ஞாயிறு, டிசம்பர் 10, 2017

மற்றமையை மறுக்கலாமா?

மற்றமையை மறுக்கலாமா?

மு.சிவகுருநாதன்

      பொதுப்பிரச்சினைகளில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காத, கண்டுகொள்ளாத  ஆசிரியர் சமூகங்கள் தங்களுக்கு ஒரு சிக்கல் என்றால் மட்டும் பொங்கி வழிவதை சமூக ஊடகங்களில் காணமுடிகிறது. இது அடிக்கடி நிகழும் வழக்கமான ஒன்றுதான். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடன் இதழில் பாரதி தம்பி ‘கற்க கசடற…’ என்னும் தொடரில் விடுப்பு நாள்களின் கணக்கை வெளியிட இவ்வாறு பொங்கிய நிகழ்வும் நடந்தது. நீதிபதி கிருபாகரன் விமர்சனத்திற்கு ஆசிரியர் சமூகம் பொங்கி எழுந்தது ஒருபுறம். அதற்காக வழக்குப் போட்டுக் கைது செய்தது கருத்துரிமைக்கு எதிரான தாக்குதலாகவே எடுத்துக்கொள்ள முடியும். 

     வேலூர் மாவட்டம் பணப்பாக்கம், திருவாரூர் மாவட்டம் குளிக்கரை ஆகிய பள்ளிகளில் நடந்த நிகழ்வுகள் அவர்களை  மீண்டும் சமூக ஊடகவெளிக்கு இழுத்து வந்துள்ளது. மற்றமையை (others) மதிக்கமால் வெளியிடப்படும் இப்பதிவுகள் பல சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. ஓரளவு பொறுப்புடன் திருவாரூர்  திரு .நடனம்  என்பவர் கல்வி தரம் உயர வேண்டுமானால்...” என்னும் தலைப்பில் 14 கோரிக்கைகளை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். ஆயினும் இதன் மறுபக்கத்தை காணும் தன்மையை ஆசிரியர்கள் இழந்திருப்பது மிகப்பெரிய சமூக அவலம்.  மற்றமையை (others) மறுப்பது பாசிச குணம். புத்தர், இயேசு போன்ற அறிஞர்கள் வெளிப்பாடு மற்றமையை நோக்கியுள்ளதை அவதானிக்கலாம்.

1. மதிப்பெண்ணுக்கு  முக்கியத்துவம்  தரக்கூடாது.
2. பள்ளியில்  பராமரிக்கப்படுகின்ற  தேவையில்லாத பதிவேடுகள்  நீக்கப்பட வேண்டும்.
3. பணியிடைப் ( CRC, BRC பயிற்சியால் எந்த பயனும் இல்லாததால் நீக்கப்பட வேண்டும்.
4. வகுப்பில் குழு அமைப்பில் இல்லாமல் ,சூழ்நிலைக்கு ஏற்ப ,அட்டைகளை பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியருக்கு உரிமை வேண்டும்.
5. கண்டிப்பாக ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்கியே ஆக வேண்டும்.  (தேவைப்பட்டால் இரண்டு,மூன்று பள்ளிகளை கூட இணைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால்)
6.
ஆசிரியரை பாடம் கற்பிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் .
8.
எந்த பள்ளியிலும் காலிப்பணியிடமே இருக்கக்கூடாது.
11.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கியே ஆக வேண்டும்.
12.
இரண்டு தலைமையின் கீழ் சரியாக பணியாற்ற முடியாது (AEEO, SSA)
13.
பள்ளியில் ஆசிரியைகள் மகப்பேறு விடுமுறைக்குச் சென்றால் கூட,
அந்த இடத்தில் தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்பப்பட வேண்டும்.


          மேற்கண்ட 10 கோரிக்கைகள் நியாயமானவையே. அதைப் பற்றி கொஞ்சம். மதிப்பெண்ணுக்கு முக்கியத்துவம் தரும் இன்றைய கல்விமுறை குறித்தும் தேர்வு சீர்திருத்தம் குறித்து கல்விப்புலத்திற்கு வெளியேதான் சில குரல்கள் ஒலிக்கின்றன. ஆசிரியர்களும் இயக்கங்களும் மவுனமாக இருப்பதேன்? 

    தேவையில்லாத பதிவேடுகள் என்பது ஒருபுறம். ஒரே புள்ளிவிவரங்களைத் திரும்பத் திரும்பக் கேட்பது, மின்னஞ்சல், தாள் மற்றும் குறுந்தகடு அனைத்திலும் கால அவகாசமின்றி உடனடியாக நேரில் வழங்க வலியுறுத்துவது மறுபுறம். சுற்றுச்சூழலை மாசாக்கும் இத்தகைய செயல்பாடுகளும் கண்டிக்கத்தக்கன. கணினி யுகத்தில் புள்ளி விவரச் சேகரிப்பு, தொகுத்தல் ஆகியன மிக இலகுவான செயல்கள். இவற்றில் எவ்விதப் பயிற்சியும் முன் அனுபவமுமின்றி இவ்வாறு நடைபெறுகிறது. 

    பணியிடைப் பயிற்சிகள் தேவைதான். இது நாசமாய்ப் போனதற்கு அனைத்துத் தரப்பும் காரணம். புதிய சிந்தனைகளை, உத்திகளை விவாதித்துச் செயல்படுத்துவதற்குப் பதிலாக பாடக்குறிப்பு உள்ளிட்ட அனைத்தும் இப்படித்தான் இருக்கவேண்டும் என ஒற்றைமைய  அதிகாரத்துவததைக் கட்டமைப்பது கொடுமை. பயிற்சியின் நாள்கள், நேரம் ஆகியவற்றை அதிகரிப்பது மட்டுமே தீர்வல்ல. ஒரு சில மணி நேரம் பயிற்சி இருந்தாலும் அது உருப்படியாக  அமைய நடவடிக்கை தேவை. ஆசிரியர்களும் புதிய சிந்தனைகளை உள்வாங்க நிரம்பி வழியாதவர்களாக இருப்பதும்  அவசியம். புதிய சிந்தனை என்கிற பெயரில் ஹிட்லரின் பெருமை, இந்து மதப் பெருமை, அமெரிக்க மாடல், வளர்ச்சி போன்ற சொல்லாடல்கள் முன்வைக்கப் படுவதிலிருந்தும் எச்சரிக்கை தேவை. 

    பழைய கற்றல் – கற்பித்தல் முறைகள் சரியல்ல, அவைகள் மாற்றப்படவேண்டும் என்பது எவ்வளவு உண்மையோ பாடக்குறிப்பில் தொடங்கி அன்றாட வகுப்பறைச் செயல்பாடுகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என திணிப்பது அராஜகம். ஆனால் இதுதானே நடக்கிறது! 

     ஒரு வகுப்பிற்கு ஒராசிரியர் இருக்கத்தான் வேண்டும் இன்று அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பெரும் சரிவை சந்திக்கிறது. “அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்போம்” என்கிற குரல் சிலரால் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. இது பேரியக்கமாக வளரவேண்டும். அருகாமைப் பள்ளிகள் கனவு நனவாக வேண்டும்.  பள்ளிகள் இணைப்பு சமவெளிகளில் எளிது. மலைப் பகுதிகளில் இது சாத்தியமல்ல. அடித்தட்டு மாணவர்களைக் கல்வியை விட்டு துரத்திவிடும். 

    காலிப்பணியிடங்களை நிரப்புதல், விடுப்புப் பதிலி ஆசிரியர்கள் நியமனம் ஆகிய கோரிக்கைகள் நியாயமானது. ஒருவர் ஒருமாதம் விடுப்பு எடுத்தாலும் அந்த இடத்தில் பதிலி ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஒப்பீட்டளவில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைவிட மேனிலை வகுப்புகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் மிக அதிக அளவில் காலியாக உள்ளன.  அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்கம் (SSA), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (RMSA) ஆகிய திட்டங்ஃப்களின் மூலம் 1 முதல் 10 வகுப்பு முடிய உள்ள ஆசிரியப் பணியிடங்கள் ஓரளவுக்கு நிரப்பப்படுகின்றன. மேனிலை வகுப்புகளின் காலியிடங்கள் சொல்லி மாளாதவை. பணப்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளியில்  4 குழந்தைகள் தற்கொலை (!?) செய்துகொண்டதற்கும் இது ஓரு காரணம். ஊடகங்களும் ஆசிரியர்கள் மற்றும் இயக்கங்கள் மறந்துபோன / மறைத்துவிட்ட தகவலிது. 

    ஆசிரியர்களைக் கல்விப்பணிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அலுவலகப் பணிகளிலிருந்து விடுவிக்க வேண்டும். ஆயினும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தேர்தல் ஆகியவற்றிலிருந்து விலக்கு கோரமுடியாது. 

     சமவேலைக்கு சம ஊதியம் என்கிற வாதம் நியாயமானது. 6 – 8 வகுப்புகள் கற்பிக்கும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதியம், பகுதி நேரம், சிறப்பு ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழக நியமனங்கள் அனைத்தும் காலமுறை ஊதியத்துடன் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களாக மாறவேண்டும். 

   இரட்டைத்தலைமை சரியல்ல. இங்கு இன்னும் கூடுதல் தலைமைகள் உள்ளன. அனைவருக்கும் தொடக்கக் கல்வி இயக்கம் (SSA), அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (RMSA), பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் (AEEO, DEEO, DEO, CEO), மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (DIET) ஆகிய பல அமைப்புகள் ஒருங்கிணைப்பின்றி இயங்குவதும், அதிகாரத்தைச் செலுத்துவதும் கல்வியை சீரழிக்கும்.  

7.
அதிகாரிகள் பள்ளியில் காணுகின்ற குறைகளை நீக்க ஆலோசனை வழங்க வேண்டுமேயொழிய, குற்றம் கண்டுபிடிப்பதற்காக மட்டுமே வரக்கூடாது.
14. அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசனை வழங்குபவராகவும் இருக்க வேண்டுமேயொழிய,  அடிமைகள் போல் பழிவாங்கத் துடிக்கக் கூடாது.
9. பயிர் நன்றாக வளர கலையை நீக்குவது போல, பள்ளியில் சரியில்லாத மாணவர்களை நீக்கவோ அல்லது திருத்தவோ முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
10 . ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டும்.


     இறுதியாக, 7, 9, 10, 14 ஆகிய கோரிக்கைகள் பற்றி: 

   கல்வி அலுவலர்கள் அதிகாரம் செலுத்தக் கூடாது என்பது மிகவும் நியாயமானது. ஆனால் குழந்தைகளிடத்தில் நாங்கள் அதிகாரம் செலுத்துவோம்,  அதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வேண்டும் என குரலெழுப்புவது மிகவும் மோசமானதாகப் படுகிறது. அலுவலர்களுக்கு ஆசிரியர்கள் அடிமைகளல்லர். அதைப்போலவே குழந்தைகளும்  ஆசிரியர்களுக்கு அடிமைகள் அல்லவே! 

    சரியில்லாத மாணவர்களை நீக்கவும், திருத்தம் அதிகாரமும் சுதந்திரமும் வேண்டும் என்பது மிக அபத்தமான அடிப்படைவாதக் கோரிக்கை. கல்வி பற்றிய நவீன புரிதல், சட்ட நடைமுறைகள், குழந்தைகள் உரிமைகள் எவற்றையும் கணக்கில் கொள்ளாமல் மெத்தப்படித்த ஆசிரியர்கள் இம்மாதிரியான கோரிக்கைகள் வைப்பதைவிட வேதனை வேறெதுவும் இருக்க முடியாது. 

   ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு காவலரை அனுப்பி பாதுகாப்பெல்லாம் வழங்க முடியாது. மாணவர்கள், பெற்றோர்கள், சமூகம் ஆகியனவே ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு கேடயமாக இருக்க முடியுமே தவிர அரசாணைகள் அல்ல. கல்வி, மாணவர்கள், சமூகம் ஆகியவற்றின் உரிமைக்காகவும் பாதிப்பிற்காகவும் ஆசிரிய சமூகம் குரல் கொடுக்கும் போது இந்த சமூகம் அவர்களுக்கு பாதுகாப்பாக அமையும். எங்கோ நடக்கின்ற ஒன்றிரண்டு நிகழ்வுகளிலிருந்து இனியாவது பாடம் கற்றுக்கொள்ளாவிட்டால் கல்வியை மட்டுமல்ல; ஆசிரியர்களையும் யாராலும் காப்பற்ற முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக