திங்கள், டிசம்பர் 01, 2025

எஸ்ஐஆர் எனும் ஜனநாயக மோசடி

 

எஸ்ஐஆர் எனும் ஜனநாயக மோசடி

மு.சிவகுருநாதன்


 

 

         நவம்பர் 08, 2016 இரவில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது; இவை வெறும் காகிதம் என்று அறிவித்ததைப் போன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது எஸ்ஐஆர் அறிவிப்பின் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் அக்டோபர் 27, 2025 நள்ளிரவுடன் வாக்காளர் பட்டியல்களை முடக்கிச் செல்லாக் காசாக்கினார். 51 கோடி வாக்காளர்களின் அரசியல் சாசன உரிமையான வாக்குரிமை ஒரே உத்தரவில் பறிக்கப்பட்டுவிட்டது. பாசிசத்தின் கொடுங்கரங்கள் இவ்வாறுதான் நீளும் என்பதை கடந்தகால வரலாறுகள் நிருபிக்கின்றன. இனி அவர்கள் குடியுரிமையை உறுதி செய்து விண்ணப்பித்துத்தான் வாக்குரிமையை மீளப் பெறமுடியும். இவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை கிடைக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. உண்மையில் இது வாக்காளர் பட்டியல் சரிபார்ப்போ, திருத்தமோ அல்ல; குடியுரிமைச் சட்டங்களை சட்டத்திற்குப் புறம்பாக கொல்லைப்புறமாக அமல் செய்யும் மோசடி வேலையில்  அரசியல் சாசன அமைப்பான இந்தியத் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் வீழ்ச்சியாக பார்க்க வேண்டிய நிகழ்வாகும்.

         தேர்தல் ஆணையம் சிறப்புத் திருத்தம் (Special Intensive Revision - SIR) என்ற பெயரில் ஜனநாயகத்தை சவக்குழிக்குள் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது வழக்கமாக நடக்கும் ஒன்று என்றாலும் 2002-2004 காலகட்டத்தில் செய்த திருத்தத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அப்போது ஆதார் பரவலாக இல்லை. தற்போது ஆதார் இருந்தும் அதை ஏற்க மறுக்கின்றனர். ஆதாரை ஏற்றுக் கொள்ள உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நிபந்தனைக்குட்பட்டு ஆதாரை ஏற்கிறோம் என்கின்றனர். எங்களுக்கு குடியுரிமை ஆவணங்களே வேண்டுமென தேர்தல் ஆணையம் அடம்பிடிக்கிறது. இருக்கின்ற வாக்காளர் பட்டியலை முடக்கிவிட்டு புதிதாக அனைவரையும் விண்ணப்பிக்கச் சொல்கிறது. உண்மையில் இந்தியக் குடிமகனின் சட்டப்பூர்வ வாக்குரிமையைப் பறிக்க தேர்தல் ஆணையத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

         மத்திய/மாநில அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் அடையாள அட்டை, ஜூலை 1, 1987 க்கு முன்னர் இந்தியா அரசு, உள்ளூர் அதிகாரிகள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது ஆவணம், பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், தேசிய குடிமக்கள் பதிவேடு, குடும்பப் பதிவேடு, நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ் ஆகிய 11 ஆவணங்களை மட்டும் பீகாரில் ஏற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆதாரை அடையாள ஆவணமாக மட்டும் ஏற்பதாகத் தெரிவித்துள்ளனர். 01.07.2025ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட பீகாரின் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாக்காளர் பட்டியலின் பிரதியை கணக்கீட்டுப் படிவத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களில் ஒன்றாகவும் குறிப்பது விசித்திரமாக உள்ளது.

       இவ்வாறு செய்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கிறதா என்பது கேள்விக்குரியது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 169இன்படி உரிய சட்டத் திருத்தங்களை அரசிதழில் வெளியிட்டு முறைப்படி செயல்படுத்த வேண்டும். ஆணையம் சுதந்திரமான அமைப்பு எனினும் தன்னிச்சையாக செயல்பட அரசியல் சட்டத்தில் இடமில்லை. நமது அரசியல் சாசனப்படி சுயேட்சையாக இயங்க வேண்டிய அமைப்புகள் அரசியல் சாசனத்தை மீறியும்  நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்டும் செயல்பட முடியாது. தேர்தல் ஆணையர், குடியரசுத் தலைவர், ஆளுநர், சபாநாயகர் போன்றோர் அரசியல் சாசனத்திற்குக் கட்டுப்பட்டே இயங்கவேண்டும். இவர்களுக்கு அளிக்கப்படும்  அதிகாரங்கள் எல்லையற்றவை அல்ல; அவை வரம்பிற்குட்பட்டவை என்பதை உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளது. இவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்கிற பாதுகாப்பைச் சலுகையாகப் பயன்படுத்தி அரசியல் சட்டத்தை மீறும் செயல்பாடுகளைத் தொடர்ந்து அனுமதிப்பது இந்திய ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதித்துறை அசாதாரண நேரங்களில் தீவிரமாகச் செயல்படுவதை Judicial Activism என்று சொல்வதைப்போல தேர்தல் ஆணையச் செயல்பாடுகளை வெறுமனே ECI Activism என்று எளிதாகக் கடந்துவிட இயலாது. உச்சநீதிமன்றம் போல் இவ்வமைப்புகள் இவ்வாறு செயல்படவும்  முடியாது. 

      தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் ஆகிய 9 மாநிலங்கள் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபர் தீவுகள் ஆகிய 3 யூனியன் பிரதேசங்களுக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணிகள் (SIR) நடைபெறவிருக்கின்றன. இவற்றில் விரைவில் தேர்தல் வரப்போவது காரணமாகச் சொல்லப்படுகிறது. இதுதான் முழுச்சிக்கலுக்கும் காரணமான ஒன்றாகும். அசாமில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருந்தாலும் குடியுரிமை சரிபார்க்கப்பட்டுவிட்டதால் அங்கு தீவிரத் திருத்தத்திற்கு அவசியமில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதிலிருந்து அவர்களது நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது.       இந்த 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் இருப்பதால் பீகாரைப் போன்று வாக்குத் திருட்டு வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

        நவம்பர் 4இல் தொடங்கி டிசம்பர் 4இல் சிறப்புத் திருத்தப்பணிகள் நிறைவடைந்து டிசம்பர் 9இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதில் திருத்தங்கள், விசாரணைகளை டிசம்பர் 9 முதல் 31க்குள் முடித்து பிப்ரவரி 7இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 6.41கோடி வாக்காளர்கள் உள்பட 51 கோடி இந்திய வாக்காளர்களின் வாக்குரிமையை இவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் சரிபார்க்க முடியுமா என்ற கேள்வி எழுவது இயல்பானது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களிலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு தேர்தல் ஆணையம் ஒன்றிய ஆளும்கட்சியினருக்காக இம்மோசடியை செய்யத் துணிந்துள்ளனர். எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களுக்காகவே இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்கிற அய்யத்தில் நியாயமிருக்கிறது.

      இந்தியா கூட்டணிக் கட்சிகள் எஸ்ஐஆர் ஐ தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. ராகுல்காந்தி கர்நாடகா, அரியானா மாநிலங்களில் நடந்த வாக்குத் திருட்டுக்கான ஆதாரங்கள் அளித்தும் தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்கவில்லை. நாடாளுமன்றத்திற்கும் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமையிலிருந்து தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. சாதாரண  அரசியல் கட்சியைப்போல பொறுப்பின்றி நடந்துகொண்டது. தேர்தல் ஆணையத்திற்குப் பதிலாக ஆளும் பாஜக வழக்கமான வன்மத்துடன் இதை எதிர்கொண்டது. எஸ்ஐஆர் எதிர்ப்பில் திமுக முன்னணியில் இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மு..ஸ்டாலின், கேரளத்தில் பினராயி விஜயன், மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி போன்றோர் எஸ்ஐஆருக்கு எதிராக தீவிரமாக இயங்கி வருகின்றனர்.

        குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) ஆதரித்த அஇஅதிமுக பாஜகவிற்கு அடுத்தபடியாக எஸ்ஐஆர் ஐ மிகத் தீவிரமாக ஆதரிக்கிறது. இப்பணிகளில் மாநில அரசு அதிகாரிகள் ஈடுபடுவதால் மாநில அரசே பொறுப்பு என சிறுப்பிள்ளைத்தனமாக வாதிடுகிறது. இதே கருத்தை வலியுறுத்தி தவெக ஆர்ப்பாட்டம் நடத்திய வேடிக்கையையும் நாம் பார்த்து வருகிறோம். பீகாரில் நீக்கப்பட்ட 47 லட்சம் வாக்காளர்கள் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்கிறார்  அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை. தேர்தல் ஆணையத்திற்குப் பதிலாக திமுகவையும் மாநில அரசையும் குற்றஞ்சாட்டி மடைமாற்றும் வேலைகளில் அதிமுக, தவெக போன்ற கட்சிகள் ஈடுபடுகின்றன. இவை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பாஜகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன. இவர்களது வாக்குகளில் எவ்வளவு பறிபோகும் என்பது டிசம்பர் 9இல் வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில்தான் தெரியவரும்.   

       உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள், வெளிநாட்டினர் ஆகியோர் தகுதியில்லாத வாக்காளராகக் கருதப்படுவர். இவர்களை நீக்கி வரைவுப்பட்டியல் டிசம்பர் 9 வெளியிடப்படுமாம்! அதற்கு முன்னதாக சுமார் 6.5 கோடி தமிழக வாக்காளர்களிடம்  படிவங்களை விநியோகித்து, அவற்றைப் பூர்த்தி செய்து திரும்பப் பெற்று அவற்றை கணினியில் உள்ளீடு செய்வதற்கு போதுமான அவகாசம் இருக்கிறதா என்பது தேர்தல் ஆணையத்திற்கும் அதைக் கண்டுகொள்ளாதா நீதிமன்றங்களுக்குத்தான் தெரியும். நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 முடிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மூன்று அல்லது நான்கு தடவை வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று படிவத்தைக் கொடுத்துத் திரும்பப் பெறுவார் என்று கதைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பதென்ன? தகுதியில்லாத வாக்காளர்களை நீக்கவே எஸ்ஐஆர் என்கிறார் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி. எஸ்ஐஆர் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஆணையத்தை வழிமொழிகின்றனர்; நடைமுறைச் சிக்கல்களுக்கும் பீகாரில் எதிர்கொண்ட சிக்கல்களுக்கும்  யாரும் முகம் கொடுப்பதில்லை.

        BLOக்கள் எதோ விளம்பர நோட்டீஸ் போல கண்ணில் தென்படுபவர்களிடம் வீசியெறிகிறார்கள். படிவத்தில் ஒரு நகல் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வருகிறது; சிலருக்கு இருப்பதில்லை. அப்படிவங்களைப் பூர்த்தி செய்வது குறித்து நூற்றுக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் எவற்றிலும் தெளிவில்லை. போட்டோ ஒட்டவேண்டுமா? 2002 திருத்தத்தில் இடம் பெற்ற எந்த உறவினர் விவரத்தை எழுதுவது? நகல் ஆவணங்களை இணைப்பதா, வேண்டாமா? ஒரு நகல் போதுமா? என்றெல்லாம் வினாக்கள் எழுகின்றன. முன்பு ஆதாரங்களை இணைக்க வேண்டும் என்றனர். தற்போது  கணக்கெடுப்பின்போது வாக்காளரிடமிருந்து எந்தவொரு ஆவணமும் சேகரிக்கப்படாது என்கின்றனர்.

        90%க்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவங்கள் அளிக்கப்பட்டதாக கணக்கு காட்டுகின்றனர். இது உண்மையல்ல. எவ்வளவு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டன என்பதில்தான்  உண்மையான வெற்றி இருக்கிறது. படிவங்களை விநியோகிப்பதில் உள்ள சிக்கல்களை காலதாமதமாக உணர்ந்த  தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பாக முகவர்களிடம் நாள்தோறும் 50 படிவங்களை அளிக்க முன்வந்துள்ளது. இதன்மூலமும் இக்குறுகிய காலத்தில் இப்பணிகளை முடிக்கமுடியும் என்று சொல்வதற்கில்லை.  

     திமுக அக்டோபர் 27இல் தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. அடுத்து நவம்பர் 2 இல் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜக, அஇஅதிமுக, பாமக (அன்புமணி) ஆகிய கட்சிகளைத் தவிர்த்து 60 அமைப்புகள் மற்றும் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 49 அமைப்புகள் இக்கூட்டத்தில் பங்கேற்று எஸ்ஐஆர் எதிர்ப்பில் ஒருங்கிணைந்து நின்றன. நாதக, தவெக, பாமக (இராமதாஸ்) ஆகியன அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லை.

      பீகாரில் பல்வேறு குளறுபடிகளுடன் அரங்கேறிய இத்திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றம் கேட்ட தகவல்களை தேர்தல் ஆணையம் இதுவரை அளிக்கவில்லை. கிருஸ்மஸ், பொங்கல் போன்ற பண்டிகைகளை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் குறைவான  அவகாசத்துடன் இதை அமல் செய்வது சரியல்ல. தேர்தல் ஆணைய அறிவிப்பில் உள்ள குறைகள் களையப்பட்டு, உச்சநீதிமன்ற உத்தரவுகளை வெளிப்படையாகப் பின்பற்றி, உரிய கால அவகாசமளித்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் இந்த சிறப்புத் திருத்தத்தைச் செய்ய வேண்டும். இதை ஏற்காமல் வாக்குரிமைப் பறிப்பில் ஈடுபடும் தேர்தல் ஆணையத்தின் சட்டமீறலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

       அக்டோபர் 29இல் தமிழகத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தினார். இதில் பங்குபெற்ற தேசிய, மாநிலக் கட்சிகளில் பாஜக, அதிமுக தவிர்த்து திமுக, விசிக, நாதக, தேமுதிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகிய 10 கட்சிகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தன. தமிழ்நாட்டில் எஸ்ஐஆருக்குப் பலமான எதிர்ப்பு இருப்பது இதிலிருந்து புலனாகிறது. 

        தேர்தல் ஆணையம் அரசியல், சாசனம், உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், மக்கள் மன்றம் எதையும் மதிக்காமல் செயல்படும் அமைப்பாக மாறுவது ஜனநாயகத்திற்கு ஏற்படையதல்ல. தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் மாறியபோது இவ்வமைப்பு ஆளும்கட்சிக்கு கைப்பாவையாக செயல்படும் என்று எதிர்பார்த்தோம்; அதுதான் இன்று நடக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்று தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசின் கட்டுக்குள் வந்துவிட்டால் நாட்டின் எப்படி ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும்? பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக 1கோடிக்கும் மேற்பட்ட மகளிர் வங்கிக் கணக்குகளில்  ரூ. 10,000 வரவு வைக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சேவகமாகச் செய்தது. இதனை  நீதிமன்றங்களும் கண்டுகொள்ளாதது வேதனைக்குரியது. எஸ்ஐஆர், வங்கிக் கணக்கில் பணம் போன்ற காரணிகள் இல்லாமல் பீகாரில் பாஜக கூட்டணி வென்றிருக்க இயலுமா? இதுதான் நியாயமான தேர்தல் நடைமுறையா என்று வினவினால் உரியவர்களிடம் பதிலில்லை. 

      பீகார் தேர்தலுக்கு முன்னதாக முடிக்கப்பட்டிருக்க வேண்டிய எஸ்ஐஆர் வழக்கு   உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து தொடரப்பட்ட வழக்கு முடிவதற்குள் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிடும் என்றால் இந்தியக் குடிமகனின் இறுதி நம்பிக்கை நீதித்துறை என்பதும்  பொய்த்து விடுமா என்பது தெரியவில்லை. அரசியல் சாசனத்தை மீறி அரசுகளோ, நாடாளுமன்றமோ, அதன் அமைப்புகளோ செயல்படும்போது அவற்றை உரிய வழிகளில் தடுத்து, அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் உச்சநீதிமன்றத்திற்கு இருப்பதாக இப்போதும் கூட மக்கள் நம்பிக் கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கை பொய்த்துப் போவதையும் ஜனநாயகம் பாசிசத்தால் வீழ்த்தப்படுவதையும் இனியும் வேடிக்கைப் பார்க்கக் கூடாது. 

 

நன்றி: 'பேசும் புதியசக்தி' மாத இதழ் டிசம்பர் 2025

ஞாயிறு, நவம்பர் 30, 2025

ஏரோட்டம்: விளிம்புகளால் எழுப்பப்பட்ட ஆரூர்ப் பேரறம்

 ஏரோட்டம்: விளிம்புகளால் எழுப்பப்பட்ட ஆரூர்ப் பேரறம்

 

தீசன்

 


(ஏரோட்டம் - திருவாரூர் மாவட்டச் சிறுகதைகள் அன்றும்இன்றும்)

தொகுப்பிற்கு நண்பர் தீசன் எழுதிய மதிப்புரை.) 

 

            இந்தியா ஒரு தேசியமாக வளர்ந்து கொண்டிருந்த வேளையில் வட்டாரப் பண்பாடுகளை முதன்மைப்படுத்துவது ஒரு காலனிய கால எழுதியலாக இருந்தது.  வட்டாரப் பண்பாடுகள் தனித்தனி வட்டாரப் பண்பாடுகளாக இல்லாமல் இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருந்தபோது தமிழ்ப் பண்பாட்டு இயக்கங்கள் அவற்றைத் தனக்கான உழைப்புச் சக்திகளாக மடைமாற்றிக் கொண்டிருந்தன. கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் புகைந்து கொண்டிருந்த வரலாற்றுப் பகை, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, அதற்குப் பின்னான உலகப்போர் இவையெல்லாம் இந்தச் சூழல் ஏற்பட்டு வளர அடிப்படையான காரணங்கள். கால்டுவெல் திருநெல்வேலிப் பகுதியின் சாணார் இன மக்களின் வாழ்வு பற்றி ஆராய்ந்ததும் அதன் பிராமணீயக் கலப்பற்ற பண்பை கிறித்தவ சமயத்தாரின் வளர்ச்சியோடு இணைத்ததும் பிராமணீய சிந்தனை நீக்கத்திலிருந்தே ஆங்கிலேய காலனியம் சாத்தியம் எனும் பேருண்மையைப் பாதிரிமார்களுக்கு உணர்த்தியிருந்தது. சாதிகளால் சமைந்திருக்கும் இந்திய சமூகம் பன்மீய சாதிவடிவங்களைக் கொண்டிருந்தாலும் அனைத்துச் சாதிகளையும் இயக்கும் அறிவுக்கட்டமைப்பான பிராமணீய மேலாதிக்கத்தை மறுக்காது கடைப்பிடித்தன. எனில் ஏற்கனவே மேலாதிக்கம் செய்யப்பட்டிருக்கும் பிராமணீய கருத்தியலைக் கீழிறக்கம் செய்வதில் இருந்தே ஆங்கிலேய சிந்தனைக்குள்ளான பண்பாட்டு்ணர்வை உருவாக்கவியலும் என்பதே இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால அரசியலாக உருவெடுத்தது. பிராமணரல்லாதார் இயக்கமே இதன் தொடக்கம். பிராமணீய மேலாதிக்கத்தில் இருந்த படிநிலை சமூக அமைப்பு, வருணாசிரம தருமத்தினால் கட்டப்பட்டிருக்கும் தொழில், கல்வி, வாழ்க்கை, நிலவுரிமை, அரசியல் அதிகாரம் முதலியவை மறுவாசிப்பு செய்யப்பட்டன. பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்றோரின் பிராமணீய மரபு அவர்களுக்கு இந்திய தேசிய வாதத்தின் பகுதியாகத் தமிழ்ப் பண்பாடு அமைக்கப்பட வேண்டும் என்ற உந்துதலைத் தந்திருந்தது. பிராமணரல்லாதாரிடையே பிராமணீயம் நீக்கப்பெற்ற ஒரு தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கம் பற்றிய ஓர்மை எழுந்தது.  நிலக்கிழமை, சமயம்சார் நம்பிக்கைகள் முதலிய காரணங்களால் உள்ளீடான வர்க்கப் பகையோடு இருந்த பிராமணரல்லாதாரியக்கம் திராவிடர் கழகமாக உருக்கொள்ளும்போது வட்டாரப் பண்பாட்டின்மீதான மதிப்பை இடம்மாற்றின. சமஸ்கிருதத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டதே ‘செந்தமிழ்’ வடிவம் என்று எழுதிய ச.வையாபுரிப்பிள்ளை தமிழ்ச் செவ்வியல் நூல்களைக் காலத்தால் பின்னுக்குத் தள்ளியதற்கும் அவரது ஆசிரியரான மறைமலையடிகள் தமிழின் தொன்மை குறித்து எழுதியதற்கும் பின்னணியாகப் பண்பாட்டு உருவாக்கக் காரணியான தேசியக் கருத்தின் முரண்களே இயங்கின. ஆனால் பெரியார் முன்வைத்த தமிழ்ப் பண்பாட்டுணர்வு சாதி, சமய, பாலின, தேசிய பேதமற்ற ஒரு எல்லையாகும். தொன்மையினூடாகக் கட்டமைக்கப்படும் தமிழ்ப் பண்பாட்டில் சாதியையும் பெண்ணிழிவையும் நம்மால் கடந்துவிடமுடியாது என்பதே பெரியாரின் பகுத்தறிவு வாதம். பின்னர் இச்சிந்தனையைப் பண்பாட்டு உருவாக்கத்தில் திரண்ட திராவிடர் கருத்தியலாகக் கொள்கின்றோம். 

 

            வரலாற்றில் இத்தகைய பண்பாட்டு உருவாக்கப் பின்னணியிலிருந்தே நாம் வண்டல் வகைமையை அறிய முடியும்; பேச முடியும். மற்ற நிலம் சார்ந்த இலக்கிய வகைமையிலிருந்து வண்டல் வேறுபடுவதற்கும் அதனில் உள்ளொடுங்கி இயங்கும் அறவுணர்விற்கும் சமூகவியல் சார்ந்த காரணங்களை இத்தகைய அரசு, பண்பாட்டுருவாக்க நிகழ்வுகள் ஊடாகவே நம்மால் விளங்க முடிகிறது. வட்டாரப் பண்பாட்டில் உள்ளுறைந்திருக்கும் சாதிப் பெருமிதம் வரலாற்றுவெளியில் பாதுகாப்பான சூழலால் கிடைக்கப்பெற்ற கல்வி அவர்களுக்குத் தந்த கொடை. இலக்கண மரபு, ஒருமையாக்கப்பட்ட தமிழ் மரபாக உயர்ந்தோர் வழக்கிலிருந்து வளர்ந்தெழுந்தது போன்றே பேச்சில் இருந்து விலகிய, அதேசமயத்தில் பேச்சை பிரதிநிதித்துவப்படுத்தவரும் எழுத்து மரபால் உருவாக்கப்படும் வட்டார இலக்கியம் (பேச்சு மரபு) அதனுள்ளாகவே உயர்ந்தோர் வழக்கின் பிற்சேர்க்கையாக மாறும் உள்முரணைக் கொண்டிருக்கிறது. என்னதான் மக்கள் வழக்கை முன்னிறுத்தினாலும் எழுத்து என்பது எழுதத்தெரிந்தோர்க்கானது. எழுதும் வாய்ப்பு கிடைத்தோர்க்கானது. அத்தகைய சமூகச் சூழல் வாய்க்கப்பெற்றோர்க்கானது. இதனால்தான் இந்திய வெளியில் வட்டாரப்பண்பாடு சாதியப் பண்பாடாக, குறிப்பாக, பிராமண, பிராமணரல்லாத இடைநிலை சாதிப் பண்பாடாக வளர்க்கப்பட்டிருக்கிறது. கல்வியில் இருந்து முற்றிலுமாக விலக்கப்பட்ட எழுதும் வாய்ப்பே கிடைக்கப்பெறாத மக்களின்  பண்பாட்டை உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிராத ஒரு சமூகம் விளக்கியபோது புத்தகங்களிலும் ஓரத்து மனிதர்களாகவே சித்திரிக்கப்பட்டனர் தலித் மக்கள்.

 

            தமிழ் இலக்கிய வட்டாரப் பண்பாட்டுச் சூழல் காலனிய காலத்தில் இருந்து இன்றுவரை இத்தகைய போக்கில்தான் இயங்கி வந்திருக்கிறது. இந்த இடத்தில்தான் வண்டல் பண்பாட்டை முதன்மை செய்ய வேண்டியதன் தேவையை நாம் உணர்கின்றோம். வண்டல் எழுத்து கரிசல், கொங்கு, நாஞ்சில், நடுநாடு என பிற வட்டார எழுத்துகளைப்போல் குடும்பம், உறவு, தன்வாழ்க்கை என்பதோடு நின்றுவிடாமல் எளிய மக்களின் சமூக விடுதலையைப் பேசுவதாய் மக்களின் உரிமைக்கான புரட்சிக் குரலை உரக்க ஒலிப்பதாய் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த எழுத்து நிலவுடைமைக்குக் கீழ்கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் துயர மனத்தின் இன்னொரு வடிவம். துயரத்தினால் எழுப்பப்பட்டிருக்கும் தஞ்சை எழுத்தைப் பெருமித உணர்வாக மாற்றுவதற்கில்லை. ஆனால் அந்த உணர்வின் தற்கால சமூக அவசியத்தை உணர வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம். ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கை அவர்களின் பண்பாடு முதலியவை இங்கும் மேலிருந்து விளக்கப்பட்டிருந்தாலும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியிலிருந்து வெளிப்படும் எழுத்தில் ஆசிரியரின் தன்னிலையையும் மீறி அந்தச் சமூகம் உறைகின்றது. வண்டல் எழுத்து எல்லாவற்றையும்போல ஒரு வழக்கமான எழுத்தாக மதிப்பிடவே முடியாதது. அது ஒரு அரசியல் எழுத்து. மக்களை அரசியல் வயப்படுத்தும் எழுத்து. தமிழ் இலக்கியவெளியில் பிற வட்டார எழுத்துகளைப் போலல்லாமல் வண்டல் எழுத்து புறக்கணிக்கப்படுவதற்கும் பிரச்சார எழுத்தாகக் கருதப்படுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் வெறுப்புமிழ்வு காரணம் ஒன்றேயன்றி வேறெதுமே இல்லை. உலகளாவிய இலக்கியவெளியில் தலித், திருநர், பால்புதுமையர், மாற்றுத்திறனாளர்கள் எழுத்துகள் வெற்றுப் பிரச்சாரக் கூச்சல்களாக விமர்சிக்கப்படுகிறது. இதற்கு இலக்கிய அழகியல் என்றபேரில் தீவிரவாசிப்பாளர்கள் என்ற மேல்தட்டு வர்க்கத்தினரின் அளவுகோலுக்குள் எழுத்தை அடக்க முயற்சிப்பதே காரணம். வண்டல் எழுத்திலும் தி.ஜானகிராமன், மௌனி, கு.ப.ராஜகோபாலன், க.நா.சுப்ரமணியம் போன்றோர் முதன்மைப்படுத்தப்படுவதற்குப் பின்னாகவும் இந்த மேல்நிலையாக்கம் செய்யப்பட்ட பண்பாட்டு அரசியலே இயங்குகிறது. தஞ்சை என்றாலே பச்சைபசேல் வயலும் காவிரியின் மிரட்டும் பிரவாகமும் நெல்முற்றிய பால்வாடையும் வெற்றிலையைக் குதப்பிவரும் பண்ணையாரின் பஞ்சகச்சமும் மட்டுமல்ல நிலமற்ற மனிதர்களின் வயிறற்ற வாழ்க்கையும்தான் என்பதைக் காட்டும் பல எழுத்தாளர்கள் இங்கு இருந்தார்கள். சி.எம்.முத்துவும் சோலை சுந்தரபெருமாளும் அதன் முன்னவர்கள் எனலாம். 

 


            இத்தகைய வரலாற்று சமூக பொறுப்பின் மீதான ஓர்மையுடனே தோழர் மு.சிவகுருநாதன் இந்த ‘ஏரோட்டம்’ எனும் நூலைத் தொகுத்திருக்கிறார். 34 நான்கு சிறுகதைகள் கிட்டத்தட்ட நூறாண்டுகால திருவாரூரை நமக்குக் காட்டுகின்றது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமான சிந்தனை முறை. திருவாரூரைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என்ற முறையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த 34 கதைகளும் பன்மீய கருத்துநிலைகளில் சில திருவாரூரை உள்ளடக்கமாகக் காட்டாதிருந்தாலும்கூட திருவாரூரின் வரலாற்றுச் சூழலால் உருவாக்கப்பட்ட ‘பேரறம்’ எனும் ஒற்றைப் புள்ளியில் இணைகின்றது. திருவாரூரின் எழுத்துமுறை அடித்தளத்திலிருந்து ஒருங்குவிக்கும் அறிவாய்வுமுறையைக் (Epistemology of the Subaltern) கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தத் தொகுப்பு உள்ளடக்கப் பண்பிலும் எழுத்தாளர் தேர்விலும் அடித்தளத்திலிருந்தான ஒருங்கிணைக்கும் அணுகுமுறையைக் கொண்டிருப்பது திருவாரூர் புலன்முறையாக நாம் முன்வைப்பது. 

 


            இதுவரையிலாக நமக்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்றுச் சான்றுகள் இலக்கியங்கள், அரசியல் உருவாக்கம், பண்பாட்டு மாற்றங்கள், போராட்டச் செய்திகள் இவற்றையெல்லாம் கொண்டு திருவாரூர் புலன்முறையை நாம் கருத்துவயப்படுத்த வேண்டும். ஒரு கோட்பாடாக வளர்த்தெடுக்கவேண்டும். கீழத்தஞ்சை: விவசாயிகள் இயக்கமும் தலித் மக்கள் உரிமைகளும் என்ற சிறுநூலில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பண்ணையாட்கள் பராமரிக்கும் ஆடுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். அவை பண்ணையில் வேலைப்பார்ப்போரைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்தன. ஆடுகளும் மாடுகளும் புல் மேய்வதைப் பார்க்கையில் பண்ணையாட்களுக்குப் பசி எடுக்கிறது. இதுதான் அந்தச் செய்தி. விலங்குகள் மீதான மக்களின் பார்வைமுறை வரலாறுதோறும் எப்படி இருந்திருக்கிறது என்பதை யோசிக்க வேண்டிய இடமிது. சங்க இலக்கிய அகப்பாடல்களில் இறைச்சி எனும் இலக்கியக்கூறு காட்டப்பெறும். இது பொதுவாக விலங்குகளின் அன்பு நடவடிக்கைப் பற்றி எடுத்துரைக்கும். பொருளீட்டி வருவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் இத்தகைய விலங்கினமொன்றின் அன்பு செயல்பாட்டைப் பார்க்கின்றான். ஒரு ஆண் யானை பெண் யானைக்கு யா மரத்தைப் பிழிந்து நீரூட்டிவிடுகிறது. இதைப் பார்த்தபோது தலைவனுக்குத் தலைவி நினைவேறி காமவயப்படுவதாகப் பாடல். (குறுந். 37) விலங்கினச் செயல்பாட்டை மனிதவயப்படுத்துவது தமிழ் இலக்கிய அழகியல் மரபாகும். ஆனால் அது எந்த மனிதர்களை மையமிட்டு இருக்கிறது என்பதில்தான் அதில் அரசியல் நுழைகின்றது. தோழர் ஜி.ராமகிருஷ்ணன் சொல்வதுபோல் ஓய்வற்ற, உணவற்ற, உடைமையற்ற, பாதுகாப்பற்ற சூழலில் இருப்போர் விலங்குகள் உணவெடுப்பதைத் தங்களின் பசியோடு இணைத்துப் பார்த்திருப்பார்களேயொழிய காமத்தோடு இணைத்திருக்க முடியாது. எனில் சங்க இலக்கியம் காட்டும் மாந்தர்கள் உடைமைப் பண்பாட்டுச் சித்திரங்கள். இவர்களால் ஒருங்கிணைந்த தமிழ் அறத்தைப் போதிக்க முடியாது. இவர்களின் வாழ்க்கைப் பற்றியான சுவடுகள் எல்லா மனிதர்களையும் ஒன்றிணைப்பதாக இல்லை. சங்கப் பாடல்களைப் போன்றே அவர்களது வாழ்க்கையும் தன்னலத்தை மையமிட்ட உதிரிகளாகக் கிடக்கின்றன. இந்த இடத்தில் இருந்துதான் நாம் திருவாரூரின் பேரறத்தைப் பேசுகிறோம். பேச வேண்டும்.  திருவாரூர் வாழ்மக்கள் நூற்றாண்டு கால நிலவுடைமை நெருக்கடியில் அடிபட்டவர்கள். வளமான வயல்களுக்கு மத்தியில் வளமற்ற வாழ்க்கை வாழ்ந்து பார்த்தவர்கள். இவர்களுடைய சிந்தனைமுறை அடித்தளத்திலிருந்து உயர்நோக்கை வைப்பதாய் உள்ளது. நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்துதான் வாழ்க்கைப் பற்றி கேள்வி உலகமெங்கும் எழுந்திருப்பதை வரலாறு காட்டுகிறது. அத்தகைய வரலாற்றுப் பின்னணியிலிருந்து வந்த நமக்கு எழுத்து எப்படி அமையவேண்டும் என்று சொல்வதற்கு உரிமையுண்டு. அதன்படி, இந்த ஏரோட்டம் தொகுப்பு ஒரு மாவட்ட எழுத்தை எப்படி தேர்விக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி என்றே துணிவுடன் கூறலாம்.

 

o    தீசன் திருவாரூர் மத்தியப் பல்கலை. ஆய்வு மாணவர்.

 

நூல் விவரங்கள்:

ஏரோட்டம்  (திருவாரூர் மாவட்டச் சிறுகதைகள் அன்றும்இன்றும்)

தொகுப்பு: மு.சிவகுருநாதன்

வெளியீடு: நன்னூல் பதிப்பகம், திருத்துறைப்பூண்டி

விலை: ரூ. 500

தொடர்புக்கு: 9943624956

 


நன்றி: பேசும் புதியசக்தி மாத இதழ் - நவம்பர் 2025

ஞாயிறு, நவம்பர் 09, 2025

11. கொடை மடக் கதைகள்

 

வரலாறும்  தொன்மமும்  - தொடர்

11. கொடை மடக் கதைகள்

மு.சிவகுருநாதன்


 

          சங்ககாலத் தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் வேளிர் எனப்படும் சிற்றரசர்கள் பலரும் ஆண்டதாக வரலாற்றில் படிக்கிறோம். இவை பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில்  அமைந்த வரலாறாகும். இலக்கியச் சான்றுகளை வரலாறாகக் கட்டமைக்கும்போது  மிகைப்படுத்தல் எனும் உயர்வு நவிற்சிக் கூறுகள் வரலாற்றில் பெருந்தடையாக அமைகின்றன. இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் இலக்கியக் கதைகளை மட்டும் வரலாறாகப் பேசுவது ஒருவித மாயத் தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. இக்கதைகளை ஏற்றுக்கொண்டால் மறுபுறம் இதிகாசக் கதைகளையும் வரலாறாக ஏற்க வேண்டிய அபாயத்திற்குள் தள்ளப்படுவோம்.

          மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் பாடல்கள் சங்கப் பனுவல்களில் மிகுதி எனினும் வேளிர் (Velir) எனும் குடித்தலைமை சிற்றரசர்கள் குறித்த பதிவுகளும் சிறுபாணாற்றுப்படை, புறநானூறு போன்ற நூல்களில் காணக் கிடைக்கின்றன. இவர்களில் பலநூறு பேர்கள் இருந்திருப்பினும் சிலர் வள்ளல்கள் என்ற வகையில் மேல், கீழ்க்கணக்கு  இலக்கிய தொகுப்புகளைப் போல கடையேழு வள்ளல்கள் என்று தொகுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொடையாளிகள் என்ற பிரிவில் சிறப்பாகப் பேசப்படுகின்றனர். இவர்களது கொடைத்திறம்  கொடை மடம் என்று சிறப்பிக்கப்படுகிறது. சங்ககாலத்தில் வேளிர்கள், மூவேந்தருக்குக் கீழ்ப்படியாமல் தனித்தியங்கியதும், மூவேந்தர்கள் இவர்களிடம் போர்களுக்கு உதவிபெற்ற நிகழ்வுகளும் உண்டு. மூவேந்தர்களுடன் கூட்டணியமைத்து பிற வேளிர் அரசர்களைக் கொன்றழித்த கதைகளும் இருக்கின்றன.

        சிறுபாணாற்றுப்படையிலும் அதியமானும் புறநானூற்றில் அவருக்குப் பதிலாக எழினி என்றும் எழுவர் பட்டியல் மாறுகிறது. பிற்காலத்தில் புராணக் கதை மாந்தர்களான சிபிச்சக்கரவர்த்தி போன்றோரையும் எழுவர் பட்டியலில் இணைக்கும் நிலை இருந்திருக்கிறது. மூவேந்தர்களின் நாட்டை அடிப்படையாகக்  கொண்டு வேளிர் சிற்றரசர்களை சேர, சோழ, பாண்டிய நாட்டு வெளிர்கள் எனவும் வகைப்படுத்தும் போக்கும் உள்ளது. இருப்பினும் கடையேழு வள்ளல்கள் என்ற பகுப்பும் அதில் கட்டமைக்கப்பட்ட கொடை மடக் கதைகளும் தமிழ் தமிழர் தமிழ்நாட்டின்  பெருமை என்ற நிலையில் தொடர்ந்து சொல்லப்படுவனவாக உள்ளன. கடையேழு வள்ளல்களின் வள்ளல் குணத்தை முதலில் காண்போம்.

              01.பேகன்: பொதினி மலை எனும் பழனி மலையை ஆண்ட குறுநில மன்னர்; மயிலுக்கு போர்வை அளித்தவர். பருவ மழை பொய்க்காத  வளம்மிக்க மலை நாட்டை உடைய  பேகன்,  மயில் தோகை விரித்தாடியது குளிரால் என்று எண்ணி, அதன் மீது மிகுந்த இரக்கம் கொண்டு, தன் போர்வையை மயிலுக்குப் போர்த்தியவர். இதனால் இவர் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய பெருங்கல் நாடன் பேகன்என்று  சிறுபாணாற்றுப்படை போற்றுகிறது. காட்டில் மயிலுக்கு ஆடை வழங்கிய மலைநாட்டைச் சேர்ந்த பேகன் என்பது இதன் பொருளாகும்.

       மயிலுக்கு போர்வை தந்த பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து விறலியர் ஒருவருடன் ஈடுபாடு கொண்டார். இதனையறிந்த புலவர்கள் பரணர்,  கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்றோர் பேகனுக்கு அறிவுரை கூறி கண்ணகியுடன் சேர்ந்து வாழ வைத்த கதையும் சங்கப்பாடல்கள் வழியே அறிய முடிகிறது. இவர்கள் அனைவரும் மீண்டும் கண்ணகியுடன் சேர்ந்து வாழ்வதே தமக்கு அளிக்கும் பரிசில் என்று கூறி பேகனை நல்வழிப்படுத்துகின்றனர்.

     02.பாரி:  தற்போதைய சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான் மலை அன்று   பறம்பு மலை என்று வழங்கப்பட்டது. பறம்பு நாடு என்றழைக்கப்பட்ட பிரான் மலையை  ஆண்ட சிற்றரசர் பாரி.     வண்டுகள் (சுரும்புகள்) உண்ணுமாறு தேன் வழங்கும் சிறப்பான சுரபுன்னைகள் நிறைந்த காட்டின் வழியாகத் தேரில் செல்லும்போது, சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடி பற்றிப் படர்வதற்குக் கொழுக்கொம்பு இல்லாமல் தவித்ததைக் கண்ட பாரி தான் வந்த தேரை நிறுத்தி, அதில் முல்லைக் கொடியைப் படரவிட்டான். இந்நிகழ்வை, “சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பறம்பின் கோமான் பாரி”, என்று புகழ்ந்துரைக்கின்றனர்.

      புலவர்களையும் பாணர்களையும் அழைத்து உணவும் பரிசில்கள் வழங்கி அவர்களை ஆதரிப்பது அரசர்களின் வழக்கமாக இருந்தது.  அந்த வகையில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த புலவர் கபிலரை விரும்பி அழைத்து, நட்பாகி தனது நாட்டில் தங்க வைத்தார். சோழ, பாண்டிய மன்னர்களால் போரில் வீழ்த்தப்பட முடியாத பாரி பாணர் வேடம் தரித்த வஞ்சகர்களால் கொல்லப்பட்டார். பாரி கொல்லப்பட்ட பின்பு அவரது மகளான  அங்கவை, சங்கவை இருவருடன் நாட்டைவிட்டு வெளியேறி, அவர்களைப் பாதுகாப்பாக காரி குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு வெண்ணையாற்றங்கரையில் வடக்கிருந்து (உண்ணாநோன்பு)  உயிர் துறந்தார். பாரி மகளிர் அவ்வைக்கு நீலச்சிற்றடை வழங்கிய நிகழ்வும் அவ்வையாரின் தனிப் பாடலாக உள்ளது. அதன்பிறகு பாரி மகளிரை மலையமான் திருமுடிக்காரி மரபில் வந்த சகோதரர்களுக்கு மணம் முடித்ததாகச் சொல்லப்படுகிறது. திருக்கோவிலூர் பார்ப்பனர்களுக்கு மணம் முடித்ததாகச் சொல்லும் வேறு கதைகளும் உண்டு.

     03.காரி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை ஆண்ட வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்றழைக்கப்பட்டவர். அச்சம் தரும் நீண்ட வேலினையும் பெரிய கைகளையும் காரி என்ற குதிரையையும் கொண்ட வீரன் காரி, போரில் ஈடுபடும்  தன் குதிரையையும், பிற செல்வங்களையும் இரவலர்களுக்கு வாரி வழங்கியதை, “ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்தகழல்தொடித் தடக்கைக் காரிஎனச் சிறுபாணாற்றுப்படையால் சிறப்பிக்கப்படுகிறார். புலவர்களுக்கு கடுக்கன் அணிவித்து மகிழ்வதும், தேரில் ஏற்றி அழகு பார்ப்பதும் இவரது செயல்களாகச் சுட்டப்படுகின்றன.

     காரி சேரமான் பெருஞ்சேரலிரும் பொறைக்காக வள்வில் ஓரியைப் போரில் கொன்றார். இதற்காக அதியமான் திருக்கோவிலூர் மீது படையெடுத்து காரியைத் தோற்கடித்தார். சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையுடன் காரி இணைந்து பெரும்படையுடன் தகடூர் போரில் அதியமானைத் தோற்கடித்ததாகக் கூறப்படுகிறது. மூவேந்தர்களும் சண்டையின்றி ஒற்றுமையாக இருந்த காலத்தில அனைவரும் சேர்ந்து இவருக்கு முடிசூடிப் பாராட்டியதால் மலையமான் திருமுடிக்காரி என்ற பெயர் வந்தது என்கிறார்கள்.

       புலவர் கபிலர் பாரி மகளிருடன் காரியிடன் அடைக்கலமாகிறார். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடம் தென்பெண்ணையாற்றின் கரையில் கபிலர் குன்று (கபிலக்கல்) என்று அழைக்கப்படுகிறது. மலையமான் குலத்தைச் சேர்ந்த முதலாம் ராஜராஜனின் தாய் வானவன் மாதேவி என்பதால் பிற்காலச் சோழர்கள் காலத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது.  இலக்கியச் சான்றின்படியான வடக்கிருந்து உயிர் துறத்தல் சமண மரபு என்பதால் கபிலர் தீயில் இறங்கி உயிர் துறந்தார் என்பதைப் பிற்காலக் கல்வெட்டு அன்றைய காலச் சூழலுக்கேற்ப திரிக்கிறது.

    04. ஆய்: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அமைந்துள்ள பொதிகைமலையில்தான் குற்றால அருவி உள்ளது. தாமிரபரணி இங்குதான் தோன்றுகிறது. பிற்காலத்தில் அகத்தியர் கதைகள் போலியாக நுழைக்கப்பட்டு அகத்தியமலை என்று மாற்றப்பட்டது.  ஆய் ஆண்டிரன், வேள் ஆய் என்றும் அழைக்கப்படும் இவர் பொதிகை மலையில் உள்ள ஆய் குடியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர். வலிமையான தோள்களை உடைய, இனிய மொழிகளைப் பேசி மகிழும், ஆய் சிவபெருமான் மீது கொண்ட பற்றால்  நீலநாகம் அளித்த ஆடையை (கலிங்கம்)  குற்றாலநாதருக்கு அணிவித்து பெருமையடைந்தவர் ஆர்வ நன்மொழி ஆய் என்று புகழப்படுகிறார். தன்னிடம் பரிசில் பெற வருபவர்களுக்கு யானைகளைப் பரிசாக வழங்கியவர் என்றும் குறிப்பிடுகிறார்கள். முட மோசியார், குட்டுவன் கீரனார் போன்றோர் இவரைப் பாடியுள்ளனர்.

     05. அதியமான்: அதியர் என்னும் குடியில் பிறந்த அதியமானுக்கு என்று அதியன், அதிகமான், நெடுமான் அஞ்சி, அஞ்சி என்று பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அன்று தகடூர் என்று அழைக்கப்பட்ட இன்றைய தருமபுரியை ஆட்சி செய்தவர். ஒருமுறை கஞ்சமலைக் காட்டில் கிடைத்த மருத்துவக் குணமுடைய நெல்லிக் கனி, அதை உண்போர் நீண்டகாலம் வாழ்வார்கள் என்பதனையறிந்து, தான் உண்ணாமல், அக்கனியை ஒளவையாருக்கு  அளித்து மகிழ்ந்த நிகழ்வை, “அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்தஅரவக் கடல்தானை அதிகன் என்று சங்கப்பாடல் பாராட்டுகிறது. அதியமானுக்கும் சேர அரசனுக்கும்  நிகழ்ந்த தகடூர் போர் குறித்த தகடூர் யாத்திரை நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆனால் அதியமான் அவ்வையார் குறித்து இங்கு சொல்லப்படும் கதைகள் ஏராளம்.

     06. நள்ளி: நீலகிரி மலையில் துளிமழை பொழியும் நளிமலை நாட்டைச் சேர்ந்தவர். கண்டீர நாடு, தோட்டி மலை என்றும் இது அழைக்கப்பட்டது. இவர் கண்டீரக் கோப்பெரு நள்ளி, பெரு நள்ளி, நளிமலை நாடன் என்றும் அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கும் தன்னை நம்பி வந்தோருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தட்டுப்பாடின்றி வழங்கிய வள்ளல் இவர். இரவலர் மகிழவும் அவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறு நிரம்பக் கொடுக்கும் இவரது வள்ளல் குணத்தை,  முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை   நளிமலை நாடன் நள்ளி என்று சிறுபாணாற்றுப்படை சிறப்பாகப் பதிவு செய்கிறது. தன்னிடம் வந்தவர் மீண்டும் வேறொருவரிடம் கையேந்தாத வகையில் அள்ளித் தந்தவர்.  வன்பரணர் இவரைப் பற்றிப் பாடியுள்ளார்.  

     07. ஓரி: சிறிய மலைகளை உடைய கொல்லிமலையிலுள்ள குறும்பொறை நாட்டை ஆண்டவர் வல்வில் ஓரி.  தன்னுடைய நாட்டை யாழ் மீட்டும் பாணர்க்கு அளித்தவர். வல்வில் ஓரி விட்ட அம்பு காட்டு யானையை வீழ்த்தி, புலியின் வாயிற்குள் புகுந்து, கலை மானை ஊடுருவி, காட்டுப் பன்றியின் உயிரையும் வாங்கி, புற்றுக்குள் நுழைந்து அங்கிருந்த உடும்பையும் கொன்றதாக வன்பரணர் பாடல் மிகையுணர்ச்சிக் குவியலாக உள்ளதையும் நாம் காணலாம்.

      ஓரி என்னும் பெயர்கொண்ட தன் குதிரை மீதேறி, காரி என்னும் குதிரையில் வந்த மற்றொரு வேளிர்  காரியோடு போரிட்டு வென்றவர்.    இறுதியில் சேரருடன்  கூட்டு சேர்ந்து  இறுதியில்  தன் எதிரி காரியைக்  கொன்றவர். விற்போரில் சிறந்த ஓரி கொல்லி, புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய தன் நாட்டை  மலைக் கவிஞர்களுக்கு பரிசளித்த விவரம், “நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்துக் குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த ஓரிக் குதிரை ஓரி என்ற பாடல் மூலம் தெரியவருகிறது.

          சங்க இலக்கியப் பாடல்களையும் தொல்லியல் ஆய்வு முடிவுகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, வரலாறு செழுமையடைகிறது. அந்த வகையில் வெளிர் வரலாற்று ஆய்வுகள் தொடர்கின்றன. கொடை சிறப்பானது; எனவே பகுத்தறிவற்று முல்லைக்குத் தேர், மயிலுக்குப் போர்வை, யானை, நாடு என அளிக்கும் கொடைகள் மடத்தனமானவை என்றாலும்  ஈகைப்பண்பு பாராட்டிற்குரியது என்பதால் இவற்றிற்கு கொடைமடம்  என்று பெயரிட்டு அழைக்கும் வழக்கம் தமிழில் உள்ளது. மேலும் இக்கதைகளை வரலாறெனப் பரப்பும் போக்கும் உள்ளது.

         இந்த வள்ளல்கள் தங்களுக்குள் போரிட்டு மடிந்தவர்கள். இவர்கள் தங்களுக்குள்ளாகவும் தேவைப்படும்போது மூவேந்தர்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டு, பிற வேளிரை வீழ்த்தி, வழக்கமான அரசர்களைப் போலவே இயங்கியுள்ளனர். மூவேந்தர்களுக்கு மாற்றாக இவர்களைப் நிறுத்தும் போக்கு ஒன்று அன்றைய காலத்தில் உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியே இந்த கொடைமடக் கதைகளாகும். பெருவேந்தர்களைப் போல பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் நிலை மட்டும் இவர்களிடம் இல்லை. இருப்பினும் முல்லைக்குத் தேர் கொடுத்த பேகன் தன் மனைவி கண்ணகியை விறலியர் தொடர்பால் பிரிந்திருந்ததை அறியமுடிகிறது. முல்லைக் கொடி படர தேர் தந்த பேகன் தன் மனைவியைப் பிரிந்து அவரைத் துயரில் ஆழ்த்துவது முரண்பாடாக உள்ளது.  இவர்களது ஈகைக்குணம் குறித்த உயர்வு நவிற்சிச் சொல்லாடல்கள்  புலவர்கள் மற்றும் பாணர்களால் உருவாகிக் கதைகளாகப் பரப்பப்பட்டு வந்துள்ளது. இந்த இலக்கியச் சான்றான இந்த மிகையுணர்ச்சிக் குவியல்கள் காலப்போக்கில் வரலாறாகவே மாற்றப்பட்டுவிட்டது.

       கல்வியறிவு பெற்ற புலவர்களே வறுமையில் வாடியபோது அன்றைய சாதாரண மக்களில் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே நாட்டின் வறுமை இருந்திருக்கிறது. புலவர்களுக்கு மட்டுமே வறுமை எனச் சொல்ல இயலாது. நாட்டின் வளம் செழித்திருந்தாகச் சொல்லப்பட்டாலும் புலவர்கள் மட்டும் வறுமையில் உழல்வதை புரிந்து கொள்வது சற்று சிக்கலானதுதான். உதவி கேட்டுவரும் இரவலர், புலவர் மற்றும் பாணர்களுக்கு யானை, நாடு போன்ற பரிசில்கள் அளிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? மலை நாட்டு மன்னன் மயில் எப்போது, எதற்கு  தோகை விரித்தாடும் என்பதை அறியாமலிருக்க முடியுமா? அப்படி அறியாத அரசனுக்கு அறிவில் சிறந்த புலவர்கள் சுட்டியிருக்க வேண்டாமா? மாறாக புலவர்கள் அவனது கொடைத்திறம் பற்றியே வியக்கின்றனர்.

      இக்கதைகள் தனிமனித புகழ்பாடல்களுடன் மிகையுணர்ச்சிக் குவியலாகவே காட்சியளிக்கின்றன. இதில் இலக்கிய நயங்களை வேண்டுமானால் விண்டுரைக்கலாம்; பழங்கால தமிழ்நாட்டின் வரலாற்றைத் தேட முடியாது. இதிகாச, புராணக் கதைகளை ஒத்த இவற்றிற்கு முதன்மை தருவது வரலாற்றை மலினப்படுத்தும்.

-         வரலாற்றுக் கற்பனைகள் தொடரும்.

 

நன்றி: ‘பொம்மிசிறுவர் மாத இதழ், நவம்பர் 2025