புதன், ஜூலை 09, 2014

இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள் உண்மை அறியும் குழு அறிக்கை

இளவரசன் நினைவு நாளை ஒட்டிய கைதுகள் மற்றும் காவல்துறை அத்துமீறல்கள்  

                                   உண்மை அறியும் குழு அறிக்கை


(பகுதி I )
                                                                                                                                                                சென்னை.                                                                                                                                                  ஜூலை 9, 2014

இந்த உண்மை அறியும் குழுவில் பங்குபெற்றோர்:

1.அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (Peoples UNion for Human RIghts), சென்னை,
2.வி.சீனிவாசன், சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை,
3.பேரா ஜி.கே.ராமசாமி, மக்கள் ஜனநாயக முன்னணி (Peoples Democratic Front), பெங்களூரு,
4.பேரா. சிவலிங்கம், ஸ்வாபிமான தலித் சக்தி (Swabimana Dalit Sakthi), பெங்களூரு,
5.வழக்குரைஞர் ஏ. சையதுஅப்துல் காதர், மனித உரிமை அமைப்புகளின் தேசியக் கூட்டமைப்பு (National Confederation of Human Rights), மதுரை,
6.வினோத், சேவ் டமில்ஸ் இயக்கம் (Save Tamils Movement)), பெங்களூரு,
7.ஷ்ரீலா மனோகர், சமூக ஆர்வலர், சென்னை.

      தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆயுதப் போராட்ட அமைப்புகளில் இணைந்துள்ளதாகவும், இளவரசன் நினைவு நாளன்று அப்பகுதி வன்னிய சாதியைச் சேர்ந்த சில முக்கியமானவர்களைக் கொல்லச் சதி செய்ததாகவும், தற்போது கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் சென்ற மாத இறுதியில் செய்திகள் வெளிவந்தன. அதை ஒட்டி அதே வாசகங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கண்டன அறிக்கையும் வெளி வந்தது. நத்தம் காலனி தலித் மக்கள் அக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்ததோடு காவல்துறை அத்துமீறல்களால் தாங்கள் துன்புறுத்தப் படுவதாகவும் கூறினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பகுஜன் சமாஜ் கட்சி, மா-லெ இயக்கங்கள் ஆகியனவும் இக் கைதுகளைக் கண்டித்திருந்தன.

இந்நிலையில் இது குறித்த உண்மைகளைக் கண்டறியும் நோக்குடன் எமது குழுவினர் சென்ற ஜூலை 5 மற்றும் 8 தேதிகளில் தருமபுரி வந்திருந்து நத்தம் காலனி மக்களையும் அதிகாரிகளையும் சந்தித்தோம்.

கைது செய்யப்பட்டுள்ள துரையின் மனைவி செல்வி (37), சங்கர், அசோக் ஆகியோரின்  சகோதரி சுமதி (27), சந்தோஷின் தாய் சாலம்மா, சக்தியின் மனைவி தமிழ்செல்வி, கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் உள்ளோர், கைது நடவடிக்கைகளின்போது நேரில் இருந்த வி.சி.க பொறுப்பாளர் பழனிச்சாமி மற்றும் பல நத்தம் காலனி மக்கள் ஆகியோரைச் சந்தித்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டோம். ஆயுதப் பயிற்சி அளித்ததாகக் காவல்துறையால் குற்றம் சாட்டப்படும் ‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு, அதன் காப்பாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான கிறிஸ்துதாஸ் காந்தி, இளவரசன் நினைவு நாளன்று கைது செய்யப்பட்ட வழக்குரைஞர் ரஜினிகாந்த், அன்று இரவு தாக்கப்பட்ட அவரது வாகனத்துடன் மற்றொரு வாகனத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ராஜேந்திரன் ஆகியோரைத் தொடர்புகொண்டு அவர்களது விளக்கங்களையும் பெற்றுக் கொண்டோம்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் கருத்துக்களை அறிவதற்காக ஜூலை 5 அன்று முழுவதும் முயன்றும் ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளரைச் சந்திக்க இயலவில்லை. ஒரு ஐந்து நிமிடச் சந்திப்புக்கு அனுமதி வேண்டிப் பலமுறை வேண்டியும் இருவரும் பதிலளிக்கவில்லை. வீடுகளுக்குச் சென்று அனுமதி கேட்ட போதும் சாத்தியமாகவில்லை. மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு வேலைச் சுமை இருக்கத்தான் செய்யும் என்பதை ஏற்று, எங்களுக்குச் சிரமமாயினும் மீண்டும் எல்லோரும் நேற்று தருமபுரி சென்று இருவரையும் சந்திக்க முயன்றோம். வழக்கமாக விரிவாகப் பேசக் கூடிய கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் அவர்கள் “இது தொடர்பாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. எனது புலனாய்வு அதிகாரியைச் சந்தியுங்கள்” என்பதோடு முடித்துக் கொண்டார். புலனாய்வு அதிகாரியான கிருஷ்ணஅபுரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) காந்தி அவர்களிடம் தொடர்பு கொண்டபோது அவர், தான் கஸ்டடியில் உள்ள கைதிகளின் விசாரணையில் உள்ளதாகவும் தன்னை இப்போது சந்திக்க இயலாது எனவும் பதில் அளித்தார். நாளையேனும் சில நிமிடங்கள் பேச அனுமதி கோரி, மீண்டும் இன்று காலை நாங்கள் தொடர்பு கொண்டோம். “முதல்நாள் இரவே எல்லோரையும் கைது செய்துவிட்டு அடுத்த நாள் அவர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யச் சென்றபோது பிடித்ததாகப் பொய் வழக்கு போட்டுள்ளீர்களே” என முதல் கேள்வியைக் கேட்டவுடனேயே, அதை மறுக்காமல், “இதெல்லாம் நேரிலதான் பேச முடியும். இப்ப எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. தாங்க்ஸ்” எனச் சொல்லி தொடர்பைத் துண்டித்தார்.

கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த சந்தோஷ், துரை, சக்தி ஆகியோரை ‘கஸ்டடி’ எடுக்கக் காவல்துறையினர் ஜூலை 5 அன்று தருமபுரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தனர். அப்போது அவர்களைப் பார்க்க முடிந்தது எம் குழுவில் இருந்த வழக்குரைஞர் அப்துல் காதர் அவர்களிடம் உரையாடினார். நேற்று அவரும் சேலம் வழக்குரைஞர் அரிபாபுவும் சேலம் சிறையிலுள்ள அதியமான், அசோகன், மைகேல்ராஜ், திருப்பதி ஆகியோரைச் சந்தித்து அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து கொண்டனர். கைது செய்யப்பட்டோரின் வழக்குரைஞர்கள் தருமபுரி கபிலன், இராமமூர்த்தி ஆகியோரிடம் வழக்கு நிலை குறித்து விரிவாக விசாரித்தோம். நேற்று நத்தம் காலனிக்குச் சென்று மக்கள் எல்லோரையும் சந்தித்தோம்.

கைதுகள் குறித்துக் காவல்துறை சொல்வது

கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷின் வாக்குமூலத்தை முன்வைத்து தயாரிக்கப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் (எண் 122/2014, கிருஷ்ணாபுரம் காவல் நிலையம், நாள் 28.06.2014) கூறப்படுவது: 1.ஜூலை 28 அன்று காலை 5.00 மணி அளவில் நாய்க்கன் கொட்டாய் ஆரம்பப் பள்ளிக்கு அருகில் காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பல்சார் இரு சக்கர வாகனத்தில் வந்த சின்னப்பையன் மகன் சந்தோஷ் (22), சிவலிங்கம் மகன் அதியமான் (22), கோபால் மகன் சங்கர் (35) ஆகியோர் சந்தேகமான முறையில் தப்ப முயன்றனர். பிடித்து விசாரிக்கையில் பிடிபட்ட சந்தோஷ் தானாகவே முன்வந்து தாங்கள் அப்பகுதியைச் சேர்ந்த பா.ம.க தலைவரும் 2012 நத்தம் காலனித் தாக்குதலுக்கு முக்கிய காரனமானவராகத் தாங்கள் கருதுபவருமான மதியழகனைக் கொல்வதற்காக வீச்சரிவாள்களுடன் சென்றதை ஒத்துக் கொண்டு வாக்குமூலம் அளித்தார். 2. இளவரசன் நினைவு நாளன்று மதியழகனைக் கொலை செய்ய, சங்கர் சக்தி, துரை, அசோகன்  எல்லோரும் சேர்ந்து சதித் .திட்டமிட்டு ஜூன் 28 காலை இரு குழுவாகப் பிரிந்து சென்றதாக ஒத்துக் கொண்டனர். இன்னொரு குழுவில் சங்கரின் சகோதரன் அசோக், ஊர்க்கவுண்டர் சக்தி, ஊர் முக்கியஸ்தர் துரை ஆகியோர் துப்பாக்கி வெடிகுண்டு சகிதம் கந்தன் குட்டை பக்கம் காத்திருந்தனர். பின்னர் இவர்களும் கைது செய்யப்பட்டனர். 3. இவர்களுக்கு இந்த ஆயுதங்கள் கிடைத்த பின்னணியாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படுவது: 2012 தாக்குதலுக்குப் பின் நத்தம் காலனிக்குப் பலரும் வந்து ‘ஆறுதல்’ சொல்லிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளான காளிதாஸ், சந்திரா ஆகியோர் அங்கு வந்து, தீவிரவாத இயக்கங்களின் பின்னணியோடு ஆயுதப் பயிற்சி எடுப்பது மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு எனக் கூறினர், 4. அந்த அடிப்படையில் ‘துடி’ அமைப்பின் மூலம் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த 50 பேர்களுக்கு (27 பெயர்கள் அறிக்கையில் குறிப்பிடப் படுகின்றன.) 2013 தொடங்கி அரக்கோணம், சென்னை மெரினா பீச், கந்தன்குட்டை ஆகிய பகுதிகளில் பல்வேறு வகை ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 5. இறுதியில் காளிதாஸ் சந்திரா இருவரும் ஒரு நாள் இரவு நத்தம் காலனி வந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு வீச்சரிவாள்கள்,மூன்று பைப் வெடிகுண்டுகள் ஆகிவற்றைத் தந்து சென்றனர். 6.ஆயுதப் பயிற்சி தொடங்கி  வன்னிய சமுதாயத்தின் முக்கிய தலைவர்களைக் கொல்வது வரைக்குமான திட்டம்  தீட்டப்பட்ட பின் இதற்கான செலவுகளுக்காக வீடு கொளுத்தப்பட்டதற்கு அரசு அளித்த இழப்பீட்டுத் தொகையிலிருந்து இம் முன்று தலித் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிதி வசூலிக்கப்பட்டது.

இப்படியான குற்றச்சாட்டைக் கோவையாக முன்வைக்கும் முதல் தகவல்.அறிக்கை, ‘கைப்பற்றப்பட்ட’ மேற்படி ஆயுதங்கள், ‘துடி’ அமைப்பு தாங்கள் ஆயுதப் பயிற்சி எடுத்ததை ‘ஒத்துக் கொண்டு’ வெளியிட்ட ஒரு அறிக்கை முதலானவற்றைக் கைப்பற்றிய வழக்குச் சொத்துக்களாகக் காட்டுகிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சொல்லப் படுவது

வாக்குமூலம் 1: கைது செய்யப்பட்ட சங்கர் மற்றும் அசோக்கின் சகோதரி சுமதி (27): எனது தம்பி அசோக் ஆசிரியர் பயிற்சி முடிச்சிட்டு மெடிகல் ரெப்ரசென்டேடிவா வேலை பார்க்கிறான். கைது செய்யப்பட்ட என் அண்ணன் அசோக் பி.எஸ்சி முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கான் .27ந்தேதி மதியம் 2 மணிக்கு எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் மொபைல் போன்ல கூப்பிட்டு ஏதோ பேசணும்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொன்னாரு. சங்கர் போனான். ராத்திரி 10 மணி வரைக்கும் ஒரு தகவலும் இல்ல. போனையும் எடுக்கல. மதியம் 12 மணிக்கே அதியமானையும், மாலை 6 மணிக்கு சந்தோஷையும் இப்பிடி அழைச்சுட்டுப் போயி அவங்களும் வீடு திரும்பல. அப்புறம் ராத்திரி 10 மணிக்கு மேல சிங்காரம் போன் பண்ணி ஊர் ஆட்கள் வந்து மூணு பேரையும் அழைச்சிட்டுப் போங்கன்னாங்க. 14 ஆம்பளைங்க 5 பொம்பளைங்க புறப்பட்டுப் போனோம். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனா அலஞ்சு, கடைசியா B1 ஸ்டேஷனுக்குப் போனோம். அங்கே போனா 12 மணி வாக்கில ஊர்க் கவுண்டர் சக்தி, முக்கியஸ்தர் துரை, அசோக்கு இந்த மூணு பேரையும் புடிச்சு வச்சுக்கிட்டாங்க. எல்லாரையும் அடிச்சு ஜெயிலுக்குக் கொண்டு போய்ட்டாங்க.

வாக்குமூலம் 2: கைது செய்யப்பட்ட சங்கரின் தாயும் சின்னப்பையனின் மனைவியுமான சாலம்மா: 27ந்தேதி (ஜூன்) 12 மணிக்கு எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரமும் பூபாலன் போலீசும் வந்து துரை, சக்தி, அசோக் மூணு பேரு போன் நம்பரும் கேட்டாங்க. கொஞ்ச நேரத்தில எம் மவன் சந்தோஷை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி போன் வந்துது. எங்க குடும்ப கேஸ் ஒண்னு தொடர்பா விசாரணைன்னு சொன்னாங்க. நான் விளையாடப் போறேன், நீ போம்மான்னு அவன் சொன்னான். நான் போயிட்டு வந்தப்போ சந்தோஷைக் காணோம். நடு ராத்திரில போலீஸ் ஸ்டேஷன் போனப்பதான் அவனும் கைதாயிருக்கிறது தெரிஞ்சுது. கைது செஞ்ச எல்லாரையும் ரொம்ப அடிச்சிருந்தாங்க. சேலம் ஜெயில்ல அவங்கள நாங்க பாக்கப் போயிருந்தபோது அவங்களால நிக்க கூட முடியல.அவங்கள ஆஸ்பத்திரியில சேக்கணும்னு கேட்டுகிட்டோம். ஆனா அதுவும் நடக்கல.
வாக்குமூலம் 3: துரை என்னும் துரைக்கண்ணுவின் மனைவி. செல்வி: ஊர்ல மூணு பேர (சங்கர், அதியமான், சுரேஷ்) காணோம்னு ராத்திரி 10 மணிக்கு மேல குண்டல்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய் அலைஞ்சிட்டு கடைசியா B1 போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். என் கணவர் துரை ஊர் முக்கியஸ்தர். அவுரு, ஊர்க்கவுண்டர் சக்தி அப்புறம் அசோக் மட்டும் வாங்கன்னு சொல்லி அவங்களையும் கைது பண்ணிட்டாங்க. அது தெரியாம நாங்க வீட்டுக்குத் திரும்பினோம். காலையில (ஜூன் 28) 4 மணிக்கெல்லாம் நத்தம் காலனிய சுத்தி நூத்துக் கணக்கில போலீசு. என் கணவர் துரையை விலங்கு போட்டு இழுத்துட்டு வந்தாங்க. வீட்டுல மணல் கொட்டி வச்சிருந்தோம். “எடுடா, எடுடா” ன்னு போலீஸ் அவரைப் போட்டு அடிச்சாங்க. அவர் காயல்காரரு. ஆஸ்த்மா வியாதிக்காரரு. என்னாத்தங்க எடுக்கிறதுன்னு கேட்டேன். என் கண்ணு முன்னாடி அவர் கையை முதுகுக்குப் பின்னாடி வளைச்சு அடிச்சாங்க. அப்புறம் அவரை இளவரசன் சமாதிப் பக்கம் இழுத்துட்டுப் போனாங்க. எஸ்.பி அஸ்ரா கார்கும் இருந்தாரு. கொஞ்சம் போலீஸ் வந்து என்னிட்ட “கடப்பாறை, மண்வெட்டி குடுடி” ன்னாங்க. இங்க இல்ல அப்படீன்னேன். கவர்மன்ட் குடுத்தது இருக்குல்ல, அதைக் குடுடீன்னு வாங்கிட்டுப் போனாங்க. என் கணவர்ட்ட “இங்கதானடா ஆயுதங்களப் புதைச்சு வச்ச வச்ச, தோண்டி எடுடா”ன்னு சத்தம் போட்டாங்க. அப்புறம் அவங்களே லேசாத் தோண்டி, அவங்க கொண்டு வந்த துப்பாக்கிய அங்கே இருந்து எடுத்தமாதிரி காட்டினாங்க. என் 15 வயசு மகன் ஆனந்தை சமந்தாகுப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டுப் போயி “எங்கடா உங்க அப்பன் ஆயுதங்களப் புதைச்சு வச்சிருக்கான்?” னு மிரட்டுனாங்க. அவனைக் காலரைப் பிடிச்சுத் தூக்கி “உங்கொப்பனை என்கவுன்டர்ல போட்டுத் தள்ளிடுவோம்”னு பயமுறுத்துனாங்க. என் கணவர் துரை பொடாக் கைதியா இருந்தவருதான். ஆனா இப்பஎந்த அரசியல் பக்க்கமும் போறதுல்ல. யாரோடவும் தொடர்பு இல்ல. ரொம்ப உடம்பு சரி இல்ல மாஓயிஸ்டுகள் யாரும் இங்க வர்றதில்ல. 13 வருசத்துக்கு முன்னாடி வந்ததுதான். ‘துடி’ங்கிற அமைப்பைச் சேர்ந்தவங்க எங்க புள்ளைங்களப் பள்ளிக் கூடத்தில சேப்பாங்க. வேற எந்த அரசியலும் பேசுனதே இல்ல.

கைது செய்யப்பட்டு சேலம் சிறையிலுள்ள அதியமான் (22): ஆறாவது வரை படிச்சிருக்கேன். ஜூன் 27ந்தேதி எஸ்.பி.சி.ஐ.டி சிங்காரம் எங்க சவுன்ட் செட் பத்திப் பேசணும்னு அழைச்சாரு. முதல்ல தருமபுரி ஸ்டேஷனுக்கும் அப்புறம் கிருஷ்ணாபுரம் ஸ்டேஷனுக்கும் கொண்டு போனாங்க. அங்கே SP, ASP, DSP, Q Branch DSP, SBCID எல்லாம் இருந்தாங்க. என்னை ஜட்டியோட விட்டு அடிச்சாங்க. 2013 ஏப்ரல் 5,6 தேதிகள்ல நீர்ப்பெயல்ல ‘துடி’ அமைப்பு நடத்துன அரசாணை 92 பற்றிய விழிப்புணர்வு முகாம்ல பங்கேற்றேன். இந்த ரண்டு நாள்ல ஒரு தடவை மெரினா பீச்சுக்கு ‘ரிலாக்சேஷனுக்கு’ கூட்டிட்டுப் போனாங்க. வேற யாரையும் நான் சந்திச்சதில்ல. கொலை முயற்சி பண்ணோம்னு சொல்றதெல்லாம் பொய்.

கைது செய்யப்பட்டுச் சிறையிலுள்ள சங்கர் (35): பி.எஸ்சி வரை படிச்சிருக்கேன். பால் சொசைடி பொருள்கள விக்கிறேன். காச நோய்க்கு கவர்மன்ட் ஆஸ்பத்திரில தர்ற மருந்த சாப்பிடுறேன். 27ந்தேதி சிங்காரம் 144 தடை உத்தரவு பற்றிப் பேசணும்னு கூப்பிட்டாரு.முதல்ல B1 ஸ்டேஷனுக்கும் அப்புறம் கிருஷ்ணாபுராம் ஸ்டேஷனுக்கும் கொண்டு போனாங்க. ஜட்டி கூட இல்லாம அம்மணமா விட்டு என்னை அடிச்சாங்க. என்னமாதிரி ஆயுதப் பயிற்சி எடுத்தேன்னு கேட்டு கடுமையா அடிச்சாங்க. நான் எந்தப் பயிற்சிக்கும் போனதில்ல. துடி அமைப்போட கல்விப் பயிற்சிக்கும் போனதில்ல.

கைது செய்யப்பட்டுள்ள அசோகன் (22): M.A, B.Ed படிச்சிட்டு மெடிகல் ரெப் ஆக இருக்கேன். 28ந் தேதி காலை 12.30 மணிக்கு (27 நள்ளிரவு) எங்க ஊர் பையன்கள காணாம்னு போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரிக்கப் போனபோது துரை, சக்தி இவங்களோட என்னையும் பிடிச்சுட்டாங்க. ஜட்டியோட விட்டு அடிச்சாங்க. ஆயுதப் பயிற்சி பத்தித்தான் கேட்டாங்க. யாரெல்லாம் பயிற்சி எடுத்தாங்கன்னு கேட்டாங்க. நான் எதுக்கும் போனதில்ல. துடி கல்விப் பயிற்சிக்கும் கூடப் போனதில்ல.

கைதாகியுள்ள திருப்பதி (20) இரண்டாம் ஆண்டு பாலி டெக்னிக் மாணவன். குடிப்பட்டியிலுள்ள அத்தை வீட்டுக்குப் போயிருந்த போது ஜூன் 29 காலை 4 மணிக்கு கைது செய்துள்ளனர். ஜட்டியுடன் அடித்து மற்றவர்களைக் கேட்ட அதே கேள்விகளைக் கேட்டுள்ளனர். இவர் துடி கல்விப் பயிற்சிக்குச் சென்றுள்ளார். ‘துடி’ அமைப்பில் பொறுப்பு வகித்த மைகேல் ராஜ் (22) பி.ஏ முடித்து ஆசிரியப் பயிற்சியும் பெற்றுள்ளார், ஜூலை 4 காலை நாராயணபுரத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். இவரையும் ஆடையின்றி அம்மணமாக நிற்க வைத்து அடித்துள்ளனர்.

இவர்கள் யாருமே காளிதாசையோ சந்திராவையோ சந்தித்ததில்லை என்கின்றனர். ஆயுதப் பயிற்சி குறித்து எல்லோரிடமும் எஸ்.பி அஸ்ரா கார்க் விசாரித்துள்ளார்.

சுருக்கம் கருதி மற்றவர்களின் வாக்கு மூலங்களை இங்கு தவிர்க்கிறோம். எல்லோரும் ஒன்றை உறுதியாகச் சொன்னார்கள். இங்கு ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுகிறவர்கள் யாரும் வந்ததில்லை. ‘துடி’அமைப்பு கல்வி தொடர்பான பிரச்சினைகள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் சேரும்போது கல்விக் கட்டணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை என்கிற அரசாணை எண் 92 பற்றிப் பிரச்சாரம் செய்தல் தவிர வேறெதுவும் செய்ததில்லை. அவர்கள் முயற்சியில் தம் பகுதியைச் சேர்ந்த சில மாணவர்களுக்குப் பொறியியல் மற்றும் பட்டப் படிப்பு வாய்ப்புக் கிடைத்தது, அவ்வளவுதான் என்றனர்.

Part  I

சமீபத்திய கைது நடவடிக்கைகள் : நடந்தது இதுதான்

நேரடி சாட்சிகள் பலரையும் விசாரித்து நாங்கள் அறித்த உண்மைகள்: 1. ஜூன் 27, மதியம் 12 மணி முதல் மாலை 6 மணிக்குள் அதியமான், சங்கர், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டனர். தன்னை பத்து போலீஸ்காரர்கள் ரவுண்டு கட்டி அடித்து அவர்கள் சொன்னபடி வாக்குமூலம் எழுதிக் கையெழுத்திட வைத்தனர் என்று சந்தோஷ் எங்களிடம் கூறினார். இவர்களை அழைத்துச் செல்ல வாருங்கள் என வஞ்சகமாக B1 போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அங்கே சக்தி, துரை, அசோக் ஆகியோரையும் கைது செய்து அவர்களையும் கடுமையாக அடித்து ஒரே மாதிரி வாக்குமூலங்கள் வாங்கப்பட்டன. பின்னர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருந்த 27 பேர்களில் திருப்பதி என்கிற பாலிடெக்னிக் படிக்கும் மாணவனை குடிப்பட்டி என்னுமிடத்தில் கைது செய்தனர். ஜூலை 5 அன்று கொண்டாம் பட்டியைச் சேர்ந்த மைக்கேல் ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் துடி அமைப்பில் செயல்பட்டவர்.

ஆக இது வரைக் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 8 பேர். முதல் தகவல் அறிக்கை எண் 122/2014; கிருஷ்ணாபுரம் காவல் நிலையம்;நாள் ஜூன் 28,2014. குற்றப் பிரிவுகள: இ.த்.ச பிரிவுகள் : 120 (பி),153 (ஏ), 153 (ஏ ஏ): இந்திய ஆயுதச் சட்டம் பிரிவுகள்: 25 (1) (ஏ) மற்றும் 27; 1908ம் ஆண்டு வெடி பொருட்கள் சட்டம் பிரிவுகள் 4 மற்றும் 5.

இவர்களில் முதல் அறுவரும் கைதானதற்கு அடுத்த நாள் பெங்களூரு சென்ற காவற் படையினர் நத்தம் காலனியச் சேர்ந்த நால்வரைப் பிடித்து விசாரித்துப் பின் விட்டுள்ளனர். தொடர்ந்து இப்பகுதிகளைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் பெங்களூரில் வேலை செய்யும் இடங்களில் கண்காணிப்பது தொடர்வதாகவும், இதனால் மாஓயிஸ்ட் பயம் ஊட்டப்பட்டு இப்பகுதி தலித் இளைஞர்கள் பெங்களூருவில் வேலை செய்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் எம்மிடம் கூறினர்.
இப்படிப் பலரும் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நத்தம் காலனி மக்கள் ஜூலை 4 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி தங்கள் குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகள் ஆகியவற்றை ஒப்படைப்பதாக அறிவித்தனர். இனி கைது ஏதும் நடக்காது, ஆனால் தேடப்படும் மற்றவர்களை ஒப்படையுங்கள் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். அதற்குப் பின்னும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு என்பவரை துணைக் கண்காணிப்பாளர் நீலகண்டன் என்பவர் தொலைபேசியில் விசாரித்துள்ளார். எல்லாவற்றையும் சொல்லி முடித்தபின் அந்த அதிகாரி அவரை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார். காவல் நிலையத்திற்கு வருகிறவர்கள் கைது செய்யப்படும் நிலை இருப்பதால் பாரதி பிரபு செல்லவில்லை. உடன் அவரது சகோதரர்கள் கந்தவேலு, சண்முகம் சகோதரர் மகன் பாலகுமார் ஆகியோரை இழுத்துச் சென்று மிரட்டி பின் விட்டுள்ளனர். தற்போது பாரதிபிரபுவும் அவ் அமைப்பைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரும் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக அறிகிறோம். 

Part  II

‘துடி’ அமைப்பு : ஒரு குறிப்பு

துடி அமைப்பை ஒரு வன்முறை அமைப்பாகவும், ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும் பெரிய அளவில் ஒரு பயங்கரவாத அமைப்பு என்கிற ஒரு பிம்பத்தை தருமபுரி காவல்துறை இந்தக் கைதுகள் மூலம் கட்டமைத்துள்ளது. துடி அமைப்பையும் இடதுசாரி ஆயுதப் போராட்டக் கருத்தியலை நத்தம் இளைஞர்கள் மத்தியில் விதைத்தவராகக் காவல்துறையால் சொல்லப்படும் காளிதாஸ் மற்றும் சந்திரா ஆகியோரையும் ஒரே அமைப்பினர் போலச் சித்திரிக்கின்றனர்.. காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை விரிக்கும் கதையின் முதல் அங்கம் காளிதாஸ் – சந்திரா வருகை மற்றும் ஆயுதப் போராட்டம் குறித்த அவர்களின் ஊக்க உரையோடு முடிகிறது என்றால் இரண்டாம் அங்கம் துடி அமைப்பு ஆயுதப் பயிற்சி அளிப்பதோடு தொடங்குகிறது.

ஆனால் ‘துடி’ அமைப்பை அது தொடங்கிய 2002 முதல் நெருக்கமாகக் கவனித்து வருபவர்கள் நாங்கள். தலித் மாணவர்களின் கல்வி தவிர வேறு எதிலும் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. மிக்க மரியாதைக்குரிய ஒரு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற கிருஸ்துதாஸ் காந்தி அவர்கள் தொடக்கம் முதல் இன்று வரை அதன் காப்பாளராக இருந்து வருகிறார். நேற்று காலை நாங்கள் அவரிடம் பேசினோம். இது குறித்து அவர் கூறியதாவது:

கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்; “எங்கள் அமைப்பு முழுக்க முழுக்க தலித் இளைஞர்கள் மார்க்சீயம், தமிழ்த் தேசியம் முதலான எந்தக் கருத்தியலின்பாலும் ஈர்க்கப்பட்டு வீணாகாமல், குறிப்பாக எக் காரணம் கொண்டும் ஆயுதப் போராட்டம் பக்கம் சாயாமல், கல்வியிலும் அம்பேத்கர் சிந்தனையிலும் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டது. கடவுள் பிரச்சினை, காதல் திருமணம் தொடர்பான அரசியல் எதிலும் அம் மாணவர்களின் கவனம் திரும்பக் கூடாது என்பதே எங்கள் கவலை. அப்படியான ஒரு இயக்கத்தை ஆயுதப் பயிற்சி அளித்தது எனச் சொல்வதைப்போல ஒரு அபத்தம் வேறு எதுவுமே இல்லை” என ஆணித்தரமாகச் சொன்னர். காந்தி அவர்களின் இக்கருத்தில் உடன்பாடு இல்லாதவர்களுங் கூட அவர் சொன்னவை அவரளவில் உண்மையானவை என்பதை அறிவர்.

‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு கூறியது: “நாங்கள் இந்திய அரசு,தமிழக அரசு ஆகியவற்றுடன் இணைந்து தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வந்தோம். எங்கள் செயல்பாடுகள் வெளிப்படையானவை. மத்திய அரசின் ‘இளைஞர்களின் வளர்ச்சிக்கான ராஜிவ் காந்தி நிறுவனத்தின்’ (RGIYD) நிதி உதவியுடன் நாங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். தமிழக அரசின் ‘ஆதி திராவிட நலத் துறை’யுடன் இணைந்து அரசாணை 92 குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்துள்ளோம். மேல் மருவத்தூருக்கு அருகில் உள்ள நீர்ப்பெயல் கிராமத்தில் அருட் பணியாளர்கள் ஜெயசீலன், சுரேஷ் ஆகியோரின் உதவியோடு நாங்கள் நடத்திய கல்விப் பயிற்சியில் 70 மாணவிகளும், 50 பையன்களும் பங்கு பெற்றனர். இவர்களில் 12 பேருக்கு எஞினீரிங் படிப்பில் இடம் கிடைத்தது. இருவரை லயோலா கல்லூரியில் சேர்த்தோம். ரிலாக்சேஷன் மற்றும் psychological counciling”கிற்காக ஒரு முறை மெரீனா பீச்சுக்கு இவர்களை அழைத்துச் சென்றது உண்மை.
தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் ‘தமிழ்ப் பண்பாட்டில் பவுத்தம்’ என்கிற தலைப்பில் ஆய்வு செய்த பாரதி பிரபு தாங்கள் செய்த கல்விப் பணிகளை மிக விரிவாகச் சொன்னார். நத்தம் பகுதியிலும் அவர்கள் இப்படி தலித் மாணவர்கள் மத்தியில்  கல்விப் பணி செய்து வந்ததை நாங்களும் கவனித்து வருகிறோம். சென்ற 2013 ஜூன் 8 அன்று கூட தருமபுரி பெரியார் மன்றத்தில் அரசாணை  92 குறித்த விழிப்புணர்வுக் கூடலை நடத்தியதை அறிவோம். வி.சி.க, மத்திய மாநில எஸ்.சி, எஸ்.டி ஊழியர் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அவர்கள் இதைச் செய்தனர்.

இப்படி நிறையச் சொல்லலாம். துடி போன்ற ஒரு அமைப்பை ஆயுதப் போராட்டத்துடன் தொடர்பு படுத்டுவதைப் போல ஒரு அபத்தம் எதுவும் கிடையாது என எம் குழுவும் உறுதியாகக் கருதுகிறது.

இது தொடர்பாக எஸ்.பி அஸ்ராகார்க் அவர்களிடம் நாங்கள் பேசத் தொடங்கியவுடன், “அதில் கவனமாக இருக்குமாறு நான் என் புலனாய்வு அதிகாரியிடம் சொல்லியுள்ளேன்” என்றார்.

காவல்துறை அவிழ்க்கும் கதையில் உள்ள முரண்பாடுகளும் பொய்களும்

1. கைது செய்யப்பட்டுள்ள முதல் ஆறு பேர்களும் ஜூன் 27 மதியம் 12 மணிமுதல் நள்ளிரவு வரை கைது செய்யப்பட்டு சித்திரவதையும் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு ஊர் மக்கள் நேரடி சாட்சிகளாக உள்ளனர். B1 நிலையத்தில் ஊர் மக்களுக்கும் காவல் துறைக்கும் விவாதம் நடந்துள்ளது. இது தொடர்பான உரையாடல்கள் செல்போன்கள் மூலமாக ஊர் மக்களுக்கும் எச்.பி அஸ்ரா கார்க் மற்றும் சி.பி.சி.ஐ.டி சிங்காரம் ஆகியோருடக்கும் இடையில் நடந்துள்ளது. இப்படி காவல்துறை கஸ்டடியில் இருந்தவர்கள் ஜூன் 28 காலை 5 மணிக்கு கையில் ஆயுதங்களுடன் பா.ம.க மதியழகனைக் கொல்லச் சென்ற போது நாய்க்கன்கொட்டாய்க்கு அருகில் பைக்கிலும் கந்தன் குட்டைக்கு அருகிலும் கைது செய்யப்பட்டனர் என்பது முற்றிலும் பொய்.

2. நத்தம் கிராமத்தில் தலித்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது எனில் எப்போது அது கைப்பற்றப்பட்டது? ஏன் பத்திரிகையாளர்கள் அப்போது அழைக்கப்படவில்லை? இது தொடர்பாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கேள்வி எழுப்பியபோது இருட்டாக இருந்ததால் உங்களை அழைக்கவில்லை என்று எஸ்.பி பதிலளித்துள்ளார். இது ஒரு பதிலா? அப்படியானால் எந்த இரவு அது நடந்தது?

3. கடந்த பல மாதங்களாக அப் பகுதிக்கு தீவிரவாதிகள் வந்து செல்வதும் நத்தம் தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதும் காவல் துறைக்குத் தெரியுமெனில் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இளவரசன் நினைவு நாள் வரும் வரை காத்திருந்தனர்?

4.இளவரசன் சமாதிக்கு அருகில் கடந்த ஓராண்டாக சி.சி.டி.வி காமரா பொருத்தப்பட்டுள்ளது சமாதிக்கு வருபவர்களை மட்டுமின்றி ஊருக்குள் வந்து செல்பவர்களையும் அது படமெடுக்கும். ஆயுதப் பயிற்சி அளித்தவர்கள் வருகையை அது படம் எடுக்கவில்லையா? இளவரசன் சமாதி அருகில் ஆயுதத்தை துரை புதைத்து வைத்தார் என்றால் அதை சிசிடிவி படம் எடுக்கவில்லையா?

5.மெரீனாவிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் கடற்கரையில் ஒரு ஆயுதப் போராட்டக் குழு ஆயுதப் பயிற்சி எடுக்க முடியுமா? தருமபுரி காவல்துறை ஒரு வேளை மாநகரக் காவல்துறை மற்றும் இதர கண்காணிப்புத் துறைகளைக் கிண்டல் செய்கிறதா?

6.துடி அமைப்பு வெளியிட்டுள்ளதாக் ஒரு துண்டறிக்கையை காவல்துறையினர் காட்டுகின்றனர். தேதி,முகவரி இல்லா இந்தத் துண்டறிக்கை ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுவதோடு நூறு பேர் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கிறது. மக்கள் மத்தியில் வினியோகிக்கப்படும் ஒரு துண்டறிக்கையில் யாராவது தம் அமைப்பில் எத்தனை பேர் ஆயுதப் பயிற்சி எடுத்தனர் என்றெல்லாம் அச்சிடுவார்களா?

எமது பார்வைகள்

1. 2012ல் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பட்டி கிராமங்களில் நடைபெற்ற வன்முறைகளுக்குப் பின் பல அமைப்பினரும் அங்கு அடிக்கடி சென்று வதுள்ளனர். நாங்கள் கூட மூன்று முறை அங்கு சென்று வந்துள்ளோம். கடும் போலீஸ் கண்காணிப்பு, உளவுத்துறை இருப்பு முதலியன அங்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையால் கடுமையாகத் தேடப்படும் ஆயுதப் போராளிகள் யாரும் அங்கு வந்து செல்வதற்கு வாய்ப்பில்லை. அப்படி வந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இளவரசன் முதலாம் ஆண்டு விழாவை ஒட்டி இந்தக் கைது செய்துள்ளதற்கு உள் நோக்கம் இருப்பதாகவே கருதுகிறோம். முதலாம் ஆண்டு கடுமையாக நடவடிக்கை எடுத்து ஒடுக்கிவிட்டால் பின் எப்போதும் இளவரசன் சமாதியை மையமாக வைத்து தலித் இளைஞர்கள் ஒருங்கிணையமாட்டர்கள் என்ப்பதற்காக அரசும் காவல்துறையும் மேற்கொண்டுள்ள சதியாகவே நாங்கள் இதைக்கருதுகிறோம். தாங்கள் காவல்துறை அனுமதி மறுப்பை மீறி நீதிமன்றத்தில் அனுமதி ஆணை பெறுவதற்கு முயற்சித்தது பிடிக்காமல்தான் எஸ்.பி அஸ்ரா கார்க் தம்மிடம் இப்படி மிக மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார் என நாங்கள் சந்தித்த மக்கள் அனைவரும் கூறினர். அஸ்ரா கார்க் மீது தலித் மக்கள் மிக்க நம்பிக்கை வைத்திருந்ததை நாங்கள் அறிவோம். மதுரை வில்லூர் போன்ற இடங்களில் அவர் சாதிக் கலவரங்களைக் கையாண்டதை நாங்களும் கூடப் பாராட்டியுள்ளோம். ஆனால் இந்தப் பிரச்சினையில் அவர் இந்த நம்பிக்கைகளை முற்றாக இழந்துள்ளார். விரிவாக எங்களுடன் பேசக்கூடிய அவர் எங்களைத் தவிர்த்ததும் பேச மறுத்ததும் அவரிடம் எங்கள் கேள்விகளுக்குப் பதிலில்லை என்பதையே காட்டுகிறது. எனினும் இந்தக் கைதுகள் மற்றும் தீவிரவாதப் பிரச்சாரங்களை அஸ்ராகார்க் என்கிற ஒரு அதிகாரியின் ‘ஈகோ’ பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. இதற்குப் பின் அரசு மற்றும் காவல்துறை மேல்மட்ட அதிகாரம் ஆகியன உள்ளன என்றே கருதுகிறோம்.

2.கடுமையான சாதிப் பிளவு (polarisation) நடந்துள்ள ஒரு பகுதியில், இந்த அடிப்படையிலேயே ஆதிக்க சாதியினர் ஒரு தேர்தல் வெற்றியைச் சாதித்து, வெற்றிப் பெருமிதத்துடன் திரியும் சூழலில் இப்படி தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்து முக்கிய ஆதிக்க சாதித் தலைவர்களையும், பா.ம.கவினரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், கொலை செய்யப் பயங்கர ஆயுதங்களுடன் வந்தபோது தாங்கள் கைது செய்ததாகவும் அப்பட்டமான ஒரு பொய்யை ஊடகங்களின் துணையோடு தருமபுரி மாவட்டக் காவல்துறை பிரச்சாரம் செய்வதை நாங்கள் மிகவும் கவலையுடன் நோக்குகிறோம். குறிப்பாக முன்னதாகவே போலீசாரால் கைது செய்யப்பட்டுக் காவலில் இருந்தவர்கள் துப்பாக்கி, வெடிகுண்டுகள், வீச்சரிவாள்கள் அகிதம் ஒரு பா.ம.க தலைவரைக் கொல்லப் போனார்கள் என்பது நூற்று சதம் பொய். இது சாதிப் பகையை மேலும் வளர்க்கும்.

எதிர்பார்த்ததுபோலவே இதைப் பயன்படுத்தி பா.ம.க தலைவர்கள் இராமதாஸ் அன்புமணி ஆகியோர் உடனடியாக அறிக்கைகள் விட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அரசும் காவல்துறையும் உணர்ந்துதான் செய்கின்றனவா, இல்லை அவர்களின் நோக்கமே இப்படிச் சாதிப் பகையை மூட்டுவதுதானா? ஆதிக்க சாதியினரின் நினைவு நாட்களை அரசே கொண்டாடும் நிலையில் தலித் மக்களின் இதகைய முயற்சிகளை ஏன் இத்தனை கடுமையாக ஒடுக்க வேண்டும்? முதலமைச்சர் அவர்கள் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும்.

3. தலித் மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டும் ‘துடி’ போன்ற ஒரு

நன்றி: அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக