செவ்வாய், அக்டோபர் 24, 2017

புதிய பாடத்திட்டம், பாடநூல் தொடர்பாக…

புதிய பாடத்திட்டம், பாடநூல் தொடர்பாக…



மு.சிவகுருநாதன்
 
 



       புதிய பாடநூல்கள் உருவாக்குவதற்கான பணிகள் அனைத்து மட்டங்களிலும் மிக விரைவாக நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், அதன் தொடர் பணியாகவும் பாடத்திட்டப் பணிமனை அனுபவங்களின் ஊடாகவும் பாடநூல் உருவாக்கத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் தொடர்ந்த விவாதங்களை முன்னெடுக்கவும் கல்வியில் அக்கறையுள்ள தோழர்கள் பலர் விரும்புகின்றனர்.


       இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 21 (21.10.2017) அன்று சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தி, லயோலா கல்லூரிப் பேராசிரியர் ஜோசப் பிரபாகர், மதுரை கலகல வகுப்பறை சிவா, இவ்வாண்டின் புதிய தலைமுறை விருதாளர் திருவாரூர் செ.மணிமாறன் ஆகிய தோழர்களுடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் திரு த.உதயச்சந்திரன் அவர்களைச் சந்தித்து பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கம் குறித்த விமர்சனங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டோம்.

      இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கருத்துப் பகிர்வில் பல்வேறு செய்திகள், கருத்துகள் விவாதிக்கப்பட்டன. எங்களது மற்றும் பிற தோழர்களின் கருத்துகளை எழுத்து வடிவிலும் செயலர் அவர்களிடம் வழங்கினோம்.

        பாடநூல்கள் உருவாக்கத்தில் மிகவும் தனிக்கவனம் கொண்டு செயல்படுவதாகவும் ஒவ்வொரு நிலையிலும் முறையாக ஆய்வு செய்யப்படும் என்றும் செயலர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதையும் எடுத்துக் காட்டினார்.

      பாடநூல் உருவாக்கம் மிக எளிமையான பணி என்றும் ஆசிரியர்களுக்கான கையேடு, கற்பிக்கும் முறைகள், பயிற்சிகள் என இவற்றை ஆசிரியர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியே கடினமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

      முன்பு எப்போதும் இல்லாத ஒரு சிறப்பு இப்புதிய பாடநூல் உருவாக்கத்தில் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடையலாம். தமிழ், வரலாறு, அறிவியல் போன்ற எந்தப் பாடத்திலும் தீவிர வாசிப்பும் கூர்ந்த பார்வையுடைய பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கிடைத்திருப்பதே நமது எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக்குகிறது.

     அரசியல் காரணங்களுக்காக உதயச்சந்திரன் அவர்களது அதிகாரங்கள் குறைக்கப்பட்ட போதிலும் உயர்நீதி மன்ற உத்தரவால் பாடத்திட்டங்கள் உருவாக்கத்தில் இவரது அதிகாரம் நிலை நாட்டப்பட்டுள்ளது.

     இருப்பினும் கல்வித்துறையில் உள்ள அனைவரும் செயலரைப் போன்று தீவிர வாசிப்பும் கூர்ந்த பார்வையுடையவர்களாக இல்லை என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே வரைவுப் பாடத்திட்டம் இணையத்தில் வெளியாகும்போது அவற்றை ஆய்வு செய்து கருத்துரைக்க தோழர்கள் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக