திங்கள், மார்ச் 07, 2016

முக்கூடல் சந்திப்பு மார்ச் 2016



முக்கூடல் சந்திப்பு மார்ச் 2016 

           - மு.சிவகுருநாதன்


         நேற்று (மார்ச் 06, 2016) ஞாயிறு நாகப்பட்டினம் அழகர் சன்னதி சாம் கமல் அகடாமியில் முக்கூடல் பன்னாட்டுத் தமிழ் / இலக்கிய / ஊடகவெளி – 131 -வது  நிகழ்வு நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 02.30 முடிய நடந்த இந்நிகழ்வை அரிமா அருண், கவிஞர் தெ.வெற்றிச்செல்வன், நாகை ஜவஹர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். 

    விற்பனையாகிறதோ இல்லையோ பணமும் படைப்புகளும் இருந்தால் சிறு பத்தரிக்களை அச்சிட்டு விடலாம். இம்மாதிரியான கூட்டங்களை ஏற்பாடு செய்வது ஒரு இதழ் கொண்டுவருவதை விட சிரமமானது. இக்கூட்டங்களுக்குப் பேசவும் கேட்கவும் அழைப்பு அனுப்பி ஆட்களைத் திரட்டி ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. 131 நிகழ்வுகளைச் சாத்தியப்படுத்திய தோழர்களுக்கு குறிப்பாக கவிஞர் தெ.வெற்றிச்செல்வனுக்கு நன்றி சொல்லவேண்டும்.

  தமிழிசை, குறும்படக்காட்சி, கதை சொல்லி, நூல் விமர்சனம், உரையாடல் என விரிவான அமைப்பில் அரங்கு திட்டமிடப்படுகிறது. தோழரின் இசைப்பாடல் அரங்கை நிறைத்தது. கல்வி, தொல் விளையாட்டு (சிலம்பம்) மற்றும் இறுதியாக உழைக்கும் பெண்கள் தினத்தை ஒட்டிய காட்சிப்பதிவும் திரையிடப்பட்டது. கதைசொல்லி பகுதியில் கொலம்பசின் ஆதிக்க உணர்வை, தங்கவேட்டையை ஹிராஸ் பாதிரியார் கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்தினார். 

   கவிஞர் கிருஷ்ணப்ரியாவின் ‘வெட்கத்தில் நனைகின்ற…’, கவிதைத் தொகுப்பை நாகை ஜவஹர் சில கவிதைகளைக் குறிப்பிட்டு விமர்சன உரையாற்றினார். ஞாயிற்றுக் கிழமை கூட பெண்களுக்கு ஓய்வு இல்லை என்பது குறித்த ‘அரூபப் புலம்பல்கள்’, ‘பத்து வயது கவிதை’யான குழந்தை, பெண் சிசுவிற்கான ‘எதிர்பார்ப்பு’, ‘அரங்கேற்றம்’ போன்று சில கவிதைகளை வெகுவாக சிலாகித்தும் இவரது உரை அமைந்திருந்தது. சில கவிதைகளை நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 

   நிகழ்வை ஒருங்கிணைத்த கவிஞர் தெ.வெற்றிச்செல்வன் ‘ஆசை’, ‘அந்த 90 நாட்கள்’, ‘நானும் நீயும்’ போன்ற கவிதைகளையும் அதன் அழகியல் தன்மையையும் குறிப்பிட்டுப்  பேசினார். ஏற்புரையில் கவிஞர் கிருஷ்ணப்ரியா, என் அனுபவங்களையே எனது கவிதை, எழுத்துக்கு வாழ்விற்குமான இடைவெளியை நான் விரும்பவில்லை, என்றார். எனது கவிதைகளில் அழகியல் இல்லை என்று சிலர் குறிப்பிடுவதுண்டு. அதைப்பற்றியெல்லாம் திட்டமிட்டு நான் கவிதை எழுதுவதில்லை, பெண்ணியக்கவிதையா என்பதெல்லாம் அவரவர் பார்வையைப் பொறுத்தது என்றார். 

   தமிழகத்தில் பள்ளிக்கல்வி குறித்து நானும் தோழர் செ.மணிமாறனும் பேசினோம். தமிழகத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தன்னார்வத்துடன் பள்ளிக்கல்வியை செழுமைப்படுத்த உழைப்பதை சுட்டிக்காட்டி மணிமாறன் உரையாற்றினார். 

  கலந்துரையாடலில் அரிமா அருண் காரைக்குடி கல்லுப்பட்டியில் தான் நடத்திவரும்  அரசு உதவிபெறும் பள்ளி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். நாகை கீச்சாங்குப்பம் ‘ஸ்மார்ட்’ அரசுப்பள்ளித் தலைமையாசிரியர் பாலு, அரசுப்பள்ளி ஆசிரியை ஆகியோர் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இடைநிலை ஆசிரியப்பயிற்சி மாணவி கரோலின் பயிற்சிக்குச் சென்ற பள்ளி அனுபவத்தில் ஓர் ஆசிரியர் எவ்வாறு இருக்கக் கூடாது என்பதைக் கற்றுக்கொண்டதாகச் சொன்னது நிகழ்வின் முத்தாய்ப்பாக அமைந்தது. 


படங்களுடன் பார்க்க கீழ்க்கண்ட இணைப்பை சொடுக்கவும்…


 https://www.facebook.com/notes/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-2016/1010781322327255




இங்கும் தொடரலாம்:
மு.சிவகுருநாதன்
திருவாரூர்
பன்மை
மின்னஞ்சல்: musivagurunathan@gmail.com
வாட்ஸ் அப்:   9842802010
செல்:          9842402010


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக