சனி, டிசம்பர் 06, 2025

12 இராமாயணக் கதைகள்

 

வரலாறும்  தொன்மமும்  - தொடர்

12  இராமாயணக் கதைகள்

மு.சிவகுருநாதன்


 

           புராண, இதிகாசக் கதைகளை நாம் என்றுமே வரலாறாக ஏற்றுக்கொள்ள இயலாது. இருப்பினும் இவை வரலாறாக மாற்றப்படும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவைகள் நம்மீது செலுத்தும் ஆதிக்கம் அளவிட முடியாதது. இக்கதைகள் வரலாற்றின் இடைச்செருகலாக ஆங்காங்கே நுழைக்கப்படுவதும் பலர் அவற்றை விவரமறியாமல் ஒப்பித்து வருவதையும் பார்க்கிறோம். மநு நீதிச் சோழன் கதை இவ்வகையில் இருப்பதை நாம் அறிவோம்.  கீழடி அகழ்வாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய அரசு தொல்லியல் துறை மூலம் சரஸ்வதி நதியைத் தேடிக்கொண்டுள்ளது. சூழலியல் பாதிப்புகள் பற்றி எதையும் கவனத்தில் கொள்ளாத இந்திய உச்சநீதி மன்றம் இராமர் பாலம் என்றவுடன் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்திற்கு உடன் தடை வழங்கியது நினைவிருக்கலாம். கடலடி நீண்ட மணல் திட்டுத் தொடரான ஆதம் பாலத்தை இராமர் பாலம் என்று நம்ப வைப்பதில் ஆளும் அதிகார வர்க்கம் வென்றுள்ளது. இது இன்றைய வெறுப்பரசியலுக்கு உதவும் வழியாகவும் உள்ளது.

         ரிக், யஜூர், சாம, அதர்வண உள்ளிட்ட நான்கு வேதங்கள், உபநிடதங்கள், பிரமாணங்கள், ஆரண்யங்கள் ஆகியவை சுருதிகள் என அழைக்கப்படுகின்றன. இன்று இவை எழுத்து வடிவம் பெற்றிருப்பினும் வேத காலத்தில் வாய்மொழியாகப் பரப்பப்பட்டவை. பாராயணம் செய்து பரப்பப்பட்ட இந்த வாய்மொழி மரபே நிலையான ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது. இராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்கள், புராணங்கள், ஆகமங்கள் போன்றவை எழுதப்பட்ட பிரதிகள் ஆனாலும் அடிக்கடி மாற்றத்திற்கு உட்படுபவை என்றும் வரையறுக்கப்படுகின்றன. வாய்மொழி மரபை உயர்த்தி எழுத்து மரபை தாழ்த்தும் போக்கு இதனுள் இருப்பதும் எல்லாம் கடவுளால் அருளப்பட்டது என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கவும் இவ்வாறான கட்டமைப்புகள் உருவானதை நாம் அவதானிக்கலாம்.

       இராமாயணமும் மகாபாரதமும் இந்திய இதிகாசங்களாகப் போற்றப்படுகின்றன. இவற்றின் புனைவுகளின் வழியே மாய எதார்த்தவாதத்தைக் கண்டடையலாம். ஆனால் இவற்றின் வழியாக வரலாற்று மூலாம் பூச நினைப்பது மிகவும் ஆபத்தானதாகும். இக்கதைகளிலுள்ள புனைவுகளை அரசியல், சமூக, பொருளாதாரச் சூழல்களோடு ஒப்பிட்டு ஆய்வுகள் செய்யலாம். ஆனால் அவை என்றுமே வரலாறாக மாறிவிடாது. இது தமிழ்க் காப்பியங்களுக்கும் பொருந்தும். சிலப்பதிகாரத்தில் கண்ணகி பார்ப்பனர்கள், பசுக்கள் தவிர்த்த பிறர் அடங்கிய  மதுரையை எரிக்கும் நிகழ்வையும் இத்துடன் ஒப்புநோக்கலாம்.  வட இந்தியாவில்  வால்மீகியின் லங்காஉள்ளதை மார்க்சிய வரலாற்று அறிஞர்களும் இதர வரலாற்று ஆசிரியர்களும் விளக்குகின்றனர். கங்கைச் சமவெளியின் அரசு உருவாக்கத்திற்கும் இனக்குழு சமூகங்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே இராமாயணமாக உருப்பெற்றது என்ற கருத்தும்  உண்டு.

       இராமாயணக் கதையை உண்மை வரலாறாக நம்பிய ஒருவர் அக்கதை வெறுப்பரசியலுக்குப் பயன்படும்போது மனம் வெதும்பி 1930களில் ‘Ramayana and Lanka’ சுமார் 100 பக்கம் கொண்ட ஆங்கில நூலை எழுதுகிறார். இராவண காவியம் எழுதிய புலவர் குழந்தை போல  இவர் ஒரு நாத்திகரும் இல்லை. அவர் டி.பரமசிவ அய்யர் எனும் ராம பக்தர். பெங்களூர் அச்சகத்தில் 1940இல் அச்சிடப்பட்டு இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூல் இரு பகுதிகளாக உள்ளது. வரலாற்றில் வெறுப்பரசியல் விதைக்கப்படும்போது சமூக நல்லிணக்கத்தையும் மனித மாண்புகளையும் அறம்சார் வாழ்முறைகளைப் பின்பற்றோர் இவற்றைக் கண்டும் காணாது இருந்துவிட இயலாது என்பதற்கு இவர் மிகச்சிறந்த  எடுத்துக்காட்டாகிறார்.

       டி.பரமசிவ அய்யர் மைசூரு சிவசமுத்திர நீர்மின் சக்தித் திட்டத்தை நிறுவிய பொறியாளர் சர்.கே. சேஷாத்ரி அய்யரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். இளமைப்பருவத்திலிருந்து இராமயணத்தை ஆழமாகப் பயின்று பாராயணம் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவர். இந்நூலைப் பற்றி விரிவான அறிமுகத்தை பேரா..மார்க்ஸ் சஞ்சாரம்இதழில் (ஜன-மார்ச் 2008) இதழில் எழுதியிருந்தார். பின்னர் இந்நூல் இராமாயண அரசியல் என்ற பெயரில் பாரதி புத்தகாலயத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. தற்போது (2019) சிந்தன் புக்ஸ் இந்நூலை வெளியீட்டில் கிடைக்கிறது.

        கவிஞர் ரவீந்தரநாத தாகூர் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, அயோத்தியின் அரசி சீதையை ஒரு 10 தலை ராவணன் கடத்திச் சென்று சிறைவைத்தது உங்களுடைய தீவில்தான் என்று சிலோன் மக்களிடம் சொன்னதாகக் கூறுகிறார். தெய்வீகப் பன்புகள் நிரம்பிய தாகூர் மட்டுமின்றி ஜவகர்லால் நேரு, ராஜாஜி போன்றோரும் இம்மாதிரியான கருத்துகளைச் சொன்னதும்  பரமசிவ அய்யரை பெரிதும் வருத்தியது. இருவரும்லங்காவையும் சிலோனையும் ஒன்றாகவே குறிப்பிட்டனர். 1934இல் இலங்கையிலிருந்து திரும்பிவரும் வழியில் சென்னையில் நேருவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில், நேரு அனுமனைப் போல இலங்கையிலிருந்து பறந்து வந்ததாகவும் இராமாயணப் போர் நடத்தாமல்  தனது முயற்சிகளில் நேரு வெற்றி பெறுவார் எனவும் ராஜாஜி வாழ்த்திப் பேசினார்.

          பொறுப்பான பதவிகளில் உள்ளோர் இவ்வாறு இரு நாடுகளுடையே பகைமையையும் மனக்கசப்பையும் உண்டாக்கும் வகையில் பேசுவது பரமசிவ அய்யரை மிகவும் பாதித்தது. ஏற்கனவே பவுத்த சிங்களர்களுக்கும் பிராமணமயமான தமிழர்களுக்கும் இடையே பகையுணர்வு மேலோங்க சோழ, பாண்டிய மன்னர்கள் மேற்கொண்ட படையெடுப்புகள், அவர்கள் அழித்த பவுத்த கலாச்சாரச் சின்னங்கள் போன்றவை காரணமாக அமைந்ததையும் எடுத்துக்காட்டுகிறார். இத்தகைய சூழலின் பின்புலத்தில், தனக்கு மிகவும் பிடித்த ஆதி காவியம்என அழைக்கப்படும் இராமாயணக் கதையின் புவியியலை ஆராயத் தொடங்கினார். பிரிட்டிஷ் அரசின் புவியியல் நுண் விளக்க வரைபடத்தாள்களைப் பயன்படுத்தும் பயிற்சி பெற்ற இவர், பிரிட்டிஷ் அரசின் சர்வேதுறையிலிருந்து 63ஆம் எண்ணுள்ள வரைதாளை ஆராய்ந்தபோது  வால்மீகி இராமாயணத்தில்  வரும் கங்கையின் வடகரைப் பகுதிகளாகிய டோன் (தமஸா), பிஸ்வி (வேடஸ்ருதி), கும்தி (கோமதி), சாய் (சயந்திகா), சிங்ரார் (ஸ்சிறிங்கவேதபுரம்) என ஏறத்தாழ அவ்வாறே அழைக்கப்படுவது இவருக்கு ஆச்சரியமூட்டியது.

           அயோத்தியிலிருந்து லங்காவரை ராமர் கடந்த பாதையைத் அவர் செய்த ஆய்வுகளின் வழி கண்டடைகிறார். தாமோ மாவட்டத்தின் சோனார் ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளான கோப்ரா, பிவாஸ் ஆகியவற்றால் வண்டல் நிலங்களில் கோண்டுபழங்குடியினருக்கும் அப்பகுதிகளில் குடியேறிய ஆரியர்களுக்கும் இடையில் நடந்த போராட்டமே இராமாயணம் என்கிற முடிவுக்கு வருகிறார். இதற்கு ஆதாரமாக விரிவான நிலவரைபடங்கள், இராமாயணத்தில் காணப்படும் புவியியல் பகுதிகளைக் குறிப்பிடும் சர்வே வரைபடங்களின் எண், அட்ச, தீர்க்கக் குறியீடுகளைக் காட்டும் அட்டவணைகள் போன்றவை நூலில் பின்னிணைப்பாக  இணைக்கப்பட்டுள்ளன.

         நூலின் இரண்டாம் பகுதியில் இராமன் வாழ்ந்த ஆண்டுகள், இராமன் நாடு கடத்தப்பட்டதற்கான காரணம், வால்மீகியின் மானுடப் பின்புலம், பெண்கள் குறித்த அவரது பார்வை, சீதை லட்சுமணனை அவமானப்படுத்தியது, காயத்ரி இராமாயணம் ஆகிய பிரச்சினைகள் சார்ந்து  தமது ஆய்வுகளை வெளிப்படுத்துகிறார்.  

         கி.பி.11 ஆம் நூற்றாண்டு வரையில் இலங்கையின்லங்காவும் இராவணனின் லங்காவும் ஒன்றாகப்படவில்லை. ஹர்ஷரின் இரத்னாவளி (கி.பி.608-648), போஜ மன்னனின்  ஜம்பு ராமாயணம் (கி.பி. 1010 - 1050) போன்றவற்றில்  சிங்கள நாடான சிலோனை லங்கா என்று குறிப்பிடவில்லை.  அங்கு ஆண்ட பவுத்த அரசு பற்றிய குறிப்புகள் உண்டு. பிற்காலச் சோழர்கள் காலத்திற்குப் பிறகுதான் இராமயண லங்காவும் இன்றைய சிலோனும் ஒன்றானது என்பதை நிறுவுகிறார்.

      வால்மீகி இராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில் இராவணனின் இலங்கையும் இன்றைய சிலோனும் ஒன்று என பொருள்படும் குறிப்பு உள்ளது. சிலோன் மீது படையெடுத்து ஆக்ரமித்து, தலைநகர் அனுராதபுரத்தைக் கைப்பற்றி சிங்கள மன்னனை வீழ்த்திய பிற்காலச் சோழ மன்னனை பாராட்டும் நோக்கத்தில் இவ்வரிகளை இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டன என்றும் சொல்கிறார். பிற்காலச் சோழ அரசர்களின் காலத்தில் வாழ்ந்த கம்பர் தனது இராமாயணத்தில் லங்கை தமிழ்நாட்டிற்குத் தெற்கே இருப்பதாக வரையறுப்பதில் வியப்பில்லை.

       சிவன் அசுரர்களின் கடவுள். இராவணன் லிங்க வழிப்பாட்டில் உள்ளவன். திருமாலின் அவதாரமான இராமன் சென்ற இடத்தில் எல்லாம் லிங்கத்தை நிறுவி வழிபட்டதாக சமயவெறி பிடித்த சைவர்கள் புனைந்த கதை என்கிறார் பரமசிவ அய்யர். இராமேஸ்வரத்தில் லிங்கத்துடன் கோயில்  கட்டப்பட்ட காலத்தில்தான் மணல் திட்டுத் தொடரான ஆதம்பாலம்  இராமர் பாலமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை நிறுவுகிறார்.

     இராமன் புத்தருக்கு முற்பட்டவன் என்பதை அனைவரும் ஏற்கும் நிலையில்  இராமாயணத்தில் புத்தரை திருடன், நாத்திகன் என்று இழிவுபடுத்தும் வரிகள்  அயோத்தியா கண்டத்தில் மதவெறியர்களால் இடைச்செருகலாக நுழைக்கப்பட்டது என்று தெளிவுபடுத்துகிறார்.  சிங்கள தீபம் திரிகூட லங்காவாகவும், மகேந்திர மன்னர்கள் இராவணர்களாகவும், பவுத்த சிங்களர்கள் அசுரர்களாகவும், புத்தர் திருடராகவும் புனையப்பட்டது கி.பி. 11 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குவதாகக் கணிக்கிறார்.

     பிரயாகை என்பது  கங்கையும், யமுனையும் சேர்ந்து உருவான ஒரு பெரிய ஏரி என்றும் வடக்கே பன்னா மலைதொடருக்கும் தெற்கே விந்தியமலைக்கும் இடைப்பட்ட பகுதியே தண்டகாரண்யம் ஆகும். நர்மதை நதியைக் கடந்து இராமன் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை.      இராமாயணத்தின் முக்கிய நிகழ்வுகள் இராமனின் பஞ்சவடியில் தொடங்கி இராவணனின் லங்காவில் முடிகிறது. இராவணன் கழுதை பூட்டிய ரதம் ஒன்றிலேயே சீதையைக் கடத்தி வந்ததாகச் சொல்கின்றனர். மகேந்திர மலைக்கும் இராவண லங்காஅமைந்திருந்த சுவேல மலைக்கும் இடையேயுள்ள பகுதி இராவணன் கழுதை பூட்டிய ரதத்தால் கடந்தான். அனுமன் அந்த நீர்ப்பரப்பை நீந்தியே கடந்தான். இராமன் வானர சேனையின் உதவியோடு தற்காலிகப் பாலம் போட்டுக் கடந்தான்.

      இவையிரண்டிற்கும் இடையேயுள்ள 100 யோஜனைத் தொலைவை  கோடை மற்றும்  வசந்த காலங்களில் கழுதை வண்டியால் கடக்கக்கூடிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.  மற்ற நேரங்களில்தான்  நீந்தியோ, பாலம் கட்டியோ  கடக்க வேண்டியுள்ளது. எனவே அது சமுத்திரமல்ல. தனுஷ்கோடியையும் தலைமன்னாரையும் இணைக்கும் 30 கல் தொலைவுள்ள கடற்பகுதியுடன் இராமயணக் கணக்குகள் பொருந்திவரவில்லை. நீண்ட மணல் திட்டுகளின் (டோம்போலா) தொடரான ஆதம் பாலம் வடமேற்குத் திசையிலிருந்து வடகிழக்குத் திசையில் அமைகிறது. ஆனால் வால்மீகி இராமாயணம்  குறிப்பிடும், வானர சேனைகளின் உதவியோடு இராமன் கட்டியதாகச் சொல்லப்படும் பாலம் மகேந்திரகிரிக்கும் சுவேலகிரிக்கும் இடையில் 100 யோஜனைத் தொலைவு வடக்குத் தெற்கு திசையில் அமைந்துள்ளது. திசை, தொலைவு ஆகியவற்றிலும் வேறுபாடு உள்ளது. மலையுச்சி நகரமான வால்மீகி குறிப்பிடும்  லங்காஇன்றைய இலங்கை அல்ல. கோதாவரி லங்கா, சோனா லங்கா என்று ஆறுகளுக்கு இடையில் உள்ள திட்டுக்களை லங்காஎன்று அழைக்கும் நிலை இருந்ததையும் குறிப்பிடுகிறார். 

      பழங்குடியினத்தைச் சேர்ந்த கோண்டுகள் இங்கு அசுரர்கள்  ஆகின்றனர்.  பார்ப்பனீய மயமான விபீஷணனும் அவனது வழித்தோன்றல்களும் ராஜகோண்டுகள் எனவும் பிற கோண்டு இனமக்கள் துர்கோண்டுகள் எனவும் அழைக்கப்பட்டனர். இன்றும் இப்பகுதிகளில் இராவண வம்சிகள் என்றும் அழைக்கும் நிலையும் உள்ளதை எடுத்துக்காட்டுகிறார்.

      சாத்பூரா, சோட்டா-நாக்பூரி பீடபூமியின் அடர்ந்த காடுகளில் கோண்டுகளோடு கோர்க்கர்கள் எனப்படும் இனக்குழு மக்கள் உள்ளனர். இவர்களை வழிப்பறி செய்யும் குற்றப் பரம்பரையினர் என்று  ஆங்கிலேயர்கள் குறிப்பிடுகின்றனர். கோண்டுகள் கோண்டி எனப்படும் திராவிட மொழியைப் பேசுபவர்களாகவும் கோர்க்கர்கள் முண்டா மொழி பேசுபவராகவும் உள்ளனர். வால்மீகி இராமாயணத்தில் வரும்  வானரர்கள் கோர்க்கர்கள் என்பது இவர் வந்தடையும் முடிவாகும். வளமிக்க ஜனஸ்தானத்தைக் கோண்டுகளிடமிருந்து ஆரியர்கள் கைப்பற்றியதற்கான போர் இராம-இராவண யுத்தமாக கதைக்கப்படுகிறது.

      இதிகாசங்களை நிலைநிறுத்துவதும் போற்றிப் புகழ்வதும் நமது பணியல்ல. பன்னெடுங்காலமாக மக்கள் மத்தில் புழங்கிவரும் இக்கதைகளுக்கு பல்வேறு பரிமாணங்கள் உண்டு. பலநூறு பார்வைகளும் வேறுபட்ட கதை சொல்லும் முறைகளும் இருக்கின்றன. இவை பழங்காலக் கற்பனை வளத்திற்கும் சான்றாக அமைகின்றன. அதைத் தாண்டி இவற்றிற்கு அரசியல் முக்கியத்துவம் அளித்து அதன் போக்கில் வெறுப்பரசியலை விதைப்பது இன்றைய அரசியல் வழிமுறையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்னால் வெறுப்பரசியலுக்கு எதிரான ஓர் ஆய்வாக இந்நூல் அமைவதை நாம் உணரலாம். இம்மாதிரியான ஆய்வுகள் நமது மனங்களில் சிறிது சலனத்தை ஏற்படுத்தினால் அதுவே பெருவெற்றியாகும். எழுத்தறிவு அதிகம் இல்லாத ஒரு சமூகத்தில் இவ்வாறு பரப்பப்படும் கதைகளின் தாக்கம் மிகுதி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவற்றிலிருந்து விடுபட்டு, விலகி நின்று பகுத்தறிவுடன் சிந்தித்துச் செயல்படுவதே  அனைவருக்கும் உகந்த வழிமுறையாக இருக்க இயலும்.      

 

-         முற்றும்.

(ஜனவரி 2025 முதல் டிசம்பர் 2025 முடிய 12 மாதங்கள்பொம்மி’ – சிறுவர் மாத இதழில் வரலாறும்  தொன்மமும்என்ற பெயரில் வந்த தொடர் இக்கட்டுரையுடன் நிறைவடைந்தது. ஆதரவளித்த பொம்மிஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் நன்றி.)

நன்றி: ‘பொம்மி’ – சிறுவர் மாத இதழ் டிசம்பர் 2025

திங்கள், டிசம்பர் 01, 2025

எஸ்ஐஆர் எனும் ஜனநாயக மோசடி

 

எஸ்ஐஆர் எனும் ஜனநாயக மோசடி

மு.சிவகுருநாதன்


 

 

         நவம்பர் 08, 2016 இரவில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது; இவை வெறும் காகிதம் என்று அறிவித்ததைப் போன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது எஸ்ஐஆர் அறிவிப்பின் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் அக்டோபர் 27, 2025 நள்ளிரவுடன் வாக்காளர் பட்டியல்களை முடக்கிச் செல்லாக் காசாக்கினார். 51 கோடி வாக்காளர்களின் அரசியல் சாசன உரிமையான வாக்குரிமை ஒரே உத்தரவில் பறிக்கப்பட்டுவிட்டது. பாசிசத்தின் கொடுங்கரங்கள் இவ்வாறுதான் நீளும் என்பதை கடந்தகால வரலாறுகள் நிருபிக்கின்றன. இனி அவர்கள் குடியுரிமையை உறுதி செய்து விண்ணப்பித்துத்தான் வாக்குரிமையை மீளப் பெறமுடியும். இவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. உண்மையில் இது வாக்காளர் பட்டியல் சரிபார்ப்போ, திருத்தமோ அல்ல; குடியுரிமைச் சட்டங்களை சட்டத்திற்குப் புறம்பாக கொல்லைப்புறமாக அமல் செய்யும் மோசடி வேலையில்  அரசியல் சாசன அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் வீழ்ச்சியாக பார்க்க வேண்டிய நிகழ்வாகும்.

         தேர்தல் ஆணையம் சிறப்புத் திருத்தம் (Special Intensive Revision - SIR) என்ற பெயரில் ஜனநாயகத்தை சவக்குழிக்குள் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது வழக்கமாக நடக்கும் ஒன்று என்றாலும் 2002-2004 காலகட்டத்தில் செய்த திருத்தத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அப்போது ஆதார் பரவலாக இல்லை. தற்போது ஆதார் இருந்தும் அதை ஏற்க மறுக்கின்றனர். ஆதாரை ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நிபந்தனைக்குட்பட்டு ஆதாரை ஏற்கிறோம் என்கின்றனர். எங்களுக்கு குடியுரிமை ஆவணங்களே வேண்டுமென தேர்தல் ஆணையம் அடம்பிடிக்கிறது. இருக்கின்ற வாக்காளர் பட்டியலை முடக்கிவிட்டு புதிதாக அனைவரையும் விண்ணப்பிக்கச் சொல்கிறது. உண்மையில் இந்தியக் குடிமகனின் சட்டப்பூர்வ வாக்குரிமையைப் பறிக்க தேர்தல் ஆணையத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

         மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் அடையாள அட்டை, ஜூலை 1, 1987 க்கு முன்னர் இந்தியா அரசு, உள்ளூர் அதிகாரிகள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது ஆவணம், பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடும்பப் பதிவேடு, நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ் ஆகிய 11 ஆவணங்களை மட்டும் பீகாரில் ஏற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆதாரை அடையாள ஆவணமாக மட்டும் ஏற்பதாகத் தெரிவித்துள்ளனர். 01.07.2025ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதியை கணக்கீட்டுப் படிவத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களில் ஒன்றாகவும் குறிப்பது விசித்திரமாக உள்ளது.

       இவ்வாறு செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கிறதா என்பது கேள்விக்குரியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 169இன்படி உரிய சட்டத் திருத்தங்களை அரசிதழில் வெளியிட்டு முறைப்படி செயல்படுத்த வேண்டும். ஆணையம் சுதந்திரமான அமைப்பு எனினும் தன்னிச்சையாக செயல்பட அரசியல் சட்டத்தில் இடமில்லை. நமது அரசியல் சாசனப்படி சுயேட்சையாக இயங்க வேண்டிய அமைப்புகள் அரசியல் சாசனத்தை மீறியும்  நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்டும் செயல்பட முடியாது. தேர்தல் ஆணையர், குடியரசுத் தலைவர், ஆளுநர், சபாநாயகர் போன்றோர் அரசியல் சாசனத்திற்குக் கட்டுப்பட்டே இயங்கவேண்டும். இவர்களுக்கு அளிக்கப்படும்  அதிகாரங்கள் எல்லையற்றவை அல்ல; அவை வரம்பிற்குட்பட்டவை என்பதை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. இவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்கிற பாதுகாப்பைச் சலுகையாகப் பயன்படுத்தி அரசியல் சட்டத்தை மீறும் செயல்பாடுகளைத் தொடர்ந்து அனுமதிப்பது இந்திய ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறை அசாதாரண நேரங்களில் தீவிரமாகச் செயல்படுவதை Judicial Activism என்று சொல்வதைப்போல தேர்தல் ஆணையச் செயல்பாடுகளை வெறுமனே ECI Activism என்று எளிதாகக் கடந்துவிட இயலாது. உச்சநீதிமன்றம் போல் இவ்வமைப்புகள் இவ்வாறு செயல்படவும்  முடியாது. 

      தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணிகள் (SIR) நடைபெறவிருக்கின்றன. இவற்றில் விரைவில் தேர்தல் வரப்போவது காரணமாகச் சொல்லப்படுகிறது. இதுதான் முழுச்சிக்கலுக்கும் காரணமான ஒன்றாகும். அசாமில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருந்தாலும் குடியுரிமை சரிபார்க்கப்பட்டுவிட்டதால் அங்கு தீவிரத் திருத்தத்திற்கு அவசியமில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதிலிருந்து அவர்களது நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது.       இந்த 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் இருப்பதால் பீகாரைப் போன்று வாக்குத் திருட்டு வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

        நவம்பர் 4இல் தொடங்கி டிசம்பர் 4இல் சிறப்புத் திருத்தப்பணிகள் நிறைவடைந்து டிசம்பர் 9இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதில் திருத்தங்கள், விசாரணைகளை டிசம்பர் 9 முதல் 31க்குள் முடித்து பிப்ரவரி 7இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 6.41கோடி வாக்காளர்கள் உள்பட 51 கோடி இந்திய வாக்காளர்களின் வாக்குரிமையை இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் சரிபார்க்க முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களிலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தல் ஆணையம் ஒன்றிய ஆளும்கட்சியினருக்காக இம்மோசடியை செய்யத் துணிந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களுக்காகவே இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்கிற அய்யத்தில் நியாயமிருக்கிறது.

      இந்தியா கூட்டணிக் கட்சிகள் எஸ்ஐஆர் ஐ தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. ராகுல்காந்தி கர்நாடகா, அரியானா மாநிலங்களில் நடந்த வாக்குத் திருட்டுக்கான ஆதாரங்கள் அளித்தும் தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்கவில்லை. நாடாளுமன்றத்திற்கும் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமையிலிருந்து தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. சாதாரண  அரசியல் கட்சியைப்போல பொறுப்பின்றி நடந்துகொண்டது. தேர்தல் ஆணையத்திற்குப் பதிலாக ஆளும் பாஜக வழக்கமான வன்மத்துடன் இதை எதிர்கொண்டது. எஸ்ஐஆர் எதிர்ப்பில் திமுக முன்னணியில் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மு..ஸ்டாலின், கேரளத்தில் பினராயி விஜயன், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி போன்றோர் எஸ்ஐஆருக்கு எதிராக தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

        குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) ஆதரித்த அஇஅதிமுக பாஜகவிற்கு அடுத்தபடியாக எஸ்ஐஆர் ஐ மிகத் தீவிரமாக ஆதரிக்கிறது. இப்பணிகளில் மாநில அரசு அதிகாரிகள் ஈடுபடுவதால் மாநில அரசே பொறுப்பு என சிறுப்பிள்ளைத்தனமாக வாதிடுகிறது. இதே கருத்தை வலியுறுத்தி தவெக ஆர்ப்பாட்டம் நடத்திய வேடிக்கையையும் நாம் பார்த்து வருகிறோம். பீகாரில் நீக்கப்பட்ட 47 லட்சம் வாக்காளர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்கிறார்  அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை. தேர்தல் ஆணையத்திற்குப் பதிலாக திமுகவையும் மாநில அரசையும் குற்றஞ்சாட்டி மடைமாற்றும் வேலைகளில் அதிமுக, தவெக போன்ற கட்சிகள் ஈடுபடுகின்றன. இவை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. இவர்களது வாக்குகளில் எவ்வளவு பறிபோகும் என்பது டிசம்பர் 9இல் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில்தான் தெரியவரும்.   

       உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள், வெளிநாட்டினர் ஆகியோர் தகுதியில்லாத வாக்காளராகக் கருதப்படுவர். இவர்களை நீக்கி வரைவுப்பட்டியல் டிசம்பர் 9 வெளியிடப்படுமாம்! அதற்கு முன்னதாக சுமார் 6.5 கோடி தமிழக வாக்காளர்களிடம்  படிவங்களை விநியோகித்து, அவற்றைப் பூர்த்தி செய்து திரும்பப் பெற்று அவற்றை கணினியில் உள்ளீடு செய்வதற்கு போதுமான அவகாசம் இருக்கிறதா என்பது தேர்தல் ஆணையத்திற்கும் அதைக் கண்டுகொள்ளாதா நீதிமன்றங்களுக்குத்தான் தெரியும். நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 முடிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மூன்று அல்லது நான்கு தடவை வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று படிவத்தைக் கொடுத்துத் திரும்பப் பெறுவார் என்று கதைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பதென்ன? தகுதியில்லாத வாக்காளர்களை நீக்கவே எஸ்ஐஆர் என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி. எஸ்ஐஆர் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஆணையத்தை வழிமொழிகின்றனர்; நடைமுறைச் சிக்கல்களுக்கும் பீகாரில் எதிர்கொண்ட சிக்கல்களுக்கும்  யாரும் முகம் கொடுப்பதில்லை.

        BLOக்கள் எதோ விளம்பர நோட்டீஸ் போல கண்ணில் தென்படுபவர்களிடம் வீசியெறிகிறார்கள். படிவத்தில் ஒரு நகல் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வருகிறது; சிலருக்கு இருப்பதில்லை. அப்படிவங்களைப் பூர்த்தி செய்வது குறித்து நூற்றுக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் எவற்றிலும் தெளிவில்லை. போட்டோ ஒட்டவேண்டுமா? 2002 திருத்தத்தில் இடம் பெற்ற எந்த உறவினர் விவரத்தை எழுதுவது? நகல் ஆவணங்களை இணைப்பதா, வேண்டாமா? ஒரு நகல் போதுமா? என்றெல்லாம் வினாக்கள் எழுகின்றன. முன்பு ஆதாரங்களை இணைக்க வேண்டும் என்றனர். தற்போது  கணக்கெடுப்பின்போது வாக்காளரிடமிருந்து எந்தவொரு ஆவணமும் சேகரிக்கப்படாது என்கின்றனர்.

        90%க்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவங்கள் அளிக்கப்பட்டதாக கணக்கு காட்டுகின்றனர். இது உண்மையல்ல. எவ்வளவு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டன என்பதில்தான்  உண்மையான வெற்றி இருக்கிறது. படிவங்களை விநியோகிப்பதில் உள்ள சிக்கல்களை காலதாமதமாக உணர்ந்த  தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பாக முகவர்களிடம் நாள்தோறும் 50 படிவங்களை அளிக்க முன்வந்துள்ளது. இதன்மூலமும் இக்குறுகிய காலத்தில் இப்பணிகளை முடிக்கமுடியும் என்று சொல்வதற்கில்லை.  

     திமுக அக்டோபர் 27இல் தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. அடுத்து நவம்பர் 2 இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜக, அஇஅதிமுக, பாமக (அன்புமணி) ஆகிய கட்சிகளைத் தவிர்த்து 60 அமைப்புகள் மற்றும் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 49 அமைப்புகள் இக்கூட்டத்தில் பங்கேற்று எஸ்ஐஆர் எதிர்ப்பில் ஒருங்கிணைந்து நின்றன. நாதக, தவெக, பாமக (இராமதாஸ்) ஆகியன அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை.

      பீகாரில் பல்வேறு குளறுபடிகளுடன் அரங்கேறிய இத்திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றம் கேட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் இதுவரை அளிக்கவில்லை. கிருஸ்மஸ், பொங்கல் போன்ற பண்டிகைகளை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் குறைவான  அவகாசத்துடன் இதை அமல் செய்வது சரியல்ல. தேர்தல் ஆணைய அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவுகளை வெளிப்படையாகப் பின்பற்றி, உரிய கால அவகாசமளித்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இந்த சிறப்புத் திருத்தத்தைச் செய்ய வேண்டும். இதை ஏற்காமல் வாக்குரிமைப் பறிப்பில் ஈடுபடும் தேர்தல் ஆணையத்தின் சட்டமீறலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

       அக்டோபர் 29இல் தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார். இதில் பங்குபெற்ற தேசிய, மாநிலக் கட்சிகளில் பாஜக, அதிமுக தவிர்த்து திமுக, விசிக, நாதக, தேமுதிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகிய 10 கட்சிகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தன. தமிழ்நாட்டில் எஸ்ஐஆருக்குப் பலமான எதிர்ப்பு இருப்பது இதிலிருந்து புலனாகிறது. 

        தேர்தல் ஆணையம் அரசியல், சாசனம், உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், மக்கள் மன்றம் எதையும் மதிக்காமல் செயல்படும் அமைப்பாக மாறுவது ஜனநாயகத்திற்கு ஏற்படையதல்ல. தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் மாறியபோது இவ்வமைப்பு ஆளும்கட்சிக்கு கைப்பாவையாக செயல்படும் என்று எதிர்பார்த்தோம்; அதுதான் இன்று நடக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்று தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கட்டுக்குள் வந்துவிட்டால் நாட்டின் எப்படி ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும்? பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக 1கோடிக்கும் மேற்பட்ட மகளிர் வங்கிக் கணக்குகளில்  ரூ. 10,000 வரவு வைக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சேவகமாகச் செய்தது. இதனை  நீதிமன்றங்களும் கண்டுகொள்ளாதது வேதனைக்குரியது. எஸ்ஐஆர், வங்கிக் கணக்கில் பணம் போன்ற காரணிகள் இல்லாமல் பீகாரில் பாஜக கூட்டணி வென்றிருக்க இயலுமா? இதுதான் நியாயமான தேர்தல் நடைமுறையா என்று வினவினால் உரியவர்களிடம் பதிலில்லை. 

      பீகார் தேர்தலுக்கு முன்னதாக முடிக்கப்பட்டிருக்க வேண்டிய எஸ்ஐஆர் வழக்கு   உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து தொடரப்பட்ட வழக்கு முடிவதற்குள் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிடும் என்றால் இந்தியக் குடிமகனின் இறுதி நம்பிக்கை நீதித்துறை என்பதும்  பொய்த்து விடுமா என்பது தெரியவில்லை. அரசியல் சாசனத்தை மீறி அரசுகளோ, நாடாளுமன்றமோ, அதன் அமைப்புகளோ செயல்படும்போது அவற்றை உரிய வழிகளில் தடுத்து, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் உச்சநீதிமன்றத்திற்கு இருப்பதாக இப்போதும் கூட மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போவதையும் ஜனநாயகம் பாசிசத்தால் வீழ்த்தப்படுவதையும் இனியும் வேடிக்கைப் பார்க்கக் கூடாது. 

 

நன்றி: 'பேசும் புதியசக்தி' மாத இதழ் டிசம்பர் 2025