திங்கள், ஜனவரி 30, 2012

ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்!

ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்! 
                                                                                                        -மு.சிவகுருநாதன் 




        ஐந்தாண்டுகள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி     (NDA) அரசிலும் 8 ஆண்டுகள்  ஐக்கிய  முற்போக்குக் கூட்டணி   (UPA) அரசிலும் அங்கம் வகித்த தி.மு.க தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாக மார் தட்டிக் கொள்கிறது.  இவற்றில் சில உண்மைகளும் இருக்கலாம்.  ஆனால் தமிழகத்திற்கான ரயில் திட்டங்களின் அவலத்திற்கு எடுக்காட்டாய் நிற்பது திருவாரூர் - காரைக்குடி ரயில்பாதை.

      தமிழகத்தில் நடைபெறும் அகலப்பாதைப் பணிகள் மற்றும் திட்ட ஒதுக்கீடு அனைத்தும் ஆமை வேகத்தில் தான் நடக்கிறது.  ஒதுக்கீடும் தவணை முறையில் தான்.  விழுப்புரம் மயிலாடுதுறை வரை வந்த ஒதுக்கீடு 40 கி.மீ தொலைவிலுள்ள திருவாரூரை அடைய பல ஆண்டுகள் ஆனது.  இன்னும் திருவாரூர் மயிலாடுதுறை ரயில் பாதையில் வண்டிகள் இயக்கப்படாதது வேறு கதை.
 

     நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி என அகலமாக்கும் பணிகள் நடைபெற்றதென்னவோ உண்மை தான்.  ஆனால் திருவாரூரிலிருந்து சென்னை செல்ல மயிலாடுதுறை செல்லாமல் இன்னும் ஊர் சுற்றிச் செல்லும் அவலம் நீடிக்கத்தான் செய்கிறது.
 

      காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, தாம்பரம் வழித்தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் என்ற மீட்டர் பாதை தொடர்வண்டி ஓடிக் கொண்டிருந்ததை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு யாரேனும் நினைவுப்படுத்தினால் நல்லது.  அவருக்கு வரவர எதுவும் நினைவில் தங்குவதில்லை.
 

     தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு. கருணாநிதி சொல்லும் ரயில்வே திட்டங்களை விட தி.மு.க நாடாளுமன்ற குழுத்தலைவரும், நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு சொல்லும் திட்டங்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்பதுதான் இங்குள்ள எதார்த்த நிலை.  நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுத் தலைவராக உள்ள டி.ஆர். பாலு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.  அதைக் கேள்விகேட்கும் அதிகாரம் தி.மு.க  தலைமைக்கு வேண்டுமானால் இல்லாது போயிருக்கலாம்.  இ. காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க போன்றவை என்ன செய்து கொண்டுள்ள?
 

     திருக்குவளையில் துறைமுகம் என்றார்கள்.  வேளாங்கண்ணியிலிருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டிக்கு புதிய வழித்தடம் என்றார்கள்.  இவை அனைத்தும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.  ஆனால் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கு ரயில் விட்டாயிற்று.  2012-13 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இப்பாதையை பட்டுக்கோட்டைவரை நீட்டிக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள்.  இப்படிச் செய்துவிட்டால் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி - திருவாரூர் வழித்தடத்தை மூடிவிடலாம் என்றும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.
 

     எனவே, அதற்கேற்றவாறு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை மட்டும் நிதி ஒதுக்கீடு செய்து பட்டுக்கோட்டை - வடசேரி  - மன்னார்குடி  வழி புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி இந்த வழியில் கம்பன் எக்ஸ்பிரசை இயக்குவதுதான் தி.மு.க வின் திட்டம்.  இது நடந்துவிடும் என்ற அச்சத்தால் வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிவாழ் பொதுமக்கள், வணிகர்கள் சென்ற மாதத்தில் (டிசம்பர் 2011) ஒரு நாள் கடையடைப்பு செய்தனர்.  இதற்கு அமோக ஆதரவு இருந்தது.
 

       தஞ்சை - பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை - மன்னார்குடி போன்ற தொடர்வண்டிப் பாதை இல்லாத இடங்களை அவற்றால் இணைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  அதற்காக இருக்கின்ற வழித்தடங்களை பலியிடுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.  எனவே, இருக்கின்ற திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தை முற்றிலும் அகலப்பாதையாக்க வேண்டும்.  கூடவே திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் - அகஸ்தியாம்பள்ளி - கோடியக்கரை தடத்தையும் அகலப்படுத்தி பயணிகள் ரயில் போக்குவரத்திற்கும் உப்பு ஏற்றுமதிக்கும் வழிவகுக்க வேண்டும்.
 

     சுற்றுச்சூழல், கடலோர மக்களின் வாழ்வாதாரம் போன்றவை பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், இருப்புப்பாதைகள் என தனியார் முதலாளிகள் வளம் கொழிக்க திட்டங்கள் தீட்டும் மத்திய - மாநில அரசுகள், வேதாரண்யம் கடற்கரையில் உற்பத்தியாகும் உப்பை எடுத்துச் செல்வதற்கு இருக்கின்ற இருப்புப் பாதையை அகலப்பாதையாக்க மறுக்கும் மக்கள் விரோதப்போக்கை எப்படிப்புரிந்து கொள்வது?
 

     திருவாரூர் - காரைக்குடி, திருத்துறைப்பூண்டி - கோடியக்கரை வழித்தடங்களை அகலப்பாதையாக்குவதைக் காட்டிலும் வடசேரி கிங் கெமிக்கல்ஸ், அங்கு அமையப்போகும் சாராய வடிப்பாலை  வழியாக ரயில்பாதை அமைப்பதுதான் டி.ஆர். பாலுவிற்கு முக்கியமாகப்படுகிறது.  எனவே தான் இப்பகுதி மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.  மு. கருணாநிதிக்கு திருக்குவளையை விட கனிமொழி உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர்கள் முக்கியம்.  தானொரு கம்யூனிஸ்ட் என்று ஓயாமல் சொல்லி வரும்
மு. கருணாநிதி தானும் பெரு
முதலாளியாகி   டி.ஆர். பாலு போன்ற பெருமுதலாளிகளை உருவாக்க முடிந்ததுதான் வரலாற்றின் மாபெரும் சோகம்.

      உப்பை மட்டும் உற்பத்தி செய்யும் காரணத்தால் இன்று வேதாரண்யம் வெறும் தீவாகிப் போயிருக்கிறது.  கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வேளாங்கண்ணியைத் தாண்டியதும் திருத்துறைப்பூண்டிக்குள் நுழைந்து உள்நாட்டுச் சாலையாகி விடுகிறது.  அகலப்பாதை வசதியுமின்றி பிறப்பகுதிகளிடமிருந்து வேதாரண்யம் துண்டிக்கப்பட்டுள்ளது.
 

       உள்நாட்டுச் சாலையாக மாறிப்போன கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருத்துறைப்பூண்டி அருகே ஒரு சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  அதன் கீழே வேதாரண்யம் தொடர்வண்டிப் பாதை செல்கிறது.  நாட்டிலேயே ஓடாத ரயிலுக்கு இங்குதான் சாலை மேம்பாலம் அமைந்துள்ளதை அதிசயமாக பார்க்கக் கூடிய சூழல் வெகு விரைவில் வரலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக