புதன், ஜூன் 03, 2015

தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடையான நகலெடுக்கும் கலாச்சாரம்



தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடையான நகலெடுக்கும் கலாச்சாரம்                         
                                      - மு.சிவகுருநாதன்

      மே 29 (29.06.2015) ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ஓர் கால்பக்க வண்ண விளம்பரம் வந்திருந்தது. அதில் “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பினை ஒரு கண்ணோட்டமாக ஆய்வு செய்து அதைப் புத்தகமாக உருவாக்கி இந்திய குடியரசுத்தலைவரின் மாளிகையில் அவரது பொற்கரங்களால் பெறப்பட்டு தமிழ் மண்ணுக்கு அற்பணித்து தம் தாய் நாட்டுக்கு நற்பெயர் சேர்த்த அரசியலமைப்பு சட்டத்தின் விடியலே” என்கிற நீண்ட வரிகளைப்படித்த பிறகு பெரும் குழப்பமே  தோன்றியது. எனவே இந்தப்பதிவு.

     இந்த விளம்பரம் குறித்து நமக்கு ஒன்றும் சிக்கலில்லை. அதிலுள்ள வாசகங்களே இங்கு பேசுபொருள். இதைப் படிக்கும்போது பல அய்யங்கள் தோன்றுவது இயல்பு. அவற்றுள் சில.

1.   இது எந்தக் கண்ணோட்டத்திலான ஆய்வு?
2.   இப்புத்தகத்தை உருவாக்கியது யார்?
3.   இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும்?
4.   குடியரசுத்தலைவரிடம் அளித்தது யார்?
5.   அவர்  கேட்டுப் பெற்றாரா அல்லது இவராக அளித்தாரா?
6.   தமிழ் மண்ணுக்கு அர்ப்பணித்தது யார்?
7.   இது தமிழ்நாட்டுக்கான தனி அரசியல் சட்டமா?
8.   இந்தியா முழுமைக்கும் அர்ப்பணிக்க முடியாதா?
9.   இங்கு தாய்நாடு என்பது எது? தமிழ்நாடா அல்லது இந்தியாவா?
10. இந்தியா என்றால் தமிழ்நாட்டிற்கு நற்பெயர் கிடையாதா?

    ஒரு காலகட்டத்தில் இங்கு தமிழ்மொழி சிதைக்கப்பட்டபோது அதனை எதிர்த்து தனித்தமிழியக்கமும் திராவிட இயக்கமும் அவற்றிற்கு எதிராக பணி செய்தது. அதற்கான தேவையும் இருந்தது.
  
   அண்ணா போன்றவர்களின் அடுக்குமொழி நடை இத்தகைய தேவையை ஓட்டியே எழுந்த்தது. ஆனால் இவர்கள் இதைப் ‘பாணி’யாகத் தொடர்ந்து பின்பற்றித் தேங்கிபோயுள்ளனர். இந்த நகலெடுப்பு மொழிவளர்ச்சிக்குத் தடையாக இருப்பதுதான் நகைமுரண்.  

   இன்றும் இவர்கள் முற்றுப்புள்ளிகளின்றி அடுக்குமொழிச் சொற்களை கொண்டே பாசாங்கு செய்து அதைப் பெரும் திறமையாகக் கட்டமைத்துள்ளனர். இதற்கு உடனடியாக நினைவிற்கு வரும் உதாரணங்கள்:  மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின், வைகோ, நாஞ்சில் சம்பத், வைரமுத்து போன்றோர்.

  இவர்களது அரசியல் கூட்டங்களின் பேச்சு நடை இலக்கிய கூட்டங்களிலும் தொற்றிக்கொண்டது. பவுத்த, சமணக் கொடையான பட்டிமண்டபம் என்கிற தொன்மையான வடிவம் சீரழிந்தது இதன் தொடர்ச்சிதான். 

  இவர்களது பாணி பேச்சுக்கலையே பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இதனை நகலெடுக்கும் போக்கை அனைத்து தரப்பும் கைக்கொள்கிறது. விதிவிலக்கு: நவீன, சிறுபத்தரிக்கை இலக்கியவாதிகள். ஆனால் இவர்களை அரசோ பெரும்பான்மை மக்களோ ஏற்றுக்கொளவது கிடையாது.

   எழுத்தில் இவர்களை நகலெடுப்பவர்கள் இங்கு இலக்கியவாதிகளாகவும் அனைத்துவகையான  விருது, பட்டங்களுக்குத் தகுதியானவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். இந்த வர்க்கம் அரசியல் தரகு வேலைகளையும் கவனிக்கிறது. 

   இத்தகைய நகலெடுப்பின் ஓர் வடிவமே முன் சொன்ன விளம்பர வாசகங்கள். இவை மொழிக்கு எந்த ஏற்றத்தையும் தராது என்பதுடன் மொழியின் வளர்ர்ச்சிக்குத் தடையாக இருப்பது தெளிவு.

  இந்த நகலெடுக்கும் கும்பல்கள்தான் நவீன எழுத்து புரியாது என்கிற கற்பித்தத்தை திட்டமிட்டு பரப்பிவருகிறது. உண்மையான மொழியார்வம் உள்ளவர்களுக்கு கோணங்கியின் எழுத்து இதைவிட எளிமையானது மட்டுமல்ல; வலிமையானதும் கூட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக