செவ்வாய், ஜூன் 23, 2015

ஜெயகாந்தன் விருது பெறும் சிவகுமார் முத்தய்யா



ஜெயகாந்தன் விருது பெறும் சிவகுமார் முத்தய்யா                            
                                   -  மு.சிவகுருநாதன்
சிவகுமார் முத்தய்யா


     கணையாழி மாத இதழ் வழங்கும் 2014 ஆம் ஆண்டுக்கான சிறுகதை விருது இளம் படைப்பாளி சிவகுமார் முத்தய்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயரில் அளிக்கப்படும் இவ்விருதுக்கான தேர்வை மூத்த எழுத்தாளர் சா. கந்தசாமி செய்துள்ளார். ரூ. 10000 பரிசு வழங்கப்பட இருக்கிறது.

    இளம் எழுத்தாளர்கள் பலருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.  ரூ. 10000 பரிசு என்பது மிகக்குறைவாக இருந்தபோதிலும் ஜெயகாந்தன் பெயரில் வழங்கப்படும் இந்த விருது ஓர் இளம்  எழுத்தாளருக்கு வழங்கப்பட உள்ளதை வரவேற்போம். சிவகுமார் முத்தய்யாவைப் பாராட்டுவோம். அவர் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்று இக்கணத்தில் வாழ்த்துவோம்.

   தோழர் சிவகுமார் முத்தய்யா திருவாரூர் தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து வந்த இவர் இன்று வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர். இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தபோதிலும் தமிழ் எழுத்துலகில் போதுமான கவனிப்பைப் பெறாதவராக உள்ளார். சென்ற வாரம் வெளியான ஆனந்தவிகடன் இதழில் (ஜூன் 24, 2015) இவரது ‘மழை பெய்யட்டும்’ சிறுகதை ஒன்று வெளியாகி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 
கிளி வரும் போது…



    நண்பர் சிவகுமார் முத்தய்யா காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இவர் தற்போது  திருவாரூரிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் 'பேசும் பதிய சக்தி' மாத இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார். இவ்விதழில் அரசியல், சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி குறித்த பல்வேறு கட்டுரைகளை எழுதி வருகிறார்.

 
செறவிகளின் வருகை

   இவரது முதல் தொகுப்பான  ‘கிளி வரும் போது…’ ஐ முற்றம் டிசம்பர் 2008 இல் வெளியிட்டுள்ளது. (விற்பனை உரிமை: நிவேதிதா புத்தகப்பூங்கா). ‘செறவிகளின் வருகை’ என்ற இரண்டாவது தொகுப்பை ஜனவரி 2014 இல் சோழன் படைப்பகம் வெளியிட்டிருக்கிறது. (விற்பனை உரிமை: தோழமை வெளியீடு). 

   இன்றுள்ள பதிப்பக அரசியல் மற்றும் ‘லாபி’யில்  முகமறியாத புதிய வெளியீட்டகங்களுக்கு இந்நிலைதான் போலும்! இவரது படைப்புலகம் குறித்து பிறிதோர் நேரத்தில் பார்க்கலாம். இப்போது மீண்டும் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக