ஞாயிறு, நவம்பர் 09, 2025

11. கொடை மடக் கதைகள்

 

வரலாறும்  தொன்மமும்  - தொடர்

11. கொடை மடக் கதைகள்

மு.சிவகுருநாதன்


 

          சங்ககாலத் தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களும் வேளிர் எனப்படும் சிற்றரசர்கள் பலரும் ஆண்டதாக வரலாற்றில் படிக்கிறோம். இவை பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில்  அமைந்த வரலாறாகும். இலக்கியச் சான்றுகளை வரலாறாகக் கட்டமைக்கும்போது  மிகைப்படுத்தல் எனும் உயர்வு நவிற்சிக் கூறுகள் வரலாற்றில் பெருந்தடையாக அமைகின்றன. இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் இலக்கியக் கதைகளை மட்டும் வரலாறாகப் பேசுவது ஒருவித மாயத் தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது. இக்கதைகளை ஏற்றுக்கொண்டால் மறுபுறம் இதிகாசக் கதைகளையும் வரலாறாக ஏற்க வேண்டிய அபாயத்திற்குள் தள்ளப்படுவோம்.

          மூவேந்தர்களின் சிறப்பைப் பாடும் பாடல்கள் சங்கப் பனுவல்களில் மிகுதி எனினும் வேளிர் (Velir) எனும் குடித்தலைமை சிற்றரசர்கள் குறித்த பதிவுகளும் சிறுபாணாற்றுப்படை, புறநானூறு போன்ற நூல்களில் காணக் கிடைக்கின்றன. இவர்களில் பலநூறு பேர்கள் இருந்திருப்பினும் சிலர் வள்ளல்கள் என்ற வகையில் மேல், கீழ்க்கணக்கு  இலக்கிய தொகுப்புகளைப் போல கடையேழு வள்ளல்கள் என்று தொகுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொடையாளிகள் என்ற பிரிவில் சிறப்பாகப் பேசப்படுகின்றனர். இவர்களது கொடைத்திறம்  கொடை மடம் என்று சிறப்பிக்கப்படுகிறது. சங்ககாலத்தில் வேளிர்கள், மூவேந்தருக்குக் கீழ்ப்படியாமல் தனித்தியங்கியதும், மூவேந்தர்கள் இவர்களிடம் போர்களுக்கு உதவிபெற்ற நிகழ்வுகளும் உண்டு. மூவேந்தர்களுடன் கூட்டணியமைத்து பிற வேளிர் அரசர்களைக் கொன்றழித்த கதைகளும் இருக்கின்றன.

        சிறுபாணாற்றுப்படையிலும் அதியமானும் புறநானூற்றில் அவருக்குப் பதிலாக எழினி என்றும் எழுவர் பட்டியல் மாறுகிறது. பிற்காலத்தில் புராணக் கதை மாந்தர்களான சிபிச்சக்கரவர்த்தி போன்றோரையும் எழுவர் பட்டியலில் இணைக்கும் நிலை இருந்திருக்கிறது. மூவேந்தர்களின் நாட்டை அடிப்படையாகக்  கொண்டு வேளிர் சிற்றரசர்களை சேர, சோழ, பாண்டிய நாட்டு வெளிர்கள் எனவும் வகைப்படுத்தும் போக்கும் உள்ளது. இருப்பினும் கடையேழு வள்ளல்கள் என்ற பகுப்பும் அதில் கட்டமைக்கப்பட்ட கொடை மடக் கதைகளும் தமிழ் தமிழர் தமிழ்நாட்டின்  பெருமை என்ற நிலையில் தொடர்ந்து சொல்லப்படுவனவாக உள்ளன. கடையேழு வள்ளல்களின் வள்ளல் குணத்தை முதலில் காண்போம்.

              01.பேகன்: பொதினி மலை எனும் பழனி மலையை ஆண்ட குறுநில மன்னர்; மயிலுக்கு போர்வை அளித்தவர். பருவ மழை பொய்க்காத  வளம்மிக்க மலை நாட்டை உடைய  பேகன்,  மயில் தோகை விரித்தாடியது குளிரால் என்று எண்ணி, அதன் மீது மிகுந்த இரக்கம் கொண்டு, தன் போர்வையை மயிலுக்குப் போர்த்தியவர். இதனால் இவர் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய பெருங்கல் நாடன் பேகன்என்று  சிறுபாணாற்றுப்படை போற்றுகிறது. காட்டில் மயிலுக்கு ஆடை வழங்கிய மலைநாட்டைச் சேர்ந்த பேகன் என்பது இதன் பொருளாகும்.

       மயிலுக்கு போர்வை தந்த பேகன் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து விறலியர் ஒருவருடன் ஈடுபாடு கொண்டார். இதனையறிந்த புலவர்கள் பரணர்,  கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்றோர் பேகனுக்கு அறிவுரை கூறி கண்ணகியுடன் சேர்ந்து வாழ வைத்த கதையும் சங்கப்பாடல்கள் வழியே அறிய முடிகிறது. இவர்கள் அனைவரும் மீண்டும் கண்ணகியுடன் சேர்ந்து வாழ்வதே தமக்கு அளிக்கும் பரிசில் என்று கூறி பேகனை நல்வழிப்படுத்துகின்றனர்.

     02.பாரி:  தற்போதைய சிவகங்கை மாவட்டத்தின் சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான் மலை அன்று   பறம்பு மலை என்று வழங்கப்பட்டது. பறம்பு நாடு என்றழைக்கப்பட்ட பிரான் மலையை  ஆண்ட சிற்றரசர் பாரி.     வண்டுகள் (சுரும்புகள்) உண்ணுமாறு தேன் வழங்கும் சிறப்பான சுரபுன்னைகள் நிறைந்த காட்டின் வழியாகத் தேரில் செல்லும்போது, சிறிய பூக்களை உடைய முல்லைக் கொடி பற்றிப் படர்வதற்குக் கொழுக்கொம்பு இல்லாமல் தவித்ததைக் கண்ட பாரி தான் வந்த தேரை நிறுத்தி, அதில் முல்லைக் கொடியைப் படரவிட்டான். இந்நிகழ்வை, “சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய பறம்பின் கோமான் பாரி”, என்று புகழ்ந்துரைக்கின்றனர்.

      புலவர்களையும் பாணர்களையும் அழைத்து உணவும் பரிசில்கள் வழங்கி அவர்களை ஆதரிப்பது அரசர்களின் வழக்கமாக இருந்தது.  அந்த வகையில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த புலவர் கபிலரை விரும்பி அழைத்து, நட்பாகி தனது நாட்டில் தங்க வைத்தார். சோழ, பாண்டிய மன்னர்களால் போரில் வீழ்த்தப்பட முடியாத பாரி பாணர் வேடம் தரித்த வஞ்சகர்களால் கொல்லப்பட்டார். பாரி கொல்லப்பட்ட பின்பு அவரது மகளான  அங்கவை, சங்கவை இருவருடன் நாட்டைவிட்டு வெளியேறி, அவர்களைப் பாதுகாப்பாக காரி குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு வெண்ணையாற்றங்கரையில் வடக்கிருந்து (உண்ணாநோன்பு)  உயிர் துறந்தார். பாரி மகளிர் அவ்வைக்கு நீலச்சிற்றடை வழங்கிய நிகழ்வும் அவ்வையாரின் தனிப் பாடலாக உள்ளது. அதன்பிறகு பாரி மகளிரை மலையமான் திருமுடிக்காரி மரபில் வந்த சகோதரர்களுக்கு மணம் முடித்ததாகச் சொல்லப்படுகிறது. திருக்கோவிலூர் பார்ப்பனர்களுக்கு மணம் முடித்ததாகச் சொல்லும் வேறு கதைகளும் உண்டு.

     03.காரி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை ஆண்ட வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்றழைக்கப்பட்டவர். அச்சம் தரும் நீண்ட வேலினையும் பெரிய கைகளையும் காரி என்ற குதிரையையும் கொண்ட வீரன் காரி, போரில் ஈடுபடும்  தன் குதிரையையும், பிற செல்வங்களையும் இரவலர்களுக்கு வாரி வழங்கியதை, “ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்தகழல்தொடித் தடக்கைக் காரிஎனச் சிறுபாணாற்றுப்படையால் சிறப்பிக்கப்படுகிறார். புலவர்களுக்கு கடுக்கன் அணிவித்து மகிழ்வதும், தேரில் ஏற்றி அழகு பார்ப்பதும் இவரது செயல்களாகச் சுட்டப்படுகின்றன.

     காரி சேரமான் பெருஞ்சேரலிரும் பொறைக்காக வள்வில் ஓரியைப் போரில் கொன்றார். இதற்காக அதியமான் திருக்கோவிலூர் மீது படையெடுத்து காரியைத் தோற்கடித்தார். சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையுடன் காரி இணைந்து பெரும்படையுடன் தகடூர் போரில் அதியமானைத் தோற்கடித்ததாகக் கூறப்படுகிறது. மூவேந்தர்களும் சண்டையின்றி ஒற்றுமையாக இருந்த காலத்தில அனைவரும் சேர்ந்து இவருக்கு முடிசூடிப் பாராட்டியதால் மலையமான் திருமுடிக்காரி என்ற பெயர் வந்தது என்கிறார்கள்.

       புலவர் கபிலர் பாரி மகளிருடன் காரியிடன் அடைக்கலமாகிறார். கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடம் தென்பெண்ணையாற்றின் கரையில் கபிலர் குன்று (கபிலக்கல்) என்று அழைக்கப்படுகிறது. மலையமான் குலத்தைச் சேர்ந்த முதலாம் ராஜராஜனின் தாய் வானவன் மாதேவி என்பதால் பிற்காலச் சோழர்கள் காலத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது.  இலக்கியச் சான்றின்படியான வடக்கிருந்து உயிர் துறத்தல் சமண மரபு என்பதால் கபிலர் தீயில் இறங்கி உயிர் துறந்தார் என்பதைப் பிற்காலக் கல்வெட்டு அன்றைய காலச் சூழலுக்கேற்ப திரிக்கிறது.

    04. ஆய்: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அமைந்துள்ள பொதிகைமலையில்தான் குற்றால அருவி உள்ளது. தாமிரபரணி இங்குதான் தோன்றுகிறது. பிற்காலத்தில் அகத்தியர் கதைகள் போலியாக நுழைக்கப்பட்டு அகத்தியமலை என்று மாற்றப்பட்டது.  ஆய் ஆண்டிரன், வேள் ஆய் என்றும் அழைக்கப்படும் இவர் பொதிகை மலையில் உள்ள ஆய் குடியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர். வலிமையான தோள்களை உடைய, இனிய மொழிகளைப் பேசி மகிழும், ஆய் சிவபெருமான் மீது கொண்ட பற்றால்  நீலநாகம் அளித்த ஆடையை (கலிங்கம்)  குற்றாலநாதருக்கு அணிவித்து பெருமையடைந்தவர் ஆர்வ நன்மொழி ஆய் என்று புகழப்படுகிறார். தன்னிடம் பரிசில் பெற வருபவர்களுக்கு யானைகளைப் பரிசாக வழங்கியவர் என்றும் குறிப்பிடுகிறார்கள். முட மோசியார், குட்டுவன் கீரனார் போன்றோர் இவரைப் பாடியுள்ளனர்.

     05. அதியமான்: அதியர் என்னும் குடியில் பிறந்த அதியமானுக்கு என்று அதியன், அதிகமான், நெடுமான் அஞ்சி, அஞ்சி என்று பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அன்று தகடூர் என்று அழைக்கப்பட்ட இன்றைய தருமபுரியை ஆட்சி செய்தவர். ஒருமுறை கஞ்சமலைக் காட்டில் கிடைத்த மருத்துவக் குணமுடைய நெல்லிக் கனி, அதை உண்போர் நீண்டகாலம் வாழ்வார்கள் என்பதனையறிந்து, தான் உண்ணாமல், அக்கனியை ஒளவையாருக்கு  அளித்து மகிழ்ந்த நிகழ்வை, “அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்தஅரவக் கடல்தானை அதிகன் என்று சங்கப்பாடல் பாராட்டுகிறது. அதியமானுக்கும் சேர அரசனுக்கும்  நிகழ்ந்த தகடூர் போர் குறித்த தகடூர் யாத்திரை நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஆனால் அதியமான் அவ்வையார் குறித்து இங்கு சொல்லப்படும் கதைகள் ஏராளம்.

     06. நள்ளி: நீலகிரி மலையில் துளிமழை பொழியும் நளிமலை நாட்டைச் சேர்ந்தவர். கண்டீர நாடு, தோட்டி மலை என்றும் இது அழைக்கப்பட்டது. இவர் கண்டீரக் கோப்பெரு நள்ளி, பெரு நள்ளி, நளிமலை நாடன் என்றும் அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கும் தன்னை நம்பி வந்தோருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தட்டுப்பாடின்றி வழங்கிய வள்ளல் இவர். இரவலர் மகிழவும் அவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறு நிரம்பக் கொடுக்கும் இவரது வள்ளல் குணத்தை,  முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை   நளிமலை நாடன் நள்ளி என்று சிறுபாணாற்றுப்படை சிறப்பாகப் பதிவு செய்கிறது. தன்னிடம் வந்தவர் மீண்டும் வேறொருவரிடம் கையேந்தாத வகையில் அள்ளித் தந்தவர்.  வன்பரணர் இவரைப் பற்றிப் பாடியுள்ளார்.  

     07. ஓரி: சிறிய மலைகளை உடைய கொல்லிமலையிலுள்ள குறும்பொறை நாட்டை ஆண்டவர் வல்வில் ஓரி.  தன்னுடைய நாட்டை யாழ் மீட்டும் பாணர்க்கு அளித்தவர். வல்வில் ஓரி விட்ட அம்பு காட்டு யானையை வீழ்த்தி, புலியின் வாயிற்குள் புகுந்து, கலை மானை ஊடுருவி, காட்டுப் பன்றியின் உயிரையும் வாங்கி, புற்றுக்குள் நுழைந்து அங்கிருந்த உடும்பையும் கொன்றதாக வன்பரணர் பாடல் மிகையுணர்ச்சிக் குவியலாக உள்ளதையும் நாம் காணலாம்.

      ஓரி என்னும் பெயர்கொண்ட தன் குதிரை மீதேறி, காரி என்னும் குதிரையில் வந்த மற்றொரு வேளிர்  காரியோடு போரிட்டு வென்றவர்.    இறுதியில் சேரருடன்  கூட்டு சேர்ந்து  இறுதியில்  தன் எதிரி காரியைக்  கொன்றவர். விற்போரில் சிறந்த ஓரி கொல்லி, புன்னை மரங்களையும் குன்றுகளையும் உடைய தன் நாட்டை  மலைக் கவிஞர்களுக்கு பரிசளித்த விவரம், “நறும்போது கஞலிய நாகு முதிர் நாகத்துக் குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த ஓரிக் குதிரை ஓரி என்ற பாடல் மூலம் தெரியவருகிறது.

          சங்க இலக்கியப் பாடல்களையும் தொல்லியல் ஆய்வு முடிவுகளோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, வரலாறு செழுமையடைகிறது. அந்த வகையில் வெளிர் வரலாற்று ஆய்வுகள் தொடர்கின்றன. கொடை சிறப்பானது; எனவே பகுத்தறிவற்று முல்லைக்குத் தேர், மயிலுக்குப் போர்வை, யானை, நாடு என அளிக்கும் கொடைகள் மடத்தனமானவை என்றாலும்  ஈகைப்பண்பு பாராட்டிற்குரியது என்பதால் இவற்றிற்கு கொடைமடம்  என்று பெயரிட்டு அழைக்கும் வழக்கம் தமிழில் உள்ளது. மேலும் இக்கதைகளை வரலாறெனப் பரப்பும் போக்கும் உள்ளது.

         இந்த வள்ளல்கள் தங்களுக்குள் போரிட்டு மடிந்தவர்கள். இவர்கள் தங்களுக்குள்ளாகவும் தேவைப்படும்போது மூவேந்தர்களுடன் இணைந்து போரில் ஈடுபட்டு, பிற வேளிரை வீழ்த்தி, வழக்கமான அரசர்களைப் போலவே இயங்கியுள்ளனர். மூவேந்தர்களுக்கு மாற்றாக இவர்களைப் நிறுத்தும் போக்கு ஒன்று அன்றைய காலத்தில் உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியே இந்த கொடைமடக் கதைகளாகும். பெருவேந்தர்களைப் போல பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் நிலை மட்டும் இவர்களிடம் இல்லை. இருப்பினும் முல்லைக்குத் தேர் கொடுத்த பேகன் தன் மனைவி கண்ணகியை விறலியர் தொடர்பால் பிரிந்திருந்ததை அறியமுடிகிறது. முல்லைக் கொடி படர தேர் தந்த பேகன் தன் மனைவியைப் பிரிந்து அவரைத் துயரில் ஆழ்த்துவது முரண்பாடாக உள்ளது.  இவர்களது ஈகைக்குணம் குறித்த உயர்வு நவிற்சிச் சொல்லாடல்கள்  புலவர்கள் மற்றும் பாணர்களால் உருவாகிக் கதைகளாகப் பரப்பப்பட்டு வந்துள்ளது. இந்த இலக்கியச் சான்றான இந்த மிகையுணர்ச்சிக் குவியல்கள் காலப்போக்கில் வரலாறாகவே மாற்றப்பட்டுவிட்டது.

       கல்வியறிவு பெற்ற புலவர்களே வறுமையில் வாடியபோது அன்றைய சாதாரண மக்களில் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே நாட்டின் வறுமை இருந்திருக்கிறது. புலவர்களுக்கு மட்டுமே வறுமை எனச் சொல்ல இயலாது. நாட்டின் வளம் செழித்திருந்தாகச் சொல்லப்பட்டாலும் புலவர்கள் மட்டும் வறுமையில் உழல்வதை புரிந்து கொள்வது சற்று சிக்கலானதுதான். உதவி கேட்டுவரும் இரவலர், புலவர் மற்றும் பாணர்களுக்கு யானை, நாடு போன்ற பரிசில்கள் அளிப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? மலை நாட்டு மன்னன் மயில் எப்போது, எதற்கு  தோகை விரித்தாடும் என்பதை அறியாமலிருக்க முடியுமா? அப்படி அறியாத அரசனுக்கு அறிவில் சிறந்த புலவர்கள் சுட்டியிருக்க வேண்டாமா? மாறாக புலவர்கள் அவனது கொடைத்திறம் பற்றியே வியக்கின்றனர்.

      இக்கதைகள் தனிமனித புகழ்பாடல்களுடன் மிகையுணர்ச்சிக் குவியலாகவே காட்சியளிக்கின்றன. இதில் இலக்கிய நயங்களை வேண்டுமானால் விண்டுரைக்கலாம்; பழங்கால தமிழ்நாட்டின் வரலாற்றைத் தேட முடியாது. இதிகாச, புராணக் கதைகளை ஒத்த இவற்றிற்கு முதன்மை தருவது வரலாற்றை மலினப்படுத்தும்.

-         வரலாற்றுக் கற்பனைகள் தொடரும்.

 

நன்றி: ‘பொம்மிசிறுவர் மாத இதழ், நவம்பர் 2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக