திங்கள், ஜனவரி 30, 2012

எலி அம்மணமாகப் போன கதை!

எலி அம்மணமாகப் போன கதை!
                                                                                     - -மு.சிவகுருநாதன்


இலங்கையில் ராஜ பக்சே யுடன்  அப்துல் கலாம்

    
  இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்கதையாக நீடிக்கிறது.  இதைத் தீர்க்க நமது அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாளாயிருக்கின்றன.  ஒப்பீட்டளவில் பாகிஸ்தானுடன் கூட இவ்வளவு தீவிரமான மீன்பிடித் தகராறு இல்லை என்று கூட சொல்லலாம்.
 

    இரு நாட்டுத்தூதர்கள், அமைச்சர்க்ள, தலைவர்கள், என பலமுறை பேசுகிறார்கள்.  ஆனால் கண்ணியமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.  அண்மையில் நடைபெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா  சுற்றுப்பயணமும் எவ்விதப் பலனின்றி முடிந்துப் போனதுதான் மீனவர்கள் வாழ்வின் சோகக்கதை.

    கூடங்குளம் அணு உலைப் பிரச்சினையில் அணுசக்தித் துறைக்கு ஆதரவுக்கரம் நீட்டி வம்பில் மாட்டிக் கொண்ட நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இலங்கை என்று திரும்பியிருக்கிறார்.  இருநாட்டு மீனவர்களும் தலா மூன்று நாட்கள் சுழற்சி முறையில் மீன் பிடிக்கலாம் என்றும் ஞாயிறு ஒரு நாள் விடுமுறை விடப்படலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
 

    மீனவர்களுக்கு எல்லைகளை நிர்ணயிப்பது கடினமானது என்று சொல்லும் அப்துல்கலாம் திரளான மீன்களை நோக்கி மீனவர்கள் ஈர்க்கப்படுவது இயல்பானது என்கிறார்.  மேலும், இருநாட்டு மீனவர்கள் அமர்ந்து இப்பிரச்சினைப் பேசித்தீர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 

    பேச்சுவார்த்தை, சுமூக உறவு, உடன்பாடு இல்லாமல் எந்தச் சிக்கலையும் தீர்க்க முடியாது.  சண்டைகளுக்கு எதிரான ஆயுதங்களில்  உரையாடலை விட சிறந்த ஆயுதம் எதுவும் இருக்க முடியாது.  இவ்வளவு அற்புதமான கருத்துக்களை தமிழ்நாட்டு மீனவர்களுடன் பிறந்த கலாம் இவ்வளவு காலம் எங்கே ஒளித்து வைத்திருந்தார் என்று கேட்கத் தோன்றுகிறது.
 

    கலாம் பதவியில் இருந்த 5 ஆண்டு காலத்திலும் அதற்குப் பின்னரும் மீனவர்கள் பிரச்சினைகள் எழுந்தபோது இது குறித்து துளியும் வாய் திறந்ததில்லை.  இப்போது மட்டும் ஏன் அடிக்கடி ஆலோசனை சொல்லக் கிளம்பிவிடுகிறார்  என சந்தேகம் வருவது  இயற்கைதானே!
 

    இங்குதான் அப்துல் கலாமின் சுயரூபம் முழுமையாக வெளிப்படுகிறது.  மீனவர்கள் நவீன படகுகளைப் பயன்படுத்தி ஆழ்கடல் மீன்பிடிப்பதை ஊக்குவிக்க வேண்டுமாம். அப்படியே தனியார் கம்பெனிகளையும் மீன்பிடித் தொழிலில் இறக்கிவிடும் மறைமுக செயல்தந்திரமிது.  எவ்வளவு பீடிகை போட்டும் அப்துல்கலாமால் பூனைக்குட்டியை ஒளிக்க முடியவில்லை பாருங்கள்.
 

   நமது மக்கள் பணத்தில் இஸ்ரோ ஊழல் விஞ்ஞானிகள் அனுப்பும் செயற்கைக்கோள்கள் மூலம் மீன்வளத்தை அறிந்து மீனவர்களுக்குத் தெரிவிக்கமுடியும். ஆனால் நம் நாட்டில் இது நடக்க வாய்ப்புண்டா? பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெருநிறுவனங்கள் இந்த தொழிலுக்கு வரும்போதுதான் இந்த தகவல்களை அவர்களுக்கு அள்ளி வழங்குவார்கள்.

    இது யாருடைய குரல்.  கண்டிப்பாக மீனவர்களின் குரலல்ல.  ரிலையன்ஸ், டாடா, பிர்லா, வேதாந்தா, ஜிண்டால் போன்ற பன்னாட்டு - உள்நாட்டு முதலாளிகள் இன்னும் காலடி வைக்காத  துறைகள் சில பாக்கியுள்ளதை தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்கு விருந்து வைக்கவும்  கடல் வளத்தையும் பங்கு போட இம்மாதிரியான யோசனைகள்  அப்துல் கலாம் அவர்களால்  முன் வைக்கப்படுகின்றன.  பல்வேறு கடல் பிராந்தியங்களின் வளத்தைக் கொள்ளையிட்ட பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியப் பெருங்கடல் வளம் சுண்டியிழுப்பது நமக்கும் புரிகிறது.  இப்போது புரிந்திருக்குமே கிராமங்களில் சொல்வார்களே அதுபோல  எலி ஏன் அம்மணமாகப் போகிறது என்று?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக