ஞாயிறு, ஜூலை 20, 2014

தருமபுரி கைதுகள் : இன்று வெளியிடப்பட்ட எங்களின் கூடுதல் அறிக்கை

தருமபுரி கைதுகள் : இன்று வெளியிடப்பட்ட எங்களின் கூடுதல் அறிக்கை


[இன்று மீண்டும் எம் குழு தருமபுரி சென்றது. தற்போது அங்கு கைது செய்யப்பட்டுள்ள  எட்டு பேர்களில் அறுவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டமும் (NSA) போடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அந்த ஆணை, போலீஸ் காவலில் இந்த அறுவரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற விவரம் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த இணைப்புடன் எங்கள் அறிக்கையை தருமபுரியில்  இன்று (ஜூலை 18) வெளியிட்டோம்.  காவல் துறைக் காவலில் கொண்டு செல்லப்பட்ட இந்த அறுவரும் கடும் சித்திரவதைகளுக்குப் பின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். ஏற்கனவே நாங்கள் வெளிட்டுள்ள அறிக்கை முன்னதாக முகநூல் பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக இன்று வெளிடப்பட்டுள்ள அறிக்கை மட்டும் இங்கே.]

இணைப்பு

1. சென்ற ஜூலை 10, 2014 அன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு விவேகானந்தன் முன்னதாகக் கைதுசெய்யப்பட்ட சக்தி, சந்தோஷ் முத்லான ஆறு பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார் [எஸ்.சி.(தே.பா.ச) எண் 10/ 2014]..

இந்த ஆணையில் ஜூன் 28 அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சக்தி உள்ளிட்ட அறுவரும் 27 அன்று இரவு 11.30 மணிக்கு நத்தம் காலனியில் கூடி அடுத்த நாள் காலையில் மதியழகன் என்ன்பவரைக் கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் அவர்களில் மூவர் (சந்தோஷ், சங்கர், அதியமான்) தருமபுரியில் போலீஸ் காவலில் இருந்தனர். மற்ற மூவர் (சக்தி, துரை, அசோக்) அவர்களைத் தேடி தருமபுரி காவல் நிலையத்திற்கு, கவல்துறை எஸ்..பி.சி.ஐ.டி சிங்காரம் அறிவுறுத்தியபடி, வந்து கொண்டிருந்தனர். பின்னிரவு 12 மணி வாக்கில் அவர்களும் கைது செய்யப்பட்டனர். எனவே இந்த நேரத்தில் அவர்கள் நத்தம் காலனியில் சதி செய்துள்ளனர் என்பது அப்பட்டமான பொய்.

28ந்தேதி காலை 5 மணிக்கு நாய்க்கன் கொட்டாயில் மூவரும், பிறகு அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தங்கன் குட்டையில் மூவரும் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டதாக ஆட்சியரின் ஆணையில் குறிப்பிடப் படுகிறது. இந்த நேரத்தில் அவர்கள் அறுவரும் போலீஸ் காவலில் இருந்துள்ளனர்.

தங்கள் வீடுகள் தாக்கப்பட்டதற்காக ஆத்திரமுற்று, அதற்குக் காரணமான சாதியினரைக் கொலை செய்ய வேண்டி. ஆயுதப் பயிற்சிக்காக, சமூகப் பணிகளை நோக்கமாகக் கொண்ட துடி அமைப்பில் சேர்ந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக நக்சல்பாரி இயக்கத்தில் சேர்ந்ததாகவும் மாவட்ட ஆட்சியரின் ஆணை கூறுகிறது. சமூகப் பணி செய்யும் துடி அமைப்பு எவ்வாறு ஆயுயதப் பயிற்சி அளிக்க முடியும் அந்த அமைப்பிற்கும் நக்சல்பாரி அமைப்பிற்கும் என்ன தொடர்பு, அல்லது அதையே ஒரு நக்சல்பாரி அமைப்பாக மாவட்ட ஆட்சியர் கருதுகிறாரா என்பவற்றிற்கு எந்த விளக்கமும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள் கடும் சித்திரவதையின் அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளன.

ஆக மாவட்ட ஆட்சியர் சிந்திக்காமல் (without applying his mind), காவல்துறையின் கூற்றை அப்படியே ஏற்றுத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்புக் காவல் அதிகாரத்தைத், தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என இக்குழு கருதுகிறது. இதை அரசும் மத்திய உள்துறைச் செயலகமும் கணக்கில் கொண்டு இந்த ஆணைக்கு ஒப்புதல்வழங்கக் கூடாது என இக் குழு வேண்டிக் கொள்கிறது.

2. சென்ற ஜூலை 14ந் தேதிய சென்னை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் ஒரு மேற்கு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தனது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மேலதிகாரிகளுக்குப் புகார் செய்துள்ளதாகவும், அது தொடர்பாக உளவுத் துறையினர், தாங்கள் அவரது தொலை பேசியை ஒட்டுக் கேட்கவில்லை, அவரது டிரைவரின் தொலைபேசியைத்தான் ஒட்டுக் கேட்டதாகக் கூறுவதாகவும் ஒரு செய்தி வந்தது. இந்த டிரைவர் அடிக்கடி காவல்துறை வாகனத்தை சேலத்திற்கு ஓட்டிச் சென்றது குறித்துப் புகார் வந்ததாகவும், அப்படி ஓட்டிச் சென்றது சுங்கச் சாவடி சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளதாக உளவுத் துறையினர் சொல்வதாகவும் அச் செய்தி கூறுகிறது.

இது தொடர்பாக ‘சவுக்கு’ எனும் ஒரு சமூக ஊடக வலைத் தளம் சில புகார்களை முன்வைக்கிறது. . காவல்துறையில் உள்ள குழு மோதல்கள் இதற்குப் பின்னணியாக உள்ளதெனவும், அந்த எஸ்.பி வேறு யாருமல்ல தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்தான் எனவும் அது கூறுகிறது. தவிரவும் காவல்துறை வாகனம் தினந்தோறும் அஸ்ரா கார்கின் மைத்துனி கீர்த்தி ஶ்ரீ என்பவரை தருமபுரியிலிருந்து அவர் எம்,டி படிக்கும் சேலம் வினாயகா மிஷன் மருத்துவமனைக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்பிடுகிறது. இந்த மருத்துவமனையின் கிட்னி ஊழ;லை விசாரித்த ஒரு அதிகாரி எவ்வாறு அதே மருத்துவமனைக் கல்லூரியில் தன் மைத்துனியை அதிகத் தொகை கொடுத்துப் பெறக்கூடிய ஒரு மேற்படிப்பில் சேர்த்தார் என்கிற அய்யத்தையும் அது முன் வைக்கிறது.

இவை  உண்மையா இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்வது எங்களது நோக்கத்திற்கு உட்பட்டதல்ல. ஆனால் தன் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவதாகப் புகார் கொடுத்த அதிகாரி அஸ்ரா கார்க்தான் எனில் அவருக்கும் காவல்துறை மேல்மட்டத்திற்கும் இடையே உள்ள பிளவுக்கும் இந்தக் கைதுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. இன்று இந்தக் கைது நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொண்டு மீண்டும் நக்சல்பாரி இயக்கம் இப்பகுதியில் உயிரூட்டப் படுவதாகப் பீதியைக் கிளப்புவது அவருக்குப் பயன்படலாம்.. தான் தேசியப் பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தவர்களைக் கைது செய்யும் முக்கிய பணியில் உள்ளபோது இப்படி மேலதிகாரிகளால் பழி வாங்கப் படுவதாக ஒரு கருத்தை உருவாக்க இந்த உற்சாகம் காட்டப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

எப்படி ஆயினும் இத்தகைய அய்யங்கள் உள்ள சூழலில் தமிழகக் காவல்துறை இவ்வழக்கைப் புலனாய்வு செய்தால் நீதி
கிடைக்காது எனவும், மேலும் பல அப்பாவி தலித்கள் பழிவாங்கப்படுவதற்கும், இரு சமூகங்களுக்கும் இடையே உள்ள பகை அதிகரிக்கவுமே இது வழி வகுக்கும் எனவும் நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம்.

எங்களைப் பொறுத்த மட்டில் வன்முறை அரசியலையும், அதற்கென ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதையும் கண்டிக்கிறோம். அது குறித்துப் புலன் விசாரணை செய்ய காவல்துறைக்கு பொறுப்புள்ளதையும் ஏற்கிறோம். ஆனால் இந்தப் பொறுப்பு பழி வாங்கும் நோக்கில் யார் மீதும் பயன்படுத்தப்படக் கூடாது எனவும், அதைவிடவும் இது இரு சமூகங்களுக்கு இடையே உள்ள பகையை அதிகரிக்கப் பயன்படுத்தப் படக் கூடாது என்பதிலும் கவலை கொள்கிறோம்.

எனவே நாங்கள் கோருகிற நீதிபதி விசாரணையில் இந்த தொலைபேசி ஒட்டுக் கேட்டல் புகாரும் உள்ளடக்கப்பட்டு விசாரிக்க வேண்டும் எனக் கோருகிறோம். நக்சல்பாரித் தொடர்புகள் குறித்த விசாரணை தேவை எனில் வேறு புலனாய்வு முகமைகள் மூலமாக அது செய்யப்பட வேண்டும் என்கிறோம்.

ஜூலை 4 அன்று இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கொலை செய்யும் நோக்குடன் ஆயுதங்களுடன் சென்ற கதை முற்றிலும் பொய் என்பதால் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இது தொடர்பான முன் குறிப்பிட்ட முதல் தகவல் அறிக்கை முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்.

நன்றி:  அ.மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக