வியாழன், பிப்ரவரி 09, 2017

பாலியல் கொடுமைகளும் ஆதிக்க சாதிகளின் தலித்கள் மீதான தாக்குதல்களும்

பாலியல் கொடுமைகளும் ஆதிக்க சாதிகளின் தலித்கள் மீதான தாக்குதல்களும்



தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!


நந்தினி வன்கொடுமை வழக்கை மையப்படுத்தி அணிதிரட்டுவோம்!!




நம்மிடம் நியாயம், நேர்மை இருக்கும்பொது, நமது மாண்புகளை மீட்டெடுக்க ஏன் தயங்க வேண்டும்?


– மாமனிதர் அம்பேத்கர்



பொ. இரத்தினம்,


வழக்கறிஞர்,
அலைபேசி: 94434 58118






அமைப்பாளர்


பகத்சிங் மக்கள் சங்கம் மற்றும்


அம்பேத்கர் சட்ட உதவி சங்கம்
 

(நந்தினி பாலியல் வன்கொலை வழக்கு பற்றிய வழக்கறிஞர் பொ.இரத்தினம் வெளியிட்ட அறிக்கை இங்கு நன்றியுடன் பிரசுரமாகிறது.)




        மேலவளவு, திண்ணியம், விருத்தாசலம் கண்ணகி – முருகேசன் போன்ற பல வழக்குகளில் பெற்ற அனுபவப்பாடங்கள் இம்மாதிரியான வழக்குகளில் இறங்க கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட அனைவரும் நம்மைக் கைவிடும்போது தனி ஆளாக நின்று போராடவேண்டியுள்ளது. வழக்குகளைத் தொடர்ந்து நடத்துவது பெருஞ் சிக்கலாகிறது. இருப்பினும் பல வழக்குகளில் இந்த சட்டப் போராட்டம் தொடர்கிறது.


        ஜனவரி 29, 2017 அன்று (29.01.2017) அம்பேத்கர் சட்ட உதவி சங்கத்தை சேலத்தில் முறைப்படித் தொடங்கினோம். அதில் கலந்துகொண்ட தோழர்கள் நிறைய பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். ‘தி இந்து’ நாளிதழில் பிப். 02, 2017 (02.02.2017) அன்று வந்த ‘நந்தினி கொலை வழக்கில் முதல்வரின் தலையீடு தேவை!’ என்னும் தலையங்கம் ஒரு கவன ஈர்ப்பாக அமைந்தது.


     03.02.2017 அன்று நானும் தடா. பெரியசாமி மற்றும் தோழர்கள் சிலருடன் அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் சென்று, பாலியல் கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட நந்தினியின் தாயார் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களைச் சந்தித்து வந்தோம்.


     தலித்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில் காவல்துறை ஆதிக்க சாதி மனநிலையுடன் தொடர்ந்து செயல்படுகிறது. மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு காவல்துறை கொலை வழக்குப் பதிவிட்டுள்ளது. இவர்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்படவேண்டும்.


     இதே போன்று அப்பகுதிகளில் எண்ணற்ற கொடுமைகள் தலித்களுக்கு எதிராக நடந்துள்ளன. பல்வேறு கொடுமைகள் ‘கட்ட பஞ்சாயத்துக் குழுக்களால்’ வெளியே வராமல் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளன. இதற்கு தலித் இயக்கங்களே உடந்தையாக இருப்பது கொடுமையானது. இவற்றை வெளியே கொண்டுவந்து நீதி நிலைநாட்ட சட்டப் போராட்டம் மேற்கொள்ளவேண்டும்.


      இறந்த ஒருவரது குடும்பத்திற்கு உடற்கூறாய்விற்கு பின் ரூ. 4.25 லட்சமும் குற்றப்பத்தரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு ரூ. 4.25 லட்சமும் என மொத்தம் ரூ. 8.5 லட்சம் வழங்கவேண்டும் என்ற வன்கொடுமைச் சட்டப்படி, தற்போது நந்தினி குடும்பத்தாருக்கு ரூ. 4.25 லட்சம் காசோலை வழங்கப்பட்டுள்ளது.


     இழப்பீட்டைக் காசோலையாக வழங்காமல் வங்கிகளில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புநிதியாக்கி மாதந்தோறும் அதன் வட்டியை எடுக்கும் வகையில் இருப்பது நலம். இழப்பீட்டை அபகரிக்க பல்வேறு நபர்கள் உள்ளே நுழைவார்கள். பல இடங்களில் இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இழந்ததை நானறிவேன்.


      இவ்வழக்கில் தொடர்புடைய பலரைக் கைது செய்ய காவல்துறை காட்டிய சட்டவிரோத மெத்தனப் போக்கிற்கு உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உள்ளூர் காவல் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.


     நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு நீதி விசாரணை செய்ய வேண்டும். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம். அப்பகுதிகளில் தொடரும் தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆய்வு செய்யப்பட்டு, உரிய வழக்கு பதியப்பட்டு முறையான விசாரணை நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெற வேண்டும்.


    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முதல்வர் பதவிக்குப் பொருத்தமான நபர் என வாட்ஸ் அப் தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இவரது உண்மை முகம் பலருக்குத் தெரிவதில்லை.


    மலைச்சாமி என்னும் தலித் தோழர் தலித் பேந்தர்கள் (DPI) என்னும் அமைப்பை நடத்தி வந்தார். அவர் உடல்நலிவுற்று மரணமடைந்த பிறகு மதுரையில் தடயவியல் துறையில் அரசுப்பணியில் இருந்த திருமாவளவன் அதை ஏற்று நடத்தினார்.

    சித்து வேலைகள் பலவற்றின் மூலம் இன்று தலித்களுக்கு எதிரான பலவற்றைச் செய்கின்றனர். படித்த தலித்கள் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதை ‘தலித்கள் சந்திக்கும் சவால்கள்’ என்னும் சொற்பொழிவில் ஆனந்த் டெல்தும்டே குறிப்பிடுவார்.


      ஈழப்பிரச்சினையை காசு பார்க்கும் ஒன்றாக மாற்றிய இவர்கள், ஈழப்போரில் லட்சக்கணக்கில் தமிழர்கள் அழிக்கப்பட்ட பிறகு கனிமொழி போன்றோர்களுடன் குழுவாகச் சென்று மஹிந்த ராஜபக்ச உடன் கைகுலுக்கித் திரும்பினர். சீரழிவின் மொத்த வடிவமாக இருக்கும் இவர்கள், தலித் மக்களின் விரோதிகளாகவும் உள்ளனர்.


    திண்ணியத்தில் 3 தலித்கள் ஆதிக்க சாதியினரால் சூடு வைத்து, பீ திங்க வைக்கப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர்  இவர்கள் மூவருக்கும் சால்வை போர்த்தி ரூ. 1000 அன்பளிப்பாக தந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அண்ணனுக்குப் போர்த்தவேண்டும் என்று அவற்றையும் வாங்கிச் சென்றுவிட்டனர்.


    விருத்தாசலம் கண்ணகி – முருகேசன் வழக்கில் முருகேசனது அப்பா, சித்தப்பா ஆகியோரை அழைத்து அவர்கள் தரும் ரூ. 20 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள். செத்தவன் திரும்பி வரவாப் போகிறான்? என்று நியாயம் பேசிய கதை அனைவரும் அறிந்த ஒன்று.


     இவரும் இவரது கட்சியைச் சார்ந்தவர்களும் இம்மாதிரியான சட்டவிரோதச் செயல்பாடுகள் மூலம் கோடீஸ்வரர்களாகி விட்டனர். மேலும் ஒழுக்கம் கெட்ட செயல்பாடுகளை இங்கு பட்டியலிட இடமில்லை. இது குறித்து பல அறிக்கைகளும் துண்டுப் பிரசுரங்களும் வெளியிட்டுள்ளோம்.


    தடா பெரியசாமி, சந்திரபோஸ், வடிவேல் ராவணன் ஆகியோருடன் இணைந்து வழக்கை சரியான பாதையில் கொண்டு செல்ல, திருச்சி ரயில் நிலையத்தில் கூடிப்பேசினோம். புலவர் கலியபெருமாளின் மகன் வள்ளுவன் மூலம் வழக்கைக் காலி செய்ய முயன்றபோது, நீங்கள் எல்லாம் எதுக்கு இயக்கம் நடத்துகிறீர்கள், தோழர் என்றெல்லாம் சொல்லாதீர்கள், இரத்தினம் என்று பெயரைச் சொல்லி அழையுங்கள், என்று கடுமையாகத் திட்டிய நிகழ்வும் நடந்தது.


    சிதம்பரம் தேர்தலில் திருமாவளவன் போட்டியிட்ட சமயத்தில் 400 க்கு மேற்பட்ட தலித் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இது தொடர்பான வழக்கு போட்டு பாதிக்கப்பட்ட வன்னியர் உள்பட பல்லருக்கு நிவாரணம் பெற்றுத் தந்தோம். இந்த நிகழ்வில் ரவிக்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரது துரோகங்கள் சொல்லி மாளாதவை.


    பின்னர் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் வெளியூரைச் சேர்ந்த (பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் மாவட்டம்) உஞ்சை அரசன் நிறுத்தப்பட்டபோது, கட்சிக்காக உழைப்பவர்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பில்லை என்கிற சலசலப்பு எழுத்தது.


   குறிப்பாக ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு 60% காரணமானவர்கள் தொல்.திருமாவளவன், சீமான், வைகோ போன்றவர்களே. பயந்தோடும் மாட்டைப் பிடிப்பது வீரமென்று சொல்லும் இவர்கள்தான் கலாச்சாரம் பற்றி கதைக்கிறார்கள். கலாச்சாரம், தேசியம் பேசும் பலர் தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி வாய் திறப்பதில்லை.

 
    குறிஞ்சாங்குளத்தில் 3 தலித்கள் பிறப்புறுப்பை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் காரணமானவர்கள் வை.கோபால்சாமி  நாயுடுவின் உறவினர்கள். இது குறித்து தலித் பெரியவர்கள் இவரிடம் பேசியபோது, ஈழப்பிரச்சினையைக் காரணம் காட்டி இதில் தலையிட மறுத்தார். ஈழத்தமிழர் அழிவிற்கும் இவர்களே காரணமாக இருந்தனர். இவரது தம்பி ரவிச்ச்சந்திரன் நாயுடு சங்கப் பொறுப்பாளர்.


    நந்தினியின் கொலையின் பின்னணியில் இந்துத்துவ இயக்கங்கள் இருக்கின்றன. இவர்களது அன்றாடப் பணியே வன்கொடுமைகள் தான். 2002 –ம் ஆண்டு குஜராத்தில் 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை கொன்று குவித்த மோடி தலைமையில் இவர்கள் பல்வேறு கொடுமைகளுக்குக் காரணமாக இருக்கின்றனர். இத்தகைய வன்செயல்களுக்கு தலித் மற்றும் பழங்குடியினரை பயன்படுத்தும் போக்கு உள்ளதை நாடறியும். குஜராத் சோதனைச்சாலையை நாடெங்கும் பரிசோதித்துப் பார்க்க இந்த கொடூரமான பாசிசக் கும்பல் திட்டமிட்டு செயலாற்றுகிறது. இவர்களை அம்பலப்படுத்துவதும் அடித்தட்டு மக்களை எழுச்சியை சரியான திசைவழியில் செலுத்தவும் நாமனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.


     தலித்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஆய்வு செய்து தகவல்களைத் திரட்டுவோம். இது குறித்த சட்டப்போராட்டம் தொடங்க படை திரட்டுவோம். படை என்பது மிகவும் நல்ல சொல். ‘சமூக சமத்துவப் படை’ என்கிற அமைப்பைத் தொடங்க ப.சிவகாமிக்கு உறுதுணையாக இருந்தோம். அந்தப் படையின் நோக்கம் திசைமாறிவிட்டது. தேர்தலற்ற இயக்கமே இதன் கொள்கையாக இருக்க முடியும். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் கருப்பு, சிவப்பு உடை சகிதம் ஸ்டாலினுடன் கூட்டத்தில் பங்கேற்று தலித் மக்களுக்கு அதிர்ச்சியளித்தார். தேர்தலை மையப்படுத்தி நடக்கும் எல்லா அநாகரீக செயல்களுக்கு துணை நின்றார்.


   பக்தசிங் பெயரை விட, ‘புத்தர் படை’ என்பதே மிகப் பொருத்தமானதாக இருக்க முடியும். வைதீக இந்து மதத்திற்கு எதிரான சங்கம் என்ற படையமைத்துப் போராடியவர் புத்தர். எனவே ‘புத்தர் படை’ அமைத்து. புத்தர், அம்பேத்கர் வழியில் நாமும் போராடுவோம்.



தொடர்புக்கு:


பொ. இரத்தினம்,


அலைபேசி: 94434 58118


தடா.பெரியசாமி


அலைபேசி: 94431 35344


நன்றி: 
 பொ. இரத்தினம், வழக்கறிஞர்

ஞாயிறு, பிப்ரவரி 05, 2017

கல்வியும் குழந்தைகளும்

கல்வியும் குழந்தைகளும்

                                                              மு.சிவகுருநாதன்



(04.02.2017 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த ‘மனித நேயப் பள்ளிகள் குறித்த ஆசிரியர்கள் கலந்துரையாடலுக்கு’ தயாரிக்கப்பட்ட குறிப்புகள்.)


     குழந்தை நேயப்பள்ளிகள் (Child Friendly Schools) ஒரு இனிமையான கருத்தாக்கம். சீர்மிகு காவல், மனித நேயக் காவல் என்பதுபோல் இதுவும் வெற்று முழக்கமாக இருக்கக் கூடாது.

       கல்வியின் ஒவ்வொரு அலகும் குழந்தையுடன் முரண் எதிர்வை உண்டாக்குகிறது. எதுவுமே இன்று குழந்தைகளுக்கு Friendly ஆக இல்லை. இதனைச் சாத்தியப்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி, பாடத்திட்டம், பாடநூல்கள், அரசுகள், சட்டங்கள், உளவியல், குடும்பம், சூழல், உரிமைகள், மொழிகள், விளையாட்டுகள் எதுவுமே குழந்தைகளுடன் முரணி நிற்கின்றன. இந்த உறவுகள் மேல்-கீழ் எனும் ஆதிக்கப்படிநிலைகளில் அமைந்துள்ளன. குழந்தைகளை இயல்பாக நேசிக்கும் எவருக்கும் கல்வி என்கிறபோது நேயம் போய்விடுகிறது.

குழந்தைகள் X பெற்றோர்கள்

குழந்தைகள் ஒரு கருவி, மூலதனம், வருங்கால முதலீடு, அடிமைகள், இவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

குழந்தைகள் X ஆசிரியர்கள்

விசுவாச அடிமைகள், சேவை செய்ய வேண்டியவர்கள், அறிவூட்டப்பட வேண்டியவர்கள், திருத்தப்பட வேண்டியவர்கள், கண்டித்து வளர்க்கப்பட வேண்டியவர்கள்

குழந்தைகள் X சட்டங்கள்

வயதெல்லைக் குழப்பங்கள், 6-14 கல்வி உரிமை, 0-3, 14-18 க்கான கல்வி உரிமை, குழந்தைத் தொழிலாளர் வயது 16, பெற்றோருடன் பணிசெய்ய உதவும் சட்டத்திருத்தம்

குழந்தைகள் X பள்ளி

சிறைச்சாலைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகள், மதிப்பீடுகள், தேர்வுகள்

குழந்தைகள் X பாடத்திட்டம்

பொருட்படுத்தாத பாடத்திட்டம், திணிப்புகள், அந்நியப்படுத்தல், வட்டாரங்களைப் புறக்கணிக்கும் பொதுப்பாடத்திட்டம், உள்ளூர் தன்மைகள் புறக்கணிப்பு

குழந்தைகள் X பாடநூல்கள்

பெரும் சுமை, அறிவுக்கான ஒரே கருவி, வேதநூல், இதைத்தாண்டி ஏதுமில்லை, வெறுப்பின் உச்சம்

குழந்தைகள் X குடும்பம்

பள்ளியை பிரதியாக்கம் செய்கிறது, குழந்தையைத் தவிர அனைவரும் ஆசிரியர்கள், படிப்பு பற்றி மீண்டும் கேட்கப்படுகிறது, எச்சரிக்கைகள்

குழந்தைகள் X உளவியல்

நடத்தைகளை பொதுமைப்படுத்தும், தனித்த உள்ளூர் நிலவரங்களைக் கணக்கில் கொள்ளாமை, இயல்பூக்கங்கள், மனவெழுச்சிகளில் வட்டார, சமூகத் தலையீடுகளைப் புறந்தள்ளும். (உம்) சாதி, மதம், தீண்டாமை

குழந்தைகள் X சூழல்

மிரட்டும் சூழல், கல்வி பற்றிய தவறான புரிதல், தேர்வு தொடர்பான தாக்குதல்கள்

குழந்தைகள் X சமூகம்

குழந்தமை குறித்த உணர்வு, கல்வி மதிப்பீடுகள், மதத் தாக்கம், விலகும்-விலக்கும் தன்மைகள், மாற்றுத்திறனாளிகளைப் போன்று குழந்தைகளுக்கும் கழிப்பறை வசதிகளின்மை

குழந்தைகள் X அரசு

அரசின் புறக்கணிப்பு, சமூக விலக்கம், தனித்த நிதி ஒதுக்கீடு இன்மை, சட்டங்களை அமலாக்கக் குறைபாடு

குழந்தைகள் X உரிமைகள்

உரிமைகள் மறுப்பு, குழந்தைகள் ஆணையங்களின் செயல்பாடின்மை, சமூக வன்முறை, குடும்ப-பள்ளி-ஊடக வன்முறைகள்.

குழந்தைகள் X மொழிகள்

குழந்தை மொழி-வட்டார மொழி நீக்கம், பொதுமொழிப் பயன்பாடு, அந்நியத்தன்மை, வட்டார அளவிலான ஆசிரியர்கள் இன்மை.

குழந்தைகள் X விளையாட்டுகள்

விளையாட்டு மறுப்பு, விளையாட்டு காட்சி ரூபமாக மாறிப்போன அவலம் (கிரிக்கெட் லைவ், இணைய விளையாட்டுகள்)

குழந்தைகள் X இலக்கியங்கள்

குழந்தை இலக்கியப் பற்றாக்குறை, மதச்சாயமிட்ட இலக்கியங்கள், சிறுவர்களுக்கு ஒவ்வாத இலக்கியங்கள், குழந்தமையைப் புறக்கணிக்கும் இலக்கியங்கள்



குழந்தைகள் சூழலை விட்டு விலகும்/விலக்கும் காரணிகள்


  •  பால் பாகுபாடுகள்
  •  உளவியல் போதாமைகள்
  •  குழந்தைகள் பற்றிய புரிதலின்மை
  •  கல்வி பற்றிய தவறான எண்ணங்கள்
  •  தேவைகளைப் புறக்கணித்தல்
  •  பாடச்சுமைகள்
  •  சொந்த வேலைகளில் ஈடுபடுத்துதல்
  •  ஊக்கமின்மை
  •  உள்கட்டமைப்புக் குறைபாடு
  •  சமூகச் சூழல்
  •  ஆதிக்கம் செலுத்தும் சக்திகள்


      இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. குழந்தை நேயப்பள்ளிகளை அடைய நிறைய தூரம் பயணிக்கவேண்டும். அரசு நம்முடன் இணைய வேண்டும். அப்போதுதான் வெற்றி சாத்தியப்படும்.

சனி, பிப்ரவரி 04, 2017

02. கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்? (பகுதி: 02)



02. கனவுலகத்தில் சஞ்சாரிப்பவர்களா ஆசிரியர்கள்?

(
பகுதி: 02)

முந்தைய பதிவின் தொடர்ச்சி…

மு.சிவகுருநாதன்



(
ஜன. 30,31 – 2017 ஆகிய இரு நாள்கள்பாடத்துடன் நற்பண்புகளை இணைத்துக் கற்பித்தலும் கற்றலும்” (VITAL – Value Integrated Teaching And Learning) பயிற்சி 9, 10 தமிழ் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. அந்த அனுபவப் பகிர்வின் தொடர்ச்சி இது.)

எட்டு:

காந்தியின் பிள்ளைகள் சரியாக இல்லை.

       
இது காந்தியைப் பற்றி வைக்கப்படும் மிக மோசமான அவதூறு. காந்தியைப் படிக்காமல் போகிறபோக்கில் இவ்வகையான நச்சுப் பரப்புரை செய்யப்படுகிறது. இது என்ன மாதிரியான மனநிலையை வெளிப்படுத்துகிறது என்பது உலகறிந்த ஒன்று. ஜவகர்லால் நேருஇந்திரா காந்திராஜூவ் காந்தி என்பது போன்ற நிலை இருந்தால்தான் சரியென்பது மிகவும் அபத்தம். காந்தி அரசபதவிகளையும் அதிகாரத்தையும் ஒருங்கே எதிர்த்தவர். அவர் தன்னையும் குடும்பத்தையும் முன்னிறுத்தியவர் அல்ல.

     
காந்திக்கு 4 ஆண் குழந்தைகள். (ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ்) இதில் முதல் மகன் ஹரிலால் காந்தி மட்டும் காந்தியுடன் முரண்பட்டு, தானும் காந்தியும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக் காரணமாக இருந்தவர். காந்தியின் படுகொலைக்குப் பிறகு உண்மையை உணர்ந்த இவர் சில மாதமே உயிருடன் இருந்தார். இவரை மட்டும் வைத்து காந்தியின் ஒட்டுமொத்தக் குடும்பத்தை இழிவு செய்வது கடும் கண்டத்திற்குரியது.

      
மணிலால் காந்தி தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் போராடியவர். 25 முறை சிறை சென்றுள்ளார், 14 ஆண்டுகள் சிறை வாழ்க்கை. இவரது மகன் அருண் மணிலால் காந்தி, காந்தீய சித்தாந்த அறிஞர். எம்.கே. காந்தி அகிம்சை ஆய்வு மையத்தை அமெரிக்காவில் நிறுவியவர். துஷார் காந்தி இவரது மகன், எழுத்தாளர், அரசியல் விமர்சகர். மணிலால் காந்திக்கு சீதா காந்தி, இலா காந்தி ஆகிய இரு மகள்கள், இலா காந்தி தென்னாப்பிரிக்க விடுதலைப் போரில் பங்கு பெற்றவர், 1994 – 2004 காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்.

     
ராம்தாஸ் காந்தி 1948 –ல் காந்தியின் இறுதிச்சடங்கைச் செய்து அஸ்தியைக் கரைத்தவர். டாடாவில் எண்ணெய் ஆலையில் பணி செய்தார். ராம்தாஸ்நிர்மலா பென் தம்பதிகள் வார்தா ஆசிரமத்தில் சொந்த உழைப்பில் மிக எளிமையாக வாழ்ந்தவர்கள். 1969 -ல் இவர் இறந்த பிறகு நிர்மலா பென் தொடர்ந்து சமூகப்பணியாற்றினார்.

     
காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சே தண்டிக்கப்படக்கூடாது, அது காந்தியின் வழியல்ல என்று கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். ஆனால் அரசால் அது நிராகரிக்கப்பட்டது. கோட்சேவை மன்னித்துவிட்டதாக அவருக்கும் கடிதமெழுதினார். ரஜனிஷ் காந்தியை நிராகரித்து பேசியபோது, அதற்கும் உரிமை உண்டென்றார். இதுதானே காந்தியின் பாதை. இவருக்கு சுமத்ரா, கனு, உஷா ஆகிய மூன்று பெண்கள். கனு ஹார்வார்டில் கல்வி கற்ற அறிவியலாளர்.

      
தேவதாஸ் காந்தி இராஜாஜி மகள் லெட்சுமியை காதல் திருமணம் செய்துகொண்டவர். இந்தக் காதலை அறிந்த காந்தி சில கட்டுப்பாடுகள் விதித்தார், 5 ஆண்டுகள் காத்திருந்து காந்தியின் சம்மதத்துடன் இவர்கள் மணமுடித்தனர். பூனா ஒப்பந்தத்தில் காந்தியின் சார்பில் கைசாத்திட்டவர். ‘டைம்ஸ் ஆப் இன்டியாவின் ஆசிரியர் குழுவில் இருந்தார். சமூக, அரசியல் செயல்பாட்டாளர். இவருக்கு நான்கு குழந்தைகள். மூத்தவர் ராஜ்மோகன் காந்தி, வரலாற்றாசிரியர், வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பணி செய்தவர், மாநிலங்களவை உறுப்பினர், எழுத்தாளர் என பன்முக ஆளுமை கொண்டவர்.



       
இரண்டாவது மகன் கோபாலகிருஷ்ண காந்தி கவிஞர், நாவலாசிரியர் என பல பரிமாணங்கள் உடையவர்.  அயல்நாட்டு தூதர், ஆளுநர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர். இவரது கட்டுரை ஒன்று பிப். 01, 2017 ‘தி இந்துநாளிதழில் வெளியாகியிருக்கிறது. படித்துப் பாருங்கள்! காந்தியம் நமக்குப் புலப்படும்.

       
மூன்றாவது மகன் ராமச்சந்திர காந்தி, தத்துவ அறிஞர். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையை நிறுவியவர். இவர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பல்கலைக்கழங்களில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரது மகள் லீலா காந்தி சமூக வரலாற்றாசிரியர், சிகாகோ பல்கலைக்கழகம். உலகில் எந்த ஒரு தலைவருக்கு இல்லாத நீண்ட மரபுத்தொடர்ச்சி காந்திக்கு மட்டுமே உண்டு. இந்த உண்மைகளை மறந்து பிரதமரின் மகன் பிரதமர், முதல்வரின் மகன் முதல்வர் என்கிற வருணாஸ்ரம, மநு நீதிக் கருத்தாக்கங்களைக் கொண்டு காந்தியின் குடும்பத்தை அணுகுவது நேர்மையல்ல.



ஒன்பது:

ஆங்கிலக் கல்விதான் நம்மை அடிமைப்படுத்தியது

      ஆங்கிலக்கல்வி பற்றிய இந்தப்புரிதல் மிகவும் தவறானது. நமது தவறான மொழிக்கொள்கைக்கு இதுவும் ஓரு உதாரணம். இந்தி, ஆங்கில மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பது வேறு. அந்த மொழிகளைப் படிப்பது வேறு. இன்றுள்ள சூழலில் இந்தி போன்ற ஒரு மொழியைப் படிப்பதைவிட ஆங்கிலம் போன்ற ஒரு உலக மொழியைக் கற்பதே சிறந்தது. 

    ஆங்கிலம் வழியாக நாம் நாம் நிறைய பெற்றிருக்கிறோம். சமஸ்கிருதம், இந்தி வேண்டும் என்று சொல்பவர்கள்தான் ஆங்கிலம் வேண்டாம் என்று சொல்கிறார்கள். எனவே இதன் உள் அரசியலைப் புரிந்துகொள்ள விளக்கம் தேவையில்லை. 

  தங்களது குழந்தைகளை தனியார் ஆங்கில வழிப்பள்ளிகளில் படிக்க வைத்துவிட்டு, ஆங்கிலத்தை எதிர்ப்பதாகச் சொல்வதும் தமிழ்ப் பெருமை பேசுவதும் அபத்தமின்றி வேறில்லை. பிரிட்டன் ஆட்சி வருவதற்கு முன்பு நாம் என்ன சுதந்திர நாட்டிலா இருந்தோம்? மன்னர்களிடமும் மதத்திடமும் அடைமைப்பட்டுக் கிடக்கவில்லையா? ஆங்கில மொழியாகக் கற்கப் போகிறோமா, அல்லது எல்லாமாக ஏற்றுக்கொள்கிறோமா என்பதுதான் இன்றைய கேள்வி. 



பத்து:

இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகள் 06; கடமைகள் 11.

      1976 –
ல் இந்திய அரசியல் சட்டம் பகுதி 4 -வில் 11 பிரிவுகள் (a -விலிருந்து  k முடிய)  அடிப்படைக் கடமைகளாகச் சேர்க்கப்பட்டது. கடமைகள் 11 என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்.

    அடிப்படை உரிமைகள் 06 என்று சொல்வது தவறு.  இந்திய அரசியல் சட்டத்தில் பகுதி 3 -ல் பிரிவு 12 முதல் 35 முடிய குடிமக்களின் உரிமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பாக சிலவற்றை பாடநூலில் குழந்தைகளுக்குப் பட்டியலிடுகிறார்கள். அதனாலேயே 6 உரிமைகள் என்று சொல்வது எவ்வாறு சரியாகும்? பாடநூல்கள் வேதநூல்கள் அல்ல; இரண்டும் விமர்சனத்திற்குட்பட்டதே என்கிற உண்மையை நாம் எப்போது உணர்ந்துகொள்ளப் போகிறோம்?



பதினொன்று:

மாற்றுக் கருத்துகளை ஏற்கும் மனநிலை இன்மை, முற்போக்கு முத்திரை குத்தும் மனப்பான்மை.
        கல்வியாளர் மாடசாமி  சொல்வதைப் போல ஆசிரியர்கள் ‘நிரம்பி வழிபவர்களாக’ இருப்பதை மாற்ற முடிந்தால் அது கல்வியின் வெற்றி. ஆனால் புதிய சிந்தனைகளை ஏற்காத மனநிலை, அவற்றை அறிந்துகொள்ள அல்லது விவாதிக்க இடமில்லாத மனப்போக்கு, காரண – காரியமற்ற தகவல்களை எவ்விதக் கேள்வியும் இன்றி அப்படியே ஏற்கும் தன்மை நிரம்ப விரவிக்கிடக்கிறது. சக ஆசிரியர்கள் கேள்வி கேட்பதை அனுமதிக்காதவர்கள் மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்வர்?
   புதிய கருத்துகள் வந்தால் அதெல்லாம் முற்போக்கு என்று முத்திரை குத்துகிறார்கள். தாங்கள் பிற்போக்கு அல்லது பழமைவாதிகள் என்று ஒத்துக்கொள்வதானே பொருள்! நாடு மதச்சார்பற்ற நாடாக இருப்பினும் கல்வியை மதச்சார்பற்றதாக மாற்ற முடியாத நிலையின் விளைவே இதுவாகும். இப்போது அரசே வேதக்கல்வியின் புகழைப் பாடுகிறது. அத்துடன் சேர்ந்து நாமும் தமிழ் மொழி, கலாச்சாரப் பெருமை பேசிவிட்டு போகப் போகிறோமா?

பனிரண்டு:
சொல் வேறு செயல் வேறு, இதுதான் ஆசிரியர்களின் நன்னெறியா?
    செயல் அதுவே சிறந்த சொல் என்பார்கள். ஆனால் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்னும் இரண்டக நிலையைக் படித்தவர்கள் கடைபிடிக்கலாமா? “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான், அய்யோன்னு போவான்”, என்று பாரதி வெதும்பிப் பாடியது இதைத்தானே!
  ஒருபுறம் மொழிக் கலாச்சார பெருமை; மறுபுறம் ஆங்கில வழிப் படிப்பு. சாதி முறை, மூடநம்பிக்கைகளை எதிர்ப்பதிலும் இரட்டை நிலைப்பாடு இருக்கலாமா? சமூக சமத்துவம் பேண ஏதாவது செய்ய வேண்டாமா?
பதிமூன்று:

திறந்த வெளிகழிப்பிடங்கள் பற்றிய குறும்படங்கள் சொல்வதென்ன?
    இன்று சூழலியல் சார்ந்த புரிதல் சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பாடநூல்களும் ஆசிரியர்களும் இன்னும் பழைய மாவை அரைப்பது கொடுமை. கடுந்தீங்கு விளைவிக்கும் அணுக்கழிவுகள், தொழிலகக் கழிவுகள் பற்றி ஏதும் பேசாமல், பாடநூல்களும் ஆசிரியர்களும் திறந்த வெளியில் மலம் கழிப்பதைப் பற்றியே பேசுவது வேடிக்கை. மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டமும் இதே கதைதான். 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் போபால் நச்சு வாயுக்கசிவிற்கு இழப்பீடு வழங்க முடியாதது மட்டுமின்றி, அந்தக் கழிவுகள் இன்னும் அங்கிருந்து அகற்றப்படவில்லை என்பது எவ்வளவு வேதனையானது. ‘தூய்மை இந்தியா; விற்கு இவையும் அணு உலைகழிவுகளும் தெரியப் போவதில்லை.
   கார்ப்பரேட்களும் அவரது ஆதரவாளர்களும் தெருவில் மலம், சிறுநீர் கழிக்கும் இடங்களைத் தூய்மை செய்து படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்துகொள்கிறார்கள். கழிவறைகளைக் கட்டுவது குறித்து யாரும் யோசிப்பது இல்லை. வீடுகளில் கழிவறை கட்டச்சொல்லும் இவர்கள் பொது இடங்களில் ஏன் கழிவறைகளைக் கட்டி உரிய முறையில் பராமரிக்கச் சொல்வதில்லை. வெளியே செல்லும் போது கழிவறைகளை தூக்கிச் செல்லமுடியுமா என்ன?

பதினான்கு:
புராண-இதிகாசங்களின் வழியே நன்னெறிக்கல்வி.
   இந்து மத வேதங்கள், புராணங்கள், மநு நீதிக்கதைகள், ராமயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் வழியே நன்னெறிகளைப் போதிக்க முயலவது ரொம்பவும் அபத்தம். இவை பகுத்தறிவை, மாணவர்களை மழுங்கடிப்பவை மட்டுமல்ல; பிளவு படுத்துபவையும் கூட. இதைப்பற்றி நான் முன்பு குறிப்பிட்ட கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன். அவற்றை இங்கு தவிர்க்கிறேன்.
பதினைந்து:

ஆதாரங்கள் இல்லாமல் எதையாவது சொல்லிச் செல்லும் போக்கு.
  • அன்னை தெரசா நன்கொடை வேண்டி கையேந்தியபோது கைகளில் காறித்துப்பினர். அதைத் துடைத்துக் கொண்டு, எனக்கு அளித்தது போதும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று கேட்டாராம்.
  • முன்னாள் மேற்குவங்காள முதல்வர் ஜோதிபாசுவிடம் தேசியகவி பாரதியின் சிலை அமைக்க அனுமதி கேட்டார்களாம். தேசியகவி ரவீந்தரநாத் தாகூர் மட்டுமே, இம்மாதிரி சொல்லிக்கொண்டு இங்கு வராதீர்கள், என்று சொல்லி அவர்களை விரட்டினாராம்.

      
அரசியல் கட்சிகளின் நாலந்தர மேடைப் பேச்சாளிகளைப் போல இம்மாதிரி ஆதாரமில்லாத கருத்துகளை உதிர்ப்பது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? நமது சமூகத்தில் ஆதாரப்பூர்வமான கருத்துகளைவிட இவற்றிற்கு பெருமதிப்புள்ளதை அறியலாம்.

     
பயிற்சி அனுபவத்திலிருந்து இரு உதாரணங்கள். இதைப்போன்ற ஒரு பயிற்சியின் போது பாடநூலில் பல்வேறு பிழைகள் இருக்கின்றன என்று சொன்னபோது, வல்லுநர்கள், அறிஞர் குழுவால் தயாரிக்கப்பட்ட பாடநூலில் சாத்தியமில்லை என்று பல ஆசிரியர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

      
பிறிதொரு தருணத்தில் சாலைகளில் நடந்து செல்வோர் (பாதசாரிகள்) நடைமேடை இல்லாத இடங்களில் எதிரே வரும் வாகனங்களைப் பார்த்தவாறு வலப்புறமாக நடக்கவேண்டும் என்பதே விதி என்று சொன்னபோதும், இல்லை என ஆட்சேபிக்கப்பட்டது. இடப்புறமாக செல்லும் விதி, வாகன ஓட்டிகளுக்குத் தானே தவிர பாதசாரிகளுக்கு அல்ல. ஆனால் இதுபோன்ற அவதூறுக் கருத்துகள் வெளிப்படும்போது எவ்வித சலனமும் ஏற்படுவதில்லை.


     
இவையனைத்தும் நாம் ஆசிரியர்கள் மீது வைக்கும் பல்வேறு விமர்சனங்களுக்கு வலு  சேர்ப்பதாகவே இருக்கின்றது. திராவிட, பெரியார் எதிர்ப்பு பகுத்தறிவு எதிர்ப்பாக உருக்கொள்கிறது. நாத்திகவாதமே இந்திய தத்துவமரபில் அடிப்படை என்பது நிருபிக்கப்பட்ட ஒன்று. (பார்க்க: இந்திய நாத்திகம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, வெளியீடு: பாரதி புத்தகாலயம்)
  
       
போலித் தமிழ் வெறி ஆங்கிலத்தை விலக்குகிறது. தமிழ்ப்பெருமை வெறியாக மாறுகிறது. இம்மாதிரியான உணர்ச்சிகளைத் துண்டி இளைய சமுதாயத்தை அழித்துகொள்ளும் மனநிலையில் ஆழ்த்துவது துரோகச் செயலாகவே இருக்கமுடியும்.

       
மாணவர்களுக்கு அப்துல்கலாம்ரோல் மாடலாகஇருந்துவிட்டுப் போகட்டும். பெரும்பாலான் ஆசிரியர்களுக்கு வாயாளிகள் (பிரசங்கிகள், சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள்) ‘ரோல் மாடலாகஇருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியது. இவர்கள் எதையும் படிப்பதில்லை. சமஸ்கிருத சுலோகங்களைப் போல நான்கைந்து பாடல்களை மனப்பாடம் செய்துகொண்டு, நீட்டி முழக்கி வாய்க்கு வந்தபடி எதையோ பேசியும் பணம் பார்க்கும் இவர்களிடம் எந்த உண்மைகளும் இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் சொல்வதை அப்படியே வேதவாக்காக எடுத்துக்கொள்வது அறிவீனமாகவே போகும். சமூகப் பொறுப்புமிக்க ஆசிரியர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்

       இன்னொரு புறம் மொழி,கலாச்சார தேசியர்களின் பாதிப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது. பன்மைத்தன்மை கொண்ட நமது மாநிலம் மற்றும் நாட்டிற்கும் கலாச்சாரத் தேசியம் தேவையற்றது, மக்களை பாசிச மயப்படுத்துவது. குறிப்பிட்ட சிலரை வெளியேற்றுவது இந்த வெறுப்பரசியல் நிலைப்பாடு. மாறாக காந்தி போன்றோர் வலியுறுத்திய அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசியமே நமக்குத் தேவை. இவை கடந்தகால  அனுபவங்களும் வாசிப்புகளும் நமக்கு உணர்த்துபவை.

      
இம்மாதிரியான பொய்மைகளையும் பிறர் மீதான காழ்ப்பை உமிழும் கருத்துகளையும் ஆசிரிய சமூகம் கைக்கொள்ளுமானால், அது வருங்கால சமூகத்திற்குப் பெருந்தீங்காக அமையும்.

      
பயிற்சியில் கலந்துகொண்ட விரிவுரையாளர்கள், கருத்தாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது சில கருத்துகள் மட்டுமே இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. நாகரீகம் கருதி அவர்களது பெயர்கள் இங்கு தவிர்க்கப்படுகின்றன.

(முற்றும்)