வியாழன், டிசம்பர் 23, 2010

கல்வி உரிமைச் சட்டம்: என்ன செய்யப் போகிறது ? - மு. சிவகுருநாதன்

கல்வி உரிமைச் சட்டம்:  என்ன செய்யப் போகிறது ?
                                                        
                                                           - மு. சிவகுருநாதன்
   

     நாடு விடுதலையடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009’( Right of Children to Free and Compulsory Education – Act – 2009) இவ்வாண்டு ஏப்ரல் 01, 2010 அமலுக்கு வந்திருக்கிறது.  இச்சட்டத்தின் உள்ளே செல்வதற்கு முன்பு நம் நாட்டின் கல்வி நிலையை கொஞ்சம் தொகுத்துக் கொள்வோம்.

     இந்து மதம் பிராமணர் தவிர பிறர் கல்வி கற்பதை வேதங்கள் உள்ளிட்ட பிராமண சட்ட முறைகளைக் கொண்டு அறவே தடை செய்தது.  பவுத்த, சமண மதங்களின் எழுச்சி இந்திய வருணாஸ்ரம வரலாற்றில் முதல் புரட்சியாக அமைந்து பிறருக்கும் கல்வி கிடைக்க வாய்ப்பளித்தது.  வட இந்தியாவில் அசோகர், கனிஷ்கர், ஹர்ஷர் போன்ற ஒரு சில அரசர்களின் ஆதரவில் பவுத்தமும் சமணமும் செழித்தது கொஞ்சகாலந்தான்.  பின்னர் குப்தர்களின் ‘இருண்டகாலத்தில்’ மீண்டும் இந்து மதம் ‘புத்துயிர்ப்பு’ பெற்றது.

     தமிழகத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பவுத்த - சமண சமயங்கள் செல்வாக்கு பெற்றிருந்தது.  ‘பள்ளி’ என்ற சொல் கூட சமணத்தின் கொடைதான்.  தமிழர்கள் இன்றும் பெருமை பேசும் ராஜராஜன் போன்றோர் முன்னெடுத்தது வேதக்கல்வி தானே தவிர வேறில்லை.

     காலனியாதிக்க காலத்தில் செயல்பட்ட கிருத்தவ சமயப் பரப்பூழியர்கள் மூலம் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டாலும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.  இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டும் சில சுதேசி தனியார் நிறுவனங்கள் கல்விக் கூடங்களை நடத்தி வந்தன.

     ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் அறியாமையைப் போக்கி பண்பாட்டை உயர்த்தவும், கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்து 1813 ஆம் ஆண்டு சிறப்புச் சட்டம் மூலம் கல்விக்கு மானியமாக 10,000 பவுண்டுகளை வழங்கினர்.  இந்த மானியத்தைக் கொண்டு வைதீக பார்ப்பனர்கள் சமஸ்கிருத சாஸ்திரங்களை சொல்லிக் கொடுக்க முயன்றபோது ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்கள் அனைவரும் கல்வியில் வடிகட்டும் கொள்கையை  (Filtration Theory) ஆதரித்தனர் என்பதும் உண்மை.

     1820இல் சர் தாமஸ் மன்றோ சென்னை மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட போது “கல்விக்கு செலவு செய்யும் தொகை அழிவில்லாதது”, என்றார்.  1822 இல் கல்விக் குழுவும் 1823 இல் பொதுக்கல்வி இயக்குநரகமும் 1840இல் கல்வி வாரியமும் அமைக்கப்பட்டது.  1830இல் பொதுக்கல்வி இயக்குநர் குழு “ஓய்வு நேரத்தையும் நாட்டு மக்களின் மீது இயல்பான செல்வாக்கையும் கொண்டுள்ள மேல்சாதி மக்களுக்கு அளிக்கப்படும் கல்வி, எண்ணிக்கையில் அதிகமாக உள்ள அடித்தட்டு சாதியினருக்கு அளிப்பதை காட்டிலும் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியும்” என்று கூறியது.  மேல் சாதியினருக்கு மட்டும் கல்வி; அவர்கள் தங்களுக்கு கீழுள்ள அடித்தட்டு மக்களுக்கு கல்வி தருவார்கள் என்பதே அக்கால அரசு மற்றும் சீர்திருத்த வாதிகளின் எண்ணமாக இருந்தது.  இதனை வடிகட்டும் கொள்கை (Filtration Theory) என்றார்கள்.

     கவர்னர் ஜெனரல் அமைச்சரவை சட்டக்குழு உறுப்பினராக இருந்த தாமஸ் பேபிங்டன் மெக்காலே பிரபு 1835 இல் ஆங்கிலேய அரசின் கல்விக் கொள்கையை வகுத்தார்.  இவர் பகுத்தறிவிற்கு ஒவ்வாத மோசடியான சமஸ்கிருத இலக்கியங்களை கற்றுக் கொடுக்க நாட்டின் நிதியைச் செலவிட முடியாது என்றார்.  இக்கொள்கை, ரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியராகவும், அறிவில், பண்பாட்டில், கருத்தில், சுவையில் ஆங்கிலேயராகவும் உள்ள ஒரு வர்க்கம் உருவாவதை எதிர்பார்த்தது.  1836 அக்டோபர் 12இல் மெக்காலே தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில், “நமது கல்வித் திட்டம் கடைப்பிடிக்கப்படுமானால் இன்னும் 30 ஆண்டுகளில் வங்காளத்தில் சிலை வழிபாடு ஒழிந்து விடும் என்றும், மதத்தைப் பரப்பாமல் மத உரிமைகளில் தலையிடாமல் இயல்பான அறிவு வளர்ச்சியால் இது நடக்கும்” என்றும் எழுதுகிறார்.  ஆனால் இன்று வரை இது நடக்கவேயில்லை.

    “கல்வியும் பண்பாடும் உயர்ந்த சாதி மக்களிடமிருந்து கீழ்த்தட்டு மக்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.  அப்போதுதான் சமூகத்திற்கு ஒரு புதிய சக்தி கிடைக்கும்.  ஆனால் எப்பொழுதுமே அது கீழ்த்தட்டு மக்களிடமிருந்து மேல்தட்டு மக்களுக்குக் கொண்டு செல்லக் கூடாது”, என்று 1857-1858 ஆம் ஆண்டிற்கான பொதுக் கல்வி இயக்குநரின் அறிக்கை வடிகட்டும் கொள்கையை மீண்டும் வழி மொழிகிறது.

    கல்வி வளர்ச்சியின் ‘மகாசாசனம்’ என்றழைக்கப்பட்ட சார்லஸ் வுட் அறிக்கை 1854 இல் வெளியானது.  இதன்படி தாய்மொழி வழிக்கல்வியும் ஆங்கிலம் ஒரு பாடமாகவும் போதிக்கப்பட்டாலும் அடித்தட்டு மக்களுக்கும் தொடக்கக் கல்விக்கும் எதுவும் நடக்கவில்லை.

      1882இல் வில்லியம் ஹண்டர் தலைமையிலான இந்திய கல்வி ஆய்வுக்குழு (Hunter Commission) இந்தியாவெங்கும் பயணம் செய்து கல்வி பற்றிய விரிவான ஆய்வு மேற்கொண்டது. இந்த ஹண்டர் குழுவிடம் விண்ணப்பம் அளித்தவர்களுள், மராட்டியத்தில் தலித்களுக்காகவும், பெண்களுக்காகவும் பள்ளிகள் தொடங்கி நடத்திய முதல் இந்தியரான மகாத்மா ஜோதி ராவ் புலேயும் ஒருவர்.  1882 அக்டோபர் 19 அன்று அவர் அளித்த விண்ணப்பத்தில், அடித்தட்டு மக்களிடம் வசூலிக்கப்படும் வரி  வருவாயைக் கொண்டு மேல்தட்டு மக்களின் கல்வி நலன்களுக்கு அரசு பணத்தைச் செலவிட்டு வருகிறது என்றும், தாழ்த்தப்பட்டோர் மத்தியில் கல்வியைப் பரப்ப மேல் தட்டினர் முயற்சி எடுப்பார்கள் என்ற கற்பனையான நம்பிக்கையில் அரசாங்கம் இவ்வாறு செய்கிறது என்றும் கூறியிருந்தார்.

      பனிரெண்டு வயது வரை தொடக்கக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும் என்றும், தொடக்கக் கல்வி மனநிறைவு அளிக்கும் விதத்திலும், வலுவான அடிப்படையிலும் எதிர்கால வாழ்க்கைக்குப் பயனுள்ள வகையிலும் இருக்க வேண்டும் என்றும் புலே வலியுறுத்தினார்.  கல்வி வளர்ச்சி இல்லாத அடித்தட்டு மக்களுக்கு சிறப்பான உதவித் தொகைகளை அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும், பெண்கல்விக்கு உரிய முக்கியத்துவம் அளித்து தாராளமான அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மிக விரிவான விண்ணப்பத்தை ஹண்டர் குழு முன்பாக ஜோதிராவ் புலே அளித்துள்ளார்.

      1911இல் கோபாலகிருஷ்ண கோகலே அன்றைய மத்திய சட்டசபையில் தொடக்கக்கல்வி மசோதாவைக் கொண்டு வந்தார்.  அன்று சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த நிலப்பிரபுக்களும், சீர்திருத்தவாதிகளும் இம்மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்தனர்.  இங்குள்ள பண்ணையார்களைப் போல, எல்லாரும் பள்ளிக்குச் சென்றால் மாடு மேய்க்கவும், வயல் வேலை செய்யவும் ஆட்களுக்கு எங்கே செல்வது என்ற கருத்தைத்தான் ஆதிக்கச் சமூகம் தன்னுள் கொண்டிருந்தது.

     1935 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய அரசியல் சட்டப்படி கல்வி மாநில அரசின் கட்டுப்பாட்டில் விடப்பட்டது.  சர் ஜான் சார்ஜன்ட் அறிக்கையின்படி 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி என்பது வரையறுக்கப்பட்டது.  1937இல் நடைபெற்ற மாகாண சட்ட சபைகளில் காங்கிரஸ் 9 இடங்களில் பெருவெற்றி பெற்றபோது காந்தி தமது ஆதாரக்கல்வியை நிறைவேற்றவும் அதற்குரிய நிதி ஒதுக்கவும் வேண்டினார்.  ஆனால் காங்கிரஸ் நிதி நிலைமையை காரணம் காட்டி அதற்கு உடன்பட மறுத்து விட்டது.

     1948-1949 களில் நடைபெற்ற அரசியல் சாசன விவாதங்களின் போது 0-14 வயது வரை கட்டயாக் கல்வி அளிக்க வேண்டும் என்பதற்கு பெரும் எதிர்ப்பிருந்தது.  இந்த வயதெல்லை குறைக்க சிலர் விரும்பிய போது அம்பேத்கர் அதை எதிர்த்தார்.  அரசுக்கு சுமை கூடாது என்பதாலும், அரசு தாமே முன் வந்து செய்யும் என்பதாலும் 0-14 வயது வரை இலவச கட்டாயக் கல்வி என்பது அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளில் சேர்க்காமல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளில் (Directive Principles to State Policy)  சேர்க்கப்பட்டது.  இதுவே அரசு கல்வி உரிமையை தட்டிக் கழிக்க பெருவாய்ப்பாக அமைந்தது.

    1966இல் கோத்தாரி கல்விக்குழு எல்லா வகுப்பாருக்குமான பொதுப்பள்ளியை பரிந்துரை செய்தது.  இதன் வழியே அருகாமைப் பள்ளிகள் (Neighbourhood Schools) என்ற கருத்தாக்கம் பேசப்பட்டது.      இதனடிப்படையில் 1968இல் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு அனைவருக்கும் கல்வி வலியுறுத்தப்பட்டது.  1986இல் இக்கொள்கைக்கு எதிராக புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு பொதுப்பள்ளி முறை சவக்குழிக்கு அனுப்பப்பட்டு மேட்டுக் குடியினருக்கான அரசு நவோதயா, வித்யாலயா பள்ளிகளும் சுயநிதிப் பள்ளிகளும் உருவாக வழி வகுத்தது.  எனவே, இந்தியாவில் கட்டாய இலவசக் கல்வி என்பது கானல் நீராகிப் போனது.

    1993 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்திற்கெதிரான உன்னிகிருஷ்ணன் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அ. மார்க்ஸ் சொல்வது போல வாராது வந்த மாமணியாக அமைந்தது.  இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது முடியும் வரை கல்வி ஓர் அடிப்படை உரிமையாகும்.  இந்திய அரசியல் சட்டத்தின் 21 வது பிரிவு இவ்வுரிமையை வழங்குகிறது என்பதே தீர்ப்பின் சாரமாகும்.

     இலவசக் கல்வி என்பது கல்விக் கட்டணம் மற்றும் வேறு எந்தவிதமான கட்டணமோ இல்லாத கல்வி மட்டுமல்ல; பாடநூற்கள், எழுதுபொருட்கள், சீருடை, கற்றல் கருவிகள் உள்ளிட்டதே இலவசக் கல்வி என முகிராம் சைக்கியா தலைமையிலான கல்விக்குழு வரையறை செய்தது.

    ஒன்பது ஆண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்து மத்திய அரசு பல்வேறு தரப்பு கோரிக்கைகளின் விளைவாக 2002 டிசம்பரில் 86 வது அரசியல் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது.  இதன்படி அரசியல் சட்டத்தின் 21 வது பிரிவில் 21 அ என்ற புதுப்பிரிவும் அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் 45 வது பிரிவிற்கு கூடுதல் விளக்கமும் சொல்லப்பட்டது.  அரசு இயற்றும் சட்டம் ஒன்றின் மூலம் கட்டாய இலவசக் கல்வி என்கிற நிபந்தனையுடன் இத்திருத்தம் செய்யப்பட்டது.

     2003 அக்டோபரில் இச்சட்ட மசோதா மக்கள் கருத்து மற்றும் விமர்சனங்களுக்காக இணையத்தில் வெளியிடப்பட்டு, அதன் பிறகு தயாரிக்கப்பட்ட இலவச கட்டாயக் கல்வி மசோதா - 2004  என்று பெயரிடப்பட்ட புதிய மசோதா 2004 இல் இணையத்தில் வெளியிடப்பட்டது.

     2005 ஜூனில் மத்திய கல்வி நிர்வாக வாரியம் (CABE) அமைத்த குழுவொன்று வரைவு மசோதாவைத் தயாரித்து மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது.  மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதை சோனியாகாந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி, அக்குழு பிரதமருக்கு அனுப்பியது.  மத்திய நிதிக்குழு 2006 ஜூலையில் நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி நிராகரித்து, அவசியமான நடவடிக்கைகளுக்காக மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது.

      இறுதியாக, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 (Right of Children Free and Compulsary Education – 2009) இந்தியா நாடாளுமன்றத்தினால் ஆகஸ்டு 04, 2009 இல் நிறைவேற்றப்பட்டது.  இம்மசோதா - மாநிலங்களவையில் நிறைவேறியபோது 250 உறுப்பினர்களில் வெறும் 54 பேர்தான் அவையில் இருந்தனர்.  அங்கு எவ்வித விவாதமுமின்றி குரல் வாக்கெடுப்புடன் (Voice Vote ) இம்மசோதா நிறைவேற்றப்பட்டதைப் பார்க்கும் போது நமது ஆட்சியாளர்களின் கல்வி குறித்த அக்கறை நமக்குத் தெளிவாகிறது.  2009 ஆகஸ்டு 26இல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற இச்சட்டம் 2010 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.  உலகளவில் சிறார் கல்வி உரிமையை உறுதி செய்யும் நாடுகளின் பட்டியலில் 135 வதாக இந்தியா தன்னை இணைத்துக் கொண்டது.

      இச்சட்டத்தில் ஒன்றிரண்டு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும் ஏற்கனவே உள்ள சட்டங்கள், கொள்கைகள், கருத்தாக்கங்கள் போன்றவற்றை மறுதலிப்பதாகவும், மீறுவதாகவும் அமைந்திருப்பது கல்வியாளர்களால் சுட்டப்படுகிறது.  மேலும், இச்சட்டம் நிறைவேற்றலிலும் நிறைய குளறுபடிகள் உள்ளன.

     இச்சட்டம் கட்டாய இலவசக் கல்விக்காக வயதெல்லை 6-14 என்கிறது.  அரசியல் சட்ட வழிகாட்டு நெறிமுறை பிரிவு 45 சொல்வது 0-14 வயது குழந்தைகளைத்தான்.  இச்சட்டம் 0-6 வயதுக் குழந்தைகளின் உரிமைகளைப் பறிக்கிறது.  3 லிருந்து 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முன்பருவ மழலையர் கல்வி உரிமையை இச்சட்டம் கேலிக் கூத்தாக்குகிறது.

     மேலும், ஐக்கிய நாடுகளின் குழந்தை உரிமைச் சாசனம் (Convention on the Rights of the Child) 18 வயது வரை குழந்தைகள் எனச் சொல்கிறது.  அந்த உடன்படிக்கையில் கைசாத்திட்டிருக்கும் நாடான இந்தியா 15-18 வயதுக் குழந்தைகளின் உரிமைகளை இச்சட்டம் மூலம் காற்றில் பறக்க விடுகிறது.  மழலையர் கல்வி முதல் பள்ளிக் கல்வி வரை (0-18 வயது எல்லை) கட்டாய இலவசக் கல்வியை உறுதி செய்யாதது கண்டிக்கத் தக்கது.  பிரேசில், மெக்சிகோ, சீனா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் 18 வயது வரை கட்டாய  இலவசக்கல்வி அளிக்கப்படுகிறது.  “கல்வி உரிமை என்பது உயிர்வாழ் உரிமையின் பிரிக்க இயலா அம்சம்”, என்று உச்சநீதிமன்றம் கூறியதை கண்டுகொள்ளாமல் 0-6 வயதெல்லையை மறுத்து 6-14 என்று நிர்ணயம் செய்திருப்பது அரசியல் சட்ட மோசடி மட்டுமல்ல; நீதிமன்ற அவமதிப்பும் கூட.

      அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் (சுயநிதிப்பள்ளிகள்), சிறப்புப் பள்ளிகள் (நவோதயா, கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசால் நடத்தப்படும் பள்ளிகள்) போன்ற ஏற்றத் தாழ்வான கல்வியமைப்பை இச்சட்டம் உறுதி செய்கிறது.  அத்துடன் அரசுப் பள்ளிகள் 6-14 வயதுக் குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வியை அளிக்கும்.  அரசு உதவிபெறும் பள்ளிகள் 25% குழந்தைகளுக்கு மட்டும் கல்வியளிக்கும்.  சுய நிதிப் பள்ளிகளும், சிறப்புப் பள்ளிகளும் அருகாமையில் வசிக்கும் அடித்தட்டு மக்களின் குழந்தைகளில் 25% ஐ 2011இல் முதல் வகுப்பில் சேர்த்து 8 ஆண்டுகளில் 14 வயது வரை கட்டயா இலவசக் கல்வி அளிக்கும்.  இந்த சட்டம் 2010 ஏப்ரலில் நடைமுறையில் இருந்தாலும் முதல் பயன்பாடு 2011இல் தான் கிடைக்கிறது.  இதுவே மிகவும் கேலிக்குரிய செய்தி.  அரசு உதவி பெறாத பள்ளிகளில் சேர்க்கப்படும் 25%குழந்தைகளின் கல்விச் செலவை அரசு அப்பள்ளிக்கு அளிக்கும்.

    மத்திய அரசால் நடத்தப்படும் நவோதயாப் பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறாத பள்ளிகளைப் போன்று 25% அடித்தட்டு குழந்தைகளைப் படிப்படியாகச் சேர்த்தல் போதும் என்று சொல்வது எவ்வளவு பெரிய வன்முறை?  அரசுப் பள்ளிகளில் உள்ளதைப் போன்று அனைத்துக் குழந்தைகளையும் சேர்ப்பதிலிருந்து இப்பள்ளிகளுக்கு ஏன் விதி விலக்கு அளிக்கப்படுகிறது என்பது நமக்குப் புரிகிறது.  இந்தச் சிறப்புப் பள்ளிகளில் ஒரு மாணவருக்கு பத்தாயிரத்துக்கு மேல் செலவு செய்கிறது அரசு.  ஆனால் மாநில அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவனுக்கு சுமார் ஆயிரம் ரூபாய்தான் செலவாகிறது.  இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரிடமிருந்தும் வரியைப் பெற்று அதை மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டும் செலவு செய்வதற்காக, அந்தப் பள்ளிகளுக்கு விதிவிலக்கு அளிப்பது சமூகநீதியில் அடங்குமா?

       தனியார் பள்ளிகள் 25% இடங்களை மட்டும் அடித்தட்டுக் குழந்தைகளுக்கு ஒதுக்கிவிட்டு மிச்சமிருப்பதை எப்படி வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்றால் அவர்கள் அந்த இடங்களை அதிக விலைக்கு விற்கும் போது அப்பள்ளிகளைக் கட்டுப்படுத்த சட்டத்தில் ஒரு வழியும் இல்லை.  தமிழகத்தில் நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணங்களை இன்று வரை செயல்படுத்த முடியவில்லை என்பதை நாம் அறிவோம்.  மேலும், இத்திட்டத்தைச் செயற்படுத்த காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.  எனவே, இன்னும் 63 ஆண்டுகளை கூட கடத்திவிடலாம்.  மண்டல் கமிஷன் ஒதுக்கீடான 27%ஐ மூன்று ஆண்டுகளில் தலா 9% என பிரித்தவர்களாயிற்றே!  அதைப்போல இந்த 25%ஐக்கூட 5 ஆண்டுகளில் தலா 5% என்று கூட அரசு திருத்தம் செய்யக்கூடும்.  இத்திட்டத்தின் அமலாக்கத்திற்கான நிதி ஒதுக்கீட்டைப் பொருத்துத்தான் நிறைவேற்றம் அமையும்.  இந்த 25ரூ அடித்தட்டு குழந்தைகள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணப் படிப்பிற்கு மாற அவர்களின் பொருளாதாரம் உயர்ந்து விடுமா என்ன? ஓரிடத்தில் அடித்தட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் அதிலிறிந்து 25% பேரை எப்படி தேர்வு செய்வார்கள் என்பதும் விளங்கவில்லை.இதனால் பெரும்குழப்பமும் வன்முறையும்தான் ஏற்படும்.
 
    அரசும், உள்ளாட்சி அமைப்பும் வரையறுக்கின்ற எல்லையில் பள்ளிகள் இல்லையென்றால் இத்திட்டம் தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பள்ளி தொடங்கப்பட வேண்டுமாம்.  இந்த மூன்றாண்டு காலத்தில் அப்பகுதி குழந்தைகள் எங்கு படிப்பார்கள்?  தரமான கல்வியை குழந்தைகள் பெறச் செய்ய அரசு உறுதி செய்ய வேண்டும் என்கிற இச்சட்டம் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:40 என்று வரையறுக்கிறது.  இதன் மூலம் தரமான கல்வியை எவ்வாறு உறுதி செய்வது?

     கியூபா, சோமாலியா, சவூதி அரேபியா, குவைத், பிரிட்டன், டென்மார்க், ஹங்கேரி போன்ற நாடுகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20க்கும் குறைவாகவே உள்ளது.  இங்கு 1:20 என்று நிர்ணயிக்க வேண்டுமென கல்வியாளர்கள் தொடர்ந்து கோரி வருகின்றன.  தமிழக அரசு கூட 1:35 என்று நிர்ணயம் செய்ய கொள்கையளவில் ஒத்துக் கொண்டுள்ளது.  இச்சட்டம் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:40 என்று சொல்வது அடித்தட்டுக் குழந்தைகளின் கல்வியுரிமையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.

    இந்த விகிதத்தை 6 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.  ஆசிரியர்கள் நிர்ணயிக்கப்பட்ட தகுதி மற்றும் பயிற்சியை 5 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்கிறது சட்டம்.  ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் படிகள் பற்றி எதுவுமில்லை.  12ஆம் வகுப்பு முடித்தவர்களை இடைநிலை ஆசிரியர்களாகவும் இளங்கலைப் பட்டம் முடித்தவர்களை பட்டதாரி ஆசிரியராகவும் சில ஆயிரம் ரூபாய்கள் என்ற தொகுப்பூதிய முறையில் நியமனம் செய்வதை இச்சட்டம் மறைமுகமாக ஊக்குவிக்கிறது.  இதுவும் படித்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாத மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும்.  தமிழகத்தில் உரிய கல்வித் தகுதியுடன் தேவைக்கு அதிகமாகவே இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் தகுதியிருந்தும் குறைந்த தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்ற வேண்டி வரும்.  அரசும் நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டும்.  இவ்வித முறைகேடுகளுக்கு சட்ட அங்கீகாரத்தை இச்சட்டம் மாநிலங்களுக்கு வழங்கும்.

     ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது, ஆசிரியர் பட்டயம் மற்றும் பட்டங்களை அளிக்கும் கல்வி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்துவது பற்றி எந்தக் கொள்கையும் இல்லை.  பீகார், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் ஆசிரியருக்கான பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்கள் போதுமானதாக இல்லாத நிலை இருக்கிறது.  ஆனால் தமிழகத்தில் தெருவெங்கும் பி.எட். கல்லூரிகளும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்.  எவ்வித அடிப்படை வசதி மற்றும் முறையான பயிற்சியின்றி லட்சக்கணக்கான தரமற்ற ஆசிரியர்களை உருவாக்கி கல்விக் கொள்ளையில் ஈடுபடுவோருக்கு மத்திய - மாநில அரசுகள் அங்கீகாரம் வழங்குகின்றன.  இடைநிலை ஆசிரியராக இருப்பவர் தொலைக்கல்வியில் பி.எட். படிக்க வாய்ப்பு இல்லை.  ஆனால் பணம் மட்டுமிருந்தால் 12ஆம் வகுப்பு படித்தவர்கள் ஆசிரியர் பயிற்சியையும், பட்டதாரிகள் பி.எட்., பட்டத்தையும் வீட்டிலிருந்த படியே பெறலாம் என்பதே இன்றைய தமிழகத்தின் அவலம்.

     கல்வியின் தரத்துடன் கட்டமைப்பு வசதிகளின் தரத்தையும் சேர்த்தே பார்க்கலாம்.  கும்பகோணம் தீ விபத்துக்குப் பிறகு கீற்றுக் கொட்டகைகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ‘ஆஸ்பெட்டாஸ்’ கூரைகளாக மாற்றம் பெற்றன.  அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டத்தின் மூலம் நிறைய வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.  இவையனைத்தும் மிக மோசமான தரத்துடன் கட்டப்படுபவை.  இவற்றின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் கூட தாண்டாது.  ஒப்பந்தகாரர்களோ, அல்லது கிராமக் கல்விக்குழுக்களோ பங்கு போட்டபிறகு எஞ்சிய தொகைக்கு ஏதோ பாழ் மண்டபங்கள் போல பள்ளிக்கூடங்கள் கட்டப்படுகின்றன.  ஆட்சிகள் மாறும் போது மேம்பாலங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் தரச் சோதனை செய்யப்படுவது போல் பள்ளிக் கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டதில்லை.

      தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் அனைத்தும் பல கோடிகளை விழுங்கிக் கொண்டு வானுயர்ந்து நிற்கின்றன.  இவைகள் மரத்தாலும், டைல்ஸ்களாலும் வழுவழுப்பாக இழைக்கப்படுகிறது.  ஆனால் பள்ளிக்கட்டிடங்கள், மயானக்கொட்டகை போல்தான் அமைக்கப்படுகிறது.  மரச்சாமான்களைப் பயன்படுத்தக் கூடாதென்ற தடை வேறு.

     உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (GDP) தற்போது 3% கல்விக்கென ஒதுக்கப்படுகிறது.  இதை 6% ஆக உயர்த்துவதாகச் சொல்கிறார்கள். இது போதாது.  வளர்ந்த, வளரும் நாடுகளில் கல்விக்கான ஒதுக்கீடு 10ரூ ஐ விட அதிகமாக உள்ளபோது குறைவான நிதியைக் கொண்டு கட்டாய இலவசக் கல்வியை அமல்படுத்த முடியாது.  6 முதல் 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்க ஆண்டுக்கு ரூ.12,000/- கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.  இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் கூட இல்லை.  இராணுவத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு இலட்சம் கோடிகளுக்கு அதிகமாகச் செலவிடப்படுவது இங்கு கவனிக்கத்தக்கது.

     இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதிச்சுமையை மத்திய, மாநில அரசுகள் 55:45 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்வதாகச் சட்டம் சொல்கிறது.  அனைவருக்கும் தொடக்கக் கல்வித் திட்டத்தில் (SSA) மத்திய அரசின் பங்கு அதிகமாக இருந்ததால்தான் தமிழகம் உள்பட நிறைய மாநிலங்கள் அத்திட்டத்தைச் செயல்படுத்தின.  நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இச்சட்டத்தை கிடப்பில் போடவே மாநில அரசுகள் முயலும்.

     நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு, தனியார் கூட்டுறவு என்று சொல்லி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கல்வியை தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்தல், தனியார் பள்ளியை ஊக்குவித்தல் என்பதாக கல்வியை வணிகமயமாக்குவதன் மூலம் பெரும்பான்மையான அடித்தட்டு வர்க்க குழந்தைகளுக்கு அநீதி இழைக்கும் கொடுமையை அரசு எந்திரம் செவ்வனே செய்து வருகிறது.

     ஏழை - பணக்காரன் என்ற எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைத்துத் தரப்பு சிறார்களும் தங்களுடைய குடியிருப்பிற்கு அருகில் உள்ள பள்ளியில் சேர்ந்து கற்க வேண்டும் என்ற கருத்தாக்கம் கோத்தாரி கல்விக்குழு மற்றும் பல்வேறு கல்வியாளர்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.  இந்த அருகாமைப் பள்ளி (Neighbourhood Schools) என்ற வார்த்தை தான் இச்சட்டத்தில் குறிப்பிடப்படுகிறதே தவிர 25% குழந்தைகளை மட்டும் சேர்த்துக் கொள்வதற்கு அதுவும் 10 ஆண்டுகளில் சேர்ப்பதற்கு, அருகாமைப்பள்ளி என்று சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.

     கல்வி உரிமைச் சட்டம் தாய்மொழி வழிக்கல்வியை உறுதி செய்யாமல் விட்டு விடுகிறது.  கற்றல், சிந்தனை, படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்க்க தாய்மொழி அவசியம் என்ற எண்ணத்தை இச்சட்டம் கண்டு கொள்ளவேயில்லை.  தொடக்கக் கல்வியை கூட தாய் மொழியில் அளிக்க எந்த உத்தரவாதமும் இச்சட்டத்தில் இல்லை.

     வயதுக்கான பிறப்புச்சான்று கோருவதை இச்சட்டம் தடை செய்கிறது.  கடவுச் சீட்டு (Passport) பெறுவதற்கு 1989 ஆம் ஆண்டுக்குப்பிறகு பிறந்தவர்கள் பிறப்புச் சான்று சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று பிறிதொரு சட்டம் சொல்கிறது.  பிறக்கும் குழந்தை ஒவ்வொன்றுக்கும் அரசு உடனடியாக பிறப்புச் சான்று வழங்குவதையும் முன்பருவ மழலையர் கல்வியையும் இச்சட்டம் கட்டாயப்படுத்த வேண்டுமல்லவா?  பின்னாட்களில் பிறந்த தேதி மாற்றத்திற்கான அலைச்சல், செலவு, கால விரயம் போன்றவற்றை யார் சுமப்பது?

    பள்ளியில் சேர்க்கப்பட்ட எந்தவொரு குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றுவது கூடாது என்று இச்சட்டம் சொல்கிறது.  தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிப்பதற்காக குறைவான மதிப்பெண்கள் பெறுபவர்களைத் தனித்தேர்வர்களாக மாற்றும் கொடுமை இங்கு அரங்கேறி வருகிறது.  11, 12 வகுப்புக்களை மட்டும் கொண்ட பள்ளிகளில் எவ்வாறு 6-14 வயதுக் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்வது?  இம்முறைகேடுகளுக்கு புகாரளிக்க அமைக்கப்படும் ஆணையம் எப்போது தீர்வு வழங்கும்?  அதுவரை அந்தக் குழந்தை எங்கு படிக்கும்?

      அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை எப்படி கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை.  அடிக்கடி பெயர் மாற்றியும் அங்கீகாரம் இல்லையென்றால் வேறு பள்ளியின் பெயரில் குழந்தைகளைத் தேர்வு எழுத வைக்கும் நடைமுறை தமிழ்நாட்டில் நிலவுகிறது.  இதையெல்லாம் எவ்வாறு தடுப்பார்கள் என்பது தெரியவில்லை. 

        மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல்கள், இயற்கைப் பேரிடர் தொடர்பான பணிகள் தவிர்த்த பிற பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று இச்சட்டம் சொல்கிறது.  இச்சட்டத்தின் மூலம் மேற்கண்ட பணிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.  அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கான புள்ளி விவரங்கள் அளிக்கவே ஓராண்டில் பாதி நாட்கள் தேவைப்படுகிற நிலை இன்றுள்ளது.  இதை இச்சட்டத்தின் மூலம் எவ்வாறு மாற்றுவார்கள் என்று தெரியவில்லை.

      குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் போது நன்கொடை வசூலித்தல், குழந்தை மற்றும் பெற்றோருக்கு நேர்காணல், நுழைவுத்தேர்வு போன்றவை நடத்துவதை இச்சட்டம் தடை செய்கிறது.  இதுவரையில் தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதை எந்தச் சட்டத்தாலும் தடை செய்ய முடியவில்லை.  அதைப் போல நேர்காணல் மற்றும் நுழைவுத் தேர்வு வைப்பதை யார், எப்படி கண்காணித்து நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதும் விளங்கவில்லை.
குழந்தையை அருகிலுள்ள பள்ளியில் சேர்த்து ஆரம்பக் கல்வி அளிப்பது பெற்றோரின் கடமையென இச்சட்டம் சொல்கிறது.  வறுமைக் கோட்டிற்குள் வதைபடும் எண்ணற்ற இந்தியக் குடும்பங்கள், தினமும் ரூ.15 கூட கூலி பெ முடியாத நிலைமை, விலைவாசி உயர்வு, இவற்றின் காரணமாக உருவாகும் குழந்தைத் தொழிலாளர்கள் ஆகிய நிலைமைகளை இச்சட்டம் இயற்றியவர்கள் கணக்கில் கொண்டிருக்க வேண்டும்.

      கல்வி உரிமைச் சட்டம் குறித்தான புகார்களை விசாரிக்க மத்திய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR-National Commission for Protection of Child Rights) அமைக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாநிலமும் இதைப்போன்று மாநில குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் ((SCPCR-State Commission for Protection of Child Rights) ) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையங்களை (REPA-Right to Education Protection Authority) இச்சட்டம் நடைமுறைக்கு வந்த 6 மாதத்திற்குள் அமைக்க வேண்டும்.  தமிழக அரசு இந்த ஆணையத்தை இன்று வரை அமைக்கவில்லை.

      மத்திய அரசின் ஆணையம் (NCPCR) எவ்வித வசதியுமின்றி 4 ஆண்டுகளாக ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களுடன் முடங்கியிருக்கிறது.  மாநில ஆணையம் (SCPCR) மட்டும் செயல்படும் என்ற நம்பிக்கையும் இல்லை.  மனித உரிமை ஆணையங்கள், நுகர்வோர் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் நாமெல்லாம் அறிந்தது தானே!

      சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் படித்த 6ஆம் வகுப்பு மாணவன் பிரபாகர உதயம் பெயிலாக்கக்கப்பட்டதை எதிர்த்து அம்மாணவனது தந்தை கலைக்கோட்டு உதயம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.  இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009, 01.04.2010 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால் அம்மாணவனை பெயிலாக்கியது தவறு என்றும், பெயிலாக்குவதற்கு இணக்கமான மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் சுற்றறிக்கை சட்ட விரோதமானது என்றும், அம்மாணவனை 7ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும் எனவும், பெற்றோர் விரும்பினால் மட்டுமே மாற்றுச் சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்திரவிட்டது.

      அரசுப் பள்ளிகளில் 6-8 வகுப்புகளில் ஆயிரக்கணக்கில் தேர்ச்சி மறுக்கப்பட்டபோதிலும் அவர்கள் சார்பாக யாரும் நீதிமன்றம் செல்லவில்லை.  அனைவருக்கும் தேர்ச்சியளிக்கும் முறை வருமாண்டில் நடைமுறைக்கு வருமெனத் தெரிகிறது.  மாணவர் சேர்க்கை, நன்கொடை, நுழைவுத் தேர்வு, அருகாமைப் பள்ளியில் 25% இடங்களை ஒதுக்குவது போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகளும் வழக்குகளும் வெளிப்பட வாய்ப்பு மிக அதிகம்.  அப்படி வரும் ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரிக்க, உடன் நடவடிக்கை எடுக்க இந்த ஆணையங்கள் எவ்வளவு தூரம் உதவும் என்ற கேள்வி கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் நிற்கிறது.

      மாநில அரசுகள் ஒவ்வொன்றும் இச்சட்டம் நிறைவேற்றலை உறுதி செய்ய 15 உறுப்பினர்கள் கொண்ட மாநில பரிந்துரைக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.  கட்டாய கல்வி உரிமைச் சட்ட நடைமுறையை கண்காணிக்கவும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இக்குழு அரசுக்கு பரிந்துரை செய்யும்.  இந்தக் குழுவும் தமிழக அரசால் இதுவரை அமைக்கப்படவில்லை.

       மாநிலத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியும் இச்சட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளி நிர்வாகக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.  இக்குழுவில் நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் கட்டாயம் குழந்தைகளின் பெற்றோராக இருக்க வேண்டும்.  அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், குழந்தை உரிமை ஆணையம், மாநில பரிந்துரைக்குழு, பள்ளி நிர்வாகக்குழு போன்றவை ஓராண்டு முடியப் போகும் நிலையில் அமைக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.  இதிலிருந்து இச்சட்டம் எப்படிச் செயல்படப் போகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

     இந்தியாவிற்கு கடன் வழங்கும் உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்ற அமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு சிறுவர்களுக்கான அவசர கால நிதியம் (UNICEF-United Nations International Children's Emergency Fund) ஆகியவை அளிக்கும் அழுத்தத்தின் காரணமாக அறிவொளி இயக்கம் போன்ற எழுத்தறிவு இயக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு முழு எழுத்தறிவு பெற்றதாக ஒரு பிம்பத்தை நமது அரசு முன்பு உருவாக்கியது.  அதைப் போன்று தற்போது கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் என்ற பெயரில் ஒரு திட்டத்தை வெறும் ஏட்டளவில் வைத்து மீண்டும் ஒரு மாயையைக் கட்டமைக்க முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது.  ஏனென்றால் கட்டாயக் கல்வியை அமல்படுத்துவதற்கு தனிச் சட்டமே தேவையில்லை.  86 வது அரசியல் சட்ட திருத்தமின்றி 45 வது பிரிவை அப்படியே செயல்படுத்துவதை விட்டு விட்டு திருத்தம், தனிச் சட்டம், 25%அடித்தட்டு மக்களுக்கு ஒதுக்கீடு என போகாத ஊருக்கு வழி சொல்வதை நாம் வேறெப்படிப் பார்க்க முடியும்?

      ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒழுங்காகவும் காலத்தோடும் வர வேண்டும், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாடங்களை கற்பிக்க வேண்டும், தனிப்பயிற்சியில் (Private Tution) ஈடுபடக் கூடாது, எந்தவொரு குழந்தைக்கும் உடல் சார்ந்த தண்டனையோ (Corporal Punishment) மனம் சார்ந்த தொந்தரவோ கொடுக்கக் கூடாது,  தேர்வில் பெயிலாக்கக் கூடாது, செயல்வழிக் கற்றல், குழந்தை மையமாகக் கொண்ட கற்பித்தல் முறைகள், படைப்பாற்றலை ஊக்குவித்தல், குழந்தைகளுக்குச் சுதந்திரமான வகுப்பறைச் சூழல், அச்சுறுத்தும் தற்போதைய தேர்வு முறைகளுக்கு மாற்றாக தொடர் மதிப்பீட்டு முறை - போன்ற ஒருசில நல்ல அம்சங்கள் இச்சட்டத்தில் இருக்கவே செய்கின்றன. ஆனால் இவை மட்டும் இச்சட்டம் முழு வெற்றியடையப் போதுமானதாக இராது என்பதே கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் கவலையாகும்.

     இறுதியாக நமது நாட்டைப் பற்றி கொஞ்சம். 

     ஐக்கிய நாடுகள் சபை மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மனித வளர்ச்சிக் குறியீட்டெண் (HDI-Human Development Intex) மூலம் அளவிடுகிறது.  ஒரு நாட்டில் வாழும் மக்கள் பெறும் கல்வி, சுற்றுப்புறச்சூழல், வருமானம், மனித உரிமைகள், ஆண்-பெண்-குழந்தை உரிமைகள், அறவியல், வாழ்நாள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) போன்ற போன்ற பல்வேறு தரவுகளின் அடிப்படையில் இக்குறியீட்டு எண் வழங்கப்படுகிறது.  2004ஆம் ஆண்டின்படி இந்தியா 177 நாடுகளில் 126 வது இடத்தில் இருந்தது.  2010இல் 192 நாடுகளில் இந்தியாவின் பெற்றுள்ள இடம் 119 ஆகும். கடந்த ஆறு ஆண்டுகளில் 126 லிருந்து 119 க்குத்தான் முன்னேற முடிந்துள்ளது.  இதுதான் வளர்ச்சியா?  அப்துல்கலாம் போன்றவர்கள் வல்லரசு என்று காட்டு கத்தல் கத்துகிறார்களே!  இதுதான் வல்லரசின் லட்சணமா?  இக்குறியீட்டு எண்ணில் கவுதமாலா, நிகரகுவா, மொராக்கோ, தென்னாப்பிரிக்கா, வியட்நாம், இந்தோனேஷியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, ஸ்ரீலங்கா, சீனா போன்ற நாடுகள் இந்தியாவை விட முன்வரிசையில் உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

      2001ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியா உலக நாடுகளில் எழுத்தறிவில் 146 வது இடத்தில் உள்ளது.  எழுத்தறிவு சதவீதம் 64.84%.  தமிழ்நாடு 73.47% பெற்று எழுத்தறிவில் 11 வது மாநிலமாக உள்ளது. இதில் பெண்களின் எழுத்தறிவு சதவீதம் மிகவும் குறைவு.  பீகார் மாநிலம் 54.1% பெற்று கடைசி இடத்தில் உள்ளது.  இந்தப் புள்ளி விவரங்கள் பழையன என்றாலும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்ற விவரமே தவிர முழுஎழுத்தறிவு பெற்றவர்கள், ஆரம்பக் கல்வி பெற்றவர்கள் என்று நாம் எண்ணி விடக் கூடாது.  அறிவொளி இயக்கம் போன்ற எழுத்தறிவுத் திட்டங்களெல்லாம் இந்த மாதிரி புள்ளி விவரங்கள் அளிப்பதற்காகத் தானே நடத்தப்படுகின்றன !

      ஒரு நாடு முன்னேற வேண்டுமானால் அதற்கு அடிப்படையான முன் நிபந்தனை அனைவருக்கும் ஆரம்பக்கல்வி என்ற இலக்கை அடைவதுதான்.  இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக வேண்டுமெனில், அது தன் மக்கள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வியையும், ஆரோக்கியத்தையும் உத்திரவாதப்படுத்த வேண்டுமென சமூக சிந்தனையாளரும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞருமான அமர்த்தியா சென் குறிப்பிடுகிறார்.  ஆனால் நமக்கு ஆட்சியாளர்களாக மாறிப்போன பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங், ப. சிதம்பரம், மாண்டேக்சிங் அனுவாலியா, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், சோனியா காந்தி போன்றோர் இதற்கு எதிராக சிந்திக்கிறார்கள்; செயல்படுகிறார்கள்.  எனவேதான் ஏற்கனவே உள்ள உரிமைகளைப் பறிக்கும் ‘உரிமை’ச் சட்டங்களும் அதன் மூலம் கல்வியை வணிகமயமாக்குவதும் மத்திய அரசுப் பள்ளிகளில் கூட வெறும் 25% தான் அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு என்று அடம் பிடிக்கவும் முடிகிறது.

உதவியவை  :

1.    இந்திய அரசின் கல்வி உணவு உரிமைச் சட்டங்கள் - ஒரு விமர்சனம்
       -அ. மார்க்ஸ்.
2.    தமிழகப் பள்ளிக் கல்வி - பிரச்சினைகளும் தீர்வுகளும்
      (தொ)- பேரா. பிரபா கல்விமணி
3.    மகாத்மா ஜோதிராவ் புலே -தனஞ்செயகீர்
4.    இந்திய முன்னேற்ற நுழைவாயில் (www.indg.in)
5.    Right of Children to Free and Compulsory Education – Act – 2009.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக