வெள்ளி, டிசம்பர் 10, 2010

33 -வது புத்தகக்கண்காட்சி (2010 ) சில நினைவுகள் -மு.சிவகுருநாதன்

33-வது சென்னை புத்தகக் கண்காட்சி – சில நினைவுகள்
– மு. சிவகுருநாதன்







    சென்னை புத்தகக் கண்காட்சி ‘கார்ப்பரேட்’ மயமாகிப் போனாலும் புத்தக விரும்பிகளுக்கு அதில் பங்கேற்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒவ்வோர் ஆண்டும் பொங்கலின் போது புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவதால் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு அது பெருத்த சிரமத்தை உண்டாக்குகிறது.
    
       10 நாட்கள் கண்காட்சி நடைபெற்றாலும் இறுதி நாள் கூட பல்வேறு புதிய நூற்கள் வெளிவருவதுண்டு. அந்த நாட்களில் கண்காட்சியில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்புவது பண்டிகைக்காக ஊர் திரும்பும் கூட்டம் சேர்ந்து கொள்வதால் மிகுந்த சிரமமானதொன்றதாக ஆகிவிடுகிறது.

        இந்த சிரமங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் 33-வது சென்னை புத்தகக் கண்காட்சி டிசம்பர் 2009 இறுதியில் தொடங்கி ஜனவரி 2010ல் பொங்கலுக்கு முன்னதாகவே முடிந்து போனது ஒரு வகையில் மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது.

       புத்தக வெளியீடு சந்தைமயமான இன்றைய ‘கார்ப்பரேட்’ சூழலில் ஏதேனும் சிறிய பதிப்பகங்கள் வெளியிடும் அரிய புத்தகங்களைத் தேடி வாங்க முயலும் வாசகனின் வேலை தேடல் மிகுந்ததாகும்.
இக்கண்காட்சியில் தோழர். லோகநாதனுடன் (புலம் – சென்னை) ஆறு நாட்கள் தங்கி பார்வையிடக் கூடிய ஒரு சூழல் வாய்த்தது. சென்னையின் நெரிசலைப் போலவே கண்காட்சியும் நெரிசலாகவே இருந்தது. எதிரே உள்ள கூட்ட அரங்கில் பெரும் புள்ளிகள் கலந்து கொள்ளும் அன்று வாசலிலிருந்து உள்ளே நடந்து செல்லவே மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. அந்த வி.ஐ.பி.க்களைப் பார்க்க வரும் கூட்டம் புத்தகங்களை வாங்கும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. பிறகு ஏன் அவர்களை அழைத்து வெளியே திருவிழா நடத்துகிறார்கள் என்பது விளங்கவில்லை.

       கண்காட்சி அரங்கினுள் தேநீர் வாங்கிக் கொண்டு ஒதுங்கிய என்னை ஒரு கூட்டம் உள்ளேயிருந்து தள்ளிக் கொண்டு ஓடியது. நல்லவேளை மிதிபடாமல் தப்பித்தேன். அன்று சினிமா நடிகர் கமல்ஹாசனைப் பார்க்கத்தான் அந்தக் கூட்டம் ஓடியதை பிறகு அறிந்து கொள்ள முடிந்தது. இவர்கள் எல்லாம் வரும் அன்று உள்ளேவிட வெளியே கூட்டம் நிரம்பி வழிகிறது. புத்தகம் வாசிப்பு சம்மந்தப்பட்டது. வைகோ, கமல்ஹாசன் போன்ற பெரும்புள்ளிகளை அழைத்து திருவிழா நடத்துவது புத்தக விற்பனையையும் வாசிப்புப் பழக்கத்தையும் எள்ளளவும் உயர்த்தாது என்பதை பாபாஸி உணர வேண்டும்.

        சிறிய பதிப்பகங்கள் தனக்கென்று ஒரு ஸ்டால் பிடித்து தங்களது நூற்களை விற்பனை செய்வதென்பது மிகவும் சிரமமான காரியமாகும். ‘உன்னதம்’ கெளதம சித்தார்த்தன் தனது கடையில் ‘உன்னதம்’ இதழ் மற்றும் தனது வெளியீடுகளை கண்காட்சிப்படுத்தியிருந்தார். ‘உன்னதம்’ இதழுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்தார்.

       மேலும் சில சிறிய பதிப்பகங்கள் பெரிய பதிப்பகங்களுக்கான  
முகவர்களாக தங்களை மாற்றிக் கொண்டிருந்தனர். ‘நவீன விருட்சம்’ கடை முழுவதும் ‘கிழக்கு’ பதிப்பக நூற்கள் நிரம்பியதாக இருந்தது. இதைப் போல பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ‘கிழக்கு’ பதிப்பகத்திற்கு நான்கு பெயர்களில் மொத்தம் 12 ஸ்டால்கள். இதைத் தவிர சிறிய பதிப்பகங்கள் பலவற்றின் பெயரில் ‘கிழக்கு’ பதிப்பக நூற்கள் குவிக்கப்பட்டிருந்தன. நல்ல நூற்கள் என்றால் பரவாயில்லை; ஒன்றிரண்டைத் தவிர பெரும்பாலும் குப்பைகளாகவே இருந்தன.
சிறிய பதிப்பகங்கள் பெரியவர்களுக்கு முகவர்களாக மாறாமல் ஒன்றிரண்டு பதிப்பகங்கள் இணைந்து ஒரு ஸ்டால் மூலம் தங்களது நூற்களைக் காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும். இவர்களை அனுமதிக்கும் பாபாசியும் சிறிய பதிப்பகங்களும் இது குறித்து யோசிக்க வேண்டும். ஒரே பதிப்பகத்தின் நூற்களை பணம் இருக்கின்ற ஒரு காரணத்திற்காக எல்லா இடங்களிலும் குவித்து வைப்பதை அனுமதிக்கக் கூடாது.
    
      சமையல், ஜோதிடம், ஆன்மீகம், எண் கணிதம், சுய முன்னேற்றம் போன்ற வழக்கமான விற்றுத் தீர்க்கின்ற நூற்கள் வரிசையில் பிரபாகரன் படம் போட்ட நிறைய புத்தகங்களை பல்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருந்தன. ஈழ மக்களின் இறுதிப் போர் துயரங்களை காசாக்கும் மனநிலையை மட்டும் இவை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
உயிர்மை, காலச்சுவடு போன்ற பெரும் பதிப்பகங்கள் குளிரூட்டப்பட்ட அரங்குககளில் டிசம்பர் 2009 முதலே நூற்றுக்கணக்கான நூற்களை வெளியிட்டு வந்தன. இதற்கு ஊடகங்கள் மூலம் செய்யப்பட்ட அபரிமிதமான விளம்பரங்களும் சாரு நிவேதிதா மூலம் கிடைத்த கூடுதல் விளம்பரமும் எளிய வாசகனின் கவனத்தை சிதறடித்ததை உணர முடிந்தது. ஆனால் இவர்களது குயுக்தியும் வியாபார தந்திரங்களும் அதிக நாட்கள் நீடிக்க வாய்ப்பு இல்லை. இவையிரண்டு போன்ற பெரிய பதிப்பகங்கள் நான்கு ஸ்டால்களில் இருபுற வழியுடன் கடைகளை அமோகமாக நடத்திக் கொண்டிருந்தனர்.

       சிறிய பதிப்பகங்களுக்கு ஸ்டால் கிடைப்பதே பெரும்பாடு. இதில் நூல் வெளியீட்டு விழாக்கள் வேறு நடத்த முடியுமா? புலம், பயணி போன்ற சிறிய வெளியீட்டு நிறுவனங்கள் தங்களது கண்காட்சிக் கடையிலேயே மாலை நேரங்களில் நூற்களை வெளியிட்டதையும் காண முடிந்தது.
அந்த வகையில் பயணி வெளியீடான “முறிந்த பனை :- இலங்கையில் தமிழர் பிரச்சனை – உள்ளிருந்து ஒரு ஆய்வு” நூலை தோழர் ராமாநுஜம் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன்.

        விளிம்பு நிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும்’ என்ற நூலை நான் வெளியிட ஹோமியோபதி மருத்துவர் தோழர் ராமசாமி பெற்றுக் கொண்டார். இது போன்ற நிகழ்வுகளை ஆங்காங்கே காணும்போது மகிழ்ச்சியாக இருந்தது.

       படிக்கின்ற புத்தகங்கள் குறித்து எனது வலைப்பூ (BLOG) பக்கத்தில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அந்த ஆர்வத்தை எனது சோம்பேறித்தனம் முற்றிலுமாக தடுத்து விடுகிறது. அ. மார்க்ஸ் அடிக்கடி சொல்வார், “எழுதுவது மிகவும் எளிமையான ஒன்று” என. இனியாவது இப்பக்கங்களில் படித்த நூற்கள் பற்றியாவது சில பக்கங்களை எழுத முடிவு செய்துள்ளேன்.

        இக்கண்காட்சியில் வாங்கிய சில நூற்களின் பட்டியலை மட்டும் இங்கு தருகிறேன். இவை பற்றிய விமர்சனங்களைப் பின்னர் பார்க்கலாம்.

01. முறிந்த பனை :- இலங்கைத் தமிழர் பிரச்சனை – உள்ளிருந்து ஒரு ஆய்வு – பயணி
02. ஒகோனிக்கு எதிரான யுத்தம் – பயணி
03. ஈ.வெ.ராமசாமி என்கிற நான் (தொ) 1,2 – பாரதி
04. அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு – பாரதி
05. நேரு வழக்குகள் – பாரதி
06. பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும் – பாரதி
07. என் பெயர் சிவப்பு – ஓரான்பாமுக் – காலச்சுவடு
08. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – காலச்சுவடு
09. இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு…… – கிழக்கு
10. தேசியம் பற்றிய மார்க்சியக் கோட்பாடு – விடியல்
11. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு – சந்தியா
12. தியாகு – ஷோபாசக்தி – முரண் அரசியல் உரையாடல் – கொலைநிலம் – வடலி
13. முதலீட்டியமும் மானுட அழிவும் – புலம்
14. பேரினவாதத்தின் ராஜா – புலம்
15. தமிழகத்தில் பிறமொழியினர் – ம.பொ.சி. – புலம்
16. ஹோமரின் பள்ளியறை – ஒடிஸி – புலம்
17. சிறுபான்மையினர் தொடர்பான ஆணையங்கள் – முரண்
18. பயங்கரவாதம், இந்திய அரசு, காவல் துறை – முரண்
19. விளிம்பு நிலை ஆய்வுகளும் தமிழ்க் கதையாடல்களும் (தொ) – புலம்
20. தலித் அரசியல் – புலம்
21. ஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும் – புலம்
22. இந்திய அரசின் கல்வி – உணவு உரிமைச் சட்டங்கள் – புலம்
23. அரசு – இறையாண்மை – ஆயுதப் போராட்டங்கள் – புலம்
24. லால்கர் – ஒரு மூன்றாவது பார்வை – புலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக