ஞாயிறு, செப்டம்பர் 16, 2018

கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!


கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!


மு.சிவகுருநாதன்


      40 ஆண்டுகாலமாக ஒரு வகுப்புப் பாடங்களைப் படிக்க வேண்டியதில்லை, பொதுத்தேர்வு நடக்கும் வகுப்பை மட்டும் படித்தால் போதும் என்கிற நிலையை மாற்றியதை வரவேற்றோம். இம்முறை அமலான ஓராண்டிலேயே +1 மதிப்பெண்கள் மேல்படிப்பிற்குத் தேவையில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கல்வியாளர்களின் கோரிக்கை த.உதயச்சந்திரன் கல்வித்துறை செயலாளராக இருக்கும்போது +1 வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்கிற முடிவும் பாடச்சுமை, மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்க 70, 90 மதிப்பெண்களுக்குத் தேர்வு, மொழி மற்றும் கலைப்பட்டங்களுக்கு 10 மதிப்பெண்கள் அகமதிப்பீடு என்கிற நல்ல நடைமுறைகள் புகுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மொழிப்பாடங்களுக்கு ஒரு தாள் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. 

    பின்னாளில் உதயச்சந்திரன் பதவியிறக்கப்பட்டு, பள்ளிக்கல்வித்துறைக்கு முதன்மைச் செயலாளர் நியமிக்கப்பட்டதும் சென்னை உயர்நீதிமன்ற நீதிமன்ற உத்தரவால் பாடத்திட்டச் செயலராக்கப்பட்ட கொடுமையும் நடந்தது. பாடத்திட்டப் பணிகள் முடிவடைய இன்னும் இரண்டாண்டுகள் உள்ள நிலையில் உதயச்சந்திரன் தொல்லியல் துறை ஆணையராக மாற்றப்பட்டது, இப்போது எடுக்கப்பட்டிருக்கும் +1 மதிப்பெண்கள் மேற்படிப்புக்குத் தேவையில்லை என்பது கல்வியின்  எதிர்காலத்தை பாழடிப்பதாகவே உள்ளன. பள்ளிக் கல்வியைச் சீரமைக்கும் நடவடிக்கைகளைக் கைவிடுவது மீண்டும் பழைய நிலைமையும் கல்விக்கொள்ளையையும் தொடர அனுமதிப்பது பேராபத்து. 

    கல்வி வியாபாரிகள், கல்விக் கொள்ளையர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய இயக்கங்கள் இப்புதிய முடிவை வரவேற்று, ‘கல்வியாளர்கள்’ என்னும் போர்வையில் அறிக்கை விடுகின்றனர். +1 பாடங்களைச் சரியாகப் படிக்க வேண்டியதில்லை என்னும் நிலை உயர்கல்வியைப் பாதிக்கும். பொறியியல் படிப்புகளில் மாணவர்களது தோல்விநிலை, தற்கொலைகள் ஆகியன மீண்டும் தொடர்கதையாகும். 

   தனியார் சுயநிதிப்பள்ளிகளில் கல்விக் கொள்ளைக்கும் அவர்களது +1 பாடத்தைத் தவிர்த்து ஏமாற்றும் போக்கிற்கு வரவேற்பு அளிக்கும் இம்முடிவு திரும்பப் பெறப்பட்ட வேண்டும். 

   “நீட்” போன்ற போட்டித்தேர்வுகளில் இரு ஆண்டு பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும். +1,+2 என்பது தனித்தனி வகுப்பல்ல; ஒருங்கிணைந்த படிப்பு என்பதை உணர மறுக்கும் இந்த ‘போலிக் கல்வியாளர்கள்’ இளநிலைக் கல்லூரி கோரிக்கை வைக்கிறார்களே, ஏன்? மூன்றாண்டு இளங்கலைப் படிப்பிலும் இரண்டாண்டு முதுகலைப் படிப்பிலும் இறுதியாண்டு மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ள சொல்வார்களா, இவர்கள்? உயர்கல்வியில் பிற படிப்புகள் அனைத்திலும் இம்முறையைப் பின்பற்றலாமே! செய்வார்களா? 

   கல்வி, மாணவர்கள், சமூகம் ஆகிய பெரும் பாதிப்புகளுக்கும் உள்ளாகும் போது எவ்வித எதிர்ப்பையும் காட்டாத இவர்கள்  மாணவர்களுக்கு பாடச்சுமை, மன அழுத்தம், மூன்றாண்டுகள் தொடர் பொதுத்தேர்வு என்றெல்லாம் பேசுவது மிகவும் போலியானது மட்டுமின்றி, அபத்தமானதும் கூட. எடுத்துக்காட்டிற்கு ஒன்று மட்டும்.

   1 முதல் 9  வகுப்பு முடிய முப்பருவ முறை, ஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு (CCE), 60 மதிப்பெண்கள் தொகுத்தறி மதிப்பீடு ஆகிய முறைகளில் படிக்கும் மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் மட்டும் அறிவியல் பாடம் நீங்கலாக பிற பாடங்களுக்கு 100 மதிப்பெண்கள் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்படுவது, அகமதிப்பீடு மறுப்பு, +1,+2 வகுப்புகளுக்கு மொழிப்பாடம் ஒரு தாளாகக் குறைக்கப்பட்டபோதும் 10 ஆம் வகுப்பிற்கு இன்னும் இரு தாள்களாக தொடர்வது, வழக்கத்திற்கு மாறாக முழுப்பாடநூலையும் ஆண்டு இறுதியில் முழுமையாகப் படிப்பது  ஆகியவை மாணவர்களிடம் மன அழுத்தத்தை உண்டு பண்ணுமா, பண்ணாதா என்பதை இந்தப் ‘போலிக் கல்வியாளர்கள்’ விளக்கவேண்டும்.  பத்தாம் வகுப்பு மாணவர்களின் இந்தச் சுமையைக் கண்டுகொள்ளாத இவர்கள் +1 மாணவர்களின் சுமை, அழுத்தம் குறித்துப் பேசுவது கல்வி வியாபாரம், சுயநலம் சார்ந்த முடிவு என்பதில் அய்யமில்லை. 

1 கருத்து:

சிகரம் பாரதி சொன்னது…

சுயநலம் தவிர்த்து பொதுநலம் நோக்கும் ஆட்சி அமைந்தாலே ஒழிய மக்கள் அதல பாதாளத்தில் வீழ்வது உறுதி. கட்டுரை சிறப்பு.

உங்கள் பதிவு எங்கள் தளத்தில்:
சிகரம் CLICK : மு.சிவகுருநாதன் | கட்டுரை | கல்விக் கொள்ளைக்கு வரவேற்பு!

கருத்துரையிடுக