ஞாயிறு, செப்டம்பர் 18, 2016

ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?




ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்?

  - மு.சிவகுருநாதன்

(புதிய கல்விக்கொள்கை குறித்த அ.மார்க்ஸ் அவர்களின்  முகநூல் கட்டுரைகளை வாட்ஸ் அப்பில் வெளியிடும் முன்னும் பின்னும் எழுதிய குறிப்புகள்.)


       கல்வி வணிகமயம் ஆவது குறித்த எவ்வித கவலைகளும் அற்ற, புதிய கல்விக்கொள்கை குறித்த புரிதலுமற்ற பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்குபோது இந்நாட்டில் என்ன மாற்றங்கள் வந்துவிடமுடியும்?

       சமூக வலைத்தளங்களில் ஆசிரியர்களின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளன. துதிபாடல், அவதூறுகள், பொய்ச்செய்திகள், போலியான படங்கள் என மிக இழிவான வகையில் பகிர்தல்கள் இருக்கின்றன. கல்வி, சமூகம் குறித்த எத்தகைய உணர்வும் இன்றி ஆசிரியர் தினம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் அவர்களது நேரம் கழிகிறது என்பது மறுக்க முடியவில்லை. 

        பள்ளிகளில் என்ன செய்வது, என்ன செய்யக்கூடாது என்கிற புரிதல்கள் கூட இல்லாமல் பள்ளிகளை இந்துக் கோயிலாக்கும் முயற்சியில் பல ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். இதைக் கேட்பதற்கு இங்கு ஆட்களில்லை.

      விநாயகர் சதுர்த்தி கொண்டாடி முடித்த கையோடு அடுத்து சரஸ்வதி பூஜை கொண்டாடச் சென்றுவிடுவார்கள். இதற்குத் தோதாக மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் வரைவு இருப்பதை இவர்களால் எதிர்க்க முடியுமா என்ன?

      ஆங்காங்கே எழும் சிற்சில அடையாள எதிர்ப்புகள் ஒன்றும் பலனளிக்காது. ஒட்டு மொத்த ஆசிரிய சமூக என்ன செய்யப் போகிறது என்பதே நம்முன் இருக்கும் கேள்வி. 

      ‘தி இந்து’ நாளிதழ் இது குறித்து சில தொடர் கட்டுரைகளை வெளியிட்டது. அத்தகைய கரிசனங்கள் பிற இதழ்களுக்கு இல்லை என்பதுதான் இங்கு நடைமுறை யதார்த்தம். இக்கட்டுரைகள் எத்தனை ஆசிரியர்களைச் சென்றடைந்திருக்கும் என்பது தெரியவில்லை. அவர்களது  சமூக ஊடகச்செயல்பாடுகளைப் பார்க்கும்போது நேர்மறையாக எண்ண முடியவில்லை. 

      பல்லாண்டுகளாக கல்வி, சமூகம் குறித்த அக்கறையோடு கல்விக்கொள்கைகள், பாடநூற்கள், காவி மயம், இந்துத்துவப் புரட்டுகளை வெளிப்படுத்தி வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் ஒருமாத காலமாக புதிய கல்விக்கொள்கை குறித்து எழுதிய கட்டுகரைகளை நன்றியுடன் இங்கு வெளியிடுகிறேன். 

     ஒரு வாட்ஸ் அப் குழுவில் சில கட்டுரைகள் வெளியாயின. இங்கு அனைத்தையும் ஒவ்வொன்றாக வெளியிடுகிறேன். 

      இறுதியாக.... புதிய கல்விக்கொள்கை.... பதிவுகள் பற்றி.... 

       கடந்த சில நாட்களாக பேரா. .மார்க்ஸ், முகநூலில் எழுதிய 19 கட்டுரைகளை நாள் ஒன்றுக்கு இரண்டு வீதம் பதிவிட்டு வந்தேன். அது இன்று காலையுடன் நிறைவு பெற்றது. வெகு விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது

            புதிய கல்விக் கொள்கையின் தீமைகளை வெறும் அடையாளமாக அல்லாமல் முற்றாக, குறிப்பாக ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இது செய்யப்பட்டது. இது எத்தனை பேரால் கருத்தூன்றி வாசிக்கப்பட்டது என்பது தெரியவில்லை

      வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள் மிகவும் மேலோட்டமான கேளிக்கைகளையும், வீணான பகிர்தல்களையும் உள்ளடக்கியதாக இருப்பது வேதனைக்குரியது. படித்தோ அல்லது படிக்காமல் கடந்து போகாமல் இது குறித்து விவாதிக்க முன்வரவேண்டும்

      பாராட்டு, கைத்தட்டல்கள் எல்லாம் தேவையில்லை. வெளிப்படையான கருத்துகளை வெளிப்படுத்துங்கள். வாய்ப்பு கிடைக்கும்போது விரிவாக விவாதியுங்கள்


     கல்வி, சமூகம் குறித்த அக்கறை ஆசிரியர்களுக்கு அதிகமாக இருக்க வேண்டுமல்லவா! ஆசிரியர்கள் மட்டுமல்லாது அனைவரும் அறிந்து, விவாதிக்க வேண்டிய தேவை இன்றைய நிலையில் இருக்கிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக