செவ்வாய், செப்டம்பர் 17, 2013

தமிழர்களின் ரசனை மலினமானதா?

தமிழர்களின் ரசனை மலினமானதா?
                      -மு.சிவகுருநாதன் 
   
   மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட The Hindu குழுமத்திலிருந்து ஓர் தமிழ் நாளிதழ் வெளிவரப்போகிறது என்ற பேச்சு அடிபட்டபோது அனைவருக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவற்றையெல்லாம் பொய்யாக்கி கடந்த இரு நாட்களாக வெளிவரும் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்து வருத்தப்படாமலிருக்க முடியவில்லை.

  The Hindu ஆங்கில நாளிதழுக்கு சில கொள்கைகள், பெரும் வாசக பின்புலம் உண்டு. பொதுவாக ஆங்கில இதழ்களின் அறிவுத்தேடலில் The Hindu எப்போதும் முன்னணியில் நிற்கும். (இவற்றில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தபோதிலும்.)

  தமிழ் சினிமாவகட்டும் தமிழ் இதழியலாகட்டும் தமிழர்களின் ரசனைக்கு இவர்கள் வைக்கும் அளவுகோல் மிகவும் மலினமாகவே உள்ளது. தீவிரமான சினிமா மற்றும் எழுத்தை இவர்கள் விரும்பமாட்டார்கள் என்கிற எண்ணவோட்டம் இங்கு தலைதூக்கி நிற்கிறது.

  நாலாந்தர சினிமாக்கள் குறித்த செய்திகள், படங்கள், ராசிபலன், கிசிகிசுக்கள், ஆன்மிகம் போன்ற குப்பைகளை மட்டுமே தமிழர்களுக்கு வழங்கவேண்டிய அவசியமிருப்பதாக தெரியவில்லை. ஆங்கில நாளிதழ்கள் இவற்றை மட்டுமே தராமல் கொஞ்சம் அறிவுப்பூர்வமானவற்றையும் சேர்த்துத் தருகின்றன. ஆனால் தமிழர்களின் ரசனை மட்டும் இவற்றைத் தடுப்பதாக இவர்களாகவே நினைத்துக் கொள்வதுதான் அபத்தம்.

   தமிழில் ஏற்கனவே இருக்கும் ஜனரஞ்சக வணிக இதழ்களை நினைவுபடுத்தும் வகையிலான தி இந்து இதழின் வடிவம், நடை போன்றவை எரிச்சலை உண்டுபண்ணுகிறது. இனி வருங்காலங்களிலாவது நம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தால் நல்லது.
 
  தலையங்கப் பக்கம் கூட உப்புசப்பின்றி வருவது மிக நீண்ட பாரம்பரியம் உள்ள The Hindu  இதழுக்கு அழகல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக