சனி, செப்டம்பர் 30, 2023

சமூக இடைவெளி!

                                                             சமூக இடைவெளி!

மு.சிவகுருநாதன்


 

           கொரோனா காலத்தில் பிரபலமானது சமூக இடைவெளி எனும் சொல்லாடல். நாம் இங்கு அந்தச் சமூக இடைவெளியைப் பற்றிப் பேசப்போவதில்லை. ஏழைபணக்காரன், கிராமம்நகரம், அறம் சார் வாழ்க்கைபோக்கிரி வாழ்வு, சாதி, மதம், மொழி, இனம் சார்ந்த இடைவெளிகள் தொடர்கின்றன. “இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறா”, என்பது மேம்போக்கான பார்வையாக நிலைத்துவிட்டது. சாதிகள் முன்பைவிட தீவிரமாக துலக்கம் பெற்றுள்ளன. பண்பாட்டு அடையாளங்களைத் தேடுதல் என்கிற பெயரில் சாதி உன்னதமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றுடன் கூடவே பல்வேறு இடைவெளிகளும் அதிகரித்துள்ளன. இவற்றை வெறுமனே சமூக அவலம் என்று மட்டும் கடந்து செல்ல இயலாது. இன்றுள்ள நவீன வசதிகள், பொருளாதார பலம், போதைப் பொருள்கள் பயன்பாடு, சினிமா-சின்னத்திரைகாட்சியூடக வன்முறைகள் போன்றவை காரணமாக அமைகின்றன. 

            பள்ளிகளிலும் சாதியம் துலக்கம் பெற்றுள்ளது. இந்த சாதியச் சமூகத்தை எடுத்துக்காட்டும் சிறிய அலகாக அது இருக்கிறது. சாதிக்கயிறுகள் கட்டுதல் தொடங்கி சாதிய வன்முறைக்கான களமாக வகுப்பறைகளும் பள்ளிகளும் மாறிவிட்டன. இதன் தொடர்ச்சியே நாங்குநேரியில் இரு தலித் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலாகும். இந்தச் சமூகத்தின் விளைச்சலே ஆசிரியர்கள். அவர்களில் பலரும் சாதிய உணர்வுடன் இருப்பது இயல்பான ஒன்றாக மாறியுள்ளது.

         ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரத்தில் இருக்கும் சாதியப்படிநிலையும் அதன் ஆதிக்கமும் பள்ளிகளிலும் எதிரொளிக்கிறது. இது அனைத்துச் சாதியப் படிநிலைகளுக்கும் பொருந்தும் ஒன்றாக உள்ளது. தலித்கள் அதிகமிருக்கும் இடங்களின் அவற்றின் உள்சாதி முரண்கள் பெரிதாக வெளிப்படுகின்றன. அனைத்துத் தளங்களிலும் சாதியத்தின் கொடிய வேர் ஊடுருவி உள்ளதை பெரும் அபாயமாக உணரவேண்டும். 

            இன்று தமிழ்ச்சமூகம் சாதிய ரீதியாக பிளவுபட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுதான் வேண்டும். வீணானப் போலிப் பெருமிதங்கள் கதைக்கு உதவாது. முன்மைவிட சாதியம் தீவிர இறுக்கமடைந்துள்ளது. இனியும் பெரியார் மண் என்று பேசித்திரிவதில் பொருளில்லை. பெரியாரின் வழிவந்தவர்கள் அவரின் கருத்தியலுக்கு எதிராகச் செயல்பட்டதே இதற்கு முதன்மைக் காரணமாகும்.

      தமிழகத்தில் திராவிட இயக்கங்களும் மார்க்சிய இயக்கங்களும் வளர்த்தெடுக்கப்பட்ட விதம் மிகச் சாதாரணமானதல்ல. இதன் பின்னால் தலைவர்கள் மற்றும் தொண்டரணிகளின் தன்னலமற்ற உழைப்பும் தியாகமும் இருந்தன. முந்தைய தலைமுறைகளின் கருத்தியல் சார்ந்த வாசிப்பு இவ்வியக்கங்களை வளர்த்தெடுத்ததுடன் அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்தின. இன்று வாசிப்பு பெருமளவு குறைந்துள்ளது. அதுவும் அரசியல், கருத்தியல் சார்ந்த் தெளிவுகள் இல்லை. திரைப்படம், சின்னத்திரையில் தொடங்கிய இந்த வீழ்ச்சி இன்று சமூக வலைத்தளங்களில் மூழ்கிய சமூகமாக மாறியுள்ளது. கருத்தியல், அரசியலற்ற பேச்சு, எழுத்து என்பதாக இன்றைய தலைமுறை பிளவு சக்திகளுக்கு மறைமுகமாகத் துணைபோகிறது.

          சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பொறுப்பு அமைச்சர் செ.முத்துசாமி மதுப்பிரியர்களின் துயரங்களைப் பட்டியலிட்டு மிகவும் வருந்தப்பட்டார். கட்டிட வேலை உள்ளிட்ட மிகக்கடுமையான பணிகளுக்குச் செல்வோர் உற்சாக பானம் அருந்தினால்தான் நன்றாக வேலை செய்யமுடியும் என்பதால் காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும்; 180 மி.லி. மதுவை பகிர்ந்துக் குடிப்பதற்கு ஆள்தேடி காத்திருக்க வேண்டியிருப்பதால் அவர்களது பொன்னான நேரம் வீணாகிறது, எனவே 90 மி.லி. புட்டிகளில் (Tetra pack) மது விற்பனை செய்யவேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் வந்துள்ளன என்றார். இவைகளை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளோம் என்றும் சொன்னார். இவை பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடைமுறைக்கு வர வாய்ப்பிருக்கிறது. இவை பற்றிய விமர்சனங்கள் எழுந்தபோது காலையில் குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொல்வதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது என்றார் கடுமையாக. மாலையில் குடிப்பவர்களை வேண்டுமானால் அவ்வாறு கூறிக்கொள்ளுங்கள். கட்டிட வேலைகள் உள்ளிட்ட மிகக் கடுமையான வேலை செய்வோர்  குடிக்காவிட்டால் வேலை செய்யமுடியாது என்றும் சொல்லி அத்துடன் சாக்கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களையும் இணைத்தார். இங்கு ஏன் எந்திரங்களைப் பயன்படுத்தவில்லை என்பது குறித்து அமைச்சர் ஏதுவும் சொல்லவில்லை.  

       நீதிமன்றங்கள் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளில் இருக்கக் கூடாது என்றது. அரசோ அவற்றை நெடுஞ்சாலைகள் இல்லை என மாற்றம் செய்தது. மதுவால் சிதறிப்போன குடும்பங்கள் மது வேண்டாம் என்று அழுது புலம்புகின்றனர். இவை அதிகாரங்களின் செவிகளில் எட்டுவதேயில்லை. மதுவால் கல்லீரல் உள்ளிட்ட உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் பற்றிய ஆய்வுகளோ, புள்ளிவிவரங்களோ அரசிடம் இருக்கின்றனவா? அரசே மது விற்பதால் இன்று  அதை போதைப்பொருள் அல்ல என்று கூறும் நிலை உருவாகியிருக்கிறது. மதுவைத் தவிர்த்துப் பிற போதைப்பொருட்களைத் தவிர்க்க உறுதிமொழியேற்கும் சடங்குகள் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

      மதுக்கடைக்குப் புதிய வரும் இளைஞர்கள், மிகவும் வயதான முதியவர்களை டாஸ்மாக் பணியாளர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்கவும் சிகிச்சை வழங்கவும் திட்டமிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அந்த அமைச்சர்தான் மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது, பணியாளர்கள் நின்றுகொண்டே பணிசெய்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். மதுவிலக்குப் பரப்புரையை டாஸ்மாக் மூலம் செய்யும் கொக்குத் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடிக்கும் முறை வெற்றிபெற நாமும் வாழ்த்துவோம்! டாஸ்மாக் பணியாளர்கள் மூலம் மதுவிலக்குப் பரப்புரை சாத்தியமா என்பதை அரசுதான் விளக்கவேண்டும்.

      மகாத்மா காந்தி கிராமங்களை பாரதம் என்றும் நகரங்களை இந்தியா என்றும் வருணித்தார். கிராமங்கள் இந்தியாவின் அடிப்படை என்பதை உணர்ந்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இவையிரண்டிற்குமான இடைவெளிகள் அதிகரிப்பது சமூகத்திற்கு கேடு என்பதை அவர் உணர்ந்திருந்தார். இன்று பெருநகரங்களை மையப்படுத்தியே திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. அதிநவீன மருத்துவ வசதிகள் இருந்தும் சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே அடுத்தடுத்த மருத்துவமனைகள் திறக்கப்படுகின்றன. சென்னையை அடுத்து மதுரைக்கு பிருமாண்ட நூலகம் கிடைத்திருக்கிறது. கிராம, நகர நூலகங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இவற்றிற்கு கிடைக்க வேண்டிய நிதிவசதிகள் பெருந்திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படுகின்றன. சாலைகள் மாநகரில் போட்டால் போதும் என்கிற நிலை நாட்டுக்கு நல்லதல்ல. அரசுகளின் இத்தகைய புறக்கணிப்புகளும் சமூகத்தில் பாரிய விளைவுகளை உண்டாக்கும்.

       சில மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது. இதற்குக் காரணமான ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இதை வேடிக்கை பார்க்கின்றன. மணிப்பூர் இன்னொரு குஜராத் ஆக மாற்றப்பட்டுள்ளது. அரியானாவிலும் இந்த வன்முறைகள் தொடர்கின்றன. சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி அதன்மூலம் ஆதாயம் பெற முயலும் சக்திகள் நாட்டில் அதிகரித்துள்ளன. இவை ஒடுக்கப்பட்டோரிடம் பிளவை மேலும் அதிகமாக்குக்கின்றன. பழங்குடி மற்றும் அட்டவணைச் சாதியினரிடம் உள்முரண்பாடுகளைத் தோற்றுவிக்க இந்த பிளவுச் சக்திகள் செயலாற்றுகின்றன. தமிழ்நாட்டின் மூன்று தலித் சமூகங்களிடம் திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் பிளவை ஏற்படுத்தி ஒருங்கிணைப்பைச் சாத்தியமில்லாமல் ஆக்கியுள்ளனர். வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு அளித்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கிடையே நிரந்தரப் பிளவை வளர்த்துள்ளனர். எதிர்காலத்திற்கு மணிப்பூரைப் போன்று வன்முறைகளுக்கு வித்திடும் அரசியல் இங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது.

         வெறுப்பரசியல் கடந்த பத்தாண்டுகளாக அரசியல் யுக்தியாகவே மாற்றப்பட்டுள்ளது. குஜராத் மாடல் ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், அரியானா என்று இந்தியாவெங்கும் வெறுப்பரசியலை விதைப்பதில் மதவெறி சக்திகள் வெற்றி பெற்றுள்ளன. ரயில்வே சிக்னல் கோளாறு விபத்தையும் இவர்களால் மிக எளிதில் அந்நியச் சதியாக மாற்றிவிடமுடிகிறது. வெறுப்பரசியலின் உச்சமாக குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்த கொடுமைகள் இருக்கின்றன. பொதுத்தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய வெறுப்பரசியல் உச்சம் தொட விரும்பும் சக்திகளுக்கு இனியும் ஊக்கம் தரக்கூடாது.

         சமூகத்தில் லும்பனிசம் (Lumpenism) அதிகரித்துள்ளது. நீதி செத்த உலகில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அரசியல் பெருமளவு குற்றமயமாகியுள்ளது. பொதுவாழ்விற்கு குற்றமிழப்பது அடிப்படைத் தகுதி என்றாகிவிட்டது. இவற்றில் மேல்தட்டு, நடுத்தட்டு, அடித்தட்டு என்கிற வேறுபாடெல்லாம் அழிந்து வருகிறது. தாம் வாழ பிறரை அழிப்பது என்கிற பொதுத்தன்மை பரவலாக வளர்ந்துள்ளது.

         மாணவர்களிடையே படிப்பைத் தவிர்த்த பிற செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு இன்னல்கள் பற்றிய கவலையின்றி ஒரு கற்பனை உலகில் வாழ நிர்ப்பந்திக்கப்படுள்ளனர். அறம் அல்லது நெறி சார்ந்த வாழ்வு பற்றிய எண்ணங்கள் பெரும்பாலும் இல்லை. பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் வன்முறை மனோபாவம் எங்கும் நிறைந்துள்ளது. இங்கு வழிவழியாக சொல்லப்படும் ஒழுக்கப் போதனைகள் இல்லாததுதான் காரணம் என்கிற மாயை பரப்பப்படுறது.  அதன் பின்னாலிருக்கும் அரசியல், சமூக நலன்கள் மறைக்கப்படுகின்றன.

     18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்ட சட்டத்தில் அனுமதியில்லை. ஆனால் ஓட்டுவதற்கு எவ்விதத் தடையுமில்லை. இவர்கள் பைக் ரேஸிலும் ஈடுபடுகின்றனர். இந்த சாசக உலகிற்கும் ஒருவித மனநோயிற்கும் இவர்கள் ஆட்பட்டுள்ளனர். பெற்றோர்கள் மீது வழக்குத் தொடுக்கவும் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமிருந்தும் யாரும் கண்டுகொள்வதில்லை. இவர்களுக்கு சாலையில் நடந்துசெல்லும் அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள்,  பெண்கள் குறித்து அக்கறை இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் நடக்கும் பைக் ரேஸ்தான் தலைப்புச் செய்தியாகும்.

            ஆனால் ஒவ்வொரு நகரத்திலும் சிறு கிராமத்தில்கூட இந்தக் கொடியவர்கள் இருக்கிறார்கள். சொந்தமாக பைக் வாங்க வசதியற்றவர்கள் கூட இரவல் பைக்கில் இத்தகைய சாகசங்கள் மூலம் உயிர்க்கொலைகளை செய்கின்றனர். சாலையில் செல்வோரை அச்சுறுத்துகின்றனர். ரேஷன் அரிசி எடுத்துச் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். ஆனால் இந்த ரேஸ் வாகனங்கள் வெறும் எச்சரிக்கையுடன் திரும்ப அளிக்கப்படுகின்றன. அவர்கள் மீண்டும் மீண்டும் சாகசங்களில் திளைக்கின்றனர்.

        போதைப் பொருள்களின் நுகர்வு பேரளவில் அதிகரித்துள்ளது. கஞ்சா போன்றவற்றின் பயன்பாடு கல்லூரி மாணவர்கள் என்ற நிலையிலிருந்து தற்போது பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும்  அளவில் வளர்ந்துள்ளது. இத்தகைய சமூக விரோதக் கும்பல்கள் அரசியல் ஆதரவுடன் செழித்து வளர்கின்றன. குற்றமயமாகும் அரசியல் வலைப்பின்னலில் இவைகளும் அங்கமாக இருக்கின்றன. போதை நுகர்வு ஏதோ தனி மனிதன் சார்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுவது வேதனையானது. இது சமூகச் சீரழிவாகப் பார்க்கப்பட வேண்டும். குழந்தைகள் இப்பழக்கத்திற்கு அடிமையாவது நாட்டின் எதிர்காலத்தைப் பாழாக்கும் என்பதை உணரவேண்டும்.

        மற்றமையைப் (Others) பற்றிய கவலைகள் யாருக்கும் இல்லை. சுயநல மோகம் மேலிருந்து கீழ்வரை ஆட்டிப்படைக்கிறது. இதில் ஏழைபணக்காரன், படித்தவன்படிக்காதவன் வேறுபாடெல்லாம் துளியும் இல்லை. கடந்த சில பத்தாண்டுகளாக வளர்ந்துவரும் நுகர்வுக் கலாச்சாரம் பெரும்பகுதி மக்களை சுயமோகிகளாகவும் சமூக அக்கறையற்றவர்களாகவும் உருமாற்றியுள்ளது. இதன் விளைவாகவே அரசியல் உணர்வும் மழுங்கடிக்கப்பட்டு வாக்குரிமையை விற்கும் நிலை வந்துள்ளது. மக்கள் சுரண்டப்படுவது குறித்த பிரக்ஞையின்றி தனிநபர் வழிபாட்டில் மயங்கிக்கிடக்கும் நிலை உருவாகிறது.

          நீதி செத்த உலகில் வாழ நேர்ந்துள்ள அறம் சார்ந்த கோட்பாடுகளைக் கடைபிடிக்கும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் கூடுதலாக ஏற்படுகின்றன. அவர்களும் இந்த உலகில்தான் வாழ்ந்தாக வேண்டும். அவர்கள் ஒருவகையில் மனநோயாளியாகவே இந்தச் சமூகம் பார்க்கிறது. அறத்தை வலியுறுத்துவதும் கடைப்பிடிப்பதும் பிழைக்கத் தெரியாத பைத்தியக்காரத்தனங்களாக பார்க்கப்படுவது பெருங்கொடுமை. இவர்களது எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது.  எனவே அறத்தின் வீழ்ச்சி எங்கும் நிக்கமற நிறைகிறது.  

         சமூகம் சாதி மற்றும் மதவெறிமயமாதலை நாம் உடனடியாகத் தடுக்க வேண்டும். வெறுப்பரசியல் எல்லாவற்றிற்கும் அடைப்படையாக உள்ளது. இந்த வெறுப்பும் அதனால் உண்டாகும் பிளவும் இளைஞர்களையும் குழந்தைகளையும் படுகுழிக்குள் தள்ளுகிறது. அறிவு செயல்படாத இடங்களில் இம்மாதிரியான மடமைகளும் வெறுப்பும் கோலோச்சுகின்றன. அறம் சார்ந்த அறிவும் வாழ்வும் நம்மை உயர்த்தும் என்கிற எண்ணம் விதைக்கப்பட்டு தழைத்தோங்க வேண்டும். இதற்கு சமூகத்தின் அனைத்து களங்களும் உதவ முன்வர வேண்டும்.

   நன்றி: ‘பேசும் புதியசக்திசெப்டம்பர் 2023

இந்தியாவில் காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள்

 

இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள்

(மகாத்மாவின் கதை தொடரின் ஒன்பதாவது அத்தியாயம்.)

மு.சிவகுருநாதன்


 

            கோபாலகிருஷ்ண கோகலேவை காந்தி தனது அரசியல் குருவாக ஏற்கத் தொடங்கியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இந்தியாவைப் புரிந்துகொள்ள பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். பம்பாய் கவர்னர் காந்தியை சந்திக்க விரும்பும் செய்தியை கோகலே மூலம் அறிந்து கவர்னர் வெலிங்கடனைச் சந்தித்தார். அரசு தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கும் முன் நீங்கள் வந்து என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிராளியின் கருத்துகளை அறிந்து முடிந்தவரையில் ஒத்துப்போகும் சத்தியாக்கிரகத் தருமத்தைக் கடைபிடிப்பதால் அதையே இங்கும் செயல்படுத்துவேன் என்றார் காந்தி. நீங்கள் விரும்பும்போது என்னிடம் வரலாம் எனவும் அரசு வேண்டுமென்று எந்தத் தவற்றையும் செய்யாது என கவர்னர் உறுதியளித்தார்.

            புனாவில் கோகலே மற்றும் இந்திய ஊழியர் சங்கத்தின் அன்பில் திளைத்தார் காந்தி. சங்கத்தில் காந்தியை இணைப்பதில் கோகலே பெருவிருப்பம் கொண்டிருந்தார்.  காந்திக்கும் சேர விருப்பமே. ஆனால் பிற உறுப்பினர்கள் இதை  விரும்பவில்லை. காந்தி ஃபீனிக்ஸ் நண்பர்களுடன் குடும்பமாக ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்க விரும்பினார். தமது சொந்த மண்ணான குஜராத்தில் ஆசிரமம் அமைத்து அப்பகுதிக்கு சேவை செய்ய விரும்பினார். டாக்டர் தேவ் என்பவரை அழைத்து காந்திக்காக சங்கத்தின் கணக்கு வைக்கும்படியும் ஆசிரமத்திற்கும் பொதுச்செலவிற்கும் தேவைப்படும் அனைத்தையும் தரும்படி கட்டளையிட்டார்.

          காந்திக்கு முன்னதாக இந்தியா ஃபீனிக்ஸ் குழுவினர் சாந்திநிகேதனில் சிறப்பான உபசரிப்பில் தங்கியிருந்தனர். அவர்களை சந்திக்க காந்தி புறப்படும் முன்பாக கோகலே காந்திக்கு விருந்தளித்தார். அந்த விருந்தில் நண்பர்கள் மனம்விட்டு கலந்துரையாடினர். உடலநிலை சரியில்லாத நிலையில் கலந்துகொண்ட கோகலே மயக்கமடைந்தது காந்திக்கு வருத்தம் தந்தது.

       பம்பாய், புனாவிற்கு பிறகு ராஜ்கோட், போர்பந்தர் சென்று தனது உறவினர்களைச் சந்தித்தார். அங்கிருந்து சாந்திநிகேதனம் சென்று ஃபீனிக்ஸ் நண்பர்களைப் பார்த்தார். ‘காக்கா சாகிப்என்றழைக்கப்பட்ட கலேல்கரை அங்குதான் சந்தித்தார். அங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் காந்தியை அன்பால் மூழகடித்தனர். ங்கு ஃபீனிக்ஸ் குடும்பத்தினருக்கு தனியிடம் அளித்திருந்தனர். அக்குடும்பத் தலைவராக மகன்லால் காந்தி இருந்தார். அங்கு பயிலும் மாணவர்கள், அவர்களது வேலைகள், உடலுழைப்பு போன்ற அனைத்தையும் கண்டு காந்தி பெருமகிழ்ச்சியடைந்தார். இங்கு சிறிதுகாலம் தங்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஒரு வாரத்தில் கோகலே காலமான செய்தி (பிப்ரவரி 19, 1915) காந்தியை எட்டியது.

        காந்தி கஸ்தூரிபா மற்றும் மகன்லாலுடன் புனே புறப்பட்டார். கோகலேவை குருவாக ஏற்றுச் செயல்பட விரும்பிய காந்திக்கு அவரது மறைவு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. கோகலேயின் இந்திய ஊழியர் சங்கத்தில் சேருவதை தமது கடமை என்று கருதினார். அதற்கான விண்ணப்பத்தையும் அளித்தார். கோகலேவின் இறுதிச் சடங்குகள் முடிந்தபிறகு கூட்டப்பட்ட சங்கக்கூட்டம் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வீடு திரும்பிய காந்தி சங்க உறுப்பினர்களின் சங்கடத்தைப் போக்கவும் கோகலேயிடம் கொண்ட பக்திக்கு ஏற்ற செயல் என்பதால் சங்கத்தில் சேரும் விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றார்.

         காந்தி தொடர்வண்டியில் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்தார். அதில் பயணிகள் படும் துன்பங்களை நேரில் கண்டார். இதற்குப் பெரும்பாலும் ரயில்வே அதிகாரிகளின் ஆணவமே காரணமாக அமைகிறது. மேலும் பயணிகளின் அறியாமை, முரட்டுத்தனம், சுயநலம், மோசமான பழக்கவழக்கங்கள் போன்றவையும் காரணமாக இருக்கின்றன என்பதை அறியக்கூடிய வாய்ப்பும் அமைந்தது.

      டாக்டர் மேத்தாவைச் சந்திக்க பர்மாவின் (மியான்மர்) ரங்கூனுக்கு (யாங்கன்) பயணமானார். தொடர்வண்டியின் மூன்றாம் வகுப்பில் கல்கத்தா வந்து பாபு பூபேந்திர பாசுவின் விருந்தினராகக் கல்கத்தாவில் தங்கினார். மகன் ராமதாசை உடன் அழைத்து வந்தார். விருந்தினரை உபசரிப்பதில் ஏற்படும் சங்கடங்களை காந்தியால் உணரமுடிந்தது; ஆனால் அதிலிருந்து தப்பும் வழிதான் தெரியவில்லை. அங்கிருந்து கப்பலின் மூன்றாம் வகுப்பில் ரங்கூன் பயணமானார். கப்பலில் இருந்த சுகாதாரக்கேடு காந்தியை மிகவும் பாதித்தது. கப்பல் அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. இறங்கியதும் கப்பல் கம்பெனி முகவருக்கு எழுதிய கடிதம், மேத்தாவின் மேற்கண்ட முயற்சி போன்றவற்றால் திரும்புகையில் மூன்றாம் வகுப்பு அவ்வளவு மோசமாக இல்லை.

       1915இல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா ஹரித்துவாரில் நடந்தது. அதற்குப்போக காந்திக்கு விருப்பமில்லை  என்றாலும் மகாத்மா முன்ஷி ராம்ஜியையும்  அவரது குருகுலத்தையும் பார்க்கும் ஆவல் காந்திக்கு இருந்தது. கும்பமேளாவில் கோகலே சங்கத்தினருடன் இணைந்துத் தொண்டாற்ற ஃபீனிக்ஸ் குழுவினர் மகன்லால் காந்தி தலைமையில் முன்பே அங்கு சென்றிருந்தனர். கல்கத்தாவிலிருந்து ஹரித்துவாருக்கு மிகவும் கடினமான ரயில் பயணம் செய்து அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.  

      ஹரித்துவாரில் முன்ஷி ராம்ஜி குருகுலம் சென்று அவரைச் சந்தித்தார். அவரை காந்திக்கு மிகவும் பிடித்துப்போனது. அங்கு ஆச்சாரிய ராமதேவரையும் முதன்முதலாகச் சந்தித்தார். ரிஷிகேசம், லெட்சுமண ஜூலா (கங்கை மீது போடப்பட்டத் தொங்கு பாலம்) போன்றவற்றையும் கங்கையின் இயற்கைக் காட்சிகளையும் கண்டார். இவற்றை மக்கள் எவ்வாறெல்லாம் சீரழிக்கிறார்கள் என்பதையும் அறிந்தார். சாந்திநிகேதனில் கழிவுக்குழிகளில் மண்ணைப்போட்டு அகற்றும் பணிகளில் ஃபீனிக்ஸ் குழுவினரையும் ஈடுபட்டனர். இதன்மூலம் இந்தியாவில் கழிவகற்றும் வேலையே முதன்மைப்பணி என்பதை காந்தி உணர்ந்தார். அவற்றில் ஈடுபட்டும் சத்தியாக்கிரகிகளை ஈடுபடவும் தூண்டினார்.

        ஹரித்துவாரில் தங்குவது, ராஜ்கோட் அல்லது அகமதாபாத்தில் ஆசிரமம் அமைப்பது குறித்த யோசனையில் அகமதாபாத்தைத் தேர்வு செய்தார். அது ஒரு குஜராத் நகரம், கைத்தறி நெசவிற்குப் புகழ்பெற்றது, பணக்காரர்களின் பொருளுதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அங்கே ஆசிரமம் தொடங்க முடிவானது. சேவாசிரமம், தபோவனம் போன்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டபோதும் தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக  முறைகளை இந்தியாவில் கடைபிடிக்க விரும்பியதால் சத்தியாக்கிரக ஆசிரமம்என்ற பெயரைக் காந்தித் தெரிவு செய்தார். 1915 மே 15இல் சத்தியாக்கிரக ஆசிரமம் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டது. ஆசிரமத்தில் இருந்த 25 பேரில் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த 5 இளைஞர்கள் உள்ளிட்ட 13 பேர் தமிழர்கள்!

        இந்தியாவில் நிலவும் தீண்டாமையைக் காந்தி கணக்கில் கொண்டார். மதுவிலக்கு, புலால் மறுப்பு, அகிம்சை உள்ளிட்ட சத்தியாக்கிரக ஒழுக்க நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளும் தலித்களை ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்ளும் முடிவெடுக்கப்பட்டது. அப்படி யாரும் கிடைக்கமாட்டார்கள் என்று சிலர் நம்பினர். ஆனால் அமிர்தலால் தக்கரின் வேண்டுகோள் கடிதத்துடன் ஒரு தலித் குடும்பம் ஆசிரமத்தில் சேர முன்வந்தது. பம்பாயில் ஆசிரியராக இருந்த தூதாபாய் அவரது மனைவி தானிபென் லெட்சுமி எனும் தவழும் குழந்தை மூவரும் அடங்கிய குடும்பம் அது.

     தென்னாப்பிரிக்காவில் காந்தியின் வீட்டில் தலித் நண்பர்கள் வருவதும் சாப்பிடுவதும் இயல்பான ஒன்றாக இருந்தது. ஆனால் இங்கு ஆசிரமத்தில் அவ்வாறு செய்வது கஸ்தூரிபா உள்ளிட்ட பெண்களுக்கும் பிடிக்காமற்போனது. அவர்களை இழிவாக நடத்துவதை காந்தியே நேரில் கண்டார். அவர்கள் சினமின்றி அவற்றை எதிர்கொண்டனர். இந்நிலையை மாற்ற ஆசிரமத்தின் உள்ளுக்குள்ளும் சத்தியாக்கிரகம் தேவையாக இருந்தது.

        ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிக்க 1916 மார்ச்சில் மதன்மோகன் மாளவியா இம்பீரியல் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். இக்கருத்தை ஹார்டிஞ்சு பிரபு ஏற்றுக்கொண்டபோதிலும் இதற்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கவில்லை. 1917 பிப்ரவரியில் உடனடியாக ரத்து செய்ய மசோதா கொண்டுவர அனுமதி கேட்டார். செம்ஸ்போர்டு பிரபு அதனை மறுத்தார். செம்ஸ்போர்டுடன் காந்தி நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. இருப்பினும் இது தொடர்பாக கிளர்ச்சி செய்ய பம்பாயில் நடந்த கூட்டத்தில் 1917 ஜூலை 31ஐ காலக்கெடுவாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.

       கராச்சி, கல்கத்தா போன்ற இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களுக்கு காந்தி வழக்கம்போல மூன்றாம் வகுப்பு ரயிலில் பயணமானார். அவரது பயணங்களில்  ரகசிய போலீஸார் விசாரணை, பின்தொடர்தல் ஆகியன தொடர்ந்தன. ஒருகட்டத்தில் இதைக் கவனித்த ரயில் பயணிகள் அவருக்குப் பாதுகாப்பாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுப் பாதுகாத்தனர். இப்பிரச்சினையில் வைஸ்ராயைச் சந்திக்க பெண்கள் தூதுக்குழு ஒன்றும் அனுப்பப்பட்டது. இந்தியாவில் ஜூலை 31க்கு முன்னதாகவே ஒப்பந்தத்தின் பேரின் தொழிலாளர்களை அனுப்பவதை நிறுத்தி அரசு அறிவிக்கை வெளியிட்டது.

       ஐரோப்பியர்களின் நெசவுத் தொழிலுக்குத் தேவையான நீலச்சாயம் (Indigo) அவுரி எனப்படும் தாவரத்திலிருந்து எடுக்கப்பட்டது. எனவே அவுரியைச் சாகுபடி செய்ய இந்திய விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஜெர்மனியின் செயற்கை நீலச்சாயம் சந்தைக்கு வந்தபிறகு அவுரிச் சாயத்தின் தேவை குறைந்தது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

          பீகாரின் சம்பராணில் அவுரிச் சாகுபடியில்தீன் கத்யாஎன்ற முறை நடைமுறையில் இருந்தது. விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் இருபதில் மூன்று பங்கை கட்டாயம் அவுரிப் பயிரிட ஒதுக்கவேண்டும் என்பதே இம்முறையாகும். இம்முறையிலிருந்து விவசாயிகளை விடுவிப்பதாகச் சொல்லிக்கொண்டு சட்டத்திற்குப் புறம்பான நிலுவைத்தொகையையும் வாடகை உயர்வையும் விவசாயிகள் மீது சுமத்தினார். இதற்கு எதிராக போராட்டம் வெடித்தது. விவசாயி ராஜ்குமார் சுக்லா விடாப்பிடியாக காந்தியை அங்கு அழைத்துச் சென்றார். வழக்கறிஞர் பிரஜ்கிஷோர் பாபு, இந்தியாவில் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத், மௌலானா மஜ்ருல் ஹக், பேரா.கிருபாளினி போன்றோர் அறப்போரில் துணைநின்றனர்.

        பீகாரின் திர்ஹூத் பகுதியிருந்த மோசமான நிலைகுறித்தும் காந்தி மேற்கொள்ளும் பணி எவ்வளவு இன்னல் மிகுந்தது என்பதையும் பேரா.கிருபாளினி முன்பே சொல்லியிருந்தார். அவர் பீகாரிகளுடன் நெருங்கிப் பழகியிருந்ததால் காந்தி வருவது குறித்த தகவல்களையும்  அவர்களிடம் தெரிவித்திருந்தார்.

      சம்பராண் விவாசாயிகளின் நிலையையும் தோட்ட முதலாளிகளின் விவாசாயிகளுக்கு எதிரான செயல்பாடுகளையும் அறிய வேண்டியது காந்தியின் பணி என்றாலும் தோட்ட முதலாளிகளின் கருத்துகளை அறிய விரும்பினார். காந்தி வெளியாள் என்பதால் இதில் தலையிட உரிமையில்லை என்றும் எதுவும் தேவையெனில் எழுத்துமூலம் தெரிவித்துப் பெற்றுக்கொள்ளலாம் என்று முதலாளிகள் தரப்பில் சொல்லப்பட்டது. சம்பராணை விட்டு வெளியேறவேண்டும் என்ற காவல் ஆணையரின் உத்தரவிற்கு முரணாக பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கச் சென்ற காந்தியிடம் மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் விசாரணையை ஒத்திவைக்க அரசு வழக்கறிஞர் கோரிக்கை வைக்க காந்தியோ குற்றத்தை ஒப்புக்கொண்டு உடன் விசாரிக்க விண்ணப்பித்தார். வேறுவழியின்றி இறுதியில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது. சம்பராண் சத்தியாகிரகம் என்ற பெயரில் பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியில் விரிவான நூலொன்றை எழுதியுள்ளார். அதன் ஆங்கிலப் பதிப்பும் அப்போதே வெளியானது.

      மாவட்ட ஆட்சியர் ஹேகாக் அவர்களை காந்தி சந்தித்தார். அவர் நல்லவராகவும் நியாய உணர்வுடனும் செயல்பட்டார். பார்க்க விரும்பும் ஆவணங்களைப் பார்வையிடலாம் என்றும் எப்போது வேண்டுமானாலும் தன்னைச் சந்திக்கலாம் என்கிற அனுமதியையும் தந்தார். அறவழி சட்டமறுப்பில் சம்பராண் சத்தியாகிரகம் இந்தியாவிற்கு முதலாக அமைந்தது. எல்லா இதழ்களும் இது குறித்து எழுதின. காந்தியின் விசாரணைக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.  இருப்பினும் மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டிய விவகாரம் என்பதை உணர்ந்த காந்தி அதன்படியே செயல்பட்டார்.

      பீகாருக்குத் தேவையான  தொடக்கக் கல்வி மற்றும் சுகாதாரப்பணிகள் குறித்த திட்டங்களையும் சத்தியாகிரகத்தின் ஊடாக செயல்படுத்தினர். இதற்கு ஆசிரியர்களும் மருத்துவர்களும் தேவைப்பட்டனர். டாக்டர் தேவ் -ன் கீழ் அவந்திகாபா கோகலே, பாபா சாகிப் சோமன், ஆனந்திபா வைஷம்பாயண், சோட்டாலால், சுரேந்திரநாத், கஸ்தூரிபா, தேவதாஸ், துர்க்கா தேசாய், மணிபென் போன்றோர் ஆசிரியர் மற்றும் தொண்டர் படையணியாகச் செயல்பட முன்வந்தது. இவர்களது பணிகள் மூலம் கிராம மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றனர். இதைக்கண்டு அஞ்சிய தோட்ட முதலாளிகள் காந்திக்குப் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கத் தொடங்கினர்.

       விவசாயிகளின் பிரச்சினைகளை கண்டறிந்துத் தீர்க்க சர் பிராங்க் ஸ்லை தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் காந்தியும் ஓர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். விவசாயிகளின் பாதிப்புகளைக் கண்டறிந்த குழு அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்று தீன் கத்யாமுறையை ரத்து செய்யக் குழு பரிந்துரைத்தது. தொடர்ந்து பீகாரில் தொண்டாற்ற காந்தி விரும்பினார். ஆனால் காலம் அவரை நாடெங்கும் துரத்தியடித்தது. 

       குஜராத்தில் கேடா மாவட்ட விவசாயிகள் போதிய விளைச்சலின்றி நிலவரி கட்டமுடியாமல் அவதிப்படும் நிலை காந்தியின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. இன்னொருபுறம் குறைவான கூலியுடன் அகமதாபாத் ஆலைத் தொழிலாளர்கள்  போராட்டம் நடைபெற்று வந்தது. இதற்கு வழிகாட்டவும் காந்தியின் உதவியை நாடினர்.

        நெசவாலைத் தொழிலாளர்களை வேலைநிறுத்தம் (1918) செய்ய காந்தி அறிவுறுத்தினார். கூடவே அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. எந்தச் சூழலிலும் வன்முறையில் இறங்கக்கூடாது, வேலைக்குச் செல்வோரைத் தடுக்கக்கூடாது, பிறரிடம் பிச்சை எதிர்பார்க்கக்கூடாது, வேலைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடித்தாலும் உறுதியுடன் இருக்க வேண்டும், வேறுவகையில் உடலுழைப்பைச் செலுத்தி வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதே அந்த நிபந்தனைகள் ஆகும்.  இப்போராட்டத்தில் வல்லபாய் படேல், சங்கர்லால் பங்கர் முதலியோர் காந்திக்கு அறிமுகமாயினர். சபர்மதி நதிக்கரையில் மரத்தடியில் நாள்தோறும் வேலை நிறுத்தக் கூட்டங்கள் நடைபெற்றன.

      இரண்டு வாரங்கள் ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது. அதன்பின்னர் அவர்களுடன் சோர்வு ஏற்பட்டது. சிலர் பணிக்குத் திரும்பினர். தென்னாப்பிரிக்காவை போலன்றி காந்திக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. வேலைக்குப் போவோர் திரும்பும்வரை தான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அனுசுயா பென் போன்றோர் காந்தியிடம் உண்ணாவிரதம் வேண்டாம் என்று மன்றாடினர். அவர்கள் காந்தியுடன் சேர்ந்து முதல்நாள் உண்ணாவிரமிருந்தனர். காந்தி கட்டாயத்தின் பேரில் அவற்றை நிறுத்தச் செய்தார்.

       மூன்று நாட்கள் உண்ணாவிரதம் நடந்தபிறகு ஆலை முதலாளிகள்  இறங்கிவந்தனர். அவர்கள் தொழிலாளிகளுக்கு இனிப்பு வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தனர். இவ்வாறாக 21 நாட்கள் வேலைநிறுத்தம் முடிந்து சமரச முடிவு எட்டப்பட்டது.

       இதற்கிடையில் அகமதாபாத் அருகே கோச்ராப் என்னுமிடத்திலிருந்த காந்தியின் ஆசிரமத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. அங்கு பிளேக் நோய் பரவிய காரணத்தால் ஆசிரமத்தை வேறிடத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. அகமதாபாத் வணிகர் பூஞ்சாபாய் ஹிராசந்த் உதவியுடன் சில நாள்களிலேயே சபர்மதியில் புதிய இடம் ஏற்பாடானது.  

         காந்திக்கு கொஞ்சம் மூச்சுவிடக்கூட நேரமில்லை. அகமதாபாத் நெசவாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் முடிவுற்றவுடன் கேடா (கேதா) சத்தியாக்கிரகத்தில் (1918) ஈடுபட வேண்டியதாயிற்று. விளைச்சல் இல்லாது போனதால் பஞ்சம் ஏற்படக்கூடிய நிலையில் நிலவரியை ரத்து செய்யக் கோரிக்கை எழுந்தது. அமிர்தலால் தக்கர், மோகன்லால் பாண்டியா, சங்கர்லால் பரீக், வித்தல்பாய் பட்டேல், சர் கோகுல்தாஸ், ககன் தாஸ் பரீக் போன்றோர் இப்போராட்டத்தில் தங்களுக்குரிய பங்காற்றினர். இப்போராட்டம் குறித்து சங்கர்லால் பரீக் விரிவான நூலொன்றை எழுதினார். வல்லபாய் படேல், சங்கர்லால் பங்கர், அனுசுயா பென், இந்துலால் யாக்ஞிக், மகாதேவ தேசாய் போன்றோர் காந்தியின் தோழர்களாய் செயல்பட்டனர்.

      எங்கள் கிராமத்தில் விளைச்சல் கால்பங்கிற்கும் குறைவாக உள்ளது. அடுத்த ஆன்டுவரை நிலவரை வசூலை நிறுத்த வேண்டும். அதுவரையில் நாங்கள் நிலவரித் தீர்வை செலுத்த மாட்டோம் என்ற உறுதிப்பாட்டுடன் சத்தியாகிரகம் தொடங்கியது. சம்பராண் ஒரு மூலைமுடுக்கில் உள்ளது. போராட்டத்திற்கும் அதிகம் பேர் வரவில்லை. கேடா அப்படியல்ல. இதைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளியாயின; நல்ல கூட்டம் கூடியது.

      அரசு தீர்வை செலுத்தாதவர்களின் விளைச்சலை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. சங்கர்லால் பரீக்கின் சாகுபடியாளர் ஒருவர் தீர்வை செலுத்தினார். உடனே அந்நிலத்தை பரீக் தருமத்திற்கு அளித்தார். இவ்வாறு போராட்டம் தீவிரமடைந்தது. வெங்காய விளைச்சலை அப்புறப்படுத்துவது என்ற முடுவு எடுக்கப்பட்டது. மோகன்லால் பாண்டியா தனது சில நண்பர்களுடன் இந்தக் காரியத்தில் ஈடுபட்டுக் கைதானார். அவர் கைது செய்து அழைத்துச் செல்லும்போது மக்கள் ஊர்வலமாகத் திரண்டு அவருக்குவெங்காயத் திருடர்எனும் பட்டமளித்து கௌரவித்தினர்.

       போராட்டக்காரர்களில் சில களைத்துப் போனது உணமைதான்.  உறுதியுடன் இந்ருதவர்களைக் காப்பாற்றுவதற்காக போராட்டத்தை முடிக்க உரிய தருணம் கிடைத்தது. பணவசதியுள்ளவர்கள் தீர்வை செலுத்தினால் ஏழைகளிடமிருந்து வசூல் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதை ஏற்று போராட்டம் முடிவுக்கு வந்தது. இதைப் பெரிய வெற்றி என்று சொல்லமுடியாவிட்டாலும் குஜராத் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட ஒரு தொடக்கமாக இருந்ததை மறுக்க இயலாது.       

       இத்தகைய தொடக்கக் கால சத்தியாக்கிரகங்களின் வழியாக இந்தியாவிற்கு ஒரு புதிய பாதையைக் காட்டினார். அகிம்சை, அறவழி போன்ற நீண்ட பாரம்பரியம் நம்மிடம் இருந்தாலும் இடையில் வழக்கொழிந்துபோன இந்தக் கருத்தியலை மீட்டு இந்தியாவை அத்திசையில் பயணிக்க வைத்த பெருமை மகாத்மா காந்தியைச் சாரும்.

(தொடரும்…)

நன்றி: ‘பொம்மி’ – சிறுவர் மாத இதழ் செப்டம்பர் 2023