வெள்ளி, பிப்ரவரி 07, 2025

02. கிருஷ்ணதேவராயர் – தெனாலிராமன் கதைகள்

 

வரலாறும்  தொன்மமும்  - தொடர்

02. கிருஷ்ணதேவராயர்தெனாலிராமன் கதைகள்

மு.சிவகுருநாதன்


 

          தில்லி சுல்தானியத்திற்கு எதிராக தென்னகத்தில் உருவான புதிய அரசு விஜயநகர அரசாகும். இது ஹரிஹரர், புக்கர் எனும் துக்ளக் அரசில் பணிபுரிந்து வந்த இரு சகோதரர்களால் உருவாக்கப்பட்டது. சிருங்கேரி சைவ மடத்தின் வித்யாரண்யரைக் குருவாக ஏற்ற இவர்கள் தொடக்கத்தில் தங்களது அரசை வித்யா நகர் என்றே அழைத்தனர். விஜயநகர இந்து அரசு (1336-1565) தலைக்கோட்டை போர் வரை 200 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்சித் தலைமை இந்து மன்னரிடம் இருந்தபோதிலும் படைவீரர்களில் இஸ்லாமியர்களும் இருந்தனர். இதைப்போலவே தில்லி சுல்தானியம், பின்னாளைய மொகலாய அரசுகளில் இந்துப் படைவீரர்கள் பணியாற்றினர். அரசும் மக்களும் என்றும் மதரீதியாகப் பிளவுபட்டிருக்கவில்லை.

        வெற்றி நகரம் எனப்பட்ட விஜயநகரம் துங்கபத்திரை நதியின் தென்கரையில் அமைந்திருந்தது. விஜயநகர அரசு ஒரே வம்சத்தால் ஆளப்படவில்லை. சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு என்னும் நான்கு அரசு மரபுகள் இதனை ஆண்டன. துளுவ மரபில் வந்த கிருஷ்ணதேவராயர் மிகச்சிறந்த அரசராகவும் அறிஞராகவும் போற்றப்படுகிறார். இதுவே வைதீகர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது போலும்! எனவே புனையப்பட்ட கதைகள் மூலம் அரசரை தரம் தாழ்த்தும் பணியைச் செய்துள்ளனர். இன்றும் அந்தக் கதைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் அரசரின் அரும்பணிகளுக்கு இல்லை என்பதே உண்மை நிலை.

           இவர் தெலுங்கு, கன்னட மக்கள் மத்தியில் பெருவீரனாக மதிக்கப்படுபவர். ஆந்திர போஜன், கன்னட ராஜ்ய ரமணன் ஆகிய பட்டப்பெயர்கள் இவற்றை எடுத்துக்காட்டும். குதிரையேற்றம், மற்போர் ஆகியவற்றில் விரும்பிப் பங்கேற்று உடல்தகுதியைப் பேணினார். பல்வேறு போர் வெற்றிகளைப் பெற்றார். இவரது அமைச்சர் அப்பாஜியின் சூழ்ச்சியால் கலிங்க அரசர் பிரதாபருத்ர கஜபதியை வென்று, இறுதியில் அவருடன் சமாதான உடன்படிக்கை செய்து, அவரது மகள் ஜகன்மோகினி எனும் துர்காவதியை மணந்தார். கிருஷ்ணா நதிக்கு வடக்கேயுள்ள கலிங்க நாட்டை அவரிடமே திரும்ப ஒப்படைத்தார். அவரது அவையிலிருந்த லெட்சுமிதரர், திவாகரர் ஆகிய இரு சமஸ்கிருதப் பண்டிதர்களை தனது அரசவைக்கு அழைத்துக் கொண்டார். இவர்கள் ஆகமம், சோதிடம், வேதாந்தம் குறித்த நூல்களை எழுதியுள்ளனர்.  மேலும் ஜகன்மோகினியும் சமஸ்கிருதப் புலமை உடையவர். இவர் சமஸ்கிருதச் செய்யுள்களை இயற்றியுள்ளார்.

        தேவராயர் தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையுடையவராகத் திகழ்ந்தார். இவர் தெலுங்கில் ஆமுக்த மால்யதா எனும் காவியத்தைப் படைத்தார். இதுசூடிக்கொடுத்த சுடர்க்கொடிஆண்டாளைப் பற்றியதாகும். பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள் (கோதை தேவி) பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். ஜாம்பாவதி கல்யாணம் எனும் நாடக நூலையும் எழுதியுள்ளார். இவர் காலத்தில் தெலுங்கு மொழி வளமடைந்தது. சமஸ்கிருதம், பிராகிருதம், கன்னடம், தமிழ் ஆகிய மொழி நூல்களும் இயற்றப்பட்டன. இவை அரச ஆதரவால் சாத்தியமாயிற்று. மேலும் ஓவியம், சிற்பம், இசை, நடனம், இலக்கியம், நாடகம், கட்டடக்கலை என அனைத்து கலைகளும் செழுப்புற்றன. வைணவம் அரச மதமாக இருந்த போதிலும் சைவம், சமணம், பவுத்தம் ஆகிய மதங்கள் சுதந்திரமாக இயங்கின. வல்லபாச்சாரியர் என்ற சமண அறிஞருக்கு தேவராயர் கனகாபிஷேகம் செய்வித்து மகிழ்ந்தார். 

      விஜயநகர அரசு வெடிமருந்துகள், குதிரைகள் என அன்றைய நிலையில் நவீனமயமான ராணுவத்தை கொண்டிருந்தது. அப்பாஜி என்ற சாளுவதிம்மர் என்ற அமைச்சர் படைகளை வழி நடத்தினார். இவரும் ஒரு பன்மொழிப் புலவர். பாலபாரதத்திற்கு மனோரமா என்ற பெயரில் உரை எழுதினார். தேவராயர் படையெடுப்புகள், சுங்க வரி போன்றவற்றில் கிடைத்த பெருஞ்செல்வத்தைக் கொண்டு ஹம்பியில் பல்வேறு கோயில்களை அமைத்தார். அவற்றில் நுழைவுக் கோபுரங்களை நிர்மாணித்தார். அவை அவர் பெயராலே ராயகோபுரம் என வழங்கப்படுகின்றன. போர்ச்சுகீசிய, அரேபிய வணிகர்கள் மன்னருக்கு நெருக்கமாக இருந்தனர். இதனால் வணிக உறவு மேம்பட்டது. சீனா, தென்கிழக்காசிய நாடுகள், இலங்கை போன்றவற்றுடன் வணிகம் நிலவியது. இதனால் சுங்கவரி வருமானம் அதிகரித்தது. கிருஷ்ணதேவராயர் நீர்ப்பாசன வசதிக்காக ஏரிகள், அணைகளைக் கட்டினார். தேவராயர் (1509-1529) 20 ஆண்டுகாலமே ஆட்சியில் இருந்தாலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்தவராவார்.

         கிருஷ்ணதேவராயர் அவையில் அஷ்டதிக் கஜங்கள் எனும் எட்டு அறிஞர்கள் இருந்தனர். ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனை, புஷ்பதந்தா, சர்வபவுமா, சுப்ரதீகா என எட்டுத் திசைகளிலும் யானைகள் பூமியைக் காப்பதாக இந்துத் தொன்ம நம்பிக்கை. இன்று மனிதருக்குள் பல மதயானைகள் பிடித்திருப்பதைஎட்டுத் திக்கும் மதயானைநாவலில் நாஞ்சில்நாடன் எடுத்துக்காட்டியிருப்பார். எட்டு யானைகள் உலகைக் காக்கிறதோ இல்லையோ இந்த எட்டுப்பேரும்   கிருஷ்ணதேவராயர் அவையைக் காக்கும் தூண்களாக விளங்கினர். அக்காலத்தில் மன்னர்கள், பிரபுக்கள், அமைச்சர்கள், மதத்தலைவர்கள், படைத்தலைவர்கள் போன்றோர் பல்லக்குகள் மற்றும் யானைகளில் செல்லும் வழக்கம் இருந்தது. தேவராயர் அவைக்களப் புலவர்களை பல்லக்கு மற்றும் யானைகளில் ஏற்றி மரியாதை செய்து மகிழ்ந்தார். 

         அல்லசானி பெத்தண்ணா, நந்தி திம்மண்ணா, மாதய்யாகாரி மல்லண்ணா, தூர்ச்சடி, அய்யாலராஜூ ராமபத்ருடு, பிங்கலி சூரண்ணா, ராமராஜ பூஷன், தெனாலி ராமகிருஷ்ணா ஆகியோர் இவர்களில் அடங்குவர். இவர்கள் அனைவரும் பெரிய அறிஞர்கள்; காவியங்களைப் படைத்தவர்கள். கிருஷ்ணதேவராயரைப் போலவே இவர்களும் பல நூல்களை எழுதியுள்ளனர். இவர்களது காலம் தெலுங்கு இலக்கிய உலகில் பிரபந்தங்களின் காலம்எனப் போற்றப்படுகிறது. இவர்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

    அல்லசானி பெத்தண்ணா:

              பிராமணரான இவர் அஷ்டதிக்கஜங்களில் முதன்மையானவர்; சைவராக இருந்து வைணவரானவர்; பன்மொழிப் புலவர். ‘தெலுங்குக் கவிதையின் பிதாமகன்பட்டமளித்து கிருஷ்ணதேவராயர் போற்றிப் பாதுகாத்தார். மனு சரித்திரதத்தை சமஸ்கிருதத்திலிருந்து தெலுங்கிற்கு (மனு சரித்திரமு) மொழிபெயர்த்தார். ஹரிகதா சாரம் என்ற நூலையும் எழுதினார். அரசருடன் எங்கும் சென்றார். அரசருக்குரிய பல்லக்கு, யானை மரியாதைகள் இவருக்கும் கிடைத்தன.

நந்தி திம்மண்ணா:

       பிராமணரான இவர் சைவராக இருந்தபோதிலும் படைப்புகள் அரச ஆதரவு பெற்ற வைணவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இவர் பாரிஜாதாபஹரணம் நூலை எழுதி கிருஷ்ணதேவராயருக்கு அர்ப்பணித்தார். அன்றைய காலத்தில் காவியங்களை கடவுளுக்கோ அல்லது அவருக்கு நிகரான மன்னனுக்கோ அர்ப்பணிப்பது வழக்கமாக இருந்தது. திருஷ்ட கலி தண்டகம், வாணி விலாசம் ஆகிய நூல்களையும் எழுதினார். வாணி விலாசம் நூல் காலத்தால் அழிந்துபோனது.

மாதய்யாகாரி மல்லண்ணா:

       அவந்தி மன்னர் ராஜசேகரரின் வெற்றிகளையும் காதலையும் சொல்லும் தெலுங்குக் காப்பியமான ராஜசேகர சரித்திரத்தை இயற்றினார். இவரும் பிராமணரே. அரசருடன் ராணுவப் பயணங்களில் பங்கேற்றார்.

தூர்ச்சடி:

         காளகத்தியைச் சேர்ந்த இவர் காளகத்தி மகாத்மியம், காளகத்தி சதகம் போன்றவற்றை எழுதினார். இவை சிவனின் புகழையும் பெருமையையும் பாடுபவை ஆகும். இவரது குடும்பத்தில் தொடர்ந்து இதே பெயரில் கவிஞர்கள் தோன்றியதால் குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு இவர் பெத்த (பெரிய) தூர்ச்சடி என்றழைக்கப்படுகிறார்.

அய்யாலராஜூ ராமபத்ருடு:

          வைணவரான இவர் ராமாபியுதயமு என்ற நூலை எழுதினார்.  சகல மத சார சங்கிரகம் என்ற நூலை தெலுங்கில் மொழிபெயர்த்தார்.

பிங்கலி சூரண்ணா:

        இவர் பிரபாவதி பிரதியும்னம், ராகவ பாண்டவீயம், கலா புருஷோதயம் போன்ற நூல்களைப்  பிற்காலத்தில் படைத்தார்.

ராமராஜ பூஷன்:

          வசுச்சரித்ரமு, அரிச்சந்திர நளோபாக்யனமு, காவ்யலங்கார சங்கிரகமு, நரசபூபாலேயமு ஆகிய  நூல்களை தெலுங்கில் படைத்தவர். நம்மூர் காளமேகப் புலவரைப்போல் சிலேடையில் வல்லவர். வசுச்சரித்ரமு என்ற நூல் சிலேடை பயன்படுத்தி எழுதப்பட்டது.

தெனாலி ராமகிருஷ்ணா:

      பிராமணரான இவரது இயற்பெயர் ராமலிங்கம். இளமையிலேயே படிப்பைவிட கோமாளித்தனங்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இதன் காரணமாகவே அரசவையில் விகடகவியாக உயர்ந்தார். பெருமாளைப் பற்றி பாண்டுரங்க மகாத்மியம் என்ற நூலை எழுதினார். உத்பாதராதைய சரித்திரம், கடிகாசல மகாத்மியம், கந்தர்ப்ப கேது விலாசம் ஆகியவை இவரது நூல்களாகும்.

          இவர்களைத் தவிர கிருஷ்ணதேவராயர் அவையில் கந்துகூர் ருத்ரகவி, தல்லபாக பெத்த திருமலய்யா, தல்லபாக சின்னண்ணா, சிந்தலபூடி எல்லகவி, வல்லபாச்சாரியர், குமார மல்லம்மாள் (பெண்பாற்புலவர்) போன்ற தெலுங்குப் புலவர்கள் இடம் பெற்றனர். திம்மண்ணா, வியாச ராயர், புரந்தர தாசர், கனக தாசர், வித்தியா நந்தர், மல்லனார்யா, சாட்டு விட்டல நாதர் போன்ற கன்னட மொழிப் புலவர்களும் அணி செய்தனர். கச்சி ஞானப்பிரகாசர், குமார சரஸ்வதி, அரிதாசர், தத்துவப் பிரகாச கவி (திருவாரூர் கோயில் கண்காணிப்பாளர்), மண்டல புருஷர் (சமணர்; சூடாமணி நிகண்டை எழுதியவர்) போன்ற தமிழ்ப் புலவர்களும் இருந்தனர்.

        அன்றைய முடியாட்சியின்போது அரசர்கள் தங்கள் அவையில் பலதரப்பட்ட அறிஞர்கள், புலவர்கள், ஆலோசகர்கள் போன்றவர்களை ஏதேனும் பதவி அளித்தோ அல்லது குழுவாக இயங்க வைப்பது மரபாக இருந்து வந்துள்ளது. அவர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளுக்கு மன்னர்கள் செவிமெடுப்பது வழக்கமான ஒன்றாகும். இருப்பினும் இவர்களுக்கு மேல் உயர்ந்த இடத்தில்  ராஜகுருஇருப்பார். இந்து மதம் சார்ந்த அரசுகளில் பிரமாணர்களே  ராஜகுருவாக இருந்தனர். அவர்களது சொல் எளிதில் சட்டமானது. மேலும் மனு தர்மப்படியே இவர்கள் இவர்கள் ஆட்சி செய்தனர். இது பிற்காலச் சோழ மற்றும் பிற்காலப் பாண்டிய மன்னர்களுக்கும் பொருந்தும்.

      பிராமணரான ராஜகுரு வழிகாட்டலில் பல இடங்களில் வெறுமனே பொம்மை அரசாட்சி நடந்திருக்கிறது. மன்னர்கள் அறிவுப்பூர்வமாகச் செயல்பட்டாலும் அப்பெருமைக்கு அவர்களைப் பொறுப்பாக்காமல் கிண்டல் அல்லது பகடி செய்யும் புனைகதை உற்பத்தி செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்படுகின்றன. சத்திரிய வருணம் போர்த்திறனில் வேண்டுமானால் சிறப்படையலாம். ஆனால் அறிவுக்கு உரிமை கொண்டாட இயலாது என்கிறது மனு தர்மம். வருண அடுக்கில் முதலிடத்தில் உள்ள பிராமணர்களே அறிவுக்கு ஏகபோக உரிமையுடையவர்கள் என்று சாஸ்திரங்கள் வரையறுக்கின்றன. பிற வருணத்தாருக்கு குறிப்பாக சூத்திரர்களுக்கு அறிவு புகட்டுவதையும் அவர்கள் கற்க முயல்வதையும் குற்றச்செயலாக இந்து சாஸ்திரங்கள் அணுகுகின்றன. சத்திரிய வருணமல்லாத சூத்திர வருணத்தைச் சேர்ந்த  சிவாஜிக்கு பிராமணர்கள் மூடிசூட மறுத்ததை  இங்கு நினைவுபடுத்திக் கொள்வது அவசியம்.

      பெருமளவில் மக்கள் எழுத்தறிவற்ற நிலையில் வாய்மொழிக் கதைகள் அதிகளவில் உலவும் நிலை அன்று இருந்தது. இன்று திரைப்படம், தொலைக்காட்சி போல அன்று கதைகள் பரப்புரை ஊடகமாகச் செயல்பட்டன. இங்கு எல்லாம் கதைவடிவில் சொல்லி நம்மீது திணிக்கப்பட்டன. இதிகாசங்களும் புராணங்களும் கதைகளாக மக்கள் மனதில் நிலைபெற்றன.

       இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட கதைகள் அவர்களது அரசியலை வெளிக்காட்டுவதாக  அமைந்தன. தெனாலி ராமனை ஆகச் சிறந்த அறிவாளியாகவும் கிருஷ்ண தேவராயரை எளிய அறிவுகூட இல்லாத சாமன்ய மனிதரைப் போலச் சித்தரிக்கும் கதைகளின் நோக்கம் ஒன்றுதான். பீர்பால் என்ற பிராமணர் முன்பு இஸ்லாமிய அரசர் அக்பர் முட்டாளாக்கப்பட்டார். இந்து மன்னனாக இருந்தபோதிலும் பிராமணர்களைத் தவிர்த்த பிற வருணத்தார் அறிவுக்கு உரிமைகொண்டாட இயலாத நிலையில் கிருஷ்ண தேவராயர் தெனாலி ராமன் முன்பு முட்டாளாகச் சித்தரிக்கப்படுகிறார். எண்மர் அவையில் ஒன்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் இருந்தும் ஒரு விகடகவியைக் கொண்டே மனு தர்மத்தை நிலைநாட்டமுடியும் என்று தீர்க்கமாக முடிவெடுத்து இப்புனைவுகளை உற்பத்தி செய்து பரப்பியுள்ளனர்.

         கிருஷ்ண தேவராயர் உள்ளிட்ட அரசர்களைக் கிண்டல் செய்வது ஒருவகையில் அடித்தட்டு மக்களின் நோக்கில் ஏற்புடையதுதான். ஆனால் அப்படிக் கிண்டல் செய்ய தெனாலி ராமன், பீர்பால் போன்ற பிராமணர்களால் மட்டும் முடியும் என்றால் இதன் நுண்ணரசியலை கேள்விக்குள்ளாக்க வேண்டியுள்ளது. தெனாலிராமன் கதைகள் உண்மையானவை என அறுதியிட முடியாது என கிருஷ்ணதேவராயர் எனும் நூலில் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை குறிப்பிடுகிறார்.

         பீர்பால் கதைகளைப் போன்றே தெனாலிராமன் கதைகளைப் பயன்படுத்தும்போது குழந்தைகளிடம் அவை விளைவிக்கும் தாக்கம்  பெரியது. வெறும் நகைச்சுவை என்று  இவற்றை புறந்தள்ளிவிட இயலாது. தெனாலிராமன் கதைகளை அவற்றின் அரசியல் பின்புலத்துடன் விளங்கிக் கொள்ள வேண்டும்.   

-         வரலாற்றுக்  கற்பனைகள் தொடரும்.

 

நன்றி: பொம்மிசிறுவர் மாத இதழ் பிப்ரவரி 2025

வியாழன், பிப்ரவரி 06, 2025

பெரியார் எதிர்ப்பரசியலின் தடம்

 

பெரியார் எதிர்ப்பரசியலின் தடம்

மு.சிவகுருநாதன்



 

         பெரியார் எதிர்ப்பரசியல் ஒன்றும் புதிதல்ல; அவர் காலந்தொட்டு நடந்துவரும் ஒன்று. பெரியார் இவற்றை வழக்கம் போலவே எதிர்கொண்டார்; வெங்காயம் என தூக்கியெறிந்து தமது பயணத்தைத் தொடர்ந்தார். நூறாண்டுகள் கடந்தும் பெரியாரியத்தை வீழ்த்த முடியவில்லை. எனவே  எதிரிகள் மாற்றுவழிகளை யோசிக்கிறார்கள்.

    பெங்களூர் குணா போன்றோர் பெரியார், திராவிடம் குறித்த எதிர்ப்புணர்வை தமது நூல்களில் பதிவு செய்துள்ளனர்.  இத்தகைய பாசிசத்தின் தமிழ் வடிவத்தை அ.மார்க்ஸ், கோ.கேசவன் போன்ற மார்க்சிய அறிஞர்கள் எதிர்கொண்டனர். காலச்சுவடு இதழ் பெரியார் மீதான காழ்ப்பை வெளிப்படுத்த ரவிக்குமாரைப் பயன்படுத்திக் கொண்டது. அவை குறித்து உடனுக்குடன் பெரியாரிய, மார்க்சிய அறிஞர்கள் பலர் இத்தகைய எதிர்ப்பாளர்களுக்கு உரிய பதிலளித்து  அம்பலப்படுத்தியுள்ளனர். இவர்களில் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா போன்ற அறிஞர்களது பங்களிப்புக் குறிப்பிடத்தகுந்தது.  அந்த அவதூறுகளின் தொடர்ச்சியாக தற்போது தமிழ்த் தேசியக் குழுக்களைச் சேர்ந்த சிலர் சங் பரிவார் கும்பலுக்கு நிகராக பெரியார் மீது வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.

    தமிழ்த் தேசியர்கள் பல்வேறு கூறாகப் பிரிந்து நின்றபோதிலும் அவர்களுக்குள்ளாக நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இந்துத்துவ ஆதரவு, இயல்பான வலதுசாரித் தன்மை, பெரியார் எதிர்ப்பு, பிற்காலச் சோழப் பெருமிதங்கள், பக்தியிலக்கிய மேன்மைகள், பழம்பெருமை கேள்வியின்றி சுமத்தல், பண்பாடு, மரபு என சாதி, மதக் கூறுகளைக் கொண்டாடுதல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

      தமிழ்த் தேசியர்களிடம் கருத்தியல் தெளிவில்லை; உண்மையில் அவர்களிடம் கருத்தியலே இல்லை. ஆதிக்க, பிற்போக்கு, பாசிசக் கருத்தியல்களிடம்  சரணடைந்து அவற்றை தமிழ்த் தேசியமாகத் திரிக்க முயல்கின்றனர். இதனால் மத வெறுப்பரசியல் இன வெறுப்பரசியலாக மாற்றமடைகிறது. மேலும் குடிப்பெருமை சாதி, மத அரசியலுக்குத் துணையாக நிற்கிறது. எனவே வலதுசாரி மதவாதத்துடன் இயல்பான  கூட்டாளிகளாக ஒன்றிணைகின்றனர்.

    ஈழ ஆதரவு, தமிழ்ப்பண்பாடு என்கிற போர்வைகளில் இந்துத்துவ ஆட்களுடன் மேடைகளைப் பகிர்ந்துகொள்ளும் இவர்கள் பெரியார் பெயரைக் கேட்ட உடன் பதற்றமடைகின்றனர். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  பெரியார் படத்தை  வைக்க மறுத்ததும் அதற்கு அவர்கள் சொல்லிய விளக்கமும் இதை எடுத்துக்காட்டும். பழ.நெடுமாறன், பெ.மணியரசன் போன்றோர் பெரியாரை எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியம் என்று கட்டமைத்து வருகின்றனர். இருப்பினும் இவர்கள் தேர்தல் அரசியல் களத்திற்கு வருவதில்லை. எனவே தேர்தல் அரசியல் வெளியில் வலதுசாரிகளுக்கு ஆதரவாகப் பலர் களமிறக்கப் பட்டுள்ளனர்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரைப் பற்றித் தொடர்ந்து பல்வேறு அவதூறுகளைச் செய்து வருகிறார். அவை இப்போதுதான் பரவலாகக் கவனம் பெற்று வருகின்றன. இவற்றையும் பொருட்படுத்தக்கூடிய இளைஞர்கள் சிலர் இருப்பது வேதனையானது.  இடைத் தேர்தல் களத்தில் இவற்றை வாக்காக மாற்ற முயன்று வருகின்றனர். இவற்றின் பின்னணியில் மதவெறிப் பாசிச சக்திகளின் ஆதரவு இருப்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது.

    சீமான் பேசுவதற்கு ஆதாரத்தை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தருவதாகச் சொல்கிறார். ஆடிட்டர் குருமூர்த்தி போன்றோர்கள் சங் பரிவார் கும்பலுக்கு மட்டுமல்லாமல் சீமான் போன்ற ஆட்களுக்கும் தரகு வேலையில் வெளிப்படையாக ஈடுபடுகின்றனர்.

          ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் நமக்குப் பல செய்திகளை  உணர்த்துகிறது. முதன்மை எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி  இத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அடுத்து பா.ஜ.க. கூட்டணியும் போட்டியிட மறுத்துள்ளது. 2026இல் நேரடியாக ஆட்சியைப் பிடிக்க விரும்பும் விஜயின் த.வெ.க. வும் தேர்தலில் பங்கேற்கவில்லை. இவை யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்துள்ள போதிலும் இவற்றின் உள்நோக்கம் நன்கு வெளிப்படுகிறது.

    இவற்றின் வாக்குகளை நா.த.கட்சிக்கு மாற்றிவிடும் வேலையாக இது மாறியிருக்கிறது. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கட்சிக்கு மறைமுகமாக உதவி செய்வதன் வாயிலாக தங்களது கொள்கைகளை செயல்படுத்த சிலர் முனைப்பு காட்டுகின்றனர். ஒருவாறு வலதுசாரிச் செயல்திட்டம் அம்பலப்பட்டுள்ளது. இதற்கு எல்லாரும் சேர்ந்து பொது வேட்பாளரையே நிறுத்தியிருக்கலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். தங்களுள் வேறுபாடு இருப்பதாக பொதுமக்களை நம்பவைக்க இவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

         விஜயின் பெரியார் ஆதரவு, சீமானின் பெரியார் எதிர்ப்பு, பெரியாரை முற்றாகத் துறந்த அ.இ.அ.தி.மு.க. என மூன்றையும் ஒருங்கிணைக்கும் புள்ளியாக பா.ஜ.க. உள்ளது. பின்னணிச் செயல்திட்டங்களில் தொடர்ந்து ஈடுபடும் மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற குயுக்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. பெரியார் பற்றி அவதூறுகளை எதிர்க்கும் மனநிலைகூட அ.தி.மு.க. விடம் இல்லை. தி.மு.க.விட பெரியாரியர்களும் மார்க்சியர்களும் இந்த அவதூறுகளுக்கு மிகக்கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

        பழங்கால இந்தியாவில் பவுத்தம் சமயமாக அன்றி இயக்கமாக முன்னெடுக்கப்பட்டது. அதனாலே வைதீகத்தின் தாக்குதலுக்கு உள்ளானது. இறுதியாக அதனுள் நுழைந்த வைதீகம் பவுத்த சமய இயக்கத்தை ஒழித்தது. பிற்காலத்தில் வள்ளலார் போன்று மதச் சீர்திருத்தம் செய்தவர்களையும் ஒழித்து புனைகதைகளைப் பரப்பினர். இருபதாம் நூற்றாண்டில் பெரியார் தமது கருத்துகளை இயக்கமாக்கினார். நூறாண்மைக் கடந்தும் இதன் தாக்கம், வீச்சு தமிழ்நாட்டின் அரசியலுக்கான அசைக்கமுடியாத அடித்தளமாக உள்ளது. இந்த அடித்தளத்தை அசைக்க முடியாமல் வைதீக வலதுசாரிகள் திணறுகின்றனர் என்பதே உண்மை.

     இந்தச் சூழலில் பெரியாரும் அவரது கருத்தியலும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எவ்வாறு கொண்டு சேர்க்கப்பட்டார் என்பதை சுயவிமர்சனம் செய்துகொள்வது நல்லது எனத் தோன்றுகிறது. கடவுள் மறுப்பாளர், பார்ப்பன எதிர்ப்பாளர், பகுத்தறிவு சமூக சமத்துவப் போராளி என்கிற சிமிழுக்குள் பெரியார் அடைக்கப்பட்டுள்ளார். இதையும் தாண்டி பெரியாரின் சிந்தனை எல்லைகள் விரிவடைவதை நாம் பேசவும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் தவறிவிட்டோம்.

          சாதி, மதம், இனம், மொழி, தேசம் என எவ்விதப் பற்றையும் வெறுத்தொதுக்கி  சுயமரியாதைப் பற்றை மட்டும் உயர்த்திப் பிடித்தவர். மொழி, தேசம், தாய்மை போன்றவை இயற்கையானதல்ல; அவை கட்டமைக்கப்படுபவை என்றார் பெரியார். தன்னை ஒரு தேசத்துரோகி என அறிவித்துக் கொண்டார்.  அதனால்தான் தேசப்பற்றை அயோக்கித்தனம், வியாபாரம் என்றெல்லாம் சாடினார்.

    மொழி, பெண்ணியம் குறித்த மிக நவீன சிந்தனைகளின் தொடக்கப் புள்ளியாக இருந்தார். ஆண்மை அழியாமல் பெண்மைக்கு விடுதலை இல்லை என்றும் பறையர் பட்டம் போகாமல் சூத்திரப்பட்டம் போகாது என்றும் செயலாற்றியவர் பெரியார்.  இதற்குத் தக்கவாறு தமது அரசியல் செயல்திட்டங்களையும் போராட்டங்களையும் வடிவமைத்தவர்.        

        அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று பல்லாண்டாகப் பேசி வந்தோம். இன்று அரசியல் மதத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது. பெரியார் மொழி, கல்வி, பண்பாடு என சமூகக் களங்களில் மதநீக்கம் நடைபெற வேண்டும் என்று ஓயாதுப் போராடினார். புராண-இதிகாசக் குப்பைகளை குழந்தைகளிடம் திணிக்காமலும் இந்தச் சமூகம் ஏற்கனவே திணித்த அழுக்குகளை அகற்றி சுதந்திரமான சிந்தனையை மலரச்செய்வதாக கல்வி இருக்க வேண்டும் என்று பெரிதும்  விரும்பினார்.

           தமிழ் என்றால் பிராமணர்களும் உள்நுழைந்து நம்மைக் காலி செய்துவிடுவார்கள். எனவே அவர்களை வெளியேற்றுவதற்காக திராவிடக் கருத்தியலை உயர்த்திப் பிடித்தார். காவிகளின் அகண்ட பாரதம் போன்று திராவிட தேசத்தைப் பெரியார் கட்டமைக்கவில்லை. மொழியடிப்படையில்  தனித் தமிழ்நாடு கோரினார். இதன்மூலம் சிறுபான்மையினர் உள்ளிட்ட அந்நியர்களை வெளியேற்றும் பாசிசத் தேசியமாக அவற்றை முன்மொழியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  இந்து மதக் கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் மற்றும் பெண்கள் மீதான கரிசனமாகவே அவரது செயல்திட்டங்கள் வெளிப்பட்டன. இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த தமிழ்தேசத்தை விரும்பினார்; பாசிச வெறி கொண்ட ஒடுக்குமுறை தேசியத்தை அவர் எதிர்த்தார்.

            சென்னையில் பேராசான் கார்ல் மார்க்ஸ்க்கு சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக வைக்கப்பட்டு வருகிறது. மே தினப் பூங்கா போன்று கார்ல் மார்க்ஸ் பூங்கா ஒன்று நிறுவப்படலாம். கூடவே அவரது சிந்தனைகளையும் எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய முயற்சிகள் எல்லாம் பெரியார் செயல்படுத்திய முன்மாதிரிகளே. ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தவுடன் வேறுபணிச்சுமைகள் இருந்ததாலோ என்னவோ கருத்தியல் பரப்புரைக்கு நேரம் செலவிட இயலாமற்போனதன் பாதிப்பை தற்போது உணர முடிகிறது.

      மார்க்சிய, திராவிட இயக்கங்கள் இங்கு எப்படி வளர்த்தெடுக்கப்பட்டன என்பதை நாம் மீண்டும்  ஒருமுறை நினைவுப் படுத்திப் பார்க்க வேண்டும். சினிமா ஈர்ப்பைக் கொண்டோ, குழந்தைகளுக்கு சாக்லேட் அளிப்பது போன்று பிரபாகரன் படத்தைக் காட்டியோ இங்கு அவை வளரவில்லை.

    முந்தைய ஒன்றிய அரசு அம்பேத்கர் தொகுப்புகளில் இந்திய மொழிகளில் கொண்டுவரும் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தியது. இந்த வகையில் தமிழில் 37 தொகுதிகள் வெளியாயின. தற்போது தமிழ்நாடு அரசு அம்பேத்கர் நூல்களை எளிமையாக மொழியாக்கி சிறு சிறு தொகுப்பாக 100 நூல்களாக வெளியிடும் சிறப்பான திட்டத்தை  அறிவித்தது. இதன் முதல்கட்டமாக அண்ணல் அம்பேத்கரின் 10 நூல்கள் வெளியாகியுள்ளன. இதே நடைமுறையை பெரியார் நூல்களுக்கும்  பயன்படுத்தலாம். அப்போதுதான் உண்மையான பெரியாரியக் கருத்தியல் அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்க்கப்படும்.

      அரசு நூல்களை வெளியிட்டால் மட்டும் போதாது. அவற்றை அனைத்து நூலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் கூடுதலான படிகள் அனுப்பி அனைவரும் வாசிக்க வழியேற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இவை குறித்த போட்டிகள் நடத்திப் பரிசளிக்கலாம். பொதுமக்களுக்கு இந்நூல்களை மலிவுவிலையில் விற்பனை செய்யவும் முன்வரவேண்டும்.

      பெரியாரது சிந்தனைகளை யாரும் ஒளித்து வைக்கவில்லை. பெரியாரியம் ஒரு பேராழியைப் போன்றது. அவரவர் விருப்பத்திற்கேற்ப சிலவற்றிற்கு முதன்மை தருகின்றனர். பெரியார் எழுத்துகளை அரசுடைமையாக்கினால் உண்மைகள் வெளிவரும் என்று சொல்வதன் உள்நோக்கம் நன்றாக விளங்குகிறது. ஒருவரது நூலை அரசுடைமையாக்கினால் அவற்றை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். தங்கள் விருப்பப்படி திருத்தி வெளியிட்டு இன்றைய அவதூறுகளுக்கு மேலும் வலுசேர்க்க விரும்புகிறார்கள். எனவே அரசே அம்பேத்கர் தொகுப்பு போன்று பெரியார் தொகுதிகளை வெளியிடுவது காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி: பேசும் புதியசக்தி பிப்ரவரி 2025