வெள்ளி, மார்ச் 21, 2025

மொழி, சமூகம், அரசியல் - அரசியலின் அரசியல்!

 

மொழி, சமூகம், அரசியல்அரசியலின் அரசியல்!

 

இரா.மோகன்ராஜன்


 

 

       மொழி, சமூகம், அரசியல் குறித்த தோழர் மு.சிவகுருநாதனின் விரிவான பார்வை 16 கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளன. தோழர் சிவகுருநாதன் ஏற்கனவே கல்விப்புலம் தொடர்பான ஆழ்ந்த அனுபவமும், செயல்பாடும் கொண்டவர். கல்விப் புலப் பணியில் இருப்பவர். அது தொடர்பான நூல்கள் சில வெளியாகிக் கொண்டுள்ளன. கற்றலில், கற்பித்தலில் நவீன அணுகுமுறையைக் கோருபவர். கல்விப்புலத்தில் புரையோடிப் போயுள்ள பழமைவாத கருத்துகள், நடைமுறைகள் தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்புபவர், எழுப்பக்கோருபவர். அவரது எழுத்துகள் பவுலோ பிரையரை அத்துறையில் நினைவுபடுத்தக் கூடிய ஒன்றுஅவசியமானதும் கூட. 

     இத்தொகுப்பு அவரது வழமையான கல்விப்புலம் கடந்து பொதுவெளியைத் தொட்டுப் பேசுகிறது. பொதுவெளி கல்விப்புலத்திற்குள் வருவதில்லை; வரவேண்டும். கற்பவரும், கற்பிப்பவரும் பொதுவெளியின் பிரதிநிதிகள்தாம். கல்விப்புலம் சார்ந்தவர்கள் பொதுவெளியை உள்ளுக்குள் கொண்டுவருவதில் அரசியல் தடைகள் இருப்பினும் அப்படியான பொது வெளிப்பார்வைகளை கொண்டிருப்பது அவசியமானதாகும். ஒரு ஆசிரியர் எல்லா நேரங்களிலும் ஆசிரியராக இருக்க வேண்டும். ஆசிரியர் என்றால் கற்றுக் கொள்வதிலும், கற்பிப்பதிலும் அதற்கு முன் நிபந்தனையாக இருப்பது வாசிப்பும்எழுத்துமாகும்.  அது கைவரப்பெற்றவர் தோழர் சிவகுருநாதன் அவர்கள்.

     தீவிர இடதுசாரிக்  கருத்தியல் பின்புலத்தில் இயங்கக்கூடிய அவரது இத்தொகுப்பின் கட்டுரைகள் அவற்றையே முன் மொழிகின்றன. இடதுசாரியென்றால் பெரியார் உவப்பானவர் அல்லர்; அம்பேத்கரியர் என்றால் பெரியார் உவப்பானவர் அல்லர்பெரியார் என்றால் அம்பேத்கரியரை ஏற்பவர் அல்லர் என்ற தடைகளுக்கு அப்பால் இவர்கள் இணையும் புள்ளிகளை கண்டடைவது முக்கியம் அந்த வகையில் பெரியார் குறித்த தொகுப்பின் முதல் கட்டுரை முக்கியமானது. பெரியார் ஏன் இன்னும் தேவைப்படுகிறார்? என்று தோழர் எழுப்பும் கேள்வியும் அதற்கான பதிலும் விரிந்த தளத்தில் வைத்துப் பேசக்கூடிய ஒன்று. மனுவும், சனாதனமும் இருக்கும் வரை பெரியார் தேவைப்படவே செய்வார். இன்னும் சொல்லப்போனால் பார்ப்பனியம் அதன் அடியான அதிகார அரசியல் இருக்கும் வரை பெரியார் தேவைப்படவே செய்வார் என்பதை அறிவோம்.

        பக்தி முக்தி அடையச் செய்கிறதோ இல்லையோ... பெண்களை அதுவும் மாற்று மதப் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யக்  கடவுளிடமே வேண்டச் செய்கிறது என்பதை பெரியார் மேடைகளில் சம்பந்தரின் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டி பேசுவதை தோழரின் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. அப்படியான மனிதத்தன்மையற்ற மதம், அதன் அதிகார வெறி திருஞானசம்பந்தரிடம் வெளிப்படுவதையும் அதன் நீட்சி இன்றைக்கு எவ்வாறெல்லாம் நடைமுறையில் இருக்கிறது என்பதையும்  பார்க்கிறோம். மதம் அதன் அடியான சாதி, பார்ப்பனிய, அதிகார அரசியல் என்பன பெரியாரின் தேவையை மட்டுமல்ல பெரியாரைச் சாகவிடாமலும் வைத்திருப்பதுதான் பேருண்மை. 

          இயற்கைச் சீற்றம் என்ற வார்த்தை போய் இன்றைக்கு இயற்கைப் பேரிடர் என்று இயற்கையை 'பேரிடர்என்று சொல்லும் காலத்திற்கு நகர்ந்து சென்றிருக்கிறோம். முதலாளியமும் அதன் சுரண்டல் முறை அமைப்பும் சுற்றுச்சூழலை இயற்கையை மனிதனுக்கு எதிராக நிறுத்தி வைத்திருக்கிறது. இனிவரும் இயற்கைச் சீற்றங்கள் சாதாரணமானதாக இருக்காது என்று சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எப்படி உலகெங்கும் முதலாளியம், உலகமயம் என்பன பொதுவான நடைமுறையாகிவிட்டதோ அவ்வாறே இயற்கைப் பேரிடர் என்பதும் ஒரு பொது அம்சமாகியிருக்கிறது. புவிச் சமநிலைக் குலைவு  தனிமனிதர் தொடங்கி இப்புவிப் பரப்பெங்கும் தேச எல்லைகளைக் கடந்து கடும் சேதங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்தியா, தமிழகச் சூழலில் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள சுற்றுச்சூழலில் கவனம் செலுத்த வேண்டி அவசர  அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான தனி அமைச்சகமும், துறையும், பேரிடர் மேலாண்மையும், நவீன தொழில்நுட்பங்களும் பெரும் அவசியமாகியிருக்கின்றன. இதில் அரசியல் செய்ய எந்த வழிவகையும் கிடையாது. பேரிடர்களை எதிர்கொள்ள நவீன அறிவியல் முறைகள் தேவைப்படுகின்றன. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்  இது இதுதான் நிலைமை. இது உலகெங்குமான இயற்கைச் சீற்றத்தின் பொது நிகழ்ச்சி நிரல். நாம் அதை எப்படி எதிர் கொள்கிறோம், எதிர்கொள்ளப்போகிறோம் என்பதே முக்கியமானது. தோழர் கஜா புயல் குறித்து எழுதியிருக்கும் பதிவு முக்கியமானது.

   காவல்துறையை நவீனபடுத்திய அளவுக்கு இயற்கைச் சீற்றங்களை அறியும் வகைகளை நவீனப்படுத்த இன்றுவரை நம்மிடம் போதுமான வசதிகளோ, கருவிகளோ இருக்கவில்லை. கடந்த 2024 திசம்பரில் வந்த இரண்டு புயல்களை கணிக்க இந்திய ஒன்றியத்தின் மண்டல வானிலை ஆய்வு நடுவம் (சென்னை)  முற்றாகத் தவறிவிட்டது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக அவற்றைச் சரியாக கணிப்பதுச்  சவாலாக இருக்கிறது என்றது மண்டல வானிலை நடுவம். அமெரிக்கா போன்ற நாடுகளில் 320 மேற்பட்ட ராடர்கள் பயன்படுத்தும் போது நாம் வெறு 32 ராடர்களையே பயன்படுத்திக் கணிக்க வேண்டியுள்ளது என்று வானிலை நடுவத்தின் இயக்குநர் கைவிரிக்கிறார். நாம் செல்லவேண்டிய தொலைவு மிக அதிகம். அதற்கு கொடுக்க வேண்டிய விலை கஜா போன்ற புயல்கள், கேரளாவின் வயநாடு போன்ற இடங்கள் பலிவாங்கிய எண்ணற்ற உயிர்கள்.

         கஜா புயலின் அனுபவங்கள் இதுவரை எதிர்கொள்ளாத ஒன்று அந்த பகுதியை சேர்ந்தவன் என்பதாலும் அவற்றை ஊடகங்களில் பதிவு செய்தவன் என்ற முறையிலும் அந்தப் பேரிடர் அனுபவங்கள் ஒரு பக்கம் இருக்கஅன்றைய ஆளும் கட்சி எதிர் கொண்ட முறை அதனினும் கொடுமையானது. அரசு அறிவித்த பேரிடர் உதவித் தொகை முறையற்றவர்களின் கரங்களுக்கு போய் சேர்ந்ததே பெரிய அவலம்.

         இலட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்த போது தென்னைத் தொழிலாளிகளுக்கோ 20, 30 தென்னை மரங்கள் வைத்திருந்தவர்களுக்கோ உதவித் தொகை போய்ச் சேரவில்லை. மாறாக அரசு அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும், அவர்களை ஒட்டிய பெரும் தென்னை, பெருநிலக்கிழார்களுமே பயன் அடைந்தனர். பலரும் வெறும் தரிசுகளைக் காட்டி உதவிப் பெற்றனர். அந்த வகையில் மெய்யாக பாதிக்கப்பட்ட சிறு உழவர்களையோ, குறைந்த அளவு தென்னை மரங்கள் வைத்திருந்த சிறு உரிமையாளர்களுக்கோ தென்னை மரத்தினை ஒட்டி சிறு தொழிலில் ஈடுபட்டவர்களுக்கோ போய் சேரவில்லை. பேரிடர் என்பதும், அதன் இழப்பு என்பதும் வழமைபோல விளிம்பு நிலையினருக்கு என்றால் அதில் பயன்பெறுபவர்கள் அதிகார வர்க்கத்தினரும், நடுத்தர வர்க்கத்தினரும் என்றால் மிகையில்லை. இதுவே தமிழக ஆட்சி நிர்வாக அரசியலின் நிரந்தரத் துயரம்.

    தோழர் சிவகுருநாதனைப் பொறுத்தவரை கட்டுரைகளில் வெறும் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைத்துவிட்டு நகர்ந்துவிடுபவர் அல்லர். அதற்குத் தெளிவான தீர்வுகளை முன்வைக்கக் கூடியவர். முக்கியமாக அவற்றின் அரசியலின் அரசியலைத் துணிந்துப் பேசக்கூடியவர். அந்த வகையில் கஜா புயல் தொடங்கி மதுவிலக்கு மற்றும் கள்ளச் சாராயச்  சாவுகள் தொடர்கதையாகும் அரசியல் வரையில் ஆய்வு நோக்கில் அவர் வைக்கும் அதற்கானத் தீர்வுகள் முக்கியமானவை, சிந்திக்க வேண்டியவை எல்லாவற்றையும் தாண்டி அவை நடைமுறைபடுத்த வேண்டியவை. அவ்வாறே கல்வி தொடர்பான அவரது விரிந்த பார்வைகள், தீர்வுகள்  மற்றும் ஆலோசனைகள் என்பன இத்தொகுப்பின் கட்டுரைகள் வழி நாம் வந்தடையும் மிக முக்கியமான இடமாகும். அதனைத் தொகுப்பின் கட்டுரைகள் கூடுமானவரை சாத்தியப்படுத்தியிருக்கிறது. 

      கூர்த்த மதியும், விரிந்த, தெளிந்த  பார்வையும் கொண்டவராக செயற்பாட்டரங்கில் தொடர்ந்து இயங்கும் - அரிதாகவே எழுதும் தோழர் அதுவே பல சமகாலச் சிக்கல்கள் தொடர்பான அவரது கருத்துகள், பார்வைகள் அறிய இயலாது செய்துவிடுகிறது என்பதே தொகுப்பு தொடர்பாக நான் வைக்கும் மிகப்பெரிய குறைபாடும் குற்றச்சாட்டுமாகும்.  தொடர்ந்து மொழி, சமூகம், அரசியல், கல்வி சார்ந்து தமிழ் நிலத்தின் வாசிப்பு  உலகுக்கு அவரது எழுத்தின் வழி புத்தொளி பாய்ச்ச வேண்டும், பங்களிக்க வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பு. 

 ('மொழி, சமூகம், அரசியல்' நூலுக்கு தோழர் இரா.மோகன்ராஜன் அவர்களின் அணிந்துரை.)

    நூல் விவரங்கள்:

 

மொழி - சமூகம் - அரசியல்  (கட்டுரைகள்)

மு.சிவகுருநாதன்

முதல்பதிப்பு: டிசம்பர் 2024

பக்கங்கள்: 154   விலை: ரூ. 180

ISBN: 978-93-94414-99-0

 

நூல் வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்:

 

நன்னூல் பதிப்பகம்,

மணலி – 610203,

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் – மாவட்டம்.

அலைபேசி: 9943624956  

மின்னஞ்சல்: nannoolpathippagam@gmail.com

G Pay: 8610492679                  


ஞாயிறு, மார்ச் 16, 2025

எல்லாவற்றுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது!

               எல்லாவற்றுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது!

மு.சிவகுருநாதன்


 

      ஒவ்வொரு சொல்லும் செயலும் அரசியல் குறித்தனவே எனலாம். அரசியல் இல்லாத ஒரு சொல்லும் ஒரு செயல்பாடும் இருக்கவியலாது என்பதே இங்கு உண்மை நிலவரம்.  அரசியலற்ற எழுத்து, இலக்கியம் என்று பேசும் கும்பல்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களின் அரசியல் பூனைக்குட்டிகளைப் போல்  உடனே வெளியே வந்துவிடுகின்றன. 

       எந்தவொரு மனிதனும் சமகால நிகழ்வுகள் மற்றும் நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகளை வெறுமனே கடந்து செல்ல முடியாது. அவற்றிற்கு முகம்கொடுத்து எதிர்வினை ஆற்றவேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் களங்களில் பல்வேறு நிகழ்வுகள் நம்மை உசுப்புகின்றன. அவை குறித்து அவ்வப்போது எழுதிய எளிய உரையாடல்களின் தொகுப்பே இந்நூலாகும்.

        இந்திய ஒன்றிய  அரசின் பாசிச நடவடிக்கைகள், காவியமயமான இந்திய அரசாங்கம், இந்திய ஜனநாயகத்தின் நிலை, ஒடுக்கப்படும் உரிமைப் போராட்டங்கள், பிளவுபடும் சமூகங்கள், பெரியாரின் இன்றையத் தேவை, பெரியாரியம்அம்பேத்கரியம் - மார்க்சியம் ஆகிய கருத்தியல்  ஒருங்கிணைப்பின் அவசியம், தமிழ்நாட்டின் மதுவிலக்குக் கொள்கைகள், உள்ஒதுக்கீட்டால் கேள்விக்குள்ளாகும் இடஒதுக்கீட்டின் அறம் போன்றவை குறித்த பார்வைகளை இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் தொட்டுச் செல்கின்றன. இவை முழுமையான அலசல்கள் அல்ல; பிரச்சினைகளை அடையாளம் காட்டும் விவாதத்திற்கான சில குறிப்புகள் மட்டுமே.

       மொழி இங்கு நீண்டகாலமாக உணர்வுப்பூர்வமானதாக உருமாற்றப்பட்டுள்ளது. தமிழ் மொழியைப் போலவே தமிழினம் சார்ந்த சொல்லாடல்கள் மிகவும் உணர்வு சார்ந்ததாக உள்ளன. இவற்றை அறிவியல்பூர்வமாக, புறவய நோக்கில் அணுகவேண்டிய தேவையை மொழி குறித்தான இரு கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தை கணிக்க முடியாமல் தடுமாறிய நிலை கஜா புயலிலும் வெளிப்பட்டதை கஜா பற்றி எழுதப்பட்ட கட்டுரை விவரிக்கிறது. நாம் இன்னும் தொடர்ந்து கற்கவேண்டிய பாடங்களை நினைவூட்டுகிறது.

        நீதிநாயகம் கே.சந்துருவின் கல்வி சமத்துவத்தை வலியுறுத்தும் அறிக்கை, அதன் இன்றைய நிலை, கல்வித்துறையின் செயல்பாடுகளை அலசும் கட்டுரையும் உண்டு. கருத்தியல் சார்ந்து மக்களை அணிதிரட்டிய பல மக்கள் போராளிகளின் நேர்காணல் தொகுப்புநூல் ஒன்றின் மதிப்புரையும் அவசியம் கருதி இங்கு இடம்பெறுகிறது.

        சமூக வெளியில் உணவிற்கு முதன்மையான இடமுண்டு. நாம் எதை உண்ணவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பாசிச அரசியல் ஒருபுறமிருக்க, நாம் உண்ணும் உணவு எத்தகையது, அதன் பின்னால் அணிவகுக்கும் அரசியலையும் உணவின் தன்மை மற்றும் அதன் வீச்சுகளையும் உணவு குறித்த இறுதியிலுள்ள மூன்று கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. இவை வளரிளம் பருவக் குழந்தைகளுக்காக எழுதப்பட்டவை. தமிழ்நாட்டின் அறிவுலக அடையாளமாக இருக்கும் சென்னைப் புத்தகக் காட்சியில் வாசகர்கள் படும் இன்னல்கள் ஆண்டுதோறும் சுட்டப்பட்டும் களையப்படாத நிலையைப் பேசும் கட்டுரை ஒன்றும் இடம் இதில் பெறுகிறது.

           இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகளை பெரிய ஆய்வு நோக்கில் எழுதியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இவற்றைச் சமகால அரசியல் நிலைப்பாடுகளின் மீதான உடனடி எதிர்வினையாகக் கொள்ளலாம். இக்கட்டுரைகளில் பல பேசும் புதியசக்தி இதழ்களில் வெளியானவை. எனக்கு முழு சுதந்திரமளித்தும்  எழுதத்தூண்டியும் என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்திவரும் பேசும் புதிய சக்தி முதன்மை ஆசிரியர் ஜெ.ஜெயகாந்தன் அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

     இரு கட்டுரைகள் காக்கைச் சிறகினிலே... இதழில் வெளிவந்தவை. என்றும் இளைஞராக உற்சாகத்துடன் இதழியல் பணிகளை மேற்கொள்ளும் தோழர் வி.முத்தையா அவர்களுக்கும் கட்டுரைகளை வெளியிட்ட இதழுக்கும் நன்றிகள் உரித்தாகுக. உணவு குறித்த கட்டுரைகள் 'பொம்மி' சிறுவர் இதழில் வெளியானது. அப்போது பொறுப்பாசிரியராக இருந்த எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் அவர்களின் வற்புறுத்தலின் பேரில் அந்த மூன்று கட்டுரைகளும் எழுதப்பட்டன. அவருக்கும் எனது நன்றி.

       எழுத்தாளரும் தேர்ந்த விமர்சகருமான இரா.மோகன்ராஜன் பல்வேறு பணிகளுக்கிடையில் இந்நூலுக்கு சுருக்கமான, சிறப்பான அணிந்துரை ஒன்றை அளித்திருக்கிறார். அவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

    எனது நூல்களில் மூன்றாவதாக இந்த நூலை வெளியிடும் நன்னூல் பதிப்பகத் தோழர் மணலி அப்துல்காதர்  அவர்களுக்கும் நன்றி. அவர் இந்நூலிலுள்ள மொழி குறித்த கட்டுரை ஒன்றை நன்னூல்இருமாத இதழில் வெளியிட்டு ஊக்குவித்தார். நூலையும் அட்டைப் படத்தையும் வடிவமைத்த சு.கதிரவன் அவர்களுக்கும் நூலை வாசிக்கும் உங்களுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதில்  மகிழ்ச்சி அடைகிறேன்.

 

(மொழி - சமூகம் - அரசியல் நூலில் இடம்பெற்ற முன்னுரை.)

 

 

நூல் விவரங்கள்:

 

மொழி - சமூகம் - அரசியல்  (கட்டுரைகள்)

மு.சிவகுருநாதன்

முதல்பதிப்பு: டிசம்பர் 2024

பக்கங்கள்: 154   விலை: ரூ. 180

ISBN: 978-93-94414-99-0

 

நூல் வெளியீடு மற்றும் கிடைக்குமிடம்:

 

நன்னூல் பதிப்பகம்,

மணலி – 610203,

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் – மாவட்டம்.

அலைபேசி: 9943624956  

மின்னஞ்சல்: nannoolpathippagam@gmail.com

G Pay: 8610492679                   

திங்கள், மார்ச் 10, 2025

03. மனுநீதிச் சோழன் கதைகள்

 

வரலாறும்  தொன்மமும்  - தொடர்

03. மனுநீதிச் சோழன் கதைகள்

மு.சிவகுருநாதன்

 


       திருவாரூரைச் சேர்ந்தவர்களுக்கு மனுநீதிச்சோழன் குறித்த பெருமித உணர்வு உண்டு. இதற்கு கலைஞர் கருணாநிதி கூட விதிவிலக்கல்லர். இந்திய அரசியல்வாதிகளில் மனுதர்மத்தை மிகச்சரியாக இனங்கண்டு எதிர்கொண்டவர்கள் பெரியார், அம்பேத்கர் இருவர் மட்டுமே. பெரியார் வழிவந்த கலைஞர் உள்ளிட்ட பலரும் தங்களை மனுநீதிச் சோழன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைபவர்கள்.

    உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு, கோவையில் நடந்த  கட்சி மாநாடொன்றில் கலைஞர், “நான் பசுவுக்காக மகனைப் பலியிட்ட மனுநீதிச் சோழன் பிறந்த மண்ணில் பிறந்தவன்என்று பெருமை பொங்க பேசினார். இவரைப் போலவே நவீன மனுநீதிச்சோழன், இராஜராஜசோழன் என்றெல்லாம் அழைக்கப்படுவதை தமிழக அரசியல்வாதிகள்  விரும்புகின்றனர். சென்ற மாதம் (ஜனவரி 2025) தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகைதிராவிட மாடல்அரசை மனுநீதிச் சோழன் அரசு என்று பாராட்டினார். ஒரு குறிப்பிட்ட சாதியின் திருவுளச்சீட்டு முறையான குடவோலை முறையை மக்களாட்சி என்று உன்னதப்படுத்துவதைப்போல் இங்கு மனுதர்மம் சமநீதியாக கற்பிதம் செய்யப்படுகிறது.

       மனுநீதி என்று சொல்லப்படுகின்ற மனு தர்மத்தை நிலைநாட்டுவதற்காக புனையப்பட்டதே  மனுநீதிச் சோழன் கதை என்பதே உண்மை. ஆனால் அவற்றை வெளிப்படுத்த சோழன்என்கிற கதையாடல் தடுக்கிறது.   சிலப்பதிகாரத்தில் கண்ணகி, பிராமணர், பசுக்கள் நீங்கலாகப் பிறர்  வாழும் மதுரையை எரிக்கிறார். வருண தர்மமும் மனுநீதி உள்ளிட்ட சாஸ்திர சட்டத் தொகுப்புகளும் புராணங்கள், கதைகள் வாயிலாக மக்கள் மனத்தில் தீவிரமாக பதிக்கப்பட்டன. இந்தப் புனைவுகளின் சமகால முக்கியத்துவத்திற்காக சோழன்என்ற பெயர் கூடுதல் கவனிப்பு பெறுவதாகவும், இன்றும் பலரைக் கொண்டாட வைக்கும் சூழ்ச்சிக்காரர்களின் செயலாகவும் அமைந்துவிட்டது.

      அப்படி ஒரு மன்னன் இருந்தற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை. அது வெறும் புனைவு; அதாவது தொன்மம். மனு தர்மத்தை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கப் பார்ப்பனியம் உருவாக்கிய கதையாடல். இது ஊருக்கு ஊர்  ஒரு மன்னன்  வம்சப்  பெயருடன் விரியும் தன்மை கொண்டது.

        இந்தத் தொன்மத்தை வரலாறாக புனைவருவாக்கம் செய்ய பலர் பல்வேறு வழிகளில் முயற்சி செய்கின்றனர். அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை (கி.மு. 205 இல் இருந்து கி.மு 161) மனுநீதிச் சோழனாக மகாவம்சம் குறிப்பிடுகிறது. இக்கதை மகாவம்சத்தில் கூறப்பட்டாலும் இறந்த மகன் மற்றும் பசுங்கன்று மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதாகக் கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதே ஆண்டில் மனுநீதிச்சோழன் திருவாரூரை ஆண்டதாக  திரைக்கதை எழுதுவதும் உண்டு. சிபிச்சக்கரவர்த்தி கதையும் இவ்வாறு உற்பத்தியானதே. வேறு  எந்த வரலாற்றுத் தரவுகளும் இல்லாத நிலையில் காலத்தால் மிகவும் பிந்தைய,  கி.பி. 1123 இல் விக்கிரம சோழன் (கி.பி. 1118 – கி.பி. 1136) கல்வெட்டில் இடம்பெறும் மனுநீதிச் சோழன் கதையைக் குறிப்பிட்டு தொன்மத்தை வரலாறாக்க குடவாயில் பாலசுப்பிரமணியன் போன்றோர் முனைகின்றனர். பல்வேறு புராணக்கதைகள் கல்வெட்டுகளில் உண்டு; அக்கதை ஒரு கல்வெட்டில் இருப்பதாலே அது வரலாற்று உண்மையாகிவிடாது.   

     மனுச்சோழன் புராணக்கதை சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுவது இலக்கியச் சான்றாக முன்வைக்கப்படுகிறது.

தேரா மன்னா! செப்புவது உடையேன்;

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,

புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,

வாயில் கடை மணி நடு நா நடுங்க,

ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்

அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும் பெயர்ப் புகார் என் பதியே;

        என்ற சிலப்பதிகார வழக்குரை காதையில் மனுநீதிச்சோழன் இடம்பெற்றாலும் திருவாரூர் இல்லை; புகார் நகர்தான் (பூம்புகார்) குறிப்பிடப்படுகிறது. இலக்கியச் சான்றுக்கு எந்த அளவிற்கு வரலாற்று முலாம் பூசமுடியும் என்பதும் கேள்விக்குரியது. சிபிச்சக்கரவர்த்தி வடநாட்டு மன்னன் புனைவும் மனுதர்மத்தை நிலைநாட்ட உருவாக்கிய மனுநீதிச்சோழன் புனைவும் இங்கு கையாளப்படுகிறது.

      பெரிய புராணத்தில் திருவாரூர் சிறப்பைக் கூறுமிடத்தில்  மனுநீதிச்சோழன் கதை முழுமையாக இடம்பெறுகிறது. சிலப்பதிகாரத்திற்கும் பெரிய புராணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் மனுநீதிச்சோழன் குறித்த எவ்விதச் செய்திகளும் இல்லை. குறிப்பாக திருவாரூர் கோயில் குறித்து பதிகங்கள் பாடிய அப்பர், சுந்தரர், திருஞான சம்மந்தர் போன்றோர் மனுநீதிச்சோழன் குறித்து ஏதும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

         பிற்காலச் சோழர்களும் பாண்டியர்களும் மனுநீதியை மிகத் தீவிரமாக அமல் செய்தவர்கள். பிற்காலச் சோழர்களின் மெய்கீர்த்திகளில் வரும் 'மனுவாறு விளங்க', 'மனுநெறி', 'மனுவொழுக்கம்' என்ற சொல்லாட்சி வாயிலாக பிற்காலச் சோழர்கால மனுதர்ம ஆட்சியை விளங்கிக் கொள்ளலாம். முதலாம் குலோத்துங்கனுக்கு சுங்கம் தவிர்த்த சோழன், கரிகாலன், திருநீற்றுச் சோழன் என்பனவற்றோடு மனுகுலதீபன் என்னும் பட்டப்பெயரும் உண்டு. இதிலிருந்து மனுநீதிச்சோழன் என்பது பிற்காலச் சோழர்களுக்கு பலருக்கு வழங்கப்பட்ட சிறப்புப்பெயர் என்றுகூட கருதலாம்.

       சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுநீதிச் சோழனுக்கு சிலை வைத்துள்ளனர். திருவாரூரில் மனுநீதிச் சோழனுக்கு மணிமண்டபம் கட்டியாகிவிட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தியாகி பி.எஸ்.ஆர். மணிமண்டபமும் உள்ளது. கர்நாடகாவில் பிறந்த விடுதலைப் போராட்ட வீரர் பி.சினிவாசராவ் கீழத்தஞ்சையில் மக்கள் பணியாற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பப்பட்டவர். அடித்தட்டு மக்களுடன் மக்களாக வாழ்ந்த அவர் மரணத்திற்குப் பிறகு திருத்துறைப்பூண்டியில் மண்ணில் அடக்கம் செய்யப்பட்டவர். இந்த மணிமண்டபங்கள் வாயிலாக வரலாறும் புனைவும் ஒரே நேர்கோட்டில் இணைக்கப்படுகிறது.

       தமிழ்நாட்டு அரசின் நான்காம் வகுப்பு இரண்டாம் பருவ தமிழ்ப் பாடநூலில்  'மனுநீதிச் சோழன் நாடகம்'  பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நீதி வழங்கும் முறைக்கு மனுநீதிச் சோழனை முன்னுதாரமாகக் காட்டுகின்றனர். எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் நீதித்துறை பாடத்தில் மனு ஸ்மிருதி போன்ற இந்து மதச்சட்டங்களை சமூகக் கடமைகளாக வரையறுக்கின்றன. இந்து சட்ட மூலங்களில் மனு தர்ம சாஸ்திரமும் (மனு ஸ்மிருதி) ஒன்று. இது ஒருவரால் எழுதப்பட்டதல்ல. பலரால் எழுதப்பட்ட ஒரு தொகுப்பு நூலாகும். கி.மு. 150க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியதாக இருக்குமென ஆய்வாளர் ஜெய்ஸ்வால் கணிக்கிறார்.

      மனுவின் சட்டங்களை மக்களிடம் பதியவைக்கவும் மேலாண்மையை நிறுவவும் உள்ளூர் மொழி மற்றும் வழக்காறுகளில் நிறைய கதைகள், புராணங்கள் உற்பத்தியாயின. அந்த வகையில் கட்டப்பட்ட புனைவுதான் மனு நீதிச் சோழன்என்னும் புராணம். மனு நீதியுடன் உள்ளூர் அரச வம்சமான சோழன்என்கிற அடைமொழி இணைக்கப்படும்போது இவர்களது நோக்கம் எளிதில் நிறைவேறிவிடுகிறது.

      மனுநீதிச் சோழன் புராணத்தையொட்டி திருவாரூரில் எழுப்பப்பட்ட சிறிய ரதக் கோயிலை கல்தேர் என்று அழைக்கின்றனர். எனவே இது வீதிகளில் இழுக்கப்படும் தேர் என்றுகூட நினைத்துக் கொள்வோர் உண்டு. இதுதான் மனுநீதிச்சோழன் ஓட்டிய தேர் என்று மக்களை நம்ப வைத்துள்ளனர். தேர் வடிவக் கற்கோயில் என்றே சொல்ல வேண்டும். இத்தகைய கோயில்களுக்கு நீண்ட வரலாறு உண்டு.

        செங்கல், மரம் போன்றவற்றால் அமைக்கப்பட்ட கோயில்கள் காலத்தால் அழிந்துபோயின. இவை அழியாமலிருக்க பல்லவர்கள் காலத்தில் கருங்கற்கோயில்களும், குடைவறைக் கோயில்களும் நிர்மாணிக்கப்பட்டன. முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லபுரத்தில் தேர்க் கோயில்களை எழுப்பினான்.  இத்தகைய ஒற்றைக் கற்கோயில் பாணியைப் பிற்கால மன்னர்கள் பின்பற்றி கற்றளியாகவும் மண்டபமாகவும் தேர் வடிவமைப்பில் அமைக்கத் தொடங்கினர். பஞ்ச பாண்டவர் ரதங்கள் எனப்படும் ஐந்து ரதக் கோயில்களும் தேர்க்கோயில்கள் வகையைச் சேர்ந்தவை. ஐந்து ரதங்கள் என்று சொல்லப்படும் பாறைக்கோயில்களுக்கு சூட்டப்படும் பெயர்களான தர்மராஜா, அர்ச்சுனன், பீமன், சகாதேவன், கணேசன் ஆகியவற்றுக்கும் அந்தப் பெயர்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

       தருமராசர் தேர் எனப்படும் கோயில் மூன்று அடுக்குகள் கொண்ட விமானத்தை உடையது. பீமசேனன் தேர் எனப்படும் கோயில் நீண்ட சதுர அமைப்பில் காணப்படுகிறது. அருச்சுனன் தேர் எனப்படும் கோயிலின் விமானம் நான்கு நிலைகளைக் கொண்டது. திரெளபதி ரதம்  துர்க்கை என்னும் கொற்றவைக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும்.

      சகாதேவன் தேர் எனப்படும் கோயில் தன் பின் புறத்தில் யானையின் முதுகைப் போன்ற அமைப்பினையுடையது. இது பண்டைய கால பவுத்த விகாரங்களைப் போன்ற அமைப்புடையது. இவற்றை முன் மாதிரியாகக் கொண்டு தேர் வடிவக் கோயில்கள்  பல அமைக்கப்பட்டன. சிதம்பரம்       நடராஜர் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், நாச்சியார் கோயில், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மற்றும் சாரங்கபாணி கோயில், திருவாரூர் தேர்க்கோயில் போன்றவை இதன் தொடர்ச்சியாகும். 

       இப்பாறைக் கோயில்களை மாடக்கோயில்கள், சாதாரண கோயில்கள் என்று இருவகையாகப் பிரிப்பர். இவற்றை மீண்டும் திராவிடக் கோயில்கள், வேசரக் கோயில்கள் என்றும் பிரிக்கலாம். அர்ச்சுனன் ரதம், தர்மராஜா ரதம், சகாதேவ ரதம் ஆகிய பாறைக்கோயில்கள் மாடக்கோயில் வகையைச் சேர்ந்தவை. பீம ரதம், கணேச ரதம் ஆகியவை வேசரம் என்ற பிரிவில் வருபவை. எஞ்சியவை அனைத்தும் திராவிடம் என்னும் பிரிவில் அடங்கும். (எ.கா.) திரெளபதி ரதம். திராவிட கட்டிடக்கலைப் பிரிவைச் சார்ந்த இவற்றை இளங்கோயில் என்றும் கூறுவர். இதற்கு வடமொழியில் ஶ்ரீகரக்கோயில் என்று சொல்லப்படுவதை மயிலை சீனி வேங்கடசாமி தனது நூல்களில் விளக்குகிறார்.

         வேதங்கள் மூலம் நால்வருணத்தை நிலைநிறுத்தி தங்களுடைய மேலாண்மையை உறுதி செய்து கொண்ட பிராமணர்கள் சட்டம் இயற்றக் கூடிய நிலையில் இருந்ததால் பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு ஆகியன மனுவால் தடை செய்யப்பட்டன. “வேதங்கள் சுருதிகள் மற்றும் சுமிருதிகள் (வேத சாஸ்திரங்கள்) என்றும் அழைக்கப்படுகின்றன.  சுருதிகளும், சுமிருதிகளும் எல்லா வகையிலும் மீமாம்ச (விவாதம்) எல்லைக்கு அப்பாற்பட்டவை.  துவிஜர்கள் (உயர் சாதியைச் சேர்ந்த இருபிறப்பாளர்களாகிய பார்ப்பனன், சத்திரியன், வைசியன்) யாராவது சுருதிக்கோ அல்லது சுமிருதிக்கோ அடி பணிய மறுத்தால் சட்டப்படி அவர்கள் சமூகத்தை விட்டு விரட்டி அடிக்கப்படுவார்கள்.  ஏனெனில் வேதங்களை நிந்திப்பவர்கள் வேத விரோதிகளாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்”, (பக்.65) இந்திய வரலாற்றில் பகவத் கீதை நூலில் பிரேம்நாத் பசாஸ் எடுத்துக்காட்டுகிறார்.    

       சூத்திரர்கள் யார்?’  என்ற ஆய்வு நூலை எழுதிய அண்ணல் அம்பேத்கர் மனு ஸ்மிருதி, ஆபஸ் தம்ப தர்ம சூத்திரம், வாசிட்ட தர்ம சூத்திரம், விஷ்ணு ஸ்மிருதி, கௌதம தர்ம சூத்திரம், பிரஹஸ்பதி ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி போன்ற பிராமண சட்ட நடைமுறைகள் சூத்திரர்களுக்கு எதிரான சொன்னவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்தளிக்கிறார்.

1.சூத்திரர்கள் சமுதாய வரிசையில் கடைசி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

2.சூத்திரர்கள் தூய்மையற்றவர்கள்.  அதனால் புனிதச் செயல்களை அவர்கள் பார்க்கும்படியோ, கேட்கும்படியோ செய்யக் கூடாது.

3.மற்ற வகுப்பினருக்கு மதிப்பு கொடுப்பது போல் சூத்திரர்களுக்கு மதிப்பு கொடுக்கக் கூடாது.

4.சூத்திரனுடைய உயிருக்கு எவ்வித மதிப்பும் கிடையாது.  அதனால் அவனுக்கு எந்தவித நஷ்டஈடும் கொடுக்காமல் யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்றுவிடலாம்.  அப்படி ஏதாவது நஷ்ட ஈடு கொடுப்பதாயின் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியருக்காகக் கொடுப்பத போலல்லாது மிகச் சிறிதளவே ஒரு தொகையைக் கொடுத்தால் போதும்.

5.சூத்திரன் அறிவைப் பெறக் கூடாது.  அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயலுமாகும்.

6.ஒரு சூத்திரன் சொத்துக்களைச் சேர்க்கக் கூடாது.  ஒரு பிராமணன் அவனது சொத்துக்களை தன் விருப்பப்டி எடுத்துக் கொள்ளலாம்.

7.சூத்திரன் அரசாங்க பதவியில் இருக்கக் கூடாது.

8.சூத்திரனது கடமைகளும், மீட்சி பெறுவதும் மேல் சாதிக்காரர்களுக்குப் பணியிடை செய்வதில் தானிருக்கிறது.

9.மேல் சாதிக்காரர்கள் சூத்திரர்களுடன் கலப்பு மணம் செய்து கொள்ளக் கூடாது.  மேல் சாதிக்காரர்கள் சூத்திரப் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் ஒரு சூத்திரன் ஒரு உயர் சாதிப் பெண்ணைத் தொட்டு விட்டாலோ, அவன் கடுமையான தண்டணைக்கு உள்ளாக வேண்டும்.

10.சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்; எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன் (பக். 80-81, சூத்திரர்கள் யார்? - அம்பேத்கர்  தொகுதி - 13)

        ஆனால் மறுபுறத்தில் பிராமணர்களுக்கு எல்லையில்லா சலுகைகள் வழங்கப்பட்டன. அவர்களுடைய குற்றங்களுக்கு தண்டனை அளிப்பதே தேசத்துரோகம் என்பதைப் போன்ற விதிகள் மனுவால் கட்டமைக்கப்பட்டன. இவற்றைப் பின்பற்றிய சத்திரிய அரசர்கள் பிராமணர்களுக்கும் மனுதர்மத்திற்கு அடங்கிய பொம்மை அரசர்களாக இருந்தனர்.

              மனு 8 ஆவது அத்தியாயம் 380 ஆவது சுலோகத்தில் பிராமணன் எப்பேர்பட்ட பாவமான செய்கை செய்தாலும், அவனைக் கொல்லக் கூடாது, காயமும் செய்யக் கூடாது; வேண்டுமானால் அவன் பொருளை அவனுக்குக் கொடுத்து வேற்றூருக்கு அனுப்பி விடலாம்,  என்றும் 381 ஆவது சுலோகத்தில்எவ்வளவு பெரிய குற்றமானாலும், பிராமணனைக் கொல்ல வேண்டுமென்று அரசன் மனதிலும் நினைக்கக் கூடாதுஎன்றும், 379 ஆவது சுலோகத்தில், பிராமணனுடைய தலையை மொட்டையடிப்பது கொலை தண்டனையாகும்” (குடிஅரசு - கட்டுரை 13.12.1925): (பக்.3821, பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்- வே. ஆனைமுத்து தொகுதி: 4) என்று மறு சாஸ்திரம் சொல்வதை  தந்தை பெரியார் பட்டியலிடுகிறார்.      

          பிற்கால சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனை (கி.பி. 966கி.பி. 969) கொலை செய்தது சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்கிற நான்கு உடன்பிறந்தோர் என்றும் அவர்களுள் இருவர் பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருந்தபடியால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்த அந்தணர்கள் என்று தி.வை.சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுவார். (பிற்காலச் சோழர் வரலாறு)

       அன்று மனுநீதியே அரச நீதியாக கோலோச்சியது. இதன் காரணமாகவே முதலாம் ராஜராஜன் (கி.பி. 985 கி.பி. 1014) ஆட்சிக்காலத்தில் தன்னுடைய அண்ணன் ஆதித்திய கரிகாலனைக் கொன்ற (கி.பி. 969) பிராமணர்களைப் பிடித்துத் தண்டிக்கும் நிலை வரும்போது அந்தக் கொலையாளிகளுக்கு மனுநீதிப் படிதான் தண்டனை வழங்கப்பட்டதை அறிய முடிகிறது. அவர்களது நிலங்களை பறிமுதல் செய்து கோயிலுக்கு உரிமையாக்கியதை உடையார்குடிக் கல்வெட்டு (கி.பி 986 ஏப்ரல் 23) வாயிலாக அறியமுடிகிறது.

      குற்றவாளிகள் பார்ப்பனர்கள் என்பதால் மனு தர்மப்படி, அவர்களுக்கு உடலை வருத்தும் தண்டனைகள் ஏதும் வழங்கப்படவில்லை. மாறாக அவர்களது நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்த பணத்தில் காட்டுமன்னார்கோயில் சிவன் கோயிலில் விளக்கேற்றவும் பார்ப்பனர்களுக்கு உணவு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. சத்திரிய அரசாட்சி என்கிற பெயரில் மனு தர்ம ஆட்சியே என்று நடந்தது எனபதை இத்தகைய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. இதைப் பொற்காலமாக கற்பிதம் செய்துகொள்ளும் அளவிற்கு வரலாறுகள் திரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன.

      மனு தர்மம் - மனு ஸ்மிருதிமனுநீதி என்று எப்படிச் சொன்னாலும் இந்தப் பாசிச சட்டத்தொகுப்பை நியாயப்படுத்திவிட முடியாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தைப் பிறப்பின் அடிப்படையில்  பாகுபடுத்தியும் அத்தகைய கருத்துகளை உன்னதப்படுத்தியும் கற்பிதம் செய்யப்பட்ட புனைவுகள் வரலாற்றில் நிறைந்துள்ளன. அவற்றை அதன் அரசியலோடு இணைத்து அணுகுவதும், மெய்ப்பொருள் காண்பதும் அவசியமாகும்.

      

-         வரலாற்றுக்  கற்பனைகள் தொடரும்.

 

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ் மார்ச் 2025