலவரப்பகுதிக்குச் சென்றார். கலவரம் அடங்கி இயல்பு நிலை திரும்ப அரசுடன் இணைந்து பணி செய்தார். பின்னர் நடைபெற்ற சாது பரிபாலன சங்கக் கூட்டத்தில் புலையர்களின் அடையாளச்சின்னமாக  இருந்த கல்மாலைகளை அய்யன் காளியின் வேண்டுகோளுக்கிணங்க அறுத்து எறிந்தனர். ‘மிதவாதி’ செய்திதாள் வெளியிட்ட ஒப்பீட்டின்படி 1914-1917 கால இடைவெளியில் புலையர்களின் கல்வியில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணரமுடிகிறது. அவர்களது எழுச்சி இல்லையே இது சாத்தியமாகியிருக்காது. 

   1912 முதல் 1933 வரை 22 ஆண்டுகள் மக்கள் சபை உறுப்பினராக இருந்த அய்யன் காளி உடல்நிலைக் குறைவு காரணமாக 1933 –ல் பதவி விலகினார். பிறகு இவரது மருமகன் டி.டி.கேசவ சாஸ்திரி  திருவிதாங்கூர் அரசாங்கம் அப்பதவிக்கு நியமனம் செய்தது. அய்யன் காளியுடன் இணைந்து பணி செய்தவர்களில் குறும்பன் தெய்வத்தான், வெள்ளிக்கர சோதி, பாறாடி ஆப்ரஹாம் ஐசக், பாழூர் சேனன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

    1931 –ல் சித்திரைத் திருநாள் பாலராம வர்மா மன்னரானார். மன்னரின் ஆலோசராக இருந்த சர் சி.பி.ராமசாமி அய்யர் திருவிதாங்கூர் திவனாக நியமிக்கப்பட்டார். ஈழவர்களின் மதமாற்றம் தொடர்பான நூலொன்றை சி.வி.குஞ்ஞிராமன் வெளியிட்டார். 1933 –ல் கோயில் நுழைவுப் பிரச்சாரக்குழு நியமிக்கப்பட்டது. அன்று திருவிதாங்கூரில் உள்ள 11 லட்சம் ஈழவர்களும் மதம் மாறினால் நாடு கிருஸ்தவ தேசமாகி விடும் என்ற பயமே 1936 நவம்பர் 12 கோயில் நுழைவு ஆணை வெளியிடக் காரணமானது. 1937 ஜனவில் 14 –ல் மகாத்மா காந்தி வெங்கனூரில் அய்யன் காளியை சந்தித்து, அங்கு திரண்ட மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார். அய்யன் காளியை வெகுவாகப் பாராட்டிய காந்தி, “கோயிலில் நுழையக் கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை நீங்கள் அறிவு சார்ந்தும், மதம் சார்ந்தும் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறேன். கோயிலுக்குச் செல்வதால் நமக்கு ஏதேனும் பயனுண்டா இல்லையா என்பது நமது மனநிலையைச் சார்ந்த விஷயம். எளிமையும் தன்னிரக்கம் கொண்ட மனத்தோடு நாம் கோயில்களை அணுகவேண்டுமென”, கோரிக்கை வைத்தார். 

    அய்யன் காளியை கிருஸ்தவ மதத்தில் இணைக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. மதமாற்ற முயற்சிகளைக் குறிப்பிட்டு “இந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருவது” குறித்து மகாராஜாவிற்கு வேன்டுகோள் விடுத்து “கட்டாய மதமாற்றம் கூடாது”, என்ற அரசாணையைப் பெறுகிறார். அய்யன் காளி மதமாற்றத்தை விரும்பாததும் அதற்கு எதிராக செயல்பட்டதும் வெளிப்படையானது. மதமாற்றம் புலையர்களின் ஒருங்கிணைப்பைக் குலைத்துவிடும், அதன் பிறகு கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாமற்போகும் என்பதே அவரது எண்ணம். அம்மக்களின் சமூக, பொருளாதார நிலை உயர கள்ளுண்ணாமை குறித்தும் அவர் வலியுறுத்துகிறார்.

   மாறாக சுவாமி விவேகானந்தரும் பிறரும் மதமாற்றத்திற்கு எதிராகப் பேசியதும் செயல்பட்டதும் முற்றிலும் வேறுபடும் புள்ளிகள் என்பதை எளிதில் உணரலாம். 1897 –ல் சென்னையில் நடந்த பிரசங்கக் கூட்டத்தில் விவேகானந்தர், “மலபாரில் நான் காண நேர்ந்ததைக் காட்டிலும் மோசமான முட்டாள்தனம் உலகில் வேறெங்கும் இருந்ததுண்டா? மேல்சாதிக்காரர்கள் நடக்கும் தெருவில் ஏழைப்பறையன் நடக்கக்கூடாது. ஆனால், ஒரு ஆங்கில கலப்புப் பெயர் அல்லது இஸ்லாமியப் பெயரை ஏற்றுக்கொண்டால் போதும், எல்லாம் சரியாகிவிடும். இந்த மலபார்க்காரர்கள் பைத்தியக்காரர்கள். இவர்களின் வீடுகள் அனைத்தும் பைத்தியக்கார விடுதிகள்”, என்று பேசியது குறிப்பிடத்தக்கது. 

  1905 –ல் சதானந்த சுவாமிகள் கேரளப்பகுதிகளுக்கு வந்து மதமாற்றத்திற்கு எதிராக பரப்புரை செய்தார். இந்து மத மூட நம்பிக்கைகளையும் தீண்டல், தொடீல் போன்ற தீண்டாமையையும் சாடினார். பொது வெளிகளில் உலவுதல், கோயில் நுழைவு போன்ற தீண்டத்தாகதவர்களின் உரிமைக்கான குரல் இவரிடமிருந்தது. அதனால் அய்யன் காளி சதானந்த சுவாமிகளைச் சந்தித்தார்; இணைந்து செயல்பட்டார். சதாந்த சுவாமிகள், தைவிளாகத்து காளியை ‘பெரிய காளி’ என்றும் அய்யன் காளியை ‘சின்ன காளி’ என்றும் தலைமைப் பொறுப்புகளில் நியமனம் செய்தார். 

  புலையர்கள் எழுச்சியை முன்னெடுத்த அய்யன் காளி உடல்நலக்குறைவினால் 1941, ஜூன் 18 –ல் மரணமடைந்தார். இவருடைய வாழ்வு, போராட்டங்களிலிருந்து இன்றைய தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள் கற்கவேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. அம்பேத்கர் (மகாராஷ்டிரா), பெரியார் (தமிழ்நாடு) போன்ற சிந்தனையாளர்களை குறிப்பிட்ட சாதி, இன, மொழி, மாநிலம் சார்ந்து பார்க்கும் மோசமான பார்வை ஒன்றிருக்கிறது. அய்யன் காளியையும் அவ்வாறு அணுகாமல் இருப்பதும் இத்தகைய போக்குகளை மறுபரிசீலனை செய்வதும் அவசியம். 

   நூலின் பிற்சேர்க்கை ஒன்றில் தைக்காடு அய்யா சுவாமிகள், ஶ்ரீ சட்டம்பி சுவாமிகள், ஶ்ரீநாராயண குரு, சுபானந்த குருதேவன், பிரமானந்த சிவயோகி, மகாகவி குமாரன் ஆசான், சங்ஙனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளை, வைக்கம் சத்தியாகிரகி டி.கே.மாதவன், ஸ்வர்ண பேரணி மன்னத்து பத்மநாபன், குருவாயூர் சத்தியாகிரகி கேளப்பன், சகோதரன் கெ.அய்யப்பன், கிருஷ்ணாதி (கொச்சி புலைய மகாஜன் சபை), பண்டிட் கெ.பி.கருப்பன், பி.சி.சாஞ்சன், கெ.பி.வள்ளோன் என கேரளாவில் தலித் முன்னேற்றத்திற்கு உழைத்த பலரைப் பற்றிய குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது. 



     கேரளத்தின் முதல் தலித் போராளி – அய்யன் காளி  (வரலாறு)

நிர்மால்யா

முதல் பதிப்பு: அக்டோபர் 2001
இரண்டாம் பதிப்பு: மே 2007
பக்கம்: 173
விலை: ரூ. 85

தொடர்புக்கு:

தமிழினி,
67, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை – 600014.
பேசி: 98844196552
மின்னஞ்சல்: tamizhininool@gmail.com