ஞாயிறு, நவம்பர் 30, 2025

ஏரோட்டம்: விளிம்புகளால் எழுப்பப்பட்ட ஆரூர்ப் பேரறம்

 ஏரோட்டம்: விளிம்புகளால் எழுப்பப்பட்ட ஆரூர்ப் பேரறம்

 

தீசன்

 


(ஏரோட்டம் - திருவாரூர் மாவட்டச் சிறுகதைகள் அன்றும்இன்றும்)

தொகுப்பிற்கு நண்பர் தீசன் எழுதிய மதிப்புரை.) 

 

            இந்தியா ஒரு தேசியமாக வளர்ந்து கொண்டிருந்த வேளையில் வட்டாரப் பண்பாடுகளை முதன்மைப்படுத்துவது ஒரு காலனிய கால எழுதியலாக இருந்தது.  வட்டாரப் பண்பாடுகள் தனித்தனி வட்டாரப் பண்பாடுகளாக இல்லாமல் இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருந்தபோது தமிழ்ப் பண்பாட்டு இயக்கங்கள் அவற்றைத் தனக்கான உழைப்புச் சக்திகளாக மடைமாற்றிக் கொண்டிருந்தன. கால்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் புகைந்து கொண்டிருந்த வரலாற்றுப் பகை, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, அதற்குப் பின்னான உலகப்போர் இவையெல்லாம் இந்தச் சூழல் ஏற்பட்டு வளர அடிப்படையான காரணங்கள். கால்டுவெல் திருநெல்வேலிப் பகுதியின் சாணார் இன மக்களின் வாழ்வு பற்றி ஆராய்ந்ததும் அதன் பிராமணீயக் கலப்பற்ற பண்பை கிறித்தவ சமயத்தாரின் வளர்ச்சியோடு இணைத்ததும் பிராமணீய சிந்தனை நீக்கத்திலிருந்தே ஆங்கிலேய காலனியம் சாத்தியம் எனும் பேருண்மையைப் பாதிரிமார்களுக்கு உணர்த்தியிருந்தது. சாதிகளால் சமைந்திருக்கும் இந்திய சமூகம் பன்மீய சாதிவடிவங்களைக் கொண்டிருந்தாலும் அனைத்துச் சாதிகளையும் இயக்கும் அறிவுக்கட்டமைப்பான பிராமணீய மேலாதிக்கத்தை மறுக்காது கடைப்பிடித்தன. எனில் ஏற்கனவே மேலாதிக்கம் செய்யப்பட்டிருக்கும் பிராமணீய கருத்தியலைக் கீழிறக்கம் செய்வதில் இருந்தே ஆங்கிலேய சிந்தனைக்குள்ளான பண்பாட்டு்ணர்வை உருவாக்கவியலும் என்பதே இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால அரசியலாக உருவெடுத்தது. பிராமணரல்லாதார் இயக்கமே இதன் தொடக்கம். பிராமணீய மேலாதிக்கத்தில் இருந்த படிநிலை சமூக அமைப்பு, வருணாசிரம தருமத்தினால் கட்டப்பட்டிருக்கும் தொழில், கல்வி, வாழ்க்கை, நிலவுரிமை, அரசியல் அதிகாரம் முதலியவை மறுவாசிப்பு செய்யப்பட்டன. பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்றோரின் பிராமணீய மரபு அவர்களுக்கு இந்திய தேசிய வாதத்தின் பகுதியாகத் தமிழ்ப் பண்பாடு அமைக்கப்பட வேண்டும் என்ற உந்துதலைத் தந்திருந்தது. பிராமணரல்லாதாரிடையே பிராமணீயம் நீக்கப்பெற்ற ஒரு தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கம் பற்றிய ஓர்மை எழுந்தது.  நிலக்கிழமை, சமயம்சார் நம்பிக்கைகள் முதலிய காரணங்களால் உள்ளீடான வர்க்கப் பகையோடு இருந்த பிராமணரல்லாதாரியக்கம் திராவிடர் கழகமாக உருக்கொள்ளும்போது வட்டாரப் பண்பாட்டின்மீதான மதிப்பை இடம்மாற்றின. சமஸ்கிருதத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டதே ‘செந்தமிழ்’ வடிவம் என்று எழுதிய ச.வையாபுரிப்பிள்ளை தமிழ்ச் செவ்வியல் நூல்களைக் காலத்தால் பின்னுக்குத் தள்ளியதற்கும் அவரது ஆசிரியரான மறைமலையடிகள் தமிழின் தொன்மை குறித்து எழுதியதற்கும் பின்னணியாகப் பண்பாட்டு உருவாக்கக் காரணியான தேசியக் கருத்தின் முரண்களே இயங்கின. ஆனால் பெரியார் முன்வைத்த தமிழ்ப் பண்பாட்டுணர்வு சாதி, சமய, பாலின, தேசிய பேதமற்ற ஒரு எல்லையாகும். தொன்மையினூடாகக் கட்டமைக்கப்படும் தமிழ்ப் பண்பாட்டில் சாதியையும் பெண்ணிழிவையும் நம்மால் கடந்துவிடமுடியாது என்பதே பெரியாரின் பகுத்தறிவு வாதம். பின்னர் இச்சிந்தனையைப் பண்பாட்டு உருவாக்கத்தில் திரண்ட திராவிடர் கருத்தியலாகக் கொள்கின்றோம். 

 

            வரலாற்றில் இத்தகைய பண்பாட்டு உருவாக்கப் பின்னணியிலிருந்தே நாம் வண்டல் வகைமையை அறிய முடியும்; பேச முடியும். மற்ற நிலம் சார்ந்த இலக்கிய வகைமையிலிருந்து வண்டல் வேறுபடுவதற்கும் அதனில் உள்ளொடுங்கி இயங்கும் அறவுணர்விற்கும் சமூகவியல் சார்ந்த காரணங்களை இத்தகைய அரசு, பண்பாட்டுருவாக்க நிகழ்வுகள் ஊடாகவே நம்மால் விளங்க முடிகிறது. வட்டாரப் பண்பாட்டில் உள்ளுறைந்திருக்கும் சாதிப் பெருமிதம் வரலாற்றுவெளியில் பாதுகாப்பான சூழலால் கிடைக்கப்பெற்ற கல்வி அவர்களுக்குத் தந்த கொடை. இலக்கண மரபு, ஒருமையாக்கப்பட்ட தமிழ் மரபாக உயர்ந்தோர் வழக்கிலிருந்து வளர்ந்தெழுந்தது போன்றே பேச்சில் இருந்து விலகிய, அதேசமயத்தில் பேச்சை பிரதிநிதித்துவப்படுத்தவரும் எழுத்து மரபால் உருவாக்கப்படும் வட்டார இலக்கியம் (பேச்சு மரபு) அதனுள்ளாகவே உயர்ந்தோர் வழக்கின் பிற்சேர்க்கையாக மாறும் உள்முரணைக் கொண்டிருக்கிறது. என்னதான் மக்கள் வழக்கை முன்னிறுத்தினாலும் எழுத்து என்பது எழுதத்தெரிந்தோர்க்கானது. எழுதும் வாய்ப்பு கிடைத்தோர்க்கானது. அத்தகைய சமூகச் சூழல் வாய்க்கப்பெற்றோர்க்கானது. இதனால்தான் இந்திய வெளியில் வட்டாரப்பண்பாடு சாதியப் பண்பாடாக, குறிப்பாக, பிராமண, பிராமணரல்லாத இடைநிலை சாதிப் பண்பாடாக வளர்க்கப்பட்டிருக்கிறது. கல்வியில் இருந்து முற்றிலுமாக விலக்கப்பட்ட எழுதும் வாய்ப்பே கிடைக்கப்பெறாத மக்களின்  பண்பாட்டை உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிராத ஒரு சமூகம் விளக்கியபோது புத்தகங்களிலும் ஓரத்து மனிதர்களாகவே சித்திரிக்கப்பட்டனர் தலித் மக்கள்.

 

            தமிழ் இலக்கிய வட்டாரப் பண்பாட்டுச் சூழல் காலனிய காலத்தில் இருந்து இன்றுவரை இத்தகைய போக்கில்தான் இயங்கி வந்திருக்கிறது. இந்த இடத்தில்தான் வண்டல் பண்பாட்டை முதன்மை செய்ய வேண்டியதன் தேவையை நாம் உணர்கின்றோம். வண்டல் எழுத்து கரிசல், கொங்கு, நாஞ்சில், நடுநாடு என பிற வட்டார எழுத்துகளைப்போல் குடும்பம், உறவு, தன்வாழ்க்கை என்பதோடு நின்றுவிடாமல் எளிய மக்களின் சமூக விடுதலையைப் பேசுவதாய் மக்களின் உரிமைக்கான புரட்சிக் குரலை உரக்க ஒலிப்பதாய் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த எழுத்து நிலவுடைமைக்குக் கீழ்கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் துயர மனத்தின் இன்னொரு வடிவம். துயரத்தினால் எழுப்பப்பட்டிருக்கும் தஞ்சை எழுத்தைப் பெருமித உணர்வாக மாற்றுவதற்கில்லை. ஆனால் அந்த உணர்வின் தற்கால சமூக அவசியத்தை உணர வேண்டிய கால கட்டத்தில் இருக்கின்றோம். ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கை அவர்களின் பண்பாடு முதலியவை இங்கும் மேலிருந்து விளக்கப்பட்டிருந்தாலும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியிலிருந்து வெளிப்படும் எழுத்தில் ஆசிரியரின் தன்னிலையையும் மீறி அந்தச் சமூகம் உறைகின்றது. வண்டல் எழுத்து எல்லாவற்றையும்போல ஒரு வழக்கமான எழுத்தாக மதிப்பிடவே முடியாதது. அது ஒரு அரசியல் எழுத்து. மக்களை அரசியல் வயப்படுத்தும் எழுத்து. தமிழ் இலக்கியவெளியில் பிற வட்டார எழுத்துகளைப் போலல்லாமல் வண்டல் எழுத்து புறக்கணிக்கப்படுவதற்கும் பிரச்சார எழுத்தாகக் கருதப்படுவதற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் வெறுப்புமிழ்வு காரணம் ஒன்றேயன்றி வேறெதுமே இல்லை. உலகளாவிய இலக்கியவெளியில் தலித், திருநர், பால்புதுமையர், மாற்றுத்திறனாளர்கள் எழுத்துகள் வெற்றுப் பிரச்சாரக் கூச்சல்களாக விமர்சிக்கப்படுகிறது. இதற்கு இலக்கிய அழகியல் என்றபேரில் தீவிரவாசிப்பாளர்கள் என்ற மேல்தட்டு வர்க்கத்தினரின் அளவுகோலுக்குள் எழுத்தை அடக்க முயற்சிப்பதே காரணம். வண்டல் எழுத்திலும் தி.ஜானகிராமன், மௌனி, கு.ப.ராஜகோபாலன், க.நா.சுப்ரமணியம் போன்றோர் முதன்மைப்படுத்தப்படுவதற்குப் பின்னாகவும் இந்த மேல்நிலையாக்கம் செய்யப்பட்ட பண்பாட்டு அரசியலே இயங்குகிறது. தஞ்சை என்றாலே பச்சைபசேல் வயலும் காவிரியின் மிரட்டும் பிரவாகமும் நெல்முற்றிய பால்வாடையும் வெற்றிலையைக் குதப்பிவரும் பண்ணையாரின் பஞ்சகச்சமும் மட்டுமல்ல நிலமற்ற மனிதர்களின் வயிறற்ற வாழ்க்கையும்தான் என்பதைக் காட்டும் பல எழுத்தாளர்கள் இங்கு இருந்தார்கள். சி.எம்.முத்துவும் சோலை சுந்தரபெருமாளும் அதன் முன்னவர்கள் எனலாம். 

 


            இத்தகைய வரலாற்று சமூக பொறுப்பின் மீதான ஓர்மையுடனே தோழர் மு.சிவகுருநாதன் இந்த ‘ஏரோட்டம்’ எனும் நூலைத் தொகுத்திருக்கிறார். 34 நான்கு சிறுகதைகள் கிட்டத்தட்ட நூறாண்டுகால திருவாரூரை நமக்குக் காட்டுகின்றது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமான சிந்தனை முறை. திருவாரூரைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என்ற முறையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த 34 கதைகளும் பன்மீய கருத்துநிலைகளில் சில திருவாரூரை உள்ளடக்கமாகக் காட்டாதிருந்தாலும்கூட திருவாரூரின் வரலாற்றுச் சூழலால் உருவாக்கப்பட்ட ‘பேரறம்’ எனும் ஒற்றைப் புள்ளியில் இணைகின்றது. திருவாரூரின் எழுத்துமுறை அடித்தளத்திலிருந்து ஒருங்குவிக்கும் அறிவாய்வுமுறையைக் (Epistemology of the Subaltern) கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தத் தொகுப்பு உள்ளடக்கப் பண்பிலும் எழுத்தாளர் தேர்விலும் அடித்தளத்திலிருந்தான ஒருங்கிணைக்கும் அணுகுமுறையைக் கொண்டிருப்பது திருவாரூர் புலன்முறையாக நாம் முன்வைப்பது. 

 


            இதுவரையிலாக நமக்குக் கிடைக்கப்பெற்ற வரலாற்றுச் சான்றுகள் இலக்கியங்கள், அரசியல் உருவாக்கம், பண்பாட்டு மாற்றங்கள், போராட்டச் செய்திகள் இவற்றையெல்லாம் கொண்டு திருவாரூர் புலன்முறையை நாம் கருத்துவயப்படுத்த வேண்டும். ஒரு கோட்பாடாக வளர்த்தெடுக்கவேண்டும். கீழத்தஞ்சை: விவசாயிகள் இயக்கமும் தலித் மக்கள் உரிமைகளும் என்ற சிறுநூலில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பண்ணையாட்கள் பராமரிக்கும் ஆடுகளைப் பற்றி எழுதியிருக்கிறார். அவை பண்ணையில் வேலைப்பார்ப்போரைக் காட்டிலும் நன்றாக வாழ்ந்தன. ஆடுகளும் மாடுகளும் புல் மேய்வதைப் பார்க்கையில் பண்ணையாட்களுக்குப் பசி எடுக்கிறது. இதுதான் அந்தச் செய்தி. விலங்குகள் மீதான மக்களின் பார்வைமுறை வரலாறுதோறும் எப்படி இருந்திருக்கிறது என்பதை யோசிக்க வேண்டிய இடமிது. சங்க இலக்கிய அகப்பாடல்களில் இறைச்சி எனும் இலக்கியக்கூறு காட்டப்பெறும். இது பொதுவாக விலங்குகளின் அன்பு நடவடிக்கைப் பற்றி எடுத்துரைக்கும். பொருளீட்டி வருவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் இத்தகைய விலங்கினமொன்றின் அன்பு செயல்பாட்டைப் பார்க்கின்றான். ஒரு ஆண் யானை பெண் யானைக்கு யா மரத்தைப் பிழிந்து நீரூட்டிவிடுகிறது. இதைப் பார்த்தபோது தலைவனுக்குத் தலைவி நினைவேறி காமவயப்படுவதாகப் பாடல். (குறுந். 37) விலங்கினச் செயல்பாட்டை மனிதவயப்படுத்துவது தமிழ் இலக்கிய அழகியல் மரபாகும். ஆனால் அது எந்த மனிதர்களை மையமிட்டு இருக்கிறது என்பதில்தான் அதில் அரசியல் நுழைகின்றது. தோழர் ஜி.ராமகிருஷ்ணன் சொல்வதுபோல் ஓய்வற்ற, உணவற்ற, உடைமையற்ற, பாதுகாப்பற்ற சூழலில் இருப்போர் விலங்குகள் உணவெடுப்பதைத் தங்களின் பசியோடு இணைத்துப் பார்த்திருப்பார்களேயொழிய காமத்தோடு இணைத்திருக்க முடியாது. எனில் சங்க இலக்கியம் காட்டும் மாந்தர்கள் உடைமைப் பண்பாட்டுச் சித்திரங்கள். இவர்களால் ஒருங்கிணைந்த தமிழ் அறத்தைப் போதிக்க முடியாது. இவர்களின் வாழ்க்கைப் பற்றியான சுவடுகள் எல்லா மனிதர்களையும் ஒன்றிணைப்பதாக இல்லை. சங்கப் பாடல்களைப் போன்றே அவர்களது வாழ்க்கையும் தன்னலத்தை மையமிட்ட உதிரிகளாகக் கிடக்கின்றன. இந்த இடத்தில் இருந்துதான் நாம் திருவாரூரின் பேரறத்தைப் பேசுகிறோம். பேச வேண்டும்.  திருவாரூர் வாழ்மக்கள் நூற்றாண்டு கால நிலவுடைமை நெருக்கடியில் அடிபட்டவர்கள். வளமான வயல்களுக்கு மத்தியில் வளமற்ற வாழ்க்கை வாழ்ந்து பார்த்தவர்கள். இவர்களுடைய சிந்தனைமுறை அடித்தளத்திலிருந்து உயர்நோக்கை வைப்பதாய் உள்ளது. நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்துதான் வாழ்க்கைப் பற்றி கேள்வி உலகமெங்கும் எழுந்திருப்பதை வரலாறு காட்டுகிறது. அத்தகைய வரலாற்றுப் பின்னணியிலிருந்து வந்த நமக்கு எழுத்து எப்படி அமையவேண்டும் என்று சொல்வதற்கு உரிமையுண்டு. அதன்படி, இந்த ஏரோட்டம் தொகுப்பு ஒரு மாவட்ட எழுத்தை எப்படி தேர்விக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி என்றே துணிவுடன் கூறலாம்.

 

o    தீசன் திருவாரூர் மத்தியப் பல்கலை. ஆய்வு மாணவர்.

 

நூல் விவரங்கள்:

ஏரோட்டம்  (திருவாரூர் மாவட்டச் சிறுகதைகள் அன்றும்இன்றும்)

தொகுப்பு: மு.சிவகுருநாதன்

வெளியீடு: நன்னூல் பதிப்பகம், திருத்துறைப்பூண்டி

விலை: ரூ. 500

தொடர்புக்கு: 9943624956

 


நன்றி: பேசும் புதியசக்தி மாத இதழ் - நவம்பர் 2025

ஞாயிறு, நவம்பர் 09, 2025

11. கொடை மடக் கதைகள்

 

வரலாறும்  தொன்மமும்  - தொடர்

11. கொடை மடக் கதைகள்

மு.சிவகுருநாதன்


 

          சங்ககாலத் தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் வேளிர் எனப்படும் சிற்றரசர்கள் பலரும் ஆண்டதாக வரலாற்றில் படிக்கிறோம். இவை பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில்  அமைந்த வரலாறாகும். இலக்கியச் சான்றுகளை வரலாறாகக் கட்டமைக்கும்போது  மிகைப்படுத்தல் எனும் உயர்வு நவிற்சிக் கூறுகள் வரலாற்றில் பெருந்தடையாக அமைகின்றன. இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் இலக்கியக் கதைகளை மட்டும் வரலாறாகப் பேசுவது ஒருவித மாயத் தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. இக்கதைகளை ஏற்றுக்கொண்டால் மறுபுறம் இதிகாசக் கதைகளையும் வரலாறாக ஏற்க வேண்டிய அபாயத்திற்குள் தள்ளப்படுவோம்.

          மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் பாடல்கள் சங்கப் பனுவல்களில் மிகுதி எனினும் வேளிர் (Velir) எனும் குடித்தலைமை சிற்றரசர்கள் குறித்த பதிவுகளும் சிறுபாணாற்றுப்படை, புறநானூறு போன்ற நூல்களில் காணக் கிடைக்கின்றன. இவர்களில் பலநூறு பேர்கள் இருந்திருப்பினும் சிலர் வள்ளல்கள் என்ற வகையில் மேல், கீழ்க்கணக்கு  இலக்கிய தொகுப்புகளைப் போல கடையேழு வள்ளல்கள் என்று தொகுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொடையாளிகள் என்ற பிரிவில் சிறப்பாகப் பேசப்படுகின்றனர். இவர்களது கொடைத்திறம்  கொடை மடம் என்று சிறப்பிக்கப்படுகிறது. சங்ககாலத்தில் வேளிர்கள், மூவேந்தருக்குக் கீழ்ப்படியாமல் தனித்தியங்கியதும், மூவேந்தர்கள் இவர்களிடம் போர்களுக்கு உதவிபெற்ற நிகழ்வுகளும் உண்டு. மூவேந்தர்களுடன் கூட்டணியமைத்து பிற வேளிர் அரசர்களைக் கொன்றழித்த கதைகளும் இருக்கின்றன.

        சிறுபாணாற்றுப்படையிலும் அதியமானும் புறநானூற்றில் அவருக்குப் பதிலாக எழினி என்றும் எழுவர் பட்டியல் மாறுகிறது. பிற்காலத்தில் புராணக் கதை மாந்தர்களான சிபிச்சக்கரவர்த்தி போன்றோரையும் எழுவர் பட்டியலில் இணைக்கும் நிலை இருந்திருக்கிறது. மூவேந்தர்களின் நாட்டை அடிப்படையாகக்  கொண்டு வேளிர் சிற்றரசர்களை சேர, சோழ, பாண்டிய நாட்டு வெளிர்கள் எனவும் வகைப்படுத்தும் போக்கும் உள்ளது. இருப்பினும் கடையேழு வள்ளல்கள் என்ற பகுப்பும் அதில் கட்டமைக்கப்பட்ட கொடை மடக் கதைகளும் தமிழ் தமிழர் தமிழ்நாட்டின்  பெருமை என்ற நிலையில் தொடர்ந்து சொல்லப்படுவனவாக உள்ளன. கடையேழு வள்ளல்களின் வள்ளல் குணத்தை முதலில் காண்போம்.

              01.பேகன்: பொதினி மலை எனும் பழனி மலையை ஆண்ட குறுநில மன்னர்; மயிலுக்கு போர்வை அளித்தவர். பருவ மழை பொய்க்காத  வளம்மிக்க மலை நாட்டை உடைய  பேகன்,  மயில் தோகை விரித்தாடியது குளிரால் என்று எண்ணி, அதன் மீது மிகுந்த இரக்கம் கொண்டு, தன் போர்வையை மயிலுக்குப் போர்த்தியவர். இதனால் இவர் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய பெருங்கல் நாடன் பேகன்என்று  சிறுபாணாற்றுப்படை போற்றுகிறது. காட்டில் மயிலுக்கு ஆடை வழங்கிய மலைநாட்டைச் சேர்ந்த பேகன் என்பது இதன் பொருளாகும்.

       மயிலுக்கு போர்வை தந்த பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து விறலியர் ஒருவருடன் ஈடுபாடு கொண்டார். இதனையறிந்த புலவர்கள் பரணர்,  கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்றோர் பேகனுக்கு அறிவுரை கூறி கண்ணகியுடன் சேர்ந்து வாழ வைத்த கதையும் சங்கப்பாடல்கள் வழியே அறிய முடிகிறது. இவர்கள் அனைவரும் மீண்டும் கண்ணகியுடன் சேர்ந்து வாழ்வதே தமக்கு அளிக்கும் பரிசில் என்று கூறி பேகனை நல்வழிப்படுத்துகின்றனர்.

     02.பாரி:  தற்போதைய சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான் மலை அன்று   பறம்பு மலை என்று வழங்கப்பட்டது. பறம்பு நாடு என்றழைக்கப்பட்ட பிரான் மலையை  ஆண்ட சிற்றரசர் பாரி.     வண்டுகள் (சுரும்புகள்) உண்ணுமாறு தேன் வழங்கும் சிறப்பான சுரபுன்னைகள் நிறைந்த காட்டின் வழியாகத் தேரில் செல்லும்போது, சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடி பற்றிப் படர்வதற்குக் கொழுக்கொம்பு இல்லாமல் தவித்ததைக் கண்ட பாரி தான் வந்த தேரை நிறுத்தி, அதில் முல்லைக் கொடியைப் படரவிட்டான். இந்நிகழ்வை, “சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பறம்பின் கோமான் பாரி”, என்று புகழ்ந்துரைக்கின்றனர்.

      புலவர்களையும் பாணர்களையும் அழைத்து உணவும் பரிசில்கள் வழங்கி அவர்களை ஆதரிப்பது அரசர்களின் வழக்கமாக இருந்தது.  அந்த வகையில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த புலவர் கபிலரை விரும்பி அழைத்து, நட்பாகி தனது நாட்டில் தங்க வைத்தார். சோழ, பாண்டிய மன்னர்களால் போரில் வீழ்த்தப்பட முடியாத பாரி பாணர் வேடம் தரித்த வஞ்சகர்களால் கொல்லப்பட்டார். பாரி கொல்லப்பட்ட பின்பு அவரது மகளான  அங்கவை, சங்கவை இருவருடன் நாட்டைவிட்டு வெளியேறி, அவர்களைப் பாதுகாப்பாக காரி குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு வெண்ணையாற்றங்கரையில் வடக்கிருந்து (உண்ணாநோன்பு)  உயிர் துறந்தார். பாரி மகளிர் அவ்வைக்கு நீலச்சிற்றடை வழங்கிய நிகழ்வும் அவ்வையாரின் தனிப் பாடலாக உள்ளது. அதன்பிறகு பாரி மகளிரை மலையமான் திருமுடிக்காரி மரபில் வந்த சகோதரர்களுக்கு மணம் முடித்ததாகச் சொல்லப்படுகிறது. திருக்கோவிலூர் பார்ப்பனர்களுக்கு மணம் முடித்ததாகச் சொல்லும் வேறு கதைகளும் உண்டு.

     03.காரி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை ஆண்ட வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்றழைக்கப்பட்டவர். அச்சம் தரும் நீண்ட வேலினையும் பெரிய கைகளையும் காரி என்ற குதிரையையும் கொண்ட வீரன் காரி, போரில் ஈடுபடும்  தன் குதிரையையும், பிற செல்வங்களையும் இரவலர்களுக்கு வாரி வழங்கியதை, “ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்தகழல்தொடித் தடக்கைக் காரிஎனச் சிறுபாணாற்றுப்படையால் சிறப்பிக்கப்படுகிறார். புலவர்களுக்கு கடுக்கன் அணிவித்து மகிழ்வதும், தேரில் ஏற்றி அழகு பார்ப்பதும் இவரது செயல்களாகச் சுட்டப்படுகின்றன.

     காரி சேரமான் பெருஞ்சேரலிரும் பொறைக்காக வள்வில் ஓரியைப் போரில் கொன்றார். இதற்காக அதியமான் திருக்கோவிலூர் மீது படையெடுத்து காரியைத் தோற்கடித்தார். சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையுடன் காரி இணைந்து பெரும்படையுடன் தகடூர் போரில் அதியமானைத் தோற்கடித்ததாகக் கூறப்படுகிறது. மூவேந்தர்களும் சண்டையின்றி ஒற்றுமையாக இருந்த காலத்தில அனைவரும் சேர்ந்து இவருக்கு முடிசூடிப் பாராட்டியதால் மலையமான் திருமுடிக்காரி என்ற பெயர் வந்தது என்கிறார்கள்.

       புலவர் கபிலர் பாரி மகளிருடன் காரியிடன் அடைக்கலமாகிறார். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடம் தென்பெண்ணையாற்றின் கரையில் கபிலர் குன்று (கபிலக்கல்) என்று அழைக்கப்படுகிறது. மலையமான் குலத்தைச் சேர்ந்த முதலாம் ராஜராஜனின் தாய் வானவன் மாதேவி என்பதால் பிற்காலச் சோழர்கள் காலத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது.  இலக்கியச் சான்றின்படியான வடக்கிருந்து உயிர் துறத்தல் சமண மரபு என்பதால் கபிலர் தீயில் இறங்கி உயிர் துறந்தார் என்பதைப் பிற்காலக் கல்வெட்டு அன்றைய காலச் சூழலுக்கேற்ப திரிக்கிறது.

    04. ஆய்: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அமைந்துள்ள பொதிகைமலையில்தான் குற்றால அருவி உள்ளது. தாமிரபரணி இங்குதான் தோன்றுகிறது. பிற்காலத்தில் அகத்தியர் கதைகள் போலியாக நுழைக்கப்பட்டு அகத்தியமலை என்று மாற்றப்பட்டது.  ஆய் ஆண்டிரன், வேள் ஆய் என்றும் அழைக்கப்படும் இவர் பொதிகை மலையில் உள்ள ஆய் குடியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர். வலிமையான தோள்களை உடைய, இனிய மொழிகளைப் பேசி மகிழும், ஆய் சிவபெருமான் மீது கொண்ட பற்றால்  நீலநாகம் அளித்த ஆடையை (கலிங்கம்)  குற்றாலநாதருக்கு அணிவித்து பெருமையடைந்தவர் ஆர்வ நன்மொழி ஆய் என்று புகழப்படுகிறார். தன்னிடம் பரிசில் பெற வருபவர்களுக்கு யானைகளைப் பரிசாக வழங்கியவர் என்றும் குறிப்பிடுகிறார்கள். முட மோசியார், குட்டுவன் கீரனார் போன்றோர் இவரைப் பாடியுள்ளனர்.

     05. அதியமான்: அதியர் என்னும் குடியில் பிறந்த அதியமானுக்கு என்று அதியன், அதிகமான், நெடுமான் அஞ்சி, அஞ்சி என்று பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அன்று தகடூர் என்று அழைக்கப்பட்ட இன்றைய தருமபுரியை ஆட்சி செய்தவர். ஒருமுறை கஞ்சமலைக் காட்டில் கிடைத்த மருத்துவக் குணமுடைய நெல்லிக் கனி, அதை உண்போர் நீண்டகாலம் வாழ்வார்கள் என்பதனையறிந்து, தான் உண்ணாமல், அக்கனியை ஒளவையாருக்கு  அளித்து மகிழ்ந்த நிகழ்வை, “அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்தஅரவக் கடல்தானை அதிகன் என்று சங்கப்பாடல் பாராட்டுகிறது. அதியமானுக்கும் சேர அரசனுக்கும்  நிகழ்ந்த தகடூர் போர் குறித்த தகடூர் யாத்திரை நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆனால் அதியமான் அவ்வையார் குறித்து இங்கு சொல்லப்படும் கதைகள் ஏராளம்.

     06. நள்ளி: நீலகிரி மலையில் துளிமழை பொழியும் நளிமலை நாட்டைச் சேர்ந்தவர். கண்டீர நாடு, தோட்டி மலை என்றும் இது அழைக்கப்பட்டது. இவர் கண்டீரக் கோப்பெரு நள்ளி, பெரு நள்ளி, நளிமலை நாடன் என்றும் அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கும் தன்னை நம்பி வந்தோருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தட்டுப்பாடின்றி வழங்கிய வள்ளல் இவர். இரவலர் மகிழவும் அவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறு நிரம்பக் கொடுக்கும் இவரது வள்ளல் குணத்தை,  முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை   நளிமலை நாடன் நள்ளி என்று சிறுபாணாற்றுப்படை சிறப்பாகப் பதிவு செய்கிறது. தன்னிடம் வந்தவர் மீண்டும் வேறொருவரிடம் கையேந்தாத வகையில் அள்ளித் தந்தவர்.  வன்பரணர் இவரைப் பற்றிப் பாடியுள்ளார்.  

     07. ஓரி: சிறிய மலைகளை உடைய கொல்லிமலையிலுள்ள குறும்பொறை நாட்டை ஆண்டவர் வல்வில் ஓரி.  தன்னுடைய நாட்டை யாழ் மீட்டும் பாணர்க்கு அளித்தவர். வல்வில் ஓரி விட்ட அம்பு காட்டு யானையை வீழ்த்தி, புலியின் வாயிற்குள் புகுந்து, கலை மானை ஊடுருவி, காட்டுப் பன்றியின் உயிரையும் வாங்கி, புற்றுக்குள் நுழைந்து அங்கிருந்த உடும்பையும் கொன்றதாக வன்பரணர் பாடல் மிகையுணர்ச்சிக் குவியலாக உள்ளதையும் நாம் காணலாம்.

      ஓரி என்னும் பெயர்கொண்ட தன் குதிரை மீதேறி, காரி என்னும் குதிரையில் வந்த மற்றொரு வேளிர்  காரியோடு போரிட்டு வென்றவர்.    இறுதியில் சேரருடன்  கூட்டு சேர்ந்து  இறுதியில்  தன் எதிரி காரியைக்  கொன்றவர். விற்போரில் சிறந்த ஓரி கொல்லி, புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய தன் நாட்டை  மலைக் கவிஞர்களுக்கு பரிசளித்த விவரம், “நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்துக் குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த ஓரிக் குதிரை ஓரி என்ற பாடல் மூலம் தெரியவருகிறது.

          சங்க இலக்கியப் பாடல்களையும் தொல்லியல் ஆய்வு முடிவுகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, வரலாறு செழுமையடைகிறது. அந்த வகையில் வெளிர் வரலாற்று ஆய்வுகள் தொடர்கின்றன. கொடை சிறப்பானது; எனவே பகுத்தறிவற்று முல்லைக்குத் தேர், மயிலுக்குப் போர்வை, யானை, நாடு என அளிக்கும் கொடைகள் மடத்தனமானவை என்றாலும்  ஈகைப்பண்பு பாராட்டிற்குரியது என்பதால் இவற்றிற்கு கொடைமடம்  என்று பெயரிட்டு அழைக்கும் வழக்கம் தமிழில் உள்ளது. மேலும் இக்கதைகளை வரலாறெனப் பரப்பும் போக்கும் உள்ளது.

         இந்த வள்ளல்கள் தங்களுக்குள் போரிட்டு மடிந்தவர்கள். இவர்கள் தங்களுக்குள்ளாகவும் தேவைப்படும்போது மூவேந்தர்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டு, பிற வேளிரை வீழ்த்தி, வழக்கமான அரசர்களைப் போலவே இயங்கியுள்ளனர். மூவேந்தர்களுக்கு மாற்றாக இவர்களைப் நிறுத்தும் போக்கு ஒன்று அன்றைய காலத்தில் உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியே இந்த கொடைமடக் கதைகளாகும். பெருவேந்தர்களைப் போல பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் நிலை மட்டும் இவர்களிடம் இல்லை. இருப்பினும் முல்லைக்குத் தேர் கொடுத்த பேகன் தன் மனைவி கண்ணகியை விறலியர் தொடர்பால் பிரிந்திருந்ததை அறியமுடிகிறது. முல்லைக் கொடி படர தேர் தந்த பேகன் தன் மனைவியைப் பிரிந்து அவரைத் துயரில் ஆழ்த்துவது முரண்பாடாக உள்ளது.  இவர்களது ஈகைக்குணம் குறித்த உயர்வு நவிற்சிச் சொல்லாடல்கள்  புலவர்கள் மற்றும் பாணர்களால் உருவாகிக் கதைகளாகப் பரப்பப்பட்டு வந்துள்ளது. இந்த இலக்கியச் சான்றான இந்த மிகையுணர்ச்சிக் குவியல்கள் காலப்போக்கில் வரலாறாகவே மாற்றப்பட்டுவிட்டது.

       கல்வியறிவு பெற்ற புலவர்களே வறுமையில் வாடியபோது அன்றைய சாதாரண மக்களில் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே நாட்டின் வறுமை இருந்திருக்கிறது. புலவர்களுக்கு மட்டுமே வறுமை எனச் சொல்ல இயலாது. நாட்டின் வளம் செழித்திருந்தாகச் சொல்லப்பட்டாலும் புலவர்கள் மட்டும் வறுமையில் உழல்வதை புரிந்து கொள்வது சற்று சிக்கலானதுதான். உதவி கேட்டுவரும் இரவலர், புலவர் மற்றும் பாணர்களுக்கு யானை, நாடு போன்ற பரிசில்கள் அளிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? மலை நாட்டு மன்னன் மயில் எப்போது, எதற்கு  தோகை விரித்தாடும் என்பதை அறியாமலிருக்க முடியுமா? அப்படி அறியாத அரசனுக்கு அறிவில் சிறந்த புலவர்கள் சுட்டியிருக்க வேண்டாமா? மாறாக புலவர்கள் அவனது கொடைத்திறம் பற்றியே வியக்கின்றனர்.

      இக்கதைகள் தனிமனித புகழ்பாடல்களுடன் மிகையுணர்ச்சிக் குவியலாகவே காட்சியளிக்கின்றன. இதில் இலக்கிய நயங்களை வேண்டுமானால் விண்டுரைக்கலாம்; பழங்கால தமிழ்நாட்டின் வரலாற்றைத் தேட முடியாது. இதிகாச, புராணக் கதைகளை ஒத்த இவற்றிற்கு முதன்மை தருவது வரலாற்றை மலினப்படுத்தும்.

-         வரலாற்றுக் கற்பனைகள் தொடரும்.

 

நன்றி: ‘பொம்மிசிறுவர் மாத இதழ், நவம்பர் 2025