புதன், மே 18, 2016

பணத்திற்கு செய்தி (Paid News) வெளியிடும் ஊடகங்கள்



பணத்திற்கு செய்தி (Paid News) வெளியிடும் ஊடகங்கள்

                                        - மு.சிவகுருநாதன்

 
குறுவெளியீடு - முன்னட்டை

     ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பெருமைப்பட்டுக் கொள்ளும் பத்தரிக்கைகள் மற்றும் ஊடகங்களின் சீரழிவு மிகவும் அபாயகரமானதாகும். பணத்திற்கு செய்தி (Paid News) வெளியிடும் போக்கு மிக அதிகமாக நடைபெறுவது ஜனநாயகத்திற்கும் அடைப்படை உரிமைகளுக்கும் குந்தகம் செய்யும் நிகழ்வாகும்.

    ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் கர்நாடக அரசின் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா  ஜெயலலிதா தரப்பு மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வால் மிரட்டப்பட்டதை தன்னுடைய சுயசரிதை நூலில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதற்காக மனித உரிமைப் போராளியும் மூத்த வழக்கறிஞருமான பொ.இரத்தினம் அவர்கள் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று.

    இது தொடர்பாக வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா அவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பான விவரங்களைத் திரட்டியதுடன், அவற்றை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் தனித்தனியே குறுவெளியீடுகளாக வெளியிட்டு பெங்களூருவில் செய்தியாளர்கள் சந்தித்தார். (ஜெயலலிதா தரப்பினர் கோயில்களில் காணிக்கை செலுத்துவதால் தீர்ப்புகள் சாதகமாக கிடைக்கின்றனவா? – ஊழல் அரசியலை வேரறுப்போம் – ஆச்சார்யா ஆதரவு இயக்கம் – ஜூன் 2014 வெளியீடு) 

குறுவெளியீடு - பின்னட்டை


     இது தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஏற்கப்படாத நிலையில் வழக்கறிஞர் இரத்தினம் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பி.வி.ஆச்சாரியா ஆகியோருக்கு எதிராகவும் அவதூறுச் செய்தி சில தமிழ் நாளிதழ்களில் வெளியானது. (26.04.2016 இல் தினகரன், தினத்தந்தி; 27.04.2016 இல் ‘தி இந்து’ – தமிழ்) 

   இச்செய்தி முழுக்க முழுக்க உண்மைக்கு மாறான பொய்ச்செய்தி மட்டுமல்ல; பணத்திற்கு வெளியிட்ட செய்தியாகும் (Paid News). இது குறித்து உரிய விசாரணை சி.பி.அய். மூலம் நடத்தப்படவேண்டும் என்று வழக்கறிஞர் பொ.இரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இவ்வழக்கு நாளை (19.05.2016) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. 

    69 வயதில் காலில் வலியுடன் தனி மனிதராக நீதிக்கானப் போராட்டத்தில் ஒவ்வொரு நீதிமன்றங்களாக படியேறிக்கொண்டிருக்கும் வழக்கறிஞர் இரத்தினம் அவர்களின் தளராத உழைப்பிற்கு பாராட்டுக்களையும் நன்றியை தெரிவிக்க வேண்டிய தமிழ் ஊடகங்கள் அவர் மீது அவதூறு செய்யும்  Paid News - களை வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியது. இதில் ஜெயலலிதாவின் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக தமிழக மக்களை ஏமாற்றும் மு.கருணாநிதியின் குடும்ப நாளிதழான தினகரனும் அடக்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இடதுசாரியாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘இந்து’ ராம் இதற்கு இதுவரை எந்த வருத்தம், மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. 

     இந்நிலையில் இன்றைய (18.05.2016) ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பி.வி.ஆச்சாரியா ஆகியோர் படங்களுடன் ‘ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் சவால்கள்’ – இரா.வினோத்  என்ற பெயரில் ஓர் செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் ஒரு பகுதியை கீழேத் தருகிறேன்.

     “இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நிறைய குரல்கள் எழுந்துள்ளன. கடந்த முறை தீர்ப்பு வெளியானபோது ஆச்சார்யாவுக்கு மிரட்டல்கள் வந்ததால், இம்முறை தீர்ப்பு வெளியாகும்போது கூடுதல் பாதுகாப்பு கோர ஆச்சார்யா முடிவெடுத்துள்ளார். குறிப்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்னம் ஆச்சார்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் ரத்னம் சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

     அதில், ‘‘நீதியை நிலைநாட்ட துணை புரியும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு இடையூறாக இருக்க கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என முறையிட்டு இருந்தார். இம்மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால் வழக்கறிஞர் ரத்னம், ஆச்சார்யாவுக்கு எதிராக வழக்கு தொடுத்ததாக ஊடகங்களில் தவறான‌ செய்தி வெளியானது.

   இது தொடர்பாக ஆச்சார்யா கூறுகையில், ‘‘வழக்கறிஞர் ரத்னம் என்னை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தமிழகத்தில் பலர் என்னை எதிர்க்கும் நிலையில் வழக்கறிஞர் ரத்னம் எனக்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீதியை நிலைநாட்ட துடிக்கும் ரத்னம் போன்றவர்களின் ஆதரவு என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது’’ என்றார்.

    தமிழக தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஆகியவற்றுக்கு இடையில் வழக்கறிஞர் ரத்னத்தின் மனு ஜெயலலிதாவுக்கு சவாலாக மாறியுள்ளது. அரசு வழக்கறிஞரை மிரட்டிய விவகாரத்தை உச்சநீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. எனவே இந்த மனு தீர்ப்பின் போக்கை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக‌ நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன‌” 

      என்று அச்செய்தி நீள்கிறது. இதில் “வழக்கறிஞர் ரத்னம், ஆச்சார்யாவுக்கு எதிராக வழக்கு தொடுத்ததாக ஊடகங்களில் தவறான‌ செய்தி வெளியானது”, என்ற ஓர் வரியும் வருகிறது. இந்த அவதூறுச் செய்தியை வெளியிட்ட அதே ‘தி இந்து’ தனது முகத்தை எங்கே மறைத்துக்கொண்டு யாரோ வெளியிட்டதுபோல் கதையளக்கிறது.

    “தினகரன், தினத்தந்தி போன்ற நாலம்தர இதழ்கள் இவ்வாறு தொடர்ந்து செய்பவையே. மிக நீண்ட பாரம்பரியம் ‘இந்து’ம் இவ்வாறு செய்வது அதிர்ச்சியளிப்பதாக”, வழக்கறிஞர் இரத்தினம் அவர்களிடம் பேசும்போது தெரிவித்தார். 

    தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற நிகழ்வுகளில் எவ்வித பலனையும் எதிர்பாராமல் வழக்காடி அவர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தருவதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டுள்ள வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் தற்போது பகத்சிங் மக்கள் சங்கம் மூலம் சமூகப்பணியாற்றி வருகிறார். அவரது தன்னலமற்ற  பணிகளை அவதூறு செய்யும் ஊடகக் கும்பல்களைக் கண்டிப்போம். அவரது பணிகளுக்கு என்றும் துணை நிற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக